Friday, March 13, 2015

ஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி

ஜூலி யட்சி - கனவுகள் நிராகரிக்கப்பட்ட தேகத்தின் அரசி -
உமா சக்தி [இம்மாத தீராநதியில் வெளியான விமர்சனம்]

கவிஞன் ஒருவன் சிறுகதை எழுத்தாளன் ஆவதோ அல்லது நாவலாசிரியன் ஒருவன் கட்டுரையாளன் ஆவதோ அல்லது கட்டுரையாளன் ஒருவன் மேற் கூறிய இரண்டுமாவதோ அவனுடைய விருப்பமும் ,தேர்வும் சார்ந்த விஷயங்கள். அவன் படைப்பின் உட்பொருள் அதன் வடிவத்தைத் தீர்மானிக்கின்றது. அதற்கான பிரத்தியேக மொழியையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுகின்றது. ஒரு படைப்பாளிக்குக் கிடைக்கும் அனுபவங்களும் , தரிசனங்களும் , நோக்குநிலையும் படைப்புக்கான வடிவத்தைத் தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.. கையளவு நீருக்கு பெரியதோர் அண்டா எவ்வளவு அனாவசியமோ , அதே போன்று பரந்ததோர் உலகத்தை அடைத்து விட சின்னஞ் சிறு சிமிழும் போதுமானதல்ல என்பதை திறமை வாய்ந்த ஒரு படைப்பாளி அறிந்து வைத்திருப்பான்..எழுத்தின் கரம் பற்றிய மறுகணமே ஒரு படைப்பாளியை எழுத்து என்பது வழி நடத்திச் செல்கின்றது. எழுத்து நம்மை தேர்ந்தெடுத்ததா நாம் எழுத்தை தேர்ந்தெடுத்தோமா என்பதற்கு எந்தவொரு படைப்பாளியிடமும் அறுதியான பதில் இருக்காது. ஓர் மன உந்துதலில் அவன் கவிதை ,கட்டுரை ,சிறுகதை அல்லது,நாவலினதோ மடியில் அவன் அல்லது அவள் போய் வீழ்கிறாள்.அவனைப் படைப்பும்,படைப்பை அவனும் வளர்த்தல் நிகழ்கிறது. கவிஞனாகப் பரவலாகக் கவனம் பெற்ற நிலாரசிகனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான ஜூலி யட்சி வாசிக்க நேர்கையில் இது கவிதைத் தொகுப்பா கவிதை வடிவில் சிறுகதைத் தொகுப்பா என்று குழம்ப வைத்த தொகுப்பு இது.
கவித்துவமான முன்னுரையுடன் கவிதை நடையில் பத்து முத்தான கதைகள். ஒவ்வொரு கதைக் களனும் வித்யாசமானவை. பெண்ணுலகில் இத்தனை அணுக்கமாக, இத்தனை நுட்பமாக ஒரு ஆண் எழுத்தாளர் பதிவு செய்துள்ளது ஆச்சரியம். இந்த அளவு உள்வாங்கி பெண்ணாகவே உருமாறி எழுதிவிட்டாரோ என்று வியக்கும்படியான நேர்த்தியான பெண் உலகச் சித்திரப்புகள். இந்தக் கதைகளில் பெரும்பாலானவை மாய யதார்த்தவாத அவ்வப்போதும் யதார்த்தத்திற்கும் ஊடாடி பயணிக்கின்றன. அது எதுவாக இருப்பினும் வாசிக்கும் மனங்களை ஈர்க்கும்படியான கதையாடலும், சொற் பிரயோகங்களும், பாத்திரப் படைப்புகளும் இக்கதைகளை முற்றிலும் வேறொரு கோணத்தில் படிக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு கதைகளின் கற்பனை தீவிரத்தை நினைத்தபடி படித்துக் கொண்டிருந்த எனக்கு சட்டென்று மிதந்து கொண்டிருக்கிறேனோ எனத் தோன்ற இரு கைகள் தான் உள்ளது சிறகுகள் இல்லை என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினேன்.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஒவ்வொரு உலகம். தர்ஷணிப்பூ என்ற பெயர் எவ்வளவு அழகு இந்தச் சிறுகதையின் மையப்புள்ளி அதுவே. ஆண்களின் ஆதிக்கம் மனிதர்களின் அத்துமீறல்கள் வனங்களையும் இயற்கையையும் எப்படி எல்லாம் சிதைக்கின்றன என்ற குறியீட்டை உள்ளடிக்கிய கதை இது. அகால வேளையில் தந்தை தினமும் செல்லும் அருவிக்கரையோரம் அவரைத் தொடர்ந்து மகன் செல்ல, அங்கே அவன் காணும்காட்சி அவனை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. சிறகு முளைத்த பெண்ணொருத்திக்கு தன் தந்தை வைத்தியம் பார்க்க, சோர்வுற்று வீழ்ந்திருந்த அவள் ஓரளவுக்கு குணமான பின் அவர் விடைப்பெற்றுச் செல்ல, அவள் மரத்தைப் பிளக்கச் செய்து அதனுள் மாயமாகிறாள். அடுத்த நாள் தனியே வரும் மகன் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவள் வனப்பூக்களின் அரசி என்றும் அவள் பெயர் தர்ஷிணிப்பூ என்றும் அறிகிறான். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியும் துயரும் நிரம்பியவை.
இத்தொகுப்பின் முக்கியமான, நிகழ் உலகில் நடக்கக் கூடியதுமான கதை மழைத் தேன். கிராமத்துப் பள்ளி சிறுமி கண்மணியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவம் தான் கதை. ஆனால் இக்கதையை எழுத்தாளர் கையாண்டிருக்கும் விதம் தான் இதை ஆழமாக்குகிறது. சின்னஞ்சிறிய மனங்களில் எதிர்ப்பார்ப்பு, சந்தோஷங்கள், ஏமாற்றங்கள், அவமானங்களை இக்கதை பதிவு செய்கிறது. சடங்கானதும் ஆண்களிடம் பழகவோ பேசவோ தடை விதிக்கப்பட்ட கண்மணிக்கு செல்வம் மீது இயல்பாகவே ஒரு ஈர்ப்பு ஏற்பட அவனும் இவளைக் கடக்கும் போதெல்லாம் பார்வை வீசிச் செல்ல, அவர்களின் அறிவிக்கப்படாத முதல் காதல் தொடராமல் போனதன் காரணத்தை, கண்மணி அவள் சித்தி வீட்டிற்கு தங்கை இந்துவுடன் தங்கும் போது விவரிக்கிறார் கதாசிரியர். செல்வம் ஒரு நாள் நோட்டு வாங்க கண்மணியின் வீட்டுக்குச் செல்ல அங்கே கயிற்றுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த கண்மணி தன்னையறியாமல் சிறுநீர் கழித்திருந்தாள். செல்வம் அதை கிண்டலாக கண்மணியின் வகுப்பில் படிக்கும் தன் உறவுக்காரப் பெண்ணிடம் அவள் ஒண்ணுக்குப் போனது நார்க்கட்டில்ல இருந்த அதோ அங்க பெய்யற மழை மாதிரியில்ல இருந்துச்சாம் என்று சொல்லியிருக்கிறான். அன்றிலிருந்து அவள் மனதில் செல்வம் மீதான அசூசையும் மழை மீதான வெறுப்பும் வளரத் தொடங்கியது. சித்தி மகள் இந்துவுக்கும் இதே பிரச்னை என்று தெரிந்து செய்வதறியாது திகைக்கிறாள் கண்மணி. பூப்படைந்திருந்தாலும் இன்னும் சிறுமியாகத் தான் இருக்கும் இவள் போன்ற குட்டிப் பெண்களின் மனம். அது எதிர்ப்பாராமல் கிடைக்கும் அவமதிப்புகளைத் தாங்க இயலாமல் மனதை இம்சிக்க வைக்கும். கண்மணிக்குத் தோன்றிய எதிர்பாலின ஈர்ப்பு சில நாட்களிலேயே முறிந்து போனக் காரணம், செல்வத்தின் கேலியும் அவன் அதற்குப் பின் அவளை அதே நோக்கில் பார்ப்பதும்தான். இந்தக் கதை சாதாரணமாகத் தெரிந்தாலும் பதின்வயதுப் பெண்களின் இதுவரை பேசப்படாத பிரச்னையை மெல்லியதாக‌ உளவியலுடன் மிக நேர்த்தியாக பதிவு செய்கிறது.
விசித்திரன், சித்திர வதனி பெருநகர சர்ப்பம் இவை ஓரளவுக்கு சுமாரன கதைகள் தான். கதைகளுடன் இயைந்து வரும் கவிதை வரிகளை ரசிக்கலாம். வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை கதை நான் லீனியர் வகையில் பரீட்சார்த்த முயற்சியில் எழுதப்பட்டுள்ளது. அவளது இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது எனும் வரிகள் மூலம் கதையை க்ராஃபிக் கதை போல காட்சிரூபப் படுத்தியுள்ளார் ஆசிரியர்.இன்னும் சற்று தெளிவாக எழுதப்பட்டிருந்தால் இத்தொகுப்பில் மிக முக்கியமான கதையாக இருந்திருக்கும். சித்தர வதனி எனும் கதை நவீன பழிவாங்கும் பெண்ணின் கதையாக உள்ளது. தன்னை கலவிக்கு அழைத்த இருவரை வெவ்வேறு பெயர்களில் வேறு வேறு விதமாக காதலிப்பது போல நடித்து பழிவாங்குகிறாள் நித்தியா எனும் பெண். அவள் கையில் எடுத்த ஆயுதம் பெண்மை என்றாலும் அவள் அதைத் தற்காப்புக்காகவும் தன் போன்ற பிற பெண்களின் பாதுகாப்புக்காகவுமே இவர்கள் போன்ற அசுரர்களை வதம் செய்யப் புறப்பட்டவள்.
பெண்களின் காதலையும், கோபத்தையும், மென்மையையும் எழுதிச் சென்ற ஆசிரியர் திடிரென்று பாதை அகன்று பெண்களின் சிலர் செய்யும் ஏமாற்று வேலைகளையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பெருநகர் சர்ப்பம் என்ற கதையில். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் பெண் ஒருத்தி அந்த ஊரைப் பார்த்து வியந்து, தன்னை மெதுவாக அந்நகருக்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறாள். கிராமத்துக் காதலனை மறந்து புதுப் புது காதலர்களின் பின் செல்லும் நவ யுகப் பெண்ணாகிப் போகிறாள். அவளுக்கு மாரல்களைப் பற்றிய கவலைகள் இல்லை. அந்த நொடி இன்பமும் அடுத்த கட்டமும் மட்டுமே முக்கியம். இன்பம் தேடுதல் ஆண் சார்ந்த விஷயமாகவே பார்க்கப்படுகையில் ஒரு பெண்ணின் வேட்கையையும் அதற்காக அவள் போடும் வேஷங்களையும் துல்லியமாகச் சித்திரத்துள்ளார் ஆசிரியர்கள். சமீபத்தில் சென்னையில் பரவி வரும் கலாச்சார மாற்றங்களை இக்கதை பதிவு செய்வதோடு இன்றி இளம் பெண்கள் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயமான ஒன் நைட் ஸ்டான்ட் போன்ற கலாச்சார சீரழிவுகளை போகிற போக்கில் இக்கதை விவரித்துச் செல்கிறது. படிப்பவர்களின் அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக அல்லாமல் நடக்கும் சம்பவங்களை புனைவு அதிகமின்றி எழுதிய கதை இதுவாக இருக்கும்.
இத்தொகுப்பின் எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு கதை குறளியின் டிராகன். உருவம் கண்டு எள்ளாமை வேண்டும் என்று சிறுவயதில் திருக்குறள் படித்திருப்போம். ஆனால் பலர் படித்ததை எல்லாம் கடைப்பிடிப்பதில்லை. அடுத்தவரின் ஏதோவொரு கீழான நிலையைத் தன்னோடு ஒப்புமைப்படுத்தி தன்னை உயர்த்திக் காட்டும் குணம் பலருக்கு உண்டு. அது சாதியாக இருக்கலாம், அழகு, படிப்பு, பொருளாதார நிலை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எளியோரைக் கண்டால் நகைக்கும் கொடூர மனம் படைத்தவர்கள் பெருகிவிட்டக்காலக்கட்டம் இது. சாதாரணக் குடும்பத்தில் நான்காவது பெண்ணாகப் பிறந்த நாகாவைக் கண்டால் அவள் அப்பாவுக்குக் கூட பிடிக்காது. காரணம் கருவில் அழிக்க முடியாத அவள்அவள் குள்ளமாக குறுகிய உடலுடன் பிறந்தவள். அழகற்ற அவள் பெரும்பாலும் சக மாணவிகளால் ஒதுக்கப்படுகிறாள். தனிமை அவளுக்கு நிரந்திர துணையாகிறது.அவளுக்கு மிகப் பிடித்தமான விஷயங்கள் இயற்கையுடன் இயைந்து இருத்தல். மலைகளை, கடலைப் பார்த்துக் கொண்டே இருப்பது அவளுக்கு உவப்பான விஷயம். அவ்வப்போது மலைகளுக்கு சென்று வருவாள். மனித சஞ்சாரம் இல்லாத இடங்கள் எல்லாம் அவள் மனதுக்கு நெருக்கமான்வையே. தற்போது அவள் வசிக்கும் வீடும் ஒரு கடற்கரை ஒட்டிய விலாசமான வீடு.அவளுடன் செல்லப்பிராணி ட்ராகன் அங்குள்ளது. நாகாவின் வாழ்க்கையில் நடந்த நம்ப முடியாத அதிசயம் தான் அவள் வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. அதன் பின் அவளை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை மாறாக பல காதல் கடிதங்கள் அவளுக்குத் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவளுக்கு எதுவும் பொருட்டல்ல, அவளுக்கு தன்னுடைய தனிமையும் டிராகனும் கடலும் மட்டும் போதுமாயிருந்தது. இருப்பதும் இல்லாமல் போவதும் அவரவர் வாங்கி வந்த வரம். நமக்குக் கிடைத்தவற்றில் திருப்தியுடன் வாழ நினைத்தாலும் சமூகம் தன் கூரிய கரங்களால் சீண்டிக் கொண்டே தான் இருக்கும். வலிமையான மாயக் கரம் கொண்டு தான் அதை அடக்க முடியும். உண்மையில் இது சாத்தியமில்லை என்றாலும் புனைவுகளீல் நிகழும் இந்த மாயங்களைப் படிக்கும் போது இப்படி எல்லாம் நிகழாதா எனத் தோன்றுகிறது. அழகிய தேவதைக்கதையொன்றைப் படித்த மகிழ்வு இக்கதை தருகிறது. கேவல் என்ற சிறுகதை மேஜிக்கல் ரியாலிசம் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தை நினைவுப்படுத்தும் கதையாக இருப்பினும் சொல்லப்பட்ட விதம் அருமை. ப்ரியம்வதாவின் பகல் எனும் கதையில் நாயகி தன் பெயரை மறந்து போகிறாள். என்னவெல்லாமோ செய்து பார்த்தும் தன் பெயரே மறக்கும் அளவிற்கு அவள் மனது மறதியில் தோய்ந்து போய்க் கிடக்கிறது. வேறு எந்த உதவியும் இன்றித் தன் பெயரை எப்படியாவது கண்டுபிடிக்க ஆசைபப்டுகிறாள்.அவளுடைய காதலன் அவளுக்கு காதல் குறுஞ்செய்திகள் அனுப்புவது அவளை அழைத்துப் பேசுவது காதலின் அத்தனை ரம்மியங்களையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுடைய தற்போதைய ஒரே பிரச்னை இப்படி பெயரற்றவளாக மாறிப் போனதுதான். சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்குத் தேவை, கட்டற்ற சுதந்திரம் அவளை என்னவெல்லாம் செய்துவிடும் என்பதை மறைபொருளாக வைத்து இக்கதையை கத்தியின் மேல் நடப்பது போன்று எழுதியுள்ளார் ஆசிரியர். அவள் எடுக்கும் சில முடிவுகளால் கதையின் முடிவில் தன் பெயரைக் கண்டு அடைகிறாள். அவளுக்கு அவள் பெயர் தெரிந்துவிட்டாலும் வாசிக்கும் வாசகருக்கு அது தெரிவதில்லை. பெயரிலியாகவே அவள் முடிந்து போகிறாள். இக்கதையைப் படிக்கும் போது கவிஞர் பழநிபாரதியின் ஒரு கவிதை தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வந்தது.
"மரம்
வானம்
கூடு
இரை
எதுவும் ஒரு பொருட்டில்லை
அதைவிடவும் முக்கியம்
தனிமையின் சுதந்திரமென‌
பறந்துகொண்டிருக்கிறது
ஒரு பறவை"
தலைப்பு கதையான ஜூலி யட்சி மீண்டும் ஒரு பழிவாங்கும் கதை. ஆனால் எதிர்ப்பாராத சம்பவங்கள், மாய எதார்த்தவாதக்கதைக் களனில் சொற்சிக்கனத்துடன் பூரணமான ஒரு கதை.
இத்தொகுப்பு முழுவதும் கனவுகளுடனான பயணமாகவேச் சொல்வேன். வனம், மலை, கடல், மழை, ரயில் எனக் கதைகள் மாறி மாறி வெவ்வேறு வெளிகளில் சொல்லப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. அதனினும் சிறப்பு ஐம்பூதங்களைப் பற்றிய குறிப்புடனான சிறுகதை வடிவத்திலான முன்னுரை. சில கதைகள் மின்னி மறைகின்றன. சில கதைகள் தீவிரமான யோசனைக்கு வாசகனை இட்டுச் செல்கின்றன. சில கதைகள் லேசான முறுவலை வரவழைக்கின்றன. மொத்தத்தில் படிக்கவும் பத்திரப்படுத்தவும் மீள வாசிக்கவுமான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு தான் ஜூலி யட்சி. இவள் அனைவருக்கும் பிரியமானவளாகவே இருப்பாள்.

Thursday, January 22, 2015

ஜூலி யட்சி - விமர்சனம் 3

நெஞ்சில் நிறைந்த நிலாரசிகன் !

நிலாரசிகனின் ‘ஜூலி யட்சி’ சிறுகதைத் தொகுப்பினை ஒரே மூச்சில் படித்து விட்டேன். சில கதைகளை இரண்டு மூன்று முறை நிதானமாக படித்து உள்வாங்கினேன். 

நிலாரசிகனின் எழுத்துலகம் கனவுகளோடு வாழும் மனிதர்கள் நிஜங்களோடு சமரசமின்றி எப்படியெல்லாம் முரண்பட்டு வதையுறுகிறார்கள், போராடுகிறார்கள், பழிதீர்க்கிறார்கள் என்பதை புனைந்துரைக்கிறது. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் கனவுலக கதாப்பாத்திரங்களோடு வாழ்கிறார்கள். நிகழ்காலம் அவர்களுக்கு மன உகந்த மார்க்கமின்றி நகர்வதால் அவர்கள் தங்களின் உலகத்தை மோகினிகளோடும், தேவதைகளோடும், டிராகனோடும் வடிவமைத்துக் கொண்டு உழல்கிறார்கள்.

ஆண்களின் நயவஞ்சகத்தினால் ஏமாறும் பெண்கள் குரூரமாக ஆண்களை பழிவாங்குகிறார்கள். ஒரே பெண் இரண்டு பெயர்களில் இரண்டு ஆண்களை பழிவாங்குகிறாள். பெண் சர்வ சுதந்திரம் விருப்பம் உள்ளவளாக, அம்மா,அப்பாவின் பார்வையில் படாத தூரத்திற்கு சென்று தன்னை தன் சுதந்திரத்தை பேணுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். அழகற்ற பெண் தான் அழகியாக உலாவரும் கனவுலகில் வாழ்கிறாள். அவள் டிராகனோடு படுத்துறங்குகிறாள். இங்கே டிராகன் தனிமையின் குறியீடு.

சமகால உலகப் பொருளாதார வளர்ச்சியின் நீட்சியில் மனிதப் பண்புகள் சிதைவுண்டு போவதை மென்மையாக கவிதையில் சொல்வதுபோல சிறுகதைகளாக சொல்லியிருக்கிறார். சிறுகதைகளின் ஊடே செல்லும் இவரது சொல்லாடல்களில் சிலவை மனதில் அதிர்ச்சியூட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்களின் வன்முறை திகைப்பூட்டுகின்றன.
பெண் என்பவளை போகப் பொருளாக பாவித்து ஒரு இரவிற்கு மட்டும் அழைக்கும் ஆண் மகனை அழைத்துச் சென்று அவனுக்கு தண்டனையாக அவனது உச்சந்தலையில் கத்தியை அழுத்தி அது தாடையைக் கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் கால்வைத்து அழுத்துகிறாள். என்ன கொடூரம். உன்னால் முடியாது என்றால் புறந்தள்ளிப் போகாமல் அவனுக்கு தண்டனைக் கொடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது.

அவனது அழைப்பினைக் கூட ஒரு இடத்தில் நாகரிகமாக ‘‘தினம் தினம் கண்களால் தன் உடலை புசிக்கும் ஆண்களைப் போல இவன் தன் உடலை புசிக்க நேரிடையாக இவளிடம் கேட்கிறான். நல்லவர் வேடமிட்டு கண்களால் உண்ணும் அவர்களை விட இவன் எவ்வளவோ மேல் என்று சில நாட்கள் தோன்றும்,’’ என்று அவளது வார்த்தைகளிலேயே சொல்லி ‘’இருந்தாலும் அவனைப் பழிவாங்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்’’. என்றும் சொல்லாடுகிறார் நிலாரசிகன்.

‘மழைத் தேள்’ சிறுகதையில் பருவமடைந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண் மழையை வெறுக்கிறாள். யாரால் மழையை வெறுக்க முடியும். ஆனால் இவளால் மழை பொழியும் பொழுதை இரசிக்கமுடியாமல் போகிறது. சக மாணவன் ஒருவனால் அவமானத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பாராமல் செல்லும் நாளில் மழை பொழிகிறது. அன்றிலிருந்து அவளால் மழையை இரசிக்க முடியவில்லை. மழையின் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இந்த விசயம் அவளது மனதை மழை பெய்யும் போதெல்லாம் வதைக்கிறது. இந்த வாதை தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் கொண்டு போய்விடுவதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். இந்த சிறுபெண்ணிடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு பாலியல் சார்ந்த மனத்தகிப்பு அல்லது அறியாப் பருவ நிகழ்வு துக்கமாக சோகமாக மனதில் தகித்துக் கொண்டே இருக்கிறது. ‘’எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஒய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.’’ என்று கதை முடிகிறது.

இதுதான் உண்மை. ‘மழைத் தேள்’ கதையில் எந்த கனவும் இல்லை. முற்றிலும் நிஜம்தான். மனதைக் கிழிக்கும் நிஜம். இந்த நிஜத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தவிக்கும் எழுத்தாளனின் மனம் கடைசி வரிகளில் இயல்பாக வெளியாகிறது.

வேலைக்காக நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவ்விடங்களில் தனியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சமூக சூழலைப் பெண்கள் தமது விடுதலையாக சுதந்திரமாக தப்பித்தலாக உணர்கிறார்கள் என்ற கருத்தினை இவரது சில சிறுகதைகள் முன் வைக்கின்றன.

உலகமயமாக்கல் சார்ந்து இயங்கும் நம் சமூகத்தின் வளர்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலாச்சாரம் பற்றிய ஒரு தேடல் இவரது கதைகளின் மையத்தில் பூடகமாக ஊடாடுகிறது.

தர்ஷிணிப்பூ, மழைத் தேள், விசித்திரன், வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை, மற்றும் கேவல் குறிப்பிடும்படியான நட்சத்திரக் குறியீட்டுக் கதைகள். கதை-உரை தொடக்கமே பரவசப்படுத்துகிறது.

எல்லா கதைகளுமே வாசகனை படிக்கத் தூண்டும் கவிதை கசிந்துருகும் நடையில் நகர்கிறது. இவரது எழுத்துக்கள் தமிழ் படித்த எல்லார் மனதையும் வெல்லும் எழுத்துக்கள். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் இவரது பெயர் தவிர்க்க இயலாதது.

-தனுஷ்


This article link:
https://www.facebook.com/photo.php?fbid=786197114802165&set=a.382970715124809.93447.100002356512849&type=1&theater

To buy Julie Yatchi:

http://tinyurl.com/JYatchi

Tuesday, January 20, 2015

ஜூலியட்சி விமர்சனம் 2:



அமைதியையும் இருளின் கருமையையும் போதும்போதுமெனுமளவு உடலெலாம் பூசிக்கொண்ட ஓரிரவில், பல்லாயிரக் கணக்கான கால்கள் முளைத்து ஊர்ந்துகொண்டிருந்த சிந்தனைகளின் மீதேறி பயணித்துக் கொண்டிருந்தது புக்குப்பூச்சி.

அப்போது, நிசப்தத்தையே பேரிரைச்சலாகவும், இருளையே வெளிச்சமாகவும் தெரியவைக்கும் வகையில் ஒரு சிறு கனவுத்துண்டைக் கண்டது. அந்தக்கனவைப் பிரித்தால், அதற்குள் பல்வேறு உலகங்கள் உலாத்திக்கொண்டிருந்தன.

ஓருலகத்திலிருந்து மறு உலகத்திற்கும், மறு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கும் அலைந்து கொண்டிருந்தன சில பைசாசங்கள்.

அது ஒரு விசித்திரமான உலகம். ரத்தம் வெள்ளையாயிருக்கும், நெருப்புமிழும் டிராகன் பூனைபோல் மடியிலுறங்கும், நகரமே சர்ப்பமாகும். அந்த உலகத்தைக் கேட்க, இரைச்சல்களைக் கழித்து, நிசப்தத்தைக் கேட்கும் காதுகள் வேண்டும். நிறங்களைக் கழித்து நிறமின்மையைப் பார்க்கும் காதுகள் வேண்டும். சலனங்களை ஒதுக்கி, சலனமின்மையை உணரும் புலன் வேண்டும்.

இவை எதுவுமே இல்லையென்றால், அதைப்படித்து, அந்த அனுபவங்களைப்பெற Nilaraseegan - நிலாரசிகன் எழுதிய ஜூலி யட்சி வேண்டும்.

வித்யாஸமான சிறுகதைத் தொகுப்பு.

ஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். வெவ்வேறு களத்தில், உலகத்தில், வயதில், நோக்கத்தில் அவை இயங்கினாலும் இறுதிக்கதையில் அவை ஒரு புள்ளியில் இணைந்து, இணை அண்டங்கள் ஓரண்டமாய் ஒழுங்குபடுகின்றன.

இந்தக்கதையில் இன்னது புரிந்தது என்பதைவிட, இன்ன மாதிரியான உணர்வைத்தந்தது எனும் வகையான புக்.

மிகவும் மெல்லிய, ஆனால் கனமான புக். நேரம்காலம் பார்க்காமல் மழைபார்த்தலோ மலைபார்த்தலோ பிடிக்கும் என்போர் படிக்க வேண்டிய புக். அவற்றைப் பார்த்ததில்லை என்போர் இப்புக்கைப் படித்தால் இனி பார்க்கப்பிடிக்கும்.

பு/கடிச்சுதா? புடிச்சது....இல்ல, அதுக்கும் மேல...

புக்குப்பெயர் : ஜூலி யட்சி
வகை: சிறுகதைத் தொகுப்பு

பதிவிட்ட சுட்டி:  https://www.facebook.com/bookpoochi/posts/1552115728375894?fref=nf

To buy Julie Yatchi click here : http://tinyurl.com/JYatchi

Tuesday, January 13, 2015

"ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்

அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்


நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார். 

வனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.


எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்  படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்'  என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து  மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.


"கேவல்" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.


பாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.


தொகுப்பில் முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. "தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.


"குறளியின் டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத  இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.

"ஜூலியட்சி" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.

அதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.

நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html

Monday, January 12, 2015

To buy my books at Chennai Book fair


சென்னை புத்தக கண்காட்சியில் எனது நூல்கள் கிடைக்குமிடங்கள்:

வெயில் தின்ற மழை - கவிதைத் தொகுப்பு - உயிர்மை

கடலில் வசிக்கும் பறவை - கவிதைத் தொகுப்பு - அகநாழிகை

ஜூலி யட்சி - சிறுகதைத் தொகுப்பு - பரிசல், அகநாழிகை,டிஸ்கவரி,அகநி,புதுப்புனல் ஸ்டால்களில் கிடைக்கும்
(பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் அனைத்து வெளியீடுகளும் இங்கே கிடைக்கும்)

இணையத்தில் வாங்க:

http://www.wecanshopping.com/products/ஜுலி-யட்சி.html

Wednesday, January 07, 2015

அனைவரும் வருக!


Wednesday, December 03, 2014

இணையத்தில் என் நூல்கள் வாங்க:





யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்- சிறுகதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=29&cat=Books
வெயில் தின்ற மழை - கவிதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=28&cat=Recently%20Sold
கடலில் வசிக்கும் பறவை - கவிதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=11&cat=Other%20books%20of%20the%20author

Thursday, November 27, 2014

14 கவிதைகள்


பட்டன்களை சபிப்பவன்

ஒரு அவசரத்தில் பட்டன்களை
இலகுவாக கழற்றி விடமுடிவதில்லை.
நிறைய பட்டன்களை கொண்டிருக்கும்
சட்டையை ஏன் அனைவரும் விரும்புகிறார்கள்
என்றும் அவனுக்கு புரியவில்லை.
சில நேரம் இருளில் சிதறி ஓடுவிடுகின்ற 
பட்டன்களை தேடி எடுக்க 
மங்கிய பார்வை ஒத்துழைப்பதில்லை.
பனியன்களை கழற்றுவது அவனுக்கு
மிகவும் பிடித்தமான செயல் எனினும்
சட்டைகளே அதிகமாய் அணியப்படுகின்றன‌
என்கிற வருத்தமும் உண்டு.
இப்போதுஅணிந்திருக்கும்
இந்தச் சிறிய சட்டையை கூட‌
அவன் வெறுக்கத்தான் செய்கிறான்.
விபத்தொன்றில்
வீசி எறியப்பட்ட சிறுவனின்
சட்டையை அவசரமாக கழற்றிவிட யத்தனித்ததில்
நிறைய பட்டன்கள் தெறித்து ஓடியது
நினைவுக்கு வர,
பட்டன்களை சபித்தபடி இருளுக்குள்
மறைந்து போகிறான்.




லைட்டா மிக மிக லைட்டா

இன்று என் இரவின் மீது
குருட்டு ஓநாயோ 
இறகு தொலைத்த பட்டாம்பூச்சியோ 
உடையற்ற பைத்தியக்காரியோ
பாழாய்போன பூனைக்குட்டியோ
மயிர் இழந்த நாய்க்குட்டியோ
மண் இல்லா குறுமலைகளோ
சிவந்த இதழ்கள் அல்லது மெய்மறக்கும் முத்தங்களோ
வாதை என்பதை அறியாத வலியோ
அல்லது
வேறெந்த க்ளிஷேவோ
அமர்ந்திருக்கவில்லை.
நல்லவேளையாக
தனிமை என்னும் சொல்லும் இரண்டாக பிளந்து
தனி வேறு
மை வேறாகி வெவ்வேறு திசையில் மறைந்துவிட்டன.
அவ்வளவு என்னும் பாவப்பட்ட சொல்
பின்னிரவு மற்றும் பரிதாபகர அதிகாலை
அனைத்தும் இல்லாமல் ஆகிவிட்டன.
யாருமற்ற இரவு என்பது கூட பழயதாகி
வீட்டின் பின்புறம் ஓடி ஒளிந்துகொண்டது.
இன்று நான் எதைத்தான் எழுதுவது?
மேலுள்ள வரியின் கடைசிச்சொல்லின்
பின்புறம் ஒண்டியிருக்கும் ? குறிகூட
என்னைக் கைவிட்டுவிட்டதால்
எதையும் எழுதிவிடாமல்
யாருக்கும் அனுப்பிவிடாமல்
மறந்தும் துக்கித்துவிடாமல்
சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
இந்த இரவை இரவாக
மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது
காலை மட்டும் "லைட்"ட்டாக ஆட்டிக்கொள்கிறேன்.


நாயின் புராணம்

நாய் என்றவுடன் உனக்கு
பிடித்தமான எந்த நாய் ஞாபகத்திற்கு வருகிறது நண்பா
என்றான் நண்பன்.
எனக்கு நிறைய நாய்கள் ஞாபகத்திற்கு
வந்து குரைத்தன.
குரைப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
பெருநகரின் வீதிகளில் வேலைதேடி
அலைந்தபோது நானொரு பசித்த நாய்.
ஒரு ஆத்மார்த்த நேசிப்பை தேடித்தேடி
கண்டைந்து சுயமழித்து வலியின்
உச்சத்தில் திரிந்த காலத்தில்
நானொரு சுயமற்ற நாய்.
கவிதை நூலை வெளியிட ஒவ்வொரு
பதிப்பகமாய் ஏறி வெளியேறும் கணங்களில்
இருபதாயிரமோ முப்பதாயிரமோ இல்லாத காலத்தில்
நானொரு கழிவிரக்க நாய்.
தோள் மேலேற்றி பல்லக்கில் சுமந்து சென்றவன்
உயரச்சென்றுவிட்டதாய் எண்ணிக்கொண்டு
என்மீது எச்சில் உமிழ்ந்த நாளில்
நானொரு தெரு நாய்.
மாநகரின் பொய்களை அள்ளிப்பருக தெரியாமல்
மனச்சொல் கேட்டு நடக்க முடிவெடுத்த நாளில்
நானொரு பிழைக்கத்தெரியாத நாய்.
தேடித் தேடி வாங்கிய நூல்களும்
இரவை நீளமாக்கி எழுதிய நூல்களும்
லாயக்கற்றதாக உணர்ந்த நாளில்
நானொரு சுயமோக நாய்.
எவன் குடியும் கெடுத்திடாமல்
எவன் உள்ளங்காலையும் நக்கிவிடாமல்
எம்மொழி எம் கவிதை என்று எழுதித்தொலைக்கும்
நானொரு பித்து நாய்.
இத்தனை நாய்களில் எந்த நாயை பிடிக்கும்
என்று சொல்வது?
நான் நகர்ந்த பின் நீ சொல்லப்போகும்
'"இந்த நாய்'"தான் உன்னதத்திலும்
உன்னதமான நாய் என்பேன் நண்பா.


முத்தக் கவிதைகள் ஐந்து
1.
ஒராயிரம் வருடங்களாய்
தேக்கிய காதலை ஒற்றை முத்தத்தில்
என்னுள் பதிக்கிறாய்
இருளுக்குள் விரைகின்றன‌
பெருநகரின் மிகச்சிறிய வாகனங்கள்

2.

முத்தவிதையொன்று உயிர்ப்பிக்கிறது
எண்ணற்ற விருட்சங்களையும்
ஒரு
கையறு கணத்தையும்.

3.

எங்கிருந்தோ வந்த பறவையொன்று
நம் முத்தத்தின் மீது அமர்ந்தது.
அதன் சிறகை உனக்கும்
இறகொன்றை எனக்கும்
தந்துவிட்டு மறைந்தது.
இரண்டையும் துறந்துவிட்டு
மீண்டுமொரு முத்ததினுள்
பறக்கத்துவங்குகிறோம்.
தொலைவில் பறந்துவருகின்றன‌
சிறகுகளற்ற பறவைகள்.

4.

ஒரு பெரும் இழப்பை
ஒரு முத்தத்தில் மீட்டெடுக்கிறேன்.
இழப்புகள் பல்லாயிரம் ஒன்றுசேர்ந்து
என் உடலைச் சுற்றி சுற்றி
மிதக்கின்றன முத்தங்களாய்.

5.
விடைபெறலில் பெறப்படுகின்ற‌
முத்தங்கள் எப்போதும
கண்ணீரின் முத்தவடிவங்களாகி
பரிதவிக்கின்றன.
விடைபெற்று நகர்ந்த பின்
ஓவென்று அழுதபடி உடன் ஓடிவருகின்றன.
கொஞ்ச தூரத்தில் மூச்சிரைத்து
ஓட முடியாமல் நின்றுவிட்டு
களைத்து இதழ்களுக்கு திரும்பிவிடுகின்றன.
எந்தவொரு முத்தத்தையும் எப்போதும்
உடன் எடுத்துச்செல்ல முடிவதில்லை.
உடன் வருவது முத்தமிட்ட
பேரமைதியும் முத்தம்பெற்ற
பேரானந்தத்தின் கணங்கள் மட்டுமே.



குளம் - ஐந்து கவிதைகள்
1.

என் குளம்
நான் கல்லெறிகிறேன்.
குளமாகவும் மாறுகிறேன்.

2.

குளத்து மீனொன்று
துள்ளி கரையில் விழுந்தது.
வீழ்ந்துவிடவில்லை.
சிறுநொடி கழித்து
சிற்றலைகள் வட்டவட்டமாய் கரையொதுங்கின.

3.

ஊர் பிரிந்து வந்து
வெகுகாலமாகிறது.
பெட்டிக்குள் கொண்டுவந்த‌
குளம் மட்டும் வற்றவேயில்லை.

4.

மீனுக்கு வலிக்குமென்று
துடிதுடிக்கிறது மிதவை.
பாவம் தூண்டில்புழு.

5.

குளத்துக்கு தள்ளி
வசிக்கிறது குட்டையொன்று.
குளம் நோக்கிச் செல்லும்
கொலுசுகளை வெறித்தபடி.

ஆடம்பரத்தான்
கால்மேல் கால்போட்டுக்கொண்டு
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறான்
யாரைப்பற்றிய அக்கறையும் அற்றவனின்
இடக்கையில் அலைபேசியும் அதனுள்
முகநூலும் திறந்த நிலையில் இருக்கின்றன.
தூசி படர்ந்திருக்கும் அவனது வாழ்க்கையை
விரும்பியே ஏற்றுக்கொண்டவன்
பின்னிரவில் வெகுநேரம் விழித்திருக்கிறான்.
பகலில் உறங்கும் அவனது
வதனத்தில் எச்சமிட்டு பறக்கின்றன
குருட்டுக்காகங்கள்.
காகங்களிட்ட‌ எச்சங்களை
துடைப்பதற்கு அவனது கனவில் மயிலிறகோடு வருகின்றனர்
அரம்பையர்கள்.
உடலெங்கும் இறக்கைகளை முளைக்கவைத்து
அவர்களோடு பறக்கச் செய்கின்றனர்.
பறத்தலின் சுதந்திரத்தை உயிர் நிரம்ப‌
உணர்கிறவனின் உறக்கத்தை
சப்தங்களால் திறக்கிறார்கள்.
விழித்தவன் எச்சத்தை துடைத்துவிட்டு
திரும்பி படுத்துறங்குகிறான்.
அந்தியில் எழுகின்றவனின் உடைகளெங்கும்
அரம்பையர்களின் வாசம் வீசுகிறது.
ஷவரை திறந்துவிட்டு இளஞ்சூடான நீரில்
பேரானந்தமாய் குளித்து முடித்து
வரவேற்பறையில் வந்தமர்கிறான்.
யாருமற்ற அந்த வீட்டின் வெளியே
ஆடம்பரத்தான் வாழ்ந்த வீடு இதுவென‌
பேசிச் செல்கின்றனர்
முதிர் கன்னிகள் இருவர்.


-நிலாரசிகன்.

Monday, October 27, 2014

பேரன்பில் மலர்ந்திருக்கும் பறவைப்பூ



வெளிப்படுத்த இயலாத பேரன்பை
தன் சிறகில் சுமந்து திரியும் பறவை
உன் தோளில் வந்தமர்கிறது.
அதன் கண்களில் வழிகின்ற அன்பின் துளிகளை
கைகளில் ஏந்திக்கொண்டு
செய்வதறியாது திகைக்கிறாய் நீ.
சுமையின் களைப்பில் உன் மார்புக்கூட்டுக்குள்
விழுந்து உறங்கிவிடுகிறது.
அதன் முதுகை வருடிக்கொண்டே
உன் தோட்டத்தில் ஒரு பூச்செடி
நடுகிறாய்.
விடியலில்,
தோட்டமெங்கும் பூத்துக்கிடக்கின்றன*
பேரன்பின் பறவைப்பூக்களும்
ஒரு பறவை விட்டுச்சென்ற 
பிரபஞ்சமும்.


-நிலாரசிகன்.

Saturday, October 18, 2014

என் புதிய சிறுகதை நூல்


நண்பர்களின் கவனத்திற்கு,
என்னுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு ''"ஜூலி யட்சி'" "புத்தகம்'" பதிப்பக வெளியீடாக அடுத்த மாதம் வருகிறது. நண்பர்களின் ஆதரவையும் வாழ்த்தையும் எதிர்நோக்குகிறேன்.

https://www.facebook.com/nilaraseeganonline

நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, October 06, 2014

மெட்ராஸ் என்றொரு திரைக்காவியம்:


தமிழ் சினிமா பார்ப்பதில்லை உலக சினிமா மட்டுமே விருப்பம் என்று சொல்லித்திரிந்தவர்கள் அனைவரின் முகத்திலும் கடநத இரண்டு மூன்று வருடங்களாக வெளிவரும் பல தமிழ் திரைபடங்கள் கரியை பூசி வருகின்றன. பல திரைப்படங்களை இது அந்த கொரிய திரைப்படத்தின் நகல், அது ஜப்பானிய திரைப்படத்தின் நகல் என்றெல்லாம் பல செய்திகள் வந்தாலும் மிகச்சிறப்பான Genuine தமிழ் திரைப்படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. ஒரு கதாநாயகன் அவனை சுற்றும் நாயகி,ஆறு பாடல்கள், எட்டு சண்டைகள், பன்ச் டயலாக் என்கிற மசாலா எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. மிக நுட்பமான திரைக்கதைகள்,வித்தியாசமான கதைக்களம்,ஆழமான திரையாக்கம் என்று தமிழ் திரையுலகம் வெகு வேகமாக தன் வேர்களையும் கிளகளையும் பரவலாக பரப்பியபடி முன்னகர்கிறது. உதாரணமாக பல திரைப்படங்களை சொல்லமுடியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,வழக்கு எண்,தெகிடி,ஜிகர்தண்டா,பொறியாளன்,ஜீவா,மெட்ராஸ் என்று நீளும் பட்டியல்(பட்டியல் மிகப்பெரியது என்பதால், நினைவிலிருந்து சில மட்டும் இங்கே) சொல்லி முடியாதது. இது ஆரண்ய காண்டம் என்னும் மிக அற்புதமான திரைப்படத்தின் தொடக்கமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நேற்று மெட்ராஸ் திரைப்படத்தை பார்த்தேன். கதை என்ன என்று யாரேனும் கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். சுவர். அவ்வளவுதான். ஆனால் அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்,அரசியல்,நட்பு,காதல்,துரோகம்,பாசமென அனைத்தையும் திரைக்கதையாக்கிய விதத்திற்காகவே இப்படம் அதிகம் என்னை கவர்ந்தது. சென்னையில் வாழ்கின்ற பலருக்குமே சென்னையின் வடபகுதியை பற்றி அதிகம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வடசென்னையின் நுட்பமான பல விஷயங்களை மிகச் சிறப்பாக திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களது மொழியை அனைத்து நடிகர்களும் அவ்வளவு இயல்பாக பேச வைத்திருப்பதிலிருந்தே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்.
கார்த்திக்கு பருத்திவீரனுக்கு பிறகு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள படம் இது. காளியாகவே மாறியிருக்கிறார். வியாசர்பாடியின் காலனி ஒன்றில் நடக்கும் கதை. படம் பார்க்கும் அனைவரையும் வியாசர்பாடியின் அந்த காலனிக்குள் ஒருவராக மாற்றி விடுகிறார் இயக்குனர்.

ஒரு சுவருக்காக மோதிக்கொள்ளும் இரண்டு கோஷ்டிகள். அதனைச் சுற்றி சுழல்கின்ற கதை. அன்பாக நடித்திருக்கும் கலையரசனுக்கு இது மிகப்பெரிய மைல்கல். அன்பு  போலொரு நண்பன் நமக்கு கிடைக்கமாட்டானா என்கிற ஏக்கம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும். காதலுடன் தன் மனைவியிடம் உருகுவதாகட்டும், நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளிடம் பேசுவதாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். இடைவேளை நெருங்கும் நேரம் அன்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பதைபதைக்க துவங்கிவிடுகிறது மனம்.  அன்பும் மேரியும் தோன்றும் சில நிமிட காட்சிகளில் அவர்கள் இடையேயான இணக்கத்தை ஒரு நிஜ தம்பதி போல உணர்த்திவிடுகிறார்கள்.மேரியாக நடித்திருக்கும் நடிகையின் கண்களில் காதல்,சோகம்,கோபம் என்று அனைத்தையும் காண முடிகிறது. எப்படி இவ்வளவு சிறப்பான கதைநாயகர்களை இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்பதே மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.

வடசென்னையின் தமிழில் கார்த்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். நண்பனுக்காக மோதுவதிலும்,காதலிக்காக உருகுவதிலும் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகி ஒரு வடசென்னை காலனி பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். உள்ளுக்குள் காதலித்துக்கொண்டு வெளிக்காண்பிக்காமல் காளியை கிண்டலடிப்பதும் பின் காளின் சோகம் தீர்க்க அவனுடனிருப்பதிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால்தான் தெரியும்.

படத்தில் படீரென்று சிரிக்க வைக்க ஜானி என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. இவ்வளவு 'அசால்டாக' ஒரு கனமான ரோலை செய்திருக்கிறார் ஜானியாக நடித்தவர். ஆங்கிலத்தில் பேசுவதாகட்டும் சரியான சமயத்தில் கூர்மையான வசனங்களை உதிர்பதாகட்டும் சபாஷ் ஜானி.  

மேலும் குறிப்பிடத்தகுந்தவை, காளியின் அம்மா,எப்போதும் சோபாவில் உட்கார்ந்திருக்கும் அப்பா, அந்த பாட்டி,மாரி,அவ்வப்போது நடனமிட்டுச்செல்லும் நடன கோஷ்டி, வடசென்னையின் தமிழை அனைவருமே சிறப்பாக பேசியிருப்பது,கானா பாலாவின் நெஞ்சைத்தொடும் பாடல்,சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, முரளியின் ஒளிப்பதிவு, வடசென்னையின் காலனியை நேரில் கொண்டுவந்த செட்கள், எடிட்டிங் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அட்டைக்கத்தி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடித்திருக்கும் சிக்ஸர் மெட்ராஸ். ஒடுக்கப்பட்ட குரலின் ஒலியை சுவரொன்றின் மூலமாக திரைச்சித்திரமாக்கியதற்கு அழுத்தமான கைகுலுக்கல். இரண்டாவது படத்திலும் ஜெயித்து தமிழின் மிக முக்கியமான இயக்குனராக மிளிர்கிறார், வாழ்த்துகள்.

குறைகள் என்று ஏதுமில்லையா எனில், இரண்டாம்பாதியில் திரைக்கதையில் சில இடங்களில் காணப்படும் தொய்வு. சுவர் பற்றிய படம்தான் எனினும் முப்பது நாப்பது தடவைக்கு மேல் சுவரைக்காட்டுவது சலிப்பை தரத்தான் செய்கிறது.
மற்றபடி மெட்ராஸ் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வில் இடம்பிடித்திருக்கும் படங்களில் மிக முக்கியமானது.

-நிலாரசிகன்.

Saturday, January 11, 2014

My Book Release


Thursday, January 09, 2014

என் புதிய கவிதை நூல்

 
நண்பர்களுக்கு,


என்னுடைய மூன்றாவது கவிதை தொகுப்பு “கடலில் வசிக்கும் பறவை” புதுஎழுத்து வெளியீடாக இன்னும் சில தினங்களில் வெளியாகிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த வாரம் வரையில் இந்நூல் வெளியாவது எனக்கே தெரியாது. கவிதைநூல் கொண்டுவருகின்ற
அகநிலையும் புறநிலையிலும் நானில்லை. எதற்கென்றே தெரியாமல்தானே அனைத்தும் நிகழ்கிறது. இந்த பறவையும் கடலுக்குள்ளிருந்து எனை நோக்கி பறந்து வந்தது கடந்த வெள்ளியன்று காலை எட்டு முப்பந்தைந்து மணிக்கு. இவ்வளவு குறுகிய நாட்களில் இந்த அசாத்திய பறவையை வெளிக்கொண்டு வருவதற்கு கடுமையான பணிச்சூழலுக்கும் நடுவில் அசராமல் உழைத்த/உழைக்கும் மனோன்மணி அவர்களுக்கு கடலை விட மிகப்பெரிய நன்றியும் அன்பும்.
மேலும், நண்பர்கள் வெய்யில்(ஓர் இரவில் அட்டைப்படம் வடிவமைத்த மகாகலைஞன்),அனிதா,சுகுணா,விழியன் அனைவருக்கும் நன்றி எனும் ஒற்றைச் சொல் போதாது.பேரன்பும் நட்பும் மட்டுமே மிச்சமிருக்கிறது என்னிடம். என் பிரார்த்தனைகளுக்கு செவிகொடுத்து வழிநடத்தும் அன்பானவருக்கு லட்சம் முத்தங்கள்.
 
நூல் வெளியீட்டின் புலம் மற்றும் நேரம் விரைவில்..
நட்புடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 01, 2014

கவிதைகள் பத்து

1.
தனியே ஆடிக்கொண்டிருக்கிறது
ஓர் ஊஞ்சல்.
பின் நின்றது சிறிது நேரம்.
தலைகவிழ்ந்து அழுதுமிருக்கலாம் அல்லது
இளைப்பாறியுமிருக்கலாம்.
தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றன
ஒரு ஜோடி கால்கள்.

2.
அறைநீங்கும் பொழுதில்
கதவை சாத்திவிட்டு செல்.
திறந்திருக்கும் கதவின் வழியே
நேற்றொரு ஓநாய் நுழைந்தது.
இன்று
மறியொன்று ஊளையிட்டபடியே
வெளியே ஒடுகிறது.

3.
நீங்கள் ஏன் பூனைக்குட்டிகளை
ரசிப்பதேயில்லை.
சப்தமிட்டுக்கொண்டிருக்கிறது என்று
நேற்று அதனை வெளியே வீசினீர்கள்.
இன்று
உங்களது இரைச்சலில் அழுகிறது
வாலொன்றை ஆட்டுகின்ற சிறுமிருகம்.

4.
எப்பொழுதும் முத்தமிட்டுக்கொண்டிருத்தல்
சாத்தியமே இல்லை.
முத்தமென்பது முத்தமாக மட்டுமே
நின் மனதுள் வியாபித்திருந்தால்.
5.
ஒரு மரம்.
அதன் கிளைகளெங்கும்
கிளிகள்.
ஒரு கிளி
அதன் கால்களின் கீழெங்கும்
மரங்கள்.
6.
கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் சிறகின் மேற்புறம்
அமர்ந்து இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.
7.
அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதன் கிளைகளிலிருந்து கூடொன்று
விழுந்து சிதறியது.
ஒற்றைக்கால் ஒடிந்த பறவைக்குஞ்சு
தத்தி தத்தி புதருக்குள் ஓடுகிறது.
புதருக்கு வெளியே வருகையில்
காகமொன்றின் அலகில்
அது சிக்கியிருக்கிறது.
இனி,
மரக்கன்றுகள் ஆயிரம் நடும்
விழாவில் மலம் கழித்துச் சிரிக்கும்
அக்காகம்.
8.
இரவில் ஒளிரும் கண்களை
மிருகத்திடம் கடன் வாங்கியவன்
அன்றிரவு மாபெரும் மிருகமாகினான்.
அதிகாலைப் படுக்கையில்
களைத்துக்கிடந்தன
மலைபாம்பும் அதனருகே
குருட்டுப்பூனையும்.

9.
அன்றுதான் தனக்கு கால்கள்
இல்லையே என்று வருந்தியது
குளம்.
குளத்திலிருந்து எழுந்து வீடு
நோக்கி நடப்பவர்களின்
நீர்ச்சுவடுகளை பார்த்தபடி.
10.
வார்த்தைகள் தீர்ந்த குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்.
அதன் மெளனத்தோடு
என் மெளனம் எக்காலத்திலும்
உரையாடும்.
- -நிலாரசிகன்.

Happy 2014 friends.

Tuesday, December 10, 2013

கவிதைகள் ஆறு

1.வித்தியாசனும் தா....மதனும்


எதையும் வித்தியாசமாக செய்யவேண்டும்
என்று நினைப்பவன் யாரும் அறியாதபடி
தன் வீட்டுத்தோட்டத்தில் சிங்கக்குட்டிகளை
வளர்க்கிறான். அவை மே என்று கத்துகின்றன.
மலையொன்றின் மீதமர்ந்து
சரிவை நோக்கி தூண்டில் வீசுகிறான்.
காகங்களை பிடித்துவந்து கூண்டிற்குள்
அடைத்துவைத்து முகமன் கற்றுத்தர முயல்கிறான்.
நேற்றின் மீது எழுதப்பட்ட கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றாய் உருவி நாளைக்குள்
எறிந்தபடி நடனமிடுகிறான்.
புணர்வொன்றின் உச்சத்தில் அவனுக்கு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
சிப்ஸ் சாப்பிடும் யுவதியொருத்தியின்
நினைவு வந்து அடடா அது ஓர் அற்புதகணம் என்கிறான்.
வித்தியாசனை பின் தொடர்ந்து வந்த
தாமதன் அனைத்திலும் தாமதமாகவே இருக்கிறான்.
மீசை வளர்வதற்கே அவனுக்கு இருபத்தி ஏழு
வயதாகிற்று.
தினமும் அவன் எழுதும் வரிகள்
நான்கு மாதம் கழிந்தே கவிதைகள் ஆகின்றன.
அவனது காதலி இரண்டாவது மாடியிலிருந்து
அவனுக்களித்த பறக்கும் முத்தம்
அவளது குழந்தையின் பாதம் பூமி தொட்டபின்பே
அவனைச் சேர்ந்து நகைத்தது.
தானொரு அறிவிலி என்று உணர்ந்த நாளில்
அவனது நாற்பதாவது வயது துவங்கிற்று.
அறியா தேசம் போய்விட தீர்மானித்து
ரயிலுக்காக காத்திருக்கிறான்.
நாற்பத்தெட்டாவது வயதில் அசைந்து
வருகிறது ரயில்.
அதிலிருந்து வெளிக்குதித்து தன் சுண்டுவிரலால்
ரயிலின் வேகத்தை குறைத்து
தலைகோதியபடி செல்கிறான் வித்தியாசன்.
இருவேறு ஊர்களில் அடைமழையும்
மென்சாரலும் பொழிந்துகொண்டேதான்
இருக்கின்றன எப்போதும்.


2.காற்றில் மிதந்தலையும் இறகன்

என்னிரு உள்ளங்கைகளிலும் மறைத்து
வைக்கப்பட்டிருந்தன இரண்டு கண்கள்.
யாரும் இல்லாத தெருவில் அழுதபடியே
தலைகவிழ்ந்து நடந்து செல்லும்
தனியனுக்கு ஒன்றும்
மழை பொழியும் கணங்களில்
தலை சாய்த்து வான் பார்த்து
வா மழையே பெருமழையே என்று
லயித்து மழையாகும் மிருதுவானவனுக்கு
மற்றொன்றும் கொடுத்துவிட்டேன்.
அதீதமாய் அழுவதற்கோ அல்லது
அதிகமாய் புன்னகைப்பதற்கோ அதனை
அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
இப்பிரபஞ்சத்துடன்
நான் ஆடும் புதிர் விளையாட்டில்
கண்களின்றியும் அனைத்தையும் காண்கிறேன்.
புன்னகைத்தபடியே அழவும்
அழுதுகொண்டே புன்னகைக்கவும் கற்றுக்கொண்டன
என் இனிப்பிதழ்கள்.
யார் வேண்டுமானாலும் முத்தமிடலாம்
என்னை.
காரணமின்றி காயப்படுத்தவும் செய்யலாம்.
காற்றில் மிதந்தலையும்
இறகில் நீங்கள் காணக்கூடும்
கண்களையும் அதனுள்ளே வெகு ஆழத்தில்
கைகள் விரித்தபடியே நகர்கின்ற நதியுருவனையும்.
 
3.ஆட்டுக்குட்டிகள் அழகானவை

என் பிரார்த்தனையில் என்னைத் தவிர்த்து
பிறரை மட்டுமே நினைத்த நொடியில்
கைகளில் ஒரு கொத்து ரோஜாப்பூக்களை
தந்து சென்றார் கர்த்தர்.
மெளனத்தின் இசைக்குள் கண்கள் மூடி
பேரமைதியுடன் லயித்திருந்தபொழுதில்
புன்னகைத்து கையசைத்தார் புத்தர்.
நடுங்கிய உடலுடன் அடர்குளிரில்
மரத்தடியொன்றில் ஒண்டியிருந்த
சிங்கக்குட்டியை கட்டியணைத்த கணத்தில்தான்
கர்த்தரும் புத்தரும் ஒன்றாய் தோன்றினர்.
அதிகாலையில் சேவல் கூவிற்று.
வரமறுக்கும் ஆட்டுக்குட்டியை தரதரவென்று
இழுத்துவந்து முட்டியால் அதன் கழுத்தில்
அழுந்தப்பிடித்தபடி கழுத்தறுத்து கருப்புச்சட்டியில்
இரத்தம் பிடித்து பீடியை இழுத்தான்
கனவில் புத்தனையும் கர்த்தனையும்
கண்டவன்.
அந்த நாள் அவ்வளவு ரம்மியமாய்
துவங்கியது.


4.பெயரற்றவனின் பகல்

அதிகாலை நான்கு முப்பது மணிக்கு
அவன் விழித்தபோது தன் பெயர்
என்னவென்பது மறந்துபோனது.
எவ்வளவு முயன்றும் நினைவில்
மலராத தன் பெயரை ஓடிச்சென்று
அலைபேசிக்குள் தேடிக் களைத்தான்.
டியர்,டார்லிங்,நாயே,மச்சி,மாமோய்
என்று ஆரம்பிக்கும் எந்தவொரு குறுஞ்செய்தியிலும்
அவனது பெயர் எழுதப்படவில்லை.
இதயத்துடிப்பு அதிகமாகி எங்கே சென்று
பெயரைத் தேடுவது என்று குழம்பியவன்
யாரிடமும் கேட்காமலும் ஆவணங்கள்
எதனையும் பார்க்காமலும் தன் பெயரை
கண்டுபிடித்துவிட தீர்மானித்து,
பால்க்காரனுக்காக வாழ்வில் முதன்முறையாக
காத்திருக்கத்துவங்கியவனை
"சார் பால்" என்று சிரித்தபடி பாக்கெட்டுகளை
கொடுத்துவிட்டு நகர்ந்தான் பால்க்காரன்.
பேப்பர்க்காரனை நம்பி சோர்ந்துவிடாமல்
அவசரமாய் அலுவலகம் செல்ல‌ நினைத்த கணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
என்பது ஞாபகத்தில் மலர்ந்து
இதயத்துடிப்பை அதிகப்படுத்தியது.
கடன் அட்டைக்காகவோ அல்லது
வங்கிக்கடனுக்காகவோ யாரேனும் அழைத்துவிட்டு
தன் பெயரை உச்சரித்துவிட மாட்டார்களா என்று
பெருங்கவலை கொண்டவன் அசையா சிலையென
அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று த‌ன் காத‌லியின் ஞாப‌க‌ம் வ‌ந்து
அவளுக்கு முத்தக்குறியிட்டு ஒரு
குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவள் பதிலுக்கு "இட் இஸ் ஸ்வீட் டா"
என்று மறுமொழிந்தாள்.
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தவன்
மிகத்தீவிரமாய் யோசிக்கத்துவங்கினான்.
முகநூலில் புனைப்பெயர்.
அலைபேசியில் "என் எண்".
வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும்
கடிதப்பெட்டியின் மீது "ஏ4".
உற‌ங்குகின்ற‌ அப்பாவுக்கு "எருமை".
அம்மாவுக்கு "ய‌ய்யா".
எதிர்வீட்டு பாப்பாவுக்கு "ண்ணா"
எதற்குள்ளும் தன் பெயர் இல்லை.
இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.
பெய‌ர் என்ன‌வென்று தெரியாத‌ துடிதுடிப்புட‌ன்
"என் பெயர் என்ன?" கெஞ்சும் குரலில்
முன‌க‌த்துவ‌ங்கினான்.
விடிய‌லை அறிவித்த‌ப‌டி வ‌ந்துவிழுந்த‌து
வெய்யில்.

5.மூன்றாம் கனவினள்

இருண்ட வீட்டில் கையில் பொம்மையுடன்
அமர்ந்திருக்கும் சிறுமி
அவனது கனவில் அடிக்கடி தோன்றுகிறாள்.
தன் இரண்டு இதயங்களும் வேகமாக
துடிப்பதை உணர்பவன்
உடன் விழித்துக்கொள்கிறான்.
அருகில் உறங்கும் தன் குழந்தையை
தொட்டுப்பார்த்து பதறுகிறான்.
சிறுமியின் பொம்மை மெல்ல மெல்ல
கண்கள் திறந்து மெதுவாய் தலையை திருப்புகிறது.
அவளது மடி நீங்கி இவனது கனவுக்குள்
நுழைகிறது.
கனவின் தூரத்தை ஒரே கணத்தில்
கடந்து உறங்கும் குழந்தையின் அருகில்
படுத்துக்கொள்கிறது.
அதன் மிகக்கூரிய நகங்களால்....
முதல் கனவில் சிறுமியின் மடி பொம்மை.
இரண்டாம் கனவில் குழந்தை படுக்கை பொம்மை.
தன் உடலெங்கும் எரியும் நகக்கீறல்களால்
தரையில் புரள்பவனின் எதிரே
தீர்க்கப்பார்வையுடன் அமர்ந்தபடி
தன் இடமுலையை அறுத்துக்கொண்டிருக்கிறாள்
வலமுலையை பொம்மைக்கு
ஊட்டும் இளம்தாய்.
 
6. பெண் கங்காரு

வேகமாய் வீட்டிற்குள் ஓடுகிறவனின்
உடலிலிருந்து உதிரத்துவங்குகின்றன
சொற்கள்.
அள்ளியெடுக்க இயலாமலும் விழுவதை
தடுக்க இயலாமலும் தடுமாறி ஓடுகிறான்.
மூச்சுவாங்க வரவேற்பறையில் அமர்பவன்
அனுஷ்காவின் புன்னகையை ரசிக்கிறான்.
நீலநிற அவளது கண்களின் கரைந்து
அற்புதம் அற்புதம் என்று பிதற்றுகிறான்.
அவள் அழுதால் தானும் அழுவதாக
பாவனை செய்து கண்ணீர் சிந்துகிறான்.
இப்போது தன்னுடலிலிருந்து தெறிப்பது
சொற்கள் அல்ல பூக்கள் என்றெண்ணுகிறான்.
அனுஷ்காவின் காதலனை பழிப்பவன்
கையிலொரு காய்ந்த ரோஜாப்பூவை
தலைகுனிந்தபடி பார்த்து கதறுகிறான்.
உடல் நீங்கி அறையெங்கும் வியாபித்திருக்கும்
சொற்கள் ஒவ்வொன்றாய் கண்விழிக்கின்றன.
நீந்தி நீந்தி அருகிலிருக்கும் சொற்களுடன்
சேர்ந்துகொண்டு உருவமெடுக்கின்றன.
சோபாவில் கண்ணயர்ந்து அனுஷ்காவுடன்
கங்காருகளின் நடுவே ஓடுகின்ற அவனது
கனவினை துன்புறுத்தாமல்
சுயமாய் கவிதையொன்றை உருவாக்குகின்றன.
அவனது மின்னஞசல் மூலமாய் கவிதையை
இதழொன்று அனுப்பிவிட்டு ஒவ்வொரு சொல்லாய்
உடலுக்குள் நுழைந்து செல்லாகின்றன.
அதிகாலை விழிப்பவன்
அவளொரு பெண் கங்காரு என்றபடி
தன் பிடறியை ஒரே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான்.

-நிலாரசிகன்.

 

Sunday, October 27, 2013

தனிமை என்றொரு டிராகன்


1.ஜூலியட்சி

மறியொன்றை பாழ்கிணற்றுக்குள்
புன்னகைத்தபடியே வீசிவிட ஜூலியால்
மட்டுமே முடியும்..
அவனது மறி துடிக்கின்ற கணங்களில்
மெளனத்தின் மதுவை ருசித்துக்கொண்டும்
பெருக்கெடுக்கும் குருதியில் நனைகின்ற‌
பொழுதுகளில்
தேநீர் அருந்தவும் அவளால்
மட்டுமே முடியும்.
தான் விரும்பும் நேரங்களில் அவனை
மறியாக்கி மடியில் கிடத்திடுவாள்.
தான் தன்னை விரும்பும் நேரங்களில்
கிணற்றில் தள்ளிவிட்டு நகர்ந்திடுவாள்.
காலத்தின் அசுர நாவு அவனது
உடலை தீண்டியபடியே கடந்துசெல்கிறது.
யட்சியின் முள்மனதில் அவனது
மறியின் கல்லறை எழும்புகிறது.
மெளனத்தின் மதுவை அவனது
இதழ்கள் ருசிக்க துவங்குகையில்
கரடிபொம்மையொன்றை கட்டியணைத்தபடி
நிம்மதியாய் உறங்குகிறாள்
ஜூலி-யட்-சீ.


2.முடிவுகள் மற்றும் முடிச்சுகளுடன் நிற்கும்ஓர் ஆப்பிள் மரம்.

ஓநாய்க்குட்டிகளுடன் அதன்
நிழலில் தங்குகிறாள் யுவதியொருத்தி.
நடுநிசியில் தன் கழுத்திலிருந்து நீளும்

கயிற்றின் மறுமுனையை கிளை நோக்கி வீசுகிறாள்.
முடிச்சின் இறுக்கத்தில் அதன் கிளையில்
தழும்பொன்று மலர்கிறது.
ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் ஓநாய்க்குட்டிகளின்
மேல் ஒன்றிரண்டு இலைகள் வந்தமர்கின்றன.
தன் இடமார்பில் பொறித்திருக்கும்
பச்சைப்பெயரை வருடிக்கொடுக்கிறாள்.
முடிவொன்றின் மேல் படுத்திருப்பவளின்
உடல் வெம்மையில் சிவந்திருக்கிறது.
விழிநீர் துடைத்து துடைத்து அழுகிறாள்.
அவள் காணாத விடியலில்
பழுக்க துவங்கியிருக்கும் அதன் கனிகள்
சொட்டுச் சொட்டாய் கண்ணீர் சிந்துகின்றன.
மிக நிம்மதியாய் உறங்கிக்கொண்டிருக்கின்றன
ஓநாய்களும்,குட்டிகளும்.

3.தனிமை என்றொரு டிராகன்

அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவன்
தன் வரவேற்பறையில்
படுத்திருக்கும் டிராகனின் தலையை
தடவிக்கொடுத்துவிட்டு சட்டையை கழற்றினான்.
அந்த டிராகன் தீயை உமிழ்ந்தபடியே
மூலையில் படுத்திருந்தது.
வாங்கி வந்திருந்த ஆரஞ்சு பழத்தை
அதனிடம் நீட்டினான்.
அது முகம் திருப்பிக்கொண்டது.
அருகில் அழைத்து தன் மடியில் கிடத்திக்கொண்டான்.
அவனது கன்னங்களில் முத்தமிட்டு
ஆரஞ்சு பழத்தை சுவைத்தது.
டிராகனின் தலையை வருடிக்கொடுக்கும் பொழுது
அவள் ஞாபகம் நெஞ்சின் மீது
ஓர் உதைவிட்டது.
மழை நாளொன்றில் கடற்கரை மணலில்
அமர்ந்திருந்தார்கள் அவர்கள்.
அவளது கால்களை தன் மடியிலெடுத்து
ஒவ்வொரு நகமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தான்.
வெட்கத்தில் மழை கடலை
தழுவிக்கொண்ட பொழுதில்
கடற்கரையெங்கும் சிறு பூச்செடிகள் முளைத்து
மறைந்தன.
மடியிலிருந்த டிராகன் உறங்கியிருந்தது.
கண்ணாடி தம்ளரில்
அசைகின்ற நீரைப் போல் அந்த
பின்னிரவு தெருநாய்களின்
குரைப்புச்சத்ததில் தளும்பியபடி இருந்தது.

 - நிலாரசிகன்.

Monday, September 30, 2013

வலிக்கவிதைகள் இரண்டு



1.ரகசியத்தின் அறை

அறையில் மூலையில் பார்க்கும்பொழுதே
முளைத்து வளர்ந்து கிளை பரப்பி நிற்கிறது
ரகசியத்தின் செந்நிற மரம்.
அதன் கிளைகளில் தலைகீழாய் தொங்குகின்றன
அழுக்கடைந்த அன்பின் முட்டைகள்.
ஒவ்வொரு முட்டைக்குள்ளிருந்தும் வெவ்வேறு
உருவத்துடன் வெளிக்குதிக்கிறார்கள் காதலிகள்.
சர்ப்பமென சுருண்டிருக்கும் அவனது
உடலின் கதவுகளை தங்களது இரட்டை நாவினால்
எட்டித்தள்ளி உள்நுழைந்து தின்னத்துவங்குகிறார்கள்.
காதலிகளின் எச்சில்கள் படும் இடமெங்கும்
முளைக்கின்றன ஈச்சமரங்கள்.
அவனது உடல் வெப்பத்தில் உருகி
பாலையின் நடுவில் ஓடும் நதியாகிறது.
நதியில் மிதக்கும் முகில்கள் ஒவ்வொன்றிலும்
நடனமிட்டு சிரிக்கிறார்கள் தீராக்காதலிகள்.
ரகசியத்தின் சமுத்திரத்தை நோக்கி
மெதுவாய் நகர்கிறது நதி.
அறையின் மற்றோர் மூலையில்
காதலிகளின் மார்பில் கிறங்கிக் கிடக்கிறது
மகாசமுத்திரம்.
மகாசமுத்திரம்.

2. இம்பாலாவின் முத்தங்களும்
வனத்திடை திரியும் காடிப் பெண்ணும்

அடர்ந்து படர்ந்திருக்கும் புழுதிப்புற்கள் மீதமர்ந்து
காடியை அவள் மிகவும் ருசித்துக் குடித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கால் நகங்களின் பிடியில்
ஒரு இம்பாலா* துடிதுடித்துக்கொண்டிருந்தது.
குடுவைக் காடியை குடித்து முடித்தபின்பு
மிக நிதானமாய் அதனது குரல்வளையை கெளவினாள்.
உடலெங்கும் முத்தங்கள் தேக்கி வைத்திருக்கும்
அதனது ப்ரியவுடலைவிட்டு பிரிந்தது உயிர்.
வனம் அதிர சிரித்தவள் ஒவ்வொரு முத்தங்களிடமும்
தன் கூர்நகத்தினை காண்பித்தாள்.
ஒவ்வொரு முத்தமாய் கண்கள் மூடி
மரிக்க துவங்கின.
கடைசி முத்தம் அவளது நகத்திடம்
நலமா என்றது.
கூர்நகம் தலைகவிழ்ந்து தரை நோக்கியது.
சற்று நேரம் கழித்து
பாதையெங்கும் குருதி வழிய வாலாட்டி
நடந்து செல்பவளை பின் தொடர்கின்றன மரித்த முத்தங்கள்,
தங்கள் உடலெங்கும் வனத்தின் வெம்மையை
அப்பியபடி.

-நிலாரசிகன்.



Monday, September 16, 2013

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்



இந்த புத்தன்
காலை 5.40க்கு கண்ணாடி யன்னலை
இரண்டுமுறை கொத்தி எழுப்பும் காகத்தின்
முகத்தில்தான் தினமும் விழிக்கிறான்.
இரண்டு நதிகள் சேருமிடத்திற்கு
ஓட்டமும் நடையுமாய் வயிற்றை பிடித்துக்கொண்டு
ஓடி - அமர்ந்து - எழுந்த பின்பு சூரியனை
மேலெழ கட்டளையிடுகிறான்.
வீடு திரும்பும் வழியில் அவனுக்கு
பாட வேண்டும் போலிருக்கிறது.
சப்தமிட்டு பாடிக்கொண்டே குதித்தோடுகிறான்.
எருமைகள் மிரண்டு நகர்கின்றன.
ஓடிச்சென்று கிளைகளற்ற மரத்தடியில்
அமர்ந்து இமை மூடுகிறான்.
காகமொன்றின் சிறகில் பயணித்து
மஞ்சள் நதியில் "ஸ்லோ மோஷ"னில் விழுகிறான்.
நீச்சல் தெரியாமல் தத்தளிப்பவனின்
தலைமயிர் பிடித்திழுத்து கரைசேர்க்கிறாள்
யுவதியொருத்தி.
கனவுகளை மிதித்து எழுந்தவன்
தன் உடலெங்கும் ஆயிரம் மொட்டுகள்
ஒளிர்வதை பெருமிதத்தடன் தொட்டுப்பார்க்கிறான்.
யன்னல் காகம் "கோட்டிப்பயல்" என்று
நினைத்து சிரித்துக்கொண்டு பறக்கிறது.
இந்த புத்தனின் அதிகாலை
எப்போதும் இப்படித்தான் புலர்கிறது.

இந்தக் காதலன்

மலை கண்டால் லயித்து நிற்பவன்
மழையில் நனைந்துகொண்டே விசிலடிப்பவன்
காகத்தின் சாம்பல் நிறத்தில் நுழைந்து
தனியொரு உலகில் வாழ்ந்து திரும்புகிறவன்
இடக்கை சுண்டுவிரலுக்குள் காதலை இழுத்துப்பிடித்து
அதிகாலைக் கடற்கரையில் ஓடுபவன்
மிகச்சிறிய இதயத்தின் நான்கு அறைகளுக்குள்ளும்
வெவ்வேறு கண்ணாடிகளை புதைத்து வைத்திருபவன்
அழுதுகொண்டே நகரும் சரக்கு ரயில்களிடம்
புன்னகைத்து கையசைப்பவன்
பின்னிரவுக் கனவுகளிடம் மனம் நெகிழ
உரையாடி களைத்துறங்குபவன்
கவிதையின் வரிகளிடையே வளைந்து நெளிந்து
சிறுவனாகி ஓடி ஒளிபவன்
நெடுஞ்சாலையோர குட்டைகளில் இறங்கிச்சென்று
மீன்குஞ்சுகள் பிடித்து பின் விடுவிப்பவன்
அஃறிணைகளுடன் வெகுநேரம் கலந்து கரைபவன்
மங்கிய விளக்கொளியில் மிதமாய் கசிகின்ற
இசை ரசித்து ரசித்து கோலா குடிப்பவன்
தோல்விகளின் தலைகோதி வெற்றிக்கு
இதழ் முத்தம் தந்து மெளனித்துக்கிடப்பவன்
நிறைவேறாக் காதலின் நினைவுகளை
முன்னிரவில் நினைத்து நடுநிசியில் மறப்பவன்
டயனோசர் குட்டிகளை அந்திநடைக்கு
அழைத்துச் செல்பவன்
அலைபேசிக்குள் உறங்கும் எண்ணற்ற
எண்களை பார்வையால் வருடுபவன்
கரடிபொம்மைகளுக்கு டாட்டா காட்டிவிட்டு
வெளிக்கிளம்புகிறன்
அனைத்தையும் திளைக்க திளைக்க
காதலித்து எப்போதும் காதலில் திரிபவன்
இந்த மகாக் காதலன்!

கோட்டிப்பயலும் பச்சைநிற காக்கைக்கூட்டமும்

இந்தக்கவிதைக்கு இப்படியொரு தலைப்பை
கொடுத்தது நீங்கள்தான்.
உங்களுக்கான இக்கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
துணிவிலக்கி பாலினம் என்னவென்று பார்ப்பதில்
நீங்கள் காட்டும் மும்முரத்தால் நிசப்தத்தில்
அழுகிறது.
நதியோர கிராமமொன்றில் கோணவாயனுக்கும்
சிவந்திகனிக்கும் பிறந்தவனுக்கு நீங்கள்தான்
கோட்டிப்பயல் என்று பெயரிட்டீர்கள்.
அவனது உலகில் கோடரியால் உங்களது பொய்களை
எழுதிச் சிரித்தீர்கள்.
காலம் தன் குதிரைக்கால்களால் வெகுவேகமாய்
ஓடிப்போனதில் பட்டணத்தில் வந்து நின்றான்
கோட்டிப்பயல்.
பரிசுத்தமான அன்பைத்தேடி துவங்கிய அவனது
பயணத்தின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் நீங்கள்
சிறுநீர் கழித்தீர்கள்.
தன் இருபத்தோராவது வயதில் கவிதையொன்றை அவன்
பிரசவித்தபோது சவத்துடன் ஒப்பிட்டு அவனது
சிறு இதயத்தில் முட்கள் விதைத்தீர்கள்.
யாருமற்ற அவனது உலகில்
பச்சைநிற காகமொன்று மட்டுமே பறந்து திரிந்தது.
குருட்டுக்காகம் அது என்று அவன் அறிந்துகொண்ட
நாளில்தான் தானொரு செவிடு என்பதை
உணர்ந்தழுதான்.
இரவொன்றின் மூன்றாம் சாமத்தில் சடசடவென்று
இறக்கைகள் முளைத்து காக்கைக்கூட்டத்துடன்
கலந்து பறக்கும் அவனது சந்தோஷத்தின் நிழலைக்கூட
உங்களால் தொடமுடியாதுதான்.
அவனுடன் சேர்ந்து பயணிக்கும் இக்கவிதையின்
எந்தவொரு சொல்லையும் உங்களால்
புரிந்துகொள்ளவே முடியாதுதான் மக்காள்!

வற்றாநதியில் மிதக்கும் ஆப்பிள்

தவழ்ந்து தவழ்ந்து தன் வயிற்றை
தரையில் இழுத்து இழுத்து
என்னிடம் வந்து சேர்ந்தது புன்னகையொன்று.
நான் அதற்கொரு ஆப்பிள் ஜூஸ்
வாங்கித்தந்தேன்.
மிக நிதானமாய் அதனை ரசித்து
அருந்திவிட்டு நகர்ந்தது.
அது மறைந்த மறுகணம் மூச்சிரைக்க
ஓடிவந்தது ஒரு துளி கண்ணீர்.
அதன் உடலெங்கும் துளிர்த்து மிளிர்கின்ற
வியர்வையை கைக்குட்டையால் துடைத்துவிட்டேன்.
கன்னத்தில் முத்தமிட்டு மீண்டும்
ஓடத்துவங்கியது.
மிக நிதானமாய் என்னுடலின் யன்னல் திறந்து
உள் தாழிட்டுக்கொண்டேன்.
சற்று தொலைவில் புன்னகையின் தோளில்
சாய்ந்தபடி நடந்து கொண்டிருந்தது
கண்ணீர் எனும் வற்றாநதி.


-நிலாரசிகன்.