Tuesday, November 27, 2007

மெளனத்தின் சப்தங்கள்...


நிச்சயமற்ற ஒரு நேசத்தை
உனக்குப் பரிசாய் தந்து
தனிமைச் சிறைக்குள்
வாழ விரும்பும்
மழைமேகமாக...

இதயக்கல்வெட்டில் நீ
எழுதுகின்ற நேசமொழிகளை
இதயமின்றி வெட்டிவீசுகின்ற
வார்த்தைக்கோடரியாக...

உனக்குள் ஒரு உலகை
உருவாக்கி உன்னைவிட்டு
வெகுதூரம் பறந்துவிடத்துடிக்கும்
ஊனப்பறவையாக...

உன்னைப் பிரிந்துசெல்ல
தினம் தினம் என்னை
நானே செதுக்குகிறேன்
புதுப்புது உருவங்களாக...

Sunday, November 25, 2007

தினமணிக் கதிரில் என் சிறுகதைகள்


இன்றைக்கு(25/11/2007) தினமணிக் கதிரில்,என் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), வலைப்பதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.

இந்தச் செய்தியை காலையில் எனக்கு தொலைபேசியில் சொன்ன நண்பர் யோசிப்பவர். அவருக்கு என் நன்றிகள்.

Thursday, November 22, 2007

நெஞ்சுல மிதிச்சாலும் மகதான்..




துறுதுறுன்னு இருப்பாக
குறுகுறு பார்வ பாப்பாக...

நீ பொறந்த சேதிகேட்டு,
வெளியூரு போனவுக ஓடோடி
வந்தாக...

புள்ள உன் மொகத்த
பார்த்து என் காதுல
"எனக்கு பொறந்தது
பொண்ணு இல்ல பஞ்சுல
செஞ்ச செல"ன்னு சொல்லி
பூப்பூவா சிரிச்சாவுக...

கறைவேட்டியில தொட்டில
கட்டி நீ தூங்கற சொகத்த
விடிய விடிய பார்ப்பாவுக...

பொட்டபுள்ள உன்ன வள(ர்)க்க
படாதபாடு பட்டாவுக..

காலேசுக்கு நீ போக
கட்டவிரலு தேய தேய
சைக்கிள் மிதிச்சாவுக.....

ஒத்தப்புள்ள உன்ன
கண்ணுக்குள்ள வச்சு
வளத்தாக....

பெத்தபுள்ள கேட்டதெல்லாம்
சலிக்காம வாங்கி
தந்தாவுக...

கட்சி கட்சின்னு அலைஞ்சாக
பட்டி தொட்டியெல்லாம் போனாவுக..

காலேசுல நீ பட்டம்
வாங்கறத பார்க்க
ஆசைப்பட்டு வந்தவுகள
வார்த்தையால சாகடிச்சுபுட்டியே!

"எங்கப்பன் அமைச்சரோட எடுபிடின்னு
எப்படி சொல்லன்னு" கேட்டுபுட்டு
வெட்கப்படாம நிக்குறியே...

சிங்கம்போல வந்தவுக
செதஞ்சுபோயி நிக்காவுக

செதஞ்சுபோயி நின்னாலும்
காலேசுக்கு உன்ன கொண்டுவிட
சைக்கிள் எடுக்க போறாவுக...

வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்?

Tuesday, November 20, 2007

காதலுக்கும் வலிக்கும் காதலர்களே!




பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக...

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக...

கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களாக...

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணீராக...

வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதியதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல், காதலாக..

Thursday, November 15, 2007

அவளுக்கு தேவதை என்று பெயர்...



1. உணவருந்தும் முன்
ஒரு நிமிடம்
கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.
ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.

2.ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.
ஆற்றுமீன்கள் எல்லாம்
துள்ளிவிழுந்து மரிக்கின்றன..
பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..

3. உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!

4. படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.
படபடக்கும் உன்
விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.
பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.

5. தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..
பன்னீர்பூ மரத்திற்கு
யார் சொன்னது உன் வருகையை?

Monday, November 12, 2007

நடைபோடும் நதியாக...

சலசலப்பால் புலம்பியபடி
ஓடுகின்ற இந்த ஆறு
என்னை எனக்கு அறிமுகம்
செய்கிறது.

ஆற்றுக்குள் உருளுகின்ற
கூழாங்கற்கள் எனக்குள்
வசிக்கும் சிற்பத்தை
நினைவுபடுத்துகிறது...

நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க
ஆற்றைக் கடந்து
செல்கிறேன்.

எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.

Sunday, November 04, 2007

மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...


1.கறுப்புவெள்ளை மாலையொன்றினை
சிறகடிப்பால்
வர்ணமடித்துச் செல்கின்றன
ஒரு ஜோடி தேன்சிட்டுகள்.

2. இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.

3. மழையில் குளித்த
சிறுவனின் முகச்சுழிப்பில்
வற்றத்துவங்குகிறது சேறு.

4.நகருக்கு வெளியே
மலையென குவிந்திருக்கும்
குப்பையிலும் மலர்ந்திருக்கின்றன
பூக்கள்.

5. விரித்த குடையை
மடக்கும் போது கையில்
குத்திவிட்டது.
யாருக்குத்தான் மழை
பிடிக்காது?

6. ஓடிச்சென்று வாசல்
மூடுவதற்குள் உள்வந்து
தேனீர் கேட்கிறான் மழைவிருந்தாளி.

Tuesday, October 30, 2007

தவிப்புடன் ஒரு பாடல்...



முன்பாடல் சுருக்கம்:

காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....


(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)


உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்

சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ

என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையாய் நீ

உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..

(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)


காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை

சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை

வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?

வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?

(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..

ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)

என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...

கனவில் கூட நீ என்னை பிரிவதேன்? கவிதையில் கண்ணீராய நான்
கரைவதேன்?

ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..

Saturday, October 27, 2007

சக்களத்தி மக...




பொன்னாத்தாவுக்கு
கிறுக்கு முத்திப்போச்சு..

தெருவுல யாரக்கண்டாலும்
வெத்தலவாயால வையுது...

பொட்டிக்கட கந்தசாமி
சம்சாரம்தான் பொன்னாத்தா.

ரெண்டுநாளா உள்ளுக்குள்ள
பொகஞ்சது இன்னைக்கு
ஊரெல்லாம் பொகையுது..

ஊரெல்லாம் பஞ்சத்துல
தவிச்சப்போ வெளியூருக்கு
வேலைக்கு போனாரு
கந்தசாமி

போன இடத்துல பொன்னாத்தாவுக்கு
தெரியாம சோடிசேர்ந்து
வாழ்ந்துபுட்டாரு

பதினாறு வருசத்துக்கு
முன்னால நடந்த கத அது!

சக்களத்தி வீட்டு நாயிக்கு
இங்கென்ன வேலன்னு
வையுறா பொன்னாத்தா

குடியிருக்க குடுச இல்ல
அரவயித்துக்கு கஞ்சியும் இல்ல

ஆளுசரத்துக்கு வந்து
நிக்கா சக்களத்தி மக.

கால்ல விழுந்து பாத்தாரு
கையப்புடிச்சி கதறி பாத்தாரு

நல்லபாம்ப மிதிச்சே கொல்லற
பொன்னாத்தாவுக்கு
கோழிவந்தாலும் ஒதுங்கி போற
புள்ளபூச்சி கந்தசாமி எம்மாத்திரம்?

நாளைக்கு காலையில
பஞ்சாயத்து;

கால்சட்ட போடாத சிறுசும்
வரும்
கோவணத்தோட பெருசும்
வரும்
சாகப்போற கிழடுகளும்
வரும்

பஞ்சாயத்த நெனச்சுக்கிட்டே
பஞ்சாரத்து கோழிக்குஞ்சு
மாதிரி அடஞ்சு கெடக்கா
சக்களத்தி மக.

ஆயிரந்தான் இருந்தாலும்
அப்பன கேவலபடுறத
பார்க்க பிடிக்கல அவளுக்கு.

விடியக்கால ரெயில
புடிச்சி வடக்க போயிட்டா.

அவ சாயல்ல ஒருத்திய
பம்பாயில
படுக்கையில பார்த்ததா
தெக்குத்தெரு முனியசாமி
சொல்லிட்டு போறான்.

தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?

Wednesday, October 24, 2007

ரோஜாப்பூக்கள் கவிதைகள்...




1. ரோஜாப்பூக்கள்
உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..

ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..

உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..

வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.

2. உன் கண்பொத்தி
பால்கனி அழைத்துச்செல்கிறேன்
மெதுவாய் என் விரல்நகர்த்தி
பார்க்கிறாய்..

நீ வளர்த்த ரோஜாசெடியில்
சின்னதாய் ஒரு மொட்டைக்
கண்டு சிலிர்க்கிறாய்...

மொட்டைக் கண்டு
மலர்கின்ற ரோஜா
நீயென்று உன்னை
அள்ளிக்கொள்கிறேன்
நான்.

3. பனித்துளிகள்
சுமந்து நிற்கும் ஒரு
ரோஜாவை உனக்கென
கொய்து வந்து
பனித்துளிக்குள் உன்
முகம் காண்பிக்கிறேன்...

குழந்தையென அதில்
உன்னைக் காண்கிறாய்

குழந்தையாகிறோம்
நாம்.

4.

அழகிய புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன் என்கிறாய்
நீ.

உன் கூந்தலில் ஒரு
ஒற்றை ரோஜாவை சூடி
விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா மலர்ந்திருக்கிறது
என்கிறேன்
நான்.

பவித்திரமானதொரு புன்னகையை
சிந்துகிறாய் தரையெங்கும்
மல்லிகைபூக்கள் சிதறுகின்றன...

5. நீ ஆசையாய்
வளர்த்த சிறுரோஜாசெடி
வாடிப்போனது..

துடித்துப்போனாய்
நீ.

உனக்கென புதிதாய்
ஒரு செடி வாங்கி வந்தேன்

சட்டென்று பூத்து
சிரிக்கிறாய்
செடி கண்டவுடன்.

உன் மெல்லிய மனம்
கண்டு,

நீ பெண்ணா இல்லை
பூவா
என்று புரியாமல்
தவிக்க ஆரம்பிக்கிறேன்
நான்.

உயிரிலே கலந்தவள்...




அதிகாலை எனை எழுப்ப
எனக்குப் பிடித்த பாடலை
காதோரம் பாடியபடி
என் தலைகோதுவாயே
அதைவிடவும்...

பிறந்தநாள் பரிசு
என்னவென்று ஆர்வமுடன்
நீ என்விழி நோக்க,
உன் நெற்றியில் ஒற்றைமுத்தம்தந்து
நான் உன்விழி நோக்க,
வெட்கத்தில் என் மார்பில்
புதைந்துகொண்டாயே
அதைவிடவும்...

என் உயிரை நீ
சுமந்தபோது இந்தப்பாதங்கள்
நடக்கவேண்டியது மண்மீது
அல்ல மலர்கள் மீது என்று
அறைமுழுவதும் மல்லிகைப்பூக்களை
பரப்பியிருந்ததைக் கண்டு
ஆனந்த அதிர்ச்சியில் அழுது
என் தோள்சேர்ந்தாயே
அதைவிடவும்...

பலநாட்கள் நம்மை
பிரித்த வெளிநாடு
பயணம் முடிந்து
வீடு வந்தவுடன் ஓடிவந்து
அணைத்துக்கொள்ளாமல்
உன்
மடிசாய்த்து தாலாட்டு பாடினாயே
அன்றுதான் உணர்ந்தேன்
என் தாயுமானவள் நீ என்று.

Monday, October 22, 2007

உயிரிலே கலந்தவன்...



அதிகாலை எழ எத்தனிக்கும்
என்னை உனக்குள் இழுத்து
உயிர்மலர செய்வாயே
அதைவிடவும்...

அரைநாள் தொலைபேசியில்
பேசிவிட்டு வைத்த மறுநொடி
மீண்டும் அழைத்து
குரல்ரசிக்கும் அழைப்பிது
என்று செல்லமாய் துண்டிப்பாயே
அதைவிடவும்...

பெண்மையின் வலியுணரும்
நாட்களில் எனக்கு
முன்விழித்து சூடான
தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
அதைவிடவும்...

குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே..
அன்றுதான் உணர்ந்தேன்
தாயுமானவன் நீ என்று.

Friday, October 19, 2007

உதிர்வதில்லை உதிரப்பூ




மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....

புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?

விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!

மழைபோல் வந்தவளே

முன்பாடல் சுருக்கம்:

மனசுக்குள் காதல் பூத்திருந்தும், இதழ் திறந்து சொல்ல தைரியமில்லை இருவருக்கும். அவர்களின் மனம்பாடும் பாடல் இது.


ஆண்:

மழைபோல் வந்தவளே என் மனசெல்லாம் பூத்தவளே
அலைபோல் வந்தவளே என் இதயக்கடலில் முத்தானவளே

உந்தன் பூவிழி கண்ட அன்று என் தாய்மொழிகூட தடுமாறியதே
உந்தன் தேன்மொழி கேட்கும் அன்று என் தாய்மொழி காதலாகுமே!

காதலின் வலிக்கு மருந்தாக நீ வேண்டுமடி
காலமெல்லாம் பிள்ளையாக நான் மாற, வேண்டுமே உன் மடி!

பெண்:

பூவை என்னை பூவாக மாற்றிய வசீகரன் நீயடா
தேவை உந்தன் பார்வை என்றே இதயம் துடிக்கிறதடா

உன்னை எண்ணி காதலென்னும் இலக்கியம் எழுதுகிறேன்
உன்னைக் காணும்போதெல்லாம் வெட்கத்தில் ஊமையாக மாறுகின்றேன்

என் இதழ் திறக்கும் முன்னே உன் காதல் சொல்வாயா?
காற்றில் உன் காதல்கலந்து என் இதயம் நுழைவாயா?

ஆண்:

நிலா பார்க்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் உன் முகம்
உலா போகும் தென்றலும் உன்பெயர் சொல்லிப் போகும்

நீ இல்லாத வாழ்க்கை மழை இல்லாத பூமியடி
இதழ்திறந்து வார்த்தையொன்று சொல் மழையாவேன் நானடி..

பெண்:

இரவுக்கு இரக்கமில்லை இதழுக்கு ஈரமில்லை
கண்ணுக்கு உறக்கமில்லை கவிதைக்கு வார்த்தையில்லை

கனவெல்லாம் உன்னோடு கைகோர்த்து நடக்கின்றேன்
நினவெல்லாம் உன் நினைவோடு தனியுலகில் வசிக்கின்றேன்

சம்யுக்தை நானாகிவிட்டேன் புரவியேறி வருவாயா?
புரவியற்று வந்தாலும் உன் விரல்பற்றி நடப்பேன் ஓடோடிவருவாயா!

Friday, October 12, 2007

திசைகள்


இருள்கவியும் பொழுதொன்றின்
எதிர்பாரா சந்திப்பில் திகைக்கின்றன
நம் கண்கள்...

தனித்திருந்து
நிறமிழந்துவிட்ட
இரவொன்றை உள்ளுக்குள் சுமந்தபடி
எதிரெதிர் திசைகளில்
நடக்கத்துவங்குகிறோம்
நாம்

Wednesday, October 10, 2007

நிலாநேசம்




இரவின் வெளிச்சத்தை
ரசிக்க உன்னை
அழைக்கிறேன்.

இரவல் வெளிச்சமது
என்று விஞ்ஞானம்
பேசுகிறாய்.

ரசனைக்கும் நிதர்சனத்திற்கும்
இடையே பெருவெளியொன்று
உருவாகி மெளனமாய்
நம்மிடையே வந்தமர்கிறது.

மெளனம் கலைக்க
போராடி தோற்கிறேன்
எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்

நமக்கு தூதாக இயலாமல்
போனதற்காக வருந்தி
கரையத் துவங்குகிறது
நிலா.

Wednesday, September 26, 2007

ஜீவநதி

சாய்வு நாற்காலியில்
மருகிக்கிடக்கிறது
உடல்.

அசைகின்ற தென்னங்கீற்றின்
சங்கீதத்தில் சங்கமிக்கிறது
மனம்.

வாசற்கதவு திறக்கும் சத்தம்கேட்டு
எழ எத்தனித்து முடியாமல்
தளர்கிறது உடல்.

யாராக இருக்கக்கூடும் என்கிற
எண்ணம் வளர்ந்து பெருகி
யாரென்று அறியும்வரை
அடங்காமல் தவிக்கிறது
மனம்.

உடலுக்கும் மனதிற்குமான
இடைவெளி அதிகமானதை
செவிகளில்
உணர்த்துகிறது இதயத்துடிப்பின்
சத்தம்.

முதுமையிலும் தளராமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
உள்ளுக்குள் ஒரு ஜீவநதி.

Tuesday, September 25, 2007

"ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூடம்"





குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்பார்கள்.



தெய்வத்திற்கு தங்கத்தில்

கோவில் அமைத்த

நாடு நம் பாரத நாடு.



ஆனால்,



ஏழை குழந்தைகளுக்கு

படிக்க முழுமையான

வசதிகள் இன்னும்

இல்லாத நாடும் நம்

பாரத நாடே!



குழந்தைகள் பட்டாம்பூச்சிகள் போன்றவர்கள்.
கவலையின்றி வானில் அவர்கள் பறக்க வேண்டும்.

நம்நாட்டில் சிறகுகள் முளைக்கும் முன்பே
உதிர்ந்து போன பட்டாம்பூச்சிகள் ஏராளம்.

இந்நிலை மாறிடல் வேண்டும்.

நாளைய நம்பிக்கை
விருட்சங்கள் குழந்தைகள்.


படிக்க வசதி இல்லாமல்

எத்தனையோ மொட்டுக்கள்

இன்றும் செங்கல் சுமக்கவும்

சாலைகளில் செய்தித்தாள்

விற்கவும்,

உணவுவிடுதிகளில் எடுபிடிகளாகவும்

வாழ்ந்துகொண்டிருப்பதை வேதனையுடன்

பார்க்கிறோம்..


இதற்கு இளைஞர்களாகிய(குறிப்பாக அதிகமாய் சம்பாதிக்கும் நம் போன்ற கணிப்பொறி மென்பொருளாளர்கள்)

என்ன செய்தோம் என்கிற கேள்வி
என்னுள் பலநாட்களாக எழுந்தது.

அதற்கு விடைகொடுத்தது www.helptolive.org என்கிற இணையதளம்.

முழுக்க முழுக்க ஒரு தனிமனிதரின்(இவர் ஒரு கணிப்பொறி மென்பொருளாளர்) முயற்சியால்
உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 400க்கும் அதிகமான தன்னார்வ உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.

கூரையின்றி வாழ
வாழ்க்கை அனுமதிக்கிறது
கூரையின்றி படிக்க
குழந்தைகளை அனுமதிக்கலாமா?


சரியான பள்ளிக்கட்டிடங்கள் இல்லாமல்
தவித்து நிற்கின்றன 260 பிஞ்சுக்குழந்தைகள்.

நாளைய நம்பிக்கைகளுக்கு வாழ்க்கையின்
ஏணிப்படியில் ஏற கைகொடுப்பது நம்போன்ற
இளைஞர்களின் கடமை அல்லவா?

உதவ விருப்பமிருக்கிறது....ஆனால் எப்படி
உதவ என்று தெரியாமல் உதவிச்சிறகுகளை
சுருக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கே
இந்த மடல்.

உதவ வேண்டிய திசையை நான் காண்பித்திருக்கிறேன்
உதவிட முன்வருவீர்களா?

இதைப்பற்றி நண்பர்களுக்கு/தெரிந்தவர்களுக்கு தெரிவியுங்கள்
அதன் மூலமாகவும் உதவிகள் வரலாம்.

இத்தளம்(www.helptolive.org) பற்றி அல்லது பணம் அனுப்புவது பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால் எனக்கு
மடலிடுங்கள்.
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
நிலாரசிகன்.

Monday, September 24, 2007

காலமாற்றம்


அண்ணாந்து பார்த்தேன்
பற்றி எரிந்துகொண்டிருந்தது
பூமி.

Thursday, September 20, 2007

தில்லி To ஆக்ரா

"என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?" ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.

"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "

"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"

என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.

தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்

"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.

தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது

"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.

வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்.