Monday, July 28, 2008

என் கறுப்புத்தங்கத்திற்கு...



1.உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்.

2.அடிபட்டு விழுந்த
பறவையென துடிதுடிக்கிறது
என் சிறகுகள்.
எவ்வித சலனமின்றி
காற்றோடு பயணிக்கிறது
உன் சிறகுகள்.

3.கடும் கோடையிலும்
ஈரமாகத்தானிருக்கிறது
என் தலைமுடி பற்றி
இழுத்தணைத்து நீ
தந்த ஒற்றைமுத்தம்

4.நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.

5.வேட்டை நாயின்
வாயில் சிக்கிய முயலாய்
இரவு என்னைக்
கவ்விக்கொள்கிறது
உதிரமென வடிகிறது
கண்ணீர்.

Friday, July 25, 2008

ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....

"தவிர்த்தலுக்கென்றே ஒரு

பார்வை வைத்திருக்கிறாய்

நீ.

தவிப்பதற்கென்றே ஒரு

இதயம் வைத்திருக்கிறேன்

நான்"

அன்புத் தோழி....

சில நாட்களாய் ...என் இதயத்தின் கரைகளை அரித்துக் கொண்டிருக்கிறது சில பதில்தெரியாத கேள்வி அலைகள்.

விடைக்கு சொந்தக்காரி நீ என்பதால் உனக்கு இந்த மடல். சில நாட்களாக உன்னிடமிருந்து எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அழைத்தபோதும் எந்த பதிலும் இல்லை உன்னிடமிருந்து.

ஒவ்வொரு முறையும் செல்பேசி ஒலிக்கும் போதும் அதில் உன் பெயரைத் தேடி தேடி களைத்து போய் விட்டது விழிகள் இரண்டும். இனியும் நீ என்னை அழைப்பாய் என்கிற நம்பிக்கையும் நசிந்து போனது. எனக்கென்னவோ நீ என்னை தவிர்ப்பதாய் படுகிறது. ஆனால் காரணம் மட்டும் இப்போதும் புரியவில்லை. தவறாக எதுவும் நான் பேசிவிடவில்லையே. பின் ஏன் இப்படி?? தவறாக பேசினாலும் தவிர்ப்பது நட்பிற்கு அழகில்லையே. பல சமயங்களில், நண்பர்களுக்குள் கருத்துவேறுபாடு வரலாம் தோழி... ஆனால் நட்பில் வேறுபாடு வரலாமா? எண்ணங்கள் மாறுபடும்...உணர்வுகள் மாறுபடும்...ரசனைகள் மாறுபடும்...
என்றும் மாறாமல் இருப்பது அன்பும் நட்பும் மட்டும்தானே. உன் மெளனம் என்னைக் காயப்படுத்துகிறது தோழி. அதே சமயம் நிறைய யோசிக்கவும் வைக்கிறது. உன்னிடம் என் வலி,சோகம்,சந்தோசம்,நட்பு,என் முறிந்த காதல் எல்லாம் பகிர்ந்து கொண்டேனே...
எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை???


உலகில் கொடுமையான விசயங்களில் முதல் மூன்று என்ன தெரியுமா?
1. நட்புக்குள் பொய்.
2.காதலுக்குள் பிரிவு.
3.எதற்காக தவிர்க்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தவிப்பது.


இப்போது இந்த மூன்றாவது துன்பத்தை அனுபவிக்கிறேன் உன்னால். அதுவும் மூன்றாவது முறை. முதல் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு நம் புரிதலில். இரண்டாம் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு உன் புரிதலில். மூன்றாம் முறையும் என்னை நீ தவிர்க்கிறாய் தவறு நம் நட்பில்.... இதை சரியாக்க வழி நம் பிரிதலில்... அப்படி எதுவும் நடக்ககூடாது என்று வேண்டுதலில் கழிகிறது என் நிம்மதியில்லா நிமிடங்கள்...

நான் உடைந்து போகும் போதெல்லாம் உன் நட்பான வார்த்தைகள்தான் என்னை ஒன்று
சேர்க்கும். தவறவிட்ட கண்ணாடியாய் இப்போது உடைந்து கிடக்கிறேன் நீயோ அதில் உன் முகம் கூட பார்க்காமல் திரும்பி நிற்கிறாய். என்னையே என்னால் நம்பமுடியவில்லையே.... உனக்குள் இப்படியும் ஒரு முகமா?? உன் கோபத்தைக்கூட ரசித்திருக்கிறேன் உனக்கே தெரியாமல் பல முறை. ஆனால் தெரிந்தே வெறுக்கிறேன் உனது தவிர்ப்பை. என் ஒவ்வொரு கவிதைக்கும் நீயே முதல் வாசகி. இனி யாரிடம் சென்று என் கவிதைகளைக் காண்பிப்பது? அப்படி காண்பித்தாலும்தான் என்னவாகிவிடப்போகிறது???


கவிதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அவர்களது வாசிப்பின் வலி தாங்காமலேயே
வாடிப்போகுமே என் கவிதையும். என் காதலியை விடவும் உயர்ந்தவள் நீதான் என்றேன் ஒரு நாள். அதெப்படி என்றாய் அழகாய் புருவங்கள் உயர்த்தி. என் காதலி காதலை மட்டும்தான் கற்றுத்தந்தாள். அது அவளது சுயநலத்திற்காக.... நானும் கற்றுக் கொண்டேன் அது என்
சுயநலத்திற்காக... அதுதவறில்லை... ஒவ்வொரு காதலுக்குள்ளும் சுயநலம் உண்டு. அது காதலின் சிறப்பு.

ஆனால் நீ எனக்கு நட்பின் முழு அர்த்தத்தையும் புரிய வைத்தவள்.... எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி... சுயநலமின்றி.... சொல்லப்போனால் நீ என் நட்பைக்கூட எதிர்பார்க்காமல்... என் மீது
நட்பு மழையை பொழிந்தவள். மழையை எப்படி சுயநலம் என்பது அது பொதுநலமல்லவா என்றேன். சாரல்களாய் சிரித்தாய் நட்புத்துளிகள் என்னை நனைத்தன அன்று. புரிந்து கொள்ளாமல் சிலர் புண்படுத்தும்போது மருந்தாய் இருந்தது உன் மயிலிறகு வார்த்தைகள் மட்டும்தான். இப்போது உன் மெளனம்தான் என் நட்பென்னும் பூவை கிள்ளி எறியப்பார்க்கிறது.


ஏதாவது பேசினால் தவறாகிவிடுமோ என்கிற பயம் இல்லாமல் நான் பேசுவது தோழி உன்னிடம்தான். உன் அம்மாவிடம் நீ என்னை அறிமுகப்படுத்தியது உனக்கு
நினைவிருக்கிறதா தோழி? வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவனை அதட்டி
கூட்டிச் சென்றாய் உன் வீட்டிற்கு...

"அம்மா பாரும்மா என் பிரண்ட் வந்திருக்கான்" என்றதும் சமயலறையில் இருந்து வெளிப்பட்ட உன் அம்மா..
வாப்பா எப்படிப்பா இருக்க....வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே...
இந்த அம்மாவை பார்க்க இஷ்டமில்லையாப்பா என்றார்கள். சட்டென்று விழியோரம் ஈரமாகிப்போனது எனக்கு. ஆண்-பெண் நட்பென்றாலே சந்தேகப் பார்வை பார்க்கும் சமுதாயத்தில் உன் அம்மா எனக்கு தெய்வமாய் தெரிந்தார்கள்.. அடுத்த நாள் நீ வந்ததும் என்னிடம் கேட்டாய். "ஏன்டா நேத்து எங்க வீட்ல உன் கண்ணுல கண்ணீர் வந்துச்சு?"
"அடிப்பாவி பாத்துட்டியா. அது வந்து... ஆனந்த கண்ணீர் என்றேன் நான்... சந்தோஷத்தில் கூட உன் கண்கள் அழக்கூடாது என்றாய். இப்போது கவலையில்கூட என் கண்கள் அழாமல்தான் இருக்கிறது. ஆனால் என் இதயம்தான் அழுது அழுது இதயம்சிவக்கிறது. என்னை விட அதிகம் உன்னிடம் நட்பாய் இருந்தது என் இதயம்தானே…


பூங்காவில் நாம் அமர்ந்திருக்கும் அந்த வேலியோர மூங்கில் மரம் உனக்கு நினைவிருக்கிறதா?
"நான் அதிகம் விரும்புவது இசைதரும் புல்லாங்குழலின் தாய் இந்த மூங்கில்
மரத்தைதான்" என்று அடிக்கடி சொல்வாய். இனி அதுவும் உன்னைப் போல் ஊமை புல்லாங்குழலைத்தான் தருமோ? வாழ்க்கை எவ்வளவு விசித்திரமாய் இருக்கிறது!
பிரிவின் வலியை உணர்த்துபவள் காதலி என்பது தெரியும். தவிர்ப்பின் வலியை உணர்த்துபவள் தோழியோ? எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினாய். மொழியுடன் நட்பானேன். எனக்கு கவிதைகளை அறிமுகப்படுத்தினாய். விருட்சமாக வளர ஆரம்பித்தேன்.
எனக்கு தூயநட்பினை அறிமுகப்படுத்தினாய். நண்பனாக தோள் தந்தேன். இப்போது தவிர்ப்பை அறிமுகப்படுத்துகிறாயே... நான் என்னவாக போகிறேன்? என்னதான் என்னிடம் நீ பேச மறுத்தாலும்... ஒருவகையில் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது தோழி....
எனக்கு வைராக்கியத்தின் வைர வலிமையையும் அறிமுகப்படுத்திவிட்டாயே!


இனியும் நீ என்னிடம் பேசுவாய் என்கிற கடைசிச்சொட்டு நம்பிக்கையும் ஏழை வீட்டு சோற்றுப்பானையாய் காலியாகிப் போனது. ரிக்சா மிதிப்பவனின் இறுகிய கால்தசைகளாய் இறுகிப்போனது என் மெல்லிய இதயம். என்றாவது எங்காவது உன்னை நான் சந்திக்க நேர்ந்தால். ஊமையான என் புல்லாங்குழலிலும் இசை பிறக்கும்... அதுவும் எனக்குள் இருக்கும் உன்னைப் பற்றித்தான் பாடும். அந்த நட்பின் பாடலிலாவது உன் கல்நெஞ்சும் கரையுமா?

நீ முறித்த சிறகுகளுடன்....
நீ தவிர்த்தாலும் உன்
நட்பைத் தேடும்
உன் தோழன்,


-நிலாரசிகன்

Wednesday, July 23, 2008

மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்

வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..!

- கவிஞர். க. அம்சப்ரியா

மரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சனைகளை மையம் கொண்டிருந்த கவிதை நகர்ந்து வாழ்வியல் சிடுக்குகளையும், மனப் பிறழ்வுகளையும், அதீத கற்பனைச் சொற்களையும் ஏந்திக் கொண்டு பயணப்படத் துவங்கியது. துவக்க கால எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளே கூட நவீனத்துவத்தின் கெட்டித்த தன்மையுடன் வரத் துவங்கிய பின் காதலின் மிக மென்மையான அனுபவங்களை பதிவு செய்கிற கவிதைகள் வாசகத்தளத்தில் விரும்பத்தகாத இறக்கத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம், அல்லது அப்படியான கவிதைகளை இன்னும் வாசித்துக் கொண்டிருப்பது வாசிப்பு முதிர்ச்சியின் மீது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது எனலாம்.

இந்தக் கவிதை விமர்சனக் களேபரங்களிடையில் காதல் கவிதைகளை சுமந்து கொண்டு புதிய தொகுப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொகுப்புகள் மிக எளிதில் தோல்வியை அடைவதற்கான காரணம் பொய்யான கற்பனையைக் கொண்டு போலித்தனமாய் உருகி வழிவது தான் என்றால் மிகையாகாது.

இப்போதைய காதல்கள் உண்மையில் கவிதையை ரசித்துக் கொண்டோ, மென் அனுபவங்களின் மயிலிறகால் வருடிக் கொண்டோ இல்லை. வணிக ஊடகங்களின் அபத்தக் கற்பிதங்களால் உடல் சார்ந்த வேட்கைக்கு காதல் என்று பெயர் சூட்டி வீணாகிக் கொண்டிருக்கிற யுகம் இது. காதல் மிக அளிதில் கடந்து விடுகிற வாலிபக் கிளர்ச்சியாகி அவரவர் வேலையை இனி அவரவர் பார்க்கப் போகலாம் என்கிற ரீதியில் இளமையாளர்கள் தயாராகிவிட்ட பின் இந்தக் கவிதைகள் யாருக்குத்தான் எழுதப்படுகிறது?

எப்போதும் போல் தான் கவியுள்ளம் அதைப்பற்றியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்கிறது...?

இதோ அப்படியான ஒரு இளம் கவிஞனின் மயிலிறகால் எழுதிய வண்ணக் கவிதைகளின் தொகுப்பு காதலை துளிர்க்கச் செய்யும்படியாக வந்திருக்கிறது.

மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிற்குப் பின் சில ஹைக்கூ தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பேசப்படுகிற அளவுக்கு வெளிவந்த தொகுப்புகள் ஒன்றிரண்டு தான் . பொன்.சுதாவின் "கவிதையல்ல காதல்". அதற்குப் பிறகு தபூ.சங்கரின் பல தொகுப்புகள். தபூ.சங்கரின் காதல் கவிதைகளின் விற்பனைக்குக் கூட வண்ண மயமான அட்டைப்படங்களும், உள்ளே அட்டைப்படங்களுக்கு நிகரான வளவளப்பான அழகிய பெண்களின் உருவங்கள் தேவைப்படுகிறது. காதலை வெளிப்படுத்துகிற வரிகள் மட்டுமே தொகுப்பிற்குப் போதுமானதாக இல்லை.

நிலாரசிகனின் "மயிலிறகாய் ஒரு காதல்" புதுவரவு. இத்தொகுப்பில் மொத்தம் ஐம்பத்தியொரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் இலைகளை உதிர்த்து விட்டு பூக்களை மட்டும் ஏந்தி நிற்கிற 'மே பிளவர்' மரங்களைப் போல பொய்ம்மையை உதிர்த்து விட்டு காதலை மட்டுமே இவைகள் பூத்திருக்கின்றது.

ஒரு பெண்ணை நேசிக்கிற போது தான் காதல் கவிதை வசப்படும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை. இந்த இயற்கையை, மக்களை, சுற்றுப்புறத்தை நேசிக்கத் தெரியாத ஒருவனால் ஒரு பெண்ணை போலித்தனமற்ற பிரியத்தால் ஒரு போதும் நேசிக்க இயலாது. அப்படியெல்லாம் கிடையாது என்றால் அவனுக்குள் ஒரு பொய் உட்கார்ந்து கண் சிமிட்டுகிறது என்று பொருள். இப்படிச் சொல்லக் காரணமிருக்கிறது. இந்தத் தொகுப்பு 'இன்னும் அறிமுகமாகாத என்னவளுக்கு..' என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் இப்படியொரு கவிதை வருகிறது.

கன்னம் சிவக்க

சிவக்க முத்தமிட்டுவிட்டு

போதுமாடா

என்பேன்..

அழகானதொரு வெட்கத்தினால்

முகம் திருப்பிக் கொள்வாய்.

ஆண் வெட்கம் அழகில்லை

என்று யார் சொன்னது..?


ஆண்களின் வெட்கத்தைப் பதிவு செய்திருக்கிற இந்தக் கவிதையின் பொருள் கவிஞரின் அரிய கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில் மயமாகிவிட்ட உலகில் ஆண்களும் பெண்களும் இயல்பாக பழக வேண்டிய தருணத்தில், எதைத் தோழமை என்று அனுமதிப்பது? யாரை காதல் என்ற வட்டத்திற்குள் அனுமதிப்பது? என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது காதலையா? நட்பையா? அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.

ஆரத்தி எடுக்காமல்

ஆச்சர்யப் பார்வை

பார்க்கிற உன்

அம்மாவிடம் சொல்லி வை

இவள் தோழி அல்ல என்

மனைவியாகப் போகிறவள் என்று..!

பெரும்பாலான கவிதைகள் பெண்ணின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விரசமற்ற அன்பின் ஏக்கமாக குழைந்து, நெக்குருகி இக்கவிதைகள் பூத்துள்ளன.

இத்தொகுப்பில் முழுக்க முழுக்க காதல் கவிதை தான் எனினும் அலங்காரத்திற்காகவும் அழகுக்காகவும் அகலமான மண் பாத்திரத்தில் பூக்கள் தூவி தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும். தண்ணீர் அழகாகி, பூக்களை அழகுபடுத்துகிறதா? பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா? இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா? என்று ரசனைக்குறியவர்களுக்குத் தோன்றும். மிதக்கும் பூக்களைப் போல அ முதல் ஃ வரை என்று பதிவு செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் மிளிர்கின்றன.

நல்லதோர் வீணை

செய்தே அதை

நலங்கெட புழுதியில்

எறிவதுண்டோ..?

செருப்பில்லாமல்

நான் நடப்பதை

இப்படி நீ சொன்னால்

செல்லமாய் உன்னை

அடிக்காமல் வேறு

என்ன செய்வேனடா

நான்..?

அரிய உவமைகள், உருவகங்கள் தொகுப்பெங்கும் குவிந்து கிடக்கின்றன.

காய்ந்த பிறகு வாசம்

வீசும் மகிழம்பூவைப் போல்

நீ பிரிந்த பிறகும்

நேசம் வீசும் உன்

நினைவைத் தவிர..!

இந்தக் கவிதை கற்பனை ஓட்டத்தில் ஒரு மென் சிலிர்ப்பு.

நவீன கவிதையில் காதல் பதிவுகள் அரிதாகிக் கொண்டு வருகையில் இம்மாதிரியான காதல் கொகுப்புகள், காதல் கவிதைகளை விரும்பி நேசிக்கிறவர்களுக்கும், காதலின் பரிசாக அளிக்கவும் ஆக மிகச் சிறந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது, "மயிலிறகாய் ஒரு காதல்".

கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.

பொய்களில் காதல் பொய்கள் சுவாரஸ்யமானவை. எளிய வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் காதலையும் காதலிப்பவர்களையும் சிகரத்திற்கு உயர்த்துகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நேர்த்தியான அச்சமைப்பு இந்தக் காதலை மேலும் உயர்த்துகிறது.

தொகுப்பு: மயிலிறகாய் ஒரு காதல் (கவிதை நூல்)

நூலாசிரியர் : நிலாரசிகன்

இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=212001

Friday, July 18, 2008

மென் தமிழ் இணைய இதழ் - ஆடி2008

இனிமையான தோழர்களே,

மென் தமிழ் இணைய இதழை கீழ்கண்ட சுட்டியில் பெற்றுக்கொள்ளலாம்.

http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/files/mentamil_july.pdf

இந்த சுட்டிமூலம் தரவிறக்கம் செய்ய இயலாதவர்கள் எனக்கு தனிமடலிடுங்கள்
(nilaraseegan@gmail.com)

நான்கு கணிப்பொறி மென் பொருளார்களின் சிறு முயற்சி இது.
இந்த சிறிய முயற்சி மேன்மேலும் வளர உங்களது ஆதரவும்,ஆசிகளும்,வாழ்த்துக்களும் தேவை.
இதழின் நிறை/குறைகளை சுட்டிக்காட்டினால் இனிவரும் இதழ்களை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.




நன்றியுடன்,
மென் தமிழ் ஆசிரியர் குழு சார்பாக,
நிலாரசிகன்.


Friday, July 11, 2008

முத்தக்கவிதைகள் மூன்று

1.மெல்லிதழில் மென்மையாய்

முத்தமிட்டு வெட்கப்புன்னகையுடன்

நெஞ்சில் நீ புதைகின்ற

செளந்தர்யத்தில்,

தூவல் கொண்டெழுதிடும்

கவிதைகள் தோற்றுப்போகின்றன


2. முத்தம் பெற முரண்டுபிடித்து

முடியாமல் உறங்கச்செல்கின்ற

எனக்குத் தெரியும்

உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும்

உன் முத்தவித்தை.


3. இறுக பற்றியிருந்த

விரல்கள் தளர்த்தி

நெற்றிமீது ஒற்றைமுத்தமிட்டு

எனை பிரிந்து செல்கிறாய்.

உன் ப்ரியங்களுடன்

வீடுவருகிறேன்

உயிரின்றி.

சுவடுகளின் நர்த்தனம்…

ஒவ்வொரு சுவடுகளாக

அழித்தபடி

நகர்கின்ற வெப்பக்காற்றின்

வேகம் குறைந்த கணத்தில்

ஆர்ப்பரிக்கும் அலைகள்

அடங்கியிருந்தன.

சிறியதொரு இடைவெளியில்

மீண்டும் கரைகளை அரிக்கத்துவங்கின

அவ்வலைகள்.

அழித்தொழிந்த சுவடுகள் உயிர்ப்பெற்று

நர்த்தனமாடுகின்ற காட்சியை

கண்டுகளிக்க

யன்னலின் வழியே உள்நுழைந்தது

வெண்பிறை.


Thursday, July 10, 2008

புதிய வலைத்தளம்

என் புதிய வலைத்தளத்தின் முகவரி
http://www.nilaraseeganonline.com/

Tuesday, July 08, 2008

ஒற்றைப் பறவை

காற்றைக் கிழித்தபடி

அரை வட்ட நிலையில்

உயரப்பறந்தது

பறவைக்கூட்டம்…

நீண்டு விரிந்திருக்கும்

விசும்பினை தன் சிறிய

இறக்கையினால் அடித்துக்கொண்டே

கூட்டம் தவிர்த்து தனியே

பறந்தது வெள்ளை நிற

பறவையொன்று.

மஞ்சள் வெயில்

படர்ந்த மரத்தின் கிளையிலமர்ந்து

மேலெழும்பிய அதன்

நீண்ட அலகில்

நெளிந்து கொண்டிருந்த

அரவத்தின் செங்குருதி காற்றில்

கலக்கையில் பிற பறவைகளுடன்

சேர்ந்து மறைந்தது அப்பறவை.

Monday, June 30, 2008

பைத்தியக்காரி

விண்ணிலிருந்து
இறங்கி கோதுமை நிற பாதங்களால்
வீதியெங்கும் ஓடி ஆடும் தேவதையாக..

கருமை நிற
இருளை முத்தமிடும் மின்மினிகளின்
பின்னால் ஓடுகின்ற சிறுமியாக..

ஊரறிய சரடுகட்டிய துணைவன்
பரிசளித்த முத்தங்களின்
ஈரத்தை வருடுகின்ற மனைவியாக...


கிழிந்து தொங்கும்
ஆடைகள் பற்றிய கவனிப்புகளின்றி
ஒவ்வொரு பேருந்தின்
சன்னலுக்கும் தட்டை உயர்த்திப் பிடிக்கும்
அவளின்
உறக்கத்தில் இவர்களையொத்த
ஆயிரம் கனவுகள் குறும்புன்னகையாய்
மலர்கிறது

Thursday, June 12, 2008

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்



தோழன்மீர்,

வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.



கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்


இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.

பெயர் : மென்தமிழ்


உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.

மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கணிப்பொறி சம்பந்தமான படைப்புகள் மட்டுமல்ல. எந்த படைப்புகளையும் அனுப்பலாம் . கணிப்பொறி உபயோகிக்கும் அல்லது இணையத்தில் உலாவரும் அனைவருமே இதில் அடக்கம்.


படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :
mentamil@gmail.com


படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் :
30/06/2008

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மென்தமிழ் வெளிவரும்.



வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென் தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.

வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.

நம்பிக்கையுடன்,


- மென் தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

இதைப்பற்றிய தொடுப்புகள்:

http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html

http://vizhiyan.wordpress.com/2008/06/11/mentamil-magazine/

http://srishiv.blogspot.com/


Wednesday, June 11, 2008

சிலந்திகள்..

எப்பொழுதும் இல்லாத
பொழுதில் புலப்பட்டன
சில சிலந்திகள்...

வலையில் சிக்கிய
பூச்சியொன்றை தின்றபடி
சகிக்க இயலாத
சிரிப்பொலிகளை ஏற்படுத்தி
நடனமாடி மறைந்தன..

இரவில் தொலைத்ததை
பகலில் மீட்டெடுக்காமல்
அமிலம் வீசுகின்ற
இவர்களைவிட
சிலந்திகளின் பற்கள்
கூர்மையானவை அல்ல.

Tuesday, June 10, 2008

நேயாவில் என் சிறுகதை

நண்பர்களே,
நேயா பெண்கள் மாத இதழின் ஜூன் மாத பதிப்பில்
என்னுடைய சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Monday, June 02, 2008

நீ, நான், காதல்...(குறுந்தொடர்)



3.ஊடல்காலம்:

அவன்:


வண்ணம்கொண்ட மேகமே!
நீ கோபம் கொண்ட
காரணத்தால்,
வானவில்கூட
கறுப்புவெள்ளையாகிப் போனதடி!

அவள்:

சில்லென்ற மழையால்
என்னுள்ளம் நனைத்தவன்
சொல்லொன்று தவறியதால்
சில்லுச் சில்லாய்போனதடா என்
இதயம்.

அவன்:

பார்த்தும் பார்க்காமல்
விறுவிறுவென்று என்னைக்
கடந்து போய்விட்டாய்..
தவிப்பைக் கற்றுத்தந்த
காதல் இன்று
தவிர்த்தலையும்
கற்றுத் தந்ததடி!

அவள்:

உன்னைப் பார்த்துவிட்டு
பார்க்காததுபோல்
கடந்து வந்துவிட்டேன்.
உன்னைக் கடந்தபோது
ஜெயித்த என் பிடிவாதம்,
கடந்துவிட்டபின் தோற்றுப்
போய் யாருமறியாமல்
விசும்ப ஆரம்பிக்கிறது.

அவன்:

கோபத்தில் சொல்லக்கூடாத
வார்த்தையொன்றை
சொன்னதற்காக என்
கன்னத்தில் நீ அடித்திருக்கலாம்.
காயத்துடன் முடிந்திருக்கும்.
இதயத்தில் அடிக்கிறாய்,
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.

அவள்:

சீதாயணம் பாடிய
இதழ்களால்
ஏன்
சீதையை துளைத்தன
ராமனின் சொல்லம்புகள்?

அவன்:


மரணதண்டனையை
விட கொடியது
காதலி
உன் மெளனதண்டனை.

அவள்:

அழுகின்ற கண்களிடம்
சொல்லிவிட்டேன்
அவனுக்காக அழவேண்டாமென்று.
கண்களின் அழுகை நின்றபின்பும்
கேட்கிறது இதயத்தின்
விசும்பல்சப்தம்...

அவன்:

மன்னித்துவிட்டு மலரென
மலர்ந்துவிடுவாய் என்றெண்ணியே
மலர்கின்றன என் காலைப்பொழுதுகள்.
சுடுகின்ற நிலவின்பார்வையில்
சருகாகி வீழ்கின்றன என்
மாலைப்பொழுதுகள்.

அவள்:

நிலவும் சுடுமென்று
நீயும் உணரவேண்டும்;
சித்திரப்பாவை என்
சுயமும் நீ உணரவேண்டும்;
மன்னித்துவிட்டேன் உன்னை,
மலராகி உன் மடியில்
விழுகிறேன் ஓடோடிவா!

4.பிரிவுக்காலம்

(தொடரும்)

Friday, May 30, 2008

ஐ.பி.எல் கிரிக்கெட் - அரையிறுதி போட்டிகள் ஒரு அலசல்


சென்னை சூப்பர் கிங்ஸ்:

தட்டுத்தடுமாறி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கும் அணி. இவர்களுக்கு பதில் மும்பை வந்திருக்கலாமே என்று அனைவரையும் வெறுப்புடன் முணுமுணுக்க வைத்தனர் சென்னை வீரர்கள். பெங்களூரிடம் பெற்ற மோசமான தோல்வி,ராஜஸ்தானிடம் போராடி தோல்வி என தொடர்ச்சியான தோல்விகளில் துவண்டிருந்த
அணி,டெக்கான் சார்ஜர்ஸை வென்ற ஒரே நம்பிக்கையுடன் அரையிறுதிக்குள் காலடி எடுத்துவைக்கிறது.

அரையிறுதியில் பலம்வாய்ந்த பஞ்சாப் அணியுடன் மோதவேண்டும். லீக் ஆட்டங்களில் இருமுறை சென்னையிடம் தோற்றதால் இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது யுவராஜ் அணி.

பலம்:

வெற்றியோ தோல்வியோ எதற்கும் கவலையில்லை என்கிற கேப்டன் கூல் தோனி.
பந்துவீச்சு,பேட்டிங் இரண்டிலும் கலக்கும் மார்கல்.
பீல்டிங்,பேட்டிங் இரண்டிலும் அசத்தும் ரெய்னா.

பலவீனம்:

நிட்னி,பாலாஜி என இருவீரர்கள் "ஹாட்ரிக்" சாதனை செய்தும் அணியின் பந்துவீச்சு சரியில்லை.
கோனியை தவிர மற்றவர்களின் பந்துவீச்சு சிறப்பாக எடுபடவில்லை.
பிளம்மிங்,பட்டீல் சிறந்த தொடக்கம் தருவதில்லை.(ஒரு சில போட்டிகளை தவிர்த்து)

வெற்றி வாய்ப்பு: 50%.

தில்லி டேர்டெவில்ஸ்:

குறைவான புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தாலும் பலம் வாய்ந்த அணிகளில் இதுவும் ஒன்று.
லீக் போட்டிகளில் ராஜஸ்தானிடம் ஒருவெற்றி ஒரு தோல்வி.
ராஜஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.சோஹித் தன்வீர்,ஷான் வார்னே ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை குவித்தால் இறுதிபோட்டிக்குள் நுழையலாம்.

பலம்:

அதிரடி சேவாக்,ரன்மெஷின் காம்பீர்,சிறந்த பந்துவீச்சாளர் மெக்ராத் மற்றும் இளம்வீரர் தவானின் பேட்டிங் & பீல்டிங்.

பலவீனம்:


டீவில்லியர்ஸ்,மாலிக்கின் சொதப்பலான பேட்டிங்கால் முதல் மூன்று வீரர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.

வெற்றி வாய்ப்பு: 40%

கிங்ஸ் XI பஞ்சாப்:

கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை ஓட ஓட விரட்டி அடித்து கம்பீரமாக வலம் வரும் அணி.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற துடிக்கும் இளம் அணி. சென்னையை பழிதீர்க்க பசியுடன் காத்திருக்கிறார் யுவராஜ். ஆரஞ்சு தொப்பியை காம்பீரிடமிருந்து தட்டிப்பறித்த மார்ஷ் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக சதமடித்த திருப்தியில் அரையிறுதிக்குள் நுழைகிறார்.

பலம்:

மார்ஷ்,ஹோப்ஸ்,யுவராஜ்,சங்காக்கரா,ஜெயவர்தனே என்று பலம்பொருந்திய பேட்டிங் ஆர்டர்.
ஸ்ரீசாந்த்,பதான்,சாவ்லா என்று பலம்பொருந்திய பவுலிங்.

பலவீனம்:

Over confidence & வி.ஆர்.வி சிங்

வெற்றி வாய்ப்பு: 90%

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இந்த ஐ.பி.எல் போட்டிகளின் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அணி.முதல் லீக் போட்டியில் தோற்றபோது யாரும் நினைக்கவில்லை இந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறுமென்று. வார்னேயின் சிறப்பான கேப்டன்சியில் வீறு நடை போடுகிறது. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல வார்னே செய்கின்ற புதுப்புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைத்திருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை நெருங்குகிறார்கள் ராயல்ஸ் அணியினர்.

பலம்:

வார்னே,யூசூப் பதான்,ஸ்மித்,தன்வீர்,வாட்சன் (கிட்டதட்ட மொத்த அணியும்:)

பலவீனம்:

சிறப்பான தொடக்கத்தை ஸ்மித் தர தவறினால் நிறைய ரன்களை குவிக்குமா என்பது சந்தேகமே.

வெற்றி வாய்ப்பு: 95%


சென்னை அணி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் :)

Friday, May 23, 2008

குறுங்கவிதைகள் - பாகம் -5



1.குழாயடி சண்டை
தாகத்தில் தவித்தன
வரிசைக் குடங்கள்.

2.கிராமத்து வீட்டின்
நீரில்லா கிணற்றுக்குள்
தளும்புகிறது
பால்யத்தில் தொலைத்த
பந்துகளின் நினைவுகள்.

3.கல்நெஞ்சு மாமியார்
கண்ணீர் வடிக்கிறாள்
நெடுந்தொடருக்கு நன்றி.

4.தூண்டில்புழுவுக்காக அழுதது
மனம்
மீனைச் சுவைத்தபடி.

5.கொளுத்தும் வெயிலில்
விளையாடுகிறது நிலா
குழந்தையுருவில்.

6.உதிர்கின்ற பூக்களை
நிழல்கொண்டு தாங்குகிறது
மரம்.

7.இலவச தண்ணீர்பந்தலில்
விற்றுக்கொண்டிருந்தார்கள்
கட்சியை.

Tuesday, May 20, 2008

உயிரின் விசும்பல்...




விரல்பற்றிய இதயபகிர்வுகள்
ஏதுமற்ற என்னுலகை
பொய்மை நிறைந்த
உன் சொற்களால் நிரப்புகிறாய்.

விசும்புகின்ற உயிரின்
சத்தம் கேட்டபின்பும்
அலட்சிய பார்வையொன்றில்
தவிர்த்து
பிரிந்துசெல்கிறாய்.

என் கண்ணீர்த்துளி
பெருகி காலநதி
பெருவெள்ளமென ஓடுகிறது

தூரத்தில் எங்கோ
ஒரு மலர் உதிரும்
சப்தம் சன்னமாக கேட்க
துவங்குகையில் இருள்கிறது
என் வானம்.

Monday, May 19, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் -4




1.உண்டியலில் விழுகின்றன
சில்லறைகள்.
பசியுடன் திருவோடு.

2. திருமணவீட்டில்
சரசரக்கும் பட்டுப்புடவைகளால்
பேசுகிறார்கள் பெண்கள்.

3.தோழன் அந்நியனானான்
கொலுசுகள் விலங்கானது
பாவாடை தாவணியானதால்.

Friday, May 16, 2008

கல்லூரித்தோழி..


கல்லூரிக்காலத்தில்
எப்போதும் என்னுடனிருந்தாய்..

தேர்வுகளில் நான் தேர்ச்சிபெற
கோயில்களில் தவமிருந்தாய்...

தோற்றபோதெல்லாம் தோள்தந்து
உற்சாகமூட்டும் தென்றலாயிருந்தாய்...

கல்லூரியின் கடைசிநாளில்
உணவருந்தாமல் கண்ணீர்சிந்தும்
சிலையாகியிருந்தாய்...

வருடங்கள் பல கடந்துவிட்டபின்
ஒரு ரயில்நிலையத்தில்
உன்னைச்சந்திக்கிறேன்...

என் நலம் விசாரித்து,
கைக் குழந்தையுடன்
கணவன் பின் செல்கிறாய்.

நகர்கின்ற ரயிலை
நோக்கி விரைந்தோடுகிறேன்
என் கல்லூரித்தோழியை
உன்னில் காணாத
கண்ணீருடன்.

Thursday, May 15, 2008

Aphorism - ஒரு முயற்சி

ஆங்கிலத்தில் Aphorism என்று இதனை சொல்வார்கள். கவிதையென இவற்றைக் கொள்ள இயலாது. என் கன்னி முயற்சி இது பிழை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

  • படிக்கட்டில் உருண்டு இறந்த குழந்தையை நினைவூட்டுகிறது இலையில் இறங்கும் பனித்துளி..
  • மலையுச்சியில் நின்று இவ்வுலகமே என் காலடியில் என்றேன்.சிரித்துக்கொண்டே நகர்ந்தன மேகங்கள்.
  • தவறவிட்ட கண்ணாடியின் சில்லுகளை பொறுக்கினேன். முகம் காண்பித்தன சில. ரத்தம் கேட்டன சில.
  • அம்மாவின் கண்ணீர்த்துளிக்குள் ஒளிந்திருக்கிறது அப்பாவின் முரட்டுத்தனமும் பிள்ளைகளின் இயலாமையும்.
  • முட்டிக்காயத்தில் துடிக்கும் பிள்ளைக்கு மருந்திட ஓடும் தாயின் காதுகளுக்கு கேட்பதில்லை பசித்தழும் குழந்தையின் அழுகை சத்தம்.

Wednesday, May 14, 2008

ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.



இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.

காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)

தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்
கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மொத்தம் எட்டு அணிகள். 59 போட்டிகள். 44 நாட்கள்.

ஒவ்வொரு அணிகளை பற்றிய எனது பார்வையே இப்பதிவு.

ராயல் சேலன் ஜர்ஸ்:

ஏர்லைன்ஸ்/பீர் புகழ் விஜய் மல்லையாவின் அணி. $111 மில்லியன் செலவிட்டு இந்த அணியை வாங்கியதற்கு
இன்னும் சில விமானங்களை வாங்கியிருக்கலாம்.

இருபது ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிரடி வீரர்களை வாங்கியவர்கள் மத்தியில் "டெஸ்ட்" வீரர்களை
வாங்கி அடிவாங்கிகொண்ட அணி இது.

டிராவிட்,ஜாபர்,காலிஸ் போன்ற டெஸ்ட் வீரர்களை வைத்துக்கொண்டு இந்தப்போட்டியில் ஜெயிக்க நினைத்தது தவறு என்று மல்லையாவிற்கு தாமதமாக புரிந்திருக்கிறது.

இதன் CEO சாரு சர்மாவை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்கு பதில் மெகாதொடரில் சிறிது நேரம் அழலாம்.

சிறந்த வீரர்: மார்க் பவுச்சர்
சிறந்த சொதப்பல்: காலிஸ்/திராவிட்
சிறந்த புதுமுக வீரர் :Virat Kohli.


டெக்கான் சார்ஜர்ஸ:

மிகவும் பலமான அணி;பல அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட அணி, என்றெல்லாம்
வர்ணிக்கப்பட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி "டக் அவுட்" ஆன அணி இந்த டெக்கான் சார்ஜர்ஸ்.

"கில்லி" கில்கிறிஸ்ட், "Bang Bang" அப்ரிதி,"சிக்ஸர்" சைமண்ட்ஸ்,"மொட்டைபாஸ்" கிப்ஸ், "Very Very Special/Stylish" இலச்சுமணன், "இளம்புயல்" ரோஹித் சர்மா, நியுசிலாந்தின் "ஸ்டைரிஸ்", ஆர்.பி.சிங்,சமிந்தா வாஸ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தும் டெக்கான் தோல்விகளை அதிகம் கண்டுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றின் மிக வேகமாக சதமடித்த கில்லியாலும்(42 பந்தில்) இந்த அணியை கரைசேர்க்க இயலவில்லை. காரணம் என்னவென்று யோசித்துபார்த்தால் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறந்த வீரர்களாக இருந்தும் ஒரு குழுவாக சேர்ந்து ஜெயிக்க இவர்களால் முடியவில்லை.

அரை இறுதி போட்டிக்கு தேர்வாகும் கனவு கனவாகவே போய்விட்டது.

சிறந்த வீரர் : ரோகித் சர்மா.
சிறந்த சொதப்பல்: அப்ரிதி.
சிறந்தா புதுமுக வீரர் :ஓஜ்ஹா(Ojha)


மும்பை இந்தியன்ஸ்:

"தல"சச்சின் இல்லாமல் விளையாடி வருகின்ற அணி.முதல் ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடி வருகிறது.

சச்சின் இல்லாதது பெரும் இழப்பு.

ஜெயசூர்யா,போலாக்,உத்தப்பா இவர்களை நம்பியே களம் இறங்கும் அணி.

ஹர்பஜன்சிங்கின் வெளியேற்றம் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

அரை இறுதிக்கு முன்னேற ஏதேனும் அற்புதம் நிகழ வேண்டும்.

சிறந்த வீரர்: போலாக்
சிறந்த சொதப்பல் :ஜெயசூர்யா(ஒரு போட்டியை தவிர்த்து)
சிறந்த புதுமுக வீரர் : அபிசேக் நாயர்

தில்லி டேர்டெவில்ஸ்:

சேவாக்கின் அதிரடி,காம்பீரின் ரன்குவிப்பு,மெக்ராத்தின் மேஜிக் பெளலிங்,தவானின் திறமை,
திவாரியின் பீல்டிங் என்று கலக்கினாலும் ஆடிய ஒன்பது போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

சேவாக் அடித்தால் வெற்றி. சேவாக் அவுட்டானால் தோல்வி என்கிற நிலை இருப்பதால் இந்த
அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகமே.

குழுவாக செயல்பட்டால் மற்ற அணிகளை தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் இந்த "டெவில்ஸ்" என்பதில் சந்தேகமில்லை.

சிறந்த வீரர்: காம்பீர்
சிறந்த சொதப்பல்: தினேஷ் கார்த்திக்
சிறந்த புதுமுக வீரர் :தவான்/திவாரி.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணி. ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து உற்சாகப்படுத்தும் ஷாருக்கின் செயல் அணிக்கு மிகப்பெரிய "பூஸ்ட்".

பிரண்டன் மெக்கலம் முதல் போட்டியில் 73 பந்துகளில் அடித்த 158* ரன்கள் இருபதுஒவர் போட்டிகளில் ஒரு மிகச்சிறந்த சாதனை. (13 இமாலய சிக்ஸரும் இதிலடங்கும்)

கேப்டன் "தாதா" கங்குலி,ரிக்கி பாண்டிங்,உயர்ந்த மனிதன் இசாந்த் சர்மா,டேவிட் ஹஸ்ஸி,தாமதமாக அணியில் சேர்ந்து தான் விளையாடிய முதல்போட்டியிலேயே கலக்கிய "ராவல்பிண்டி எக்ஸ்பரஸ்" அக்தர் என்று நட்சத்திர வீரர்களின் பட்டியல் நீள்கிறது.

இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

சிறந்த வீரர்:டேவிட் ஹஸ்ஸி
சிறந்த சொதப்பல்:முரளி கார்த்திக்
சிறந்த புதுமுகவீரர் :சாஹா/திண்டா.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

6 கோடி தோனி, "Hulk" ஹெயிடன்,மிஸ்டர் கிரிக்கெட் ஹஸ்ஸி,இளம்புயல் ரெய்னா,"இறுதி ஓவர் ஸ்பெசலிஸ்ட்" ஜோகிந்தர் சர்மா, சென்னைசிங்கம் பத்ரிநாத்,கோனி,"ஹாட்ரிக்" பாலாஜி என்று நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி இருக்கும் அணி.

ஆடிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி.
அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று தோல்வி.
பின் சுதாரித்து தொடர்ந்து இரண்டு வெற்றி என்று யூகிக்க முடியாத அதேசமயம் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றாக பவனி வருகிறது சென்னை அணி.

டிரம்ஸ் சிவமணி ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து டிரம்ஸ் அடித்து தூள் கிளப்புக்கிறார்.

விஜய்,நயன் தாரா என சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள்.

கேப்டன் கூல் தோனியின் சிறப்பான வழிநடத்துதலால் இந்த அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனலாம்.

சிறந்த வீரர்: தோனி/பாலாஜி
சிறந்த சொதப்பல்:பிளம்மிங்
சிறந்த புதுமுக வீரர்: கோனி.

கிங்ஸ் XI பஞ்சாப்:

ஆறுபந்தில் ஆறு சிக்ஸர் அடித்து தூள்பறத்திய யுவராஜ் சிங் கேப்டனாக உள்ள அணி.
துல்லியமான ஸ்விங் பத்துவீச்சால் எதிரணி வீரர்களில் ஸ்டம்புகளை பறக்க செய்யும் பதான் அணிக்கு மிகப்பெரிய பலம்.
"அழுமூஞ்சி" என்றாலும் பந்துவீச்சில் சிடுமூஞ்சியாக வலம்வரும் ஸ்ரீசாந்,
ரன் மெஷின் குமார சங்காக்கரா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மார்ஷின் மகன் ஷான் மார்ஷின் அதிரடி
ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தாவின் கன்னக்குழி புன்னகை
என பஞ்சாப் அணி எதிரணிகளை பஞ்சாக ஊதித்தள்ளுகிறது.

வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் பஞ்சாப் முக்கியமான அணி.

சிறந்த வீரர்: ஷான் மார்ஷ்
சிறந்த சொதப்பல்: ஜெயவர்த்தனே
சிறந்த புதுமுக வீரர் :பியூஷ் சாவ்லா.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இந்த அணி ஒரு மிகச்சிறந்த உதாரணம். Underdogs ஆக
அறியப்பட்ட அணி இன்று ஏழு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

காரணம் - ஷான் வார்னே.

இளம் வீரர்களின் திறமை அறிந்து,அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி வெற்றிக்கனிகளை சுவைக்க மிக முக்கிய காரணம் வார்னேயின் கேப்டன்ஸி.

முதல் போட்டியில் தோற்று பின் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற
காரணமாக இருந்தவரும் வார்னேதான்.

யூசுப் பதானின் அதிரடி,கைப்பின் அசத்தல் பீல்டிங்,வார்னேவின் துல்லிய பந்துவீச்சு,வாட்சனின் ஆல்ரவுண்ட் திறமை,ஸ்மித்தின் அடித்தளம் அமைக்கும் பேட்டிங் போன்றவற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகச்சிறந்த
அணியாக விளங்குகிறது.

சிறந்த வீரர்: வார்னே/பதான்
சிறந்த சொதப்பல்: கம்ரான் அக்மல்
சிறந்த புதுமுக வீரர் :ஜடேஜா.

அடுத்த பதிவு அரையிறுதி போட்டிகளுக்கு முன் எழுதுகிறேன்

-நிலாரசிகன்.