Thursday, January 26, 2023

கவிதைகள் ஏழு



1.

ஒத்தையடிப் பாதையின்

முதல் தடத்தில் 

மரித்துப் போன புற்கள்

அதனைக் காலம் காலமாய்

தேடித் தேடி 

உடல் தேயும் 

ஒத்தையடிப்பாதை.


2.

தவற விட்ட தேநீர் கோப்பை

சப்தமின்றி உடைகிறது

அதன்

நிசப்தத்தின் கணத்திற்குள்

ஆயிரமாயிரம் கனத்த சப்தங்கள்.


3.

பழுத்த இலையிடம்

எவ்வளவு நேரம் 

பேசிக்கொண்டிருப்பாய்?

பழுத்தல் என்னிலிருந்து

உதிரும் வரை.


4.

விபத்தொன்றில் கரம் இழந்தவள்

வெகு நேரம் துள்ளலாக

பேசிக்கொண்டிருந்தாள்

கரமிருந்த இடத்திற்கு 

பார்வை நகரும் வரை.


5.

பறவைகள் இரண்டு வகை

ஒன்று

உள்ளுக்குள் பறப்பது

மற்றொன்று

எச்சிலிட்டு படபடப்பது 

தெரியுமா என்கிறாள்

முடிவிலிப் பறவையை

ஒளித்துவைத்துவிட்டு

ம்

என்றேன்.




6.

ஆந்தை போல் 

அலறு அல்லது

மிருதுவான சிறிய மிருகம்போல

நாவைச் சுழற்று

இரண்டும் இல்லாவிடில்

வாழை மரத்தில் சிக்கிய

மரங்கொத்தியின் அலகு போல்

அசையாதிரு என்பவனை

ஓநாய் என்றே விளித்தாள்.


7.

தொட்டிச்செடியை மட்டுமே

காண முடியும்

அந்த வளர்ப்பு மீனுக்கு.

அதுவே அதனுலகு

அதுவே அதன் இணை மீன்

அதுவே அதன் துயரங்களின் 

உயிர் வடிவம்

செடியில் மலர்ந்த 

முதல் மலரொன்றை 

கவ்வி இழுத்து நீருக்குள் 

ஆழ்த்திக் கொன்றது

வளர்ப்பு மீனை மட்டுமே

காண முடியும்

தொட்டிச் செடிக்கு. 

குடுவை மீது

சாய்ந்தெழுந்து இரண்டாம் முறை

மலர்ந்தது.


-ராஜேஷ் வைரபாண்டியன்

26-01-2023

Saturday, May 02, 2020

நிசப்த மச்சம் - ஒன்பது கவிதைகள்




1.
அப்பாவைக் கொன்றது
இன்றா நேற்றா என்பது
ஞாபகத்தில் இல்லை.
சுருட்டின் நுனிப்புகை வழியே
அப்பா வெளியேறி இருக்கக்கூடும்.
பூட்டப்பட்ட அறைக்குள் 
அப்பா தனித்திருக்கலாம்
அல்லது
அப்பாவாக நானிருக்கலாம்.
உடைந்து விழும் கண்ணாடி
யன்னலின் சப்தம் மட்டும்
நிசப்தமாக எதிரொலிக்கிறது.


2.
எவரும் நுழையத்தயங்கும்
அறைக்குள்
இந்த மஞ்சள் வெய்யில் மட்டும்
நுழைந்துவிடுகிறது.
கூடவே அதன் நிழலும்.
பின் 
ஒரு பசித்த மரப்பல்லி
ஒருகால் உடைந்த எட்டுகாலி
ஒற்றைக்கண் சிட்டில்
கூடவே இவர்களது நிழலும்.
தரையெங்கும் படர்ந்திருக்கும்
குருதியை புசிக்கும்
எறும்புக்கூட்டம் ஓடிச்சென்று
நிழல்களை கடித்திழுத்துச் செல்கின்றன
பதிமூன்று கால்களையும்
தன் கால்களாக பார்க்கின்றன
என் அசைவற்ற விழிகள்.


3.
முடிச்சுகள் அவிழ்க்கும்
புதிர்விளையாட்டின் கடைசி
முடிச்சினை அவிழ்த்து
பதினான்காம் தளத்திலிருந்து
வீசுகிறேன்
அதுவொரு காய்ந்த மரத்தின்
காக்கைக்கூட்டில் விழுகிறது.
பறவைகள் தளும்புகின்றன.
முடிச்சுகளற்ற கணமொன்றில்
மரம் உட்புறமாக 
ஒரே ஒருமுறை 
தன்னுடலைத் தழுவி மீண்டது.
சப்தமின்றி முறிந்து விழுகின்றன
எண்ணற்ற கிளைமுடிச்சுகள்.

4. இருளில் நகரும் நிழல்களுடன்
பேசக்கற்றுக்கொண்டார்கள்
அஞ்ஞானிகள்.
பிழைகளால் மொழியொன்றினை
உருவாக்கி அதன் மூலம் உரையாடுவதும்
அவர்களது இயல்பானது.
கண்களுக்கு புலப்படாத அரூப கோட்டைக்குள்
அவர்களது நர்த்தனம் தொடர்கிறது.
அலரும் கூகைகளும் ஒடுங்கிய
யாமத்தில்
முலைகளால் அழுதிடும் பேரிளம்
பெண் 
நிழலின்றி நகர்ந்து இருளுக்குள் 
மறைகிறாள்.


5. பாறையின் இடுக்கிலிருந்து
கசிந்துவரும் கீச்சொலி பசித்தழும்
        கடைசி பிள்ளையுடையது.
  வீடு திரும்பிய அம்மாப்பறவை
மீனற்ற அலகை 
பாறைமீது தேய்த்து ஒலி எழுப்புகிறது.
மனதெங்கும் துள்ளிய மீன்களிலொன்றை
அம்மாப்பறவை நோக்கி வீசுகிறாள்.
இவளும் கடைசிப்பிள்ளை
எல்லாவற்றிலும்
எல்லா விதத்திலும்.


6. கூழாங்கற்களை எடுத்து
வந்தாள்.
நதியும் உடன் வந்தது.
கொஞ்சமாய் அந்தியை 
பெயர்த்து ருசித்தவளின்
பாதம் தொட்டது முன்னிரவு.
காய்ந்த இலையொன்றை
முத்தமிட்டு
நான் நான் என்ற கணத்தில்
மலர்ந்தன காடுகள்
புஷ்பங்கள்
மற்றும் சில
இருவுடல் இரவுகள்.



7.
ஏதேனுமொரு பொருளை
எப்போதும் தவறவிடுகிறாள்
அந்தி முதல் யாமம் வரை.
கீழ் தளத்தில் வசிப்பவன்
விழுகின்ற சப்தத்தை 
சேகரித்து பலூனில் அடைக்கிறான்.
அவனது அறையெங்கும்
பலூன்களால் நிரம்பியிருக்கின்றன.
வெப்ப இரவொன்றில்
பலூன்களை 
உடைத்து உடைத்து
உடைகிறான்.
இப்போதைய அதிகாலைகளில்
மேல் தளத்தின் நிசப்தங்களை
தவறாமல் வீசுகிறாள் அவள்.
.
8.
எப்போதாவது நிசப்தம்
பேசுகிறவளின் கழுத்து மச்சம்
கழுத்திலிருந்து மார்புக்கு
தாவிச் செல்கிறது.
அதற்கு அவள்
நிசப்த மச்சம் எனப் பெயரிடுகிறாள்.
ஓடையற்ற
ஓடையொன்றில் நீராடி 
மார்புக் கச்சையை சரி செய்கையில்
நிசப்த மச்சத்தை காணவில்லை.
அவளைச் சுற்றிலும்
நீந்தும் மச்சங்களில்
எந்த மச்சம் நிசப்த மச்சம்
எந்த மச்சம் சப்த மச்சம்
எந்த மச்சத்தினுள் சென்றாளோ
அவள்.

9.


அமிழ்ந்துகொண்டே இருக்கும்
கடலாழ சப்தச் சிப்பிகளில்
ஒரே ஒரு சிப்பி மட்டும்
திறந்து கொள்கிறது
அதனுள்ளிருந்து தெறிக்கின்றன
முத்தங்கள்
முனகல்கள்
முடிவிலிக்கனாக்கள்
முடிவற்ற பெருமூச்சுகள்
பின்
எதுவும் நடந்துவிடாத 
பாவனைகள் 
எதற்கென்றே தெரியாத
விசும்பல்கள்
கடைசியாய் 
புணர்ந்து சிலிர்த்த 
நிசப்தங்கள்
நிசப்தங்கள்


-ராஜேஷ் வைரபாண்டியன்

(நிலாரசிகன்)


Tuesday, January 22, 2019

வேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி





நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய நான்காவது கவிதை நூல் "வேனிற்காலத்தின் கற்பனைச் சிறுமி" உயிர்மை பதிப்பக வெளியீடாக ஜனவரி 1 வெளியிடப்பட்டது.

நூல் வாங்க விரும்புவோர், இணையம் வழியே ஆர்டர் செய்யலாம்.


https://www.udumalai.com/venir-kaalathin-karpanai-sirumi.htm



மேலும், இனி வருகின்ற என்னுடைய படைப்புகள் அனைத்தும் என்னுடைய இயற்பெயரிலேயே(ராஜேஷ் வைரபாண்டியன்) வெளியாகும் என அறிவிக்கிறேன்.

நன்றி,
ராஜேஷ் வைரபாண்டியன்.

Wednesday, September 26, 2018

திடீரென்று


திடீரென்று யாருடனாவது
பேசலாம் எனத் தோன்றும்போது
அந்த‌ யாருடன் என்பது
யாரெனத் தெரிவதில்லை.
திடீரென்று எதற்காகவாவது
அழுதுவிடலாம் எனும்போது
கண்ணீர் உறைந்து போகிறது.
திடீரென்று முத்தமிடலாம்
எனத் தோன்றும்போதும்
ஒரு நத்தைக்கூட்டைப் போல‌
இதழ்கள் உள்ளிழுத்துக்கொள்கின்றன.
திடீரென்று பின்னிரவில்
அலைபேசி வழியே
முகநூலுக்குள் நுழைந்து
எதற்கென்றே தெரியாமல் ஸ்வைப்
செய்து சோர்கின்றன‌
விரல்கள்.
திடீரென்று பூத்த‌
ஓர் புன்னகைக்கு
மறுநகை செய்ய முயலும் முன்
காணாமலாகின்றன புன்னகைகள்
திடீரென்று உறக்கம் உதறி
எழுந்து பார்க்கையில்
இவ்வுலகம் யாரோ ஒருவரின்
திடீர்க் கனவு எனத் தோன்றுகிறது.
திடீரென்று இக்கணம்
மனதெங்கும் வந்தமர்கிறது
மலரொன்றின் ஆழ்ந்த அமைதி.
-நிலாரசிகன்.

Saturday, April 01, 2017

மீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்




கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான "மீன்கள் துள்ளும் நிசி" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி இருக்கிறது. திருத்தப்பட்ட பதிப்பாக வெளி வந்திருக்கும் இந்நூலில் மொத்தம் 60 கவிதைகள் இருக்கின்றன.
நூல் வாங்க:
கிண்டில் இல்லாதவர்கள் ஆண்ட்ராய்ட் போன் வைத்திருந்தால் கிண்டில் ஆப் தரவிறக்கம் செய்து வாசிக்க முடியும்.
ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் இங்கே தரவிறக்கம் செய்துகொள்ளலாம்::

Saturday, December 10, 2016

கவிதைகள் ஐந்து



1.கருங்கிளி
கவிதைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது
கருமை நிறக் கிளி.
அதன் கூரிய அலகால் ஒவ்வொரு சொல்லாய்
கொத்தித் தின்னத் துவங்குகிறது.
கொத்தலுக்கு தப்பித்து சிதறி ஓடுகின்றன‌
சில சொற்கள்.
கவிதைச்சுவர் ஏறி வெளிக்குதித்து தப்பிக்கின்றன‌
சில.
கவிதையின் கடைசி வரியின் மூலையில்
மூச்சிரைக்க மரணத்தை எதிர்நோக்கியபடி
அசைவற்று அமர்ந்திருக்கின்றன
உடல்கிழிந்த கடைசிச் சொற்கள்.
நிசப்தத்துடன் இக்கவிதையை தட்டச்சு செய்பவனை
நீங்கள் கருங்கிளி என்றும்
அழைக்கலாம்.
அந்த கடைசிச் சொற்கள் எனவும்
அணைத்துக்கொள்ளலாம்.

2.மெளனமாய் புகைக்கும் ஓர் அதிர்வு
யாருக்கும் தெரியாமல் ஒரு
பூனை உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
அதன் அசைவற்ற கண்களால்.
எதற்கென்று புரியாத இரவுகளில்
உன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
தவளையொன்றின் விசித்திர சப்தம்.
பெரும்கூட்டத்தின் நடுவே எப்பொழுதும்
உன்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
நாய் எனப்படும் மிருகத்தின் குள்ள வால்.
ஒரு பார்வையால்
ஒரு சப்தத்தால்
ஒரு குள்ளவால் தொடரலால்
உன்னை கலைத்துப்போட அனுமதிக்கிறாய்.
உனது சிறகிலிருந்து ஒவ்வொரு இறகாக‌
உதிரத்துவங்குகிறது
பூனையாக
தவளையாக
நாயாக
கடைசியில்
புகை கசியும் ஓர் அதிர் பிழைக்கனாவாக.

3.நிழல் துரத்தல்
கடலின் மேல் பறக்கும்
பறவையின் பிம்பம்
நிழல்மீனாகி பறவையை துரத்துகிறது.
பறவைக்கும் மீனுக்குமிடையில்
துள்ளியது மற்றொன்று.
அது கடலில் நீந்தும் மீனின்
பிம்பம்.
நிழல்பறவையாகி மீனை துரத்துகிறது.
நிழல்களின் துரத்தலில்
இரு நிஜங்களும்
ஒரு கடலும் நிசப்தமாகி
உறைகின்றன.
தூரத்தில் எங்கோ ஒரு முதலை
வாய்பிள‌ந்தபடி உறைகடலுக்கும் நிலத்திற்கும்
உடல்நீட்டி படுத்திருக்கிறது.
அதன் வாலிலிருந்து தலைநோக்கி
மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது
சிறு எறும்பு.
வாயில் கெளவ்விய உறைகடலுடனும்
அதன் மிகச்சிறிய நிழலின் துரத்தலுடனும்.

4.இரவென்னும் இலகுப்பூ
எனது பகலுக்குள் நுழைந்துவிடுகின்ற இரவை தடுத்துவிட யத்தனிக்கிறார்கள்
மிகப்பெரிய வனத்திடையே ஊர்ந்து செல்லும் விலங்கின் முதுகில் பட்டுத்தெறிக்கும் வெய்யிலை பின் தொடர்ந்து சென்றால் எதிர்ப்படும் முக்கோண வகை குகைகள்.
நெருக்கத்தில் வரிசையாக அமைந்திருக்கும் அக்குகைகளை கறுப்புநிற சிங்கமொன்று வெகு நாட்களாய் காவல் காத்து வருகிறது. 
அதன் பிடறிக்குள் கூடு கட்டியிருக்கும் பறவை தன் அலகில் பழுப்புநிற மீனை கெளவிக்கொண்டு கூடடைகிறது.
இறந்த மீனின் விரைத்த கண்களின் வழியே பயணித்தால் மிகச்சிறிய குளமும் அதன் நடுவே மிதக்கும் அமலைகளும் தென்படுகின்றன.
பசித்த கணம் குருவி முட்டைகளும் பச்சைக் கிழங்குகளும் உணவாய் மாறி பசியாற்றி முடித்து மிகப்பெரிய வெண்நிற பூவின் மீது விழச்செய்கின்றன.
பேரானந்த உறக்கம் அப்பூவின் மேல் நிகழ்கிறது.
இரவு இவ்வளவையும் தருகிறது ஆனாலும்
சோற்றுப் பருக்கைகளால்
நிறைந்திருக்கும் பகலுக்குள்தான் வாழ்வென்னும் செடி நடப்பட்டிருக்கிறது என்பவர்களின் கூர்நகங்களால் கிழிபட்டபடியே இருக்கிறது இரவென்னும் இலகுப்பூ.

5.மழைக்கடல் எனும் சொல்

ஒரு சொல் போதுமானதாய் 
இருக்கிறது.
மிக கவனமாக தேர்ந்தெடுத்து
மித நிதானத்துடன் கூர்தீட்டப்பட்டு
தொடுக்கப்பட்டது அச்சொல்.
ஆழ்துளைக்குள் விழுந்துவிட்ட
குழந்தையென அழவும் தெரியாமல்
நகரவும் இயலாமல் விக்கித்து
இருளில் அமர்ந்திருக்கின்றன‌ ப்ரியங்கள்.
மழைத்துளிக்குள் அடைபட்ட
பெருங்கடலில் உயிரற்ற மீன்கள்
மிக வேகமாய் நீந்த யத்தனித்து
சொல்லின் கனம் தாளாமல் உயிர்பெற்று
காணாமலாகின்றன.
கடலடியில் அசைகின்ற ஆளுயுர தாவரங்களின்
இலைகளின் அடியில் ஒண்டியிருக்கின்ற
மீன்குஞ்சுகளை தேடிச்சென்று பிய்த்து தின்கிறது
சொல்லின் வெப்பம்.
ஒரு சொல் போதுமானதாய்
இருக்கிறது.
கடலாகி அடைத்து நிற்கும் மழையின் பிறப்புத்துவாரத்தை
மெல்லியதொரு தொடுதலில் திறந்து மூடவும்.
மழைக்குள் கடலை அடைத்துத் துவளவும்.

-நிலாரசிகன்