Saturday, January 09, 2016

கவிதைகள் 5

1.ஒரு நீளமான முத்தம் சப்தமின்றி உறங்குகிறது
ஏழு கோடைகள் கழிந்தபின்
மெல்ல கண்கள் திறந்தது அச்சிறுமழை.
நீண்டதொரு உறக்கத்திலிருந்து எழுந்து
சோம்பல் முறித்தபடி தானுறங்கிய வீட்டை கண்கள் சுழல
பார்த்துக்கொண்டிருந்தது.
பின்,
தன்னுடலின் நலிந்த வனப்பையும்
உடலினுள்ளே படர்ந்திருக்கும் சருகுமுத்தங்களையும்
சற்றுநேரம் கண்டது.
மழையின் இதயம் படபடவென்று துடிக்கத்துவங்கியதும்
அத்துடிப்பினூடே சன்னமாய் ஒலிக்கும்
பாடலொன்றும் அதன் செவிகளில் விழுந்து சிதறியது.
கண்கள் மூடியபடி
மீண்டும் உறங்கத்துவங்கிய மழை
கரைந்து கரைந்து அவ்விடம் விட்டு அகன்றது.
கோடைகள் பல கழிந்தபின்னும்
நம் தோள்மீது வந்து அமரத்தான் செய்கின்றன‌
சிறுமழைகள்.
சப்தமின்றி நினைவுப்பரணில் உறங்கும் முத்தம்போல.
2.அறைப்பறவையின் கடல் பொழுது
மிக வேகமாய் பறந்துவந்து
கண்ணாடி என்பதை அறியாமல்
மோதிச் சரிகிறது ஓர் சிறிய சிட்டுக்குருவி.
யன்னலாக நானிருந்திருந்தால்
உடல்பிளந்து வழிவிட்டிருப்பேன்
அதன் மூளையில் விஞ்சிய அறிவாக‌
வளர்ந்திருந்தால்
தடுப்பென்று உணர்ந்து நகர்ந்து பறந்திருப்பேன்.
அந்திக்குளிருக்கு பயந்து அறைக்குள்
அமர்ந்திருந்து வீழ்ச்சியை
பார்த்திருக்கும் மனிதனாக நானிருப்பதால்
சரிந்து துடிதுடிக்கும் அச்சிறு ஆன்மாவை
மடிக்கிடத்தி மெல்லியதாய் வருடிக்கொடுக்கிறேன்.
ஒவ்வொரு இறகினூடாக என் பிரபஞ்ச பேரன்பின் துகள்கள்
நுழைந்து மினுமினுத்தடங்குகிறது.
வார்த்தைகளற்ற பொழுதின் கனம் ஒலிவடிவமாகி
அச்சிறு பறவையின் இதயத்துடிப்பில் கலந்து அமிழ்கிறது.
ஓயாத சிறகடிப்புச் சப்தத்தால்
என் அறை நிரம்புகிறது
பெருங்கடல் கால்களால்.
3.திறப்பின் கடைசிப் பயணம்

படுக்கை அறைக்குள் அனுமதியின்றி
நுழைந்துவிட்டதொரு பட்டாம்பூச்சி.*
நான் கண்கள் மூடி அமர்ந்திருந்தேன்.
என் உள்வெளிப்பயணத்தின்
முதல் கல்லை கடந்து இரண்டாம் கல்லை
நோக்கி பயணிக்கையில்தான் இப்பூச்சியின் 
வருகை நிகழ்ந்தது.
அது என் தோளில் அமர்ந்துகொண்டு
என்னோடு பயணிக்கத் துவங்குகிறது.
கண்ணாடித்துகள்களால் நிறைந்த பாதையில்
தொடர்ந்தது எங்களது பயணம்.
நீ யாரென்று நான் அதனிடம் கேட்கவில்லை.
நான் யாரென்பது பற்றிய கேள்வியும்
அதனிடமில்லை.
மெளனித்து பயணக்கும் செளந்தர்யத்தில்
லயித்திருந்தோம்.
ஒரே ஒருமுறை கண்கள் திறந்தேன்
முடிவுற்றது பயணம்.

4.கனவென்னும் பேரோடை
நீலநிற நிலவிலிருந்து வட்டவடிவத்தில்
சுருண்டிருக்கும் அணில்கள் விழுகின்றன.
தாய்மீனின் பிரசவ நாளில் வெளியேறும்
மீன்குஞ்சுகளை ஒத்திருந்தது அந்த வீழ்தல்.
சற்று தூரம் பயணித்து பின் நீள்வடிவத்திற்கு
மாறுகின்ற அணில்களின் உடல்களில் இறக்கைகள்
படபடவென அடித்துக்கொள்ள துவங்குகின்றன.
குளிர் போர்த்திய வனத்தின் நடுவே
ஓர் ஒற்றை முள்மரம் நர்த்தனமிடுகிறது.
அதன் மேற்கிளையில் அமைந்திருக்கும்
கூட்டினுள் இரு கிளிகள் கதகதத்திருக்கின்றன.
அணில்படைகள் அம்மரத்தை வந்தடைந்து
வெளவாலாகி தலைகீழாய் ஊஞ்சலாட
ஊஞ்சலாட
தலைசாய்த்து வனம் பார்த்து மெல்லச்சிரித்து
இருளுக்குள் ஓடியது அந்த நீலநிலாக் கனா.
5.மிகச்சிறிய பிரபஞ்சம் மிளிர்கின்ற மலர்
சிதறிக்கிடக்கும் பன்னீர்பூக்களை தன்
மிகச்சிறிய கைகளால் பொறுக்கி
எடுக்கிறாள்.
ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு
முத்தம் தந்து தன் கூடைக்குள் வைத்துக்கொள்கிறாள்.
சற்று தொலைவிலிருந்து இக்காட்சியை
காண்கிறவன்
ஓடிச்சென்று பூவாகி வீழ்கிறான்.
அவளது பிஞ்சு விரல்கள் தொட்டவுடன்
பூவிலிருந்து பேரன்பாக உருக்கொள்கிறான்.
பன்னீர் மரம் பூக்களை உதிர்த்துக்கொண்டே
மலர்கிறது.
மிகச்சிறியவள் மிகச்சிறிய தன் மடியில்
கூடையிலிருந்து பூக்களை
விடுவிக்கிறாள்.
பூக்களோடு கலந்து விழுந்தவன்
அம்மா என்று கதறி அழத்துவங்குகிறான்.
-‍நிலாரசிகன்.