Saturday, February 07, 2009

துயர்மிகுந்த இரவு இதுவாகத்தானிருக்கும்

தொட்டில் குழந்தையொன்று
தவறி
விழுவதை காண நேர்கின்ற
தாயின் வலியைவிடவும்
அதிகமான வலியை இந்த இரவு
எனக்குத் தருகிறது.
ஒற்றை அறையில்
இறுக மூடிய சன்னலோரம்
கண்களில் வழிகின்ற நீருடன்
அமர்ந்திருக்கிறேன்.
துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்.

Friday, February 06, 2009

படித்ததில் பிடித்தது:

"அன்பு யார் மீதும் காட்டலாம்.ஆனால் கோபம் உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்டமுடியும்."

Wednesday, February 04, 2009

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...


1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?
6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?
7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.

Thursday, January 29, 2009

மூன்று சொட்டு கண்ணீர்

1.
நெஞ்சு நோக்கி நீள்கின்ற விரல்களின்
நடுவிலும்
பரிகசிக்கும் சிரிப்பு
சப்தங்களிலும்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
வாழ்ந்து கெட்டவனின் சுத்தமான
கண்ணீர்.

2.
என்னை ஏமாற்றுவதாய்
நீயும்
உன்னை ஏமாற்றுவதாய்
நானும் நடத்துகின்ற
நாடகத்தில்
கோமாளியாகி வெளித்தெரியா
கண்ணீரில் நனைகிறது
நம் பவித்திர நேசம்.

3.
நடுநிசியில் தெருவோர
மரத்தடியில் உறங்குகின்ற
பைத்தியக்காரி
மார்போடு அணைத்திருந்தாள்
பொம்மையொன்றை.
அவளுக்கு பிறக்க
இயலாமல் போனதற்காய்
அப்பொம்மை அழுத
கண்ணீர்தானோ
இந்த இரவுமழை?

Tuesday, January 20, 2009

இரு நிகழ்வுகள்

நிகழ்வு 1:

மணல்வீடு சிற்றிதழ் & களரி தெருக்கூத்துப்
பயிற்சிப்பட்டறை
இணைந்து நிகழ்த்தும்

மக்கள் கலை இலக்கிய விழா

நாள் : 24 சனவரி 2009,சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி.
இடம்: ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல்,மேட்டூர்
தாலுக்கா,சேலம் மாவட்டம் 636453

பஸ்ரூட் : சேலம் - டூ - மேட்டூர்
பஸ்நிறுத்த : பொட்டனேரி

தொடர்புக்கு : மு.ஹரிகிருஷ்ணன்(9894605371)

நிகழ்வு 2:

யுகமாயினி இலக்கியக்கூடல்

இடம்: I.C.U.F அரங்கம்,சத்திரம்,திருச்சி
நாள்: 26-01-2009
காலம்: பிற்பகல் 3 மணி
தலைமை : பிரபஞ்சன்
வாழ்த்து :பழமலய்
யுகமாயினி கவிதைகள் அலசல்: இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
சிறுகதைகள் அலசல்:
தஞ்சாவூர் கவிராயர்
கட்டுரைகள் அலசல்:
ஆதவன் தீட்சண்யா
சிற்றிதழ் களம் : கஜேந்திரன்
ஒருங்கிணைப்பு: அரங்கமல்லிகா/இரா.எட்வின்

Saturday, January 17, 2009

புனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்

ஒரு படைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது/சிலிர்க்க வைத்தது/வசீகரித்தது/காறி உமிழ்ந்தது/அடித்து துவைத்து போட்டது/நீ எழுதறதெல்லாம் ஒரு எழுத்தா என கேள்விகேட்டது/தூக்கம் கெடுத்தது/துக்கம் கொடுத்தது/சிரிக்க வைத்தது/சிலிர்க்க செய்தது அந்த படைப்பின்,சிறுகதை தொகுப்பின் பெயர்

"புனைவின் நிழல்" எழுதியவர் மனோஜ்.உயிர்மை ப‌திப்ப‌க‌ம்

மாந்த்ரீக யதார்த்தத்தை முன்னிருந்திய நவீன படைப்புகளில் மிகச்சிறந்தது.(இல்லை இதைவிட‌ சிற‌ந்த‌ தொகுப்பும் இருக்கிற‌து என்ப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் பெய‌ர் ம‌ட்டும் த‌ராம‌ல் ப‌திப்ப‌க‌த்தின் பெயரையும் த‌ந்து விடுங்க‌ள். )

கவிதைமீது காதலுற்று பலகாலம் கவிதைகளைவிட்டு வெளியே வராமல் இருந்தவன் என்பதால் சிறுகதை வாசிப்பு கடந்த 2007 வரை மிகக்குறைவாகவே இருந்தது. 2008ல் எனக்கென்ன ஆயிற்றோ தெரியவில்லை சிறுகதை பைத்தியமாகவே மாறிவிட்டேன். கிட்டத்தட்ட 3000 சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருப்பேன்.

புனைவின் நிழலை படிக்க எடுத்தவுடன் ஒரே மூச்சில் இதிலிருக்கும் 15 கதைகளையும் படித்துவிடவில்லை. காரணம் மற்ற எழுத்திலிருந்து மனோஜின் எழுத்து மாறுபட்டிருக்கிறது. யதார்த்தம் மீறிய கற்பனையும்,மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிய துடிக்கும் மனமும் இவருக்கு வாய்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி சிறுகதையில் வாசகனை கட்டிப்போடும் வித்தையும் பல இடங்களில் காண முடிகிறது.

குறிப்பாக நான்கு சிறுகதைகள் கச்சை,சர்ப்ப வாசனை,அட்சர ஆழி,பால்.
இந்த நான்கு சிறுகதைகளில்தான் மனோஜ் தனித்து நிற்கிறார்.

கச்சை மீது ஆவல்கொண்ட பெண்ணொருவளை கச்சை அணிய சம்மதிக்காத சமுதாயம் நிர்வாணப்படுத்தி அவமதிக்கிறது.அந்த அவமானம் தாளாமல் தூக்கில் தொங்குகிறாள்...இவை எப்போதோ நடந்ததாக சொல்லப்படுகிறது. அவள் தூக்கில் தொங்கிய புளிய மரத்தின் அருகிலிருக்கும் வீட்டில் கதையின் நாயகி வந்து தங்குகிறாள். அவள் அணியும் நவீன கச்சையை தூக்கில் தொங்கியவள் ஆர்வமோடு ஸ்பரிச்ச முயல்வதாக செல்கிறது கதை. இந்தக் கதைதான் இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கதை என்பேன்.

சர்ப்ப வாசனை கதையில் வனத்தை பற்றிய விவரணைகள் மிக நுட்பமாக அமைந்திருக்கிறது.

சரி இந்தப்பதிவின் தலைப்பிற்கு வருவோம்.

இந்த புனைவின் நிழலை எழுதிய மனோஜை இன்று புத்தக காட்சியில் உயிர்மை அரங்கில் சந்தித்தேன்.
எதிர்பாராத சந்திப்பில் நா எழவில்லை எனக்கு. அருகில் சென்று கரம்பற்றி புனைவில் நிழல் வாசித்தேன் ரொம்ப நன்றிங்க...அடுத்து எப்போ எழுதுவீங்க, என்றெல்லாம் பேசிக்கொண்டே போனேன் என் பெயரைக்கூட சொல்ல மறந்து. அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியின் ரேகைகள் படர்வதை உணர முடிந்தது. யாரோ ஒரு அந்நிய‌னின் அடிம‌ன‌திலிருந்து எழுகின்ற‌ பாராட்டை விட‌ சிற‌ந்த‌து எது?

ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ எழுத்தாளரை ச‌ந்தித்த‌ ம‌கிழ்ச்சியில் திளைத்திருந்த‌போது அருகில் வ‌ந்து நின்றார் ஒருவ‌ர்.அது சாரு நிவேதிதா.

சாருவை ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசிய‌தில்லை. ஏனெனில் அவ‌ரை ப‌ற்றி வ‌ருகின்ற‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் அவ‌ர‌து ராச‌லீலாவின் ப‌க்க‌ங்க‌ளையே மிஞ்சிவிடும்.

"அந்தாளா,அவ‌ருகிட்ட‌ எவ‌ன் டா பேசுவான்...இப்போ பேசினா நாளை என் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு கார‌ண‌ம் நேற்று என்னோடு பேசிய‌வ‌ர்னு வெப்சைட்டுல‌ எழுதுவாரு.."

"அவ‌ரு ஒரு மாதிரி"

"சீ..ஸெக்ஸை த‌விர‌ அவ‌ருக்கு என்ன‌ தெரியும்"

"போதையில‌ இருப்பாருடா...ஜாக்கிர‌தை"

இதுபோன்ற‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளை கேள்விப‌ட்ட‌தால் வ‌ழ‌க்க‌மான‌ தமிழ‌ன் போல‌ "ந‌ம‌க்கேன் வம்பு" என்று பேச நினைத்தும் பேசாம‌ல் வ‌ந்துவிடுவேன்(க‌ட‌ந்த‌ 2008ம் ஆண்டு புத்த‌க‌ க‌ண்காட்சியிலும் பார்த்துவிட்டு பேச‌மால‌ வீடு திரும்பினேன்)

சாரு எங்க‌ள் அருகில் வ‌ந்த‌தும்,கைகொடுத்து ந‌ல‌ம் விசாரித்தேன். என் பெயர் நிலார‌சிக‌ன் உங்க‌ள‌து இணைய‌த‌ள‌ம் தொட‌ர்ந்து வாசிப்ப‌வர்க‌ளில் நானும் ஒருவ‌ன் என்றேன்.ஆஸாதி புத்த‌க‌ம் வாங்க‌ வ‌ந்தேன் என்றேன்.

இத‌ற்கெல்லாம் சாரு எப்ப‌டி ம‌றுமொழி பேசியிருப்பார்?

நிலார‌சிக‌ன்: சார்,ந‌ல‌மா?

சாரு: ந‌ல்லா இல்ல‌ன்னுதான‌ பேங்க் அக்க‌வுண்ட் கொடுத்திருக்கேன் பார்க்க‌லையா?

நிலார‌சிக‌ன்: உங்க‌ 108 க‌தையும் நெட்ல‌ ப‌டிச்சேன்.

சாரு: "காம‌ரூப‌ க‌தைக‌ள்" வாங்க‌ மாட்டேன்னு இன் டைர‌க்டா சொல்றீயா?


நிலார‌சிக‌ன்: ஆசாதி புத்த‌க‌ம் அமெரிக்க‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் கேட்டிருந்தார்.வாங்கி அனுப்ப‌லாம்னு வ‌ந்தேன்.

சாரு: அப்ப‌டியே என் பேங்க் அக்க‌வுண்ட்டையும் கொடுத்துடு ராஜா.


இப்ப‌டியெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அத‌ற்கு நானும்,சாருவும் பொறுப்ப‌ல்ல‌ :)

மிக‌ மென்மையான‌ புன்முறுவ‌லுட‌ன் கேட்கின்ற‌ கேள்விக‌ளுக்கு மிக‌ நேர்த்தியான‌ ப‌திலை த‌ந்தார்.
சாருவா இது என்று ஆயிர‌ம் முறை ம‌ன‌ம் கேட்டுக்கொண்ட‌து. சாரு மீது நான் கொண்டிருந்த ‍‍நெகட்டிவ் பிம்பம் உடைந்து நொறுங்கியது.எழுத்தில் எப்ப‌டியும் இருந்துவிட்டு போக‌ட்டும்.யாரை ப‌ற்றிய‌ ப‌ய‌முமின்றி எதைவேண்டுமானாலும் எழுத‌ட்டும்.But,He is a Gem இவ்வ‌ளவு ப‌டித்தவ‌ர்,எழுத்தில் சூர‌ர்,க‌லைக‌ள் ப‌ல‌ க‌ற்ற‌வ‌ர் ஆயினும் Down to earth.
இது புக‌ழ்ச்சி என்பவ‌ர்க‌ள் சாருவுட‌ன் ப‌ழ‌கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டு தெரிந்துகொள்ளுங்க‌ள்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அசோக‌மித்திர‌ன்,சுஜாதாவிற்கு அடுத்த‌ப‌டி எதைப்ப‌ற்றியும் பேச‌/எழுத‌ முடிகிற‌ எழுத்தாள‌ர் சாரு ம‌ட்டும்தான்.

சாருவின் ப‌டைப்புக‌ள் அனைத்தையும் நான் வாசித்த‌தில்லை. ஆனால் அவ‌ர் எழுத்தின் வேக‌ம் பிர‌மிக்க‌ வைக்கிற‌து. அல‌சி ஆராய்ந்து எழுதுகின்ற திரைவிம‌ர்ச‌ன‌ங்க‌ள் விய‌க்க‌ வைக்கிற‌து(சமீபத்திய உதார‌ணம்: சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ப‌ற்றிய‌ பார்வை,உயிர்மை இத‌ழில் வெளிவ‌ந்த‌து)

So, ஒருவ‌ருடைய‌ எழுத்தை வைத்து அவ‌ரை எடைபோடாதீர்க‌ள் அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பின்ன‌ர் அவ‌ர் ப‌ற்றி பேசுங்க‌ள் என்கிற‌ ப‌ழைய‌ ப‌ஞ்சாங்க‌த்தை பாட‌விரும்பாம‌ல் இந்த‌ ப‌திவுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.Have a great week ahead guys! :)

Monday, January 12, 2009

புத்தக காட்சியில் என் புத்தகங்கள்

நண்பர்களுக்கு,

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக காட்சியில் கடை எண் 3ல்(எனி இந்தியன் பதிப்பகம்)
என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் கிடைக்கும்.

1.ஒரு பட்டாம் பூச்சியின் கனவுகள்
2.மயிலிறகாய் ஒரு காதல்

வாங்கிப்படித்தவர்கள் உங்களது விமர்சனங்களை nilaraseegan@gmail.com க்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

Friday, January 09, 2009

வாசித்து நேசித்த புத்தகங்கள்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்
என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்
போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்
நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்
10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.

சிறுகதை தொகுப்புகள்:

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
[நர்மதாவில் கிடைக்கலாம்]

மண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த
படைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த
கதைகள்

மண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]

காமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்
வா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற
படைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் "பச்சை மனிதன்" கதை
மாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

மிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல? குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி
பொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.

புனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]

மனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க
இயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை
நாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன."கச்சை" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது

உடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]

சைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]

இரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.
அறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க
வைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.

பிராந்து - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்
அதனை உணரலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]

நேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்
வலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்

இருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்
மனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]

நினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா? வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன
சொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி?]

அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]

பாஸ்கர் சக்தி "மெட்டிஒலி" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து
நிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.
வாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்
என்பதை உணர்த்துகிறது.

விசும்பு-ஜெயமோகன்[உயிர்மை?]

அறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்
சில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.

வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]

நவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்
தனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.

புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]

விளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த
தொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.

இன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)
நான் வாசித்தவை.

சிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை
படிக்க விரும்பினால் "முத்துக்கள் பத்து" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை "அம்ருதா" பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.

இதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை
தொடர்ந்து எழுதுகிறேன்.

தனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு

பகிர்ந்துகொண்டதில் மகிழ்ந்து,
-நிலாரசிகன்.

Thursday, January 08, 2009

சென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்

இன்று ஆரம்பித்தது 32வது சென்னை புத்தக
கண்காட்சி. முதல் நாள் என்பதால் பல புத்தகங்கள் இன்னும் பிரிக்கப்படாத பெரிய
பெட்டிகளில் இருந்தன. மாலை 5 மணிக்கு பிறகு கூட்டம் வர ஆரம்பித்தது.

நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் முதல் கவிதை தொகுப்பு
"அந்தரங்கம்" நான் வாங்கிய புத்தகங்களில் முதலில் வாசிக்க காத்திருக்கிறது.

அனிதாவின் "கனவு கலையாத கடற்கன்னி" கவிதை தொகுப்பு உயிர்மையில்
இன்று மாலைவரை வந்து சேரவில்லை. (இவ்வருடம் வெளிவருவதாக
உயிர்மை இதழில் படித்தேன்)

வலைப்பதிவர்கள் சார்லஸ்,லக்கிலுக்,அதிஷா மூவரையும் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது.

வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வலைஞர்கள் சந்திப்பு ஒன்று வைக்கலாமா?
வருகை தரும் நண்பர்கள் பெயர்களையும்,அலைபேசி எண்ணையும் பின்னூட்டமிடுங்கள்.
தேதி,நேரம் மாற்றி வைக்க முடிவெடுத்தாலும் அதையும் தெரிவித்துவிடுங்கள்.
ஒரு நல்ல சந்திப்புக்கு காத்திருக்கிறேன்.

ஏழு ரூபாய்க்கு விற்கும் தேநீர் மட்டும் கசக்கிறது. மற்றபடி திரும்பிய பக்கமெல்லாம்
நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே நடப்பது ரோஜாக்களுக்கு நடுவில் பறக்கும்
பட்டாம்பூச்சியின் குதூகுலத்தை தருகிறது.

[என் கவிதை நூல் "மயிலிறகாய் ஒரு காதல்" எனி இந்தியன் கடை எண் 3ல் கிடைக்கும்]

Wednesday, December 31, 2008

நிலா விருதுகள் 2008

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் நான் அதிகம்
எதிர்பார்ப்பது ஆனந்தவிகடனில் சுஜாதா அவர்களின்
விருதுகளைத்தான். இவ்வருடம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்
அந்த காந்த எழுத்தாளர். அவருக்கு அஞ்சலியுடன்
இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

[இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட Judgement]


விளையாட்டு :


சிறந்த கிரிக்கெட் அணிகள் : தென்னாப்ரிக்கா,இந்தியா

சிறந்த மட்டையாளர் : கெளதம் காம்பீர்

சிறந்த பந்துவீச்சாளர் : ஸ்டெயின்

சிறந்த பீல்டர் : ரிக்கி பாண்டிங்

சிறந்த கேப்டன் : தோனி

சிறந்த வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 103* இங்கிலாந்துக்கு எதிராக, டும்னி 166 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 117 முதல் பைனலில் - எதிரணி ஆஸ்திரேலியா

சிறந்த டி20 இன்னிங்ஸ் : கிறிஸ் கெயில் 67 ரன்கள் - எதிரணி நியுசிலாந்து

சிறந்த மைதான வாசகம்: ""Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is watching." சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் விளையாடியபோது காணப்பட்டது.

சிறந்த விக்கெட் : ரிக்கி பாண்டிங்ஐ போல்ட் ஆக்கிய இசாந் சர்மாவின் பந்துவீச்சு

சிறந்த புதுமுகம்: அஜந்தா மெண்டீஸ் - இலங்கை.


சிறப்பு விருது : அபிநவ் பிந்ரா,விஸ்வனாதன் ஆனந்த் மற்றும் சீனாவிற்கு(தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவை 2ஆம்
இடத்திற்கு தள்ளியதற்காக)

சொதப்பல் விருது: ஹர்பஜன் சிங்( ஸ்ரீசாந்தின் கன்னத்தை மைதானத்திலேயே பதம் பார்த்ததால்) மற்றும் BCCIக்கு -தொடர்ந்து
ICLஐ தடை செய்து வருவதற்கு.


இலக்கியம்:

சிறந்த கவிதை தொகுப்பு :கவிஞர்.இளங்கோ கிருஷ்ணனின் "காயசண்டிகை" [காலச்சுவடு வெளியீடு]

சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு

சிறந்த கட்டுரை தொடர் : தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்,தீராநதியில் ஜெயமோகனின் அங்கத கட்டுரை

சிறந்த சிறுகதைகள் : "சாட்டை" - கண்மணி குணசேகரன்,"இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன" -எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த சிற்றிதழ் : மணல்வீடு

சிறந்த புதிய இதழ் : வார்த்தை

சிறந்த புதுமுக கவிஞர்கள் : சகாராதென்றல்,குட்டிசெல்வன்,அனுஜன்யா,லக்ஷ்மி சகாம்பரி,செல்வராஜ் ஜெகதீசன்,ரிசான் ஷெரீப்,பாஸ்கர்

சிறந்த புதுமுக சிறுகதையாளர்கள்: தமிழ்நதி,உமாஷக்தி,அருட்பெருங்கோ

சிறப்பு விருது : சிங்கையிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கும், இலங்கை இனப்படுகொலையை கண்டித்து
எழுந்த இலக்கிய உலக எதிர்குரலுக்கும்(உண்ணாவிரதம்,ஊர்வலம்)


வலையுலகம்:

சிறந்த நகைச்சுவை பதிவு: துப்பாக்கி தேவை - செல்வேந்திரன்

சிறந்த அறிவியல் புனைக்கதை : வலைப்பதிவர் வெண்பூ எழுதிய "இரண்டாவது மூளை"

சிறந்த சினிமா பதிவுகள் : முரளிக்கண்ணன்

சிறந்த இணைய இதழ்: உயிரோசை

சிறந்த புதுமுகங்கள் : யாழிசை ஒர் இலக்கிய பயணம் மற்றும் அதிஷாஆன்லைன்

சிறந்த யோசனையாளர் : தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வு அளித்த வலைப்பதிவர் "யோசிப்பவர்"

சிறப்பு விருது: சிறில் அலெக்ஸ்(அறிவியல் புனைக்கதைகள் போட்டி நடத்தி பல வலைப்பதிவர்களின் கற்பனைக்குதிரைகளை
தட்டி விட்டதற்காக)

சொதப்பல் விருது: காணாமல் போன தேன்கூடுவிற்கு.

சினிமா:

சிறந்த திரைப்படம் : சுப்பிரமணியபுரம்

சிறந்த பிறமொழி திரைப்படம் : தாரே ஜமீன் பர்(ஹிந்தி)

சிறந்த பாடல்வரிகள் : அனல்மேல் பனித்துளி(வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம் திரைப்படங்களுக்காக)

சிறந்த இசையமைப்பாளர் : Harris ஜெயராஜ்(வா.ஆயிரம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: கதிர்

சிறந்த இயக்குனர் : சசிக்குமார்,சசி

சிறந்த நடிகர்: சூர்யா(வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை: பார்வதி(பூ)

சிறந்த வில்லன்: பிரசன்னா - அஞ்சாதே
சிறப்பு விருது: அஞ்சாதே,தசாவதாரம்,சரோஜா மற்றும் பத்துவேடங்களில் அசத்திய கமலுக்கும்.

சொதப்பல் விருது: குசேலன்(தலைவா இனிமே இந்த மாதிரி ரோல்ல எல்லாம் நடிக்காத,எங்களுக்கு தேவை பாட்சாவும்,படையப்பாவும்தான்
தல - ஒரு பாமர ரசிகனின் வேண்டுகோள்!!)


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நடந்தேறவும்,கனவுகளும்,லட்சியங்களும்
நிஜமாகவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 30, 2008

இலக்கிய சிந்தனை

நண்பர்களே யுக‌மாயினி ந‌வ‌ம்பர் 2008 இத‌ழில் வெளியான‌ என்னுடைய‌ "சேமியா ஐஸ்" எனும் சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ளில் வெளியான‌ 60 க‌தைக‌ளில் இர‌ண்டாம் இட‌த்தை அளித்திருக்கிற‌து என்ப‌தை ம‌கிழ்வுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, December 27, 2008

பாதங்களின் மொழி

1.பாதங்களின் மொழி

இதழ் உதிர்க்கும் பழகிய
வார்த்தைகளில் சலிப்புற்ற
பாதங்கள் தமக்கென தனிமொழியை
உருவாக்க ஆரம்பித்தன.
பூக்களை மிதிக்கும் தருணங்களில்
மெளனத்தை மொழியாக கொள்ளவேண்டுமெனவும்
சுவடுகளை மிதித்தால்
மன்னிப்பை மொழியாக்க வேண்டுமெனவும்
தீர்மானித்தன.
வார்த்தைகள் ஏதுமின்றி மொழியொன்று
உருவானது.
ஒவ்வோர் உதடுகளாய் ஊமையாகி
பாதங்களின் மொழி
பூமியெங்கும் பரவ ஆரம்பித்தபோது
ஊனன் எனும் சொல்
பூமியின் அடியாழத்தில்
தொலைந்துபோயிருந்தது.

2.சொல்லப்படாத சொற்கள்

பிரக்ஞையற்று உதிர்ந்துகொண்டிருந்த
அவனது கலைந்தசொற்கள்
அவளை நோக்கி
கைகள்விரித்தவாறு
காற்றில் நீந்த ஆரம்பித்தன.
ஒவ்வொரு சொற்களாய்
அள்ளியெடுத்து
சரமாக்கி கூந்தலில் சூடிக்கொண்டு
சிரித்தாள்.
அவனுக்கும் அவளுக்கும்
இடையே அலைந்துகொண்டிருந்தன
சொல்லப்படாத சொற்கள் சில.

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடலை
இங்கு பதிவிடுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)
(அன்பென்ற மழையிலே)

2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..

1.ஆனந்தவிகடன்,கல்கி,மற்றும் சிறுபத்திரிகைகளில்
வெளியான என் படைப்புகள்

2.முத்தமிழ் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா முதல் தேகிவரை குழும நண்பர்கள்
பலரின் சந்திப்பு - தித்திப்பு.

3. நன்றி மறந்த வி*ரோ.

4. சில வருடங்களாக பார்க்க நினைத்து முடியாமல் இவ்வருடம்
பார்த்து ரசித்த இரு திரைப்படங்கள் 1.City of God 2.Rabbit Proof Fence

5. சேலம் மாவட்ட இலக்கிய நண்பர்களின் சந்திப்பு

6. வெகு நாட்களாக வாசிக்க நினைத்து இவ்வருடம் வாசித்த வண்ணநிலவனின்
"கடல்புரத்தில்" நாவல்.

7. நண்பன் விழியன் திருமண நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு சந்திப்பில் நடந்த கலந்துரையாடல்

8. ஏற்காடு சுற்றுலா

9. நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.

10. மறக்க விரும்பாத ஒரு கனவு. மறக்க விரும்பும் சில நினைவுகள்.

11. ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.

12.இவ்வருடம் வெளியான என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் (மயிலிறகாய் ஒரு காதல்,ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)

Monday, December 22, 2008

வனம்

வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நிற்கிறது என் மனசு. திசைகள் மறந்துவிட்ட கால்கள்
எங்கு செல்வதென்று புரியாமல் தவிக்கின்றன. முட்கள் நிறைந்த பாதையில் பூவொன்று என்னை வழிமறித்து
என்னை எடுத்துக்கொள் என்றது. இரண்டு கரங்களிலும் அப்பூவை ஏந்தி பாதங்களில் உதிரம் சிந்த வெகுதூரம்
கடந்து வந்தேன். முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.

இலைகளை உதிர்த்து நிற்கிறது ஒரு தனிமரம். நிழல்தேடி வந்த பாதங்கள் ஏமாந்து திரும்புகின்றன.
இரவின் கூரிய பற்களில் வடிகிறது என் தனிமையின் ரத்தம். கறுப்பு வெள்ளை பட்டாம்பூச்சியொன்றின் உதிர்ந்த
சிறகுகள் காற்றில் மிதக்கும் பின்னிரவில் எங்கோ ஒருத்தியின் சன்னமான அழுகுரலை காற்று இழுத்துச்செல்கிறது.

அவளும் அவனும் பரிமாறிக்கொண்ட நேசம் உருப்பெற்று ஓலமிட்டு வீதியில் அலைகிறது. நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை. எதிலும் லயிக்காத மனம் கட்டுகளை உடைத்து வேகமாய் ஓடத்துவங்குகிறது. கூகையின்
பார்வையில் பயந்து வீடு திரும்புகிறது மனம். எனக்குள் உருவாகிறது வெப்பநீருற்று. என்னை முழுவதுமாய் இழந்து
உடலிலிருந்து பிய்த்தெடுத்து வெளிக்குதிக்கிறேன். என்னுடலை நோக்கி ஒளிர்கிறதென் கண்கள்.
ஜீவனற்ற உடல் மண்ணில் வீழ்வதை வேடிக்கை பார்க்கிறேன். உடலற்ற உயிருடன் கைவீசி நடக்கிறேன் மனம்போன
போக்கில். காவிகள் வியப்புடன் என்னை பார்க்கின்றன. தாடிக்குள் புதைந்த முகத்துடன் உற்று நோக்குகின்றன சில கண்கள்.
வேகமாய் ஓடுகின்ற நதிக்குள் மெல்ல இறங்குகிறது என் உயிர். கடும்குளிர் நீரில் அமிழ்கிறது உயிரின் கடைசி மூச்சு.

யாருமற்ற இருண்ட வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நின்றுகொண்டிருக்கிறேன் உருவமற்று.

Monday, December 15, 2008

அலைபேசி தொலைந்த தினம்..

அலைபேசிக்குள் புதைந்துகிடந்தன
தொடர்புகொள்ளப்படாத
எண்கள் பல.

விரைந்தோடும் காலநதியில்
எப்பொழுதாவது பளிச்சிட்டன
மறக்கப்பட்ட எண்கள்.

ஏதோவொரு நபருக்கான
தேடலில் ஆழ்ந்திருக்கையில்
கண்முன் தோன்றி மறைந்தன
முகம்மறந்த எண்கள்.


காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..


எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்.

(வடக்குவாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியாகிய கவிதை)

Friday, December 05, 2008

உருவமற்ற நிழல்பொழுது

1.
நான் தனித்திருக்கும் உலகில்
என்னுடன் பயணிக்கிறது
நிழலொன்று.
எங்கிருந்து வந்ததென்றும்
யாருடையதென்றும் புரியவில்லை.
நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து
தப்பித்துவிட இயலாமல்
தளர்ந்து அமர்கிறேன்.
மெதுவாய் என் நிழலிடம்
பேச ஆரம்பித்தது
அந்த அந்நிய நிழல்.
புரிந்து கொள்ள முடியாத
மொழியில் இரு நிழல்களும்
பேசுவதை ஊமையாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான்.

2. மனம்

மேகங்கள் அலையும் மலைச்சரிவு
பச்சைநிறத்தை உடுத்திக்கொண்டு
உறங்குகிறது.
மரங்களின் நடுவில் நுழைந்து
பாறையில் விழுந்து
உடைகிறது மழைத்துளி.
சாம்பல் நிற அரவம்
அசைவற்று கிடக்கிறது
பெருத்த வேர்களைக்கொண்ட
மரத்தடியில்.
ஏதோ சில பறவைகளின்
சிறகடிப்புச் சத்தம் காற்றில்
கரைந்து வழிகிறது.
மலைப்பாதை வழியே
வளைந்து நெளிந்து ஊர்ந்துகொண்டிருக்கிறது
பேருந்தும் மனதும்.
-நிலாரசிகன்.

நன்றி : திண்ணை.காம்

Monday, December 01, 2008

கவிதைகள் இரண்டு

1.கண்ணாடியில் ஓர் அந்நியன்

இரவிலும் பகலிலும்
பிம்பங்களை உள்வாங்கி
சலித்த கண்ணாடி
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பிம்பத்தை
காண்பிக்க துவங்குகிறது.
சுயம் தொலைந்த நிஜம்
தெரியாமல் நீங்கள்
யாரோ ஒருவனை
தினம் சந்திக்கிறீர்கள்.
உங்களுக்கான நிறம்கரைந்து
உருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

2.இரவுக்குள் ஒளிந்திருக்கும் பகல்

மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது
பகலின் கீற்றுகள்.
முழுவதும் பகலான
மதியவேளையில்
உக்கிரதாண்டவமாடுகிறது
சில ஞாபகங்கள்.
பிரிவின் தகிப்பில் உதிர்ந்த
இலைகளை மிதித்தழித்து
உச்சமடைந்த ஞாபகங்கள்
ஒவ்வொன்றாய்
வீழ்ந்து மரித்தன.
தாங்கமுடியாத வலியுடன்
ஓடிச்சென்று இரவுக்குள்
நுழைந்து வழிகின்ற
கண்ணீரை துடைக்கிறது
பகலின் கரம்.

நன்றி: உயிரோசை

Sunday, November 30, 2008

மழை ரசித்தவர்கள்

மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

Tuesday, November 25, 2008

தினமணி கட்டுரை

கடந்த ஞாயிறன்று (23/11/2008) வெளியான தினமணி நாளிதழின் கட்டுரையொன்றில் என் கவிதையை பற்றிய குறிப்புவந்திருக்கிறது.
இங்கு சென்று பார்க்கலாம் :
நன்றி: தினமணி.காம்.