Saturday, April 25, 2009

அறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2



1. நாளை பதில்
சொல்கிறேன் என்று
சொல்லிச்சென்றாள்.
நாளைக்குள் நுழைந்து
காயத்தோடு
மீண்டு வந்தேன்
இன்றைக்குள்.

2.பூமி மீண்டும்
மனிதர்களின் கைகளுக்குள்
வந்தது.
பாதாள அறைகளைவிட்டு
வெளியேறினர்
மக்கள்.
எங்கும் நிசப்தம்
நிலவ துவங்கிய
நாளொன்றின் அந்தியில்
இயந்திரக் குப்பைகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான்
வயிறு ஒட்டிய
சிறுவன்.

Thursday, April 23, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

நண்பர்களுக்கு வணக்கம்,

சில மாதங்களுக்கு முன் நானெழுதிய சிறுகதை "வால் பாண்டி சரித்திரம்".
எழுதி முடித்த பின்னும் எழுதாமல் விடுபட்டவை நிறைய என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதன் நீட்சி இப்போது நாவலாக உருப்பெற்றிருக்கிறது.

கீற்று இணைய தளத்தில் வாராவாரம் வெளிவரும். படித்து உங்களது பின்னுட்டங்களை
இடுங்கள்.


பாகம் 1 இங்கே படிக்கலாம்:
http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram.php

Saturday, April 18, 2009

"வார்த்தை" யில் என் கவிதை:




"வார்த்தை" இலக்கிய இதழில் இம்மாதம்(ஏப்ரல் 09) வெளியான என் இரு கவிதைகள்.

Thursday, April 16, 2009

Chicken a la Carte - குறும்படம்

ஆறு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற வலி மிக அதிகம்.

உணவுவிடுதிக்கு இருபெண்கள் வருகிறார்கள்.கோழிக்கறியும் சாதமும் ஆர்டர் செய்கிறார்கள். கொஞ்சமாய் கொறித்துவிட்டு மீதம் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

அங்கே வருகின்ற ஒருவர் அந்த மீதமான கறியை ஒரு வாளியில் எடுத்து செல்கிறார்.
தன் வீட்டிற்கு செல்கின்ற அவரை, அங்குள்ள குழந்தைகள் சந்தோஷமாய் ஓடிவந்து மொய்த்துக்கொள்கிறார்கள்.

[இந்தக்காட்சியிலிருந்து எழும்புகின்ற இசையும் அதன் வரிகளும் கல்நெஞ்சையும் உருக வைத்துவிடும்.]

அந்த கோழிக்கறிக்காக வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். இவர் ஒவ்வொருவருக்கும் தட்டில் உணவை எடுத்து வைக்கிறார்.மலர்ந்த முகத்தோடு குழந்தைகள் அதனை தொட எத்தனிக்கும்போது தடுத்துவிட்டு,கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிட சொல்கிறார்.

பசியால் தினம் தினம் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் மடிகிறார்கள். இது ஒரு நிஜ கதை என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் இது.பார்த்துமுடித்து சில மணி நேரங்கள் எதுவும் செய்ய இயலாமல் மனம் கனத்து போனது.
பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

Monday, April 13, 2009

Winged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்






பருவகாலத்தில் இடம்பெயரும் பறவைகள் குறித்தான ஆவணப்படம் பற்றி எஸ்.ரா எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தவுடனே இணையத்தில் தேடிப்பிடித்து படத்தை பார்த்துவிட்டேன். படம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் எஸ்.ரா அவர்கள் நிறைய எழுதிவிட்டதால் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

ரம்மியமான காட்சிகள்:

1.மீனொன்றை முழுவதுமாக விழுங்க முயற்சிக்கும் பறவையின் லாவகமும்,நிதானமும் மிக அற்புதமான காட்சி.
2.அமேசான் நதியின் மீது பறக்கின்ற பஞ்சவர்ண கிளிகளும் அதன் பார்வையும்.
3.அலைகளோடு குதித்தோடும் பென்குவின் பறவைக்கூட்டம்
4.தண்ணீர் மீது நடனமாடும் பறவைகள்


ரணமான காட்சிகள்:

1.சந்தோஷமாய் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன .சில வேடர்களின் குண்டுகளுக்குப் பலியாகிறோம் என்பதை அறியாமல் வீழ்கின்ற பறவைகளைக் கவ்வி எடுத்துவர ஓடுகின்றன வேட்டை நாய்கள்.

2.ஒரு பக்க சிறகை இழந்த பறவையொன்று பறக்க இயலாமல் கடற்கரையில் அங்குமிங்கும் தத்தி தாவுகிறது.சுற்றி வளைக்கின்றன நண்டுகள்.

3.பென்குவின் பறவையின் குஞ்சை மற்றொரு பறவை கொத்தி தின்கிறது,தடுக்க இயலாத தாய்பறவை வானம் பார்த்து கதறி ஓலமிடுகிறது.(இந்தக்காட்சியின் பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது)

4.அமேசான் ந‌தியில் மித‌க்கிற‌து ஒரு ப‌ட‌கு. அதில் கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குர‌ங்கு ஒன்றும் சில‌ ப‌ற‌வைக‌ளும் இருக்கின்ற‌ன‌.ம‌னித‌ன் பிற‌ உயிரின‌ங்க‌ள் மீது காட்டுகின்ற‌ குரூர‌த்தை இந்த‌ ஒரு காட்சி சொல்லிவிடுகிற‌து.

86 நிமிட‌ம் ஓடுகின்ற‌ இந்த‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் முடிந்த‌வுட‌ன் ம‌ன‌தில் ஏற்ப‌டுகின்ற‌ வெறுமை த‌விர்க்க‌ இய‌லாத‌து. ப‌ற‌வைக‌ளை நாம் ப‌ற‌க்க‌ அனும‌திக்கிறோமா என்கிற‌ கேள்வி ம‌ன‌தில்
தோன்றியபடியே இருக்கிறது..

பிர‌மிளின் க‌விதையோடு இந்த‌ப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.

"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"

Sunday, April 12, 2009

பேசும் பறவை:

http://www.youtube.com/watch?v=OPz2MYp67ic


பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

Thursday, April 09, 2009

சிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி



1.சிலையுலகம்

உறைந்த மெளனத்தை
உகுத்துக்கொண்டிருக்கும்
அந்தச் சிலையின்
மர்ம அழகிலிருந்து
எழும்பும் இசை
மனதின் ஆழத்தில்
ஒன்றன்மீது ஒன்றாய்
படிந்துகொண்டிருந்தது.
மெளனத்தின்
மென்கரம் பற்றி
சிலையுலகினுள் நுழைந்தேன்.
சப்தங்களால் நிறைந்திருந்த
அவ்வுலகை விட்டு
வெளிக்குதிக்க என்
கரம் பற்றும்
அவசரத்தில் வரிசையில்
நின்றன சிலைகள்.

2.செந்நிற கூந்தல்காரி

அவள் முகத்தில்
பூனையொன்றின் சாயல்
படர்ந்திருந்தது.
காற்றில் அசைகின்ற
செந்நிற கூந்தலும்
உற்று நோக்குகின்ற
நீல நிற கண்களும்
அவளுக்கு வாய்த்திருந்தன.
உதிரிந்துகிடக்கும்
செர்ரிப் பழங்களை
ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
மிதித்துக்கொண்டிருந்தவள்
சட்டென்று வான்நோக்கி
பார்த்து சிரித்தாள்.
பின்,
ஏதுமறியா சிறுமியாய்
புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
பாவம் பைத்தியமென்றார்கள்
பூங்காவிலிருந்தவர்கள்.
மெல்ல மெல்ல
தங்களது முகம்
வேட்டைநாயின் முகமென
மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.

நன்றி: திண்ணை.காம்
Photo By: CVR

Tuesday, April 07, 2009

இரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]





1.
வழிந்து ஓடுகின்ற வெப்பத்தின்
அளவு உயர்ந்துகொண்டேயிருந்தது.
சொற்களால் விவரிக்க இயலாத
நிறத்தில் மலையென
குவிந்திருந்தது சாம்பல்.
கரும்புகை சூழ்ந்திருக்க
பற்றி எரிந்தது நீலக்கடல்.
வீசும் காற்றில்
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது
நெருப்பின் சுவாலைகள்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியது என்றுரைத்தான்
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி


2.
காதோரம் நடனமிடும்
செவ்விதழ்களின் ஸ்பரிசத்தில்
லயித்திருக்கும்போது
வேகமாய் தட்டப்பட்டது
அறைக்கதவு.
உள்நுழைந்த எந்திரன்
தோள்சாய்திருந்தவளைக் கண்டு
புன்னகைத்தான்.
இன்னும் நான்கு நிமிடங்களில்
மரணிக்கப்போகிறேன்
என்பதை உணர்த்தியது
மணிக்கட்டில் கட்டியிருந்த
கடிகாரத்தின் சிவப்பு விளக்கு.

3. மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.

-நிலாரசிகன்

Thursday, April 02, 2009

சுயம் பற்றி மூன்று கவிதைகள்:



1.எல்லோரும் வந்து
செல்லும்
பேருந்து நிலைய
கழிப்பிடமா
என் சுயம்?

2.வந்த நிமிடம் முதல்
பேசிக்கொண்டே இருந்தாள்
அவள்.
பேசவேண்டியதென்று அவள்
பட்டியலிருந்தவற்றை
எல்லாம் பேசி முடித்தாள்.
எல்லாம் முடித்தபின்
ஏனிந்த மெளனமென்று
வினவினாள்.
பார்வையாளனா நண்பனா
என்கிற கேள்வியின்
இடைவெளியில் நின்றுகொண்டிருந்தேன்
நான்.

3.எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-நிலாரசிகன்.

Monday, March 30, 2009

பார்த்ததில் பிடித்தது



இணையத்தில் கண்டெடுத்த புகைப்படம். தனிமையின் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் புகைப்படக்கலைஞர்.

Tuesday, March 24, 2009

எங்கே என் புன்னகை? - (கவிதையல்லாதவைகள்)




1.பனி விழும் இரவில் கைகள் நிறைய உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு எங்கேயோ நடக்கின்றன கால்கள்..
திசைகளை மறந்துவிட்டு எங்காவது பயணித்து பின் உணர்ந்து எனக்கான திசை தேர்வு செய்கையில் மலர்கின்றன
இலைகளெல்லாம் சிறு சிறு புன்னகையாய்.

2.கண்ணீரும் நிராகரித்த அந்தியொன்றில் கண்ணாடி யன்னல் வழியே நடைபாதையை வெறித்துக்கொண்டிருந்தன கண்கள்.
நாய்க்குட்டியுடன் கடந்துசென்ற சிறுமி தூரப்பார்வையில் அனுப்பினாள் சிறுபுன்னகையொன்றை. மெல்ல மெல்ல
மலர்ந்தது இதயம்.

3.மலர்கொத்து விற்கும் சீனப்பெண்ணின் புன்னகையில்தான் எப்போதும் மலர்ந்திருக்கிறதோ விற்பனைக்கு
காத்திருக்கும் பூக்கள்?

4. யாருமற்ற அறைக்குள் எழுகின்ற கேவல்சப்தங்களை நிறுத்திவிட முயன்று தோற்கிறது கவிதை.
கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.

Monday, March 23, 2009

கறுப்பு வெள்ளை கனவுகள் - மூன்று கவிதைகள்




1.உன் கரங்களுக்குள் வாழ்ந்து
பழகிய என்
கனவுகளின் விளிம்பில்
காத்திருக்கிறேன்.
காத்திருத்தலின் வலி தாளாமல்
கனவுக்குள் புதைகிறதென்
பாதங்கள்.
மெல்ல மெல்ல
என்னை சுற்றி உருக்கொள்கிறது
கல்லறையொன்று.
நீ மறைந்த திசைநோக்கி
என் சிறகுகள்
படபடக்க துவங்குகையில்
கால்களை கட்டிக்கொண்டு
அழுகிறது குழந்தை.

2.
இருள் மிகுந்த அடர்வனத்தில்
நுழைய முடியாமல்
தவித்துக்கொண்டிருந்தது
வெளிச்சம்.
மானொன்றின் கதறலில்
சிலிர்த்துக்கொண்டன
விருட்சங்களின் இலைகள்.
எதற்காகவோ அல்லது
யாருக்காகவோ
சத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன
பூச்சிகள் சில.
சற்று முன் பெய்து
ஓய்ந்திருக்கிறது
மழை.

3.
நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.
உடைக்கின்ற வலிமையற்ற
என் கரங்களில்
உடைக்கப்பட்ட வளையல்களின்
கீறல்கள்.
இசைக்க மறந்த
வெள்ளைக்குயிலின்
ராகத்திற்காக
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
உன் யாசகம்.
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
என் கண்ணீர்.

நன்றி: Youthful Vikatan

Friday, March 20, 2009

காதலின்றி வேறில்லை - சில காதல் கவிதைகள்


0

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

0

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

0

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

0

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!

0

Wednesday, March 18, 2009

பார்ட் டைம் வேலை

வீட்டிலிருந்தே இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் அன்பர்களுக்கு:


Click here



[இது Genuine தளமா என்று தெரியவில்லை,நம்பிக்கை அற்றவர்கள் தவிர்த்துவிடலாம்]

Tuesday, March 17, 2009

மிகச்சிறந்த வீடியோ:

பார்த்ததில் பிடித்தது:


http://www.youtube.com/watch?v=vZAEBUTRZPo

Sunday, March 15, 2009

படித்ததில் பிடித்தது


Walking in the moon, Counting the stars,
Beyond the world, I'm searching you.

Thinking about love, Laughing at myself,
Without any words, I'm searching you.

Crying at your absence, Swallowing my sorrows,
To make you happy, I'm searching you.

Flying high in sky, Sailing long in sea,
Mad with your thoughts, I'm searching you.

Hopeing for goodthings, Hopping towards future,
Ever to be with you, I'm searching you.

Finding happy , in Failing before you,
To show my love, I'm searching you.

Waiting for you, Biting my nails,
To make me comfort, I'm searching you.

Longing for your nearness, Throwing away my roughness,
To rest under you, I'm searching you.

Sitting in the shore, Staring at the waves,
To hear your words, I'm searching you.

Sleeping in your lap, Closing my eyes,
To leave this world, I'm searching you....
Until my last breathe...
(இணையத்தில் கண்டெடுத்தேன்,எழுதியவர் பெயர் இல்லை)

Thursday, March 12, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை

புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய நிலையில் இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து பிரித்தேன். முத்துமுத்தான கையெழுத்து அந்த டைரியை நிரப்பியிருந்தன. எழுத்துப்பிழைகள் அதிகமாய் தென்பட்டது.பத்து ரூபாய்கொடுத்து வாங்கி வந்துவிட்டேன்.

தாதர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி கிளம்ப ஆரம்பித்தவுடன் டைரியை திறந்தேன். டைரிக்கு சொந்தமானவரின் பெயர் இல்லாத நிலையில் ஐந்தாவது பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். உடனே புரிந்துபோனது இது சிறுமி ஒருத்தியின் டைரியென்று. ஏழு வருடங்களுக்கு முன்புள்ள டைரி. ஜனவரி ஆறுவரை கிழிந்துவிட்டதால், ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பித்தேன்

ஜனவரி 7:
"இன்னைக்கு என்னோட பன்னிரெண்டாவது பிறந்தநாள். ராத்திரி ரயில்ல நான் மும்பை போகனும்னு அம்மா சொன்னா. இனிமே நான் அங்கதான் வேலை பார்க்க போறேன்னும் சொன்னா. சொல்றப்போ ஏன் அழுதான்னு தெரியலை. நெத்தியில ஒரு முத்தம் கொடுத்துட்டு இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டா. ராத்திரி எட்டு மணிக்கு ஒரு அண்ணன் வந்து என்னை கூட்டிக்கிட்டு போனான். சந்தோஷமாக டாட்டா காட்டினேன் அம்மா முந்தானையில முகத்த பொத்திகிட்டு அழுதா"

ஜனவரி 9:
"மும்பை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேசன்ல இருந்து வீட்டுக்கு எங்களை கூட்டிப்போக காரை அனுப்பி இருந்தாரு முதலாளி. காருல ஏறினவுடன் சாப்பிட பச்சைக்கலர் ஆப்பிள் தந்தாரு டிரைவரு. அவ்வளவு ருசியான ஆப்பிளை நான் சாப்பிட்டதேயில்லை.
அரைமணிநேரத்துல வீட்டுக்கு போய் சேர்ந்தோம். முதலாளி செவப்பா உயரமா இருந்தாரு. அவரைத் தவிர வீட்டுல வேறு யாருமில்ல. இவ்வளவு பெரிய பங்களாவை எங்க கிராமத்தில் நான் பார்த்ததே இல்ல. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு"

ஜனவரி 10:
"இன்னைக்கு காலையில எழுந்திருச்சவுடன் குளிச்சிட்டு வீட்டை துடைச்சிட்டிருந்தேன். மேல் மாடியிலிருந்து முதலாளி கூப்பிட்டாரு. அவர் ரூமுக்கு போனவுடன் என்னை இறுக்கி கட்டிபிடிச்சுகிட்டு முத்தமிட ஆரம்பிச்சாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய முத்தம் கொடுத்துட்டு நிறைய சாக்லெட் தந்தாரு. எனக்கு ஏன் முத்தம் தந்தாருன்னு தெரியலை. சாக்லெட் நிறைய தந்த முதலாளியை ரொம்ப பிடிச்சிருக்கு"

ரயிலில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டு டைரிக்குள் ஆழ்ந்திருந்தேன் நான்.

ஜனவரி 11:

"இன்னைக்கும் அவரு ரூமுக்கு என்னை கூப்பிட்டார். நிறைய சாக்லெட் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே ஓடினேன். அவரோட இடதுகையில ஊசி குத்திக்கிட்டு ஏதோ உளறினார். என்னை இழுத்து என் ட்ரெஸ்ஸை கழற்ற சொன்னார். எதுக்கு அப்படி சொன்னாருன்னு புரியாம ட்ரெஸ்ஸை கழற்றினேன். ஏசி குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.
அவர் ரூமை விட்டு வெளியே வரும்போது உடம்பு வலி தாங்க முடியல. வலி மறக்க நிறைய சாக்லெட் சாப்பிட்டேன். ஏன் அப்படி செஞ்சாருன்னுதான் புரியலை"
டைரியை படித்துக்கொண்டிருந்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாய் அடுத்த பக்கத்தை புரட்டினேன்.

ஜனவரி 12:

"இன்னைக்கு என்னை மாதிரி நாலு சின்னப்பொண்ணுங்க வந்தாங்க. அவங்களும் என்கூடதான் இருப்பாங்கன்னு சொன்னாரு முதலாளி. எனக்கு சாக்லெட் கிடைக்கறது குறைஞ்சு போச்சு"

பிப்ரவரி 10:

"இங்க வந்து ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருவாரத்தில் வர்றேன்னு சொன்ன அம்மாவும் வரலை. எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அம்மாவோட மடியில படுக்கணும். இந்த ஒரு மாசத்துல இருவதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்கிட்டாரு முதலாளி. எனக்கு ஒரு ப்ரெண்ட் கிடைச்சிருக்கா. அவளும் கிராமத்திலிருந்துதான் வந்தாளாம். பெயர் திவ்யா. திவ்யாவிற்கு அம்மா கிடையாதாம்.
அவளோட அப்பா இங்கே வந்து விட்டுட்டு போய்ட்டாரு. இப்போ இராத்திரி அடிக்கடி தூக்கம் கெடுகிறது. தினமும் நாலு அஞ்சு பேர் வர்றாங்க. உடம்பு வலி உயிர்போகுது"

பிப்ரவரி 20:

"அம்மா நீ எப்போம்மா வருவே? உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை? எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா?"

ரயிலைவிட வேகமாய் தடதடத்தது என் இதயம். அதற்கு மேல் வாசிக்க முடியாமல் மூடிவைத்துவிட்டு, படுக்கையிலிருந்து இறங்கி அருகிலிருந்த கதவை திறந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டேன். மீண்டும் படுக்கைக்கு வந்து டைரியை திறந்தேன்.

மார்ச் 12:
"இரண்டு நாளா நான் சாப்பிடலை. திவ்யா செத்துப்போயிட்டா. பாவாடையெல்லாம் ரத்தமா இருந்துச்சு. முதலாளி கொஞ்சம் கூட கவலப்படல. இரண்டு பேரு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. முருகா முருகான்னு நூத்தியெட்டு தடவ எழுதுனப்பறம் கொஞ்சம் பயம் இல்லாம இருக்கேன்"

மார்ச் 12ம் தேதிக்கு பின்னர் டைரி வெறுமையாய் இருந்தது. எந்த ஒரு பக்கத்திலும் எதுவும்
எழுதப்படவில்லை. மும்பையில் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் டைரி சென்னையில் எனக்கு கிடைத்திருக்கிறது.
அப்படியெனில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து சென்னை சென்றிருப்பாளோ? இப்போது உயிருடன் இருப்பாளா? ரொம்ப நேரம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் உறங்கிவிட்டேன்.

மறுநாள் இரவு மும்பையை அடைந்தது ரயில். இரு நாட்கள் அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தடைந்தேன். மனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு சிதைந்துபோன அந்தச் சிறுமியின் நினைவு இரண்டு வாரங்களுக்கு என் மனசுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.
நின்றால், நடந்தால் அச்சிறுமியின் நிழல் முகம் நினைவுத் திரையிலாடிக்கொண்டேயிருந்தது.

அலுவலகத்தில் திடீரென்று என்னை ஜான்ஸியில் உள்ள க்ளையின்ட் ஆபிஸுக்கு டெபுடேஷனில் அனுப்ப முடிவெடுத்தார்கள்.அரைமனதாக சம்மதித்தேன்.
சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்திலும், தில்லியிலிருந்து ஜான்ஸிக்கு இரயிலும் செல்ல முடிவாகியது. பயணம் என்பது எனக்கு எப்போதுமே உவப்பானது, எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனைவித வாழ்க்கை முறைகள், பார்க்க பார்க்க அதிசயமாக இருக்கும் எனக்கு. பம்பாய் பயணத்தின் போது படித்த அச்சிறுமியின் ஞாபகம் இன்னும் மறக்க முடியாததாக இருந்தது.

தில்லி பனிக் காற்று மூச்சையடைத்தது. சென்னையின் டிசம்பர் குளிருக்கே நடுங்கிப் போவேன், நல்ல வேளை மப்ளர் ஜெர்கின் எல்லாம் எடுத்துவந்திருந்தேன். ரயில் நிலையத்தில் புத்தகங்கள் வாங்கி கொண்டு என் கோச்சினைத் தேடி பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு என் சீட்டில் அசதியுடன் அமர்ந்தேன். கையில் இந்தியா டுடே. அசிரத்தையாக அதை புரட்டிக் கொண்டிருந்த போது இருவது வயது மதிக்கத் தக்க இளம் பெண் என் இருக்கைக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது. லட்சணமாக இருந்தாள். தமிழ்நாட்டுப் பெண் என்று பார்த்ததும் தெரிந்தது. அவள் சீட்டில் அமர்ந்து ஜன்னலில் கணவனிடம் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் மெல்ல நகர்ந்தது.அதனுடன் அவனும் கொஞ்ச தூரம் நடந்து வந்தான். அவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டார்கள். அவன் கண் பார்வையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அந்த கம்பார்மெண்டை ஒரு நோட்டம் விட்டாள். என் முகத்தில் அவள் விழி ஒரிருரு நிமிடம் அதிகமாக நிலைபெற்று பின் மாறியது. நான் புத்தகம் வாசிப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறன் மனை நோக்காத பெரும் குணத்தான் தான் ஆயினும் அழகான ஒரு தமிழ்ப்பெண் எதிரில் இருக்க எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் சற்று நேரத்தில் கைப்பையிலிருந்து ஒரு டைரியை எடுத்தாள். ரயிலின் ஆட்டத்திற்கெல்லாம் சளைத்தவள் இல்லை போலும். கோணல் மாணலாக ஏதோ எழுத ஆரம்பித்தாள். எட்டிப் பார்ப்பது நாகரிகமற்ற செயல் என்பதால் அமைதியாக இருந்தேன்.

அவள் கைப்பையில் டைரியை வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அப்பர் பெர்த்தில் ஏறி கைப்பையை தலையணையாக வைத்து படுத்து தூங்கியே விட்டாள். எனக்கு லோயர் பெர்த். அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரயில் சட்டென்று ஒரு இடத்தில் குலுங்கி நின்றது. யாவரும் நல்ல உறக்கத்தில், இவளின் பையிலிருந்து நழுவி ஏதோ கீழே விழுந்தது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். சட்டென்று குனிந்து அதை கையில் எடுத்தேன். அவளின் டைரி! என்ன இது என் வாழ்க்கையில் டைரி அடிக்கடி குறிக்கிடுகிறதே,இது என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறதோ பேசாமல் அதை அவள் பையில் வைத்துவிடலாம என்று நினைத்தேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன நினைப்பாள், திருடன் என்று கத்துவாள். சே என்ன தர்ம சங்க்டம. எல்லாவற்றையும் மீறீய ஆர்வத்தில் டைரியை கைகள் நடுங்க அந்த மெல்லிய விளக்கொளியில் வாசிக்கத் தொடங்கினேன்.

அவள் இன்றைய தேதியில் தன் கணவர் மிஸ்ராவை பிரிந்து வேலை நிமித்தமாக போவதைப் பற்றி எழுதியிருந்தாள். முந்தைய பக்கங்கள் எல்லாவற்றிலும் அழகுத் தமிழில் அவள் கணவன் புராணம் தான். சில அந்தரங்கமானவற்றைக் கூட எழுதியிருந்தாள்.ஒரு பக்கத்தை வாசித்த போது என் இதயம் துடிப்பதை ஒரு நொடி நிறுத்திக் கொண்டது. அவள் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில்ருந்து மீட்டு எடுக்கப்பட்ட பெண்.

அவமானத்தின் கறை படிந்த தன் வாழ்வை எப்படி சமன் செய்வது எனத் தெரியாமல் சிறு வயதில் அரைகுறையாக கிறுக்கிக் கொண்டிருந்த ஓவிய முயற்சிக்கு உயிர் கொடுக்க மிஸ்ராவிடம் மாணவியாக சேர்ந்ததும், அவர் இவளின் அன்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்டு மனைவியானதையும் விரிவாக எழுதியிருந்தாள். எழுதும்போதும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.சில எழுத்துக்கள் அழிந்திருந்தது.

வாழ்க்கையெனும் ஓவியம் அவளை சிதைத்து அலங்கோலமாக்கிவிட்டு பின் அழகாக்கியும் பார்த்துவிட்டது. அழகு அலங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை.
மேலும் அந்த டைரியை என்னால் வாசிக்க முடியவில்லை. அச்சிறுமியின் டைரியும் இந்த யுவதியும் ஒருவரே தானா? அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா? இருவரும் தமிழ்ப்பெண்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குறிப்பும் என்னிடம் இல்லை.

அந்தக் குழந்தைக் கையெழுத்திற்கும் இந்த முதிர்ந்த எழுத்திற்கும் உண்டான வித்யாசங்களை கண்டறியும் திறன் எனக்கில்லை.எப்படியோ மனம் கனத்துக் கிடந்த நான் புதிதாய் எதோ ஒன்று எனக்குள் உட்புகுந்தது போன்ற ஆசுவாசத்துடன் கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தேன். கனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.
எங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.

-நிலாரசிகன்

Friday, March 06, 2009

பிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதைகள்




1.யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன்
அவளை நெருங்குகிறானவன்.

2. புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்னல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

3. சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்.

நன்றி: யூத்புல்விகடன்.காம்

Wednesday, March 04, 2009

வால் பாண்டி சரித்திரம் - சிறுகதை

சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்

Sunday, February 15, 2009

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு "ஏ" பிரிவு - சிறுகதை

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/02/blog-post.html