சிறுவயதில் விளையாடிய விளையாட்டின் பெயர்களோடு
சில கிறுக்கல்கள்...
1.கண்ணாமூச்சி
உன் நினைவுகள் என்
உயிருடன் தினம் தினம்
விளையாடும் விளையாட்டு.
2.கபடி
ரத்தம் சொட்ட கபடி
விளையாடி வென்றிருக்கிறேன்
சிறுவயதில்.
எத்தனை முறை முயன்றும்
வெல்ல இயலவில்லை
உன் கண்களின் கபடியை.
3.காதுல பூ சொல்லி
காதில் பூக்கள்
பெயர் சொல்லி களித்தது
ஒருகாலம்.
ஒரு பூவையே காதலியாய்
பெற்றது ஒருகாலம்.
பூவை அவள் பூவை
என் காதில் சூடிச்சென்றது
இக்காலம்.
4.ஒரு கொடம் தண்ணியெடுத்து...
குடம் சுமக்கும்
உன்னை சுமக்க
இடம் இருக்கிறது
என் வாழ்வில்...
அடம் பிடிக்கும்
குழந்தையாய் நீ.
5.நொண்டி
வாழ்வென்னும் ஓட்டப்பந்தயத்தில்
உன் நினைவுகளை
சுமந்து நிற்காமல் ஓடும்
நொண்டி நான்.
6.காத்தாடி
ஒரு காப்பியமே
படைக்கும் திறன்
என் பேனாவுக்கு கிடைத்திருக்கும்
நீ என்னோடு வாழ்ந்திருந்தால்..
இப்போது சிறுகவிதை
படைக்கவும் முடியாமல்
அறுந்த காற்றாடியாய் எங்கேயோ
வீழ்ந்து கிடக்கிறது.
7.கள்ளன் போலீஸ்
ஊரெல்லாம் ரவுடிகளை
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?
8.தொட்டுபுடிச்சி
கண்களால் கூட தொட்டுவிடாமல்
பேசும் உன் கண்ணியத்தில்
கன்னி இவள் மனம்
கண்ணியில் சிக்கிய
மான்குட்டியாய் தவிக்கிறதே...
9.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு)
ஆயிரம் கவிதைகள்
எழுதிய ஆத்ம திருப்தி
கிடைக்க விரும்பி ஒரே
ஒரு முறை என் இதயத்தில்
எழுதினேன்
உன் பெயரை.
10.கல்லா மண்ணா
கல்லாக மண்ணாக
போகும் இவ்வுடல்...
கல்வெட்டாகி போகலாம்
நம் காதலும் கவிதையும்..