Tuesday, September 14, 2010

மொழிபெயர்ப்புக்கவிதைகள்




1.

அப்போது அவளது வயது
பதினேழு முடிய நான்கு மாதமிருந்தது.
செந்நிற உடலின் வனப்பை
அவள் கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள்.
துலிப் பூக்களால் நிரம்பிய
தோட்டத்தில் அவனை சந்தித்தாள்.
அவன்,
அவளது உடலை ஊடுருவும் பார்வையை
கொண்டிருந்தான்.
தேம்ஸ் நதிக்கரையில் அவனது
விரல் பற்றி நீண்ட தூரம் நடப்பதை போன்றொரு
கனவில் ஆழ்ந்தாள்.
இனி
அவள் உடலெங்கும் துலிப்
பூக்கள் மலரும்.
அவள் மலர்வாள்.

2.
ஜன்னல் வழியே
உள்நுழைந்தவன்
தன்னை சாத்தானின் பிள்ளை
என்றபோது இரவு கவியத்துவங்கியிருந்தது.
படுக்கை அறையின்
ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
என் கடவுளின் வெளியில்
கனவுகள் மரித்தன.
தொலைபேசியின் அலறலும்
பூனையின் கதறலும்
எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
கால்களில் நடுவிலிருந்து
அறையெங்கும் பரவிய
குருதியின் நிறம் கருமை நிறத்திலிருந்தது.
இப்போது அவன்,
மெல்ல வெளியேறிக்கொண்டிருக்கிறான்.

3.
இந்த வலியை யாரிடம்
பகிர்ந்துகொள்வது?
தினம் மாலை தன் பேரனுடன்
வீட்டைக்கடக்கும் கிழவன்
என் வலியை புரிந்துகொள்ளப்போவதில்லை.
சாலையோரம் நிற்கும்
இந்த மரங்களிடமும்
தொலைவில் பொழியும்
மழையிடமும் நான்
இந்த வலியை பகிர்ந்துகொள்ளக்கூடும்.
பின்னொருநாள்
காலம் தின்ற பின்
மழையாக பொழிந்து
மரமாக என் வலிகள் அனைத்தும்
மீண்டும் துளிர்விடக்கூடும்.
ஜூலி!
அப்பொழுதாவது அந்த மரங்களின்
நிழலில் நின்று நீருற்ற
நீ சம்மதிக்கவேண்டும்!

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: இந்த மூன்று கவிதைகளின் தலைப்பில் சிறு மாற்றம்... "மொழி பெயர்ப்புக் கவிதைகள்  வடிவிலான கவிதைகள்" என்பதே அது :)

Tuesday, September 07, 2010

நீங்கள் இறந்து போவீர்கள்



1.
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று சொல்லித்திரிபவனை
சந்தித்தேன்.
தான் காணும் மனிதர்களிடம்
அவன் உதிர்க்கும் மூன்று வார்த்தைகள்
அவை மட்டுமே.
குரூரத்தின் உச்சம் இவனென்றார்கள்.
ஒரு பன்றியை பார்ப்பதுபோல்
அவனை பார்த்து நகர்ந்தார்கள்
எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று முகம் நோக்கி சொல்பவனை
நீங்களும் காணக்கூடும்
வழியிலோ
அல்லது
கண்ணாடியிலோ.


2.மரணித்தல்

நேற்று மரணித்தார்
நண்பர் ஒருவர்.
நான்கு மரணத்தை
ருசித்து வீழ்கிறது அருவி.
கடல் கொண்ட உயிர்கள்
சில.
இறகு உதிர்த்து சாலையோரம்
உயிரற்று கிடக்கிறது
பறவையொன்று
யார் யாருக்கோ
அறியாத காரணங்களுடன்
மரணம் நிகழ்கிறது.
எதற்கிந்த கவிதை எழுதும்
வேலை என்றொரு
கேள்வி எழுப்பப்பட்டது.
இப்போது
காரணமுடன் மரணிக்கிறேன்
நான்.
-நிலாரசிகன்.

குறும்பட போட்டி அறிவிப்பு

இனிய இணைய உறவுகளுக்கு...

குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள்
இங்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

வெற்றி பெற வாழ்த்துகள்.

Sunday, September 05, 2010

சிறுமிகள் நடமாடும் வனம்


 

1.சிறுமிகள் நடமாடும் வனம்


பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரை
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை.
எதற்கிந்த கனவென்றே
புரியாமல் கரைகிறது
இவ்விரவு.

2.எதிர்வினைகளால் நிரம்பியவள்

குளம் கடலாகும்.
கடல் துளியாகும்.
பறவை விலங்கினமாகும்.
விலங்கு பாம்பினமாகும்.
ழ் ல வாகும்.
காதலி தோழியாவாள்.
தோழி குரைக்கும் இனமாவாள்.
நீங்கள் நீயாகிப்போவீர்கள்.
நான் யாரோவாகிப்போவேன்.
அவள்,அவள் உலகம்.
இப்போது,
அவனும் நிரம்பிக்கிடக்கிறான்
மெளனத்தால்.
-நிலாரசிகன்.

Thursday, September 02, 2010

பூச்சரத்தில் கவிதை பூக்களை கோர்க்கும் சிறுவன்



பூச்சரம் தொடுக்க அழைத்த தோழி கீதாவிற்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நிலாரசிகன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால்
    பதிவில்  தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் நிலாரசிகன் அல்ல. 2001ம் ஆண்டு இப்பெயரை தேர்வு செய்தேன். பெயர் வைக்க காரணம் நிலா. வான் நிலா மட்டுமே J


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
2004ல் நண்பன் ‘யோசிப்பவர்’ அறிமுகப்படுத்தியது வலைப்பதிவு. 2005லிருந்து எழுதிவருகிறேன். எழுத வந்த புதிதில் லக்கிலுக்,பாஸ்டன் பாலா,பினாத்தல் சுரேஷ்,பத்ரி,யோசிப்பவர்,பாலபாரதி,டோண்டு போன்றவர்களது வலைப்பதிவுகளை ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம்
   செய்தீர்கள்?
   
 என் வலைப்பதிவின் முதல் வாசகர்கள் என்னுடைய nilaraseegankavithaigal யாகூ குழுமத்தின் உறுப்பினர்கள்தான். இன்றைய விவரப்படி மொத்தம் 5211 உறுப்பினர்கள். இவர்களே வலைப்பதிவு செடியாக இருக்கும் தருணத்தில் நீருற்றியவர்கள். அதன் பிறகு கிடைத்த நட்புச்சொந்தங்கள் ஏராளம். பிரபலமடைய வேறெதுவும் செய்ததாக நினைவில்லை.


5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
    கொண்டதுண்டா?   ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?
    இல்லை என்றால் ஏன்?
இல்லை. விருப்பமில்லை. வலைப்பதிவு என் படைப்புகளுக்கான தளம் மட்டுமே.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?
   அல்லது பதிவுகள்  மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல. மனதின் விளிம்புச்சுவரில் மோதும் கவிதை வரிகள் நிரந்தரமாக தங்குமிடம் என் வலைப்பதிவு.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்?
   அதில் எத்தனை தமிழ் வலைப்  பதிவு?

இரண்டு. இரண்டும் தமிழ். ஆங்கிலத்தில் ஒன்று ஆரம்பித்தேன் அதன் கடவுச்சொல் மறந்துவிட்டதால் நின்றுபோனது.


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா?
   ஆமாம்  என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஆம். அதிக கோபம் கொண்டது ஒரு பதிவர் மீது.மிகச்சிறந்த கவிதைகளை எழுதிய பதிவர் அவர். முட்டாள்த்தனங்கள் ஆட்கொண்டதால் அந்த கவிதை வலைப்பூவை அழித்துப்போனவர்.அவருக்கு புனைப்பெயரும் வைத்து இணைய உலகையும் அறிமுகப்படுத்தியவன் என்கிற வகையில் அவர் மீது கடும் கோபம் இன்றுமுண்டு.
 யாரந்த பதிவர் என்கிற கேள்விக்கு விடையளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்?
   அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

மாதவன். அத்தி பூக்கும் தருணம் மட்டுமே பாராட்டும் குணம் கொண்டவன்.நண்பன்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய
     வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
கூற ஒன்றுமில்லை என் படைப்புகளை தவிர. அவை என் தளத்திற்கு வரும் அன்பர்களுடன் உரையாடட்டும்.
     பூச்சரத்தில்  மேலும்  வாசம் சேர்க்க நான் அழைப்பது நண்பன் விழியன்.

Monday, August 30, 2010

முடிவின் துவக்கப்புள்ளி.


 
பூவொன்றின் மரணத்திற்கான
கடைசி துளி கண்ணீரில்
நானொரு பாடல் எழுதுகிறேன்.
எவருக்கும் புரிந்துவிடாத அப்பாடலின்
வரிகள் செந்நீரில் எழுதுப்படுகின்றன.
காற்றின் காதுகளை அவை
தீண்டும் பின்னிரவில்
சடலங்களை பிரசவிக்கும்
மேகத்துடன் ஆரம்பமாகிறது
ஓர் ஊமையின் உரையாடல்.
-நிலாரசிகன்.

Tuesday, August 03, 2010

நிறமற்ற மழை



1.
உதிர்ந்த முத்தங்களை பொறுக்கும்
நட்சத்திரா தன் கன்னத்தின் சுருக்கங்களை
வருடிக்கொடுக்கிறாள்.
சிதறிக்கிடக்கும் முத்தங்களின் நடுவே
காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை
வலியுடன் நோக்குகிறது அவளது கண்கள்.
தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்.
மெல்ல வலுக்கிறது
நிறமற்ற மழை.

2.
சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில்
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள்
அவர்கள்.
-நிலாரசிகன்.

Sunday, August 01, 2010

நண்பர்கள் தின வாழ்த்துகள்..





வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில்  சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..

கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...
-நிலாரசிகன்.

Thursday, July 22, 2010

முன்னொரு காலத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது




1.
காயத்தின் ஆழத்தில்
ஒரு முகம் மிதந்து கொண்டிருக்கிறது.
புரிதலின் பிழையால் பிரிந்த
இருநிழல்களின் சாயலுடன்
சலனமின்றி மிதக்கிறது அம்முகம்.
அன்பின் கதவுகள் நிரந்தரமாய்
மூடப்படுகின்றன.
எதிர்பார்ப்புகளற்ற இறைக்குள்
நுழைந்து மெளனிக்கிறது மனம்.
வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.
2.
ஒரு
வனத்தினூடாக
துவங்கியது நம் பயணம்.
விழி இழந்தவனின்
கைகள் பற்றி அழைத்துச் சென்றாய்.
வார்த்தைகளில் ஒளியை
உணர்த்தி மகிழ்ந்தாய்.
ஓர் உன்னதமான அரவணைப்பை
பரிசளித்தாய்.
வனம் முடிந்து வெளியேறுகையில்
ஒளி கொண்ட மழையாகியிருந்தேன்.
பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ.
3.
அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.
-நிலாரசிகன்

Saturday, July 17, 2010

சுயம் கவிதையென்று பொருள் கொள்க



1
உணர்ச்சிகள் உறைந்த பூச்செடியொன்று
உயிர்ப்பில்லாத வெண்ணிற
பூக்களுடன் நின்றாடுகிறது.
சாத்தான்களிடமும் வரம் பெற்றவன்
தேவதையின் முதல் சாபத்தை
பெறுகிறேன்.
விளக்கணைத்து அழுகின்ற
துயரத்தின் வலி நிலவு வரை
நீள்கிறது.
சன்னமான குரலில் என்னுடன்
உரையாட துவங்குகிறாள்
கவிதைப்பெண்.

2.
புறக்கணிப்பின் முட்பாதை
என்னை வந்தடைகிறது.
வழியெங்கும் மரித்து கிடக்கின்றன
சிறகிழந்த பட்டாம்பூச்சிகள்.
ஈர்ப்பின் அர்த்தம் அறியாத
பாதங்களில் மிதிபடுகின்றன
விருப்பங்கள் சில.
சுயத்தின் மரண ஊர்வலத்தில்
பூக்கள் தூவிச் செல்கிறாள்
சிறுமியொருத்தி.
சுயம் கவிதையென்று
பொருள் கொள்க.
3.
வாழ்வின் மிகப்பெரும்
தவறை ஒரு சொல்லாக்கினேன்.
எனது பிம்பத்தை தின்று
தீர்த்த அச்சொல் ஒரு வாக்கியமானது.
உடலெங்கும் படர்ந்த
அவ்வாக்கியம்
ஒரு பொய்யாக உருப்பெற்றது.
இப்போது,
பொய்யின் வடிவத்தாலான
கனவுச்சில்லுகளில்
எனக்கான கடைசி விருப்பங்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
-நிலாரசிகன்.

Sunday, July 11, 2010

மழை இரவு

 
ழை ருசித்துக்கொண்டிருக்கும்
விசித்திரமான இரவு இது.
ஒவ்வொரு துளியாய்
மழையின் குருதியை பருகி
திளைக்கிறது இரவு.
இரவின் கண்கள் ஓர்
ஒநாயின் குரூரத்தை கொண்டிருக்கின்றன.
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மெளனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மெளனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.
-நிலாரசிகன்.

Thursday, July 01, 2010

நிச்சலன கவிதைகள்




1.
தீராத பெரும்துயர் கரைந்துருகி
நதியென ஓடுகிறது.
கண்ணீரால் சூழந்திருக்கிறது
என் இரவுத்தீவு.
வார்த்தைகள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்து ஊமையாகும் தருணத்தில்
ஒர் உன்னதமான பாடலை
இவ்விரவு இசைக்க ஆரம்பிக்கிறது.
பவித்திரம் வழியும் இந்த இரவுக்குள்
வந்தமர்கின்றன சில ஊனப் பறவைகள்.
2.
இதென்ன பெரிய விஷயமா
என்கிறீர்கள்.
இதிலென்ன அற்புதமிருக்கிறது
என்று பரிகசிக்கிறீர்கள்.
இவ்வளவு முட்டாள்த்தனங்கள்
ஏனென்று வினவுகிறீர்கள்.
என் சின்னஞ்சிறு உலகிற்குள்
சத்தமின்றி பறந்துகொண்டிருக்கின்ற
பட்டாம்பூச்சிகளின் பின்னால் ஓடுகிறேன்
நான்.

3.
இளவேனில் பூக்களால் பின்னப்பட்ட
என் கனவுகளை உனக்கு பரிசளிக்கிறேன்.
மழையின் குதூகலத்துடன் பெற்றுக்கொள்வாய்
என்றிருந்தேன்.
கோடரியுடன் வருகின்ற உன்னைக் கண்டு
மரித்து விழுகின்றன பூக்கள்.
கவிதைகளின் மரணமும்
இப்படித்தான் நிகழ்ந்தது.
மழையை தின்னத்துவங்குகிறது
செங்குருதி வெயில்.
4.
புத்தனுக்கும் உனக்குமிடையே
யுத்தமொன்று நிகழ்கிறது.
முடிவில்
வீழ்கிறது போதிமரம்.
நிச்சலன குளத்தில் கற்களை
எறிந்தபடி அமர்ந்திருக்கிறாய்
உனது வாக்குவாதங்கள் ஒவ்வொன்றாய்
கற்களாக உரு மாறுகிறது.
கொஞ்சம் அழுதுவிட்டு
சிலுவை சுமந்தபடி நடக்கிறாய்
நீ.
5.
கூரிய பற்களின் ஓரங்களில்
என் குருதி படிந்திருக்கிறது.
புசித்த களைப்பில் நிஜம்
உதிர்க்கிறாய்.
காமத்தின் துவக்கப்புள்ளி
பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
சாம்பலென உதிர்கிறேன்.
சர்ப்பவாசம் அறைக்குள் ஊடுருவும்
தருணம்
நேசத்தின் முகமூடி அணிந்து
வெளியேறுகிறாய்,
விஷம் தோய்ந்த வார்த்தைகளை
வீதியெங்கும் சிதறவிட்டபடி.
-நிலாரசிகன்.

Monday, June 21, 2010

இரு சந்தோஷங்கள்

1.உரையாடல் அமைப்பு நடத்திய கவிதை போட்டியில் என்னுடைய "கோணவாயன் கதை" கவிதை பரிசுபெற்றிருக்கிறது. இக்கவிதை எழுதியபோது உடன் பதிலிட்டு/விமர்சித்து மெருகேற்றிய விபாகை அண்ணனுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்.

சிவராமன்,ஜ்யோவ்ராம் சுந்தர் இருவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி பெற்ற அனைத்து சக படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துகள்.

2. இவ்வார கல்கியில்(27-ஜூன்- 2010) என்னுடைய இரண்டு கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.

கவிதைகளுக்கான என் பயணத்தில் எப்போதும் உடனிருக்கும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும்,நிறம்மாறாத புன்னகையும் எப்போதும்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, June 14, 2010

ஒரு விமர்சனம் மற்றும் சில கவிதைகள்


என்  "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" சிறுகதை நூலிற்கு விஜய் மகேந்திரன் எழுதிய விமர்சனம்:


http://vijaymahendran.blogspot.com/2010/06/blog-post_14.html

-------------------------------------------------------------------------------------------------------
கவிதைகள் மூன்று:



1.உயிர்மிருகம்
மொழி மரணித்த இரவொன்றின்
தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன
சில ஞாபகங்கள்.
இருத்தல் தொலைந்த அவமானத்தில்
உடைகிறது தேநீர்க்கோப்பை.
சிறகறுந்த பறவைகளின் குருதி
மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.
காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது
இந்த உயிர்மிருகம்.

2. துர்தேவதையின் நடனத்தில் தொலைந்தவன்
மழைத்துளியொன்றை ஏந்தி வந்தாள்
கருமை நிற தேவதை.
அத்துளி பேருருவம் பெற்று
ஒரு மாளிகையான தருணம்
சிறுவனாகியிருந்தேன்.
கண்கள் மின்ன என்னை
மாளிகையின் உள்ளிழுத்துக்கொண்டாள்.
புற உலகிற்கான கதவு மூடப்பட்டது.
நீண்டதொரு மயக்கத்திலிருந்து
விடுபட்ட கணம்
என்னுலகம் களவாடப்பட்டிருந்தது.
ஈக்கள் மொய்க்கும் புன்னகையுடன்
நடனமிடுகிறாள் கருமை நிற
வதை.


3. இப்படித்தான் நீங்கள்..

அனுமதியின்றி உள்நுழைந்தீர்கள்.
சத்தியங்களை பொய்யாக்கினீர்கள்.
நண்பர்களிடையே திரை அமைத்தீர்கள்.
வேடமிட்டு அற்புதமாய் நடித்தீர்கள்.
தகித்தபோது வெந்நீர் ஊற்றினீர்கள்.
இல்லாத சோகத்தை அரங்கேற்றினீர்கள்.
தூக்கி எறிந்ததாய் பொய்யுரைத்தீர்கள்.
என் நண்பர்களின் நட்பானீர்கள்.
நிலவில் எச்சில் உமிழ்வதாய்
வானம் பார்த்து உமிழ்ந்தீர்கள்.
இப்படியான நீங்கள்
இப்போது,
கடவுளின் பிள்ளை என்கிறீர்கள்.
இப்படித்தான் நீங்கள்
என் மனவெளியின்
பட்டாம்பூச்சியாயிருந்து
மெல்ல மெல்ல புழுவாக
உருப்பெற்றீர்கள் என்பதை அறிவீர்களாக!
- நிலாரசிகன்.

Monday, June 07, 2010

நிழலாள்

நிழல்களில் நடக்கும் விளையாட்டை
ஆரம்பித்து வைத்தாள் தர்ஷிணி.
ஒவ்வொரு நிழலாக தாவிக்குதித்து
கடந்து செல்வாள்.
பன்னீர்ப்பூவொன்று குதித்து செல்வதை
போலிருக்கும் அவளது செயல்.
இன்று
நிழலற்ற தெருவில்
தனியே நடக்கிறாள்.
அவள் இல்லாத தெருவில்
நிழல்களே இல்லை
இப்போது.

- நிலாரசிகன்

Thursday, June 03, 2010

இடைவெளி


காற்றுப்புகாத கண்ணாடிச்சுவரின்
மறுபக்கத்தில்
கண்கள் மூடி அமர்ந்திருக்கிறார்
அவர்.

ஓர் இலையை இழுத்துக்கொண்டு
மரமேறிக்கொண்டிருக்கிறது
கட்டெறும்பு.

இறைக்கும் இயற்கைக்கும்
நடுவே
தங்கள் நிழலுடன் யுத்தமிட்டு
சரிகிறார்கள்
இந்த வழிப்போக்கர்கள்.

- நிலாரசிகன்.

Tuesday, June 01, 2010

பறவை வேடமிட்ட புல்லுருவி


1.
கடற்கரை மணலில்
சிப்பிகள் பொறுக்கும் சிறுமியாக
தோற்றமளித்து
பின்,
மழை ரசிக்கும் தேவதையின்
சாயலைக்கொண்டிருந்து
எதிர்பாரா கணத்தில்
நெருப்பை உமிழும் டிராகனாக
உருப்பெற்றது புல்லுருவியொன்று.
முரண்பாடுகளை கவ்விக்கொண்டு
தேசமெங்கும் பறந்து தீர்த்தது.
ஆத்மார்த்தமான நட்புக்குள்
எச்சமிட்டு உன்மத்த நிலையில்
உயரப்பறக்கிறது இப்போது.

2.
எனது சந்தோஷத்தின் சாவியை
திருடித் தொலைத்துவிட்டு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
முன் தோன்றுகிறாய்.
கற்களாலான துர்தேவதைகளின்
மடியில் துயில்வது
உனக்கு பிடித்தமானதாக இருக்கிறது.
எதிரிகளின் கூடாரமெங்கும்
உன் பெயரை ஒலிக்கச்செய்கிறாய்..
முடிவில்,
ஒன்று மறந்தாய்..
மழை தின்ற வெயிலுடன்
நடக்கிறது உன் யுத்தம்.

- நிலாரசிகன்.