Tuesday, December 10, 2013

கவிதைகள் ஆறு

1.வித்தியாசனும் தா....மதனும்


எதையும் வித்தியாசமாக செய்யவேண்டும்
என்று நினைப்பவன் யாரும் அறியாதபடி
தன் வீட்டுத்தோட்டத்தில் சிங்கக்குட்டிகளை
வளர்க்கிறான். அவை மே என்று கத்துகின்றன.
மலையொன்றின் மீதமர்ந்து
சரிவை நோக்கி தூண்டில் வீசுகிறான்.
காகங்களை பிடித்துவந்து கூண்டிற்குள்
அடைத்துவைத்து முகமன் கற்றுத்தர முயல்கிறான்.
நேற்றின் மீது எழுதப்பட்ட கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றாய் உருவி நாளைக்குள்
எறிந்தபடி நடனமிடுகிறான்.
புணர்வொன்றின் உச்சத்தில் அவனுக்கு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
சிப்ஸ் சாப்பிடும் யுவதியொருத்தியின்
நினைவு வந்து அடடா அது ஓர் அற்புதகணம் என்கிறான்.
வித்தியாசனை பின் தொடர்ந்து வந்த
தாமதன் அனைத்திலும் தாமதமாகவே இருக்கிறான்.
மீசை வளர்வதற்கே அவனுக்கு இருபத்தி ஏழு
வயதாகிற்று.
தினமும் அவன் எழுதும் வரிகள்
நான்கு மாதம் கழிந்தே கவிதைகள் ஆகின்றன.
அவனது காதலி இரண்டாவது மாடியிலிருந்து
அவனுக்களித்த பறக்கும் முத்தம்
அவளது குழந்தையின் பாதம் பூமி தொட்டபின்பே
அவனைச் சேர்ந்து நகைத்தது.
தானொரு அறிவிலி என்று உணர்ந்த நாளில்
அவனது நாற்பதாவது வயது துவங்கிற்று.
அறியா தேசம் போய்விட தீர்மானித்து
ரயிலுக்காக காத்திருக்கிறான்.
நாற்பத்தெட்டாவது வயதில் அசைந்து
வருகிறது ரயில்.
அதிலிருந்து வெளிக்குதித்து தன் சுண்டுவிரலால்
ரயிலின் வேகத்தை குறைத்து
தலைகோதியபடி செல்கிறான் வித்தியாசன்.
இருவேறு ஊர்களில் அடைமழையும்
மென்சாரலும் பொழிந்துகொண்டேதான்
இருக்கின்றன எப்போதும்.


2.காற்றில் மிதந்தலையும் இறகன்

என்னிரு உள்ளங்கைகளிலும் மறைத்து
வைக்கப்பட்டிருந்தன இரண்டு கண்கள்.
யாரும் இல்லாத தெருவில் அழுதபடியே
தலைகவிழ்ந்து நடந்து செல்லும்
தனியனுக்கு ஒன்றும்
மழை பொழியும் கணங்களில்
தலை சாய்த்து வான் பார்த்து
வா மழையே பெருமழையே என்று
லயித்து மழையாகும் மிருதுவானவனுக்கு
மற்றொன்றும் கொடுத்துவிட்டேன்.
அதீதமாய் அழுவதற்கோ அல்லது
அதிகமாய் புன்னகைப்பதற்கோ அதனை
அவர்கள் பயன்படுத்தக்கூடும்.
இப்பிரபஞ்சத்துடன்
நான் ஆடும் புதிர் விளையாட்டில்
கண்களின்றியும் அனைத்தையும் காண்கிறேன்.
புன்னகைத்தபடியே அழவும்
அழுதுகொண்டே புன்னகைக்கவும் கற்றுக்கொண்டன
என் இனிப்பிதழ்கள்.
யார் வேண்டுமானாலும் முத்தமிடலாம்
என்னை.
காரணமின்றி காயப்படுத்தவும் செய்யலாம்.
காற்றில் மிதந்தலையும்
இறகில் நீங்கள் காணக்கூடும்
கண்களையும் அதனுள்ளே வெகு ஆழத்தில்
கைகள் விரித்தபடியே நகர்கின்ற நதியுருவனையும்.
 
3.ஆட்டுக்குட்டிகள் அழகானவை

என் பிரார்த்தனையில் என்னைத் தவிர்த்து
பிறரை மட்டுமே நினைத்த நொடியில்
கைகளில் ஒரு கொத்து ரோஜாப்பூக்களை
தந்து சென்றார் கர்த்தர்.
மெளனத்தின் இசைக்குள் கண்கள் மூடி
பேரமைதியுடன் லயித்திருந்தபொழுதில்
புன்னகைத்து கையசைத்தார் புத்தர்.
நடுங்கிய உடலுடன் அடர்குளிரில்
மரத்தடியொன்றில் ஒண்டியிருந்த
சிங்கக்குட்டியை கட்டியணைத்த கணத்தில்தான்
கர்த்தரும் புத்தரும் ஒன்றாய் தோன்றினர்.
அதிகாலையில் சேவல் கூவிற்று.
வரமறுக்கும் ஆட்டுக்குட்டியை தரதரவென்று
இழுத்துவந்து முட்டியால் அதன் கழுத்தில்
அழுந்தப்பிடித்தபடி கழுத்தறுத்து கருப்புச்சட்டியில்
இரத்தம் பிடித்து பீடியை இழுத்தான்
கனவில் புத்தனையும் கர்த்தனையும்
கண்டவன்.
அந்த நாள் அவ்வளவு ரம்மியமாய்
துவங்கியது.


4.பெயரற்றவனின் பகல்

அதிகாலை நான்கு முப்பது மணிக்கு
அவன் விழித்தபோது தன் பெயர்
என்னவென்பது மறந்துபோனது.
எவ்வளவு முயன்றும் நினைவில்
மலராத தன் பெயரை ஓடிச்சென்று
அலைபேசிக்குள் தேடிக் களைத்தான்.
டியர்,டார்லிங்,நாயே,மச்சி,மாமோய்
என்று ஆரம்பிக்கும் எந்தவொரு குறுஞ்செய்தியிலும்
அவனது பெயர் எழுதப்படவில்லை.
இதயத்துடிப்பு அதிகமாகி எங்கே சென்று
பெயரைத் தேடுவது என்று குழம்பியவன்
யாரிடமும் கேட்காமலும் ஆவணங்கள்
எதனையும் பார்க்காமலும் தன் பெயரை
கண்டுபிடித்துவிட தீர்மானித்து,
பால்க்காரனுக்காக வாழ்வில் முதன்முறையாக
காத்திருக்கத்துவங்கியவனை
"சார் பால்" என்று சிரித்தபடி பாக்கெட்டுகளை
கொடுத்துவிட்டு நகர்ந்தான் பால்க்காரன்.
பேப்பர்க்காரனை நம்பி சோர்ந்துவிடாமல்
அவசரமாய் அலுவலகம் செல்ல‌ நினைத்த கணம்
இன்று ஞாயிற்றுக்கிழமை
என்பது ஞாபகத்தில் மலர்ந்து
இதயத்துடிப்பை அதிகப்படுத்தியது.
கடன் அட்டைக்காகவோ அல்லது
வங்கிக்கடனுக்காகவோ யாரேனும் அழைத்துவிட்டு
தன் பெயரை உச்சரித்துவிட மாட்டார்களா என்று
பெருங்கவலை கொண்டவன் அசையா சிலையென
அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று த‌ன் காத‌லியின் ஞாப‌க‌ம் வ‌ந்து
அவளுக்கு முத்தக்குறியிட்டு ஒரு
குறுஞ்செய்தி அனுப்பினான்.
அவள் பதிலுக்கு "இட் இஸ் ஸ்வீட் டா"
என்று மறுமொழிந்தாள்.
தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தவன்
மிகத்தீவிரமாய் யோசிக்கத்துவங்கினான்.
முகநூலில் புனைப்பெயர்.
அலைபேசியில் "என் எண்".
வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டிருக்கும்
கடிதப்பெட்டியின் மீது "ஏ4".
உற‌ங்குகின்ற‌ அப்பாவுக்கு "எருமை".
அம்மாவுக்கு "ய‌ய்யா".
எதிர்வீட்டு பாப்பாவுக்கு "ண்ணா"
எதற்குள்ளும் தன் பெயர் இல்லை.
இரவு நெருங்கிக்கொண்டிருந்தது.
பெய‌ர் என்ன‌வென்று தெரியாத‌ துடிதுடிப்புட‌ன்
"என் பெயர் என்ன?" கெஞ்சும் குரலில்
முன‌க‌த்துவ‌ங்கினான்.
விடிய‌லை அறிவித்த‌ப‌டி வ‌ந்துவிழுந்த‌து
வெய்யில்.

5.மூன்றாம் கனவினள்

இருண்ட வீட்டில் கையில் பொம்மையுடன்
அமர்ந்திருக்கும் சிறுமி
அவனது கனவில் அடிக்கடி தோன்றுகிறாள்.
தன் இரண்டு இதயங்களும் வேகமாக
துடிப்பதை உணர்பவன்
உடன் விழித்துக்கொள்கிறான்.
அருகில் உறங்கும் தன் குழந்தையை
தொட்டுப்பார்த்து பதறுகிறான்.
சிறுமியின் பொம்மை மெல்ல மெல்ல
கண்கள் திறந்து மெதுவாய் தலையை திருப்புகிறது.
அவளது மடி நீங்கி இவனது கனவுக்குள்
நுழைகிறது.
கனவின் தூரத்தை ஒரே கணத்தில்
கடந்து உறங்கும் குழந்தையின் அருகில்
படுத்துக்கொள்கிறது.
அதன் மிகக்கூரிய நகங்களால்....
முதல் கனவில் சிறுமியின் மடி பொம்மை.
இரண்டாம் கனவில் குழந்தை படுக்கை பொம்மை.
தன் உடலெங்கும் எரியும் நகக்கீறல்களால்
தரையில் புரள்பவனின் எதிரே
தீர்க்கப்பார்வையுடன் அமர்ந்தபடி
தன் இடமுலையை அறுத்துக்கொண்டிருக்கிறாள்
வலமுலையை பொம்மைக்கு
ஊட்டும் இளம்தாய்.
 
6. பெண் கங்காரு

வேகமாய் வீட்டிற்குள் ஓடுகிறவனின்
உடலிலிருந்து உதிரத்துவங்குகின்றன
சொற்கள்.
அள்ளியெடுக்க இயலாமலும் விழுவதை
தடுக்க இயலாமலும் தடுமாறி ஓடுகிறான்.
மூச்சுவாங்க வரவேற்பறையில் அமர்பவன்
அனுஷ்காவின் புன்னகையை ரசிக்கிறான்.
நீலநிற அவளது கண்களின் கரைந்து
அற்புதம் அற்புதம் என்று பிதற்றுகிறான்.
அவள் அழுதால் தானும் அழுவதாக
பாவனை செய்து கண்ணீர் சிந்துகிறான்.
இப்போது தன்னுடலிலிருந்து தெறிப்பது
சொற்கள் அல்ல பூக்கள் என்றெண்ணுகிறான்.
அனுஷ்காவின் காதலனை பழிப்பவன்
கையிலொரு காய்ந்த ரோஜாப்பூவை
தலைகுனிந்தபடி பார்த்து கதறுகிறான்.
உடல் நீங்கி அறையெங்கும் வியாபித்திருக்கும்
சொற்கள் ஒவ்வொன்றாய் கண்விழிக்கின்றன.
நீந்தி நீந்தி அருகிலிருக்கும் சொற்களுடன்
சேர்ந்துகொண்டு உருவமெடுக்கின்றன.
சோபாவில் கண்ணயர்ந்து அனுஷ்காவுடன்
கங்காருகளின் நடுவே ஓடுகின்ற அவனது
கனவினை துன்புறுத்தாமல்
சுயமாய் கவிதையொன்றை உருவாக்குகின்றன.
அவனது மின்னஞசல் மூலமாய் கவிதையை
இதழொன்று அனுப்பிவிட்டு ஒவ்வொரு சொல்லாய்
உடலுக்குள் நுழைந்து செல்லாகின்றன.
அதிகாலை விழிப்பவன்
அவளொரு பெண் கங்காரு என்றபடி
தன் பிடறியை ஒரே ஒருமுறை சிலிர்த்துக்கொண்டான்.

-நிலாரசிகன்.