Wednesday, July 22, 2009

குற்றாலம் போயிருந்தேன்

15 வருடங்கள் கழித்து இன்றுதான் குற்றாலம் போக வாய்ப்பு கிடைத்தது.
அங்கே க்ளிக்கிய படங்கள்:

ஐந்தருவி(கூட்டத்தில் நானும் ஒருவன் :)



மெயின் அருவி:-



மசாஜ் மன்னர்கள்:-



காவலர்!!!



படகுக்குழாம்:-



குரங்கார் :)

Monday, July 20, 2009

நாடோடிகள் - சில பகிர்வுகள்



வெகு நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றிருந்தேன். கூட்டம்
நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறந்தது. இவ்வளவு ஆரவாரமும்
உற்சாகமும் படம்பார்ப்பவர்களிடம் தொற்றிக்கொண்ட காரணம் என்ன என்று எண்ணியபோது கிடைத்த விடைகள் இரண்டு.
ஒன்று நட்பு. மற்றொன்று சுப்பிரமணியபுரத்தின் வெற்றிநாயகன் சசிக்குமார். சசிக்குமார் தோன்றும் காட்சிகளிலும் நட்பை
பற்றி அவர் பேசும் வசனங்களின்போதும் தியேட்டர் அதிர்கிறது.

காதலால் நட்பிற்கு ஏற்படும் வலியையும்,இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத பக்கங்களையும் திரையில்
செதுக்கியதற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

வெயில்,பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம்,பூ,பசங்க வரிசையில் நாடோடிகளும் தனித்து நிற்கும் ஒரு திரைப்படம்.
வெகு இயல்பான யதார்த்த நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் ஒவ்வொரு நடிகர்களும்.
எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருக்கும் கதாநாயகி,டிசர்ட்டும் தாவணியும் அணிந்தலையும்
கதாநாயகனின் தங்கை,மகனின் காதலுக்கு உதவும் அப்பா,நான்கைந்து கைத்தடிகளுடன் சுற்றித்திரியும் உள்ளூர்
மைனர்,அரசாங்க வேலை மேல் உயிரையே வைத்திருக்கும் கதாநாயகியின் அப்பா,உள்ளாடையை அசால்டாக
தலையில் கவிழ்த்துக்கொண்டு பிச்சு உதறி இருக்கும் 'பாண்டி', சித்தி முன்பு அடித்துவிட்டு அவர் சென்ற பின் கலங்கி துடிக்கும் பாண்டியின் அப்பா, காதலுக்கு மிக முக்கிய உதவி செய்யும் "பைக்" நண்பனின் மெளனம்(ஒரு வார்த்தைகூட பேசாமல் எப்போதும் சுயீங்கம் மென்று கொண்டிருப்பார்),கதாநாயகனின் பாட்டி,படத்தின் முக்கிய காட்சிகளில் ஒலிக்கும் 'சிவசம்போ' இப்படி படம் முழுவதும் நிறைகளையே தாங்கி நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒருவகையில் மனதோடு நெருக்கமாகிவிடுகிறார்கள்.

முதல் பாதியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நாடோடிகள் இடைவேளைக்கு பிறகு மனதை பிழிந்துவிடுகிறார்கள். கதாநாயகியை பிரியும் தருணத்தில் அவர் அப்பாவிடம் "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா" என்று சொல்லும்போதும்
"நீ வலிச்சாலும் வலிக்கலன்னுதாண்டா சொல்வ" என்று பாண்டி சொல்லும் காட்சியிலும் கலங்க வைத்துவிடுகிறார் சசி.

கிளைமாக்ஸில் "தமிழ்சினிமா"வாகி விடுவார்களோ என்கிற பயத்தை அடித்து நொறுக்கி ஒரு புன்முறுவலோடு நம்மை
வழி அனுப்புகிறார்கள்.

நாடோடிகள் - ஒவ்வொரு நண்பனும் பார்க்கவேண்டிய திரைக்காவியம் - சமுத்திரக்கனிக்கும் அவர் குழுவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,நன்றிகளும்.

Tuesday, July 14, 2009

சாத்தான் குழந்தையின் ஊமைக்குரல்



என் நோக்கி எப்போதும் நீண்டிருக்கிறது
குற்றங்களை சுமத்தும்
உன் விரல்.
நீயோ
தியாகம் செய்ய மட்டுமே
பிறப்பெடுத்த ஜீவன்.
நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.
பகிரத்தெரியாத அன்பை
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.
சாத்தானின் கூடாரத்தில்
கடவுளை தேடி நுழைந்த
தேவதை நீ.
கடவுளின் கூடாரத்தில்
சாத்தானின் மடியில்
துயிலும் உன்னை
வலி மிகுந்த புன்னகையுடன்
கடந்து செல்கிறேன்
நானல்லாத நான்.

Sunday, July 12, 2009

ஆந்தைகள் அலறும் யாமம்




வரைந்து முடித்த ஓவியத்தின்
உள்ளிருந்து சிறகுகள் படபடக்க
வெளியேறியது முதல் ஆந்தை.

உலகின் மிகச்சிறந்த கவிதையின்
கடைசி வரிக்குள்ளிருந்து வினோத
ஒலியெழுப்பியது இரண்டாவது

பதின்ம வயது சிறுவனின்
கனவுக்குள் உக்கிர
தாண்டவமாடிக்கொண்டிருந்தது
மூன்றாவது.

நான்காவது,ஐந்தாவது
ஆறாவது
ஆந்....
என் அலறலில் விழித்துக்கொண்டது
இரவு.

-நிலாரசிகன்.

Saturday, July 11, 2009

7 ½



புல்லாங்குழலுடன் வந்தவனை
புரிந்துகொள்ள இயலவில்லை
உன்னால்.
கர்வத்தின் வெளியில்
புன்னகை தொலைத்து
பறந்துகொண்டிருக்கிறாய்.
மயிலிறகு வாங்க
உன்னிடம் வந்தேன்
நீயோ
என்னை எரிக்க விறகுகள்
விற்றுத் திரிகிறாய்.
யாருமற்ற வனத்தில்
வெகு இயல்பாய் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
நாம் வளர்த்த
விருட்சத்தின் இலைகள்.
அரவமற்ற இரவில்
இயல்பு தொலைந்து கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.

Thursday, July 09, 2009

எனக்கான தீர்ப்புகள்



நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

Friday, July 03, 2009

பிரஞ்சுக்காரி,ஓரினச்சேர்க்கை,கடிதங்கள் மற்றும் விகடன்




வாரம் ஒருநாள் கிரிக்கெட் விளையாட இரண்டு மைல் தொலைவில் இருக்கும் மைதானத்திற்கு செல்வது வழக்கம்.அமெரிக்கர்கள் விளையாடும்
பேஸ்பால் மைதானம் அது. இந்திய,பாகிஸ்தானிய நண்பர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சில அமெரிக்கர்கள் ஆர்வமுடன் வந்து என்ன விளையாட்டு
இது என்று விசாரிப்பதுண்டு. சிலர் தெரிந்துகொண்டவுடன் எங்களுடன் சேர்ந்து விளையாடவும் செய்வர்.(ஆனால் பவுலிங் மட்டும் பேஸ்பால் பந்தை எறிவதை போல்
எறிவார்வார்கள்)

கடந்த வாரம் விளையாட சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.விளையாட வரும் நண்பர்களில் ஒருவர் அவரது அலுவலகத் தோழியையும் அழைத்து வந்திருந்தார். ஆர்வமுடன் அவரும் கிரிக்கெட் விளையாடினார்.காட்ச் பிடிக்க அவர் ஓடும்போது 7ஜி ரெயின்போ காலனியில் சோனியா அகர்வால் ஓடுவது போலிருந்தது.
ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை காண கல்லூரி மாணவிகள் வருவார்கள். அவர்கள் முன் ஹீரோவாக ஆசைப்பட்டு ஒவ்வொருவரும் தன்னை டெண்டுல்கராக நினைத்து வீரமுடனும் வெறியுடனும் விளையாடுவோம். அம்புரோஸ் மாதிரி வேகமாக பவுலிங் போடும் ஆர்வத்தில் கீழே விழுந்து அசடு வழிந்தவர்கள் பலர். ஆனால் ஒருபோதும் பெண்களும் ஆண்களும் கலந்து கிரிக்கெட் விளையாடியதை
பார்த்ததேயில்லை.

விளையாட்டு முடியும் தருணத்தில் " Iam thirsty I need a beer" என்றாள். சிரித்துக்கொண்டோம். விளையாடி முடிந்தபின் புல்வெளியில் ஓய்வாக அமர்ந்து சிறிதுநேரம்
அரட்டை அடிப்பது வழக்கம். அன்றும் அப்படி அமர்ந்தபோது அவளை பற்றி கேட்டோம். தன் பெற்றோர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்தவர்களென்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் சொன்னாள். அதன் பிறகு ஒவ்வொருவரிடமும் நீங்கள் திருமணமானவரா என்று கேட்டாள். எல்லோரும் பதிலிட்டபின் நீ திருமணமானவளா என்று அவளிடம் கேட்டோம். "No,But I committed with a woman" என்றாள். இது நடந்தது/நடப்பது இருநூறு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு கலாச்சாரம்,பண்பாடு என்று எந்தவொரு கட்டுப்பாடும்,ஒழுங்கான வாழ்க்கைமுறையும் இல்லாத அமெரிக்காவில்.

2000 வருட கலாச்சாரமும்,பண்பாடும் நிறைந்த இந்தியாவில்....தில்லி உயர்நீதி மன்றம் வாழ்க.

******************************************************************




மனதை உலுக்கிய கடிதம் பதிவில் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு சொந்தமான சகோதரியின் நன்றிக் கடிதம் இது.

//நன்றிகள்
கோடி நிலா..
என்
வாழ்க்கை நன்றாக அமைய என்னை வாழ்த்திய, எனக்காய் பிராத்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. அவர்களுடன் சேர்ந்து நேற்றுவானமும் என்னை வாழ்த்தியது -தன் பூந்தூரல்களால்.
இருபத்திரண்டு
வருடங்களாக என்னுள்ளே மருங்கிக்கொண்டிருந்த சுமையை முதன்முறையாய் உங்களிடம் இறக்கி வைத்தேன். உங்களுக்கு எழுதியகடிதத்தை நான் தாளில் எழுதி இருந்தால் அது சத்தியமாய் அழிந்துபோயிருக்கும் - என் கண்ணீராலே. அடிக்கடி அதை நினைத்துஅழுதிருந்தாலும் அன்று என் இருபத்திரண்டு வருட சோகத்திர்க்கும் சேர்த்து ஒரே நாளில் அழுது தீர்த்தேன். ஆனாலும் என் மனதில் உள்ளவடு மறையாது.
சிறுவயதில்
நான் யாரிடமும் அதிகம் பேசாததால் எனக்குள்ளே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். நான் தனிமையில் இருக்கும்போது எனக்கு துனையாய்இருக்க, நான் சிரித்தால் என்னுடன் சிரிக்க, நான் அழுதால் என்னுடன் அழுக எனக்கென்று நானாகக் கண்ட துனை. அவனை/அவளை என்நண்பன், என் காதலன், என் தெய்வம் எப்படியும் சொல்லலாம். அவன் எனக்குள்ளே இருக்கும் என்னவன். என்னைப்பற்றி முழுதாய்அரிந்தவன் அவன் மட்டுமே. (நான் என்னவன் என்று உங்களிடம் சொன்னது இவனைத்தான்). ஏனோ எனக்கு இதுவரை எவரிடமும்சொல்லத் தோன்றவில்லை. அனைவரும் என்னுடன் சிறுபிராயத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களிடம் சொல்ல எனது மனதுஒப்பவில்லை. என் பாரம் உங்களால்தான் தீரவேண்டும் என்று விதித்திருந்தது போல. என்னை பகிர்ந்துக்கொள்ள செய்ததற்கே உங்களுக்குஎத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.
நெஞ்சார்ந்த
நன்றிகளுடன்,//

*******************************************************************************************

இதே பதிவை படித்துவிட்டு மற்றொரு பெண் எழுதி இருக்கும் கடிதம் இது:


//Hi ,

I read the latest post "Manathai Ulukkiya Kaditham"...It was so good..It doesn't happen only to her...It happens to most of the girls..I am one among them.May b atleast she had this torture only with 1 person..but in my life it was 3...that too when i was 5 or 6 years old..i still can't come out it..Even now am not ready for any sort of relationship..alteast she was able to say some1 and get her pblm resolved..but am not lucky enuf to tell my problems to any1....I thought am the only person..but there are many girls affected this way...This is the first time even am sharing it with u....

I feel so bad that y all guys are behaving like this...I hate all guys..very slowly am trying to come out of it...Hope i'l succeed one day..they say time heals everything its almost 18-19 years that happened..still time doesn't heal my problem..i am trying to deviate my mind and concentrate on my work..

Hope everything goes fine..i need all ur prayers and ur wishes..


Regards,//

********************************************************************************************


இதுபோன்ற அப்பாவி குழந்தைகளை பாழ்செய்யும் ஆண்களின் குறிகளை வெட்டி எறியும் சட்டம் ஏனில்லை நம் நாட்டில்? மேலை நாடுகளில் குழந்தைகள் மீதான
பாலியல் குற்றம் பற்றி பள்ளியிலேயே பாடங்கள் உண்டு. ஒரு ஆண்/பெண் எந்த நோக்கத்தில் குழந்தையை அணுகுகிறான்/ள் என்று சிறுகுழந்தைகளுக்கு புரியும் வகையில்
பாடங்கள் நடத்தப்படுகின்றன. நம்நாட்டில் இது எப்போது நடைமுறைக்கு வரும்?



[மனதை உலுக்கிய கடிதம் பதிவை இளமை விகடன் 'குட் பிளாக்'ல் வெளியிட்டிருக்கிறார்கள். விகடனுக்கு நன்றிகள்]

மழை வளர்த்தல்



கடுங்கோடையில் நானொரு
மழை வளர்த்தேன்.
கனவுகள் பிசைந்தூட்டி
பொம்மைகள்
பல வாங்கி குழந்தையென
வளர்த்து வந்தேன்.
கருமை சூழ்ந்த
ஓர் ஊமைப்பொழுதில்
என்னிலிருந்து நீங்கியது
பிள்ளைமழை.
அறையெங்கும் நிரம்பி
வழிந்தது
அனல்மணம்.

Thursday, July 02, 2009

மனதை உலுக்கிய கடிதம்..





என்னுடைய உறுபசி கதை வலைப்பூவில் வெளியிட்ட பின்னர் ஒரு பெண்ணிடமிருந்து கடிதமொன்று வந்தது. அந்த கடிதத்தை அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே இங்கே வெளியிடுகிறேன்.மனித இனத்தில் பிறந்தாலும் மிருகமாகவே வலம் வரும் சில "ஜந்து"க்களுக்கு இந்தக் கடிதம் சமர்ப்பணம். அந்த முகம்தெரியாத சகோதரி தற்சமயம் நலமாக வாழ்கிறார் என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

*********************************************

Hi..
I don mind sayin u my story as i hope it may help some gal somewhere.
இந்த அழகான பூமிக்கு நான் வந்த நாள் October 20,1986. அம்மாக்கும் அவ்வாக்கும்( பாட்டி) இருந்த ஏதோ ப்ரச்சனைல என்ன 'வா' ன்னுகூப்பிடகூட யாரும் இல்லாம வீட்டுக்கு வந்தேன். 3 yrs வரைக்கும் என் Life எப்படி போச்சுனு தெரியாது. எங்க ஊர்ல நல்ல Schoolஇல்லன்னு என்ன அவ்வா வீட்லயே அண்ணன்கூட படிக்கட்டும்னு(He was studying 5th) அங்க கொண்டு போய் விட்டாங்க.அண்ணன்கூட இருந்த அந்த இரண்டு வருஷமும்(L.K.G & U.K.G) வாழ்க்கை அவ்வளவு அழகா இருந்துச்சி. அப்போல்லாம் எனக்கு'அம்மா' ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அம்மாகூட நான் இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ அதைவிட அதிகமாவே எங்கஅண்ணன் என்ன பார்துக்கிட்டாங்க. அண்ணன தவிர என்னுடைய குதிரைவண்டி ஓட்டுநரின் பாட்டை தவிர வேற எதுவுமே எனக்குபெருசா தெரில. அதனால நான் அதிகமா யார்கிட்டயும் பேசினதில்ல. அண்ணனுடைய school ல 6th வரைக்கும்தான் இருந்தது.அதனால அண்ணன வேற schoolக்கு மாத்தனாங்க. அண்ணன் daily busல போய்ட்டு வரனும். ஒரு வருஷம்தான் அங்க இருந்தாங்க.தினமும் அவ்ளோ தூரம் போக கஷ்டமா இருக்கும்னு வேற ஊர்ல hostelல சேர்த்துட்டாங்க. அப்புறம் நான் மட்டும் எதுக்கு அங்கஇருக்கனும்னு என்னையும் ஏதோ தூரத்து சொந்தமான ஒரு அக்கா வீட்டுக்கு போய் அவங்க பையன்கூட(என்னைவிட ஒரு வயதுஇளையவன்) படிக்கட்டும்னு அனுப்பிட்டாங்க.
அம்மாகூட நான் இல்லாததால அம்மாவ விட்டுட்டு போற வலி தெரியல. ஆனா அண்ணன இதுக்கு அப்புறம் எப்போ பார்ப்போம்னுநினைச்சிகிட்டு அழுதுடே போனன். அந்த அக்காவும் அண்ணன மாதிரியே என்ன நல்லா பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கையா இருந்தன். ஆனாஅங்க எல்லாமே தலகீழா நடந்துச்சி. ஏதோ நான் சம்பளம் இல்லாத வேளைக்காரி மாதிரி இருந்தன். அக்கா சொல்ற எல்லா வேளையும்செய்யனும். ஏதாவது தப்பா செஞ்சா அடி பயங்கரமா விழும். அவங்க எல்லாரும்(அக்கா, மாமா, அவங்க பையன்) ஒன்னா இருப்பாங்க.அவங்க சாப்பிட்டு முடிச்ச அப்புறம்தான் நான் சாப்பிடனும். அவங்க இருக்கற இடத்துக்கு நான் போனா எதாவது வேளை குடுத்து என்னவெளிய அனுப்பிடுவாங்க. அதனாலயே நான் தோட்டத்துலயோ இல்ல வராண்டாலயோ தான் இருப்பன். மதியம் lunchகு வீட்டுக்குவரும்போது என் friends கொஞ்சம் பேரு அவங்க அம்மாகூட அக்கா வீட்டுக்கு தான் சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. (As it s near to school).எல்லாரும் ஒன்னா hallல சாபிடுவாங்க. நான் மட்டும் தனியா kitchenல சாபிடுவன். எல்லார்கிட்டயும் நான் அவங்களோட சாபிட்டா lateஆசாப்பிடுவன்னு சொல்லுவாங்க. அதனாலயே எனக்கு அங்க யாரையும் பிடிக்காம போய்டுச்சி. நான் leaveக்கு ஊருக்கு வரும்போதும்யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டன். (though i had a dozen of friends thr) யார பார்த்தாலும் பயப்படுவன். அம்மாவும் அக்காமாதிரிதான் இருப்பாங்கன்னு அம்மாகிட்டகூட போகமாட்டன்.
1st std leave முடிஞ்சு மறுப்படியும் அங்க போனன். Then it was even worse than my 1st std. நான் ஏன் இலைச்சுட்டன்னு அம்மாஅக்காகிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு எனக்குதான் அடி விழுந்துது. நீ அம்மாக்கிட்ட என்ன சொன்ன. அதனாலதான் அவங்க அப்படிகேட்டாங்கன்னு என் உசுர வாங்கிட்டாங்க. மணல வச்சு தொடைல கில்லுறதுல இருந்து dress இல்லாம வெளியில (அதுவும் school busபோகற நேரத்துல) நிக்கவைக்கற வரைக்கும் எவ்வளவோ கொடுமை.
இப்படியே போய்ட்டு இருந்த lifeல நான் எதிர்பார்க்காத அந்த நாள் வந்துச்சி. எப்பவும் நான் தனியாதான் தூங்குவேன். Sofa காலடி தான்என்னுடைய துணை. Night தூங்கினா அதோட காலைல மாமா கதவு திறக்கற சத்தம் கேட்டுதான் எந்திரிப்பன். அப்படிதூங்கும்போதுதான் ஒரு நாள் என் மேல ஏதோ ஊர்ர மாதிரி இருந்துது. கருப்பாம்பூச்சின்னு நினைச்சு ரொம்ப பயந்தன். கண்ண இருக்கமாமூடிக்கிட்டு பயந்துகிட்டே படுத்துட்டிருந்தன். அது கைவிரல் மாதிரி இருந்துச்சி. அப்புரம் பேயோன்னு நினைச்சன். கண்ண திறக்கவும் பயம்.அக்காவ கூப்பிட அதுக்குமேல பயம். எனக்கு இருந்த தூக்கத்துல ஒன்னும் பன்னாம அப்படியே தூங்கிடலாம்னு கூட நினைச்சன். கொஞ்சநேரத்துல அது பேய் இல்லன்னு confirm பன்னிகிட்டன். ஒரு கட்டத்துல என்னால வலி தாங்கமுடியாம லேசா கண்ண திரந்து பார்த்தன்.இருட்டுல ஒரு ஒருவம்தான் தெரிஞ்சுது. ஆனா யாருன்னு தெரியல. நான் பயத்துல அழுவ ஆரம்பிச்சுட்டன். என் அழுக சத்தம் கேட்டு"ஒன்னும் இல்ல அழுவாத. நான் தான்" னு சொல்லிட்டு போய்ட்டான். என்ன நடந்ததுன்னும் தெரியாம யார் அதுன்னும் தெரியாம nightஎல்லாம் அழுதுகிட்டே இருந்தன். அடுத்த நாள் காலைல யாரோ புதுசா ஒருத்தர் இருந்தார். அக்காதான் அது அவங்களோட தம்பினுசொன்னங்க. அப்போ இந்த கழுதைக்கு(அங்க என்ன அப்படிதான் கூப்பிடுவாங்க) முறை எல்லாம் தெரியாது. Night நான் பார்த்தது இவங்களதானா இல்ல வேற யாராவதான்னு ஆயிரம் குழப்பம். அழுது அழுது யோசிச்சி யோசிச்சி எனக்கு காய்ச்சல் வந்ததுதான் மிச்சம். அதுவே இரண்டுநாள்ல மஞ்சள் காமாலைன்னு தெரிஞ்சுது.
அப்போ
அவன் மறுபடியும் வந்து அன்னைக்கு night நடந்தது எதையும் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு மிரட்டிடு போய்ட்டான். அதையெல்லாம்சொன்னா அக்கா அடிப்பாங்களோன்னு நானும் சொல்லல. Jaundice வந்ததால என்ன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. கொஞ்ச நாள்லQuarterly leave வந்துச்சி. அப்போ எங்க தெருவுல எல்லா பிரண்ட்ஸ்ம் ஒன்னா விளையாடுவோம்(விளையாடுவாங்க). அப்போ அங்க என்பக்கத்து வீட்டு அண்ணன் என்மேல ரொம்ப பாசமா இருந்தாங்க. I really got terrified on every guys i see. Little by little he made me understand his affection. I felt as my brother is back. நாங்க எல்லாரும் ஒன்னா இருக்கும் போது எல்லாம் அவங்க எங்கூட தான் இருப்பாங்க. அவங்களுக்கு என்மனசுல ஏதோ பிரச்ச்னை இருக்குன்னு தெரிஞ்சி எஙகிட்ட நோண்டி நோண்டி கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அக்காரொம்ப அடிக்கராங்க, எனக்கு அம்மாக்கிட்ட சொல்லவும் பயமா இருக்குன்னு சொன்னன். நான் அம்மாக்கிட்ட சொல்லிக்கறன். நீ பயப்படாமஇருன்னு சொன்னாங்க.
அப்புறம் மறுபடியும் அந்த நரகத்துக்கு வந்தன். அப்படியே போய்ட்டு இருந்துச்சி. திக்கு தெரியாத நேரத்துல எப்பவாச்சும் சனி ஞாயிறு (He was a engg student then) அவன் வந்து என்ன கசக்கி பிழிஞ்சுசுட்டு போவான். எங்க ஊர்ல அந்த அண்ணன் தாத்தாகிட்ட (அவங்களும்தாத்தாவும் நல்ல நண்பர்கள்) ஏதேதோ சொல்லி தாத்தா அம்மாக்கிட்ட சொல்லி அம்மா அப்பாக்கிட்ட சொல்லி ஒருவழியா அடுத்த வருஷம்விழுப்புரத்துல(My native s near Villupuram) சேர்த்துக்கலாம்னு சொன்னாங்க.
Then life was good thr from my 3rd std. It was the first time that am staying with my parents & my sweet brother. Bt still i couldn't find comfortable with them. Thr was something within my heart that was a barrier between us. It took almost 2 or 3 yrs to get back my life.
Long after when i came to know from my friends abt the relationship b/w a men n women i was terribly shocked knowing wat was happened to me. I became like a mad. I started hating every men i look. Even my brother & father. Life was very worse. I won't talk wit any1. I dono the way to show my anger. Then it turned towards sports. I started participating in every event as i've to win everything. As i hated humans i started loving games since i'll be fighting with humans.
Soon after i became a football player representing my school team. It was my football coach(Although he's a men) who changed my thought and every wrong thinkings i had. Also two of my friends Sahul & Karunagaran changed me a lot and made me to concentrate in my studies. Karunagaran was the first guy i was talkin in school. Only b'cos of him i changed my thought of guys. Now my life s jus the reverse. Living happily with my family & friends(Also ur poems). Jus NJoying every minute.

Regards,
XXXXX

P.S: நண்பர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, July 01, 2009

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்




தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

-மகாகவிஞன்.

Monday, June 29, 2009

உறுபசி - [உயிரோடை போட்டிச்சிறுகதை]




1.

அப்பாவுக்கு வலிக்கும். ரொம்பவே வலிக்கும். ஆனாலும் வேறு வழி இல்லை. சேலம் நோக்கி விரைந்துகொண்டிருந்த ரயில் ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தாள் நந்தினி.கண்களோரம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது கண்ணீர்.
வீட்டில் மூத்தபிள்ளை என்பதால் அப்பாவுக்கு நந்தினி மேல் உயிர். அவள் கேட்டு எதையும் மறுத்ததில்லை - கண்ணன் உட்பட.
படிப்பைத்தவிர எதிலும் கவனம் செலுத்தாதவள் கண்ணனிடம் வீழ்ந்ததே ஒரு அழகான ஹைக்கூ கவிதை. நந்தினியின் முகத்தை பென்சிலால் அழகாக வரைந்து அந்த படத்தின் கீழ் புல்லாங்குழலொன்றையும் வரைந்து அவளது இடத்தில் வைத்திருந்தான். அந்த ஓவியத்தின் நேர்த்தியில் லயித்தவள் மெல்ல மெல்ல அவனது அன்பிலும் லயிக்க ஆரம்பித்தாள். கோபாலும்,சியும்,பாக்ஸ்பரோவும் படித்து கொண்டிருந்தவளுக்கு பாப்லோ நெருதாவும்,கல்யாண்ஜியும்,மீராவும் அறிமுகப்படுத்தியது கண்ணன்தான். அவளது காதலை அப்பாவிடம் சொன்னபோது கொஞ்சமும் கோபப்படாமல் மிக நிதானமாய் அவளை தன் பக்கத்தில் அமர்த்தி கண்ணன் பற்றி விசாரித்தார். படித்துமுடித்தவுடன் கண்ணன் தன் அப்பாவின் டெக்ஸ்டைல் தொழிற்சாலையை நிர்வகிக்க போகிறான் என்பதை பற்றி அவள் சொன்னதும் "இந்த காலத்து பசங்க எப்படியும் சம்பாதிச்சுடுவாங்கம்மா..பையன் நல்லவனா இருந்தா எனக்கு முழு சம்மதம்" என்ற அப்பாவை முத்திட்டு சந்தோஷத்தில் துள்ளினாள். அதன்பிறகு படிப்பு முடிந்து இரண்டு மாதத்தில் திருமணமும் ஆகி சென்னைக்கு வந்துவிட்டாள்.

கண்ணனின் அன்பிலும்,தாம்பத்யத்திலும் திளைத்தவள் இப்படி ஒரு சூழ்நிலை வருமென்றோ தன் வாழ்க்கை சூன்யமாகிப்போகும் என்றோ கொஞ்சமும் நினைத்துப்பார்க்கவில்லை. ஜன்னல் காற்று முகத்திலடித்தபோது நினைவுக்கு வந்தவள்,மடியில் உறங்கும் கெளரியின் முடியை கோதினாள். கண்ணிலிருந்து ஒருதுளி கெளரியின் நெற்றியில் விழுந்து தெறித்தது.


2.

கெளரியை எட்டாம் வகுப்பு படிக்க சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் அப்பா. ஹாஸ்டலில் சேர்த்துவிடலாம் என்று அவர் சொன்னபோது நந்தினிதான் தன் வீட்டில் தங்கி படிக்கட்டும் என்று உறுதியாக சொன்னாள். கண்ணனும் பெருந்தன்மையாக "கெளரி எங்களுக்கு குழந்தை மாதிரி மாமா,கவல படாம எங்ககிட்ட விட்டுட்டு போங்க" என்றபோது நெகிழ்ந்துபோய்விட்டார் அப்பா.
சமைத்துக்கொண்டிருந்த நந்தினியிடம் வந்து மாப்பிள்ளை தங்கம்மா நீ ரொம்ப குடுத்துவச்சவ,நீங்க நல்லா இருக்கணும் என்று வாழ்த்திவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டார்.

கெளரிக்கும் அக்காவீடும் சென்னையின் பிரம்மாண்டங்களும் ரொம்பவும் பிடித்துப்போனது. கண்ணன் தினமும் அலுவலகம் செல்லும்போது கெளரியை பள்ளியில் விட்டுவருவதும் மாலை வீடு திரும்பும்போது அழைத்துவருவதும் பார்க்க பார்க்க கண்ணனின் மீது அன்பும் நேசமும் பெருகிக்கொண்டே இருந்தது நந்தினிக்கு. சந்தோஷங்கள் மட்டுமே இருந்தால் அது வாழ்க்கையல்ல.சோகங்களும்,அதிர்ச்சிகளும் கலந்திருப்பதே வாழ்க்கை என்பதை நந்தினி உணர்ந்து கொண்டது ஒரு பின்னிரவில்தான்.

தண்ணீர் குடிக்க எழுந்து சமையலறைக்கு சென்றவளை கெளரியின் அறைக்குள்ளிருந்து கேட்கும் விசும்பல் சப்தம் திடுக்கிட செய்தது. வேகமாக சென்று பார்த்தபோது தரையில் உட்கார்ந்து கண்ணீரில் கரைந்திருந்த கெளரி அக்காவை பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டு "ஒண்ணுமில்லக்கா நாளைக்கு பரிட்சை சரியா படிக்கல அதான்" என்றபோது உடனே நந்தினியால் நம்பிவிடமுடியவில்லை. அந்த நிமிடம் ஆறுதலாய் பேசிவிட்டு வந்து படுத்தவளுக்கு தூக்கம் அண்டவில்லை.

அதன் பிறகு இருதினங்கள் கழித்து,கெளரி காய்ச்சலில் விழுந்தபோது கண்ணன் வேலைவிஷயமாக பெங்களூர் சென்றிருந்தான்.
அதனால் கெளரியை கவனித்துக்கொண்டே அதே அறையில் உறங்கியபோது காய்ச்சலின் மிகுதியில் உளறத்துவங்கிய கெளரியின் வரிகள் நந்தினியை கொன்று போட்டன. "மாமா வேணாம் மாமா வலிக்குது மாமா பயமா இருக்கு மாமா" என்று அரற்றத்துவங்கியது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் நந்தினி. கண்ணனின் புன்சிரிப்பில் கலந்த முகம் மறைந்து குரூரமானதொரு அரக்கமுகம் அவள் முன் நிழலாடியது. அழுது துடித்து,வதங்கிய மல்லிச்சரமாய் இருநாட்களாய் உணவேதுமின்றி வீழுந்து கிடந்தாள்.

கெளரிக்கு காய்ச்சல் சரியான பின் அருகில் அழைத்து மெல்ல விசாரித்தபோதுதான் கண்ணனின் கொடூரப்பசிக்கு கெளரி பலியான விஷயம் புரிந்தது. அப்பாவுக்கு எப்படி இதைச்சொல்வது? இனி எப்படி கண்ணனுடன் வாழ்வது? கெளரிக்கு நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கவிடக்கூடாது அந்த விஷச்செடியை வேரோடு அழிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.காமவெறியுடன் திரியும் கண்ணனுக்கு தன் வாழ்க்கையை அடகு வைத்தாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து கெளரியை அழைத்துக்கொண்டு சேலம் புறப்பட்டாள்.

3.
பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியவனைக் கண்டு கேலியாய் சிரித்தது நந்தினி விட்டுச்சென்ற மடல். பிரித்துப்படித்தவன்
தன்னுடைய சுயரூபம் தெரிந்துவிட்ட கோபத்தில் நாற்காலியை தூக்கி எறிந்தான். கெளரியிடம் தவறாக நடந்துகொண்டாலும் நந்தினியை நிஜமாக காதலித்தவன்.நந்தினியை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்காதவன் தான். ஆனால் தன் பதின்ம வயதில் ஒரு மிருகத்தின் தீராக்காமத்தால் உடலும் மனமும் பாழானதால் தானும்
இப்படி ஒரு மிருகமாக மாறிவிட்டதை எண்ணி துடித்தான். ஆனாலும் கட்டுக்கடங்கா மோகம் தன்னை ஆட்கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை. இனி நந்தினி வரமாட்டாள் என்று உணர்ந்ததும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அதேசமயம் தன்னைவிட்டு போய்விட்டாளே என்பதால் கோபம் தலைக்கேறியது. உடனே செல்போனை எடுத்து பூஜாவின் எண்ணைத்தேடினான்.


இர‌ண்டாக‌ வெட்டிய‌ ஸ்ட்ராபெர்ரி ப‌ழ‌ங்க‌ள் போலிருந்த‌ன‌ பூஜாவின் சிவ‌ந்த‌ லிப்ஸ்டிக் உத‌டுக‌ள். நந்தினிக்கு தான் தரப்போகும் தண்டனை இதுதான் என்று நினைத்துக்கொண்டு பூஜாவை நெருங்கினான். ஏதோவொன்று அவனை தடுத்தது.
தேம்பி தேம்பி அழ‌ ஆர‌ம்பித்த‌வ‌னை "உன்னை மாதிரி ஆள பார்த்ததே இல்ல" சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் போனவுடன்
யாரோ காலிங்பெல்லை அழுத்துவது தெரிந்தது. பக்கத்துவீட்டு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். "பால் உங்க தோட்டத்துல விழுந்துருச்சு அண்ணா எடுத்துக்கலாமா" என்றவனை பார்த்து சிரித்தான் கண்ணன்.


4.

ரயில் சேலம் வந்துவிட்டிருந்தது. அப்பாவுக்கு கெளரியை பற்றி எதுவும் சொல்லாமல் கண்ணனுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதால் வீட்டைவிட்டு வருகிறேன் என்று மட்டும் சொல்லி இருந்தாள். ரயில் நிலையத்தில் அப்பாவை பார்த்ததும்
ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழுதாள். அப்பொழுதும் பதற்றம் அடையாமல் "விடும்மா எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்,நீ மேலபடி,லெக்சரரா ஏதாவது ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ணு,மாப்பிள்ளை திருந்திடுவாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கும்மா நாம காத்திருப்போம்" என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்."கெளரிய இனி ஹாஸ்டல்ல சேர்த்துடலாம்,என்னப்பா உனக்கு ஹாஸ்டல்ல தங்கறதுல்ல பிரச்சினை ஒண்ணும் இல்லையே" என்று கேட்கும் அப்பாவை விரக்தியுடன் பார்த்தனர் நந்தினியும் தம்பி கெளரிசங்கரும்.

[உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]


-நிலாரசிகன்.

Sunday, June 28, 2009

மங்கையர் மலரில் என் சிறுகதை













நண்பர்களே,

மங்கையர் மலரில் என் சிறுகதை "வால்பாண்டி சரித்திரம்" இம்மாத இதழில் வெளியாகி இருக்கிறது.(ஜூலை மாத கிராமிய சிறப்பிதழ் - பக்கம் 125).
என் அம்மா மங்கையர் மலர் வாங்கி இருக்கிறார்கள்.எதேட்சையாக என் கதையை அதில் கண்ட உடன் எனக்கு தொலைபேசினார்கள்.

சிறுகதை பக்கத்தை கேட்டவுடன் Scan செய்து அனுப்பிய "மழைக்காதலன்" சார்லசுக்கு என் நன்றிகள்.

சிறுகதை அனுப்ப சொன்ன எழுத்தாளர் சைலஜா அவர்களுக்கும், என் சார்பில் சிறுகதையை நகலெடுத்து தபாலில் அனுப்பிய ஒரு நல்ல உள்ளத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பெற்ற குழந்தையை பார்த்த பூரிப்பில்..
நிலாரசிகன்.

Friday, June 26, 2009

நான்கு தோழிகளின் கதை




1.

மழை ஓய்ந்த பிற்பகலில் ஏதோவொரு பூவின் வாசம் காற்றில் மிதந்து மிதந்து என்னிடம் வந்துசேர்ந்தபோது அந்த சுகந்தத்தின் முடிவில் தேவதையென என் முன்னால்
நீ தோன்றினாய் என்றுதான் எழுத நினைத்தேன். அப்படி எதுவும் நடக்கவில்லையே! முகம் முழுவதும் அப்பிய பாண்ட்ஸ் பவுடரும்,மிதமிஞ்சிய பெர்பியூம் வாசத்துடனும் எனக்கு முன் வரிசை நாற்காலியில் நீ அமர்ந்தபோது "யாருடா இது? தெருக்கூத்துல இருந்து தப்பிச்சு வந்தத்துட்டாளா? என்றுதான் என் மனம் என்னிடம் கேட்டது. முத்துக்களுக்கு பெயர்பெற்ற அந்த சிறுநகரத்தில் ஒரு கணிப்பொறி மையத்தில்தான் உலகப்புகழ் பெறாத நம் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

பெண்ணொருவள் தோழியாக மாறுவாள் என்கிற எண்ணம்கூட தோன்றாமல்,பெண்ணிடம் பேசினாலே அது காதல் எனும் முட்டாள்தனம் மட்டுமே மனதெங்கும் நிறைந்திருந்த பருவத்தில்தான் நமது இந்த சந்திப்பு நிகழ்ந்தேறியது. ஒருவருடத்தில் முடியவேண்டிய கணிப்பொறி வகுப்பு ஏதோசில காரணங்களால் தள்ளிப்போனபோது
"இன்றோடு நான் விடைபெறுகிறேன் இனி வகுப்பிற்கே வரப்போவதில்லை," என்று சொல்லிவிட்டு நான் விடைபெறும் தருணத்தில்தான் நீ என்னிடம் ஓடோடி வந்தாய்.

"இனி நீங்க வரவே மாட்டீங்களா?" ஒருவருடத்தில் அதிகபட்ச வார்த்தைகளால் நீ பேசியது அன்றுதான். ஆச்சர்யத்துடன் உன்னை திரும்பி பார்த்தேன். உதடு துடிக்க,கண்களில் இனம்புரியா தேடலும் தவிப்புமாய் கைகள் பிசைந்துகொண்டு "தூறல் நின்னு போச்சு" சுலோச்சனா மாதிரி நின்றுகொண்டிருந்தாய். அதன்பிறகுதான் என்மீதான் உன் தூய்மையான நட்பும் அன்பும் எனக்கு புரிந்தது. எனக்கே தெரியாமல் என் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து முதல்முறையாக என்வீட்டிற்கு தொலைபேசினாய். அந்த நாள் இன்றும் மறக்கமுடியாத நாளாக மாறாமல் என்னுள் அப்படியே நிலைத்திருக்கிறது. தொலைபேசியை எடுத்த என் அம்மா ஒரு பெண் எனக்கு முதன் முதலாய் தொலைபேசுவது கண்ட திகைப்பில்,என்னிடம் கொடுத்தார். தயங்கி தயங்கி உன்னிடம் பேசினேன். அதன் பிறகு உனக்காகவே கணிப்பொறி மையம் வரத்துவங்கினேன்.மழையென என்னில் விழுந்து விருட்சமான முதல்தோழியானாய்.
"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னா உன் மனைவியை என் தோழியாக்கி எப்போதும்போல் உன்னிடம் பேசுவேன். நம் நட்புக்கு பிரிவே கிடையாது" என்றெல்லாம் நீ சொன்ன வார்தைகளை இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.
பத்துவருடங்கள் ஓடிப்போய்விட்டது.சுழன்றோடும் காலநதியில் வெவ்வேறு திசைகளில் அடித்துச்செல்லப்பட்ட இருவேறு இலைகளானோம் என்று சொல்ல தோன்றுகிறது ஆனால் "எனக்கு நிச்சயம் ஆகியிருச்சு ராஜேஷ் இனிமே "ஆண்நட்பு" எல்லாம் எங்கவீட்ல திட்டுவாங்க,இனி நாம பேசவே வேண்டாம்" என்று நீ சொல்லி சென்ற நிஜத்தை மறைக்க தோன்றவில்லை. இப்போது உனக்கு இரு குழந்தைகள் உன் கணவனின் வலைப்பூவில் வாசித்தேன்.

நீ நலமா ஹர்ஷி?

2.

ஐந்து வருடத்தோழியின் பிரிவில் தவித்திருந்தபோதுதான் உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. என் நண்பனின் அத்தை மகள் என்கிற அறிமுகத்தோடு என்னிடம் நட்பை யாசித்தாய் நீ. யாரென்றே தெரியாதபோது அந்த குறுஞ்செய்திக்கு நன்றி என்று மட்டும் பதிலிட்டேன். அதன் பிறகு எட்டு மாதங்கள் அலைபேசியில் அடித்த நம் நட்பலையை இப்போது நினைக்கும்போது நீண்டதொரு மெளனத்தை மட்டுமே பதிலாக்குகிறது மனம். தேவாலயத்தில் பாடல்கள் பாடும் புனிதமானவள் நீ. பொய்யில்லா நட்புக்கு சொந்தக்காரி நீ. நம் நட்பை காதலென்று தவறாக புரிந்துகொண்டு உன்னை அடிக்க கை ஓங்கிய அப்பாவிடம்
"அவன் என் பிரண்டுப்பா...எப்படிப்பா எங்கள தப்பா நினைச்சீங்க" என்று அழுதுகொண்டே நீ உதிர்த்த வார்த்தைகள் இன்னும் அழகாக்கிக்கொண்டே இருக்கிறது உன்மீதான நட்பையும்,நட்பு மீதான உன் நம்பிக்கையையும்.

எட்டு மாதங்கள் அலைபேசியில் வாழ்ந்த நட்பை நேரில் காணப்போகும் சந்தோஷத்திலிருந்தேன் அந்த செப்டம்பர் மாத ஏழாம் தேதியில். உன் அழைப்பு வந்தது "சென்னைக்கு வந்துட்டேன் டா.. திருவான்மியூர் பரணி ஹோட்டல் பக்கத்துல இருக்கேன்..சீக்கிரமா வா". மனதெங்கும் உன் உருவத்தை வரைந்து கொண்டே விரைந்தேன். ஐந்தரை அடி உயரத்தில் சிறகில்லாமல் என் நட்புதேவதை நின்றுகொண்டிருந்ததை எழுத மொழியில் வார்த்தைகளே இல்லை பூவே. உன்னை பார்த்த சந்தோஷத்தில் நானும் என்னை சந்தித்த தித்திப்பில் நீயும் பேசமறந்து சிரித்துக்கொண்டே அழுதோமே! இப்போது நம்பிரிவெண்ணி அழுகிறது நம் நட்பு.உன் நினைவாக என்னிடம் இருப்பது நேசத்தோடு நீ எழுதிய மின்னஞ்சல்களும் அந்த முதலும் கடைசியுமான சந்திப்பில் எனக்காக விட்டுச்சென்ற ஒற்றை பார்வையும்தான்.

நீ எங்கே இருக்கிறாய் என் தாமிரபரணித்தங்கம்?


3.

தில்லிக்குளிரை ரசித்துக்கொண்டே நண்பன் ராமகிருஷ்ணனோடு நடந்துகொண்டிருந்த ஒரு அற்புத மாலையில்தான் முதன் முதலாய் என்னிடம் பேசினாய் நீ.
கவிதைகள் - மின்னஞ்சல்கள் - சண்டைகள் - சந்தோஷங்கள் - கருத்தாடல்கள் - கண்ணீர்த்துளிகள் - கோபங்கள் என நம் நட்பு நிறைந்திருந்த காலமது. சூழ்நிலைச்சகதிகளில் நான் சிக்கியிருந்த பொழுதுகளில் நீ ஒருத்தியே என்னை மீட்டுத்துக்கொடுத்தாய். என் மூன்றாவது தோழி உன் முதல்தர விமர்சனங்களுக்காகவே கவிதைகள் எழுதித்திரிந்த பசுமைக்காலங்கள் அவை.
தில்லியை விட்டு வந்த பின்னும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன உன் மடல்கள்.

எப்போதும் பெய்கின்ற மழையை விட இலைசிந்தும் ஒருதுளி நீருக்காக
நாம் காத்திருப்பதில்லையா? உன்னை என்னிலிருந்து பிரித்துப்பார்க்க முடியவில்லை.
வாழ்க்கையில் எத்தனையோ பேர் வந்து செல்கிறார்கள்,எதுவும் நிரந்தரமில்லாத இவ்வுலகில் வெகு சிலரின் அன்புக்காக மட்டுமே நாம் ஏங்குகிறோம். கிளி அமர்ந்து சென்ற கிளைபோல் ஒரு சிறு அசைவை மட்டுமே பலர் நம்மில் விட்டுச்செல்கிறார்கள். வெகு சிலரே உயிரின் வேர் வரை அன்பால் பரவி திளைக்கவைக்கிறார்கள்.
நீ அந்த வெகு சிலரில் ஒருத்தி.

4.

கவிதை உலகிற்குள் சுற்றித்திரிந்துகொண்டிருந்த என்னை சிறுகதை உலகிற்குள் விரல்பிடித்து நடத்திச்சென்றவள் நீ.
உன்னை பற்றி எழுத நினைத்தவுடன் என் அறையெங்கும் பூக்களை வீசிச்செல்கிறது இந்தக் காற்று. எவ்வளவு உன்னதமான நட்பை நீ எனக்கு பரிசளித்திருக்கிறாய்! என் கனவுகளில் மிக முக்கியமானதொரு கனவை தேர்ந்தெடுத்து நிறைவேற்றி மொழி தொலைந்து தன்நிலை மறைக்க வைத்திருக்கிறாய்! என் பிறந்த நாளன்று நீ பரிசளித்த ஆதவனின் காகித மலர்கள் புத்தகம் எப்போதும் என் படுக்கை அருகே படபடத்துக்கொண்டு உன் பெயரை சொல்லியபடி இருக்கிறது.

மின்சார ரயிலில் அருகருகே அமர்ந்துகொண்டு இலக்கியம் பேசித்திரிந்த நாட்களாகட்டும் வயதில் என்னை விட மூத்தவளாக இருந்தாலும் "என்னை டீ போட்டு கூப்பிடுடா அப்போதான் நல்லா இருக்கும்" என்பதாகட்டும், மிதமிஞ்சிய உனதன்பில் லயித்து உன்னோடு உரையாடுகையில் "செல்லம்ல ரொம்ப நேரம் பேசமுடியாதுடா,வேலை இருக்கு நாளைக்கு பேசுறேன் சரியா" என்று அமைதியாக சொல்லிவிட்டு பிரிவதாகட்டும் உன்போன்ற தோழி கிடைக்க தவங்கள் பல செய்திருக்க வேண்டும் நான்.

கடைசிவரை கைகோர்க்க முடியாத தண்டவாளம் போன்றது நம் நட்பு. எப்போதும் அருகருகே மனதால் இணைந்திருப்போம்
என்னுயிர் "பிடாரி"யே!

5.
எழுதிவிட்டு உன்னிடம் காண்பித்தேன்.

"ஏன் டா இவ்வளவு நாளா என்கிட்ட உன் தோழிகள் பத்தி சொல்லவே இல்லை?" கேட்கும்போதே அழுதுவிட்டன உன் மீன்விழிகள்.

அதனால்,
இந்தக்கதையை கிழித்து எறிந்துவிட்டு எழுத ஆரம்பித்தேன் "நான்கு தோழர்களின் கதை"...

மைக்கேல் ஜாக்ஸன் மரணம் - RIP




பாப் உலக சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

http://www.nj.com/entertainment/celebrities/index.ssf/2009/06/michael_jackson_dead_at_50_tmz.html

Update:

மைக்கேல் ஜாக்ஸன் மரணம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக FoX news தெரிவிக்கிறது.கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இசை ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற நடனப்புயல் இறைவனடி சேர்ந்தார்.

We Miss you MJ :(

அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

Wednesday, June 24, 2009

மழையில்லா முன் தினம்...




வடிகின்ற கண்ணீர்த்துளியுடன்
மரமொன்றை செதுக்கிக்கொண்டிருந்தான்
அந்த தச்சன்.
கூடை நிறைய முட்கள்
சுமந்து தள்ளாடியபடி
இருளுக்குள் மறைந்தாள்
ஒரு மூதாட்டி.
வழிந்தோடும் ரத்தத்தை
கனவுகளில் தெளித்து
உறங்கினர் குழந்தைகள்.
நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.

Sunday, June 21, 2009

உளமார்ந்த நன்றி



நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்த திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.இவ்வாரம் நிறைய எழுத எண்ணியிருந்தேன்,பணிச்சுமை அதிகமாகிப்போனதால் எழுத இயலவில்லை.ஆயினும் முடிந்த அளவு பதிவிட்டதில் மகிழ்கிறேன்.திரட்டி.காம் மேன் மேலும் வளர்ந்து தமிழ்ச்சேவை புரிந்திட என் வாழ்த்துகள்.

தமிழ்மணத்தில் பதிவை இணைக்க முடியாமல் தவித்தபோது சரியான தீர்வை அனுப்பி இணைத்திட பேருதவி செய்த திரட்டி.காம் வெங்கடேஷ் அவர்களுக்கு என் Special Thanks :)

மகிழ்வுடன்,
நிலாரசிகன்.

Saturday, June 20, 2009

செந்தழல் ரவி - விமர்சனங்கள் மற்றும் தமிழ்மணம்

உரையாடல் சமூக இலக்கிய அமைப்பு நடத்தும் வலைப்பதிர்வர்களுக்கான சிறுகதை போட்டிக்கு வந்திருக்கும் சிறுகதைகளை மிக அற்புதமாக சகபதிவர் செந்தழல் ரவி விமர்சனம் செய்திருக்கிறார்.

அனைத்து கதைகளையும் படிக்க விரும்பாத "சுறுசுறுப்பு திலகங்கள்" :)
இவரது விமர்சனத்தை படித்துவிட்டு பிடித்த கதைகளை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம்.

சுட்டி:

http://imsai.blogspot.com/2009/06/blog-post_2979.html


செந்தழலுக்கும் போட்டிச்சிறுகதையாளர்களுக்கும் என் வாழ்த்துகள்.

---------------------
தமிழ்மணத்தில் என் பதிவுகள் திரட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. விளக்கம் கேட்டு மடலிட்டிருந்தேன்.

இந்த பதில் வந்தது:

//வணக்கம்,

தமிழ்மணத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் செய்தியோடையும் தற்சமயம் உபயோகத்தில் இருக்கும் செய்தியோடையும் வெவ்வேறாக இருப்பின் இச்சிக்கல் எழும். எனவே சமீபத்தில் உங்களது செய்தியோடையை மாற்றியிருப்பின் அதனைச் சரி செய்வதின் மூலம் இதனைச் சரி செய்யலாம்.
//

செய்தியோடையை நான் மாற்றவில்லை. இந்த சிக்கலை தீர்ப்பது எப்படி? பதிவுலக பிரம்மாக்கள் தீர்த்துவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறோம்



ஒலியும் ஒளியும்
ஞாயிறு மாலை திரைப்படம்
சக்தி 90
என் இனிய இயந்திரா
ஹிமேன்
ஐ லவ் யூ ரஸ்னா
நிர்மா
சுரபி
சித்ரஹார்
கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில்
கரைந்துபோன
பவித்திர காலத்தில்
ஒரு நிமிடமேனும் மீண்டும்
வாழ்ந்திடல் வேண்டும்.

Thursday, June 18, 2009

நட்புக்காலங்கள்

Tuesday, June 16, 2009

ஷாஜகானின் உடைவாள்

1.

நானும் தவளையொன்றும்
வான் பார்த்து அமர்ந்திருந்தோம்.
கருமேகங்கள் சூழ்கையில்
மகிழ்வதும்
மேகங்கள் கலைந்து ஓடுகையில்
சோர்வடைவதுமாக
எங்களது நேரம் கடந்துகொண்டிருந்தது.
இருவருக்கும் இடையில்
கவனிப்பாரற்று
ஓடிக்கொண்டிருந்த நதியில்
விழுந்து தொலைந்தன
மழைத்துளிகள்.


2.
அந்த வனத்தின்
நிழல் பிரதேசத்தில்
எதையோ தேடிக்கொண்டிருந்தான்
அவன்.
தேடித் தேடி சலித்தவன்
தேம்பி அழ ஆரம்பித்தபோது
தோள் தொட்டு
எதைத் தேடுகிறாய் என்றேன்.
இங்கிருந்த
போதி மரத்தை காணவில்லை
என்ன செய்வேன் என்றபடி
கண்ணீர் மல்கினான்.
ஞானம் தேடிய புத்தர்கள்
மரம்தேடும்
பித்தர்களானது இப்படித்தான்.

3.
நிலவில் தவழ்வது சற்றே
கடினமாக இருக்கிறது.
நாளை
நடைபழக நட்சத்திரம்
கண்சிமிட்டியபடி காத்திருக்கிறது.

4.
உடைவாள்
கழுத்தில்
பதிய துவங்கிய கணத்தில்
நிகழ்காலம் திரும்பிவிட்டேன்.
கல்லறை
உலக அதிசயமாக
மாறிப்போனதை எப்போது
அறிவான் ஷாஜகான்?

பட்டாணி - சிறுகதை





பத்திரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் மொத்த கிராமமும் கூடியிருந்தது. அரச மரத்தில் கட்டி வைத்திருந்தார்கள் பட்டாணியை. கன்னத்துச் சதை பிய்ந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. சட்டை கிழித்து,முடி கலைந்து இடப்பக்கம் தலை தொங்கியிருக்க, வலியால் முனகிக்கொண்டிருந்தான். அந்த ஊரின் "பெரியவர்" என்று அழைக்கப்படும் கோவில் தர்மகர்த்தா பேச ஆரம்பித்தார்.



"எல்லோரும் கொஞ்சம் அமைதியா இருக்கப்பா. எதுக்காக இந்த பஞ்சாயத்த கூட்டியிருக்கோம்னா , பட்டாணி நேத்து ராத்திரி என் வீட்டுக்குள்ள புகுந்து களவாட பாத்திருக்கான். நல்லவேளையா எம் பொஞ்சாதி பாத்து சத்தம்போட்டா. அதனாலதான் அவன புடிச்சி கட்டி வெச்சிருக்கோம். ஊர் வழக்குன்னா நாந்தான் தீர்ப்பு சொல்லுவேன்,ஆனா இது என் வீட்டு வழக்கு. ஊர் மக்க நீங்க என்ன சொல்லுதியளோ அதுதான் தீர்ப்பு" சொல்லிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார் தர்மகர்த்தா. கூட்டம் சலசலக்க ஆரம்பித்தது. பின்னர் ஒரே முடிவாக பக்கத்து டவுணிலுள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு ஆள் அனுப்பி ஏட்டை வரச்செய்து பட்டாணியை ஒப்படைத்துவிட்டார்கள்.



போலீஸ் ஸ்டேசனுக்கு செல்கின்ற வழியெல்லாம் பட்டாணியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. பட்டாணியின் இயற்பெயர் முருகேசன். அப்பா அம்மா இல்லாத அனாதை. கொஞ்சம் திக்குவாய். கஷ்டப்பட்டுத்தான் பேசுவான்.ஏதாவது எடுபிடி வேலை செய்துகொண்டு ஒரு சிறுகுடிசையில் வாழ்ந்து வந்தான். ஊரில் ஏதாவது திருமணமென்றால் பந்தி வைக்க பட்டாணியைத்தான் கூப்பிடுவார்கள். பம்பரமாய் சுற்றித் திரிந்து வேலை பார்ப்பதில் இவனுக்கு நிகர் யாருமில்லை. பந்தி ஆரம்பித்தவுடன் பட்டாணிக்கூட்டு வாளியை முதல் ஆளாய் எடுப்பது இவனாகத்தானிருக்கும். அதனால் ஊர் இவனை பட்டாணி என்று கூப்பிட ஆரம்பித்தது.




பட்டாணிக்கு வயது இருபதை தாண்டியபின்னரும் சிறுவர்களுடன் விளையாடுவதே பொழுதுபோக்கு. சிறுவர்களை அழைத்துக்கொண்டு உடைமரங்களில் தட்டான் பூச்சிகளை பிடிப்பதும், கோலிக்காய் விளையாடுவதுமாய் திரிவான். தன்னைவிட வயதில் சிறுவர்கள் "பட்டாணி" என்று அழைத்துவிட்டால் "முருகேசுன்னு கூப்பிடுல,இல்ல மண்டைய பொ பொ பொளந்துருவேன்" கடும்கோபம் வந்து அடிக்க வருவான்.



வெள்ளந்தியாக சுற்றிக்கொண்டிருந்தவனை "களவாணி" ஆக்கியது நேற்று இரவுதான். நண்பர்களுடன் "எறி பந்து" விளையாடிக்கொண்டிருந்தான் பட்டாணி. அப்போது இவன் எறிந்த பந்து கோவில் தர்மகர்த்தா வீட்டிற்குள் சென்று விழுந்துவிட்டது. ஓடிச் சென்று எடுத்துவிட்டு திரும்பும்போது மாட்டுக்காடியில் குவித்து வைத்திருக்கும் வைக்கோல் போரில் ஏதோ சத்தம்கேட்டது. மெதுவாக சென்று பார்த்தவன் அதிர்ந்து நின்றுவிட்டான். தர்மகர்த்தாவின் மனைவி முத்துலெட்சுமி மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசெல்லும் கருப்பனுடன் நெருக்கமாக இருந்தாள். இவனைக்கண்டதும் பதறி எழுந்து ஓடிவிட்டான் கருப்பன். செய்வதறியாது நின்ற பட்டாணியை ஓங்கி அறைந்துவிட்டு "திருடன் திருடன்" என்று கத்த ஆரம்பித்தாள் முத்துலெட்சுமி.



தர்மகர்த்தாவின் முதல் மனைவி இறந்தபின்னர் தன்னைவிட இருபது வய்து குறைந்த முத்துலெட்சுமியை இரண்டாம் தாரமாக கட்டிக்கொண்டார். முத்துலெட்சுமிக்கு முன்பு அதிர்ந்துகூட பேசுவதில்லை காரணம், அவள் கோபக்காரி. முத்துலெட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவந்து பட்டாணியை நையப்புடைத்தார்கள். "நான் தி தி திருடல" என்று பட்டாணி கதறிக்கொண்டே இருந்தான்.



மூன்று மாதம் கழித்து போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஊர் திரும்பினான் பட்டாணி. "வர்றான் பாரு களவாணிப்பய மூஞ்சும் மொகரையும், இவன்கூட சேர்ந்தே கையக்கால ஒடச்சி அடுப்புல வெச்சிருவேன்" பட்டாணியுடன் சேரக்கூடாது என்று எழுதப்படாத தீர்மானம் நிறைவேறியது நண்பர்கள் வீட்டில்.



பட்டாணி என்கிற பெயர் மெல்ல மறைந்து "களவாணி" என்றானது.

சிறுவர்கள்கூட "ஏய் களவாணி வாராம்ல" என்று ஓடிஒளிந்துகொள்ள ஆரம்பித்தனர். எந்நேரமும் குடிசையிலேயே கிடையாய் கிடந்தான் பட்டாணி. எப்போதும் எதையோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். தனியே உட்கார்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருப்பான். அவனது உலகில் சொற்களுக்கு இடமில்லாமல் போனது.



ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பின் திடீரென்று ஒருநாள் அதிகாலை பத்திரகாளி அம்மன் கோவில் மணிச்சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. பொதுவாக ஏதேனும் விபரீதம் என்றால் இப்படி அடிப்பார்கள். சாய்வு நாற்காலியில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த தர்மகர்த்தா துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வேக வேகமாக கோவில்நோக்கி நடக்க ஆரம்பித்தார். குடிச கிடுச பத்திக்கிச்சோ? இல்ல எவனும் தூக்குல தொங்குறானா? ஒண்ணும் புரியலையே என்றவாறு வேகமாக கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.



அங்கே, கோவில் மணிக்கயிற்றை பிடித்து மூர்க்கமாக விடாமல் மணி அடித்துக்கொண்டிருந்தான் பட்டாணி. மொத்த ஊரும் கோவில் முன் திரண்டது.

கோழிகளுக்கு குருணை போட்டுக்கொண்டிருந்த முத்துலெட்சுமி அடித்துப்பிடித்து ஓடி வந்திருந்தாள். மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டுவதற்காக தர்மகர்த்தா வீட்டிற்கு வரும் வழியில் மணிச்சத்தம் கேட்டு கோவிலுக்கு கூட்டத்தோடு கூட்டமாக ஓடிவந்தான் கருப்பன்.



"ஏலே உனக்கு கிறுக்கு முத்திப்போச்சா ஏன்ல மணிய இப்படி போட்டு அடிக்கிற?" அதட்டலான குரலில் கேட்டார் தர்மகர்த்தா. மணி அடிப்பதை நிறுத்திவிட்டு விறுவிறுவென்று அவர் முன் வந்து நின்றான் பட்டாணி. அவனது கண்களில் அதுவரை கண்டிராத கோபமும் மூர்க்கமும் தெரிந்தது. சட்டென்று தர்மகர்த்தாவின் அருகில் நின்ற முத்துலெட்சுமியை பிடித்து இழுத்து இறுக கட்டிக்கொண்டு வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தான். பதறியடித்து நான்கைந்துபேர் சென்று அவனை விலக்க முயற்சித்தனர். தர்மகர்த்தா ஓங்கி ஓங்கி அவன் முதுகில் அறைந்தார். என்ன செய்தும் அவனது பிடியிலிருந்து முத்துலெட்சுமியை பிரிக்க முடியவில்லை. சற்று நேரத்தில் அவளை கீழே தள்ளிவிட்டு மொத்த ஊர் மக்களையும் பார்த்து " இப்படி செஞ்சா அது திரு த்திரு திருட்டா? இதுக்கு பே பேர்தான் களவாணித்தனமா? அன்னிக்கு கருப்பன் இப்படித்தான் செஞ்சான்,போயி சோலிய பாருங்கலே" சத்தம்போட்டு சொல்லிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பாராமல் நடையை கட்டினான் பட்டாணி. விக்கித்து நின்றார் தர்மகர்த்தா. தலைகுனிந்தபடி அழுதுகொண்டிருந்தாள் முத்துலெட்சுமி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஊருக்குள் திருட்டு நடப்பது குறைந்துபோனது.

-நிலாரசிகன்.

Monday, June 15, 2009

நட்சத்திரமான நிலா - சில பகிர்வுகள்



இந்த வார(ஜூன் 15 - 21) நட்சத்திர பதிவராக திரட்டி.காம்(http://www.thiratti.com/) என்னை தேர்வு செய்திருக்கிறார்கள். திரட்டி.காமிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த வாரம் என்ன எழுதப்போகிறேன் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. வழக்கம்போல் கவிதைகளை பதிந்துவிட்டு
நகர்ந்துவிட விரும்பவில்லை. அதனால் இந்த வாரம் சிறுகதை/கவிதை/கட்டுரை என கலந்து பதிவிட முடிவு செய்திருக்கிறேன்.

நிலா(ரசிகன்)வை நட்சத்திரம் ஆக்கியதால் இன்றைய பதிவை எனக்கு பிடித்த, என்னை கவர்ந்த சில நட்சத்திரங்களுடன் துவங்குகிறேன்.

நட்சத்திர நவீனகவிதை:


நவீன கவிதை என்றவுடன் நினைவுகளில் மலர்கின்ற கவிஞர்களில் மிக முக்கியமானவர் தேவதச்சன்.
அவரது யாருமற்ற நிழல் கவிதை தொகுப்பு தந்த அனுபவம் மறக்க முடியாதது. நவீன கவிதைகள் புரிந்துகொள்ள விரும்பும் நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு "யாருமற்ற நிழல்".

அவரது இரு கவிதைகள்:

அன்பின் சிப்பி:


என் அன்பின் சிப்பியை
யாரும் திறக்க
வரவில்லை
கடல்களுக்குக் கீழ்
அவை
அலைந்து கொண்டிருக்கின்றன
ஓட்டமும் நடையுமாய்.

பரிசு:


என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுகள்


நட்சத்திர புதுக்கவிதை:


புதுக்கவிதை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் சந்தேகமில்லாமல் மனதிற்குள் வந்து நிற்கும் பெயர்களில் ஒன்று மு.மேத்தா.
கண்ணீர் பூக்களை படிக்காதவர்களே அல்லது கடக்காதவர்களே இல்லை எனலாம்.
சொல்ல முடியாத துக்கத்தை நான்குவரியில் சொல்லிவிடும் அற்புத கவிதையொன்று:

"விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ
வெறும் ஜன்னல் கம்பிகளோடுதான்"

- மு.மேத்தா, கண்ணீர் பூக்கள் கவிதை நூல்.


நட்சத்திர சிறுகதை:


சிறுகதையாளரும்,கவிஞருமான உமா மகேஸ்வரியின் சிறுகதைகளில் ஒவ்வொரு வரியிலும் கவித்துவம் நிரம்பி வழிந்தபடியே இருப்பதை உணரலாம். "மரப்பாச்சி" சிறுகதை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளிவர இருநாட்கள் ஆனது. சமீபத்தில் வார்த்தை இதழில் அவரது "அனல் தினம்"
சிறுகதை படித்தேன்.அதிலுள்ள வரிகள் சில

"வெளியே மரங்களின் முணுமுணுப்பு கேட்டது. இலைகளின் அசைவில் ஒரு இனிய லயம்.
நாளை புலரவிருக்கும் மலர்களை நினைவால் தீண்டினாள். காற்றில் மரக்கிளைகள் அசைந்தன.
என்னதான் முயன்றாலும் இருளால் அவற்றை முழுவதுமாகக் கருமையாக்க முடியவில்லை"

இவரது சிறந்த சிறுகதை தொகுதிகளாக நான் பரிந்துரைப்பது 1.மரப்பாச்சி 2.தொலைகடல் 3.அரளிவனம்

நட்சத்திர நாவல்:


சிறுவர் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக கருதப்படும் நாவல்களில் ஒன்று கி.ராவின் "பிஞ்சுகள்". கடந்த வருடம்தான் அந்த நாவலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையிலிருந்து சேலம் செல்லும்போது பயணித்துக்கொண்டே வாசித்த அனுபவம் மறக்க இயலாதது. சிறுவர்களின் விளையாட்டை விவரிக்கும் விதமும் சிறுவனாகவே வாசகனை மாற்றிவிடும் தன்மையும்
நிறைந்த மிகச்சிறப்பான நாவல். நூற்றி சொச்ச பக்கங்களே இருப்பதால் இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்துவிடமுடியும் என்பது
மற்றுமொரு வசதி :)

நட்சத்திர சிற்றிதழ்:


இருமாத இதழாக கோவையிலிருந்து வெளிவரும் "புன்னகை". கவிதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் சிற்றிதழ்களில் மிக முக்கியமான இதழாக கருத்தப்படுவது. மேலதிக தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.

http://www.keetru.com/punnagai/index.php


நட்சத்திர இசை:


இசைக்கு ராஜன் இளையராஜாவின் எத்தனையோ பாடல்கள் மனதை அள்ளிக்கொண்டாலும் வார்த்தைகளற்ற
இந்த இசைக்குள் ஒரு மெளன பூகம்பமே ஒளிந்திருக்கிறது.

http://www.youtube.com/watch?v=qd2UJKA-iJc


நட்சத்திர ஆங்கில பாடல்:


http://www.youtube.com/watch?v=zcigPwiCgx8


தினமும் ஒருமுறையாவது நான் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. மனதை ஏதோ செய்துவிடுகிறது.


நட்சத்திர ஆவணப்படம்:


எவரஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய ஒருவரை பற்றிய ஆவணப்படம்.
மலையேற்றத்தின் கடுமையான பக்கங்களை விளக்கிச்சொல்கிறது.

http://www.youtube.com/watch?v=anBHeyLDD4A



*****************************************************

நட்சத்திரங்கள் பற்றி சொல்லியாகிவிட்டது. இப்பதிவின் இறுதியாக என்னுடைய கவிதையொன்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.


ஏதேன் தோட்டம்
வரைந்திருக்கிறேன் என்றது
குழந்தை.
ஆதாமும் ஏவாளும் எங்கே
என்றேன்.
அந்த ஆப்பிள் மரத்திற்கு
பின்னால் நிற்கிறார்கள்
இதுகூட தெரியாதா உனக்கு
என்றபடி சிரித்தது.
மரத்திற்கு பின்னாலிருந்தும்
கேட்டுக்கொண்டே இருந்தது
சிரிப்புச்சத்தம்.

-நிலாரசிகன்.

Friday, June 12, 2009

கடைசியாய் ஒரு கேள்வி



"கவிதை எழுதும் நீங்கள் அசைவம் சாப்பிடலாமா?"
"குட்டிக்கதை மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன?"
"கவிதையில் மென்மையாக எழுதும் நீங்கள் கோபபடலாமா?"
"மொழிகளை துறந்து மெளனி என்றால் ஊமை என்று அர்த்தமா?"
"உன் கிளையில் பழம் தின்ன வந்த கிளி என்று என்னைத்தானே சொன்னாய்?"
"Motivational பாடல்கள்தான் பிடிக்குமா?"


32 கேள்விகளுக்கு பதில் எழுதிய பதிவினால் இதுபோன்ற அதிமேதாவித்தனமான/புத்திசாலித்தனமான(!!) கேள்விகளை மடலில் பெற்றேன்.

வைரமுத்துவின் "இதனால் சகலமானவர்களுக்கும்" புத்தகத்திலிருந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன "கவிஞன் தாய்ப்பாலை பற்றி எழுதினால்,வாசகன் அதன் அங்கம் பற்றியே நினைத்துக்கிடக்கிறான்".

நதிபோலே ஓடிக்கொண்டே இருத்தலை விரும்பும் மனதிற்கு இதுபோன்ற தேவையற்ற கேள்விகளை எதிர்கொள்வது எப்படி என்று புரியவில்லை.

எழுதுகின்ற எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்கும் அபாயசூழல் எப்போது விலகும்
என்கிற கேள்வியுடன் இப்போது நான்.

Thursday, June 11, 2009

வாழ்க்கை!




கருப்பு
வெள்ளை
பச்சை
காவி
சாம்பல்.

Tuesday, June 09, 2009

கேளுங்கள் தரப்படும் - 32 கேள்விகள் தொடர் பதிவு




என்னை தொடர் பதிவிற்கு அழைத்த சகபதிவர்,தோழி 'உயிரோடை' லாவண்யாவிற்கு நன்றி.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இது எனக்கு நானே சூடிக்கொண்ட பெயர். இயற்பெயரை போலவே புனைப்பெயரும் பிடிக்கும்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
நவம்பர் 2008

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்காது. எவ்வளவு முயன்றாலும் கோழி கிண்டுவது போலிருப்பதால்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

சிக்கன்/மீன் குழம்பு.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஒரு குட்டிக்கதை சொல்லவா?
ஆலமரமொன்றை தேடி ஓராயிரம் கிளிகள் வந்தபோது அந்த ஆலமரம் நினைத்ததாம் எல்லோரும் என்னுடனே தங்கிவிடும் என் நண்பர்களென்று. வந்த கிளிகளில் சில பழம்தின்றபின் பறந்தோடின. சில ஆலத்தில் எச்சமிட்டு பறந்தன.சில ஆலத்தில் துளையிட்டு சிறிதுகாலம் தங்கிவிட்டு பின் ஒன்றுமே நடவாத முகபாவனையில் விட்டுச்சென்றன. பல காலம் கழித்தே ஞானம் பெற்றது ஆலம். தன்னைத் தேடி வருகின்ற கிளிகள் தனித்து நிற்கும் தனக்காக வரவில்லை தன் பழத்திற்காக மட்டுமே வந்தன என்று புரிந்துகொண்டது ஆலமரம்.


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில். சிறிய வயதில் அடிக்கடி பயணிப்பது குற்றாலமும்,அகத்தியர் அருவியும். குளிக்க நினைத்து முடியாமல்
சாரலில் நனைந்து சிலிர்த்தது நயாகராவில்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

ஆணாக இருந்தால் கண்கள். பெண்ணாக இருந்தால் கண்களும் , கைவிரல்களும்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது : எல்லோரிடமும் எளிதில் பழகுவது
பிடிக்காதது: பழகும் எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவது.


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

என் சரிபாதி என் கவிதைகள். கவிதையிடம் பிடிக்காத விஷயமே இல்லை :)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அம்மா.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

நீலம்.


12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

"கடவுள் தந்த அழகிய வாழ்வு"

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

முட்டாள்த்தனமான கேள்வியாக படுவதால் இதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.(கேள்வியில் பிழையும் இருப்பதால்...அதென்ன "பேனாக்களாக"!!!)

14.பிடித்த மணம்?

புதியதாய் வாங்கிய புத்தகத்தின் மணமும்,மண்வாசமும்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

விழியன் ‍- இணையத்தில் அறிமுகமாகி இதயத்தில் இணைந்தவன்.சிறந்த கவிஞன்/புகைப்படக்கலைஞன்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

லாவண்யாவின் அனைத்து கட்டுரைகளும் யோசிக்க தூண்டும் விதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்தது ஊர்மிளை பற்றிய கட்டுரை.

17. பிடித்த விளையாட்டு?

கிரிக்கெட்(கேள்வியை உயிரில் கலந்த விளையாட்டு என்று மாற்றியிருந்தால் இந்த பதில் இன்னும் அதிகமாக பொருந்தி இருக்கும்.)

18.கண்ணாடி அணிபவரா?

வாட்ச்,மோதிரம்,கண்ணாடி,செருப்பு எல்லாம் அணிபவன்..அடபோங்கப்பா நல்ல கேள்விக்கு நடுவுல இதுமாதிரி சொதப்பல் கேள்வி உயிரை எடுக்குது.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

மனதை தொடுகின்ற அனைத்து திரைப்படங்களும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

A walk to remember

21.பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்.


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

The book of Tells - by Peter Collet

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாதம் இருமுறை.

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: கடந்து செல்லும் ரயிலின் சத்தம்
பிடிக்காதது: காதோரம் சத்தம்போட்டு யாராவது பேசினால்/கத்தினால்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

சியாட்டல்,அமெரிக்கா.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

முப்பது குரலில் பேச முடியும்.கல்லூரி நாட்களில் மிமிக்ரியில் பல பரிசுகள் வாங்கியிருக்கிறேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்.நட்பில் பொய்கள்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

தாஜ்மஹால்,ஊட்டி.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மொழிகளை துறந்து மெளனியாக.

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

கேள்வி எண். 9க்கு செல்லவும். கவிதையின்றி செய்ய விரும்பும் காரியம் கடற்கரையில் நடப்பது.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

இதுவும் கடந்துபோகும்.

Sunday, June 07, 2009

கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - போட்டிச் சிறுக‌தை

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html

Friday, June 05, 2009

எழுத்தில்லா இசை + சிதறல்கள்




மனதெங்கும் வியாபித்திருக்கிறது இனம்புரியாத ஓர் உணர்வு. அடர்குளிரில் போர்வைக்குள்ளிருந்தபடியே மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கனத்த மெளனங்களில் உறைந்துவிடும்போதெல்லாம் இசைதான் என்னை மீட்டெடுக்கிறது.பாடல்களைவிட புல்லாங்குழலின் இசையை அதிகம் விரும்புகிறது மனசு.
எழுத்தில்லா இசை என்னவோ செய்கிறது.பின்னிரவில் யாருமற்ற தனிமையில் கசிகின்ற இசையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான்.

***********************

ஏழாவது மாடியில் இருக்கிறது என் அறை. கண்ணாடி சன்னல்கள் நிறைந்த விசாலமான அறை. சன்னல்வழியே தூரத்து வான் ரசிக்கும் தருணங்கள் அற்புதமானவை. என் அறைக்கு அருகில் உயர்ந்த விருட்சம் ஒன்று நிமிர்ந்து நிற்கிறது. அந்த மரத்தில் தினமும் ஒரு ஜோடி பெயர்தெரியா பறவைகளை காண்கிறேன். விசித்திரமானதொரு ஒலியை எழுப்பியபடி கிளைவிட்டு கிளை பறந்துகொண்டிருக்கும் அதன் சிறகில் ஒரு நாளேனும் பயணிக்க விருப்பம். நேற்று பெய்த அடைமழைக்கு பின் அந்த பறவைகளை பார்க்க முடியவில்லை. சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.

***********************
இன்று படித்ததில் பிடித்த கவிதை:

The Eagle

He clasps the crag with crooked hands;
Close to the sun in lonely lands,
Ring’d with the azure world, he stands.

The wrinkled sea beneath him crawls;
He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.

Alfred, Lord Tennyson

***********************

பல வருடங்கள் கழித்து பால்ய நண்பனொருவனை இணைய அரட்டையில் சந்தித்தேன். காலத்தின் மாற்றத்தில்
வெகுவாய் மாறியிருந்தான். நொடிக்கொரு முறை ஷிட்டும்,நான்கெழுத்து ஆங்கில "எப்" கெட்டவார்த்தையும்
சரளமாய் வந்துவிழுந்தன.சிறு வயதில் ஒழுங்காய் வரட்டி தட்ட தெரியவில்லை என்று அவன் அம்மா அடித்த அடிகளை நினைவுகூர்ந்தேன். புல்ஷிட் என்றான். மாட்டுச்சாணம் நிறைந்த பால்யத்தை மறந்துவிடாத அவன்
நல்ல மனம் கண்டு சிரித்துக்கொண்டேன்.

*************************

என் வலைப்பூவை தொடரும் மனங்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி இருக்கிறது.நூறு பேருக்கும் தனித்தனியாக பதிவிட்டு நன்றி சொல்ல விருப்பம்தான் அப்படி சொன்னால் 100 பூஜ்ஜியமாக மாறிவிடும் வாய்ப்பிருப்பதால் "அனைவருக்கும் நன்றி" என்கிற இருவார்த்தைகளோடு இந்த பதிவையும் முடித்துவிடுகிறேன்.

Wednesday, June 03, 2009

வீடு

வீட்டை சுற்றிலும் புல்வெளியும்
குரோட்டன் செடிகளும் நிறைந்திருப்பதை
சுற்றிக்காட்டி வீட்டின் பெருமையை
எடுத்துரைத்தபடி
வீட்டினுள் அழைத்து சென்றார்
தரகர்.
தேக்கு மரத்தாலான கதவுகளும்
சன்னல்களும்,
பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட‌
தரைகளும் இந்தவீட்டின்
சிறப்பு அம்சங்கள் என்றார்.
வீட்டிற்கு பின்னாலிருந்த‌
கிணற்றடியையும் வாதுமை
மரத்தையும் காணவில்லையே
என்கிற‌ ஏக்க‌த்தில்
ஒரு நிமிட‌ம் என் பால்ய‌த்திற்குள்
நுழைந்து திரும்பினேன்

Friday, May 29, 2009

உதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு

மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....

புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?

விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!

Monday, May 25, 2009

உன் மெளனங்கள்



காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூக‌லத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த‌
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன‌
என் கல்லறைக்கான
செங்கல்கள்.

Sunday, May 24, 2009

மணல் வீடு சிற்றிதழ்

சிற்றிதழ் பரப்பில் சிறந்து விளங்கும் மணல்வீடு சிற்றிதழ் இணைய உலகிலும் தடம்
பதிக்கிறது.


மு.ஹரிகிருஷ்ணனின் சொல்கதைகள் தனித்துவமானவை.குறிப்பாக அவரது மயில்ராவணன் சிறுகதை தொகுப்பு தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகச்சிறந்த படைப்புகளுடன் வலம் வரும் மணல்வீடு இலக்கிய ஆர்வலர்களின் தமிழ்ப்பசிக்கு
விருந்தாக இருக்கிறது. படித்து மகிழ இங்கே சொடுக்குங்கள்.

http://manalveedu.blogspot.com/

Thursday, May 21, 2009

ஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]



1.
வருடம்: 1929

பாரதியின் அறைக்குள் சோகம் அப்பிய முகத்துடன் நுழைந்தான் இளங்கோ.ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பாரதியை எழுப்ப மனமில்லாமல் அருகிலிருந்த நாற்காலியில் சோர்வுடன் விழுந்தான். கண்களிலிருந்து நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது கண்ணீர்.பாரதியிடம் தான் அழுகின்ற காரணத்தை சொன்னால் எப்படி தாங்குவான் என்று நினைக்க நினைக்க மெளனக்கண்ணீர் பெரும் விசும்பலாய் உருவெடுத்தது. உறக்கம் கலைந்த பாரதி தன் அறையில் அழுதுகொண்டிருக்கும் இளங்கோவை ஆச்சர்யத்துடனும் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

"இளங்கோ,என்னுயிர்த் தோழனே ஏனிந்த கண்ணீர்?"

"பாரதி,செவ்வாயில் இருந்து வந்திருக்கும் இந்த செய்தியை பார்" கையடக்க கணிப்பொறியில் சிகப்பு நிற எழுத்தில் மின்னிக்கொண்டிருந்த வரிகளை படிக்க ஆரம்பித்தான் பாரதி.

"இன்னும் எண்பது ஆண்டுகளில் எம்.ஆர்.வி எனும் படுபயங்கர கிருமியால் பூமி பேரழிவை சந்திக்கும்.முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள்"

பாரதியின் மீசை துடிதுடித்தது.கண்கள் கோபத்தில் ரத்தச்சிவப்பாக மாறியது.

"இளங்கோ,இந்தக்கிருமியை எப்படி அழிப்பது? இந்தக் கிருமியின் நதிமூலம் என்னவென்று உடனே கண்டுபிடிக்க வேண்டும்,செவ்வாய்க்கு போய் வரலாமா?"

"உன் கோவம் எனக்கு புரிகிறது பாரதி.இந்தக் கிருமியை தயாரிக்கப்போகும் நபர்களை நாம் கண்டுபிடித்துவிட்டால் முடிந்தது வேலை.செவ்வாய்க்கு போவதற்கு என் இயந்திரத்தில் எரிபொருள் இல்லை.நேற்றுதானே நாம் ஜூப்பிட்டரிலிருந்து வந்தோம்? இப்பொழுதெல்லாம் எரிபொருளின் விலையை நினைத்தாலே தலைசுற்றுகிறது. உன்னிடம் பணம் இருக்கிறதா?"

"உனக்குத்தான் என்னைப் பற்றி தெரியுமே கிடைக்கின்ற பணத்திலெல்லாம் மின்புத்தகம் வாங்கிவிடுவேன்.நேற்று இருபது புத்தக‌ங்கள் வாங்கிவிட்டேன்.பணம் ஒரு பெரியவிஷயமல்ல கடன் வாங்கியாவது எரிபொருள் வாங்கிவிட முடியும்.ஆனால் அந்தக்கிருமியை தயாரிப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது இளங்?"

"வா இணையத்தில் தேடுவோம்" இருவரும் கணிப்பொறி முன் அமர்ந்தார்கள். ச‌ற்று தூர‌த்தில் க‌ட‌ற்க‌ரையில் சிறுவ‌ர்க‌ள் கால்ப‌ந்து விளையாடிக்கொண்டிருக்கும் ச‌த்த‌ம் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே கேட்ட‌து.

2.

க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில் கால்க‌ள் புதைய‌ ந‌ட‌ப்ப‌து ச‌ம‌ராவிற்கு மிக‌வும் பிடிக்கும். அதுவும் ஆல்வினுடைய‌ தோள்க‌ளில் சாய்ந்து கொண்டே க‌ட‌ல் ர‌சிப்ப‌தில் த‌ன்னை ம‌ற‌ந்துபோவாள் ச‌ம‌ரா. விர‌ல்கோர்த்து ந‌ட‌ந்த‌ப‌டியே மெதுவாய் ச‌ம‌ராவிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்தான் ஆல்வின்.

"ச‌மரா,உன்னை போன்ற அற்புதமான‌ மனைவியும் அதோ மணலில் விளையாடும் நம்மிரு குழந்தைகளும்தான் என் உலகம்"

"இப்போது இப்ப‌டி சொல்வீர்க‌ள் வீட்டை விட்டு வெளியே போய்விட்டால் என் தேச‌ம் என் ம‌க்க‌ள் என்று பேச‌ ஆர‌ம்பித்துவிடுவீர்க‌ள்" செல்ல‌மாக‌ கோபித்தாள்.

"ச‌ரி அதைவிடு. இப்போது உன‌க்கு ஏதாவ‌து ப‌ரிச‌ளிக்க‌ விரும்புகிறேன். என்ன‌ வேண்டும் சொல் க‌ண்ம‌ணி" காத‌லுட‌ன் கேட்டான் ஆல்வின்.

"எப்போதும் என்னை காத‌லித்துக்கொண்டே இருங்க‌ள் அதுபோதும்" அலையென‌ சிரித்தாள் ச‌ம‌ரா.

"உன‌க்கு காத‌ல்ப‌ரிசை இன்றிர‌வு த‌ருகிறேன்" க‌ண்ண‌டித்தான் ஆல்வின்.வெட்க‌த்தில் சிவ‌ந்தார்க‌ள் ச‌மராவும் அந்திவான‌மும்.

3.

இர‌வு இர‌ண்டு ம‌ணிக்கு க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் கேட்ட‌து. அழைப்புமணியை அழுத்தாம‌ல் க‌த‌வை த‌ட்டினால் அது பார‌தியாக‌ ம‌ட்டும்தான் இருக்குமென்று இள‌ங்கோவிற்கு தெரியும். ஓடிச்சென்று க‌த‌வை திற‌ந்தான்.
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இடியென‌ சிரித்தான் பார‌தி. இள‌ங்கோவை இறுக‌ க‌ட்டிப்பிடித்துக்கொண்டான்.

"என்ன‌ பார‌தி இந்த‌ நேர‌த்தில்? என்ன‌ விஷ‌ய‌ம்? ஏனிந்த‌ ச‌ந்தோஷ‌ம்?"

"இள‌ங்கோ இருப‌து நாட்க‌ள் க‌டுமையாக‌ உழைத்த‌ ந‌ம‌க்கு இன்று ந‌ல்ல ப‌ல‌ன் கிடைத்திருக்கிற‌து.அந்த‌ கிருமியை உற்ப‌த்தி செய்யும் ந‌ப‌ர்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டேன்.வா உட‌னே புற‌ப்ப‌டுவோம்"

"எப்ப‌டி க‌ண்டுபிடித்தாய் பார‌தி? நேற்று இர‌வுகூட‌ ந‌ம்மால் க‌ண்டுபிடிக்க‌ இய‌ல‌வில்லையே?"

"அத‌ற்கும் ஒரு நிர‌லை ஈகிள் தேட‌லில் க‌ண்டுகொண்டேன்.அதாவ‌து பேர‌ழிவை உருவாக்கும் ச‌க்திக‌ளை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்கான‌ நிர‌ல்.எவ்வ‌ள‌வு முன்னேறி இருக்கிறோம் பார்த்தாயா இள‌ங்கோ? இந்த விஞ்ஞான‌ நூற்றாண்டில் பிற‌ந்த‌த‌ற்காக‌ பெருமை கொள் ந‌ண்பா"

"க‌ண்டிப்பாக‌ பெருமை கொள்கிறேன் பார‌தி.இந்த‌ விஞ்ஞான‌ யுக‌த்திலும் பிற‌மொழி க‌ல‌ப்பில்லாம‌ல் கற்றுத்த‌ருகின்ற‌ ந‌ம் க‌ல்விமுறையும்..இய‌ந்திர‌ ம‌னித‌ர்க‌ள் ந‌ம்மீது காண்பிக்கும் அன்பும் என்னை ஆச்ச‌ர்ய‌த்தில் ஆழ்த்துகிற‌து"

"ச‌ரி இள‌ங்கோ விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம். ந‌ம் நாட்டிற்கு தெற்கே வ‌சித்துவ‌ருகிறார்க‌ள் அந்த‌க்கிருமியை உருவாக்க‌ இருப்ப‌வ‌ர்க‌ள்.அதாவ‌து அவ‌ர்களின் மூளைக்குள் இன்னும் 16 ஆண்டு க‌ழித்துதான் அந்த‌ குரூர‌ திட்ட‌ம் உருவாகும். உன் கால‌ய‌ந்திர‌த்தை உட‌னே தயார் செய். நாம் நாளை 1945ம் ஆண்டிற்குள் நுழைய‌ப்போகிறோம்"

"அப்ப‌டியெனில் ஏன் இன்னும் எண்ப‌து ஆண்டுக‌ள் க‌ழித்து அந்த‌க்கிருமியை ப‌ர‌வ‌ விட‌வேண்டும்? என‌க்கு புரிய‌வில்லையே பார‌தி. செவ்வாயிலிருந்து வ‌ந்த‌ செய்தி80 ஆண்டுக‌ள் க‌ழித்துதானே உல‌க‌ம் பேர‌ழிவை ச‌ந்திக்க போகிற‌து என்ற‌து?" குழ‌ப்ப‌த்துட‌ன் கேட்டான் இள‌ங்கோ.

"சில‌ கிருமிக‌ள் உட‌னே ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்துவிடாது ந‌ண்பா.சில‌ கால‌ம் எடுக்கும்.கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌ர‌வி பின்ன‌ரே அத‌ன் உக்கிர‌ம் உல‌கை உலுக்கும்,நாம் முந்திக்கொள்ள‌ வேண்டும்.ம‌ற்ற‌வை நாளை பேச‌லாம்.நிம்ம‌தியாய் உற‌ங்கு" க‌ட‌க‌ட‌வென்று பேசிவிட்டு போய்விட்டான் பார‌தி. தூர‌த்தில் கூகையொன்றின் கொடூர‌ ச‌ப்த‌ம் கேட்ட‌து.

4.

அலுவ‌ல‌க‌ம் முடிந்து வீடு திரும்பிய‌ ஆல்வினை ஓடிவ‌ந்து க‌ட்டிக்கொண்டாள் ச‌ம‌ரா.

"என்ன‌ ச‌ம‌ரா என்ன‌ விஷ‌ய‌ம் ஏனிந்த‌ ஆன‌ந்த‌க்க‌ளிப்பு?" ஆர்வ‌முட‌ன் கேட்டான் ஆல்வின்.

"நீங்க‌ள் மூன்றாவது முறையாக‌ அப்பாவாக‌ போகிறீர்க‌ள்"

"க‌ண்ம‌ணி! ந‌ல்ல‌தொரு விஷ‌ய‌த்தை ப‌கிர்ந்தாய்"

இருவ‌ரும் ம‌கிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது வீட்டுக் க‌ண்ணாடி ஜ‌ன்ன‌லில் இரு க‌ண்க‌ள் அசையாம‌ல்
இவ‌ர்க‌ளையே பார்த்துக்கொண்டிருந்த‌து.

"ச‌ம‌ரா இந்த‌ ந‌ல்ல‌ செய்தியை நாம் கொண்டாட‌ வேண்டும்.பிற‌க்க‌போகும் ந‌ம்பிள்ளைக்கு என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம்"

"உங்க‌ள் காதில்தான் அந்த‌ பெய‌ரை சொல்வேன்" காத‌லோடு அவ‌ன் செவிக‌ளில் உச்ச‌ரிக்கும்போதுதான் ஜ‌ன்ன‌லில் யாரோ நிற்ப‌து தெரிந்து அல‌றி ம‌ய‌ங்கி விழுந்தாள்.

அவ‌ள் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டு ஆல்வின் வீட்டு காவ‌லாளிக‌ள் ஓடிவ‌ந்த‌ன‌ர்.ஜ‌ன்ன‌லை நோக்கி கைகாட்டிவிட்டு ச‌ம‌ராவை எழுப்ப‌ முய‌ற்சித்தான் ஆல்வின்.

5.

இள‌ங்கோவிற்கு இட‌து காலில் ப‌லத்த‌ அடி. நொண்டிக்கொண்டே கால‌ய‌ந்திர‌ம் வ‌ந்துசேர்ந்தான்.பார‌திக்கு புரிந்துவிட்ட‌து.இள‌ங்கோவை ய‌ந்திர‌த்தின் ர‌க‌சிய‌ அறையில் ஓய்வெடுக்க‌ செய்துவிட்டு சினத்துடன் வெளியேறினான்.விறுவிறுவென்று அந்த மாளிகையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
கட‌ற்க‌ரையோர‌ அந்த‌ பெரும் மாளிகையை விட்டு பார‌தி வெளியேறும்போது அந்த இடமே மயான அமைதி கொண்டிருந்தது.கால‌ய‌ந்திர‌த்தில் அரைம‌ய‌க்க‌ நிலையிலிருந்தான் இள‌ங்கோ. பார‌தியைக்க‌ண்ட‌வுட‌ன் ச‌ந்தோஷ‌த்தில் மெல்லிய‌தாய் கேட்டான் "முடிந்த‌தா பார‌தி?"

"எம‌னை ச‌ந்தித்திருப்பார்க‌ள் இந்நேர‌ம்" சொல்லிவிட்டு சத்த‌மிட்டு சிரித்தான் பார‌தி.கால‌ய‌ந்திர‌ம் அவ‌ர்க‌ள‌து கால‌த்திற்குள் நுழைந்துகொண்டிருந்த‌து.

6.

ச‌ம‌ராவிற்கு ம‌ய‌க்க‌ம் தெளிந்த‌போது கையிலிருந்து ர‌த்த‌ம் வ‌ழிந்துகொண்டிருந்த‌து. அருகே காவலாளிகளின் பிணக்குவியல். சற்று தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிட‌ந்தான் ஆல்வின். மெல்ல‌ த‌வ‌ழ்ந்து அவ‌ன‌ருகே சென்றாள். அவ‌ன் நெஞ்சில் விழுந்து அழுதாள். அவ‌ன் இதயம் துடிக்கும் சப்தம் கேட்டு வியந்து அவனை உலுப்பினாள். முனகலுடன் கண்களைத் திறந்தான் ஆல்வின்.

7.
பத்து மாத‌ம் க‌ழித்து,

தொட்டிலில் கால்க‌ளை ஆட்டிக்கொண்டு ப‌டுத்திருந்த‌து அந்த‌க்குழ‌ந்தை.
ஆல்வினும்,ச‌ம‌ராவும் குழ‌ந்தையின் செவியில் ஒருசேர‌ அந்த‌ப்பெய‌ரை உச்ச‌ரித்தார்க‌ள்

"ம‌ஹிந்தா ராஜ‌ப‌க்ஷே"

‍‍-முற்றும்-

[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]

- நிலாரசிகன்.

படித்ததில் பிடித்தது

http://lovelythoughtz.blogspot.com/2009/05/quotes-on-sachin-tendulkar.html

Monday, May 18, 2009

இட்சி த கில்லர்



வன்மமும் குரூரமும் நிறைந்தது மனித மனம். பிற உயிர்களை வதைத்து மகிழ்கின்ற மனமில்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை.தட்டானின் சிறகுகளை பிய்த்து ஆனந்தப்படாத பால்யத்தை நாம் கண்டதில்லையா? டிரெயின் பூச்சிகளை தேடித்தேடி மண்ணோடு மண்ணாக மிதித்து கொன்றதில்லையா? ஓணானை பார்த்த‌வுட‌ன் க‌ல்லெறிய‌த்தானே தோன்றுகிற‌து இன்ன‌மும்? பிற‌ உயிர்க‌ளை வ‌தைப்ப‌தை பாவ‌ம் என்று உண‌ரும் முன்ன‌ரே நாம் வ‌தைப‌டுதலின் ஆன‌ந்த‌த்தை அனுப‌வித்திருக்கிறோம். ஓராயிரம் ஹிட்ல‌ர்களும்,இடி அமீன்களும் திரிந்துகொண்டிருக்கும் இட‌ம் ந‌ம் ம‌ன‌ம். காலத்தின் மாற்றத்திலும்,படித்து தெளிந்த பண்பாலும் நமக்குள்ளிருக்கும் மிருகபுத்தி உறங்கிவிடுகிறது. சிலருக்கு அது உறங்கமறுப்பதில்லை.ராவணன் வாழ்ந்த பூமியில் இப்போது ஒருவனுக்கு அந்த மிருகபுத்தி தாண்டவமாடிக்கொண்டிருப்பதை போல்.

இட்சி த கில்லர் எனும் இந்த ஜப்பானிய திரைப்படத்தை பற்றி இருவரிகள் மட்டும் சொல்லத்தோன்றுகிறது.

1.குரூர மனதின் வெளிப்பாடு
2.வன்மத்தின் உச்சம்

உறைய வைத்த காட்சி:

ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தி புணர்ச்சியில் ஈடுபடுகிறான் ஒருவன். முகமெல்லாம் வீங்கி இரத்தம் வழிய‌
மற்றொருவனிடம் புலம்புகிறாள் அவள். கவலைப்படாதே அவனை நான் கொல்கிறேன் என்கிறான் இவன்(இட்சி). சொன்னதைப்போலவே அவனைக் கொன்றும் விடுகிறான். நன்றியோடு பார்க்கிறாள் அவள். "இனி உன்னை நான் அடிக்கலாம்" என்கிறான் இட்சி. மனதெங்கும் நிறைந்திருக்கும் குரூரத்திற்கு இந்த ஒரு காட்சி போதும்.


இளகிய மனம் கொண்டவர்கள் இந்தப்படத்தை தவிர்த்தல் நலம். "என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோம்" எனும் தைரியசாலிகள் பார்த்துவிடல் நலம். :)


சுட்டி:

http://www.youtube.com/watch?feature=related&v=wgrvIVSHhI8

Wednesday, May 13, 2009

அரூபவதனி






யாருமற்ற பின்னிரவில்
கசிகின்ற விழியுடன்
என்னிட‌ம் சரணடைவாள்.
மடியில் முகம்புதைத்து
விசும்புகின்ற
அவளின்
கருங்கூந்தல் இருண்ட‌
முகிலை ஒத்திருக்கும்.
வெண்ணிறத்தில் மெல்லியதொரு
ஆடை
அவள் மேனியெங்கும்
நதியென தவழ்ந்தோடும்.
தளர்ந்த விரல்களால்
என் தலைகோதி,
தகிக்குமவள் முலைகளில்
எனை மூழ்கிடச் செய்திடுவாள்.
கண்ணீரின் காரணத்தை
கடைசிவரை சொல்லாமல்
காற்றோடு கரைந்து
ம‌றைந்திடுவாள்.
விடியலில் மனமெங்கும்
வியாபித்திருப்பாள்
முகம்மட்டும் மறைத்தபடி.

Monday, May 11, 2009

மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.





புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் "மை லிட்டில் ஏலியன் பிரண்ட்". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய
"Sleeping with an alien"
ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளிவருகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.
நேற்று மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டது. இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்ததால் பதிவு எண்ணை சொல்லி நான்கு முப்பதுக்கு வாங்கிவிட்டேன். மொத்தம் 400 பக்கங்கள். அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து முதல் பத்து பக்கங்கள் வாசித்திருப்பேன். அதற்கு மேலும் தொடர்ந்து வாசித்தால் இரவு முழுவதும் பூங்காவில்தான் இருக்கவேண்டும் என்பதால் உடனே வீட்டிற்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். இன்று காலை ஏழு மணிக்கு வாசித்து முடிக்கும்போது மனதெங்கும் வியாபித்திருந்தார்கள் "கேனோ"வும் "ஜூலி"யும்.

ஏழுவயது சிறுமி ஜூலியின் தாய் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். ஜூலியின் அப்பா வில்லியம்ஸ் ஒரு கிராமத்தில் தன் மகளுடன் வசித்து வருகிறார். அது ஒரு பண்ணை வீடு. வீட்டைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி. அதில் மேய்ந்துகொண்டிருக்கும் சில குதிரைகள். பெரிய வீட்டில் தன் அப்பாவுடன் வசிக்கும் ஜூலிக்கு சிறுவயது முதலே எதிலும் பயம் கிடையாது. வில்லியம்ஸ் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க தூரத்திலிருக்கும் சந்தைக்கு சென்றுவிடும் போதெல்லாம் தனியாக இருப்பாள் ஜூலி. அவர்கள் வளர்க்கும் குதிரைகளும்,பசுமாடுகளும் மெல்லியதாய் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும். ஜூலியின் வீட்டின் அருகில் வேறு வீடுகள் கிடையாது.ஜூலியுடன் விளையாட ஒரு லேப்ரடார் நாய்க்குட்டியை வாங்கித் தருகிறார் வில்லியம்ஸ். தங்க நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மென்மையான அந்த குட்டியைக் கண்டவுடன் ஜூலிக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதற்கு மைலோ என்று பெயரிடுகிறாள். தன் படுக்கை அறையில் அதற்கென்று ஒரு இடம் ஒதுக்கித்தருகிறாள்.அவளது உலகமே அந்த சிறுநாய்க்குட்டியுடன் என்றாகிறது. சில மாதங்களில் மைலோ நன்றாக வளர்ந்து,ஜூலி சொல்கிறபடியெல்லாம் கேட்கிறது. ஜூலி மைலோவை தன் தம்பியாகவே நினைத்துருகுகிறாள்.

இந்த நிலையில் ஒரு நாள் நள்ளிரவு மைலோவைக் காணாமல் ஜூலியும் வில்லியம்ஸும் தேடுகிறார்கள். எங்கு தேடியும் மைலோவைக் காணவில்லை. அழுது அழுது ஜூலியின் கண்கள் வீங்கி,கன்னம் சிவந்துவிடுகிறது.அழுதுகொண்டே உறங்கி விடுகிறாள். அதிகாலையில் மைலோவின் சத்தம் சன்னமாக கேட்கிறது. ஜன்னல் வழியே பார்க்கிறாள் ஜூலி. தோட்டத்தில் மைலோ மயங்கிய நிலையில் கிடக்கிறது. மைலோவின் தலையிலிருந்து வழிந்து கொண்டிருக்கிறது ரத்தம். ஓடிச்சென்று மைலோவை தூக்க முயற்சிக்கிறாள்,வளர்ந்துவிட்டதால் மைலோவை தூக்க முடியவில்லை.அப்போது ஒரு கரம் மைலோவை தூக்க நீள்கிறது. ஜூலியின் வயதை ஒத்த சிறுவனொருவன் நிற்கிறான். இந்த நேரத்தில் எங்கிருந்து இவன் வந்தான் என்று ஜூலிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நீயாரென்று கேட்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் மைலோவை வெகு சுலபமாக தூக்கி கொண்டு ஜூலியின் அறைக்கு வருகிறான்.

மைலோவிற்கு முதலுதவி செய்துவிட்டு அந்த சிறுவனிடம் வந்து பேசுகிறாள் ஜூலி. எந்தவொரு கேள்விக்கும்
அவன் பதிலிடவில்லை.ஜூலியின் படுக்கையில் படுத்துறங்கிவிடுகிறான்.மறுநாள் தன் அப்பாவின் அறைக்கு சென்று அந்த சிறுவன் பற்றி சொல்கிறாள். வில்லியம்ஸ் ஜூலியின் அறைக்குள் வந்து பார்க்கும்போது அவனைக் காணவில்லை. அவன் ஜூலியின் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்து சிரிக்கிறான். அப்போதுதான் ஜூலிக்கு புரிகிறது அவன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறானென்று. நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் போய் விளையாடு என்று சொல்லிவிட்டு வில்லியம்ஸ் சந்தைக்கு போய்விடுகிறார். இரண்டு நாட்கள் கழித்துதான் வருவதாகவும் சொல்கிறார்.

அந்த சிறுவனுக்கு தான் உண்ணும் ரொட்டியும் பாலும் கொடுக்கிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உண்டுமுடிக்கிறான்.சைகையால் இன்னும் உணவு வேண்டும் என்கிறான். தன் அப்பாவின் உணவை போல் நான்கு மடங்கு சாப்பிடுகின்ற அவனை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவனுக்கு கேனோ என்று பெயரிடுகிறாள்.
மைலோ அவனைக் காணும்போதெல்லாம் குரைக்கிறது. கேனோவும் ஜூலியும் விளையாடுகிறார்கள். கேனோவைக் கண்டு குரைத்தபடியே இருக்கிறது மைலோ.

இரண்டாவது அத்தியாயம் ஜூலியின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறது.ஜூலி பதினெட்டு வயது யுவதியாக மாறி இருக்கிறாள்.தங்க நிறத்தில் கூந்தலும்,நீல நிறக் கண்களும் அவளது அழகை மேலும் அழகாக்கி இருக்கிறது. செர்ரி பழ நிறத்தில் அவள் இதழ்களை கண்டு கல்லூரியே கிறங்கிக் கிடக்கிறது.ஜூலியின் வகுப்புத்தோழன் கெவின் அவளிடம் தன் காதலை சொல்கிறான். ஜூலிக்கும் அவனை பிடித்துப்போகிறது. அடுத்த வருடத்திலிருந்து இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என்றும் அதுவரை காதலர்களாக பழகலாமென்றும் முடிவெடுக்கிறார்கள். தன் வீட்டிற்கு செமஸ்டர் விடுமுறைக்காக செல்கிறாள் ஜூலி. விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வழியனுப்புகிறான் கெவின். விடுமுறைக்காக சென்றவளிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லாத காரணத்தால் அவள் கிராமத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறான் கெவின்.

வீட்டின் கேட்டை திறந்துகொண்டு கெவின் உள்நுழைகிறான்.அங்கே அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெரிய வீட்டில் தனியாக பேசிக்கொண்டிருக்கிறாள் ஜூலி. யாரிடம் பேசுகிறாள் என்று மறைந்திருந்து பார்க்கிறான் கெவின். யாருமில்லை அங்கே. ஆனால் ஜூலி ஒரு குழந்தைபோல் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஏதோ மனதில் தோன்ற தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த கேமராவால் ரகசியமாக அவளை படம் பிடித்துவிடுகிறான். அந்த படத்தில் ஜூலிக்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் வந்து அமர்கிறான். மனம் படபடத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறுவன் ஏலியன் என்பதை உணர்ந்துகொள்கிறான். ஏலியனை அரசாங்கத்திடம் பிடித்துக்கொடுத்தால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்று தோன்ற,அந்த சிறுவனை பிடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். ஜூலியின் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு வீட்டை நோக்கி ஓடுகிறான். அங்கே என்ன நடக்கிறது என்பதை நாவலின் கடைசி இருபது பக்கங்களில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிண்டலி ப்ராஸ்டரின் எழுத்தும்,விவரணைகளும் நாவலுக்கு மிகப்பெரிய பலம்.ஜுலியின் அம்மா கார் விபத்தில் இறந்து போயிருக்கிறாள் என்பதை கார் சத்தம் கேட்கும்போதெல்லாம் தன்னையும் அறியாமல் ஜூலி காதைப்பொத்திக்கொள்வதாக காட்சிப்படுத்தி இருப்பார். இதுபோன்ற மிகவும் நுட்பமான வெளிப்பாடு நாவலுக்கு மிகப்பெரிய பலம். கேனோவும் ஜூலியும் அப்பா சந்தைக்கு போன இருநாட்களும் விளையாடுவதை நாற்பது பக்கங்கள் விவரித்திருக்கிறார்.வாசிக்கும் வாசகனுக்கு சிறிதும் சலிப்பைத்தராமல்,வாசகனை குழந்தை பருவத்திற்கே இழுத்து செல்லும் வித்தை இவரின் எழுத்துக்களில் மிளிர்கிறது. சிறுமி ஜூலி கேனோவிற்கு உணவு பரிமாறும் சமயத்தில் சுவற்றில் தொங்குகின்ற அவளது அம்மாவின் புகைப்படம் மெல்லியதாய் புன்னகை செய்தது போலிருந்தது என்கிற வரியின் கவித்துவம் மனதை அள்ளிப்போகிறது.

எதற்காக கேனோ பூமிக்கு வந்தான்,ஜூலிக்கு என்னவாயிற்று,மைலோவின் தலையில் ஏன் அடிபட்டது,அப்பா வில்லியம்ஸ் என்ன ஆனார் என்பதை கடைசி இருபது பக்கங்களில் வாசிக்கும்போது நம்மை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டுபோய்விடுகிறார் சிண்ட்லி. சலிப்புத்தட்டாத விவரணைகளும்,சொற்களினூடாக காட்சிப்படுத்துதலிலும் தனித்து நிற்கிறது இந்நாவல்.கேனோ சிரித்தால் வாசகனுக்கும் சிரிப்பு வருகிறது. ஜூலி அழுதால் வாசகனும் சேர்ந்து அழுகிறான்.நாவலின் கடைசி இருவரி இப்படி முடிகிறது.
"Julie's eyes were filled with tears. Her lips were whispering something which he can only understand"

விலை: 11.99$
வெளியீடு: Harper Kollins Publications

நூல் விமர்சனத்தை எழுதி முடித்தவுடன் சந்தோசத்தில் துள்ளினேன். இன்னும் ஐம்பது வருடம் கழித்து வரவிருக்கும் ஒரு நாவலை,நாவல் ஆசிரியர் பிறப்பதற்கு முன்பே நாவலுக்கு விமர்சனம் எழுதிய முதல்
மனிதன் என்கிற பெயரும் புகழும் கிடைக்கப்போவதை நினைத்து சத்தமிட்டு சிரித்தேன். அருகிலிருந்த என்
கால இயந்திரம் சிவப்பு கண்களால் என்னைப் பார்த்து கண்ணடித்தது.

-நிலாரசிகன்.

Friday, May 08, 2009

இரு கவிதைகள்



அவ‌ர்க‌ள்


என் அறைக்குள்ளிருந்து
வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்
அவ‌ர்க‌ள்.

த‌லைகுனிந்து த‌ள்ளாடி
ந‌ட‌க்கின்ற‌ அவ‌ர்க‌ளின்
நிழ‌லிலும் தோல்வியின்
காய‌ங்க‌ள் மின்னி ம‌றைகின்ற‌ன‌.
வெற்றிக்க‌ளிப்பில் ச‌த்த‌மிட்டு
சிரிக்க‌ ஆர‌ம்பிக்கிறேன்.
பல்லிடுக்கில் வழிகின்ற‌
க‌ருமைநிற‌ ர‌த்த‌ம்
தோற்றுச்சென்ற‌வ‌ர்க‌ளை
சாத்தான்க‌ள் என்றபோது
எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்.


இறக்க முடியாத சிலுவை


எல்லோரும் அம‌ர்ந்திருக்கும்
அந்த‌க்கூட்ட‌த்தில்
என்னை ம‌ட்டும்
பார்த்துக்கொண்டிருந்த‌ன‌
அந்த‌ இருவிழிக‌ள்.

த‌ன‌க்கான‌ பார்வையை
என்னிட‌மிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த‌ விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இய‌ல்பாய்
த‌விர்த்தேன்.

எல்லோரும் க‌லைந்து
சென்ற‌ன‌ர்.
வ‌ருட‌ங்க‌ள் ப‌ல
க‌ழிந்த‌பின்ன‌ரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
த‌விர்த்த அந்த‌விழிக‌ளை.


நன்றி: அதிகாலை.காம்

Monday, May 04, 2009

Life of Birds - ஆவணப்படம்



பறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.
கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம்.

பறவைகளின் வாழ்வியல் முறை குறித்த ஆவணப்படங்களில் மிகச் சிறந்ததாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது Life of Birds
இதை தயாரித்து இயக்கியவர் டேவிட் ஆட்டன்பரோ.
பத்து பகுதிகளாக BBC தொலைக்காட்சியில் 90களில் இறுதியில் ஒளிபரப்பானது.
பறவை ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌டின‌ உழைப்பால் உல‌க‌மெங்கும் சுற்றித்திரிந்து இத‌னை ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.

விதவிதமான பறவைகள் மனதை அள்ளிப்போகிறது.குறிப்பாக பலகுரலில் ஒலிஎழுப்பும் பறவை(கேமரா லென்ஸ் போன்று சத்தம் எழுப்புவதும்,கார் சைரன் ஒலியும் வியக்க வைக்கிறது )

இர‌வில் ம‌ட்டுமே உண‌வு தேடும் நியுசிலாந்தின் கிவி ப‌ற‌வை என‌ ப‌ல‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள்.


இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/show?p=S3vPSi1o5nM

-நிலாரசிகன்

Friday, May 01, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

வால் பாண்டி சரித்திரம் - நாவல் - இரண்டாம் அத்தியாயம்

http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram_1.php