Friday, June 05, 2009

எழுத்தில்லா இசை + சிதறல்கள்




மனதெங்கும் வியாபித்திருக்கிறது இனம்புரியாத ஓர் உணர்வு. அடர்குளிரில் போர்வைக்குள்ளிருந்தபடியே மனதிற்கு பிடித்த இசையை கேட்டுக்கொண்டிருக்கிறேன். கனத்த மெளனங்களில் உறைந்துவிடும்போதெல்லாம் இசைதான் என்னை மீட்டெடுக்கிறது.பாடல்களைவிட புல்லாங்குழலின் இசையை அதிகம் விரும்புகிறது மனசு.
எழுத்தில்லா இசை என்னவோ செய்கிறது.பின்னிரவில் யாருமற்ற தனிமையில் கசிகின்ற இசையை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான்.

***********************

ஏழாவது மாடியில் இருக்கிறது என் அறை. கண்ணாடி சன்னல்கள் நிறைந்த விசாலமான அறை. சன்னல்வழியே தூரத்து வான் ரசிக்கும் தருணங்கள் அற்புதமானவை. என் அறைக்கு அருகில் உயர்ந்த விருட்சம் ஒன்று நிமிர்ந்து நிற்கிறது. அந்த மரத்தில் தினமும் ஒரு ஜோடி பெயர்தெரியா பறவைகளை காண்கிறேன். விசித்திரமானதொரு ஒலியை எழுப்பியபடி கிளைவிட்டு கிளை பறந்துகொண்டிருக்கும் அதன் சிறகில் ஒரு நாளேனும் பயணிக்க விருப்பம். நேற்று பெய்த அடைமழைக்கு பின் அந்த பறவைகளை பார்க்க முடியவில்லை. சிலநேரங்களில் மழையும் வெறுப்புக்குள்ளாகிவிடுகிறது.பிடித்த பொம்மையை தூர எறியும் குழந்தைபோல.

***********************
இன்று படித்ததில் பிடித்த கவிதை:

The Eagle

He clasps the crag with crooked hands;
Close to the sun in lonely lands,
Ring’d with the azure world, he stands.

The wrinkled sea beneath him crawls;
He watches from his mountain walls,
And like a thunderbolt he falls.

Alfred, Lord Tennyson

***********************

பல வருடங்கள் கழித்து பால்ய நண்பனொருவனை இணைய அரட்டையில் சந்தித்தேன். காலத்தின் மாற்றத்தில்
வெகுவாய் மாறியிருந்தான். நொடிக்கொரு முறை ஷிட்டும்,நான்கெழுத்து ஆங்கில "எப்" கெட்டவார்த்தையும்
சரளமாய் வந்துவிழுந்தன.சிறு வயதில் ஒழுங்காய் வரட்டி தட்ட தெரியவில்லை என்று அவன் அம்மா அடித்த அடிகளை நினைவுகூர்ந்தேன். புல்ஷிட் என்றான். மாட்டுச்சாணம் நிறைந்த பால்யத்தை மறந்துவிடாத அவன்
நல்ல மனம் கண்டு சிரித்துக்கொண்டேன்.

*************************

என் வலைப்பூவை தொடரும் மனங்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி இருக்கிறது.நூறு பேருக்கும் தனித்தனியாக பதிவிட்டு நன்றி சொல்ல விருப்பம்தான் அப்படி சொன்னால் 100 பூஜ்ஜியமாக மாறிவிடும் வாய்ப்பிருப்பதால் "அனைவருக்கும் நன்றி" என்கிற இருவார்த்தைகளோடு இந்த பதிவையும் முடித்துவிடுகிறேன்.

Wednesday, June 03, 2009

வீடு

வீட்டை சுற்றிலும் புல்வெளியும்
குரோட்டன் செடிகளும் நிறைந்திருப்பதை
சுற்றிக்காட்டி வீட்டின் பெருமையை
எடுத்துரைத்தபடி
வீட்டினுள் அழைத்து சென்றார்
தரகர்.
தேக்கு மரத்தாலான கதவுகளும்
சன்னல்களும்,
பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட‌
தரைகளும் இந்தவீட்டின்
சிறப்பு அம்சங்கள் என்றார்.
வீட்டிற்கு பின்னாலிருந்த‌
கிணற்றடியையும் வாதுமை
மரத்தையும் காணவில்லையே
என்கிற‌ ஏக்க‌த்தில்
ஒரு நிமிட‌ம் என் பால்ய‌த்திற்குள்
நுழைந்து திரும்பினேன்

Friday, May 29, 2009

உதிர்வதில்லை உதிரப்பூ - மீள்பதிவு

மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....

புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?

மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?

விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!

Monday, May 25, 2009

உன் மெளனங்கள்



காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூக‌லத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த‌
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன‌
என் கல்லறைக்கான
செங்கல்கள்.

Sunday, May 24, 2009

மணல் வீடு சிற்றிதழ்

சிற்றிதழ் பரப்பில் சிறந்து விளங்கும் மணல்வீடு சிற்றிதழ் இணைய உலகிலும் தடம்
பதிக்கிறது.


மு.ஹரிகிருஷ்ணனின் சொல்கதைகள் தனித்துவமானவை.குறிப்பாக அவரது மயில்ராவணன் சிறுகதை தொகுப்பு தமிழ் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மிகச்சிறந்த படைப்புகளுடன் வலம் வரும் மணல்வீடு இலக்கிய ஆர்வலர்களின் தமிழ்ப்பசிக்கு
விருந்தாக இருக்கிறது. படித்து மகிழ இங்கே சொடுக்குங்கள்.

http://manalveedu.blogspot.com/

Thursday, May 21, 2009

ஒரு கிருமியின் கதை - [சிறுகதை போட்டிக்காக]



1.
வருடம்: 1929

பாரதியின் அறைக்குள் சோகம் அப்பிய முகத்துடன் நுழைந்தான் இளங்கோ.ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பாரதியை எழுப்ப மனமில்லாமல் அருகிலிருந்த நாற்காலியில் சோர்வுடன் விழுந்தான். கண்களிலிருந்து நிற்காமல் வழிந்துகொண்டிருந்தது கண்ணீர்.பாரதியிடம் தான் அழுகின்ற காரணத்தை சொன்னால் எப்படி தாங்குவான் என்று நினைக்க நினைக்க மெளனக்கண்ணீர் பெரும் விசும்பலாய் உருவெடுத்தது. உறக்கம் கலைந்த பாரதி தன் அறையில் அழுதுகொண்டிருக்கும் இளங்கோவை ஆச்சர்யத்துடனும் கேள்விக்குறியுடன் பார்த்தான்.

"இளங்கோ,என்னுயிர்த் தோழனே ஏனிந்த கண்ணீர்?"

"பாரதி,செவ்வாயில் இருந்து வந்திருக்கும் இந்த செய்தியை பார்" கையடக்க கணிப்பொறியில் சிகப்பு நிற எழுத்தில் மின்னிக்கொண்டிருந்த வரிகளை படிக்க ஆரம்பித்தான் பாரதி.

"இன்னும் எண்பது ஆண்டுகளில் எம்.ஆர்.வி எனும் படுபயங்கர கிருமியால் பூமி பேரழிவை சந்திக்கும்.முடிந்தால் அதை தடுத்து நிறுத்துங்கள்"

பாரதியின் மீசை துடிதுடித்தது.கண்கள் கோபத்தில் ரத்தச்சிவப்பாக மாறியது.

"இளங்கோ,இந்தக்கிருமியை எப்படி அழிப்பது? இந்தக் கிருமியின் நதிமூலம் என்னவென்று உடனே கண்டுபிடிக்க வேண்டும்,செவ்வாய்க்கு போய் வரலாமா?"

"உன் கோவம் எனக்கு புரிகிறது பாரதி.இந்தக் கிருமியை தயாரிக்கப்போகும் நபர்களை நாம் கண்டுபிடித்துவிட்டால் முடிந்தது வேலை.செவ்வாய்க்கு போவதற்கு என் இயந்திரத்தில் எரிபொருள் இல்லை.நேற்றுதானே நாம் ஜூப்பிட்டரிலிருந்து வந்தோம்? இப்பொழுதெல்லாம் எரிபொருளின் விலையை நினைத்தாலே தலைசுற்றுகிறது. உன்னிடம் பணம் இருக்கிறதா?"

"உனக்குத்தான் என்னைப் பற்றி தெரியுமே கிடைக்கின்ற பணத்திலெல்லாம் மின்புத்தகம் வாங்கிவிடுவேன்.நேற்று இருபது புத்தக‌ங்கள் வாங்கிவிட்டேன்.பணம் ஒரு பெரியவிஷயமல்ல கடன் வாங்கியாவது எரிபொருள் வாங்கிவிட முடியும்.ஆனால் அந்தக்கிருமியை தயாரிப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது இளங்?"

"வா இணையத்தில் தேடுவோம்" இருவரும் கணிப்பொறி முன் அமர்ந்தார்கள். ச‌ற்று தூர‌த்தில் க‌ட‌ற்க‌ரையில் சிறுவ‌ர்க‌ள் கால்ப‌ந்து விளையாடிக்கொண்டிருக்கும் ச‌த்த‌ம் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே கேட்ட‌து.

2.

க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லில் கால்க‌ள் புதைய‌ ந‌ட‌ப்ப‌து ச‌ம‌ராவிற்கு மிக‌வும் பிடிக்கும். அதுவும் ஆல்வினுடைய‌ தோள்க‌ளில் சாய்ந்து கொண்டே க‌ட‌ல் ர‌சிப்ப‌தில் த‌ன்னை ம‌ற‌ந்துபோவாள் ச‌ம‌ரா. விர‌ல்கோர்த்து ந‌ட‌ந்த‌ப‌டியே மெதுவாய் ச‌ம‌ராவிட‌ம் பேச‌ ஆர‌ம்பித்தான் ஆல்வின்.

"ச‌மரா,உன்னை போன்ற அற்புதமான‌ மனைவியும் அதோ மணலில் விளையாடும் நம்மிரு குழந்தைகளும்தான் என் உலகம்"

"இப்போது இப்ப‌டி சொல்வீர்க‌ள் வீட்டை விட்டு வெளியே போய்விட்டால் என் தேச‌ம் என் ம‌க்க‌ள் என்று பேச‌ ஆர‌ம்பித்துவிடுவீர்க‌ள்" செல்ல‌மாக‌ கோபித்தாள்.

"ச‌ரி அதைவிடு. இப்போது உன‌க்கு ஏதாவ‌து ப‌ரிச‌ளிக்க‌ விரும்புகிறேன். என்ன‌ வேண்டும் சொல் க‌ண்ம‌ணி" காத‌லுட‌ன் கேட்டான் ஆல்வின்.

"எப்போதும் என்னை காத‌லித்துக்கொண்டே இருங்க‌ள் அதுபோதும்" அலையென‌ சிரித்தாள் ச‌ம‌ரா.

"உன‌க்கு காத‌ல்ப‌ரிசை இன்றிர‌வு த‌ருகிறேன்" க‌ண்ண‌டித்தான் ஆல்வின்.வெட்க‌த்தில் சிவ‌ந்தார்க‌ள் ச‌மராவும் அந்திவான‌மும்.

3.

இர‌வு இர‌ண்டு ம‌ணிக்கு க‌த‌வு த‌ட்டும் ச‌த்த‌ம் கேட்ட‌து. அழைப்புமணியை அழுத்தாம‌ல் க‌த‌வை த‌ட்டினால் அது பார‌தியாக‌ ம‌ட்டும்தான் இருக்குமென்று இள‌ங்கோவிற்கு தெரியும். ஓடிச்சென்று க‌த‌வை திற‌ந்தான்.
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு இடியென‌ சிரித்தான் பார‌தி. இள‌ங்கோவை இறுக‌ க‌ட்டிப்பிடித்துக்கொண்டான்.

"என்ன‌ பார‌தி இந்த‌ நேர‌த்தில்? என்ன‌ விஷ‌ய‌ம்? ஏனிந்த‌ ச‌ந்தோஷ‌ம்?"

"இள‌ங்கோ இருப‌து நாட்க‌ள் க‌டுமையாக‌ உழைத்த‌ ந‌ம‌க்கு இன்று ந‌ல்ல ப‌ல‌ன் கிடைத்திருக்கிற‌து.அந்த‌ கிருமியை உற்ப‌த்தி செய்யும் ந‌ப‌ர்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டேன்.வா உட‌னே புற‌ப்ப‌டுவோம்"

"எப்ப‌டி க‌ண்டுபிடித்தாய் பார‌தி? நேற்று இர‌வுகூட‌ ந‌ம்மால் க‌ண்டுபிடிக்க‌ இய‌ல‌வில்லையே?"

"அத‌ற்கும் ஒரு நிர‌லை ஈகிள் தேட‌லில் க‌ண்டுகொண்டேன்.அதாவ‌து பேர‌ழிவை உருவாக்கும் ச‌க்திக‌ளை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்கான‌ நிர‌ல்.எவ்வ‌ள‌வு முன்னேறி இருக்கிறோம் பார்த்தாயா இள‌ங்கோ? இந்த விஞ்ஞான‌ நூற்றாண்டில் பிற‌ந்த‌த‌ற்காக‌ பெருமை கொள் ந‌ண்பா"

"க‌ண்டிப்பாக‌ பெருமை கொள்கிறேன் பார‌தி.இந்த‌ விஞ்ஞான‌ யுக‌த்திலும் பிற‌மொழி க‌ல‌ப்பில்லாம‌ல் கற்றுத்த‌ருகின்ற‌ ந‌ம் க‌ல்விமுறையும்..இய‌ந்திர‌ ம‌னித‌ர்க‌ள் ந‌ம்மீது காண்பிக்கும் அன்பும் என்னை ஆச்ச‌ர்ய‌த்தில் ஆழ்த்துகிற‌து"

"ச‌ரி இள‌ங்கோ விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம். ந‌ம் நாட்டிற்கு தெற்கே வ‌சித்துவ‌ருகிறார்க‌ள் அந்த‌க்கிருமியை உருவாக்க‌ இருப்ப‌வ‌ர்க‌ள்.அதாவ‌து அவ‌ர்களின் மூளைக்குள் இன்னும் 16 ஆண்டு க‌ழித்துதான் அந்த‌ குரூர‌ திட்ட‌ம் உருவாகும். உன் கால‌ய‌ந்திர‌த்தை உட‌னே தயார் செய். நாம் நாளை 1945ம் ஆண்டிற்குள் நுழைய‌ப்போகிறோம்"

"அப்ப‌டியெனில் ஏன் இன்னும் எண்ப‌து ஆண்டுக‌ள் க‌ழித்து அந்த‌க்கிருமியை ப‌ர‌வ‌ விட‌வேண்டும்? என‌க்கு புரிய‌வில்லையே பார‌தி. செவ்வாயிலிருந்து வ‌ந்த‌ செய்தி80 ஆண்டுக‌ள் க‌ழித்துதானே உல‌க‌ம் பேர‌ழிவை ச‌ந்திக்க போகிற‌து என்ற‌து?" குழ‌ப்ப‌த்துட‌ன் கேட்டான் இள‌ங்கோ.

"சில‌ கிருமிக‌ள் உட‌னே ப‌ர‌வ‌ ஆர‌ம்பித்துவிடாது ந‌ண்பா.சில‌ கால‌ம் எடுக்கும்.கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் ப‌ர‌வி பின்ன‌ரே அத‌ன் உக்கிர‌ம் உல‌கை உலுக்கும்,நாம் முந்திக்கொள்ள‌ வேண்டும்.ம‌ற்ற‌வை நாளை பேச‌லாம்.நிம்ம‌தியாய் உற‌ங்கு" க‌ட‌க‌ட‌வென்று பேசிவிட்டு போய்விட்டான் பார‌தி. தூர‌த்தில் கூகையொன்றின் கொடூர‌ ச‌ப்த‌ம் கேட்ட‌து.

4.

அலுவ‌ல‌க‌ம் முடிந்து வீடு திரும்பிய‌ ஆல்வினை ஓடிவ‌ந்து க‌ட்டிக்கொண்டாள் ச‌ம‌ரா.

"என்ன‌ ச‌ம‌ரா என்ன‌ விஷ‌ய‌ம் ஏனிந்த‌ ஆன‌ந்த‌க்க‌ளிப்பு?" ஆர்வ‌முட‌ன் கேட்டான் ஆல்வின்.

"நீங்க‌ள் மூன்றாவது முறையாக‌ அப்பாவாக‌ போகிறீர்க‌ள்"

"க‌ண்ம‌ணி! ந‌ல்ல‌தொரு விஷ‌ய‌த்தை ப‌கிர்ந்தாய்"

இருவ‌ரும் ம‌கிழ்ச்சியில் திளைத்திருக்கும்போது வீட்டுக் க‌ண்ணாடி ஜ‌ன்ன‌லில் இரு க‌ண்க‌ள் அசையாம‌ல்
இவ‌ர்க‌ளையே பார்த்துக்கொண்டிருந்த‌து.

"ச‌ம‌ரா இந்த‌ ந‌ல்ல‌ செய்தியை நாம் கொண்டாட‌ வேண்டும்.பிற‌க்க‌போகும் ந‌ம்பிள்ளைக்கு என்ன‌ பெய‌ர் வைக்க‌லாம்"

"உங்க‌ள் காதில்தான் அந்த‌ பெய‌ரை சொல்வேன்" காத‌லோடு அவ‌ன் செவிக‌ளில் உச்ச‌ரிக்கும்போதுதான் ஜ‌ன்ன‌லில் யாரோ நிற்ப‌து தெரிந்து அல‌றி ம‌ய‌ங்கி விழுந்தாள்.

அவ‌ள் அல‌ற‌ல் ச‌த்த‌ம் கேட்டு ஆல்வின் வீட்டு காவ‌லாளிக‌ள் ஓடிவ‌ந்த‌ன‌ர்.ஜ‌ன்ன‌லை நோக்கி கைகாட்டிவிட்டு ச‌ம‌ராவை எழுப்ப‌ முய‌ற்சித்தான் ஆல்வின்.

5.

இள‌ங்கோவிற்கு இட‌து காலில் ப‌லத்த‌ அடி. நொண்டிக்கொண்டே கால‌ய‌ந்திர‌ம் வ‌ந்துசேர்ந்தான்.பார‌திக்கு புரிந்துவிட்ட‌து.இள‌ங்கோவை ய‌ந்திர‌த்தின் ர‌க‌சிய‌ அறையில் ஓய்வெடுக்க‌ செய்துவிட்டு சினத்துடன் வெளியேறினான்.விறுவிறுவென்று அந்த மாளிகையை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
கட‌ற்க‌ரையோர‌ அந்த‌ பெரும் மாளிகையை விட்டு பார‌தி வெளியேறும்போது அந்த இடமே மயான அமைதி கொண்டிருந்தது.கால‌ய‌ந்திர‌த்தில் அரைம‌ய‌க்க‌ நிலையிலிருந்தான் இள‌ங்கோ. பார‌தியைக்க‌ண்ட‌வுட‌ன் ச‌ந்தோஷ‌த்தில் மெல்லிய‌தாய் கேட்டான் "முடிந்த‌தா பார‌தி?"

"எம‌னை ச‌ந்தித்திருப்பார்க‌ள் இந்நேர‌ம்" சொல்லிவிட்டு சத்த‌மிட்டு சிரித்தான் பார‌தி.கால‌ய‌ந்திர‌ம் அவ‌ர்க‌ள‌து கால‌த்திற்குள் நுழைந்துகொண்டிருந்த‌து.

6.

ச‌ம‌ராவிற்கு ம‌ய‌க்க‌ம் தெளிந்த‌போது கையிலிருந்து ர‌த்த‌ம் வ‌ழிந்துகொண்டிருந்த‌து. அருகே காவலாளிகளின் பிணக்குவியல். சற்று தூரத்தில் ரத்த வெள்ளத்தில் கிட‌ந்தான் ஆல்வின். மெல்ல‌ த‌வ‌ழ்ந்து அவ‌ன‌ருகே சென்றாள். அவ‌ன் நெஞ்சில் விழுந்து அழுதாள். அவ‌ன் இதயம் துடிக்கும் சப்தம் கேட்டு வியந்து அவனை உலுப்பினாள். முனகலுடன் கண்களைத் திறந்தான் ஆல்வின்.

7.
பத்து மாத‌ம் க‌ழித்து,

தொட்டிலில் கால்க‌ளை ஆட்டிக்கொண்டு ப‌டுத்திருந்த‌து அந்த‌க்குழ‌ந்தை.
ஆல்வினும்,ச‌ம‌ராவும் குழ‌ந்தையின் செவியில் ஒருசேர‌ அந்த‌ப்பெய‌ரை உச்ச‌ரித்தார்க‌ள்

"ம‌ஹிந்தா ராஜ‌ப‌க்ஷே"

‍‍-முற்றும்-

[உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]

- நிலாரசிகன்.

படித்ததில் பிடித்தது

http://lovelythoughtz.blogspot.com/2009/05/quotes-on-sachin-tendulkar.html

Monday, May 18, 2009

இட்சி த கில்லர்



வன்மமும் குரூரமும் நிறைந்தது மனித மனம். பிற உயிர்களை வதைத்து மகிழ்கின்ற மனமில்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை.தட்டானின் சிறகுகளை பிய்த்து ஆனந்தப்படாத பால்யத்தை நாம் கண்டதில்லையா? டிரெயின் பூச்சிகளை தேடித்தேடி மண்ணோடு மண்ணாக மிதித்து கொன்றதில்லையா? ஓணானை பார்த்த‌வுட‌ன் க‌ல்லெறிய‌த்தானே தோன்றுகிற‌து இன்ன‌மும்? பிற‌ உயிர்க‌ளை வ‌தைப்ப‌தை பாவ‌ம் என்று உண‌ரும் முன்ன‌ரே நாம் வ‌தைப‌டுதலின் ஆன‌ந்த‌த்தை அனுப‌வித்திருக்கிறோம். ஓராயிரம் ஹிட்ல‌ர்களும்,இடி அமீன்களும் திரிந்துகொண்டிருக்கும் இட‌ம் ந‌ம் ம‌ன‌ம். காலத்தின் மாற்றத்திலும்,படித்து தெளிந்த பண்பாலும் நமக்குள்ளிருக்கும் மிருகபுத்தி உறங்கிவிடுகிறது. சிலருக்கு அது உறங்கமறுப்பதில்லை.ராவணன் வாழ்ந்த பூமியில் இப்போது ஒருவனுக்கு அந்த மிருகபுத்தி தாண்டவமாடிக்கொண்டிருப்பதை போல்.

இட்சி த கில்லர் எனும் இந்த ஜப்பானிய திரைப்படத்தை பற்றி இருவரிகள் மட்டும் சொல்லத்தோன்றுகிறது.

1.குரூர மனதின் வெளிப்பாடு
2.வன்மத்தின் உச்சம்

உறைய வைத்த காட்சி:

ஒரு பெண்ணை அடித்து துன்புறுத்தி புணர்ச்சியில் ஈடுபடுகிறான் ஒருவன். முகமெல்லாம் வீங்கி இரத்தம் வழிய‌
மற்றொருவனிடம் புலம்புகிறாள் அவள். கவலைப்படாதே அவனை நான் கொல்கிறேன் என்கிறான் இவன்(இட்சி). சொன்னதைப்போலவே அவனைக் கொன்றும் விடுகிறான். நன்றியோடு பார்க்கிறாள் அவள். "இனி உன்னை நான் அடிக்கலாம்" என்கிறான் இட்சி. மனதெங்கும் நிறைந்திருக்கும் குரூரத்திற்கு இந்த ஒரு காட்சி போதும்.


இளகிய மனம் கொண்டவர்கள் இந்தப்படத்தை தவிர்த்தல் நலம். "என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோம்" எனும் தைரியசாலிகள் பார்த்துவிடல் நலம். :)


சுட்டி:

http://www.youtube.com/watch?feature=related&v=wgrvIVSHhI8

Wednesday, May 13, 2009

அரூபவதனி






யாருமற்ற பின்னிரவில்
கசிகின்ற விழியுடன்
என்னிட‌ம் சரணடைவாள்.
மடியில் முகம்புதைத்து
விசும்புகின்ற
அவளின்
கருங்கூந்தல் இருண்ட‌
முகிலை ஒத்திருக்கும்.
வெண்ணிறத்தில் மெல்லியதொரு
ஆடை
அவள் மேனியெங்கும்
நதியென தவழ்ந்தோடும்.
தளர்ந்த விரல்களால்
என் தலைகோதி,
தகிக்குமவள் முலைகளில்
எனை மூழ்கிடச் செய்திடுவாள்.
கண்ணீரின் காரணத்தை
கடைசிவரை சொல்லாமல்
காற்றோடு கரைந்து
ம‌றைந்திடுவாள்.
விடியலில் மனமெங்கும்
வியாபித்திருப்பாள்
முகம்மட்டும் மறைத்தபடி.

Monday, May 11, 2009

மை லிட்டில் ஏலியன் பிரண்ட் - நூல்விமர்சனம்.





புகழ்பெற்ற அமெரிக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவரான Chindli Fosterன் சமீபத்திய நாவல் "மை லிட்டில் ஏலியன் பிரண்ட்". நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய
"Sleeping with an alien"
ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. இந்த புதிய நாவல் வெளிவருகின்ற தேதி அறிவிக்கப்பட்டவுடன் அமெரிக்கா மற்றுமின்றி உலகம் முழுவதும் வாசகர்கள் ஆர்வமுடன் காத்துக்கிடந்தனர்.
நேற்று மாலை நான்கு மணிக்கு வெளியிடப்பட்டது. இணையத்தில் பதிவு செய்து வைத்திருந்ததால் பதிவு எண்ணை சொல்லி நான்கு முப்பதுக்கு வாங்கிவிட்டேன். மொத்தம் 400 பக்கங்கள். அருகிலிருந்த பூங்காவில் அமர்ந்து முதல் பத்து பக்கங்கள் வாசித்திருப்பேன். அதற்கு மேலும் தொடர்ந்து வாசித்தால் இரவு முழுவதும் பூங்காவில்தான் இருக்கவேண்டும் என்பதால் உடனே வீட்டிற்கு வந்து வாசிக்க ஆரம்பித்தேன். இன்று காலை ஏழு மணிக்கு வாசித்து முடிக்கும்போது மனதெங்கும் வியாபித்திருந்தார்கள் "கேனோ"வும் "ஜூலி"யும்.

ஏழுவயது சிறுமி ஜூலியின் தாய் ஒரு கார் விபத்தில் இறந்துவிடுகிறாள். ஜூலியின் அப்பா வில்லியம்ஸ் ஒரு கிராமத்தில் தன் மகளுடன் வசித்து வருகிறார். அது ஒரு பண்ணை வீடு. வீட்டைச் சுற்றிலும் பச்சைப்பசேல் என புல்வெளி. அதில் மேய்ந்துகொண்டிருக்கும் சில குதிரைகள். பெரிய வீட்டில் தன் அப்பாவுடன் வசிக்கும் ஜூலிக்கு சிறுவயது முதலே எதிலும் பயம் கிடையாது. வில்லியம்ஸ் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க தூரத்திலிருக்கும் சந்தைக்கு சென்றுவிடும் போதெல்லாம் தனியாக இருப்பாள் ஜூலி. அவர்கள் வளர்க்கும் குதிரைகளும்,பசுமாடுகளும் மெல்லியதாய் ஒலியெழுப்பிக்கொண்டிருக்கும். ஜூலியின் வீட்டின் அருகில் வேறு வீடுகள் கிடையாது.ஜூலியுடன் விளையாட ஒரு லேப்ரடார் நாய்க்குட்டியை வாங்கித் தருகிறார் வில்லியம்ஸ். தங்க நிறத்தில் புசுபுசுவென்ற ரோமத்துடன் மென்மையான அந்த குட்டியைக் கண்டவுடன் ஜூலிக்கு மிகவும் பிடித்துப்போகிறது. அதற்கு மைலோ என்று பெயரிடுகிறாள். தன் படுக்கை அறையில் அதற்கென்று ஒரு இடம் ஒதுக்கித்தருகிறாள்.அவளது உலகமே அந்த சிறுநாய்க்குட்டியுடன் என்றாகிறது. சில மாதங்களில் மைலோ நன்றாக வளர்ந்து,ஜூலி சொல்கிறபடியெல்லாம் கேட்கிறது. ஜூலி மைலோவை தன் தம்பியாகவே நினைத்துருகுகிறாள்.

இந்த நிலையில் ஒரு நாள் நள்ளிரவு மைலோவைக் காணாமல் ஜூலியும் வில்லியம்ஸும் தேடுகிறார்கள். எங்கு தேடியும் மைலோவைக் காணவில்லை. அழுது அழுது ஜூலியின் கண்கள் வீங்கி,கன்னம் சிவந்துவிடுகிறது.அழுதுகொண்டே உறங்கி விடுகிறாள். அதிகாலையில் மைலோவின் சத்தம் சன்னமாக கேட்கிறது. ஜன்னல் வழியே பார்க்கிறாள் ஜூலி. தோட்டத்தில் மைலோ மயங்கிய நிலையில் கிடக்கிறது. மைலோவின் தலையிலிருந்து வழிந்து கொண்டிருக்கிறது ரத்தம். ஓடிச்சென்று மைலோவை தூக்க முயற்சிக்கிறாள்,வளர்ந்துவிட்டதால் மைலோவை தூக்க முடியவில்லை.அப்போது ஒரு கரம் மைலோவை தூக்க நீள்கிறது. ஜூலியின் வயதை ஒத்த சிறுவனொருவன் நிற்கிறான். இந்த நேரத்தில் எங்கிருந்து இவன் வந்தான் என்று ஜூலிக்கு ஆச்சர்யம் தாளவில்லை. நீயாரென்று கேட்கிறாள். அவன் பதிலேதும் சொல்லாமல் மைலோவை வெகு சுலபமாக தூக்கி கொண்டு ஜூலியின் அறைக்கு வருகிறான்.

மைலோவிற்கு முதலுதவி செய்துவிட்டு அந்த சிறுவனிடம் வந்து பேசுகிறாள் ஜூலி. எந்தவொரு கேள்விக்கும்
அவன் பதிலிடவில்லை.ஜூலியின் படுக்கையில் படுத்துறங்கிவிடுகிறான்.மறுநாள் தன் அப்பாவின் அறைக்கு சென்று அந்த சிறுவன் பற்றி சொல்கிறாள். வில்லியம்ஸ் ஜூலியின் அறைக்குள் வந்து பார்க்கும்போது அவனைக் காணவில்லை. அவன் ஜூலியின் படுக்கையில் அமர்ந்து அவளை பார்த்து சிரிக்கிறான். அப்போதுதான் ஜூலிக்கு புரிகிறது அவன் தன் கண்களுக்கு மட்டுமே தெரிகிறானென்று. நீ ஏதோ கனவு கண்டிருக்கிறாய் போய் விளையாடு என்று சொல்லிவிட்டு வில்லியம்ஸ் சந்தைக்கு போய்விடுகிறார். இரண்டு நாட்கள் கழித்துதான் வருவதாகவும் சொல்கிறார்.

அந்த சிறுவனுக்கு தான் உண்ணும் ரொட்டியும் பாலும் கொடுக்கிறாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உண்டுமுடிக்கிறான்.சைகையால் இன்னும் உணவு வேண்டும் என்கிறான். தன் அப்பாவின் உணவை போல் நான்கு மடங்கு சாப்பிடுகின்ற அவனை பார்த்து ஆச்சரியப்படுகிறாள். அவனுக்கு கேனோ என்று பெயரிடுகிறாள்.
மைலோ அவனைக் காணும்போதெல்லாம் குரைக்கிறது. கேனோவும் ஜூலியும் விளையாடுகிறார்கள். கேனோவைக் கண்டு குரைத்தபடியே இருக்கிறது மைலோ.

இரண்டாவது அத்தியாயம் ஜூலியின் கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்கிறது.ஜூலி பதினெட்டு வயது யுவதியாக மாறி இருக்கிறாள்.தங்க நிறத்தில் கூந்தலும்,நீல நிறக் கண்களும் அவளது அழகை மேலும் அழகாக்கி இருக்கிறது. செர்ரி பழ நிறத்தில் அவள் இதழ்களை கண்டு கல்லூரியே கிறங்கிக் கிடக்கிறது.ஜூலியின் வகுப்புத்தோழன் கெவின் அவளிடம் தன் காதலை சொல்கிறான். ஜூலிக்கும் அவனை பிடித்துப்போகிறது. அடுத்த வருடத்திலிருந்து இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என்றும் அதுவரை காதலர்களாக பழகலாமென்றும் முடிவெடுக்கிறார்கள். தன் வீட்டிற்கு செமஸ்டர் விடுமுறைக்காக செல்கிறாள் ஜூலி. விமான நிலையத்தில் கண்ணீர் மல்க வழியனுப்புகிறான் கெவின். விடுமுறைக்காக சென்றவளிடமிருந்து எவ்வித தொடர்பும் இல்லாத காரணத்தால் அவள் கிராமத்து வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறான் கெவின்.

வீட்டின் கேட்டை திறந்துகொண்டு கெவின் உள்நுழைகிறான்.அங்கே அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த பெரிய வீட்டில் தனியாக பேசிக்கொண்டிருக்கிறாள் ஜூலி. யாரிடம் பேசுகிறாள் என்று மறைந்திருந்து பார்க்கிறான் கெவின். யாருமில்லை அங்கே. ஆனால் ஜூலி ஒரு குழந்தைபோல் பேசிச் சிரித்து விளையாடிக்கொண்டிருக்கிறாள். ஏதோ மனதில் தோன்ற தன்னிடமிருக்கும் விலையுயர்ந்த கேமராவால் ரகசியமாக அவளை படம் பிடித்துவிடுகிறான். அந்த படத்தில் ஜூலிக்கு அருகில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருக்கிறான். விறுவிறுவென்று வீட்டை விட்டு வெளியேறி ஒரு மரத்தடியில் வந்து அமர்கிறான். மனம் படபடத்துக்கொண்டிருக்கிறது. அந்த சிறுவன் ஏலியன் என்பதை உணர்ந்துகொள்கிறான். ஏலியனை அரசாங்கத்திடம் பிடித்துக்கொடுத்தால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்று தோன்ற,அந்த சிறுவனை பிடிப்பது எப்படி என்று யோசிக்க ஆரம்பிக்கிறான். ஜூலியின் கூக்குரல் கேட்டு திடுக்கிட்டு வீட்டை நோக்கி ஓடுகிறான். அங்கே என்ன நடக்கிறது என்பதை நாவலின் கடைசி இருபது பக்கங்களில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

சிண்டலி ப்ராஸ்டரின் எழுத்தும்,விவரணைகளும் நாவலுக்கு மிகப்பெரிய பலம்.ஜுலியின் அம்மா கார் விபத்தில் இறந்து போயிருக்கிறாள் என்பதை கார் சத்தம் கேட்கும்போதெல்லாம் தன்னையும் அறியாமல் ஜூலி காதைப்பொத்திக்கொள்வதாக காட்சிப்படுத்தி இருப்பார். இதுபோன்ற மிகவும் நுட்பமான வெளிப்பாடு நாவலுக்கு மிகப்பெரிய பலம். கேனோவும் ஜூலியும் அப்பா சந்தைக்கு போன இருநாட்களும் விளையாடுவதை நாற்பது பக்கங்கள் விவரித்திருக்கிறார்.வாசிக்கும் வாசகனுக்கு சிறிதும் சலிப்பைத்தராமல்,வாசகனை குழந்தை பருவத்திற்கே இழுத்து செல்லும் வித்தை இவரின் எழுத்துக்களில் மிளிர்கிறது. சிறுமி ஜூலி கேனோவிற்கு உணவு பரிமாறும் சமயத்தில் சுவற்றில் தொங்குகின்ற அவளது அம்மாவின் புகைப்படம் மெல்லியதாய் புன்னகை செய்தது போலிருந்தது என்கிற வரியின் கவித்துவம் மனதை அள்ளிப்போகிறது.

எதற்காக கேனோ பூமிக்கு வந்தான்,ஜூலிக்கு என்னவாயிற்று,மைலோவின் தலையில் ஏன் அடிபட்டது,அப்பா வில்லியம்ஸ் என்ன ஆனார் என்பதை கடைசி இருபது பக்கங்களில் வாசிக்கும்போது நம்மை பிரமிப்பின் உச்சத்திற்கு கொண்டுபோய்விடுகிறார் சிண்ட்லி. சலிப்புத்தட்டாத விவரணைகளும்,சொற்களினூடாக காட்சிப்படுத்துதலிலும் தனித்து நிற்கிறது இந்நாவல்.கேனோ சிரித்தால் வாசகனுக்கும் சிரிப்பு வருகிறது. ஜூலி அழுதால் வாசகனும் சேர்ந்து அழுகிறான்.நாவலின் கடைசி இருவரி இப்படி முடிகிறது.
"Julie's eyes were filled with tears. Her lips were whispering something which he can only understand"

விலை: 11.99$
வெளியீடு: Harper Kollins Publications

நூல் விமர்சனத்தை எழுதி முடித்தவுடன் சந்தோசத்தில் துள்ளினேன். இன்னும் ஐம்பது வருடம் கழித்து வரவிருக்கும் ஒரு நாவலை,நாவல் ஆசிரியர் பிறப்பதற்கு முன்பே நாவலுக்கு விமர்சனம் எழுதிய முதல்
மனிதன் என்கிற பெயரும் புகழும் கிடைக்கப்போவதை நினைத்து சத்தமிட்டு சிரித்தேன். அருகிலிருந்த என்
கால இயந்திரம் சிவப்பு கண்களால் என்னைப் பார்த்து கண்ணடித்தது.

-நிலாரசிகன்.

Friday, May 08, 2009

இரு கவிதைகள்



அவ‌ர்க‌ள்


என் அறைக்குள்ளிருந்து
வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்
அவ‌ர்க‌ள்.

த‌லைகுனிந்து த‌ள்ளாடி
ந‌ட‌க்கின்ற‌ அவ‌ர்க‌ளின்
நிழ‌லிலும் தோல்வியின்
காய‌ங்க‌ள் மின்னி ம‌றைகின்ற‌ன‌.
வெற்றிக்க‌ளிப்பில் ச‌த்த‌மிட்டு
சிரிக்க‌ ஆர‌ம்பிக்கிறேன்.
பல்லிடுக்கில் வழிகின்ற‌
க‌ருமைநிற‌ ர‌த்த‌ம்
தோற்றுச்சென்ற‌வ‌ர்க‌ளை
சாத்தான்க‌ள் என்றபோது
எனக்குள்ளிருந்த கடவுள்
காணாமல் போயிருந்தான்.


இறக்க முடியாத சிலுவை


எல்லோரும் அம‌ர்ந்திருக்கும்
அந்த‌க்கூட்ட‌த்தில்
என்னை ம‌ட்டும்
பார்த்துக்கொண்டிருந்த‌ன‌
அந்த‌ இருவிழிக‌ள்.

த‌ன‌க்கான‌ பார்வையை
என்னிட‌மிருந்து
எதிர்பார்த்து காத்திருந்த
அந்த‌ விழிகளை
கடைசிவரை பார்க்காமல்
வெகு இய‌ல்பாய்
த‌விர்த்தேன்.

எல்லோரும் க‌லைந்து
சென்ற‌ன‌ர்.
வ‌ருட‌ங்க‌ள் ப‌ல
க‌ழிந்த‌பின்ன‌ரும்
இமைமூடி பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் அன்று
த‌விர்த்த அந்த‌விழிக‌ளை.


நன்றி: அதிகாலை.காம்

Monday, May 04, 2009

Life of Birds - ஆவணப்படம்



பறவைகள் நம் வாழ்வோடு பயணிப்பவை.சிட்டுக்குருவிகளும்,காக்கைகளும் நம் பால்யத்தின் தோழர்கள்.
கோழிக்குஞ்சுகளின் மென்மையும்,மைனாக்களின் கீச்சுக்குரலும் கடந்து வந்தவர்கள்தான் நாம். ஆனாலும் இன்று பறவைகளூடான தொடர்பு எந்நிலையில் இருக்கிறது? மைனாக்கள் ரசிக்க நேரமில்லை என்பதைவிட மைனாக்களில் ரசிக்க என்ன இருக்கிறது என்கிற எந்திர மனோநிலையில் இருக்கிறோம்.

பறவைகளின் வாழ்வியல் முறை குறித்த ஆவணப்படங்களில் மிகச் சிறந்ததாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுவது Life of Birds
இதை தயாரித்து இயக்கியவர் டேவிட் ஆட்டன்பரோ.
பத்து பகுதிகளாக BBC தொலைக்காட்சியில் 90களில் இறுதியில் ஒளிபரப்பானது.
பறவை ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படம்.

மூன்று வ‌ருட‌ங்க‌ள் க‌டின‌ உழைப்பால் உல‌க‌மெங்கும் சுற்றித்திரிந்து இத‌னை ப‌ட‌மாக்கி இருக்கிறார்க‌ள்.

விதவிதமான பறவைகள் மனதை அள்ளிப்போகிறது.குறிப்பாக பலகுரலில் ஒலிஎழுப்பும் பறவை(கேமரா லென்ஸ் போன்று சத்தம் எழுப்புவதும்,கார் சைரன் ஒலியும் வியக்க வைக்கிறது )

இர‌வில் ம‌ட்டுமே உண‌வு தேடும் நியுசிலாந்தின் கிவி ப‌ற‌வை என‌ ப‌ல‌ ஆச்ச‌ர்ய‌ங்க‌ள்.


இங்கே பார்க்கலாம்:

http://www.youtube.com/show?p=S3vPSi1o5nM

-நிலாரசிகன்

Friday, May 01, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

வால் பாண்டி சரித்திரம் - நாவல் - இரண்டாம் அத்தியாயம்

http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram_1.php

Tuesday, April 28, 2009

காந்திய வழி:

நண்பர்களே,
எனக்கு வந்த மின்னஞ்சலை இணைத்திருக்கிறேன்.

http://votefortruth.in

Desia Paadhukaappu Kazhagam, a political party registered in 1996 is for
the first time contesting in forthcoming parliamentary elections under
the leadership of Mr. V. Kalyanam, Personal Secretary to Mahatma Gandhi
with the objective of resurrecting the Gandhian values in the Indian
Polity.

We are responsible for bringing about several reforms in the Electoral
system, among them being.

1. Frank and full disclosure of assets of contesting candidates 2.
Disclosure of criminal proceedings launched against them and 3. Live
Broadcast of proceedings in the Parliament (both houses) and State
Assemblies.

2 Nominations in total has already been filed with Election Commission
and the candidates are contesting only from South Chennai & Central
Chennai constituency.

For more details about the party, their manifesto and the name of the
contesting candidate in the south chennai constitueny, I would request
you all to visit the officialy launched website http://votefortruth.in
and vote for the party.

Though being late in campaigning, party wing and its contesting
candidate has already found enormous support with south chennai
constituency voters and making every attempt to win this election.

Last but not the least, request you all to cascade this message to all
your known circles who are falling under south chennai & central chennai
constituencies and strongly vouch for vote and support in favour of
Desia Paadhukaappu Kazhagam.

In days to come, you would foresee message being sent in various means
to reach out to people and seek for votes.

Let us ink our hands in favor of Desia Paadhukaappu Kazhagam and support
them in every way we can to win this election.

அவள் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறாள்..




வெப்ப‌த்தின் மிகுதியில்
ஒவ்வொரு இத‌ழாக‌
உதிர்ந்து
சாம்பல் குவிய‌லான‌து
என்னுட‌ல்.
நீல‌ நிற‌ பூக்க‌ள்
சில‌வ‌ற்றை
குவிய‌ல்மீது வைத்து
திரும்பி செல்கிறாய்
வீழ்ந்த‌ சாம்ப‌ல்
காற்றில் கரைந்து
ம‌றைகிற‌து.
எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுல‌கில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை.

Saturday, April 25, 2009

அறிவியல் புனைவுக்கவிதைகள் - பாகம் 2



1. நாளை பதில்
சொல்கிறேன் என்று
சொல்லிச்சென்றாள்.
நாளைக்குள் நுழைந்து
காயத்தோடு
மீண்டு வந்தேன்
இன்றைக்குள்.

2.பூமி மீண்டும்
மனிதர்களின் கைகளுக்குள்
வந்தது.
பாதாள அறைகளைவிட்டு
வெளியேறினர்
மக்கள்.
எங்கும் நிசப்தம்
நிலவ துவங்கிய
நாளொன்றின் அந்தியில்
இயந்திரக் குப்பைகளை
பொறுக்கிக் கொண்டிருந்தான்
வயிறு ஒட்டிய
சிறுவன்.

Thursday, April 23, 2009

வால் பாண்டி சரித்திரம் - நாவல்

நண்பர்களுக்கு வணக்கம்,

சில மாதங்களுக்கு முன் நானெழுதிய சிறுகதை "வால் பாண்டி சரித்திரம்".
எழுதி முடித்த பின்னும் எழுதாமல் விடுபட்டவை நிறைய என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அதன் நீட்சி இப்போது நாவலாக உருப்பெற்றிருக்கிறது.

கீற்று இணைய தளத்தில் வாராவாரம் வெளிவரும். படித்து உங்களது பின்னுட்டங்களை
இடுங்கள்.


பாகம் 1 இங்கே படிக்கலாம்:
http://www.keetru.com/literature/serial/vaalpandisarithiram.php

Saturday, April 18, 2009

"வார்த்தை" யில் என் கவிதை:




"வார்த்தை" இலக்கிய இதழில் இம்மாதம்(ஏப்ரல் 09) வெளியான என் இரு கவிதைகள்.

Thursday, April 16, 2009

Chicken a la Carte - குறும்படம்

ஆறு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற வலி மிக அதிகம்.

உணவுவிடுதிக்கு இருபெண்கள் வருகிறார்கள்.கோழிக்கறியும் சாதமும் ஆர்டர் செய்கிறார்கள். கொஞ்சமாய் கொறித்துவிட்டு மீதம் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

அங்கே வருகின்ற ஒருவர் அந்த மீதமான கறியை ஒரு வாளியில் எடுத்து செல்கிறார்.
தன் வீட்டிற்கு செல்கின்ற அவரை, அங்குள்ள குழந்தைகள் சந்தோஷமாய் ஓடிவந்து மொய்த்துக்கொள்கிறார்கள்.

[இந்தக்காட்சியிலிருந்து எழும்புகின்ற இசையும் அதன் வரிகளும் கல்நெஞ்சையும் உருக வைத்துவிடும்.]

அந்த கோழிக்கறிக்காக வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். இவர் ஒவ்வொருவருக்கும் தட்டில் உணவை எடுத்து வைக்கிறார்.மலர்ந்த முகத்தோடு குழந்தைகள் அதனை தொட எத்தனிக்கும்போது தடுத்துவிட்டு,கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிட சொல்கிறார்.

பசியால் தினம் தினம் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் மடிகிறார்கள். இது ஒரு நிஜ கதை என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் இது.பார்த்துமுடித்து சில மணி நேரங்கள் எதுவும் செய்ய இயலாமல் மனம் கனத்து போனது.
பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

Monday, April 13, 2009

Winged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்






பருவகாலத்தில் இடம்பெயரும் பறவைகள் குறித்தான ஆவணப்படம் பற்றி எஸ்.ரா எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தவுடனே இணையத்தில் தேடிப்பிடித்து படத்தை பார்த்துவிட்டேன். படம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் எஸ்.ரா அவர்கள் நிறைய எழுதிவிட்டதால் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

ரம்மியமான காட்சிகள்:

1.மீனொன்றை முழுவதுமாக விழுங்க முயற்சிக்கும் பறவையின் லாவகமும்,நிதானமும் மிக அற்புதமான காட்சி.
2.அமேசான் நதியின் மீது பறக்கின்ற பஞ்சவர்ண கிளிகளும் அதன் பார்வையும்.
3.அலைகளோடு குதித்தோடும் பென்குவின் பறவைக்கூட்டம்
4.தண்ணீர் மீது நடனமாடும் பறவைகள்


ரணமான காட்சிகள்:

1.சந்தோஷமாய் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன .சில வேடர்களின் குண்டுகளுக்குப் பலியாகிறோம் என்பதை அறியாமல் வீழ்கின்ற பறவைகளைக் கவ்வி எடுத்துவர ஓடுகின்றன வேட்டை நாய்கள்.

2.ஒரு பக்க சிறகை இழந்த பறவையொன்று பறக்க இயலாமல் கடற்கரையில் அங்குமிங்கும் தத்தி தாவுகிறது.சுற்றி வளைக்கின்றன நண்டுகள்.

3.பென்குவின் பறவையின் குஞ்சை மற்றொரு பறவை கொத்தி தின்கிறது,தடுக்க இயலாத தாய்பறவை வானம் பார்த்து கதறி ஓலமிடுகிறது.(இந்தக்காட்சியின் பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது)

4.அமேசான் ந‌தியில் மித‌க்கிற‌து ஒரு ப‌ட‌கு. அதில் கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குர‌ங்கு ஒன்றும் சில‌ ப‌ற‌வைக‌ளும் இருக்கின்ற‌ன‌.ம‌னித‌ன் பிற‌ உயிரின‌ங்க‌ள் மீது காட்டுகின்ற‌ குரூர‌த்தை இந்த‌ ஒரு காட்சி சொல்லிவிடுகிற‌து.

86 நிமிட‌ம் ஓடுகின்ற‌ இந்த‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் முடிந்த‌வுட‌ன் ம‌ன‌தில் ஏற்ப‌டுகின்ற‌ வெறுமை த‌விர்க்க‌ இய‌லாத‌து. ப‌ற‌வைக‌ளை நாம் ப‌ற‌க்க‌ அனும‌திக்கிறோமா என்கிற‌ கேள்வி ம‌ன‌தில்
தோன்றியபடியே இருக்கிறது..

பிர‌மிளின் க‌விதையோடு இந்த‌ப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.

"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"

Sunday, April 12, 2009

பேசும் பறவை:

http://www.youtube.com/watch?v=OPz2MYp67ic


பழக்கத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்.

Thursday, April 09, 2009

சிலையுலகம் & செந்நிற கூந்தல்காரி



1.சிலையுலகம்

உறைந்த மெளனத்தை
உகுத்துக்கொண்டிருக்கும்
அந்தச் சிலையின்
மர்ம அழகிலிருந்து
எழும்பும் இசை
மனதின் ஆழத்தில்
ஒன்றன்மீது ஒன்றாய்
படிந்துகொண்டிருந்தது.
மெளனத்தின்
மென்கரம் பற்றி
சிலையுலகினுள் நுழைந்தேன்.
சப்தங்களால் நிறைந்திருந்த
அவ்வுலகை விட்டு
வெளிக்குதிக்க என்
கரம் பற்றும்
அவசரத்தில் வரிசையில்
நின்றன சிலைகள்.

2.செந்நிற கூந்தல்காரி

அவள் முகத்தில்
பூனையொன்றின் சாயல்
படர்ந்திருந்தது.
காற்றில் அசைகின்ற
செந்நிற கூந்தலும்
உற்று நோக்குகின்ற
நீல நிற கண்களும்
அவளுக்கு வாய்த்திருந்தன.
உதிரிந்துகிடக்கும்
செர்ரிப் பழங்களை
ஒவ்வொன்றாய் தேடிச்சென்று
மிதித்துக்கொண்டிருந்தவள்
சட்டென்று வான்நோக்கி
பார்த்து சிரித்தாள்.
பின்,
ஏதுமறியா சிறுமியாய்
புல்வெளியில் ஓடி விளையாடினாள்.
பாவம் பைத்தியமென்றார்கள்
பூங்காவிலிருந்தவர்கள்.
மெல்ல மெல்ல
தங்களது முகம்
வேட்டைநாயின் முகமென
மாறிக்கொண்டிருப்பதை அறியாமல்.

நன்றி: திண்ணை.காம்
Photo By: CVR

Tuesday, April 07, 2009

இரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]





1.
வழிந்து ஓடுகின்ற வெப்பத்தின்
அளவு உயர்ந்துகொண்டேயிருந்தது.
சொற்களால் விவரிக்க இயலாத
நிறத்தில் மலையென
குவிந்திருந்தது சாம்பல்.
கரும்புகை சூழ்ந்திருக்க
பற்றி எரிந்தது நீலக்கடல்.
வீசும் காற்றில்
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது
நெருப்பின் சுவாலைகள்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியது என்றுரைத்தான்
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி


2.
காதோரம் நடனமிடும்
செவ்விதழ்களின் ஸ்பரிசத்தில்
லயித்திருக்கும்போது
வேகமாய் தட்டப்பட்டது
அறைக்கதவு.
உள்நுழைந்த எந்திரன்
தோள்சாய்திருந்தவளைக் கண்டு
புன்னகைத்தான்.
இன்னும் நான்கு நிமிடங்களில்
மரணிக்கப்போகிறேன்
என்பதை உணர்த்தியது
மணிக்கட்டில் கட்டியிருந்த
கடிகாரத்தின் சிவப்பு விளக்கு.

3. மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.

-நிலாரசிகன்

Thursday, April 02, 2009

சுயம் பற்றி மூன்று கவிதைகள்:



1.எல்லோரும் வந்து
செல்லும்
பேருந்து நிலைய
கழிப்பிடமா
என் சுயம்?

2.வந்த நிமிடம் முதல்
பேசிக்கொண்டே இருந்தாள்
அவள்.
பேசவேண்டியதென்று அவள்
பட்டியலிருந்தவற்றை
எல்லாம் பேசி முடித்தாள்.
எல்லாம் முடித்தபின்
ஏனிந்த மெளனமென்று
வினவினாள்.
பார்வையாளனா நண்பனா
என்கிற கேள்வியின்
இடைவெளியில் நின்றுகொண்டிருந்தேன்
நான்.

3.எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-நிலாரசிகன்.

Monday, March 30, 2009

பார்த்ததில் பிடித்தது



இணையத்தில் கண்டெடுத்த புகைப்படம். தனிமையின் அழகை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் புகைப்படக்கலைஞர்.

Tuesday, March 24, 2009

எங்கே என் புன்னகை? - (கவிதையல்லாதவைகள்)




1.பனி விழும் இரவில் கைகள் நிறைய உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு எங்கேயோ நடக்கின்றன கால்கள்..
திசைகளை மறந்துவிட்டு எங்காவது பயணித்து பின் உணர்ந்து எனக்கான திசை தேர்வு செய்கையில் மலர்கின்றன
இலைகளெல்லாம் சிறு சிறு புன்னகையாய்.

2.கண்ணீரும் நிராகரித்த அந்தியொன்றில் கண்ணாடி யன்னல் வழியே நடைபாதையை வெறித்துக்கொண்டிருந்தன கண்கள்.
நாய்க்குட்டியுடன் கடந்துசென்ற சிறுமி தூரப்பார்வையில் அனுப்பினாள் சிறுபுன்னகையொன்றை. மெல்ல மெல்ல
மலர்ந்தது இதயம்.

3.மலர்கொத்து விற்கும் சீனப்பெண்ணின் புன்னகையில்தான் எப்போதும் மலர்ந்திருக்கிறதோ விற்பனைக்கு
காத்திருக்கும் பூக்கள்?

4. யாருமற்ற அறைக்குள் எழுகின்ற கேவல்சப்தங்களை நிறுத்திவிட முயன்று தோற்கிறது கவிதை.
கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.

Monday, March 23, 2009

கறுப்பு வெள்ளை கனவுகள் - மூன்று கவிதைகள்




1.உன் கரங்களுக்குள் வாழ்ந்து
பழகிய என்
கனவுகளின் விளிம்பில்
காத்திருக்கிறேன்.
காத்திருத்தலின் வலி தாளாமல்
கனவுக்குள் புதைகிறதென்
பாதங்கள்.
மெல்ல மெல்ல
என்னை சுற்றி உருக்கொள்கிறது
கல்லறையொன்று.
நீ மறைந்த திசைநோக்கி
என் சிறகுகள்
படபடக்க துவங்குகையில்
கால்களை கட்டிக்கொண்டு
அழுகிறது குழந்தை.

2.
இருள் மிகுந்த அடர்வனத்தில்
நுழைய முடியாமல்
தவித்துக்கொண்டிருந்தது
வெளிச்சம்.
மானொன்றின் கதறலில்
சிலிர்த்துக்கொண்டன
விருட்சங்களின் இலைகள்.
எதற்காகவோ அல்லது
யாருக்காகவோ
சத்தமிட்டுக்கொண்டே இருக்கின்றன
பூச்சிகள் சில.
சற்று முன் பெய்து
ஓய்ந்திருக்கிறது
மழை.

3.
நம்மிடையே உயர்ந்து
நிற்கிறது
கண்ணாடிச் சுவர்.
உடைக்கின்ற வலிமையற்ற
என் கரங்களில்
உடைக்கப்பட்ட வளையல்களின்
கீறல்கள்.
இசைக்க மறந்த
வெள்ளைக்குயிலின்
ராகத்திற்காக
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
உன் யாசகம்.
உதிர்ந்துகொண்டே இருக்கிறது
என் கண்ணீர்.

நன்றி: Youthful Vikatan

Friday, March 20, 2009

காதலின்றி வேறில்லை - சில காதல் கவிதைகள்


0

பட்டாம்பூச்சியின்
வண்ணச்சிறகில்
கைகள் கோர்த்து
அமர்ந்திருக்கிறோம்
நாம்.
வானமெங்கும் சுற்றித்திரிந்த
பட்டாம்பூச்சி
பூவொன்றின் இதழ்களில்
உன்னை இறக்கிவிடுகிறது.
பூவுக்குள் ஓடி மறைகிறாய்
நீ.
பூக்களின் பெயர்க்காரணத்தை
உலகிற்கு அறிவிக்கிறேன்
நான்!

0

ஓடிவந்து என்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
உன் கன்னம் உரச
நீ பேசும்பொழுதெல்லாம்
விதவித வண்ணங்களாய்
என்னுள் பெய்கிறது மழை.

0

உனக்கு பிடித்த மண்வாசத்தில்
நீயும்
எனக்கு பிடித்த உன்வாசத்தில்
நானும்
ஒற்றை குடைக்குள்
விரல்கள் கோர்த்து
மெளனித்து நடக்கிறோம்.
விரல்களின் ஸ்பரிசத்தில்
வலுக்கிறது காதல்மழை.

0

சிப்பிக்குள் ஒளிந்திருக்கும்
முத்தைப்போல்
உன் கன்னக்குழிக்குள்
ஒளிந்திருக்கிறது
எனக்கான காதல்புன்னகை!

0

Wednesday, March 18, 2009

பார்ட் டைம் வேலை

வீட்டிலிருந்தே இணையம் மூலமாக பணம் சம்பாதிக்க நினைக்கும் அன்பர்களுக்கு:


Click here



[இது Genuine தளமா என்று தெரியவில்லை,நம்பிக்கை அற்றவர்கள் தவிர்த்துவிடலாம்]

Tuesday, March 17, 2009

மிகச்சிறந்த வீடியோ:

பார்த்ததில் பிடித்தது:


http://www.youtube.com/watch?v=vZAEBUTRZPo

Sunday, March 15, 2009

படித்ததில் பிடித்தது


Walking in the moon, Counting the stars,
Beyond the world, I'm searching you.

Thinking about love, Laughing at myself,
Without any words, I'm searching you.

Crying at your absence, Swallowing my sorrows,
To make you happy, I'm searching you.

Flying high in sky, Sailing long in sea,
Mad with your thoughts, I'm searching you.

Hopeing for goodthings, Hopping towards future,
Ever to be with you, I'm searching you.

Finding happy , in Failing before you,
To show my love, I'm searching you.

Waiting for you, Biting my nails,
To make me comfort, I'm searching you.

Longing for your nearness, Throwing away my roughness,
To rest under you, I'm searching you.

Sitting in the shore, Staring at the waves,
To hear your words, I'm searching you.

Sleeping in your lap, Closing my eyes,
To leave this world, I'm searching you....
Until my last breathe...
(இணையத்தில் கண்டெடுத்தேன்,எழுதியவர் பெயர் இல்லை)

Thursday, March 12, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் - சிறுகதை

புத்தகம் இல்லாத ரயில் பயணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. வேலை விஷயமாக மும்பை கிளம்பவேண்டும் என்பதால் பழைய புத்தகம் ஏதேனும் வாங்கலாமென்று திருவல்லிக்கேணி சென்றேன். அங்கே ஒரு பழைய புத்தக கடையில்தான் அந்த டைரியை முதன்முதலாய் பார்த்தேன். முதல் நான்கைந்து பக்கங்கள் கிழிந்த நிலையில் புத்தகமொன்றின் கீழ் கசங்கிய நிலையில் இருந்தது. ஏதோ ஒரு ஆர்வத்தில் எடுத்து பிரித்தேன். முத்துமுத்தான கையெழுத்து அந்த டைரியை நிரப்பியிருந்தன. எழுத்துப்பிழைகள் அதிகமாய் தென்பட்டது.பத்து ரூபாய்கொடுத்து வாங்கி வந்துவிட்டேன்.

தாதர் எக்ஸ்பிரஸ் மும்பை நோக்கி கிளம்ப ஆரம்பித்தவுடன் டைரியை திறந்தேன். டைரிக்கு சொந்தமானவரின் பெயர் இல்லாத நிலையில் ஐந்தாவது பக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். உடனே புரிந்துபோனது இது சிறுமி ஒருத்தியின் டைரியென்று. ஏழு வருடங்களுக்கு முன்புள்ள டைரி. ஜனவரி ஆறுவரை கிழிந்துவிட்டதால், ஜனவரி ஏழாம் தேதியிலிருந்து ஆரம்பித்தேன்

ஜனவரி 7:
"இன்னைக்கு என்னோட பன்னிரெண்டாவது பிறந்தநாள். ராத்திரி ரயில்ல நான் மும்பை போகனும்னு அம்மா சொன்னா. இனிமே நான் அங்கதான் வேலை பார்க்க போறேன்னும் சொன்னா. சொல்றப்போ ஏன் அழுதான்னு தெரியலை. நெத்தியில ஒரு முத்தம் கொடுத்துட்டு இறுக்கி கட்டி பிடிச்சுக்கிட்டா. ராத்திரி எட்டு மணிக்கு ஒரு அண்ணன் வந்து என்னை கூட்டிக்கிட்டு போனான். சந்தோஷமாக டாட்டா காட்டினேன் அம்மா முந்தானையில முகத்த பொத்திகிட்டு அழுதா"

ஜனவரி 9:
"மும்பை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேசன்ல இருந்து வீட்டுக்கு எங்களை கூட்டிப்போக காரை அனுப்பி இருந்தாரு முதலாளி. காருல ஏறினவுடன் சாப்பிட பச்சைக்கலர் ஆப்பிள் தந்தாரு டிரைவரு. அவ்வளவு ருசியான ஆப்பிளை நான் சாப்பிட்டதேயில்லை.
அரைமணிநேரத்துல வீட்டுக்கு போய் சேர்ந்தோம். முதலாளி செவப்பா உயரமா இருந்தாரு. அவரைத் தவிர வீட்டுல வேறு யாருமில்ல. இவ்வளவு பெரிய பங்களாவை எங்க கிராமத்தில் நான் பார்த்ததே இல்ல. எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு"

ஜனவரி 10:
"இன்னைக்கு காலையில எழுந்திருச்சவுடன் குளிச்சிட்டு வீட்டை துடைச்சிட்டிருந்தேன். மேல் மாடியிலிருந்து முதலாளி கூப்பிட்டாரு. அவர் ரூமுக்கு போனவுடன் என்னை இறுக்கி கட்டிபிடிச்சுகிட்டு முத்தமிட ஆரம்பிச்சாரு. எனக்கு ஒண்ணும் புரியலை. நிறைய முத்தம் கொடுத்துட்டு நிறைய சாக்லெட் தந்தாரு. எனக்கு ஏன் முத்தம் தந்தாருன்னு தெரியலை. சாக்லெட் நிறைய தந்த முதலாளியை ரொம்ப பிடிச்சிருக்கு"

ரயிலில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். மிடில் பெர்த்தில் படுத்துக்கொண்டு டைரிக்குள் ஆழ்ந்திருந்தேன் நான்.

ஜனவரி 11:

"இன்னைக்கும் அவரு ரூமுக்கு என்னை கூப்பிட்டார். நிறைய சாக்லெட் கிடைக்கும்னு நினைச்சுக்கிட்டே ஓடினேன். அவரோட இடதுகையில ஊசி குத்திக்கிட்டு ஏதோ உளறினார். என்னை இழுத்து என் ட்ரெஸ்ஸை கழற்ற சொன்னார். எதுக்கு அப்படி சொன்னாருன்னு புரியாம ட்ரெஸ்ஸை கழற்றினேன். ஏசி குளிரில் என் உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி.
அவர் ரூமை விட்டு வெளியே வரும்போது உடம்பு வலி தாங்க முடியல. வலி மறக்க நிறைய சாக்லெட் சாப்பிட்டேன். ஏன் அப்படி செஞ்சாருன்னுதான் புரியலை"
டைரியை படித்துக்கொண்டிருந்த எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தது. மெதுவாய் அடுத்த பக்கத்தை புரட்டினேன்.

ஜனவரி 12:

"இன்னைக்கு என்னை மாதிரி நாலு சின்னப்பொண்ணுங்க வந்தாங்க. அவங்களும் என்கூடதான் இருப்பாங்கன்னு சொன்னாரு முதலாளி. எனக்கு சாக்லெட் கிடைக்கறது குறைஞ்சு போச்சு"

பிப்ரவரி 10:

"இங்க வந்து ஒரு மாசம் ஓடிருச்சு. ஒருவாரத்தில் வர்றேன்னு சொன்ன அம்மாவும் வரலை. எனக்கு அம்மாவை பார்க்கணும் போல இருக்கு. அம்மாவோட மடியில படுக்கணும். இந்த ஒரு மாசத்துல இருவதுக்கும் மேற்பட்ட பொண்ணுங்களை வேலைக்கு வச்சுக்கிட்டாரு முதலாளி. எனக்கு ஒரு ப்ரெண்ட் கிடைச்சிருக்கா. அவளும் கிராமத்திலிருந்துதான் வந்தாளாம். பெயர் திவ்யா. திவ்யாவிற்கு அம்மா கிடையாதாம்.
அவளோட அப்பா இங்கே வந்து விட்டுட்டு போய்ட்டாரு. இப்போ இராத்திரி அடிக்கடி தூக்கம் கெடுகிறது. தினமும் நாலு அஞ்சு பேர் வர்றாங்க. உடம்பு வலி உயிர்போகுது"

பிப்ரவரி 20:

"அம்மா நீ எப்போம்மா வருவே? உனக்கு எழுதின லெட்டருக்கு ஏன் பதில் போடலை? எனக்கு அழுகையா வருதும்மா… ஒரு வாரமா காய்ச்சல். திவ்யா மட்டும் பக்கத்துலேயே உட்கார்ந்திருப்பா. யாருமே கவனிக்க இல்லம்மா.. நீ வருவியா மாட்டியா?"

ரயிலைவிட வேகமாய் தடதடத்தது என் இதயம். அதற்கு மேல் வாசிக்க முடியாமல் மூடிவைத்துவிட்டு, படுக்கையிலிருந்து இறங்கி அருகிலிருந்த கதவை திறந்து சிகரெட் ஒன்றை பற்ற வைத்துக்கொண்டேன். மீண்டும் படுக்கைக்கு வந்து டைரியை திறந்தேன்.

மார்ச் 12:
"இரண்டு நாளா நான் சாப்பிடலை. திவ்யா செத்துப்போயிட்டா. பாவாடையெல்லாம் ரத்தமா இருந்துச்சு. முதலாளி கொஞ்சம் கூட கவலப்படல. இரண்டு பேரு வந்து தூக்கிட்டு போயிட்டாங்க. எனக்கு பயமா இருக்கு. முருகா முருகான்னு நூத்தியெட்டு தடவ எழுதுனப்பறம் கொஞ்சம் பயம் இல்லாம இருக்கேன்"

மார்ச் 12ம் தேதிக்கு பின்னர் டைரி வெறுமையாய் இருந்தது. எந்த ஒரு பக்கத்திலும் எதுவும்
எழுதப்படவில்லை. மும்பையில் வல்லுறவுக்கு ஈடுபடுத்தப்பட்ட ஒரு சிறுமியின் டைரி சென்னையில் எனக்கு கிடைத்திருக்கிறது.
அப்படியெனில் அந்த நரகத்திலிருந்து தப்பித்து சென்னை சென்றிருப்பாளோ? இப்போது உயிருடன் இருப்பாளா? ரொம்ப நேரம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்தேன். பின்னிரவில் உறங்கிவிட்டேன்.

மறுநாள் இரவு மும்பையை அடைந்தது ரயில். இரு நாட்கள் அலுவலகப்பணிகளை முடித்துவிட்டு மீண்டும் சென்னை வந்தடைந்தேன். மனசுக்குள் அந்தச்சிறுமியின் கதறல் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏழு வருடங்களுக்கு முன்பு சிதைந்துபோன அந்தச் சிறுமியின் நினைவு இரண்டு வாரங்களுக்கு என் மனசுக்குள் சுற்றிக்கொண்டிருந்தது.
நின்றால், நடந்தால் அச்சிறுமியின் நிழல் முகம் நினைவுத் திரையிலாடிக்கொண்டேயிருந்தது.

அலுவலகத்தில் திடீரென்று என்னை ஜான்ஸியில் உள்ள க்ளையின்ட் ஆபிஸுக்கு டெபுடேஷனில் அனுப்ப முடிவெடுத்தார்கள்.அரைமனதாக சம்மதித்தேன்.
சென்னையிலிருந்து தில்லிக்கு விமானத்திலும், தில்லியிலிருந்து ஜான்ஸிக்கு இரயிலும் செல்ல முடிவாகியது. பயணம் என்பது எனக்கு எப்போதுமே உவப்பானது, எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனைவித வாழ்க்கை முறைகள், பார்க்க பார்க்க அதிசயமாக இருக்கும் எனக்கு. பம்பாய் பயணத்தின் போது படித்த அச்சிறுமியின் ஞாபகம் இன்னும் மறக்க முடியாததாக இருந்தது.

தில்லி பனிக் காற்று மூச்சையடைத்தது. சென்னையின் டிசம்பர் குளிருக்கே நடுங்கிப் போவேன், நல்ல வேளை மப்ளர் ஜெர்கின் எல்லாம் எடுத்துவந்திருந்தேன். ரயில் நிலையத்தில் புத்தகங்கள் வாங்கி கொண்டு என் கோச்சினைத் தேடி பெட்டி படுக்கைகளை வைத்துவிட்டு என் சீட்டில் அசதியுடன் அமர்ந்தேன். கையில் இந்தியா டுடே. அசிரத்தையாக அதை புரட்டிக் கொண்டிருந்த போது இருவது வயது மதிக்கத் தக்க இளம் பெண் என் இருக்கைக்கு நேர் எதிரில் வந்து அமர்ந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இருந்தது. லட்சணமாக இருந்தாள். தமிழ்நாட்டுப் பெண் என்று பார்த்ததும் தெரிந்தது. அவள் சீட்டில் அமர்ந்து ஜன்னலில் கணவனிடம் பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தாள்.

ரயில் மெல்ல நகர்ந்தது.அதனுடன் அவனும் கொஞ்ச தூரம் நடந்து வந்தான். அவர்கள் மராத்தியில் பேசிக்கொண்டார்கள். அவன் கண் பார்வையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பின் அந்த கம்பார்மெண்டை ஒரு நோட்டம் விட்டாள். என் முகத்தில் அவள் விழி ஒரிருரு நிமிடம் அதிகமாக நிலைபெற்று பின் மாறியது. நான் புத்தகம் வாசிப்பது போல பாசாங்கு செய்து கொண்டு அவளை கவனித்துக் கொண்டிருந்தேன். பிறன் மனை நோக்காத பெரும் குணத்தான் தான் ஆயினும் அழகான ஒரு தமிழ்ப்பெண் எதிரில் இருக்க எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் சற்று நேரத்தில் கைப்பையிலிருந்து ஒரு டைரியை எடுத்தாள். ரயிலின் ஆட்டத்திற்கெல்லாம் சளைத்தவள் இல்லை போலும். கோணல் மாணலாக ஏதோ எழுத ஆரம்பித்தாள். எட்டிப் பார்ப்பது நாகரிகமற்ற செயல் என்பதால் அமைதியாக இருந்தேன்.

அவள் கைப்பையில் டைரியை வைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பின் அப்பர் பெர்த்தில் ஏறி கைப்பையை தலையணையாக வைத்து படுத்து தூங்கியே விட்டாள். எனக்கு லோயர் பெர்த். அடிக்கடி மேலே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ரயில் சட்டென்று ஒரு இடத்தில் குலுங்கி நின்றது. யாவரும் நல்ல உறக்கத்தில், இவளின் பையிலிருந்து நழுவி ஏதோ கீழே விழுந்தது. அதை அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் அவள். சட்டென்று குனிந்து அதை கையில் எடுத்தேன். அவளின் டைரி! என்ன இது என் வாழ்க்கையில் டைரி அடிக்கடி குறிக்கிடுகிறதே,இது என்ன இடியை என் தலையில் இறக்கப் போகிறதோ பேசாமல் அதை அவள் பையில் வைத்துவிடலாம என்று நினைத்தேன். அவள் விழித்துக் கொண்டால் என்ன நினைப்பாள், திருடன் என்று கத்துவாள். சே என்ன தர்ம சங்க்டம. எல்லாவற்றையும் மீறீய ஆர்வத்தில் டைரியை கைகள் நடுங்க அந்த மெல்லிய விளக்கொளியில் வாசிக்கத் தொடங்கினேன்.

அவள் இன்றைய தேதியில் தன் கணவர் மிஸ்ராவை பிரிந்து வேலை நிமித்தமாக போவதைப் பற்றி எழுதியிருந்தாள். முந்தைய பக்கங்கள் எல்லாவற்றிலும் அழகுத் தமிழில் அவள் கணவன் புராணம் தான். சில அந்தரங்கமானவற்றைக் கூட எழுதியிருந்தாள்.ஒரு பக்கத்தை வாசித்த போது என் இதயம் துடிப்பதை ஒரு நொடி நிறுத்திக் கொண்டது. அவள் பம்பாய் சிவப்பு விளக்கு பகுதியில்ருந்து மீட்டு எடுக்கப்பட்ட பெண்.

அவமானத்தின் கறை படிந்த தன் வாழ்வை எப்படி சமன் செய்வது எனத் தெரியாமல் சிறு வயதில் அரைகுறையாக கிறுக்கிக் கொண்டிருந்த ஓவிய முயற்சிக்கு உயிர் கொடுக்க மிஸ்ராவிடம் மாணவியாக சேர்ந்ததும், அவர் இவளின் அன்பாலும் திறமையாலும் ஈர்க்கப்பட்டு மனைவியானதையும் விரிவாக எழுதியிருந்தாள். எழுதும்போதும் கண்ணீர் சிந்தியிருக்க வேண்டும்.சில எழுத்துக்கள் அழிந்திருந்தது.

வாழ்க்கையெனும் ஓவியம் அவளை சிதைத்து அலங்கோலமாக்கிவிட்டு பின் அழகாக்கியும் பார்த்துவிட்டது. அழகு அலங்கோலம் இவையெல்லாம் அவரவர் மனப்பான்மை.
மேலும் அந்த டைரியை என்னால் வாசிக்க முடியவில்லை. அச்சிறுமியின் டைரியும் இந்த யுவதியும் ஒருவரே தானா? அல்லது இருவரின் வாழ்க்கை சூழல் ஒரே விதத்தில் இருக்கின்றதா? இருவரும் தமிழ்ப்பெண்கள் என்பதைத் தவிர வேறு ஒரு குறிப்பும் என்னிடம் இல்லை.

அந்தக் குழந்தைக் கையெழுத்திற்கும் இந்த முதிர்ந்த எழுத்திற்கும் உண்டான வித்யாசங்களை கண்டறியும் திறன் எனக்கில்லை.எப்படியோ மனம் கனத்துக் கிடந்த நான் புதிதாய் எதோ ஒன்று எனக்குள் உட்புகுந்தது போன்ற ஆசுவாசத்துடன் கண்கள் மூடி உறங்க ஆரம்பித்தேன். கனவில் கைகோர்த்து சென்றனர் சிறுமி ஒருத்தியும்,இளம்பெண் ஒருத்தியும்.
எங்கும் நிற்காமல் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தது ரயில்.

-நிலாரசிகன்

Friday, March 06, 2009

பிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதைகள்




1.யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன்
அவளை நெருங்குகிறானவன்.

2. புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்னல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

3. சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்.

நன்றி: யூத்புல்விகடன்.காம்

Wednesday, March 04, 2009

வால் பாண்டி சரித்திரம் - சிறுகதை

சிறுகதையை படிக்க இங்கே அழுத்தவும்

Sunday, February 15, 2009

ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு "ஏ" பிரிவு - சிறுகதை

http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/02/blog-post.html

Saturday, February 07, 2009

துயர்மிகுந்த இரவு இதுவாகத்தானிருக்கும்

தொட்டில் குழந்தையொன்று
தவறி
விழுவதை காண நேர்கின்ற
தாயின் வலியைவிடவும்
அதிகமான வலியை இந்த இரவு
எனக்குத் தருகிறது.
ஒற்றை அறையில்
இறுக மூடிய சன்னலோரம்
கண்களில் வழிகின்ற நீருடன்
அமர்ந்திருக்கிறேன்.
துளிர்த்த அன்பிலும் தூசிகள்
படர்ந்துவிட்ட பின்
இது துயர்மிகுந்த இரவுதான்.

Friday, February 06, 2009

படித்ததில் பிடித்தது:

"அன்பு யார் மீதும் காட்டலாம்.ஆனால் கோபம் உயிருக்கு மேலான உரிமை உள்ளவர்கள் மீது மட்டுமே காட்டமுடியும்."

Wednesday, February 04, 2009

மனசை பற்றிய சில குறிப்புகளும்,கேள்விகளும்...


1.குரங்கின் பரிணாமம் மனிதனாக மாறியது.மனசை தவிர.
2.மனதிற்கு காயங்களை தந்துவிட்டு கண்ணீரை மட்டும் சிந்துகிறது விழிகள்.
3.உடலில் எங்கிருக்கிறது இந்த வெட்கம் கெட்ட மனசு?
4.ரசனைகளை நசுக்கும் கால்களின் பாதைகளிலும் பூக்கள் மலரவே வாழ்த்துகிற மனசை என்னசொல்லி திட்டுவது?
5.தவிர்த்தலை பரிசளிக்கும் இதயங்களை மறக்கும் மனசு எங்கே கிடைக்கும்?
6.ஊனத்தை முன்நிறுத்தி நிராகரித்த வலி மறக்க தேவை மனமா,பணமா?
7.உடைந்த கண்ணாடியில் ஓராயிரம் பிம்பங்கள். உடைந்த மனசில் ஒரே ஒரு பிம்பம்.

Thursday, January 29, 2009

மூன்று சொட்டு கண்ணீர்

1.
நெஞ்சு நோக்கி நீள்கின்ற விரல்களின்
நடுவிலும்
பரிகசிக்கும் சிரிப்பு
சப்தங்களிலும்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
வாழ்ந்து கெட்டவனின் சுத்தமான
கண்ணீர்.

2.
என்னை ஏமாற்றுவதாய்
நீயும்
உன்னை ஏமாற்றுவதாய்
நானும் நடத்துகின்ற
நாடகத்தில்
கோமாளியாகி வெளித்தெரியா
கண்ணீரில் நனைகிறது
நம் பவித்திர நேசம்.

3.
நடுநிசியில் தெருவோர
மரத்தடியில் உறங்குகின்ற
பைத்தியக்காரி
மார்போடு அணைத்திருந்தாள்
பொம்மையொன்றை.
அவளுக்கு பிறக்க
இயலாமல் போனதற்காய்
அப்பொம்மை அழுத
கண்ணீர்தானோ
இந்த இரவுமழை?

Tuesday, January 20, 2009

இரு நிகழ்வுகள்

நிகழ்வு 1:

மணல்வீடு சிற்றிதழ் & களரி தெருக்கூத்துப்
பயிற்சிப்பட்டறை
இணைந்து நிகழ்த்தும்

மக்கள் கலை இலக்கிய விழா

நாள் : 24 சனவரி 2009,சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி.
இடம்: ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல்,மேட்டூர்
தாலுக்கா,சேலம் மாவட்டம் 636453

பஸ்ரூட் : சேலம் - டூ - மேட்டூர்
பஸ்நிறுத்த : பொட்டனேரி

தொடர்புக்கு : மு.ஹரிகிருஷ்ணன்(9894605371)

நிகழ்வு 2:

யுகமாயினி இலக்கியக்கூடல்

இடம்: I.C.U.F அரங்கம்,சத்திரம்,திருச்சி
நாள்: 26-01-2009
காலம்: பிற்பகல் 3 மணி
தலைமை : பிரபஞ்சன்
வாழ்த்து :பழமலய்
யுகமாயினி கவிதைகள் அலசல்: இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
சிறுகதைகள் அலசல்:
தஞ்சாவூர் கவிராயர்
கட்டுரைகள் அலசல்:
ஆதவன் தீட்சண்யா
சிற்றிதழ் களம் : கஜேந்திரன்
ஒருங்கிணைப்பு: அரங்கமல்லிகா/இரா.எட்வின்

Saturday, January 17, 2009

புனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்

ஒரு படைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது/சிலிர்க்க வைத்தது/வசீகரித்தது/காறி உமிழ்ந்தது/அடித்து துவைத்து போட்டது/நீ எழுதறதெல்லாம் ஒரு எழுத்தா என கேள்விகேட்டது/தூக்கம் கெடுத்தது/துக்கம் கொடுத்தது/சிரிக்க வைத்தது/சிலிர்க்க செய்தது அந்த படைப்பின்,சிறுகதை தொகுப்பின் பெயர்

"புனைவின் நிழல்" எழுதியவர் மனோஜ்.உயிர்மை ப‌திப்ப‌க‌ம்

மாந்த்ரீக யதார்த்தத்தை முன்னிருந்திய நவீன படைப்புகளில் மிகச்சிறந்தது.(இல்லை இதைவிட‌ சிற‌ந்த‌ தொகுப்பும் இருக்கிற‌து என்ப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் பெய‌ர் ம‌ட்டும் த‌ராம‌ல் ப‌திப்ப‌க‌த்தின் பெயரையும் த‌ந்து விடுங்க‌ள். )

கவிதைமீது காதலுற்று பலகாலம் கவிதைகளைவிட்டு வெளியே வராமல் இருந்தவன் என்பதால் சிறுகதை வாசிப்பு கடந்த 2007 வரை மிகக்குறைவாகவே இருந்தது. 2008ல் எனக்கென்ன ஆயிற்றோ தெரியவில்லை சிறுகதை பைத்தியமாகவே மாறிவிட்டேன். கிட்டத்தட்ட 3000 சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருப்பேன்.

புனைவின் நிழலை படிக்க எடுத்தவுடன் ஒரே மூச்சில் இதிலிருக்கும் 15 கதைகளையும் படித்துவிடவில்லை. காரணம் மற்ற எழுத்திலிருந்து மனோஜின் எழுத்து மாறுபட்டிருக்கிறது. யதார்த்தம் மீறிய கற்பனையும்,மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிய துடிக்கும் மனமும் இவருக்கு வாய்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி சிறுகதையில் வாசகனை கட்டிப்போடும் வித்தையும் பல இடங்களில் காண முடிகிறது.

குறிப்பாக நான்கு சிறுகதைகள் கச்சை,சர்ப்ப வாசனை,அட்சர ஆழி,பால்.
இந்த நான்கு சிறுகதைகளில்தான் மனோஜ் தனித்து நிற்கிறார்.

கச்சை மீது ஆவல்கொண்ட பெண்ணொருவளை கச்சை அணிய சம்மதிக்காத சமுதாயம் நிர்வாணப்படுத்தி அவமதிக்கிறது.அந்த அவமானம் தாளாமல் தூக்கில் தொங்குகிறாள்...இவை எப்போதோ நடந்ததாக சொல்லப்படுகிறது. அவள் தூக்கில் தொங்கிய புளிய மரத்தின் அருகிலிருக்கும் வீட்டில் கதையின் நாயகி வந்து தங்குகிறாள். அவள் அணியும் நவீன கச்சையை தூக்கில் தொங்கியவள் ஆர்வமோடு ஸ்பரிச்ச முயல்வதாக செல்கிறது கதை. இந்தக் கதைதான் இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கதை என்பேன்.

சர்ப்ப வாசனை கதையில் வனத்தை பற்றிய விவரணைகள் மிக நுட்பமாக அமைந்திருக்கிறது.

சரி இந்தப்பதிவின் தலைப்பிற்கு வருவோம்.

இந்த புனைவின் நிழலை எழுதிய மனோஜை இன்று புத்தக காட்சியில் உயிர்மை அரங்கில் சந்தித்தேன்.
எதிர்பாராத சந்திப்பில் நா எழவில்லை எனக்கு. அருகில் சென்று கரம்பற்றி புனைவில் நிழல் வாசித்தேன் ரொம்ப நன்றிங்க...அடுத்து எப்போ எழுதுவீங்க, என்றெல்லாம் பேசிக்கொண்டே போனேன் என் பெயரைக்கூட சொல்ல மறந்து. அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியின் ரேகைகள் படர்வதை உணர முடிந்தது. யாரோ ஒரு அந்நிய‌னின் அடிம‌ன‌திலிருந்து எழுகின்ற‌ பாராட்டை விட‌ சிற‌ந்த‌து எது?

ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ எழுத்தாளரை ச‌ந்தித்த‌ ம‌கிழ்ச்சியில் திளைத்திருந்த‌போது அருகில் வ‌ந்து நின்றார் ஒருவ‌ர்.அது சாரு நிவேதிதா.

சாருவை ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசிய‌தில்லை. ஏனெனில் அவ‌ரை ப‌ற்றி வ‌ருகின்ற‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் அவ‌ர‌து ராச‌லீலாவின் ப‌க்க‌ங்க‌ளையே மிஞ்சிவிடும்.

"அந்தாளா,அவ‌ருகிட்ட‌ எவ‌ன் டா பேசுவான்...இப்போ பேசினா நாளை என் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு கார‌ண‌ம் நேற்று என்னோடு பேசிய‌வ‌ர்னு வெப்சைட்டுல‌ எழுதுவாரு.."

"அவ‌ரு ஒரு மாதிரி"

"சீ..ஸெக்ஸை த‌விர‌ அவ‌ருக்கு என்ன‌ தெரியும்"

"போதையில‌ இருப்பாருடா...ஜாக்கிர‌தை"

இதுபோன்ற‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளை கேள்விப‌ட்ட‌தால் வ‌ழ‌க்க‌மான‌ தமிழ‌ன் போல‌ "ந‌ம‌க்கேன் வம்பு" என்று பேச நினைத்தும் பேசாம‌ல் வ‌ந்துவிடுவேன்(க‌ட‌ந்த‌ 2008ம் ஆண்டு புத்த‌க‌ க‌ண்காட்சியிலும் பார்த்துவிட்டு பேச‌மால‌ வீடு திரும்பினேன்)

சாரு எங்க‌ள் அருகில் வ‌ந்த‌தும்,கைகொடுத்து ந‌ல‌ம் விசாரித்தேன். என் பெயர் நிலார‌சிக‌ன் உங்க‌ள‌து இணைய‌த‌ள‌ம் தொட‌ர்ந்து வாசிப்ப‌வர்க‌ளில் நானும் ஒருவ‌ன் என்றேன்.ஆஸாதி புத்த‌க‌ம் வாங்க‌ வ‌ந்தேன் என்றேன்.

இத‌ற்கெல்லாம் சாரு எப்ப‌டி ம‌றுமொழி பேசியிருப்பார்?

நிலார‌சிக‌ன்: சார்,ந‌ல‌மா?

சாரு: ந‌ல்லா இல்ல‌ன்னுதான‌ பேங்க் அக்க‌வுண்ட் கொடுத்திருக்கேன் பார்க்க‌லையா?

நிலார‌சிக‌ன்: உங்க‌ 108 க‌தையும் நெட்ல‌ ப‌டிச்சேன்.

சாரு: "காம‌ரூப‌ க‌தைக‌ள்" வாங்க‌ மாட்டேன்னு இன் டைர‌க்டா சொல்றீயா?


நிலார‌சிக‌ன்: ஆசாதி புத்த‌க‌ம் அமெரிக்க‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் கேட்டிருந்தார்.வாங்கி அனுப்ப‌லாம்னு வ‌ந்தேன்.

சாரு: அப்ப‌டியே என் பேங்க் அக்க‌வுண்ட்டையும் கொடுத்துடு ராஜா.


இப்ப‌டியெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அத‌ற்கு நானும்,சாருவும் பொறுப்ப‌ல்ல‌ :)

மிக‌ மென்மையான‌ புன்முறுவ‌லுட‌ன் கேட்கின்ற‌ கேள்விக‌ளுக்கு மிக‌ நேர்த்தியான‌ ப‌திலை த‌ந்தார்.
சாருவா இது என்று ஆயிர‌ம் முறை ம‌ன‌ம் கேட்டுக்கொண்ட‌து. சாரு மீது நான் கொண்டிருந்த ‍‍நெகட்டிவ் பிம்பம் உடைந்து நொறுங்கியது.எழுத்தில் எப்ப‌டியும் இருந்துவிட்டு போக‌ட்டும்.யாரை ப‌ற்றிய‌ ப‌ய‌முமின்றி எதைவேண்டுமானாலும் எழுத‌ட்டும்.But,He is a Gem இவ்வ‌ளவு ப‌டித்தவ‌ர்,எழுத்தில் சூர‌ர்,க‌லைக‌ள் ப‌ல‌ க‌ற்ற‌வ‌ர் ஆயினும் Down to earth.
இது புக‌ழ்ச்சி என்பவ‌ர்க‌ள் சாருவுட‌ன் ப‌ழ‌கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டு தெரிந்துகொள்ளுங்க‌ள்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அசோக‌மித்திர‌ன்,சுஜாதாவிற்கு அடுத்த‌ப‌டி எதைப்ப‌ற்றியும் பேச‌/எழுத‌ முடிகிற‌ எழுத்தாள‌ர் சாரு ம‌ட்டும்தான்.

சாருவின் ப‌டைப்புக‌ள் அனைத்தையும் நான் வாசித்த‌தில்லை. ஆனால் அவ‌ர் எழுத்தின் வேக‌ம் பிர‌மிக்க‌ வைக்கிற‌து. அல‌சி ஆராய்ந்து எழுதுகின்ற திரைவிம‌ர்ச‌ன‌ங்க‌ள் விய‌க்க‌ வைக்கிற‌து(சமீபத்திய உதார‌ணம்: சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ப‌ற்றிய‌ பார்வை,உயிர்மை இத‌ழில் வெளிவ‌ந்த‌து)

So, ஒருவ‌ருடைய‌ எழுத்தை வைத்து அவ‌ரை எடைபோடாதீர்க‌ள் அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பின்ன‌ர் அவ‌ர் ப‌ற்றி பேசுங்க‌ள் என்கிற‌ ப‌ழைய‌ ப‌ஞ்சாங்க‌த்தை பாட‌விரும்பாம‌ல் இந்த‌ ப‌திவுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.Have a great week ahead guys! :)

Monday, January 12, 2009

புத்தக காட்சியில் என் புத்தகங்கள்

நண்பர்களுக்கு,

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக காட்சியில் கடை எண் 3ல்(எனி இந்தியன் பதிப்பகம்)
என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் கிடைக்கும்.

1.ஒரு பட்டாம் பூச்சியின் கனவுகள்
2.மயிலிறகாய் ஒரு காதல்

வாங்கிப்படித்தவர்கள் உங்களது விமர்சனங்களை nilaraseegan@gmail.com க்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

Friday, January 09, 2009

வாசித்து நேசித்த புத்தகங்கள்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்
என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்
போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்
நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்
10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.

சிறுகதை தொகுப்புகள்:

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
[நர்மதாவில் கிடைக்கலாம்]

மண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த
படைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த
கதைகள்

மண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]

காமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்
வா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற
படைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் "பச்சை மனிதன்" கதை
மாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

மிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல? குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி
பொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.

புனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]

மனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க
இயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை
நாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன."கச்சை" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது

உடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]

சைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]

இரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.
அறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க
வைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.

பிராந்து - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்
அதனை உணரலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]

நேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்
வலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்

இருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்
மனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]

நினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா? வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன
சொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி?]

அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]

பாஸ்கர் சக்தி "மெட்டிஒலி" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து
நிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.
வாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்
என்பதை உணர்த்துகிறது.

விசும்பு-ஜெயமோகன்[உயிர்மை?]

அறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்
சில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.

வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]

நவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்
தனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.

புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]

விளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த
தொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.

இன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)
நான் வாசித்தவை.

சிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை
படிக்க விரும்பினால் "முத்துக்கள் பத்து" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை "அம்ருதா" பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.

இதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை
தொடர்ந்து எழுதுகிறேன்.

தனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு

பகிர்ந்துகொண்டதில் மகிழ்ந்து,
-நிலாரசிகன்.

Thursday, January 08, 2009

சென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்

இன்று ஆரம்பித்தது 32வது சென்னை புத்தக
கண்காட்சி. முதல் நாள் என்பதால் பல புத்தகங்கள் இன்னும் பிரிக்கப்படாத பெரிய
பெட்டிகளில் இருந்தன. மாலை 5 மணிக்கு பிறகு கூட்டம் வர ஆரம்பித்தது.

நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் முதல் கவிதை தொகுப்பு
"அந்தரங்கம்" நான் வாங்கிய புத்தகங்களில் முதலில் வாசிக்க காத்திருக்கிறது.

அனிதாவின் "கனவு கலையாத கடற்கன்னி" கவிதை தொகுப்பு உயிர்மையில்
இன்று மாலைவரை வந்து சேரவில்லை. (இவ்வருடம் வெளிவருவதாக
உயிர்மை இதழில் படித்தேன்)

வலைப்பதிவர்கள் சார்லஸ்,லக்கிலுக்,அதிஷா மூவரையும் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது.

வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வலைஞர்கள் சந்திப்பு ஒன்று வைக்கலாமா?
வருகை தரும் நண்பர்கள் பெயர்களையும்,அலைபேசி எண்ணையும் பின்னூட்டமிடுங்கள்.
தேதி,நேரம் மாற்றி வைக்க முடிவெடுத்தாலும் அதையும் தெரிவித்துவிடுங்கள்.
ஒரு நல்ல சந்திப்புக்கு காத்திருக்கிறேன்.

ஏழு ரூபாய்க்கு விற்கும் தேநீர் மட்டும் கசக்கிறது. மற்றபடி திரும்பிய பக்கமெல்லாம்
நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே நடப்பது ரோஜாக்களுக்கு நடுவில் பறக்கும்
பட்டாம்பூச்சியின் குதூகுலத்தை தருகிறது.

[என் கவிதை நூல் "மயிலிறகாய் ஒரு காதல்" எனி இந்தியன் கடை எண் 3ல் கிடைக்கும்]

Wednesday, December 31, 2008

நிலா விருதுகள் 2008

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் நான் அதிகம்
எதிர்பார்ப்பது ஆனந்தவிகடனில் சுஜாதா அவர்களின்
விருதுகளைத்தான். இவ்வருடம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்
அந்த காந்த எழுத்தாளர். அவருக்கு அஞ்சலியுடன்
இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

[இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட Judgement]


விளையாட்டு :


சிறந்த கிரிக்கெட் அணிகள் : தென்னாப்ரிக்கா,இந்தியா

சிறந்த மட்டையாளர் : கெளதம் காம்பீர்

சிறந்த பந்துவீச்சாளர் : ஸ்டெயின்

சிறந்த பீல்டர் : ரிக்கி பாண்டிங்

சிறந்த கேப்டன் : தோனி

சிறந்த வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 103* இங்கிலாந்துக்கு எதிராக, டும்னி 166 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 117 முதல் பைனலில் - எதிரணி ஆஸ்திரேலியா

சிறந்த டி20 இன்னிங்ஸ் : கிறிஸ் கெயில் 67 ரன்கள் - எதிரணி நியுசிலாந்து

சிறந்த மைதான வாசகம்: ""Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is watching." சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் விளையாடியபோது காணப்பட்டது.

சிறந்த விக்கெட் : ரிக்கி பாண்டிங்ஐ போல்ட் ஆக்கிய இசாந் சர்மாவின் பந்துவீச்சு

சிறந்த புதுமுகம்: அஜந்தா மெண்டீஸ் - இலங்கை.


சிறப்பு விருது : அபிநவ் பிந்ரா,விஸ்வனாதன் ஆனந்த் மற்றும் சீனாவிற்கு(தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவை 2ஆம்
இடத்திற்கு தள்ளியதற்காக)

சொதப்பல் விருது: ஹர்பஜன் சிங்( ஸ்ரீசாந்தின் கன்னத்தை மைதானத்திலேயே பதம் பார்த்ததால்) மற்றும் BCCIக்கு -தொடர்ந்து
ICLஐ தடை செய்து வருவதற்கு.


இலக்கியம்:

சிறந்த கவிதை தொகுப்பு :கவிஞர்.இளங்கோ கிருஷ்ணனின் "காயசண்டிகை" [காலச்சுவடு வெளியீடு]

சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு

சிறந்த கட்டுரை தொடர் : தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்,தீராநதியில் ஜெயமோகனின் அங்கத கட்டுரை

சிறந்த சிறுகதைகள் : "சாட்டை" - கண்மணி குணசேகரன்,"இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன" -எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த சிற்றிதழ் : மணல்வீடு

சிறந்த புதிய இதழ் : வார்த்தை

சிறந்த புதுமுக கவிஞர்கள் : சகாராதென்றல்,குட்டிசெல்வன்,அனுஜன்யா,லக்ஷ்மி சகாம்பரி,செல்வராஜ் ஜெகதீசன்,ரிசான் ஷெரீப்,பாஸ்கர்

சிறந்த புதுமுக சிறுகதையாளர்கள்: தமிழ்நதி,உமாஷக்தி,அருட்பெருங்கோ

சிறப்பு விருது : சிங்கையிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கும், இலங்கை இனப்படுகொலையை கண்டித்து
எழுந்த இலக்கிய உலக எதிர்குரலுக்கும்(உண்ணாவிரதம்,ஊர்வலம்)


வலையுலகம்:

சிறந்த நகைச்சுவை பதிவு: துப்பாக்கி தேவை - செல்வேந்திரன்

சிறந்த அறிவியல் புனைக்கதை : வலைப்பதிவர் வெண்பூ எழுதிய "இரண்டாவது மூளை"

சிறந்த சினிமா பதிவுகள் : முரளிக்கண்ணன்

சிறந்த இணைய இதழ்: உயிரோசை

சிறந்த புதுமுகங்கள் : யாழிசை ஒர் இலக்கிய பயணம் மற்றும் அதிஷாஆன்லைன்

சிறந்த யோசனையாளர் : தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வு அளித்த வலைப்பதிவர் "யோசிப்பவர்"

சிறப்பு விருது: சிறில் அலெக்ஸ்(அறிவியல் புனைக்கதைகள் போட்டி நடத்தி பல வலைப்பதிவர்களின் கற்பனைக்குதிரைகளை
தட்டி விட்டதற்காக)

சொதப்பல் விருது: காணாமல் போன தேன்கூடுவிற்கு.

சினிமா:

சிறந்த திரைப்படம் : சுப்பிரமணியபுரம்

சிறந்த பிறமொழி திரைப்படம் : தாரே ஜமீன் பர்(ஹிந்தி)

சிறந்த பாடல்வரிகள் : அனல்மேல் பனித்துளி(வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம் திரைப்படங்களுக்காக)

சிறந்த இசையமைப்பாளர் : Harris ஜெயராஜ்(வா.ஆயிரம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: கதிர்

சிறந்த இயக்குனர் : சசிக்குமார்,சசி

சிறந்த நடிகர்: சூர்யா(வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை: பார்வதி(பூ)

சிறந்த வில்லன்: பிரசன்னா - அஞ்சாதே
சிறப்பு விருது: அஞ்சாதே,தசாவதாரம்,சரோஜா மற்றும் பத்துவேடங்களில் அசத்திய கமலுக்கும்.

சொதப்பல் விருது: குசேலன்(தலைவா இனிமே இந்த மாதிரி ரோல்ல எல்லாம் நடிக்காத,எங்களுக்கு தேவை பாட்சாவும்,படையப்பாவும்தான்
தல - ஒரு பாமர ரசிகனின் வேண்டுகோள்!!)


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நடந்தேறவும்,கனவுகளும்,லட்சியங்களும்
நிஜமாகவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 30, 2008

இலக்கிய சிந்தனை

நண்பர்களே யுக‌மாயினி ந‌வ‌ம்பர் 2008 இத‌ழில் வெளியான‌ என்னுடைய‌ "சேமியா ஐஸ்" எனும் சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ளில் வெளியான‌ 60 க‌தைக‌ளில் இர‌ண்டாம் இட‌த்தை அளித்திருக்கிற‌து என்ப‌தை ம‌கிழ்வுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, December 27, 2008

பாதங்களின் மொழி

1.பாதங்களின் மொழி

இதழ் உதிர்க்கும் பழகிய
வார்த்தைகளில் சலிப்புற்ற
பாதங்கள் தமக்கென தனிமொழியை
உருவாக்க ஆரம்பித்தன.
பூக்களை மிதிக்கும் தருணங்களில்
மெளனத்தை மொழியாக கொள்ளவேண்டுமெனவும்
சுவடுகளை மிதித்தால்
மன்னிப்பை மொழியாக்க வேண்டுமெனவும்
தீர்மானித்தன.
வார்த்தைகள் ஏதுமின்றி மொழியொன்று
உருவானது.
ஒவ்வோர் உதடுகளாய் ஊமையாகி
பாதங்களின் மொழி
பூமியெங்கும் பரவ ஆரம்பித்தபோது
ஊனன் எனும் சொல்
பூமியின் அடியாழத்தில்
தொலைந்துபோயிருந்தது.

2.சொல்லப்படாத சொற்கள்

பிரக்ஞையற்று உதிர்ந்துகொண்டிருந்த
அவனது கலைந்தசொற்கள்
அவளை நோக்கி
கைகள்விரித்தவாறு
காற்றில் நீந்த ஆரம்பித்தன.
ஒவ்வொரு சொற்களாய்
அள்ளியெடுத்து
சரமாக்கி கூந்தலில் சூடிக்கொண்டு
சிரித்தாள்.
அவனுக்கும் அவளுக்கும்
இடையே அலைந்துகொண்டிருந்தன
சொல்லப்படாத சொற்கள் சில.

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடலை
இங்கு பதிவிடுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)
(அன்பென்ற மழையிலே)

2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..

1.ஆனந்தவிகடன்,கல்கி,மற்றும் சிறுபத்திரிகைகளில்
வெளியான என் படைப்புகள்

2.முத்தமிழ் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா முதல் தேகிவரை குழும நண்பர்கள்
பலரின் சந்திப்பு - தித்திப்பு.

3. நன்றி மறந்த வி*ரோ.

4. சில வருடங்களாக பார்க்க நினைத்து முடியாமல் இவ்வருடம்
பார்த்து ரசித்த இரு திரைப்படங்கள் 1.City of God 2.Rabbit Proof Fence

5. சேலம் மாவட்ட இலக்கிய நண்பர்களின் சந்திப்பு

6. வெகு நாட்களாக வாசிக்க நினைத்து இவ்வருடம் வாசித்த வண்ணநிலவனின்
"கடல்புரத்தில்" நாவல்.

7. நண்பன் விழியன் திருமண நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு சந்திப்பில் நடந்த கலந்துரையாடல்

8. ஏற்காடு சுற்றுலா

9. நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.

10. மறக்க விரும்பாத ஒரு கனவு. மறக்க விரும்பும் சில நினைவுகள்.

11. ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.

12.இவ்வருடம் வெளியான என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் (மயிலிறகாய் ஒரு காதல்,ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)

Monday, December 22, 2008

வனம்

வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நிற்கிறது என் மனசு. திசைகள் மறந்துவிட்ட கால்கள்
எங்கு செல்வதென்று புரியாமல் தவிக்கின்றன. முட்கள் நிறைந்த பாதையில் பூவொன்று என்னை வழிமறித்து
என்னை எடுத்துக்கொள் என்றது. இரண்டு கரங்களிலும் அப்பூவை ஏந்தி பாதங்களில் உதிரம் சிந்த வெகுதூரம்
கடந்து வந்தேன். முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.

இலைகளை உதிர்த்து நிற்கிறது ஒரு தனிமரம். நிழல்தேடி வந்த பாதங்கள் ஏமாந்து திரும்புகின்றன.
இரவின் கூரிய பற்களில் வடிகிறது என் தனிமையின் ரத்தம். கறுப்பு வெள்ளை பட்டாம்பூச்சியொன்றின் உதிர்ந்த
சிறகுகள் காற்றில் மிதக்கும் பின்னிரவில் எங்கோ ஒருத்தியின் சன்னமான அழுகுரலை காற்று இழுத்துச்செல்கிறது.

அவளும் அவனும் பரிமாறிக்கொண்ட நேசம் உருப்பெற்று ஓலமிட்டு வீதியில் அலைகிறது. நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை. எதிலும் லயிக்காத மனம் கட்டுகளை உடைத்து வேகமாய் ஓடத்துவங்குகிறது. கூகையின்
பார்வையில் பயந்து வீடு திரும்புகிறது மனம். எனக்குள் உருவாகிறது வெப்பநீருற்று. என்னை முழுவதுமாய் இழந்து
உடலிலிருந்து பிய்த்தெடுத்து வெளிக்குதிக்கிறேன். என்னுடலை நோக்கி ஒளிர்கிறதென் கண்கள்.
ஜீவனற்ற உடல் மண்ணில் வீழ்வதை வேடிக்கை பார்க்கிறேன். உடலற்ற உயிருடன் கைவீசி நடக்கிறேன் மனம்போன
போக்கில். காவிகள் வியப்புடன் என்னை பார்க்கின்றன. தாடிக்குள் புதைந்த முகத்துடன் உற்று நோக்குகின்றன சில கண்கள்.
வேகமாய் ஓடுகின்ற நதிக்குள் மெல்ல இறங்குகிறது என் உயிர். கடும்குளிர் நீரில் அமிழ்கிறது உயிரின் கடைசி மூச்சு.

யாருமற்ற இருண்ட வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நின்றுகொண்டிருக்கிறேன் உருவமற்று.

Monday, December 15, 2008

அலைபேசி தொலைந்த தினம்..

அலைபேசிக்குள் புதைந்துகிடந்தன
தொடர்புகொள்ளப்படாத
எண்கள் பல.

விரைந்தோடும் காலநதியில்
எப்பொழுதாவது பளிச்சிட்டன
மறக்கப்பட்ட எண்கள்.

ஏதோவொரு நபருக்கான
தேடலில் ஆழ்ந்திருக்கையில்
கண்முன் தோன்றி மறைந்தன
முகம்மறந்த எண்கள்.


காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..


எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்.

(வடக்குவாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியாகிய கவிதை)

Friday, December 05, 2008

உருவமற்ற நிழல்பொழுது

1.
நான் தனித்திருக்கும் உலகில்
என்னுடன் பயணிக்கிறது
நிழலொன்று.
எங்கிருந்து வந்ததென்றும்
யாருடையதென்றும் புரியவில்லை.
நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து
தப்பித்துவிட இயலாமல்
தளர்ந்து அமர்கிறேன்.
மெதுவாய் என் நிழலிடம்
பேச ஆரம்பித்தது
அந்த அந்நிய நிழல்.
புரிந்து கொள்ள முடியாத
மொழியில் இரு நிழல்களும்
பேசுவதை ஊமையாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான்.

2. மனம்

மேகங்கள் அலையும் மலைச்சரிவு
பச்சைநிறத்தை உடுத்திக்கொண்டு
உறங்குகிறது.
மரங்களின் நடுவில் நுழைந்து
பாறையில் விழுந்து
உடைகிறது மழைத்துளி.
சாம்பல் நிற அரவம்
அசைவற்று கிடக்கிறது
பெருத்த வேர்களைக்கொண்ட
மரத்தடியில்.
ஏதோ சில பறவைகளின்
சிறகடிப்புச் சத்தம் காற்றில்
கரைந்து வழிகிறது.
மலைப்பாதை வழியே
வளைந்து நெளிந்து ஊர்ந்துகொண்டிருக்கிறது
பேருந்தும் மனதும்.
-நிலாரசிகன்.

நன்றி : திண்ணை.காம்

Monday, December 01, 2008

கவிதைகள் இரண்டு

1.கண்ணாடியில் ஓர் அந்நியன்

இரவிலும் பகலிலும்
பிம்பங்களை உள்வாங்கி
சலித்த கண்ணாடி
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பிம்பத்தை
காண்பிக்க துவங்குகிறது.
சுயம் தொலைந்த நிஜம்
தெரியாமல் நீங்கள்
யாரோ ஒருவனை
தினம் சந்திக்கிறீர்கள்.
உங்களுக்கான நிறம்கரைந்து
உருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

2.இரவுக்குள் ஒளிந்திருக்கும் பகல்

மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது
பகலின் கீற்றுகள்.
முழுவதும் பகலான
மதியவேளையில்
உக்கிரதாண்டவமாடுகிறது
சில ஞாபகங்கள்.
பிரிவின் தகிப்பில் உதிர்ந்த
இலைகளை மிதித்தழித்து
உச்சமடைந்த ஞாபகங்கள்
ஒவ்வொன்றாய்
வீழ்ந்து மரித்தன.
தாங்கமுடியாத வலியுடன்
ஓடிச்சென்று இரவுக்குள்
நுழைந்து வழிகின்ற
கண்ணீரை துடைக்கிறது
பகலின் கரம்.

நன்றி: உயிரோசை

Sunday, November 30, 2008

மழை ரசித்தவர்கள்

மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

Tuesday, November 25, 2008

தினமணி கட்டுரை

கடந்த ஞாயிறன்று (23/11/2008) வெளியான தினமணி நாளிதழின் கட்டுரையொன்றில் என் கவிதையை பற்றிய குறிப்புவந்திருக்கிறது.
இங்கு சென்று பார்க்கலாம் :
நன்றி: தினமணி.காம்.

Sunday, November 23, 2008

சிதறல்கள்

1.தனிமைதான் என்னை எழுதச்சொல்கிறது. தனிமைதான் என்னை எழுதவிடாமல் கொல்லவும் செய்கிறது. தனிமைக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சுழல்கிறது என்னுலகம். அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.

2. எறும்புகளை கொல்வது எளிது.தரையோடு தேய்த்து நசுக்கலாம்.மருந்து துகளில் அழிக்கலாம்.புத்தகத்தால் அடித்தும் கொல்லலாம். அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை.

3. தினம் தினம் எங்காவது மரித்துக்கொண்டிருக்கின்றன நட்புகள். அநாதை பிணமாய் நடமாடுகின்றன கைவிடப்பட்ட நட்புகள். தோளில் சுமக்கின்ற சிலுவைகளைவிட நெஞ்சில் சுமக்கும் சிலுவைகளில் கனம் அதிகமானதாகவே இருக்கிறது.

4.பாதங்களுக்காய் தவமிருந்தேன் பாதங்கள் கிடைத்தன.பாதைகளுக்காய் தவமிருந்தேன் பாதை கிடைத்தது. எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.

Saturday, November 22, 2008

இலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பாரி இலக்கிய நிகழ்வு

இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கவிஞர்கள் சார்பில் வருகிற டிசம்பர் 07( 07.12.2008) அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம் நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,

தொடர்புக்கு
கவிஞர் . லீனா மணிமேகலை 98410 43438
கவிஞர் . இன்பா சுப்ரமணியன் 98841 20284.

ஒப்பாரி இலக்கிய நிகழ்வு என பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஒப்பாரிக்கலைஞர்களும் பங்கெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள் தங்களை பதிவு செய்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்யுங்கள்.
மற்றைய தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித நேய சிந்தனையாளர்களுக்கும் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து பெரும் வெற்றியடைய செய்யுங்கள்.

Friday, November 21, 2008

ஆனந்த விகடன் இதழில் என் கவிதைக‌ள்


நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய இரண்டு கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன.படித்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை இடுங்கள்.

1.பறவைகளின் மொழி அறிந்தவன்

பூனைகளின் மொழி அறிந்தவனை
சந்தித்தேன்.
நாய்களின் பாஷையும்
கொஞ்சம்தெரியுமென்றான்.
விநோத ஒலியை அவன்
உருவாக்கியதில் நான்கைந்து
பூனைகள் அவன் காலை சுற்றின.
பூனைகளை
தடவிக்கொண்டே கை நீட்டினான்.
பறவைகளின் மொழியில்
புலவன் நானென்றேன்.
விரக்தியான புன்னகையொன்றை தந்தபடி
நகர்ந்து சென்றான்.

2.இனம்

இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்

-நிலாரசிகன்.

Monday, November 10, 2008

திறக்காத கதவுகள்

யாருமற்ற வீட்டின்
கதவுகளை தட்டுகிறானவன்.
பதில் குரல் ஒலிக்காதபோதும்
தட்டுவதை நிறுத்தவில்லை.
அவனுக்குத்தேவை பதில்
அல்ல.

Tuesday, November 04, 2008

குழந்தைக்கவிதைகள் இரண்டு


1.அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

2.
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

(1வது கவிதை "மல்லிகை மகள்" மாத இதழில் இம்மாதம்(நவம்பர் 2008)வெளியாகி இருக்கிறது)

Wednesday, October 29, 2008

கல்கி இதழில் என் கவிதை

நண்பர்களுக்கு வணக்கம்.

இவ்வார கல்கி இதழில் வெளியான என்னுடைய மூன்று கவிதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

கல்கியில் வெளியான கவிதைகள்

(மேலுள்ள சுட்டியின் மூலம் கவிதையை படிக்க இயலாதவர்களுக்காக,கல்கியில் வெளியான கவிதைகளை இங்கே பிரசுரிக்கிறேன்)

குழந்தைகளின் உலகம்

1. கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

2. அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

3. மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

**********************************************************************************

எப்போதும்
எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Tuesday, October 21, 2008

ருசித்துக் கொண்டிருந்த இரவு

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
நிசியில் விசித்திரமானதொரு
அரவம்கேட்டு விழித்தெழுந்தேன்.
அறை முழுவதும் நடமாடிக்கொண்டிருந்தன
புத்தகங்களைவிட்டு வெளியேறிய
சொற்கள்.
ஏதேதோ கோஷமிட்ட
அவைகளின் மொழி புரிந்துகொள்வதாயில்லை.
திடீரென்று அவைகளுக்குள்
பெரும் யுத்தமொன்று உருவாயிற்று.
செத்து வீழ்ந்தன சில.
தோற்று ஓடின சில.
வென்று திரும்பிய சொற்கள் ஓடிச்சென்று
மீண்டும்
புத்தகத்தினுள் நுழைந்துகொண்டன.
வீழ்ந்த சொற்களின் குருதியை
யாருமறியாமல்
ருசித்துக்கொண்டிருந்தது இரவு.

கனத்த மெளனம்

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லா வெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ

-நிலாரசிகன்

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Wednesday, October 15, 2008

இரு கவிதைகள்

1.

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லாவெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.

2.

உனக்கான கடைசி
கடிதத்தை நான்
எழுதிக்கொண்டிருக்கையில்
புரிந்துகொள்ளப்படாத எனதன்பில்
விழுந்திருந்த கீறல்
உடைந்திருக்ககூடும்.

அறியப்படாத பூவொன்றின்
வாசனையில் லயித்திருக்கும்
உனக்கென் பிணத்தின்
வாடை திடுக்கிடச்செய்யலாம்
அல்லது
கைதட்டவும் தோன்றலாம்.

எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.

Friday, October 10, 2008

நீங்குதல்

வெகு இயல்பாய் நிகழ்கிறது
நம்மிடையேயான
ப்ரியங்களின் நீங்குதல்.

பிரிவுகுறித்த பிரக்ஞையற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களை பதிக்கிறது
தனிமை.

எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.

Tuesday, October 07, 2008

விகடனில் என் கதை

நண்பர்களுக்கு,

விகடனின் "யூத்புல் விகடன்" பகுதியில் என்னுடைய "ஏலியன்" விஞ்ஞான புனைக்கதை பிரசுரமாகியுள்ளது.

தொடர்புக்கு: http://youthful.vikatan.com/youth/story3.asp

கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னரே பிரசுரமாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். இன்றுதான் இதனை கவனித்தேன்.

கதை படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

Monday, October 06, 2008

பொழுதுகள்...

1. இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய
நீர்சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே
ஒலித்த ஓலம்.


2. எதிர்படும் நபர்களிடம்
பூ விற்க முயன்றுகொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி.
சூரியக்கதிர்கள் மங்கிப்போன
கருக்கலில் வாடியவளாய்
கடற்கரை மணலில் கால்நீட்டி
அமர்ந்து கடல் பார்த்தாள்.
முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.

3. நாய்களின் குரைப்புச்சத்தம்
இரவின் மெளனத்தை
குலைத்துக்கொண்டிருந்த தருணத்தில்
உடலை மறைக்கவியலா
உடைகளணிந்த கன்னியொருத்தி
குப்பைத்தொட்டில் எதையோ
தேடிக்கொண்டிருந்தாள்.
இருளை சுமந்துகொண்டு
அவளை நெருங்கின
இரு நாய்கள்.

4. தனித்துவிடப்பட்ட இரவில்
நெருப்பை உமிழ்ந்து
கொண்டிருந்தது தனிமையின்
நாவுகள்.
நடுச்சாமத்தில் தட்டப்பட்டது
அறைக்கதவு.
விடியத்தொடங்கிய அதிகாலை,
தனிமையின் மீது
உமிழ்ந்துவிட்டு புரண்டு படுத்தேன்.

அக்டோபர் 2008 "வார்த்தை" இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்