Monday, November 30, 2009

ஒரு கரு நான்கு கதைகள்!





 முன்கதைச்சுருக்கம்:

[அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,
அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும்
பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.
குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின்
பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.
மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.]


வேலியோர பொம்மை மனம்
              

  ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள்.அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மிருதுவான அதன் தலையில் முத்திட்டு மகிழ்ந்தாள். அப்பாவும் அம்மாவும் கண்கள் தளும்ப யாரோ உருவாக்கிய பொம்மையை ரசிக்கும் தாங்கள் உருவாக்கிய பேசாபொம்மையை ரசித்துக்கொண்டிருந்தபோது, அவள் கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

                     ஆறு வருடங்களுக்கு முன் ஜெயா பிறந்தபோது அப்பாவை விட அம்மாதான் அதிகம் சந்தோஷப்பட்டாள். போரில் காலை இழந்ததால் மகன் பிறப்பான் தன்னை விட சிறந்த வீரனாக வலம் வருவான் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. பிறந்தது மகள் என்றபோது வெளிப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மகளை ஆண்பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்றே நினைத்திருந்த அப்பாவின் எண்ணத்தில் பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்தது. காதுகேளாத, வாய்பேச முடியாத குழந்தையாக ஜெயரஞ்சனி பிறந்திருந்தாள். தவமிருந்து பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு தவமுதல்வன் மீதே வெறுப்பை உமிழ்ந்தார் அப்பா. துடிதுடித்து போனாள் அம்மா. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்தன நாட்கள்.
                     ஜெயாவின் உலகம் பொம்மைகளால் நிறைந்தது. நாய்க்குட்டிகளும், சிங்கங்களும், யானை பொம்மைகளும் மட்டுமே ஜெயாவின் மௌனமொழியைப் புரிந்துகொண்டன. அவள் இருப்பே பொம்மைகள் சூழ என்றாகிப் போனது. மனதின் மொழியை கண்களால் வெளிப்படுத்தி  பொம்மைகளுடன் அவள் உரையாடுவதை வேதனையுடன் பார்த்துவிட்டு நகர்வாள் அம்மா. ஆனால் படிப்பில் எல்லோரும் ஆச்சர்யமூட்டும் வகையில் கூர்மை மிக்கவளாக திகழ்ந்தாள் அவள். அம்மா சைகையில் கற்று கொடுக்கும் பாடங்களை உடனே புரிந்துகொள்வாள். அப்பா வாங்கி தந்திருக்கும் கரடி பொம்மையை இடது தோளில் சாய்த்தணைத்தபடியே தனக்கு  மட்டுமேயானதொரு மௌன உலகில் நடமாடுவாள்.
                     ஒலியறியா ஜெயாவின் செவிகள் அந்த துயர்மிகுந்த இரவில் விழுந்து வெடித்த வெடிகுண்டின் பெருஓசையை கேட்டுணர்ந்து கொள்ளவில்லை. அவள் உறக்கத்திலிருந்தாள். இரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் பொம்மைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த ஜெயாவை தட்டியெழுப்பியபோது, திடுக்கிட்டு எழுந்தாள். அம்மாவைக் கண்டவுடன் பயத்தில் கண்கள் மருள கரடி பொம்மையை கட்டிக்கொண்டவளின் காலடியில் விழுந்து மரணித்தாள் அம்மா.

அநாதை என்னும் வக்கிர சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது. முள்வேலிக்குள் தனக்கு மிகவும் பிடித்தமான கரடி பொம்மையை அணைத்தபடி வெளிர் மஞ்சள் நிற பாவாடையில் உணவுக்காக தட்டை ஏந்தி நின்றுகொண்டிருந்தாள். கண்ணீர் அவளது பிஞ்சு மனதின் வலிகளை மொழிந்து கொண்டிருந்தது. நேற்றுவரை உணவூட்டிய அம்மாவின் நினைவுகள் அவளது கன்னத்தில் கோடுகளை தீட்டிச் சிந்தின. சக மனிதனின் மரணத்துயரின் ஓலமும், உறவுகளின் பிரிதலினால் ஏற்பட்ட துயரமும் அவளால் உணரமுடியவில்லை எனினும், அவளது இதயம் அந்த வலியை உணர்ந்துகொண்டது.
பகலெல்லாம் வெய்யிலின் உக்கிரமும், இரவின் கடுங்குளிரும் இப்போது ஜெயாவுக்கு பழகி இருந்தன. சுற்றிலும் முள்வேலியிட்ட உடைந்த கட்டிடமொன்றில் அவளும் இன்னும் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களது பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில் ஒருவன் மிகவும் மூர்க்கமானவனாக தோன்றினான். இரக்கமற்ற அவனது கண்களை பயத்துடன் பார்ப்பாளவள். அவனது தோற்றமும் கன்னத்திலிருக்கும் வெட்டுத்தழும்பும் அவனை கதைகளில் வரும் பூச்சாண்டியை நினைவூட்டின. அவளுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்கும் அவனது மௌன மிரட்டல் மேலும் அச்சத்தைத் தந்தது. ஜெயாவின் அருகில் வந்தவன் அவளது பொம்மையை பறித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்தபோது அருகிலிருந்த கல்தூணுக்கு பின் ஒண்டிக் கொண்டாள்.
                     மறு நாள் அதிகாலை வெளியே சென்றவள், இரு பாதியாய் முள்வேலியோரம் கிடந்த பொம்மையை கண்டு அழுதுகொண்டே அந்த பிய்ந்த பொம்மையை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அப்படியே உறங்கியவளின் கனவில் கரடிபொம்மைகள் உயிர்ப்பெற்று அவளோடு ஓடியாடி விளையாடின.

அவர்கள் தருகின்ற ரொட்டிகளை வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. வரிசையை கட்டுப்படுத்தியவர்களுள் அந்த முரடனும் இருந்தான். எல்லோரும் வாங்கி சென்றபின் ஜெயா ரொட்டியை வாங்கினாள். பசியில் ரொட்டித்துண்டு இனித்தது. ரொட்டியைக் கடித்தபடி நடந்தவளின் பார்வையில் களைத்து கல்லொன்றின் மீதமர்ந்த முரட்டுச் சிப்பாய் தெரிந்தான். சோர்வாக அவன் அமர்ந்திருப்பதை கண்ட ஜெயா அவனருகில் சென்று  ரொட்டித்துண்டில் ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொன்றை அந்த முரட்டு ராணுவவீரனுக்கு கொடுக்க கைநீட்டினாள்.
                   தன்னை நோக்கி நீள்கின்ற பிஞ்சுவிரல்களும், ரொட்டித்துண்டும், அதன் வெள்ளை மனதும் கண்டவன் முதல் முறையாக மெல்லியதாய் தன்னுடல் நடுங்குவதை உணர்ந்தான். தனிச்சையாக அவனது கைகள் நீண்டன.
                   அவனுக்கு ஒரு ரொட்டியை கொடுத்துவிட்டு தன் ரொட்டித்துண்டை கடித்தபடி, இடது கையில் பிய்ந்த கரடி பொம்மையை அணைத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தாள் ஜெயா.

*******************************

அடலேறுவின் கதை படிக்க இங்கே செல்லவும்.
ஜனாவின் கதை படிக்க இங்கே செல்லவும்.
அதிபிரதாபனின் கதை படிக்க இங்கே செல்லவும்.

Saturday, November 28, 2009

கூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1






கூடல்திணை ஜனவரி முதல் இதழில் ஆரம்பமாகும் புதிய பகுதிகள்:




இ.பாவின் ”திரைகளுக்கு அப்பால்” புதினம்:


ஆணா பெண்ணா என்றால் ஆண். கறுப்பா சிவப்பா என்றால்
சிவப்பு.ஒரு பெண்ணாகவும் இருந்து அதுவும் அவள் கறுப்பாகவும் 
இருந்துவிட்டால்? அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான
போராட்டத்தையே இ.பா இந்நாவலில் அழுத்தமாகப் பதிவு
செய்துள்ளார்.


1971ல் தினமணி கதிரில் இதே நாவல் ஒரு தொடராக வெளிவந்தபோது
ஏகப்பட்ட எதிர்ப்புகள்,கண்டனங்கள்.விளைவு? தொடர் பாதியிலேயே
நிறுத்தப்பட்டது.பின்னர் கிழக்கு,கலைஞன் பதிப்பகங்களின் வாயிலாக
புத்தகமாக வெளிவந்தது.


இன்றும் பாலியல் தொடர்பான படைப்புகளைக்குறித்து விவாதங்கள்
நடந்துகொண்டிருக்கும் வேளையில் 70களிலேயே இந்திரா
பார்த்தசாரதி பல எதிர்ப்புகளுக்கிடையே இப்படி ஒரு
நாவலை படைத்திருக்கிறார் என்பது இன்றைய தலைமுறையினருக்கு
சென்றடைதல் வேண்டும் என்கிற எண்ணத்தில் மீள்பிரசுரமாகிறது.




கவிஞர்.பழமலய் “சனங்களின் கதை” பாகம் இரண்டு:


80களில் தமிழ்க்கவிதையுலகில் புரட்சியை ஏற்படுத்தி “இப்படியும் கவிதை
எழுதலாம்” என்று இன்றைய கவிஞர்களுக்கு முன்னோடியாக அமைந்தது
சனங்களின் கதை.


கடந்த முப்பது ஆண்டுகளில் கவிஞர்.பழமலய் கண்ட சனங்களின் வாழ்வியல் 
முறை மாறிய நிலையில் இன்றைய சனங்களை கவிதைகளில் எழுதுகிறார்.


இரா.முருகன் “பெட்டி” கணினித்துறையை பின்புலமாககொண்ட புதினம்:


ஆசிரியரின் முன்னுரையிலிருந்து:


 ‘மூன்று விரல்’ நாவலை நான் எழுதி எட்டு வருடமாகி விட்டது. அந்த உலகம் இல்லை இன்றைக்கு இருப்பது. நானும் தான் மாறி விட்டேன். 


அனுபவங்களின் கனம், அழுத்தம், அவை மனதில் பூசிப்போன இனிப்பும் கசப்பும் துவர்ப்புமான நினைவுகள் என்று இந்த மாற்றம் ஒரு தளத்தில் 


நிகழும்போது இன்னொரு புறம் நடை, வடிவம், கலை இலக்கியத் தேடல் எனப் புதிய பாதைகளில் எழுத்துப் பயணமும் தொடர்ந்தபடி தான் இருக்கிறது.


கணினித் துறையில் சட்டென்று ஒரு தேக்கம். ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, புது ப்ராஜக்ட்கள் வரவு குறைந்து அறவே இல்லாமலும் போனது 
என்று நிலைமை மாற, கம்ப்யூட்டர் பெட்டிக்காரர்களின் எதிர்காலம் பற்றிய நிச்சயத்தன்மை குறையத் தொடங்கியது. இன்னும் இது தொடர்ந்து 
கொண்டுதான் இருக்கிறது. விரைவில் மாறும் என்ற நம்பிக்கை இப்போது வந்திருப்பது உண்மைதான். ஆனாலும் காத்திருப்பின் வலிகள் 
எத்தனையோ கணினி மென்பொருள் ஊழியர்களை ஆழமாக பாதித்திருக்கின்றன. 


நாகூர் ரூமி “பாட்-பூரி” பத்தி:


நாகூர் ரூமியின் எழுத்தில் வார்த்தைகளுடன் பகடியும் நையாண்டியும் கலந்து புதுசுவை விருந்தளிக்க வருகிறார்.சுவையை குறித்து


ஆசிரியரின் முன்னுரையில்,


சோற்றில் சாம்பாரோடு ரசத்தையும் சேர்த்து ஊற்றிக் கலந்து கொள்வேன். மட்டன் குழம்பில் தயிர் அல்லது மோரை ஊற்றிக் கொள்வேன். தோசை, 


இட்லி, இடியாப்பம் வகையறாக்களை டீ தொட்டு சாப்பிடுவேன்... ஒரு தத்துவார்த்த அடிப்படையிலான சாப்பிடும் முறை அது என்று சொல்லலாம்.
நான் எழுதும் முறையும் நான் சாப்பிடும் முறை போன்றதுதான். நான் எழுதிய நாவல் ஒன்று நாவல் என்ற இலக்கணத்துக்குள் வரவே இல்லை என்று 
ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது சரியாக இருக்கலாம். அதைப்பற்றி எனக்கென்ன கவலை? அது நாவலாக இருந்தால் என்ன, 
இல்லாவிட்டால் என்ன? படிப்பதற்குச் சுவையாக இருக்கிறதா இல்லையா? அதுதான் கேள்வி. அதற்கு பதில் ஆம், இருக்கிறது என்று வாசகர் மனம் 
சொல்லிவிட்டால் அது பிறவிப்பயன் அடைந்துவிட்டது.


கோவை சதாசிவம் “சூழல் போராளிகளுக்கு...” சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைத்தொடர்:


மலைத்தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புகளாக இக்கட்டுரைத்தொடர் அமையும்.மலைகள்,காடுகள்,பறவைகள்,விலங்குகள்,நதிகள்,
கடற்கரைகள் என இயற்கையையும் இயற்கையின் கூறுகளையும் தாயாகவும் குலசாமியாகவும் உளமாற நம்புகிற உணர்வுப்பூர்வமான
கட்டுரைத்தொகுப்பாக இது அமையும்.வள்ளுவனும் வள்ளலாரும் பாரதியும் இராகுல்ஜியும் ஏங்கல்ஸும் சூழலியல் உணர்வோடுதான் வாழ்ந்தார்கள்,படைத்தார்கள் என்பதை இக்கட்டுரைத்தொடர் உணர்த்தும்.


------------------------------------


மேலுள்ளவை மட்டுமல்லாமல் இன்னும் பல ஆச்சர்யங்கள் ஜனவரி ஒன்றுக்காக காத்திருக்கின்றன! நீங்களும்தான்!!
கூடல்திணை இணைய இதழில் உறுப்பினராக உங்களை பதிவு செய்துகொள்ளுங்கள். 
பதிவு செய்தவர்களுக்கான கடவுச்சொல் டிசம்பர் 15க்கு பிறகு மின்மடல் வழியாகத் தெரிவிக்கப்படும்.


அடுத்த முன்னறிவிப்பு மேலும் பல படைப்புகளின் விவரங்களுடன் டிசம்பர் 15 அன்று வெளியிடப்படும்.



Friday, November 27, 2009

கவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.



உரையாடல் அமைப்பு மீண்டும் போட்டியை அறிவித்திருக்கிறார்கள். இம்முறை கவிதை போட்டி :)
(20 முதல் பரிசுகள், தலா ரூ.1500)

போட்டிக்கான சுட்டி :

http://naayakan.blogspot.com/2009/11/blog-post_25.html



சத்தமின்றி மற்றொரு பதிவர் சிறுகதை போட்டியை அறிவித்திருக்கிறார். முதல் பரிசு 2000 ரூபாய்.

போட்டிக்கான சுட்டி:

http://simpleblabla.blogspot.com/2009/11/blog-post_22.html

சர்வேசன் நடத்தும் "நச்" சிறுகதை போட்டியின் கடைசி கட்ட தேர்வு நடைபெறுகிறது.

விவரம் இங்கே :

http://surveysan.blogspot.com/2009/11/blog-post_26.html

இதுபோன்ற போட்டிகள் மொழியின் வளர்ச்சிக்கும் நல்ல எழுத்துப் பயிற்சிக்கும் வழிவகுக்கும். பதிவுலகம் கடந்த இரண்டாண்டுகளில் நல்லதொரு வளர்ச்சியை எட்டியிருப்பதாகவே தோன்றுகிறது.
கலந்து கொள்ள போகும் இணைய எழுத்தாளர்/கவிஞர்களுக்கு என் வாழ்த்துகள்.

Thursday, November 26, 2009

இலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை

நேற்று திடீரென்று நண்பர் butterfly சூர்யா விடமிருந்து தொலைபேசி அழைப்பு.. காலையில் பெரும்பாலும் அழைக்க மாட்டார். ஒரு முக்கியமான செய்தி என்றார். அப்போது வெளியில் இருந்ததால் வாகன இரைச்சலில் சரியாக கேட்கவில்லை மீண்டும் அழைப்பதாக சொல்லி போனை வைத்து விட்டர்.. கொஞ்சம் டென்ஷனாகி போனேன்.



மீண்டும் மதியம் அழைத்து இலங்கை ஷக்தி பண்பலைக்காக ஒரு கவிதை வாசிக்க வேண்டும் என்றார். அவர்களே மாலை அழைத்து ஒலிப்பதிவு செய்வார்கள் என்றும் சொன்னார்.



மாலை அழைத்து ஒலிப்பதிவும் செய்தார்கள்.. மகிழ்ச்சியாக இருந்தது.



நிகழ்ச்சி பற்றிய தகவல்:


வானொலி : "சக்தி" பண்பலை

அலைவரிசை : கொழும்பு & கிழக்கு: 105.1 கண்டி: 91.50

கிழமை : ஞாயிறு

நாள் : 29/11/2009

நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை..

நிகழ்ச்சியின் பெயர்: அன்னைக்காக




”அம்மா என்றொரு தேவதை” என்ற பெயரில் ஒரு கவிதை வாசித்து இருக்கிறேன்.


ஆனால் என் குரலை நானே இங்கு (இந்தியாவில்) கேட்க இயலாது என்று நினைக்கிறேன். இலங்கை நண்பர்கள் கேட்டுவிட்டு கருத்தை கூறுங்கள்.


ஒலி நாடா வந்ததும் பதிவில் சேர்க்கிறேன்.


என் பெயரை பரிந்துரைத்த நண்பர் சூர்யாவிற்கும் வாய்ப்பளித்த ஷக்தி பண்பலைக்கும் மிக்க நன்றி.
டிஸ்கி: இந்த ஒலிப்பதிவில் கவிஞர். வைரமுத்து, கவிஞர். பா.விஜய் அவர்களின் கவிதையுடன் என் கவிதையும் இடம் பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.

Tuesday, November 24, 2009

வேட்கையின் நிறங்கள்




1.
வளது விரல்களின் நீட்சியே மோகமாய் உருப்பெற்று என்னுடலை சில்லிடவைக்கிறது.கற்பனைகளில் வெண்ணிற புரவியேறி கூந்தல் காற்றிலாட அவள் என்னை நோக்கியே எப்போதும் பயணிப்பதாய் எண்ணம் தோன்றுகிறது.அவள் என் வகுப்புத்தோழி நதியா.பத்தாம் வகுப்பில்தான் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். அவளைக் கண்ட நொடி முதல் என்னுலகில் வலம் வந்த ஆண்கள் அனைவரும் கரைந்து மறைந்துபோனார்கள்.
என் அருகில் அமர்ந்தபோது அவள் உடலிலிருந்து பரவிய வாசனைக்கு என் பெண்மையை தட்டி எழுப்பும் கரங்கள் இருந்ததோ என்றே எண்ணி வியந்தேன். வேதா என்கிற என் பெயரை வெறுக்க ஆரம்பித்து எப்போதும் நதியா என்றே முணுமுணுக்க துவங்கியது இதழ்கள்.யாராவது நதியா என்றழைத்தால் சட்டென்றொரு நிமிட சில்லிப்பு உடலை ஆக்கிரமித்துக்கொள்ளும். பேனா அல்லது ஏதோவொன்று வாங்க அவளது கைவிரல்கள்
என்னிடம் நீள்கின்றபோதெல்லாம் புரிந்துகொள்ள இயலாத அகத்தூண்டலில் திண்டாடினேன் நான். நதியா உன்னை விரும்புகிறேன் என்று சொல்லிவிட முயன்று முயன்று நான் தோற்பதை எப்போது அறிந்துகொள்வாள் அவள்?

"என்னடி திரும்பவும் கனவுக்கு போயிட்டீயா?" நதியா என் வகுப்பில் சேர்ந்த பொழுதுகளை அசைபோட்டபடி படுக்கையில் கிடந்தவளை உசுப்பியது அந்தக் கேள்வி.படுத்துக்கொண்டே தலை திருப்பி அவளை பார்த்தேன்.நீல நிற முழுக்கை சட்டையும் கறுப்பு நிற ஜீன்ஸுமாய் நின்றிருந்தாள்.
ஓடிச்சென்று கட்டிக்கொள்ளலாம் போலிருந்தது. "ஒண்ணுமில்ல நதி...சரி ஆபீஸ் கிளம்பிட்டியா?" அந்த நீலநிற சட்டையை ரசித்துக்கொண்டே கேட்டேன்.

"ஆமாடி இன்னைக்கு சீக்கிரம் போகணும் ஒரு ப்ராஜக்ட் டெட்லைன்,சாயங்காலம் வர லேட்டாகும் கோவிச்சுக்காத செல்லம்" என் கன்னத்தில் தட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.

மீண்டும் நதியா என் வாழ்க்கைக்குள் வந்த அற்புத பொழுதுகளை நினைத்தபடி படுக்கையில் விழுந்தேன்.

2.
ப்பாவின் அடிகளை அம்மாவால் மட்டுமே தாங்கிக்கொள்ள முடியும். குடித்து சீட்டாடி குடும்பத்தை சீரழித்திருந்தார் அப்பா.அம்மா ஆசிரியை என்பதால் வீட்டில் அடுப்பெரிந்தது. நான் அம்மா அப்பா இதுதான் எங்கள் குடும்பம்.அப்பா என்று அழைக்க விரும்பாததால் அவன் என்றுதான் அம்மாவிடம் பேசுவேன்.
வேலைவெட்டி ஏதுமின்றி எப்போதும் குடியில் மூழ்கியிருக்கும் அவனை அம்மா எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டாள் என்பது புரியாத ஒன்றாகவே இருந்தது எனக்கு.

ஆண்களை காணும்போதெல்லாம் அவனுடைய சிகப்பேறிய கண்கள்தான் என்னை ஆட்கொள்ளும்.எந்தவொரு ஆணும் அவனை போலவே துர்நாற்றமெடுக்கும் உடலையும் வெறிநிறைந்த சிகப்புக்கண்களையும் கொண்டிருப்பதாக தோன்ற ஆரம்பித்தபோது எனக்கு பதினான்கு வயது முடிந்துவிட்டிருந்தது. பூத்து நின்ற நேரம் பூப்புனித நீராட்டு விழாவிற்கு வீடு நிறைத்திருந்தனர் சொந்தங்கள். அப்போதுதான் முதன் முதலாக மாதவனை பார்த்தேன். என் அத்தை மகன். அரும்பு மீசையும் பூனைமுடி தாடியுமாக திரிந்துகொண்டிருந்தவன் அவ்வப்போது ஓரக்கண்ணில் என்னை பார்த்தது உள்நெஞ்சை வருடுவது போலிருந்தது. ஆண்களே பிடிக்காத எனக்குள் மாதவன் மட்டும் வெள்ளைநிறமும் கருமைநிறமும் கொண்ட ஒளிவீசும் கண்களை கொண்டவனாக தோன்றினான். அந்தக் கண்களும் என்னை தின்றுவிடும் ஓரப்பார்வையும் ஏதேதோ புரியாத உணர்ச்சிகளை தெளித்துச்சென்றன.

மாதவன் எங்கள் வீட்டிலிருந்த ஒரு வாரமும் பல்லாயிரக் கணக்கான யுகங்களுக்கு சமமான வசீகர வாழ்க்கையை எனக்கு தந்துவிட்டதாகவே நினைத்துக்கொண்டேன்.கள்ளச்சிரிப்பிலும் திருட்டுத்தனமான பார்வையிலும் மாதவன் என்னை சுற்றி வந்தான். யாருமற்ற அதிகாலையில் கால்களில் ஏதோ நெருடியபோது சட்டென்று விழித்து அதிர்ந்தேன். என் முழங்கால் நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது மாதவனின் விரல்கள். வெடுக்கென்று கால்களை பாவாடைக்குள் மறைத்துக்கொண்டேன். மாதவனின் கண்கள் ரத்த சிவப்பாக மனதெங்கும் காட்சியளித்தது.என் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.மாதவன் போய்விட்டான். எங்கள் வீட்டிலிருந்தும் என்னிலிருந்தும்.

3.



மாதவனின் பிரிவுக்கு பிறகு யாரிடமும் அதிகம் பேசாத மெளனியாக இருப்பதே என் இயல்பாகிப்போனது.
ஆண்களைக் காணும்போதெல்லாம் ரத்தம் ஏறிய கண்களும் ஒருவித துர்நாற்றமும் என்னை சூழ்ந்துகொள்ளும். என் அம்மா வேலை பார்க்கும் பெண்கள் மேல்நிலை பள்ளியிலேயே படித்ததால் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.படிப்பில் மட்டுமே கவனம் திசைதிரும்பிய நேரத்தில்தான் நதியாவின் வருகை நிகழ்ந்தது.

கடைசி பெஞ்சில் என்னருகில் நதியா அமர்ந்த நாள் முதல் இருவரும் நல்ல தோழியாகி விட்டோம். ஆனால் அவளுக்கே தெரியாமல் அவளது தொடுதலை ரசித்துக்கொண்டே இருந்தேன். எதனால் நதியா என்னுள் வந்தாள்? என்ன உறவு இது? ஏதும் புரியும் நிலையில் அப்போது நானில்லை.அது பிடித்திருந்தது. அவளறியா பொழுதுகளில் அவளது பேனாக்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவளது வாசம் நிறைந்திருக்கும் புத்தகங்களை நுகர்வதும் விவரிக்க முடியாத பெரும் கிளர்ச்சியை எனக்குள் உருவாக்கியிருந்தது.

நதியா என்னைப்போன்றே மெளனத்தை நேசிப்பவளாக இருந்தாள்.ஆனால் தவறு செய்பவர்கள் அது ஆசிரியையாக இருந்தாலும் தயங்காமல் சுட்டிக்காண்பிப்பாள். ஒருமுறை எங்கள் பள்ளியின் வாசலருகே நடந்த விபத்தொன்றில் தவித்த பெண்ணுக்கு உடனே இரத்தம் தர முன் வந்தவள் நதியா. இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகம் கவர்ந்தது அவளது நீலநிற கண்கள். எப்போதும் பேசும் கண்கள்.
துயர்மிகுந்த இரவுகளில் அவளது கண்களே என்னுடன் உரையாடின. காந்தம் நிறைந்த அவளது பார்வையில் மெய்மறந்து சொல்ல வந்த வார்த்தைகள் தொலைந்து நின்ற நாட்கள் ஏராளம். நீலநிற வானத்தில் நதியாவும் நானும் மேகங்களினூடாக பயணிப்பது போல் கனவு கண்டிருக்கிறேன்.அவள் வாசம்தான் என் சுவாசப்பையை எப்போதும் நிரப்பியபடி இருந்தது.நதியாவிடம் எப்படி சொல்வது என் அக தவிப்பை?

4.

ன்றொரு நாள் பள்ளி முடிந்து எல்லோரும் வீட்டிற்கு போனபின் நானும் நதியாவும் தனித்திருந்தோம். அவள் கண்கள் நீலநிறத்தை இழந்திருந்தது அன்றுதான். இரண்டு பாடங்களில் பெயிலான வருத்தம் தாளாமல் என் தோளில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். எனக்குள் ஏதோ சடக்கென்று விழித்துக்கொண்டது.ஆறுதலாய் அணைத்துக்கொண்டு அவள் நெற்றில் முத்தமிட்டேன். மின் அதிர்வுகள் உடலெங்கும் பரவி தனித்தீவில் நானும் அவளும் மட்டுமே தனித்திருப்பதாக கற்பனை விரிந்தபோது என்னை ஏறிட்டு பார்த்தாள். மெல்ல அவளது கண்களின் நீல நிறம் அடர்த்தி பெற்று விஷ நாகத்தின் கண்களைபோல் உருண்டது. கன்னம் நனைத்த கண்ணீர்க்கோடுகளில் முத்தமிட்டேன். இறுக என்னை மார்போடு அணைத்துக்கொண்டாள். திரியின்றி எரிந்து சாம்பலாகி நாங்கள் மீண்டபோது அவள் கைகளுக்குள் நானொரு சிறுமுயலாய் கிடந்தேன்.

அடுத்த இருவருடங்கள் அருகிலிருக்கும் நகரத்தில் ஒரே பள்ளியில் சேர்ந்தோம். விடுதியில் ஒரே அறை. என் கரம் பற்றி கனவுகளை ரசிக்கும் காதலனாய் உடல்பற்றி உயிர் மீட்கும் கணவனாய் நதியா மாறியிருந்தாள்.
என் வானமெங்கும் அவளது கண்களின் நிறம் வழிந்துகொண்டிருக்கும். உடல் பொருள் அனைத்தும் நதியாவின் சொந்தமான தருணம் கல்லூரிக்குள் நுழைந்தோம்.மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் நதியாவின் அடிமைப்பெண்ணாக வசிப்பது எனக்கு பிடித்தமானதாக இருந்தது. விடுதி அறைக்குள் அவள் கணவனாக நான் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கை எவ்வித கஷ்டங்களுமின்றி நகர்ந்தது.

மூன்றாம் வருடத்தின் கடைசி நாளில் அம்மா கல்லூரிக்கு வந்திருந்தாள். கன்னத்தில் புதியதொரு வடு தென்பட்டது.ரத்தக்காட்டேரியாக அவள் கணவன் மாறியிருக்கலாம். வந்தவள் சொன்ன செய்தி கேட்டு உடைந்து அழுதேன். மாதவனுக்கும் எனக்கும் நிச்சயம் செய்யப்போவதாக அம்மா சொன்னாள். அம்மா அப்பாவிடம் மட்டும்தான் கோழை.மற்றவர்களிடம் கல்நெஞ்சுக்காரி.நினைத்ததை முடிக்காமல் விட்டதேயில்லை. விடுதிக்கு திரும்பினேன்.நதியாவின் மடியில் முகம்புதைத்து அழுதேன். என்னை விட்டு அவள் மட்டும் எங்கே போய்விடுவாள்? அவளது நீலக்கண்ணிலும் கண்ணீர் துளிர்த்தது. இருவரும் அந்த நகரத்தை விட்டு தொலைதூரம் சென்றுவிட தீர்மானித்தோம்.

5.

கோவைக்கு ரயிலேறியதிலிருந்து அவள் மடியில் படுத்தபடியே கண்கள் மூடியிருந்தேன் நான். ஜன்னல் வழியே வெளியுலகை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் நதியா. இருவரும் கோவையில் ஒரு வீடுபிடித்து வாழ துவங்கினோம்.அவளுக்கு வெள்ளை வேஷ்டியும் கதர் சட்டையும் எடுப்பாக இருந்தது.கண்மையால் சிறிய மீசையை அவள் வரைந்தபோது அது மாதவனை நினைவூட்டியது.என் மனமறிந்து உடனே அதை அழித்துவிட்டாள்.
மஞ்சள் கயிற்றிலாடிய சிறு மஞ்சள் பார்க்க மிக அழகாய் இருந்தது. ஜன்னல் வழியே மாலை வெயில் இறங்கிக்கொண்டிருக்க என் கழுத்தில் அந்த மஞ்சள் கயிற்றை கட்டினாள். எப்போதும் என்னுடன் இருப்பதாக உறுதியளித்து அணைத்துக்கொண்டாள்.மஞ்சள் வெயிலின் இதத்தை அந்த அணைப்பில் உணர்ந்தேன்.

நதியாவுக்கு ஒரு அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.நான்கு மாதமாக எங்கள் வாழ்க்கை இனிப்பை மட்டுமே எங்களுக்கு தந்து மகிழ்ந்தது. மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்துக்கொண்டு மஞ்சள் நிலவை ரசித்த பொழுதுகள் ஏராளம்.சிறுசிறு கதைகளால் என்னை வெட்க செய்வாள்.என் நெற்றியில் புரளும் முடிக்கற்றையை அவளது நீண்ட அழகிய விரல்கள் ஒதுங்கச் செய்யும். இரவுகளில் உணர்வுப்பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளமாய் நதியா என்னை மாற்றியிருந்தாள்.

கதவு தட்டபடும் ஓசை கேட்டு இயல்புக்கு திரும்பினேன். நதியாவாகத்தானிருக்கும்.இன்று மல்லிகைப்பூ வாங்கி வருவதாக சொல்லி இருந்தாள். ஓடிச் சென்று கதவை திறந்தேன். அவளுடன் ஒரு வாலிபன் நின்றிருந்தான்.
தன்னுடன் வேலை பார்க்கிறானென்று அறிமுகப்படுத்தினாள். நதியாவின் தோளில் கைபோட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தான் அவன்.

அதிர்ச்சியுடன் நதியாவை பார்த்தேன்.அவளது கண்களின் நிறம் சிகப்பாக மாறிக்கொண்டிருந்தது.

-நிலாரசிகன்.

Monday, November 23, 2009

நவம்பர் 23


புன்னகை தொலைந்து
சில மாதங்களாயிற்று.
இன்றேனும்
மலர்ந்திருக்கட்டும்
புன்னகை மறந்த இதழ்கள்.

Sunday, November 22, 2009

சச்சின்,அ.முத்துலிங்கம்,திருச்செந்தாழை

சி மாதங்களுக்கு முன்பு பிலெடெல்பியாவில் இந்திய நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தேன். அப்போது இரு அமெரிக்கர்கள் இது என்ன விளையாட்டு என்று கேட்டார்கள்.அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி ஒரு சிறு அறிமுகம் தந்துவிட்டு அவர்களையும் கிரிக்கெட் விளையாட சேர்த்துக்கொண்டோம். பேஸ்பால் பந்தை எறிவதுபோல் அவர்கள் பவுலிங் செய்தது நகைப்பாக இருந்தது. விளையாடி முடித்த பின்னர் புல்தரையில் ஓய்வெடுக்க அமர்ந்திருந்தபோது ஒரு மூதாட்டி தன் செல்ல நாயுடன் அருகில் வந்தார். எல்லோரும் கிரிக்கெட் சிறப்பாக விளையாடினீர்கள் நான் தூரத்திலிருந்து ரசித்தேன் என்றார். எங்களுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.

அவர்
ஒரு அமெரிக்க மூதாட்டி. அவருக்கு எப்படி கிரிக்கெட் தெரிந்தது? விசாரித்தவுடன் அவர் சொன்னவிஷயம் கேட்டு எங்ளுடன் விளையாடிய மற்ற இரு அமெரிக்கர்களே வியந்துபோனார்கள். அந்த மூதாட்டியின் பேரன் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். அவனுக்கு கிரிக்கெட் அறிமுகமானது அங்கேதான். அது மட்டுமின்றி சச்சினின் தீவிர ரசிகன் அவன். விடுமுறைக்கு அமெரிக்கா வந்தபோது சச்சின் விளையாடிய போட்டி ஒன்றின் டிவிடியை கொண்டு வந்திருக்கிறான். தன் பாட்டிக்கு கிரிக்கெட் பற்றியும் சச்சின் பற்றியும் சொல்லி இருக்கிறான். அந்த மூதாட்டி விடைபெறும் போது சொன்னார் "இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறேன் - சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் பார்க்க".

கிரிக்கெட்
வாசமே இல்லாத அமெரிக்காவில் சச்சின் பற்றி தெரிந்திருக்கிறதென்றால்,இதற்கு மேல் சச்சின் பற்றி என்ன சொல்ல? 30,000 சர்வதேச ரன்கள். டபிள்யூ.ஜி.கிரேஸ்,ஜேக் ஹாப்ஸ்,பிராட்மேன்,பாய்க்காட்,க்ரகாம் கூச் இவர்களெல்லாம் முதல்தர போட்டிகளில் பல ஆயிரம் ரன்களை கடந்தது நூற்றிற்கும் மேற்பட்ட சதங்களை அடித்தவர்கள். 16 வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்துவிட்டதால் அதிக முதல்தர போட்டிகளில் சச்சின் விளையாடியதில்லை. ஆனால் முப்பதாயிரம் ரன்கள் சர்வதேச அணிகளுக்கு எதிராக எடுத்திருக்கிறார் எனில் சந்தேகமின்றி பிராட்மேனுக்கு அடுத்த மிகச்சிறந்த வீரர் சச்சின் தான்.சச்சினுக்கு வாழ்த்துகள்.
-------------------------------------------------------------------------

ந்த வார ஆனந்த விகடனில் எழுத்தாளர் .முத்துலிங்கம் சிறுகதை "புதுப் பெண் சாதி" வெளியாகி இருக்கிறது. ஒரு நாவலை சிறுகதையாக எழுதி இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையில் ஒரு மளிகை கடை வைத்திருப்பவனின் மனைவியை பற்றிய கதை. கதையினூடாக இலங்கையின் அன்றைய நிலவரத்தை(1989) சுட்டிக்காட்டிய விதம் அருமை. கதையின் முடிவும் ரசிக்கும்படி இருந்தது. கச்சிதமாக சிறுகதை எழுத இந்தக்கதையை உதாரணமாக சொல்லலாம்.

ஆனந்த
விகடனுக்கு ஒரு கேள்வி. நட்சத்திர எழுத்தாளர்கள் ஏற்கனவே பெயர் பெற்றவர்கள். அவர்களது படைப்புகளை கேட்டு வாங்கி வெளியிடுவதில் என்ன பயன்? இளம் எழுத்தாளர்களுக்கு .வி ஒரு களமாக செயல்படலாமே?
---------------------------------------------------------------------------

பா.திருச்செந்தாழையின் "வெயில் நண்பன்,பிராத்தனை ஒரு பிரதேசம்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இவரது மொழி வசீகரிக்கிறது. ஒவ்வொரு வரியும் கவனமாக செதுக்கப்பட்ட சிற்பமாகவே தோன்றுகிறது.உமா மகேஷ்வரியின் சிறுகதைகளுக்கு பின் தனக்கென தனிமொழியை கையாளும் சிறுகதையாளராக பா.திருச்செந்தாழையை சொல்ல முடியும். பதிவர் மண்குதிரை இந்த நூலை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.பிடித்த வரிகள் சில:

"நினைவுகளின் குப்பைக்கூடையாய் நான் இருப்பதாக உணர்வதற்குச் சில காரணங்களிருக்கின்றன. எந்த வேலையையும் ஆயுளுடன் பிணைத்துக் கனவு காணாமல் அனுபவங்களின் வெவ்வேறு பக்கமாய் மாற்ற முயன்று ஊடுநரைகள் எழத்துவங்கிய இந்த வயதிலும் நிலையற்ற வாழ்வுடனும், திருப்தியுறா மனநிலையுடனும் நகரின் வெவ்வேறு சந்திப்புகளில் சாலையைக் கடப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். சில நிகழ்வுகளின் மெளனசாட்சியாகவும், இன்னும் சிலவற்றின் மையப்புள்ளியாகவும் ஆனவிதம் நிறைகின்றது நாட்களின் பல கணங்கள். "

"""காலம் ஒரு திருடனைப் போல அவளது வனப்புகளைக் களவாடிச் சென்றுவிட்டிருந்தது"


இன்று திருச்செந்தாழையின் திருமணம். வாழ்த்துகள் பல :) --------------------------------------------------------------------------------

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை என்றொரு பதிவு இரு மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். தகிக்கும் கோடை பாலையாக உருப்பெற்றிருக்கிறது.

உடல்
மனம்
இருத்தல்
இயல்பு
எதுவுமற்று
நான்...

-
நிலாரசிகன்.

Friday, November 20, 2009

வேறோர் உலகம்

1.
புன்னகை சாத்தியப்படாத
முகங்களில் நடுவே
கற்பாவையென
மெளனபுன்னகையுடன்
நின்றிருந்தாய் நீ.
ஜென்மங்கள் கடந்த
காத்திருப்பில்
வார்த்தைகள் தேவையின்றி
தழுவிக்கொண்டழுதோம்.
ப்ரியங்கள் சுமந்துவந்த
தேவதை
குழந்தைகள் நிறைந்த
உலகிற்குள் நம்மை
அழைத்துச் சென்றாள்.
மீண்டும்,
எதிரெதிரே நிற்கும்
பொம்மைகளானோம்.

2.
இடக்கை உடைந்து
தனியே விழுந்தபோது
உன் கண்களை கண்டேன்.
துயர்மிகுந்த பார்வைக்குள்
உன் வலியை
மறைத்துக்கொண்டிருந்தாய்.
யாருமற்ற பொழுதொன்றில்
அருகில் வந்தமர்ந்தது
தோள்களில் சாய்ந்துகொண்டாய்.
பின்,
அகன்று சென்றாய்.
பொம்மையுலகில் பிறவி
கொண்டதற்காக உடைந்தழுதேன்
நான்.

-நிலாரசிகன்.

Thursday, November 19, 2009

ஆலம்



பக்கத்துவீட்டு வேப்பமரத்தில் கிளியந்தட்டு விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் முத்துராசுவும்.என்னை விட மிகவேகமாய் மரத்தில் ஏறுபவன் முத்துராசு.அவன் அம்மா பேச்சியக்கா என்னை கூப்பிட்டார்.
“ஏய்யா சரவணா உங்கவீட்டுக்கு போகலையா? அம்மாகூட போயி இருக்கலாம்ல?”
"நான் எதுக்கு போகணும்" ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு தாவிக்கொண்டே கேட்டேன்.
“அப்பாவ இன்னுங் கொஞ்ச நேரத்துல எடுத்துடுவாங்க சரவணா” பேச்சியக்காவின் குரல் தழுதழுத்தது.
“அப்பா தூங்கிட்டு கெடக்காவ அம்மாகிட்ட சொன்னா கேட்காம அழுவுறாவ” சொல்லிவிட்டு மரத்திலிருந்து இறங்கி என் வீட்டிற்கு ஓடினேன். கலைந்த தலையுடன் அம்மா பெருங்குரலெடுத்து அழுதுகொண்டிருந்தாள். இரண்டு அக்காவும் அப்பாவின் கால்களை பிடித்துக்கொண்டு அழுதார்கள்.அண்ணன் மட்டும் நின்றுகொண்டிருந்தான். அவன் அழுவதை பார்த்தபிறகு எனக்கும் அழவேண்டும் போலிருந்தது.

திருச்சியில் பெரும் மளிகை கடைக்கு சொந்தக்காரர் அப்பா. சேர்க்கை சரியில்லாமல் எப்போதும் வேட்டைக்கும் சாராயகடைக்கும் திரிந்ததால் வியாபாரம் முடங்கிப்போனது. அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது அப்பா மிகவும் உடைந்துபோயிருந்தார். பணம் கொழித்தபோது உடனிருந்த நண்பர்கள் இப்போது காணாமல் போயிருந்தார்கள்.கிராமத்திற்கு திரும்பிய பின்னர் குடிப்பழக்கம் அதிகரித்து சாவில் முடிந்தபோது என் மூத்த அக்கா கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். இரண்டாவது அக்கா பதினோராம் வகுப்பிலும் அண்ணன் ஏழாவதும் படித்துக்கொண்டிருந்தனர்.ஆறு வயது சிறுவனாக வலம் வந்துகொண்டிருந்தேன் நான்.அம்மா அதிகம் படித்ததில்லை. இருந்த சொத்தையெல்லாம் கரைத்துவிட்டு புகைப்படத்தில் மாலைக்கு நடுவே சிரித்துக்கொண்டிருந்தார் அப்பா.

சொந்தங்கள் அப்பாவின் இறுதி சடங்கிற்கும் பதினாறாவது நாள் விஷேசத்திற்கும் மறக்காமல் வந்து சென்றனர். “எப்படியெல்லாம் வாழ்ந்த குடும்பம் இப்படியாகிருச்சே” இடியைக்கூட தாங்கும் மனதில் இவைபோன்ற சொற்களின் தாக்கம் தாங்கமுடியாத வலியை அம்மாவுக்கு தந்திருந்தது. மூத்த அக்கா எங்கள் ஊர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தது கொஞ்சம் ஆறுதலை தந்தாலும் பணம் புழங்கிய வீட்டில் சில்லறைக்காசுகளின் சத்தம் மட்டுமே ஒலித்தபடி இருந்தது.

ப்பாவின் மறைவுக்கு பின் தினமும் அம்மாவின் கைகளை பற்றிக்கொண்டே உறங்குவேன்.சில இரவுகள் அம்மா உறங்கியதேயில்லை. கண்கள் மூடி இருந்தாலும் கண்களோரம் வழிந்துகொண்டிருக்கும் கண்ணீர். மின்சாரம் இல்லாத நாட்களில் எல்லோரும் வீட்டின் முன்னறையில் ஒன்றுகூடுவோம்.அம்மா சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருப்பாள்.மடியில் தலைவைத்து நால்வரும் படுத்திருப்போம்.தனது பால்ய காலம் பற்றியும் குடியாலும் தகாத நட்பாலும் தடம் மாறிய அப்பாவை பற்றியும் சொல்லிக்கொண்டிருப்பாள் அம்மா.
மூத்த அக்கா திருமணம் முடிந்து சென்னைக்கு சென்ற நாளில் ரயில் நிலையத்தில் வழியனுப்ப நின்றிருந்தோம். ஜன்னல்கம்பிகளோடு அக்காவின் விரல்களை பற்றிக்கொண்டு சிறிது நேரம் அழுதாள் அம்மா. உயிர்த்தோழியை பிரியும் வேதனையை ஒத்திருந்தது அந்த பிரிவு.

நான் எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போதுதான் சக்திவேல் வீட்டிற்கு போக ஆரம்பித்தேன்.சக்திவேல் பத்தாவது படிப்பவன். அவன் வீட்டிற்கு பின்புறமுள்ள சிறிய மைதானம்தானத்தில்தான் கிரிக்கெட் விளையாடுவோம். விடுமுறை நாட்களில் காலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் விளையாட்டு மாலை ஆறு வரை தொடரும்.அவனது நண்பர்கள் முரடர்கள்.சிகரெட்டும் பாக்குமாக திரிபவர்கள். அங்கே விளையாட போகாதே என்று அம்மா தடுத்தபோதெல்லாம் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தப்பிவிடுவேன். அம்மாவின் வார்த்தைகளை மறுதலிப்பதற்கு அவளது பாசம் ஒரு காரணமா?

ஒரு நாள் விளையாட்டிற்கு பின் சக்திவேலும் அவனது நண்பர்களும் குடித்தார்கள்.அந்த அடர்கருப்பு நிற திரவத்தை தம்ளரில் ஊற்றி என்னிடம் நீட்டினான் சக்தி. வீட்டிற்கு வரும் வழியில் அப்பாவின் போட்டோ நினைவுக்கு வந்தது.வீட்டிற்கு ஓடி வந்து அழுதேன்.அம்மாவுக்கு புரிந்திருக்க வேண்டும். தலையை கோதிக்கொண்டே "இனி அங்க வெளயாட போகாத தம்பி" என்றாள். தவறிழைக்கும் போதெல்லாம் அம்மா அதட்டியதே இல்லை.அவளது தீர்க்கமான மெளனத்தில் தவறுகள் அனைத்தும் சரியாக்கப்பட்டுவிடும். என் முதல் தோழி அவள்தான்.


ரண்டாவது அக்காவுக்கும் திருமணம் முடிந்து வெளியூர் சென்றுவிட்டாள். அண்ணனுக்கு துபாயில் வேலை கிடைத்திருந்தது.கோவையில் ஒரு பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன் நான். அம்மாவிடமிருந்து வரும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கையை எதிர்கொள்ள தான் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து மீண்டதையும் சிறிய கதை வடிவில் எழுதி இருப்பாள். எதிர்பார்ப்புகளின்றி வாழ்வதை அம்மாதான் கற்றுக்கொடுத்தாள். பல மாதம் கழித்து ஊருக்கு அம்மாவை பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். எங்கள் தெருவில் நடந்தபோது சிறு வயதில் கோலிக்காய் விளையாடிய ஞாபகமும் பிள்ளையார் பந்து விளையாடிய ஞாபகமும் என்னை ஆட்கொண்டது.

வீட்டை நெருங்கி கதவை திறந்தேன்.வீட்டிற்குள் அம்மாவை காணவில்லை.
வீட்டுக்கு பின்னாலிருக்கும் சிறிய தோட்டத்தில் அம்மா தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தாள். அம்மாவுக்கு செடிகள் என்றால் உயிர். செவ்வந்தி,நந்தியாவட்டை,இருவாச்சி,ஜினியா,வாடாமல்லி,ரோஜா என்று தோட்டமெங்கும் பூஞ்செடிகள் நிறைந்திருக்கும். தினமும் செடிகளுக்கு தண்ணீர் விடும் நேரங்களிலெல்லாம் அம்மாவின் முகம் பூரிப்புடன் இருக்கும்.

நான் வருவதை கவனிக்காமல் மொட்டு விட்டிருக்கும் செவ்வந்தி செடியிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள் அம்மா. காற்றில் தலையாட்டிக்கொண்டிருந்தது செவ்வந்தி.

-நிலாரசிகன்.

Monday, November 16, 2009

கூடல்திணை - இணைய இதழ்




துவங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்து இயங்கிக் கொண்டிருக்கும் யுகமாயினி குழுவிலிருந்து புதிய வரவாக கூடல்திணை இணைய இதழ் வெளிவர உள்ளது. இதன் சிறப்பு அம்சங்களாக குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது என்னவென்றால்

1.
வலையுலகிற்கு வெளியே கணினி பரிச்சயமற்ற ஏராளமான படைப்பாளிகள் மத்தியிலிருந்து
தேர்வு செய்த படைப்புகளை கூடல் திணை மூலம் வலையுலகில் பதிவு செய்வது,இதன் காரணமாக இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் வகையில் மூத்த படைப்பாளிகளது பங்களிப்பு அமையும்.உதாரணமாக முப்பது வருடங்களுக்கு முன்பாக தமிழ் கவிதையுலகை புரட்டி போட்ட ”சனங்களின் கதை” கவிதை தொகுப்பினைப் படைத்த பேராசிரியர் பழமலய்,ஈழத்து மூத்த படைப்பாளி எஸ்பொ,எழுபதுகளிலேயே நவீன எழுத்தை தொட்டு படைப்புலகில் சலனத்தை உண்டாக்கிய இந்திரா பார்த்தசாரதி,தமிழின் முதல் சிற்றிதழான “எழுத்து” துவக்கம் இன்றைய யுகமாயினி வரை,சிற்றிதழ் சேகரிப்போடு சிறந்த விமர்சகராகவும் விளங்கும் வே.சபாநாயகம்,அறிவியற் புனைக்கதையில் விருதுபெற்ற ஏராளமான ஆர்த்தர் சி.க்ளார்க் படைப்புகளை மொழிபெயர்த்த உலோ.செந்தமிழ்க்கோதை இன்னும் பலர் இடம்பெறுவர்.மட்டுமல்லாது இணைய இதழ்களில் தனது எழுத்தால் கவர்ந்த இரா.முருகன் தன்னுடைய மூன்றாவது விரல் புதினத்தின் இரண்டாது பாகத்தை இதில் துவங்குகிறார்.இரா.முருகனை போன்றே இணையயுலகில் பரிச்சயமான ஏராளமானோர் இதில் இடம் பெறுவர்.

2.
யுகமாயினின் கட்டமைப்பை போன்றே கூடல் திணையிலும் மூத்த படைப்பாளிகளுடன் இன்றைய இளம் படைப்பாளிகளும் இடம்பெறுவதோடு அவர்களில் குறிப்பிட்ட சிலர் தேர்வுசெய்யப்பட்டு அச்சு இதழ் யுகமாயினியில் இடம்பெறுவர்.

3.
ஒருங்குறித் தமிழ் எழுத்துருக்களில் இதுவரை எந்த இணைய இதழிலும் பயன்படுத்தாத pdsoftware.in& higopi.com வடிவமைத்துள்ள அலங்கார சிறப்பு ஒருங்குறி எழுத்துருக்களை கூடல்திணை பயன்படுத்தி இருக்கிறது.

4.
இணைய இதழ்களின் வரலாற்றில் கூடல்திணை அடுத்த இலக்கை நோக்கி பயன்படுகிறதென்று இதழ் ஆசிரியர் சித்தன் தெரிவித்தார்.அவருடன் செயலாற்ற அணிற்பிள்ளையாக நானும் இணைந்துள்ளேன்.

தற்போது சோதனை ஓட்டமாக டிசம்பர் 31,2009 வரை செயல்படும் கூடல்திணையின் தற்காலிக முகவரி:

http://viruba.com/chiththan/index.aspx

Saturday, November 14, 2009

குழந்தைக் கவிதைகள் பத்து :)



அ)
அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

ஆ)
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

இ)

கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

ஈ)
அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

உ)
மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

ஊ)
இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

எ)
இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

ஏ)

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

ஐ)

எப்போதும் கண்டிராத
ஓவியங்கள் சிலவற்றை
விற்றுக்கொண்டிருந்தாள்
அந்தச் சிறுமி.
சருகு நிறத்தாலான
அவளது பாவாடையை
நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
ஒவ்வொரு ஓவியம்
விற்றவுடன்
தன் பாவாடை முயல்களிடம்
ஏதோ பேசுகிறாளவள்.
இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
சூரியக்கரங்கள்.
நிலவில் உருப்பெறுகிறது
ஓர் முயலோவியம்.

ஒ)
யாருமற்ற அறைக்குள்
தன் பொம்மைகளுடன்
நுழைகிறாள் நட்சத்திரா.
அவளது மழலையை
உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
அவள் கேட்கும்
கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
கதவு திறக்கும் சத்தம்
கேட்டவுடன் ஊமையாகி
அசையாமல் நிற்கின்றன.
வேலை முடித்து
வீட்டிற்குள் வருகின்ற
அம்மா பொம்மையிடம்
பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

***********************************************************************

குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)

-நிலாரசிகன்.

Thursday, November 12, 2009

பிடித்த பதிவர்!!

பதிவர் முத்துக்குமார் இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். இதன் விதிமுறைகளை நான் பின்பற்ற வில்லை.(Break the rules!!,
தமிழகத்தில் உள்ளவர்களை பற்றியதாக மட்டும் இருக்க வேண்டும் என்கிற விதிமுறையை மட்டும் ஏற்றுக்கொண்டேன்))

பிடித்தவைகளை மட்டுமே பதிவிடுகிறேன்.


எழுத்தாளர்


பிடித்தவர்:
கண்மணி குணசேகரன்,உமா மகேஷ்வரி

அதிகம் பிடித்தவர்:சுஜாதா,வண்ணநிலவன்

ஓவியர்

பிடித்தவர் : மருது

மிகவும் பிடித்தவர்: கவிஞர்.வைதீஸ்வரன்



*

கவிஞர்


பிடித்தவர்: வைரமுத்து

மிகவும் பிடித்தவர்:கல்யாண்ஜி

*

இயக்குனர்


பிடித்தவர்:ஸ்ரீதர்


மிகவும் பிடித்தவர்: மணிரத்னம்

*

நடிகர்


பிடித்தவர்:ரஜினி


மிகவும் பிடித்தவர்: ரகுவரன்,எம்.என்.நம்பியார்

*

நகைச்சுவை நடிகர்:


பிடித்தவர்: அசோகன்,டி.எஸ்.பாலையா,நாகேஷ்

மிகவும் பிடித்தவர்: கவுண்டமணி

நடிகை


பிடித்தவர்: மீனா

மிகவும் பிடித்தவர்:ஜோதிகா

*

இசையமைப்பாளர்


பிடித்தவர்: ஏ.ஆர்.ரகுமான்

மிகவும் பிடித்தவர்: இசைராஜா

*

பாடகர்


பிடித்தவர் : ஜேசுதாஸ்

மிகவும் பிடித்தவர்: ஜெயசந்திரன்

*


பதிவர்


பிடித்தவர்: கேபிள் சங்கர்(வெரைட்டியாக தினமும் எழுதுவதால்,போரடிக்காத எழுத்துக்காகவும்)

மிகவும் பிடித்தவர்: கண்ணாடியில் தெரிபவர்(எனக்கே என்னை பிடிக்கவில்லையெனில் வேறு யாருக்கு
என்னை பிடிக்கும்? :)

*

நான் அழைப்பவர்கள்:

இந்த இடுகைக்கு பின்னூட்டமிடும் அனைவரும் இதனை அழைப்பாக ஏற்று உங்களுக்கு
பிடித்தவைகளை பதிவிடலாம்.

உன் மெளனங்கள்



காயப்படுத்துவதற்கென்றே
மெளனங்கள் சிலவற்றை
உருவாக்குகிறாய்.
பூப்பறித்தலின் ஆனந்தத்தை
அவை உனக்களிக்கலாம்.
அல்லது
அப்பழுக்கற்ற குழந்தைமையின்
குதூகலத்தை உணர்வுகளில்
தெளிக்கலாம்.
இடுகாட்டில் எரிகின்ற உன்
சுயத்தின் கருகியவாடையை
என்னை நோக்கி சுமந்து
வருகின்றன
அந்த மெளனங்கள்.
வலி நிறைந்த
புன்னகையுடன்
இருகரம் விரித்து வரவேற்கிறேன்.
எங்கோ
உருப்பெற்றுக்கொண்டிருக்கின்றன
என் கல்லறைக்கான
செங்கல்கள்.

(மீள்பதிவு)

Tuesday, November 10, 2009

சச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1







ஆஸ்திரேலியா = சச்சின்


ஒருநாள் கிரிக்கெட்உலககோப்பை தொடங்கப்பட்ட எழுபத்தி ஐந்தாம் ஆண்டிலிருந்து 90ம் ஆண்டு வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் கொடி
கட்டி பறந்த அணி மேற்கு இந்திய தீவுகள் அணி. விவ் ரிச்சர்ட்ஸ்,க்ளவ் லாயிட்,"பிக்பேர்ட்"கார்னர்,மால்கம் மார்ஷல்,மைக்கேல் ஹோல்டிங்
டெஸ்மான் ஹெயின்ஸ்,கிரினிட்ஜ் என்று நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கி எதிரணியை அடித்து துவைத்து காயபோட்டுவிடும் சூரர்கள்
நிறைந்த மிக பலம் வாய்ந்த அணியாக மே.இ.தீவுகள் விளங்கியது.இரண்டு உலககோப்பை வெற்றி,மூன்றாவது உலககோப்பை பைனல் என்று அவர்களின் கை ஓங்கியே இருந்தது. அதன் பிறகு ஒவ்வொரு வீரராக ஓய்வு பெற்றதாலும் பணம் கொழிக்கும் கூடைபந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு பலர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியதாலும் மே.இ.தீவுகளின் வீழ்ச்சி துவங்கியது. லாரா,ஹீப்பர்,சந்தர்பால் என்று ஒன்றிரண்டு சிறந்தவீரர்கள் "சோதா" டீமை வைத்துக்கொண்டு சில காலம் போராடி பார்த்தபோதும் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழல்பந்தாளர் இல்லாத காரணத்தால் மே.இ.தீவுகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்து ஜிப்பாப்வே,கென்யா போன்ற நாடுகளை மட்டும் அவ்வப்போது வெல்லும் சுண்டெலி அணியாக மாறிப்போனது.

இதற்கிடையே 87ம் ஆண்டு ஆஸிக்கு எதிரான உலககோப்பை இறுதிபோட்டியில் மைக் கேட்டிங் செய்த தவறால் வெற்றியை தனதாக்கிய ஆஸ்திரேலியா தன் வெற்றிப்பயணத்தை துவங்கியது. ஆனாலும் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்த உலககோப்பையில்(92ல்) தோல்வியை தழுவியது. ஆனால் தொண்ணுறுகளில் துவக்கத்தில் பல மிகச்சிறந்த வீரர்களை ஆஸி உருவாக்கியது மார்க்வா,மெக்ரா,ஷேன் வார்ன் அதன்பிறகு பாண்டிங்,மைக்கேல் பெவன்,ப்ர்ட் லீ.

இதற்கு காரணம் இருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்தவரும் பதினோராயிரம் ரன்களை தாண்டியவருமான ஆலன் பார்டர்.மற்றும் அவரை மானசீக குருவாக ஏற்று அவர் வழியே ஆஸி அணியை பலவெற்றிகளை பின்னாட்களில் குவிக்க காரணமாக இருந்த ஸ்டீவ் வாக்.

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்த இரு வீரர்களின் ஆட்டத்தை பார்த்து எந்தவொரு இளம் வீரனும் இலகுவாக கற்றுக்கொள்ள முடியும். ஸ்டீவ் வாக் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது.சுயீங்கம் மென்று கொண்டே விளையாடுவார். ஆனால் ஆட ஆரம்பித்துவிட்டால் அதன்பிறகு பிட்ச்சில் அவரது கால் ஒட்டிக்கொண்டதோ என எண்ணும் அளவிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.(99ம் ஆண்டு உலககோப்பை - தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டி சிறந்த உதாரணம்)


96ம் ஆண்டு இறுதிபோட்டியில் இலங்கையிடம் தோற்றாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் ஆஸி அணியினர். பல வெற்றிகளும் சில தோல்விகளுமாக திரிந்த ஆஸி அணி 99ம் ஆண்டு உலக கோப்பைக்கு பின்
வீழ்த்த முடியாத வலுவான அணியாக உருப்பெற்றது. பந்தைக் கண்டால் அடிக்க வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கில்கிறிஸ்ட்,ஆஸி அணியில் இடம்பிடிக்க போராடி பல தடைகளை தாண்டி தானொரு சிறந்த வீரர் என்பதை நிரூபித்த ஹெய்டன்,கல்கத்தாவில் ஒர் இரவு விடுதி பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக முன்பு குற்றம்சாட்டபட்டு விளையாட்டு பையனாக திரிந்து பின் விஸ்வரூபமெடுத்த பாண்டிங்,மிகச்சிறந்த ஸ்லிப் பீல்டர் மார்க்வா,ஒன் டே ஸ்பெசல் மைக்கேல் பெவன்,சுழல் சூறாவளி வார்னே,துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மூர்ச்சையாக்கும் மெக்ரா,கில்லெஸ்பி இவர்களை அனைவரையும் சத்தமின்றி வழிநடத்தும் ஸ்டீவ் வாக். இத்தனை சிறந்த வீரர்களை கொண்டு சென்ற இடமெல்லாம் பெரும் வெற்றிகள்(5 போட்டிகளில் எனில் 5-0 என்று எதிரணியை ஓட ஓட விரட்டிவிடுவார்கள்) குவித்து வீறு நடை போட துவங்கியது ஆஸ்திரேலிய அணி.

அதன்பிறகு தொடர்ந்து 16 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி,2003,2007 உலககோப்பை வெற்றிகள் என ஆஸியின் பலம் ஓங்கியபடியே இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் கடுமையான தேர்வும் கிரிக்கெட்டில் Professional Approach ம் எனலாம். சிக்ஸ்ர்களாக தூள் பரத்தும் சிமெண்ட்ஸ் கூட அணியின் கட்டுப்பாட்டை மீறியதால் அணியிலிருந்தே தூக்கப்பட்டார். வி.பி தொடரில் பைனலுக்கு செல்ல முடியாமல் ஆஸி தோற்றதால் அணியின் கேப்டன் பதவியும் அணியில் இடமும் பறிபோனது ஸ்டீவ் வாக்கிற்கு.ஒரு போட்டியில் சரியாக விளையாடாவிட்டாலும் அணியில் நீடிக்க முடியாது என்பதால் ஒவ்வொரு போட்டியையும் தங்களது கடைசி போட்டியாக எண்ணி முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்கள் ஆஸி அணியினர். அதனால் எந்த கட்டத்திலும் போராடும் குணம் அவர்களுக்கு உண்டு. பிட்புல் நாய் போல் சாகும் வரை வெறியும் கோபமும் போராட்டமும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

உலகின் எந்த பகுதியில் விளையாடினாலும் வெற்றி ஆஸிக்கே என்னும் நிலை. தங்களது சொந்த மண்ணில் கேட்கவும் வேண்டுமா? இருவருடங்களுக்கு ஒருமுறை ஆஸிக்கு சென்று நாயடி பேயடி வாங்கி திரும்புவார்கள் இங்கிலாந்து அணியினர். ஆஸ்திரேலிய பிட்ச் வேகபந்து வீச்சுக்கு சாதகமானது. அங்கே சதமடித்தால் இந்தியாவில் 300 அடிப்பதற்கு சமம்.




ப்பேர்பட்ட ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை அடித்த சதங்களில் டாப் டென் என்று வரிசை படுத்தினால்
அதில் பந்தொன்பது வயது அமுல்பேபி ஒருவரின் சதமும் அடங்கும். அவர் நம் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய வீரர்கள் கவாஸ்கர் உட்பட ஆஸி மண்ணில் திணறியதாக சரித்திரம் சொல்கிறது. எண்பதுகளின் துவக்கத்தில் சந்தீப் பட்டேல் அடித்த 174 ரன்களுக்கு பின் Spectacular Innings என்று எதுவுமில்லை. உடம்பில் அடிவாங்கி தட்டுத்தடுமாறி நூறு ரன்கள் எடுப்பதற்கு பதில் கிரிக்கெட்டை விட்டே ஓடிவிடலாம் என்று நினைக்க தோன்றும்.காரணம் மெக்டமர்ட் போன்ற மிக வேக பந்துவீச்சாளர்களின் பவுன்ஸர்கள்.

உலகின் வேகமான பிட்ச் என்றழைக்கப்படும் பெர்த் மைதானத்தில் ஆஸியின் வேக பந்துவீச்சாளர்களை தடுத்து,அடித்து ஆடிய சச்சின் எடுத்த சதம் கண்டபின் உலகமே "Boy Wonder" என்று சச்சினை புகழ ஆரம்பித்தது.

ஆறு ரன்களும் நான்கு ரன்களும் அடிப்பது பெரிய விஷயமல்ல. அதை எப்படி அடிப்பது என்பதில்தான் சச்சின் தனித்து நிற்கிறார்.ஆங்கில அகராதி தொலைந்துவிட்டால் ஷேக்ஸ்பியரின் எழுத்துக்களை கொண்டே மீண்டும் உருவாக்கிவிடலாம் என்பார்கள். அதுபோல் கிரிக்கெட் பற்றிய விளக்க நூல் தொலைந்துவிட்டால் சச்சினின் ஆட்டத்தை கொண்டே மீண்டும் உருவாக்க முடியும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள். ஸ்கொயர் கட் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்,கவர் ட்ரைவ் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதை போன்று ஒவ்வொரு ஷாட்டிலும் Sachin is a perfectionist!

அதன்பிறகு ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதும் சச்சின் சதம் அடித்திருக்கிறார்.
குறிப்பாக சிட்னி மைதானம் பலமுறை சச்சினின் சதத்தை கண்டது. 2004ல் ஆஸி சுற்றுப்பயணத்தின்போது தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுவனிடம் பெயர் கேட்கிறார் சச்சின். அதற்கு அவன் தன் பெயரும் சச்சின் என்கிறான். சச்சின் என்பது இந்திய பெயராயிற்றே இது எப்படி ஒரு ஆஸ்திரேலிய வெள்ளை இன சிறுவனுக்கு சூட்டப்பட்டது? ஆர்வத்தோடு அவனது அப்பாவை கேட்கிறார். 92ல் சச்சின் சிட்னில் அடித்த 145 ரன்களை கண்ட பரவசத்தில் தனக்கு பிறந்த மகனுக்கு சச்சினென்று பெயரிட்டிருக்கிறார் அவர்!

சச்சின் சுள்ளான் அணிகளிடம் மட்டும்தான் சிறப்பாக விளையாடுவார் தட்டையான பிட்ச்சில்தான் சதமடிப்பார் என்று பரவலான கருத்தை சிலர் கொண்டிருக்கலாம். அது தவறு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள்,ஒன்பது சதம் எண்ணற்ற அரை சதம். இதைவிட வேறென்ன வேண்டும்? சச்சினால் இந்தியா ஜெயித்ததா என்கிற கேள்வி எழலாம்.

டைகர் உட்ஸ் கோல்பில் சிங்கம். ஸூமேக்கர் கார் ரேஸில் சிங்கம்.ரோஜர் பெடரர் டென்னிஸில் சிங்கம். காரணம்? இவை அனைத்தும் தனிநபர் விளையாட்டு. ஒருவேளை கிரிக்கெட்டும் தனிநபர் விளையாட்டாக இருந்திருந்தால் சச்சினை சிங்கம் என்று வர்ணித்திருக்கலாம். பத்து சுண்டெலிகள் அதில் சில குள்ளநரிகள்(அசாரூதீன்,ஜடேஜா,மனோஜ் பிரபாகர்) இவர்களோடு போருக்கு ஒரு சிங்கமும் சென்றால் வெற்றி எப்படி கிடைக்கும்?

எப்போதும் 100% தருபவர் சச்சின்.அதனால்தான் ஆஸியோடு சச்சினை ஒப்பிட முடிகிறது.
கடைசி வரை போராடும் குணம்,எத்தனை வெற்றிகள் பெற்றாலும் வெற்றியை உடனே மறந்துவிட்டு அடுத்த போட்டியில் மீண்டும் வெல்ல வேண்டும் என்கிற எண்ணம்,தொடர்ந்து கிரிக்கெட் மீதான தீராக்காதல் இதுதான் ஆஸ்திரேலியாவுக்கும் சச்சினுக்குமான மிக முக்கிய ஒற்றுமை. இந்த வெறி,இந்த ஈடுபாடு தொடர்ந்து இருப்பதால்தான் இருபது வருடங்களாக சிம்மசொப்பனமாக சச்சின் விளங்குகிறார்.

சச்சினுக்கும் அவரது பள்ளித்தோழர் காம்ளிக்கும் குரு ஒருவர்தான்.அவர் சமீபத்தில் மறைந்த அச்ரேக்கர். அவரிடம் இருவரில் யார் சிறந்த வீரர் என்று கேள்வி எழுப்பியபோது சச்சின் சிறந்த வீரன் என்பதில் சந்தேகமில்லை ஆனால் ஆட்ட நுணுக்கங்களில் கைதேர்ந்தவன் காம்ளி என்றார். அப்பேற்பட்ட காம்ளி காணாமல் போனது எதனால்? அவர் மைதானத்தை விட தன்னிடம் சிறப்பாக விளையாடுவார் என்றார் ஒரு மாடல் நடிகை. அதுமட்டுமின்றி ஹோட்டலில் அனைவரும் ஓய்வெடுக்கும் வேளையில் சத்தமாக ஸ்பீக்கர் அலற ஆட்டம்போட்டுக்கொண்டிருப்பார் காம்ளி.அதனால் கிரிக்கெட் மீதான கவனம் குலைந்து காம்ளியின் ஆட்டம் மோசமடைந்தது. தொடர்ந்த ஈடுபாட்டினாலும் ஒழுக்கத்தினாலும் சச்சின் சிறந்த வீரர் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக நம் முன் திகழ்கிறார்.கிரிக்கெட்டின் முடிசூடா மன்னன் டான் பிராட்மேன் தனது கனவு அணியை வெளியிட்டபோது உலகமே வியந்துபோனது.காரணம் அந்த அணியில் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர் மட்டுமே இருந்தது. அது சச்சின்.


மீண்டுமொரு சச்சின் வாசகத்தோடு முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:

Beneath the helmet, under that unruly curly hair, inside the cranium, there is something we don't know, something beyond scientific measure. Something that allows him to soar, to roam a territory of sport that, forget us, even those who are gifted enough to play alongside him cannot even fathom. When he goes out to bat, people switch on their television sets and switch off their lives.

- BBC Sports, on Sachin Tendulkar

-நிலாரசிகன்

Sunday, November 08, 2009

மழைப்பெண்





1.
வனப்பு தொலைந்த
மழைநாளில்தான் நிகழ்ந்தேறியது
நம் மரணம்.
குளிரில் நடுங்கும் நாய்க்குட்டிகளின்
கதறல்களை நீ
கேட்கவில்லை.
கிளை முறிந்து ஊனமாகும்
மரங்களின் மெளனம் நான்
உணரவில்லை.
ஒரு பறவை
உதிர்த்து சென்ற இறகை
நனைத்துக்கொண்டே இருக்கிறாள்
மழைப்பெண்.

2.
சப்தம் மரணிக்கும் இரவுகளில்
மயானத்தின் நடுவில்
நடனமாட துவங்குகிறாள்
அவள்.
ஈரம் படிந்த
சாம்பல் மீது ஓயாமல்
தொடர்கிறது அவளது
நடனம்.
கலைந்த கூந்தல்
தோகையென காற்றில்
மிதக்கிறது.
கொன்றைகள் இருநிலவுகளாய்
ஒளிர்கிறது.
கண்களில் நீர்வர ஆடிய பின்
வதங்கிய பூவாய்
தரையில் வீழ்ந்து மரிக்கிறாள்.
மழைப்பெண்ணின் மரணத்தில்
முகம் மலர்த்துகின்றன
கல்லறை பூக்கள்.

Saturday, November 07, 2009

ராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்



ராஜ ராஜ சோழன் பற்றி எடுக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த ஆவணப்படமிது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே கிரானைட் கற்களால் கட்டப்பட்ட
தஞ்சை பெரியகோவில் பற்றியும் அதற்கான கல்லை அக்காலத்தில் எப்படி அவர்கள் கொண்டு வந்திருப்பார்கள் என்பது பற்றியும் சிறப்பாக விவரித்திருக்கிறார்கள்.

முகலாய படையெடுப்பின் போது அழிவில் இருந்து தப்பிக்க ஏராளமான சிலைகளை மறைத்து வைத்திருக்கிறார்கள். அகழ்வாராய்ச்சியின்போது
1965ல்தான் அவை கண்டெடுக்கப்பட்டன போன்ற முக்கிய செய்திகளையும் தொகுத்திருக்கிறார்கள்.

இந்தியாவை ஆண்ட மிகச்சிறந்த மன்னன் ராஜ ராஜ சோழன் என்பதை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது இந்த ஆவணப்படம்.
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

இங்கே பார்க்கலாம்:


http://www.youtube.com/watch?v=SnANjdReAlY


http://www.youtube.com/watch?v=yJomuGsi2fU&NR=1

http://www.youtube.com/watch?v=za6nYK4L9ns

http://www.youtube.com/watch?v=c2a0GcoJAjw

http://www.youtube.com/watch?v=hkCjoSJpkJ8