Thursday, January 22, 2015

ஜூலி யட்சி - விமர்சனம் 3

நெஞ்சில் நிறைந்த நிலாரசிகன் !

நிலாரசிகனின் ‘ஜூலி யட்சி’ சிறுகதைத் தொகுப்பினை ஒரே மூச்சில் படித்து விட்டேன். சில கதைகளை இரண்டு மூன்று முறை நிதானமாக படித்து உள்வாங்கினேன். 

நிலாரசிகனின் எழுத்துலகம் கனவுகளோடு வாழும் மனிதர்கள் நிஜங்களோடு சமரசமின்றி எப்படியெல்லாம் முரண்பட்டு வதையுறுகிறார்கள், போராடுகிறார்கள், பழிதீர்க்கிறார்கள் என்பதை புனைந்துரைக்கிறது. கதைகளில் வரும் ஆணும் பெண்ணும் கனவுலக கதாப்பாத்திரங்களோடு வாழ்கிறார்கள். நிகழ்காலம் அவர்களுக்கு மன உகந்த மார்க்கமின்றி நகர்வதால் அவர்கள் தங்களின் உலகத்தை மோகினிகளோடும், தேவதைகளோடும், டிராகனோடும் வடிவமைத்துக் கொண்டு உழல்கிறார்கள்.

ஆண்களின் நயவஞ்சகத்தினால் ஏமாறும் பெண்கள் குரூரமாக ஆண்களை பழிவாங்குகிறார்கள். ஒரே பெண் இரண்டு பெயர்களில் இரண்டு ஆண்களை பழிவாங்குகிறாள். பெண் சர்வ சுதந்திரம் விருப்பம் உள்ளவளாக, அம்மா,அப்பாவின் பார்வையில் படாத தூரத்திற்கு சென்று தன்னை தன் சுதந்திரத்தை பேணுபவளாக சித்திரிக்கப்படுகிறாள். அழகற்ற பெண் தான் அழகியாக உலாவரும் கனவுலகில் வாழ்கிறாள். அவள் டிராகனோடு படுத்துறங்குகிறாள். இங்கே டிராகன் தனிமையின் குறியீடு.

சமகால உலகப் பொருளாதார வளர்ச்சியின் நீட்சியில் மனிதப் பண்புகள் சிதைவுண்டு போவதை மென்மையாக கவிதையில் சொல்வதுபோல சிறுகதைகளாக சொல்லியிருக்கிறார். சிறுகதைகளின் ஊடே செல்லும் இவரது சொல்லாடல்களில் சிலவை மனதில் அதிர்ச்சியூட்டுகின்றன. எளிமையான சொல்லாடல்களின் வன்முறை திகைப்பூட்டுகின்றன.
பெண் என்பவளை போகப் பொருளாக பாவித்து ஒரு இரவிற்கு மட்டும் அழைக்கும் ஆண் மகனை அழைத்துச் சென்று அவனுக்கு தண்டனையாக அவனது உச்சந்தலையில் கத்தியை அழுத்தி அது தாடையைக் கிழித்துக் கொண்டு வருவதை பார்த்து சிரித்துக் கொண்டே அவனது கழுத்தில் கால்வைத்து அழுத்துகிறாள். என்ன கொடூரம். உன்னால் முடியாது என்றால் புறந்தள்ளிப் போகாமல் அவனுக்கு தண்டனைக் கொடுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது.

அவனது அழைப்பினைக் கூட ஒரு இடத்தில் நாகரிகமாக ‘‘தினம் தினம் கண்களால் தன் உடலை புசிக்கும் ஆண்களைப் போல இவன் தன் உடலை புசிக்க நேரிடையாக இவளிடம் கேட்கிறான். நல்லவர் வேடமிட்டு கண்களால் உண்ணும் அவர்களை விட இவன் எவ்வளவோ மேல் என்று சில நாட்கள் தோன்றும்,’’ என்று அவளது வார்த்தைகளிலேயே சொல்லி ‘’இருந்தாலும் அவனைப் பழிவாங்கும் நேரத்திற்காக காத்திருந்தாள்’’. என்றும் சொல்லாடுகிறார் நிலாரசிகன்.

‘மழைத் தேள்’ சிறுகதையில் பருவமடைந்த பத்தாம் வகுப்புப் படிக்கும் பெண் மழையை வெறுக்கிறாள். யாரால் மழையை வெறுக்க முடியும். ஆனால் இவளால் மழை பொழியும் பொழுதை இரசிக்கமுடியாமல் போகிறது. சக மாணவன் ஒருவனால் அவமானத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகிறாள். அவன் அவளை ஏறெடுத்துப் பாராமல் செல்லும் நாளில் மழை பொழிகிறது. அன்றிலிருந்து அவளால் மழையை இரசிக்க முடியவில்லை. மழையின் மீது வெறுப்பும் கோபமும் அதிகரிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இந்த விசயம் அவளது மனதை மழை பெய்யும் போதெல்லாம் வதைக்கிறது. இந்த வாதை தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் கொண்டு போய்விடுவதை நாசுக்காக சொல்லியிருக்கிறார். இந்த சிறுபெண்ணிடம் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. ஒரு பாலியல் சார்ந்த மனத்தகிப்பு அல்லது அறியாப் பருவ நிகழ்வு துக்கமாக சோகமாக மனதில் தகித்துக் கொண்டே இருக்கிறது. ‘’எழுந்துவிடலாமா அல்லது அப்படியே படுத்திருக்கலாமா என்று குழம்பியபடி கிடந்தாள் ஒய்ந்த மழையின் ஈரத்தை வெறுத்தபடி.’’ என்று கதை முடிகிறது.

இதுதான் உண்மை. ‘மழைத் தேள்’ கதையில் எந்த கனவும் இல்லை. முற்றிலும் நிஜம்தான். மனதைக் கிழிக்கும் நிஜம். இந்த நிஜத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது தவிக்கும் எழுத்தாளனின் மனம் கடைசி வரிகளில் இயல்பாக வெளியாகிறது.

வேலைக்காக நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்கள் அவ்விடங்களில் தனியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய சமூக சூழலைப் பெண்கள் தமது விடுதலையாக சுதந்திரமாக தப்பித்தலாக உணர்கிறார்கள் என்ற கருத்தினை இவரது சில சிறுகதைகள் முன் வைக்கின்றன.

உலகமயமாக்கல் சார்ந்து இயங்கும் நம் சமூகத்தின் வளர்ச்சியில் வீழ்ந்து கிடக்கும் கலாச்சாரம் பற்றிய ஒரு தேடல் இவரது கதைகளின் மையத்தில் பூடகமாக ஊடாடுகிறது.

தர்ஷிணிப்பூ, மழைத் தேள், விசித்திரன், வேலை இழந்தவளின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை, மற்றும் கேவல் குறிப்பிடும்படியான நட்சத்திரக் குறியீட்டுக் கதைகள். கதை-உரை தொடக்கமே பரவசப்படுத்துகிறது.

எல்லா கதைகளுமே வாசகனை படிக்கத் தூண்டும் கவிதை கசிந்துருகும் நடையில் நகர்கிறது. இவரது எழுத்துக்கள் தமிழ் படித்த எல்லார் மனதையும் வெல்லும் எழுத்துக்கள். இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் நம்பிக்கைக்குரிய எழுத்தாளர்களின் பட்டியலில் இவரது பெயர் தவிர்க்க இயலாதது.

-தனுஷ்


This article link:
https://www.facebook.com/photo.php?fbid=786197114802165&set=a.382970715124809.93447.100002356512849&type=1&theater

To buy Julie Yatchi:

http://tinyurl.com/JYatchi

Tuesday, January 20, 2015

ஜூலியட்சி விமர்சனம் 2:



அமைதியையும் இருளின் கருமையையும் போதும்போதுமெனுமளவு உடலெலாம் பூசிக்கொண்ட ஓரிரவில், பல்லாயிரக் கணக்கான கால்கள் முளைத்து ஊர்ந்துகொண்டிருந்த சிந்தனைகளின் மீதேறி பயணித்துக் கொண்டிருந்தது புக்குப்பூச்சி.

அப்போது, நிசப்தத்தையே பேரிரைச்சலாகவும், இருளையே வெளிச்சமாகவும் தெரியவைக்கும் வகையில் ஒரு சிறு கனவுத்துண்டைக் கண்டது. அந்தக்கனவைப் பிரித்தால், அதற்குள் பல்வேறு உலகங்கள் உலாத்திக்கொண்டிருந்தன.

ஓருலகத்திலிருந்து மறு உலகத்திற்கும், மறு உலகத்திலிருந்து மற்றோர் உலகத்திற்கும் அலைந்து கொண்டிருந்தன சில பைசாசங்கள்.

அது ஒரு விசித்திரமான உலகம். ரத்தம் வெள்ளையாயிருக்கும், நெருப்புமிழும் டிராகன் பூனைபோல் மடியிலுறங்கும், நகரமே சர்ப்பமாகும். அந்த உலகத்தைக் கேட்க, இரைச்சல்களைக் கழித்து, நிசப்தத்தைக் கேட்கும் காதுகள் வேண்டும். நிறங்களைக் கழித்து நிறமின்மையைப் பார்க்கும் காதுகள் வேண்டும். சலனங்களை ஒதுக்கி, சலனமின்மையை உணரும் புலன் வேண்டும்.

இவை எதுவுமே இல்லையென்றால், அதைப்படித்து, அந்த அனுபவங்களைப்பெற Nilaraseegan - நிலாரசிகன் எழுதிய ஜூலி யட்சி வேண்டும்.

வித்யாஸமான சிறுகதைத் தொகுப்பு.

ஒவ்வொரு கதையும் ஓர் அனுபவம். வெவ்வேறு களத்தில், உலகத்தில், வயதில், நோக்கத்தில் அவை இயங்கினாலும் இறுதிக்கதையில் அவை ஒரு புள்ளியில் இணைந்து, இணை அண்டங்கள் ஓரண்டமாய் ஒழுங்குபடுகின்றன.

இந்தக்கதையில் இன்னது புரிந்தது என்பதைவிட, இன்ன மாதிரியான உணர்வைத்தந்தது எனும் வகையான புக்.

மிகவும் மெல்லிய, ஆனால் கனமான புக். நேரம்காலம் பார்க்காமல் மழைபார்த்தலோ மலைபார்த்தலோ பிடிக்கும் என்போர் படிக்க வேண்டிய புக். அவற்றைப் பார்த்ததில்லை என்போர் இப்புக்கைப் படித்தால் இனி பார்க்கப்பிடிக்கும்.

பு/கடிச்சுதா? புடிச்சது....இல்ல, அதுக்கும் மேல...

புக்குப்பெயர் : ஜூலி யட்சி
வகை: சிறுகதைத் தொகுப்பு

பதிவிட்ட சுட்டி:  https://www.facebook.com/bookpoochi/posts/1552115728375894?fref=nf

To buy Julie Yatchi click here : http://tinyurl.com/JYatchi

Tuesday, January 13, 2015

"ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்

அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்


நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார். 

வனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.


எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்  படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்'  என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து  மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.


"கேவல்" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.


பாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.


தொகுப்பில் முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. "தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.


"குறளியின் டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத  இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.

"ஜூலியட்சி" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.

அதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.

நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html

Monday, January 12, 2015

To buy my books at Chennai Book fair


சென்னை புத்தக கண்காட்சியில் எனது நூல்கள் கிடைக்குமிடங்கள்:

வெயில் தின்ற மழை - கவிதைத் தொகுப்பு - உயிர்மை

கடலில் வசிக்கும் பறவை - கவிதைத் தொகுப்பு - அகநாழிகை

ஜூலி யட்சி - சிறுகதைத் தொகுப்பு - பரிசல், அகநாழிகை,டிஸ்கவரி,அகநி,புதுப்புனல் ஸ்டால்களில் கிடைக்கும்
(பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் அனைத்து வெளியீடுகளும் இங்கே கிடைக்கும்)

இணையத்தில் வாங்க:

http://www.wecanshopping.com/products/ஜுலி-யட்சி.html

Wednesday, January 07, 2015

அனைவரும் வருக!