Wednesday, December 31, 2008

நிலா விருதுகள் 2008

ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் நான் அதிகம்
எதிர்பார்ப்பது ஆனந்தவிகடனில் சுஜாதா அவர்களின்
விருதுகளைத்தான். இவ்வருடம் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்
அந்த காந்த எழுத்தாளர். அவருக்கு அஞ்சலியுடன்
இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

[இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட Judgement]


விளையாட்டு :


சிறந்த கிரிக்கெட் அணிகள் : தென்னாப்ரிக்கா,இந்தியா

சிறந்த மட்டையாளர் : கெளதம் காம்பீர்

சிறந்த பந்துவீச்சாளர் : ஸ்டெயின்

சிறந்த பீல்டர் : ரிக்கி பாண்டிங்

சிறந்த கேப்டன் : தோனி

சிறந்த வர்ணனையாளர் : ரவி சாஸ்திரி

சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 103* இங்கிலாந்துக்கு எதிராக, டும்னி 166 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் : சச்சின் டெண்டுல்கர் 117 முதல் பைனலில் - எதிரணி ஆஸ்திரேலியா

சிறந்த டி20 இன்னிங்ஸ் : கிறிஸ் கெயில் 67 ரன்கள் - எதிரணி நியுசிலாந்து

சிறந்த மைதான வாசகம்: ""Commit all your crimes when Sachin is batting. They will go unnoticed because even the Lord is watching." சிட்னி மைதானத்தில் டெண்டுல்கர் விளையாடியபோது காணப்பட்டது.

சிறந்த விக்கெட் : ரிக்கி பாண்டிங்ஐ போல்ட் ஆக்கிய இசாந் சர்மாவின் பந்துவீச்சு

சிறந்த புதுமுகம்: அஜந்தா மெண்டீஸ் - இலங்கை.


சிறப்பு விருது : அபிநவ் பிந்ரா,விஸ்வனாதன் ஆனந்த் மற்றும் சீனாவிற்கு(தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவை 2ஆம்
இடத்திற்கு தள்ளியதற்காக)

சொதப்பல் விருது: ஹர்பஜன் சிங்( ஸ்ரீசாந்தின் கன்னத்தை மைதானத்திலேயே பதம் பார்த்ததால்) மற்றும் BCCIக்கு -தொடர்ந்து
ICLஐ தடை செய்து வருவதற்கு.


இலக்கியம்:

சிறந்த கவிதை தொகுப்பு :கவிஞர்.இளங்கோ கிருஷ்ணனின் "காயசண்டிகை" [காலச்சுவடு வெளியீடு]

சிறந்த சிறுகதை தொகுப்பு: தவளைகள் குதிக்கும் வயிறு - வா.மு.கோமு

சிறந்த கட்டுரை தொடர் : தீதும் நன்றும் - நாஞ்சில் நாடன்,தீராநதியில் ஜெயமோகனின் அங்கத கட்டுரை

சிறந்த சிறுகதைகள் : "சாட்டை" - கண்மணி குணசேகரன்,"இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன" -எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த சிற்றிதழ் : மணல்வீடு

சிறந்த புதிய இதழ் : வார்த்தை

சிறந்த புதுமுக கவிஞர்கள் : சகாராதென்றல்,குட்டிசெல்வன்,அனுஜன்யா,லக்ஷ்மி சகாம்பரி,செல்வராஜ் ஜெகதீசன்,ரிசான் ஷெரீப்,பாஸ்கர்

சிறந்த புதுமுக சிறுகதையாளர்கள்: தமிழ்நதி,உமாஷக்தி,அருட்பெருங்கோ

சிறப்பு விருது : சிங்கையிலிருந்து வெளிவரும் நாம் சிற்றிதழுக்கும், இலங்கை இனப்படுகொலையை கண்டித்து
எழுந்த இலக்கிய உலக எதிர்குரலுக்கும்(உண்ணாவிரதம்,ஊர்வலம்)


வலையுலகம்:

சிறந்த நகைச்சுவை பதிவு: துப்பாக்கி தேவை - செல்வேந்திரன்

சிறந்த அறிவியல் புனைக்கதை : வலைப்பதிவர் வெண்பூ எழுதிய "இரண்டாவது மூளை"

சிறந்த சினிமா பதிவுகள் : முரளிக்கண்ணன்

சிறந்த இணைய இதழ்: உயிரோசை

சிறந்த புதுமுகங்கள் : யாழிசை ஒர் இலக்கிய பயணம் மற்றும் அதிஷாஆன்லைன்

சிறந்த யோசனையாளர் : தமிழ்மணம் கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வு அளித்த வலைப்பதிவர் "யோசிப்பவர்"

சிறப்பு விருது: சிறில் அலெக்ஸ்(அறிவியல் புனைக்கதைகள் போட்டி நடத்தி பல வலைப்பதிவர்களின் கற்பனைக்குதிரைகளை
தட்டி விட்டதற்காக)

சொதப்பல் விருது: காணாமல் போன தேன்கூடுவிற்கு.

சினிமா:

சிறந்த திரைப்படம் : சுப்பிரமணியபுரம்

சிறந்த பிறமொழி திரைப்படம் : தாரே ஜமீன் பர்(ஹிந்தி)

சிறந்த பாடல்வரிகள் : அனல்மேல் பனித்துளி(வாரணம் ஆயிரம்)

சிறந்த பாடலாசிரியர் : தாமரை (வாரணம் ஆயிரம்,சுப்பிரமணியபுரம் திரைப்படங்களுக்காக)

சிறந்த இசையமைப்பாளர் : Harris ஜெயராஜ்(வா.ஆயிரம்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: கதிர்

சிறந்த இயக்குனர் : சசிக்குமார்,சசி

சிறந்த நடிகர்: சூர்யா(வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை: பார்வதி(பூ)

சிறந்த வில்லன்: பிரசன்னா - அஞ்சாதே
சிறப்பு விருது: அஞ்சாதே,தசாவதாரம்,சரோஜா மற்றும் பத்துவேடங்களில் அசத்திய கமலுக்கும்.

சொதப்பல் விருது: குசேலன்(தலைவா இனிமே இந்த மாதிரி ரோல்ல எல்லாம் நடிக்காத,எங்களுக்கு தேவை பாட்சாவும்,படையப்பாவும்தான்
தல - ஒரு பாமர ரசிகனின் வேண்டுகோள்!!)


அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நினைத்தது நடந்தேறவும்,கனவுகளும்,லட்சியங்களும்
நிஜமாகவும் என் உளமார்ந்த வாழ்த்துகள்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 30, 2008

இலக்கிய சிந்தனை

நண்பர்களே யுக‌மாயினி ந‌வ‌ம்பர் 2008 இத‌ழில் வெளியான‌ என்னுடைய‌ "சேமியா ஐஸ்" எனும் சிறுகதைக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு ந‌வ‌ம்ப‌ர் மாத‌த்தில் ப‌ல்வேறு இத‌ழ்க‌ளில் வெளியான‌ 60 க‌தைக‌ளில் இர‌ண்டாம் இட‌த்தை அளித்திருக்கிற‌து என்ப‌தை ம‌கிழ்வுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, December 27, 2008

பாதங்களின் மொழி

1.பாதங்களின் மொழி

இதழ் உதிர்க்கும் பழகிய
வார்த்தைகளில் சலிப்புற்ற
பாதங்கள் தமக்கென தனிமொழியை
உருவாக்க ஆரம்பித்தன.
பூக்களை மிதிக்கும் தருணங்களில்
மெளனத்தை மொழியாக கொள்ளவேண்டுமெனவும்
சுவடுகளை மிதித்தால்
மன்னிப்பை மொழியாக்க வேண்டுமெனவும்
தீர்மானித்தன.
வார்த்தைகள் ஏதுமின்றி மொழியொன்று
உருவானது.
ஒவ்வோர் உதடுகளாய் ஊமையாகி
பாதங்களின் மொழி
பூமியெங்கும் பரவ ஆரம்பித்தபோது
ஊனன் எனும் சொல்
பூமியின் அடியாழத்தில்
தொலைந்துபோயிருந்தது.

2.சொல்லப்படாத சொற்கள்

பிரக்ஞையற்று உதிர்ந்துகொண்டிருந்த
அவனது கலைந்தசொற்கள்
அவளை நோக்கி
கைகள்விரித்தவாறு
காற்றில் நீந்த ஆரம்பித்தன.
ஒவ்வொரு சொற்களாய்
அள்ளியெடுத்து
சரமாக்கி கூந்தலில் சூடிக்கொண்டு
சிரித்தாள்.
அவனுக்கும் அவளுக்கும்
இடையே அலைந்துகொண்டிருந்தன
சொல்லப்படாத சொற்கள் சில.

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதியில் எனக்கு மிகவும் பிடித்த பாடலை
இங்கு பதிவிடுகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)

கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே

(அன்பென்ற மழையிலே)
(அன்பென்ற மழையிலே)

2008ல் மறக்கமுடியாத/மறக்க விரும்பும் நிகழ்வுகள்..

1.ஆனந்தவிகடன்,கல்கி,மற்றும் சிறுபத்திரிகைகளில்
வெளியான என் படைப்புகள்

2.முத்தமிழ் உறுப்பினர் சீதாலட்சுமி அம்மா முதல் தேகிவரை குழும நண்பர்கள்
பலரின் சந்திப்பு - தித்திப்பு.

3. நன்றி மறந்த வி*ரோ.

4. சில வருடங்களாக பார்க்க நினைத்து முடியாமல் இவ்வருடம்
பார்த்து ரசித்த இரு திரைப்படங்கள் 1.City of God 2.Rabbit Proof Fence

5. சேலம் மாவட்ட இலக்கிய நண்பர்களின் சந்திப்பு

6. வெகு நாட்களாக வாசிக்க நினைத்து இவ்வருடம் வாசித்த வண்ணநிலவனின்
"கடல்புரத்தில்" நாவல்.

7. நண்பன் விழியன் திருமண நிகழ்ச்சி மற்றும் பெங்களூரு சந்திப்பில் நடந்த கலந்துரையாடல்

8. ஏற்காடு சுற்றுலா

9. நண்பன் வினோத் செய்த மறக்க/மறுக்க முடியாத உதவி.

10. மறக்க விரும்பாத ஒரு கனவு. மறக்க விரும்பும் சில நினைவுகள்.

11. ஊக்கமூட்டும் ஒரு புதிய நட்பும்,நம்பிக்கை துரோகம் செய்த ஒரு நட்பும்.

12.இவ்வருடம் வெளியான என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் (மயிலிறகாய் ஒரு காதல்,ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்)

Monday, December 22, 2008

வனம்

வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நிற்கிறது என் மனசு. திசைகள் மறந்துவிட்ட கால்கள்
எங்கு செல்வதென்று புரியாமல் தவிக்கின்றன. முட்கள் நிறைந்த பாதையில் பூவொன்று என்னை வழிமறித்து
என்னை எடுத்துக்கொள் என்றது. இரண்டு கரங்களிலும் அப்பூவை ஏந்தி பாதங்களில் உதிரம் சிந்த வெகுதூரம்
கடந்து வந்தேன். முட்பாதை மறையும் தருணம் என் கரத்திலிருந்து துள்ளி வெளிக்குதித்து மறைந்தோடியது
அந்த வெண்மலர். ஏந்திய கரமிரண்டிலும் கொஞ்சம் கண்ணீர்த்துளிகள் மட்டும் பிசுபிசுத்தது.
புரிந்துகொள்ளாத பூவை எண்ணி எண்ணி கண்ணீர்த்துளிக்குள் விழுந்து விம்முகிறது கனமாகிப்போன இதயம்.

இலைகளை உதிர்த்து நிற்கிறது ஒரு தனிமரம். நிழல்தேடி வந்த பாதங்கள் ஏமாந்து திரும்புகின்றன.
இரவின் கூரிய பற்களில் வடிகிறது என் தனிமையின் ரத்தம். கறுப்பு வெள்ளை பட்டாம்பூச்சியொன்றின் உதிர்ந்த
சிறகுகள் காற்றில் மிதக்கும் பின்னிரவில் எங்கோ ஒருத்தியின் சன்னமான அழுகுரலை காற்று இழுத்துச்செல்கிறது.

அவளும் அவனும் பரிமாறிக்கொண்ட நேசம் உருப்பெற்று ஓலமிட்டு வீதியில் அலைகிறது. நினைத்துப்பார்க்காத
கடவுள் கனவில் தோன்றும் அதிகாலையில் சிலிர்த்து அடங்குகிறது உடல். கண்விழித்தால் சன்னலோரத்தில் மெதுவாய்
கேட்கிறது மழையின் ஓசை. எதிலும் லயிக்காத மனம் கட்டுகளை உடைத்து வேகமாய் ஓடத்துவங்குகிறது. கூகையின்
பார்வையில் பயந்து வீடு திரும்புகிறது மனம். எனக்குள் உருவாகிறது வெப்பநீருற்று. என்னை முழுவதுமாய் இழந்து
உடலிலிருந்து பிய்த்தெடுத்து வெளிக்குதிக்கிறேன். என்னுடலை நோக்கி ஒளிர்கிறதென் கண்கள்.
ஜீவனற்ற உடல் மண்ணில் வீழ்வதை வேடிக்கை பார்க்கிறேன். உடலற்ற உயிருடன் கைவீசி நடக்கிறேன் மனம்போன
போக்கில். காவிகள் வியப்புடன் என்னை பார்க்கின்றன. தாடிக்குள் புதைந்த முகத்துடன் உற்று நோக்குகின்றன சில கண்கள்.
வேகமாய் ஓடுகின்ற நதிக்குள் மெல்ல இறங்குகிறது என் உயிர். கடும்குளிர் நீரில் அமிழ்கிறது உயிரின் கடைசி மூச்சு.

யாருமற்ற இருண்ட வனத்தில் வழிதப்பிய சிறுவனாக திக்கற்று திகைத்து நின்றுகொண்டிருக்கிறேன் உருவமற்று.

Monday, December 15, 2008

அலைபேசி தொலைந்த தினம்..

அலைபேசிக்குள் புதைந்துகிடந்தன
தொடர்புகொள்ளப்படாத
எண்கள் பல.

விரைந்தோடும் காலநதியில்
எப்பொழுதாவது பளிச்சிட்டன
மறக்கப்பட்ட எண்கள்.

ஏதோவொரு நபருக்கான
தேடலில் ஆழ்ந்திருக்கையில்
கண்முன் தோன்றி மறைந்தன
முகம்மறந்த எண்கள்.


காலச்சுழற்சியில் தொலைந்த
நண்பர்களின் நினைவுகளை
ஊமையாய் உள்ளிருந்து
நினைவூட்டிக்கொண்டே இருந்தன
அழிக்கப்படாத எண்கள்..


எதிர்பாரா கணத்தில்
தொலைந்துவிட்ட அலைபேசிக்குள்
மரித்துப்போயின அழைக்கப்படாத
எண்களும் அர்த்தமிழந்த நட்புகளும்.

(வடக்குவாசல் டிசம்பர் 2008 இதழில் வெளியாகிய கவிதை)

Friday, December 05, 2008

உருவமற்ற நிழல்பொழுது

1.
நான் தனித்திருக்கும் உலகில்
என்னுடன் பயணிக்கிறது
நிழலொன்று.
எங்கிருந்து வந்ததென்றும்
யாருடையதென்றும் புரியவில்லை.
நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து
தப்பித்துவிட இயலாமல்
தளர்ந்து அமர்கிறேன்.
மெதுவாய் என் நிழலிடம்
பேச ஆரம்பித்தது
அந்த அந்நிய நிழல்.
புரிந்து கொள்ள முடியாத
மொழியில் இரு நிழல்களும்
பேசுவதை ஊமையாய்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நான்.

2. மனம்

மேகங்கள் அலையும் மலைச்சரிவு
பச்சைநிறத்தை உடுத்திக்கொண்டு
உறங்குகிறது.
மரங்களின் நடுவில் நுழைந்து
பாறையில் விழுந்து
உடைகிறது மழைத்துளி.
சாம்பல் நிற அரவம்
அசைவற்று கிடக்கிறது
பெருத்த வேர்களைக்கொண்ட
மரத்தடியில்.
ஏதோ சில பறவைகளின்
சிறகடிப்புச் சத்தம் காற்றில்
கரைந்து வழிகிறது.
மலைப்பாதை வழியே
வளைந்து நெளிந்து ஊர்ந்துகொண்டிருக்கிறது
பேருந்தும் மனதும்.
-நிலாரசிகன்.

நன்றி : திண்ணை.காம்

Monday, December 01, 2008

கவிதைகள் இரண்டு

1.கண்ணாடியில் ஓர் அந்நியன்

இரவிலும் பகலிலும்
பிம்பங்களை உள்வாங்கி
சலித்த கண்ணாடி
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பிம்பத்தை
காண்பிக்க துவங்குகிறது.
சுயம் தொலைந்த நிஜம்
தெரியாமல் நீங்கள்
யாரோ ஒருவனை
தினம் சந்திக்கிறீர்கள்.
உங்களுக்கான நிறம்கரைந்து
உருகி மறையும் அந்தியில்
பிம்பங்களற்ற உருவத்தில்
உலாவுகின்றன
உங்களது வெற்றுடல்கள்.

2.இரவுக்குள் ஒளிந்திருக்கும் பகல்

மெல்ல மெல்ல ஆட்கொள்கிறது
பகலின் கீற்றுகள்.
முழுவதும் பகலான
மதியவேளையில்
உக்கிரதாண்டவமாடுகிறது
சில ஞாபகங்கள்.
பிரிவின் தகிப்பில் உதிர்ந்த
இலைகளை மிதித்தழித்து
உச்சமடைந்த ஞாபகங்கள்
ஒவ்வொன்றாய்
வீழ்ந்து மரித்தன.
தாங்கமுடியாத வலியுடன்
ஓடிச்சென்று இரவுக்குள்
நுழைந்து வழிகின்ற
கண்ணீரை துடைக்கிறது
பகலின் கரம்.

நன்றி: உயிரோசை

Sunday, November 30, 2008

மழை ரசித்தவர்கள்

மழை பிடிக்கும் என்றீர்கள்
மழையுடன் தேநீர் அருந்துவது
சொர்க்கம் என்றுரைத்தீர்கள்
மழைக்கென கவிதைகள்
ஆயிரம்எழுதிக் கிழித்தீர்கள்.
வெள்ள நீரில் மிதக்கும்
குடிசைகளை உங்களது
இறுக மூடிய பங்களாக்களிலிருந்து
பார்த்தபடி
மற்றோர் கவிதை எழுத துவங்குகிறீர்கள்.
உங்கள் கவிதைபோலவே
ஆயிற்று மனிதமும்.

Tuesday, November 25, 2008

தினமணி கட்டுரை

கடந்த ஞாயிறன்று (23/11/2008) வெளியான தினமணி நாளிதழின் கட்டுரையொன்றில் என் கவிதையை பற்றிய குறிப்புவந்திருக்கிறது.
இங்கு சென்று பார்க்கலாம் :
நன்றி: தினமணி.காம்.

Sunday, November 23, 2008

சிதறல்கள்

1.தனிமைதான் என்னை எழுதச்சொல்கிறது. தனிமைதான் என்னை எழுதவிடாமல் கொல்லவும் செய்கிறது. தனிமைக்குள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சுழல்கிறது என்னுலகம். அவ்வப்போது கதவுதட்டும் கனத்த காற்றில் உடைபட்டு மீண்டும் ஒன்றுகூடுகிறது என் தனிமை.

2. எறும்புகளை கொல்வது எளிது.தரையோடு தேய்த்து நசுக்கலாம்.மருந்து துகளில் அழிக்கலாம்.புத்தகத்தால் அடித்தும் கொல்லலாம். அழிப்பதற்கு பல வழி இருப்பினும் அழிக்கமுடியவில்லை மனதுள் ஊறுகின்ற விஷ எறும்புகளை.

3. தினம் தினம் எங்காவது மரித்துக்கொண்டிருக்கின்றன நட்புகள். அநாதை பிணமாய் நடமாடுகின்றன கைவிடப்பட்ட நட்புகள். தோளில் சுமக்கின்ற சிலுவைகளைவிட நெஞ்சில் சுமக்கும் சிலுவைகளில் கனம் அதிகமானதாகவே இருக்கிறது.

4.பாதங்களுக்காய் தவமிருந்தேன் பாதங்கள் கிடைத்தன.பாதைகளுக்காய் தவமிருந்தேன் பாதை கிடைத்தது. எனக்கான திசைகளை தேர்ந்தெடுக்க முற்படும் பொழுதில் உணர்கின்றேன் கடவுளின் பொம்மை நானென்று.

Saturday, November 22, 2008

இலங்கை இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டி ஒப்பாரி இலக்கிய நிகழ்வு

இலங்கையில் தொடர்ந்து நடைப்பெறுகிற இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கவிஞர்கள் சார்பில் வருகிற டிசம்பர் 07( 07.12.2008) அன்று சென்னையில் மாபெரும் கண்டன கவிதைகள் கவியரங்கம் நிகழவிருக்கிறது. பதிவு செய்ய விரும்புவோர்,

தொடர்புக்கு
கவிஞர் . லீனா மணிமேகலை 98410 43438
கவிஞர் . இன்பா சுப்ரமணியன் 98841 20284.

ஒப்பாரி இலக்கிய நிகழ்வு என பெயரிடப்பட்டிருக்கும் இதில் ஒப்பாரிக்கலைஞர்களும் பங்கெடுத்துக்கொள்ள இருக்கிறார்கள். தமிழ் இன உணர்வாளர்கள், படைப்பாளிகள் தங்களை பதிவு செய்து இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு எதிரான உணர்வுகளை பதிவு செய்யுங்கள்.
மற்றைய தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித நேய சிந்தனையாளர்களுக்கும் இந்த நிகழ்வை பற்றி தெரிவித்து பெரும் வெற்றியடைய செய்யுங்கள்.

Friday, November 21, 2008

ஆனந்த விகடன் இதழில் என் கவிதைக‌ள்


நண்பர்களுக்கு வணக்கம்,

என்னுடைய இரண்டு கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கின்றன.படித்துவிட்டு உங்களது பின்னூட்டங்களை இடுங்கள்.

1.பறவைகளின் மொழி அறிந்தவன்

பூனைகளின் மொழி அறிந்தவனை
சந்தித்தேன்.
நாய்களின் பாஷையும்
கொஞ்சம்தெரியுமென்றான்.
விநோத ஒலியை அவன்
உருவாக்கியதில் நான்கைந்து
பூனைகள் அவன் காலை சுற்றின.
பூனைகளை
தடவிக்கொண்டே கை நீட்டினான்.
பறவைகளின் மொழியில்
புலவன் நானென்றேன்.
விரக்தியான புன்னகையொன்றை தந்தபடி
நகர்ந்து சென்றான்.

2.இனம்

இந்தக் கவிதை
இப்பொழுதுதான் பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத வரையில்
இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்

-நிலாரசிகன்.

Monday, November 10, 2008

திறக்காத கதவுகள்

யாருமற்ற வீட்டின்
கதவுகளை தட்டுகிறானவன்.
பதில் குரல் ஒலிக்காதபோதும்
தட்டுவதை நிறுத்தவில்லை.
அவனுக்குத்தேவை பதில்
அல்ல.

Tuesday, November 04, 2008

குழந்தைக்கவிதைகள் இரண்டு


1.அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

2.
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

(1வது கவிதை "மல்லிகை மகள்" மாத இதழில் இம்மாதம்(நவம்பர் 2008)வெளியாகி இருக்கிறது)

Wednesday, October 29, 2008

கல்கி இதழில் என் கவிதை

நண்பர்களுக்கு வணக்கம்.

இவ்வார கல்கி இதழில் வெளியான என்னுடைய மூன்று கவிதைகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

கல்கியில் வெளியான கவிதைகள்

(மேலுள்ள சுட்டியின் மூலம் கவிதையை படிக்க இயலாதவர்களுக்காக,கல்கியில் வெளியான கவிதைகளை இங்கே பிரசுரிக்கிறேன்)

குழந்தைகளின் உலகம்

1. கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

2. அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

3. மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

**********************************************************************************

எப்போதும்
எனக்கு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

Tuesday, October 21, 2008

ருசித்துக் கொண்டிருந்த இரவு

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
நிசியில் விசித்திரமானதொரு
அரவம்கேட்டு விழித்தெழுந்தேன்.
அறை முழுவதும் நடமாடிக்கொண்டிருந்தன
புத்தகங்களைவிட்டு வெளியேறிய
சொற்கள்.
ஏதேதோ கோஷமிட்ட
அவைகளின் மொழி புரிந்துகொள்வதாயில்லை.
திடீரென்று அவைகளுக்குள்
பெரும் யுத்தமொன்று உருவாயிற்று.
செத்து வீழ்ந்தன சில.
தோற்று ஓடின சில.
வென்று திரும்பிய சொற்கள் ஓடிச்சென்று
மீண்டும்
புத்தகத்தினுள் நுழைந்துகொண்டன.
வீழ்ந்த சொற்களின் குருதியை
யாருமறியாமல்
ருசித்துக்கொண்டிருந்தது இரவு.

கனத்த மெளனம்

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லா வெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ

-நிலாரசிகன்

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Wednesday, October 15, 2008

இரு கவிதைகள்

1.

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லாவெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ.

2.

உனக்கான கடைசி
கடிதத்தை நான்
எழுதிக்கொண்டிருக்கையில்
புரிந்துகொள்ளப்படாத எனதன்பில்
விழுந்திருந்த கீறல்
உடைந்திருக்ககூடும்.

அறியப்படாத பூவொன்றின்
வாசனையில் லயித்திருக்கும்
உனக்கென் பிணத்தின்
வாடை திடுக்கிடச்செய்யலாம்
அல்லது
கைதட்டவும் தோன்றலாம்.

எவ்வளவு முயன்றும்
நினைவில் மலராத
கனவென மரணிக்கின்றன
என் ப்ரியங்கள்.

Friday, October 10, 2008

நீங்குதல்

வெகு இயல்பாய் நிகழ்கிறது
நம்மிடையேயான
ப்ரியங்களின் நீங்குதல்.

பிரிவுகுறித்த பிரக்ஞையற்று
உறைந்திருக்கும் உயிரின் மீது
தன் கூரியபற்களை பதிக்கிறது
தனிமை.

எதிர்ப்புகளின்றி
வெட்டுண்ட மரமென
வீழ்கின்ற
உயிரில் படிய ஆரம்பிக்கிறது
நீங்குதலின் ரத்தக்கறை.

Tuesday, October 07, 2008

விகடனில் என் கதை

நண்பர்களுக்கு,

விகடனின் "யூத்புல் விகடன்" பகுதியில் என்னுடைய "ஏலியன்" விஞ்ஞான புனைக்கதை பிரசுரமாகியுள்ளது.

தொடர்புக்கு: http://youthful.vikatan.com/youth/story3.asp

கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கு முன்னரே பிரசுரமாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். இன்றுதான் இதனை கவனித்தேன்.

கதை படித்துவிட்டு பின்னூட்டமிடுங்கள்.

Monday, October 06, 2008

பொழுதுகள்...

1. இரு அறைகளை
மட்டுமே தனக்குள்
நிறைத்திருந்த அச்சிறு
வீட்டின் ஓர் அறையின்
மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
அடுத்த அறையிலிருந்து
துவங்கிய
நீர்சொட்டும் ஒலி
பின்னிரவைக் கடந்து
வைகறையிலும் கேட்டது.
அதிகாலையில் அடங்கியிருந்தது
எனக்குள் மட்டுமே
ஒலித்த ஓலம்.


2. எதிர்படும் நபர்களிடம்
பூ விற்க முயன்றுகொண்டிருந்தாள்
சிறுமி ஒருத்தி.
சூரியக்கதிர்கள் மங்கிப்போன
கருக்கலில் வாடியவளாய்
கடற்கரை மணலில் கால்நீட்டி
அமர்ந்து கடல் பார்த்தாள்.
முதல் முறையாக தன்னை
பார்க்கும் அச்சிறுமிக்கென
ஓர் அலையை அனுப்பியது
நீலக்கடல்.

3. நாய்களின் குரைப்புச்சத்தம்
இரவின் மெளனத்தை
குலைத்துக்கொண்டிருந்த தருணத்தில்
உடலை மறைக்கவியலா
உடைகளணிந்த கன்னியொருத்தி
குப்பைத்தொட்டில் எதையோ
தேடிக்கொண்டிருந்தாள்.
இருளை சுமந்துகொண்டு
அவளை நெருங்கின
இரு நாய்கள்.

4. தனித்துவிடப்பட்ட இரவில்
நெருப்பை உமிழ்ந்து
கொண்டிருந்தது தனிமையின்
நாவுகள்.
நடுச்சாமத்தில் தட்டப்பட்டது
அறைக்கதவு.
விடியத்தொடங்கிய அதிகாலை,
தனிமையின் மீது
உமிழ்ந்துவிட்டு புரண்டு படுத்தேன்.

அக்டோபர் 2008 "வார்த்தை" இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்

Monday, September 29, 2008

இரு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள்

கவிதைகளை துறந்துவிட்டு

சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன்.

கற்பனைகள் தூர்ந்து,

கனவுகள் தகர்ந்து,

பாதாளத்தின் வாய்பிளந்து

என்னை உள்ளிழுத்துக்கொண்டது.

இருள் கவிந்திருந்த அவ்விடத்தில்

தொலைந்த பேனாக்களை

தேடிக்கொண்டிருந்தனர்

எந்திரத்தனம் நிறைந்த

என்னையொத்த மனிதர்கள் சிலர்.

2. சுயத்தை எரித்தல்

மிகுந்த வெம்மையாயிருந்தது

ஒரு சொல்.

வெம்மையின் கதிர்கள் முதலில்

நுழைந்தது செவியில்.

செவிக்குள் நுழைந்த அச்சொல்லின்

வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது

வலியின் நீட்சியில்.

இதயம் கருகி கண்ணீராய்

வெளியேறுகையில்

மறுசொல்லுக்காய் காத்திருக்க

ஆரம்பித்தது சுயம்.

-நிலாரசிகன்

நன்றி: நவீன விருட்சம்

Thursday, September 25, 2008

இருவார்த்தைகளும் இடுகாடும்




இடுகாட்டிலிருந்து காற்றில் மிதந்து வருகிறது எனக்கான அழைப்பு. இவ்வுலகை விட்டுப்பிரிதலை சாத்தியப்படுத்துகின்றன துரோகத்தால் எரிகின்ற ஆழ்மனது. இப்பிரபஞ்சத்தில் ஒரு பட்டாம்பூச்சியென சுற்றித்திரிந்த என் கனவுகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன மரம் உதிர்க்கும் இலையென. தனிமையின் கோரப்பற்களில் சிக்கியிருக்கிறது என் இரவு. பிரக்ஞையின்றி தடுமாறுகின்றன என் கால்கள் பாதைகளை தொலைத்துவிட்டு. தோல்வியின் ஏளனச்சிரிப்பில் சிதைகிறது என் உயிர். கூகையொன்றின் கடும்குரல் தூரத்தில் எங்கோ கேட்கிறது. பறவைகள் இனம்கண்டுவிட்டன மரணத்தின் விளிம்புக்கு நான் செல்லவிருப்பதை.

விண்ணை பொத்துக்கொண்டு வீழ்கிறது மழை. நிசப்தம் நிலவிய இருளுக்குள் என்னை நுழைத்துக்கொண்டு நடக்கிறேன். நெருஞ்சிகள் நிறைந்த பாதையின் ஓரங்களில் பூத்திருக்கிறது வாடாமல்லி. உயிரற்றவன் நடப்பது போலிருக்கிறது என் நடை. இதயத்தை அரித்துக்கொண்டே இருக்கிறது இருவார்த்தைகள். பிணமொன்றின் நாற்றம் உங்கள் நாசிக்கு எட்டும் நாளுக்காய் காத்திருங்களென்று பாதையோர பூக்களிடம் சொல்கிறதென் மனது.

அவமானங்களும்,அவஸ்தைகளும்,நிறமற்ற வாழ்கையை நிறைத்திருந்த பொழுதின் முடிவில் தோன்றிற்று ஒரு பெண்ணின் மீதான ஆர்வம். தோழமைக்கும் அப்பால் நின்றிருந்த அவளை நெருங்கியபோது அவளே உலகமென்ற நிச்சயமற்ற முடிவொன்று உருப்பெற்றது. உறைந்த பனிக்கட்டியை ஒத்திருந்தது அவள் மீதான உருக்கமான நேசம் மிகத்தூய்மையாய். காலச்சுழற்சியில் கொஞ்சம் கொஞ்சமாய் விலக ஆரம்பித்த அவள் அபலை அல்லள். உக்கிரதாண்டவம் ஆடுகின்றன அவளது கடுஞ்சொற்கள். அகால மரணமடைந்த இதயத்தின் பிணம் என் நெஞ்சுக்கூட்டுக்குள் அநாதையாய் கிடக்கிறது.

இதயம் மரித்துவிடினும் மரித்தபாடில்லை அவள் மீதான நேசங்களும்,என்னை பரிகசிக்கும் ப்ரியங்களும். நண்பனென்று வெகுஇயல்பாய் உரைத்து, இதயத்தை கொன்றவளுக்கு பாடித்திரியும் இந்நேசங்களை கொல்லத்தெரியவில்லை பாவம். உடலெங்கும் பரவுகின்ற வெம்மை நடுநிசியின் குளிருக்கு ஏதுவாகத்தானிருக்கிறது.இன்னும் சற்றுதூரத்தில் எனக்கான இடம் மிக அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. மண்ணுக்குள் சென்று மறைவதே மனதுக்குள் மலர்கின்ற நேசத்தின் முடிவுகளா? இந்நேரம் அவளென்ன செய்துகொண்டிருப்பாள்? மகளாய்,தோழியாய்,சகோதரியாய் பல்வேறு வேஷங்களில் அற்புதமாய் நடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது நண்பனென்றுரைத்த இதழ்களுக்கு சாயமிட்டுக்கொண்டிருக்கலாம் இல்லையேல் நாளைய திருமணத்திற்கான அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கலாம்.

என் பிணத்தை நானே சுமந்து நடப்பது கடினமென்று உணர்ந்து மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தேன் கல்லறை நோக்கி.பழகிய நாட்களின் நிகழ்வுகளில் ஒவ்வொன்றாய் கண்முன் விரிந்துவிட்டு மறைந்துகொண்டிருந்தன. முதல் முறை பார்த்தபோது கருமைநிற சேலையொன்றில் மிளிர்ந்தாள். அது என்னை மூடப்போகும் சவத்துணி என்று அன்றே உணர்ந்திருக்கவேண்டும். பின்னொரு நாளில் என்னை பார்க்கத்தோன்றவில்லை என்றாள் வெகு நிதானத்துடன் தீர்க்கமான குரலில். பாதி இறந்த இதயம் முழுவதுமாய் மரித்தது அன்றுதான். எல்லாவற்றிக்கும் முடிவுண்டு என்பதை சற்றே தாமதமாய் உணர்ந்திருக்கிறது மனது.

இடுகாட்டுக்குள் நடுச்சாமத்தில் நுழைவது சற்று வருத்தமாய் இருக்கிறது. ஊரறிய மரித்திருந்தால் பாடைகட்டி ஊர்வலமாய் அந்தியில் நுழைந்திருக்கும் என் உடல். உயிருக்கு சொந்தமானவளே இல்லை என்றானபின் ஊரைப்பற்றி என்ன கவலை? இடுகாட்டின் நடுவில் சென்று சம்மணமிட்டு அமர்கிறேன். ஓவென்று ஒப்பாரி வைக்க யாருமில்லை. அடிவயிற்றிலிருந்து மேலெழும்புகிறது பெரும் ஓலம். நெஞ்சிலடித்துக்கொண்டு அழுகிறேன். என் ஓலம் கேட்டு உறக்கம் தொலைத்த நாய் ஓடிவந்து எதிரே நிற்கிறது. கைகளால் முடிந்தவரை ஆழமான குழியொன்றை தோண்டுகிறேன். நகம் கிழிந்து ரத்தம் சொட்டுகிறது. இரக்கமற்ற இப்பூமியில் பிறந்துவிட்டதை எண்ணி ஓங்கி ஓங்கி மண்மீது அறைகிறேன். விழுகிறேன். புரள்கிறேன். கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கிறது இருண்ட வானம். கனத்த இருளின் கைகளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் கரைகிறது என் உருவம்.

Monday, September 22, 2008

குழந்தைக் கவிதைகள்


1.குழந்தையின் பசுமாடு

இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.


2. கடவுளுக்கும் அப்பால்

இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

3.தனிமொழி

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

நன்றி: உயிரோசை இணைய இதழ்

Friday, September 19, 2008

மென் தமிழ் - புரட்டாசி 2008 இதழ்

நண்பர்களே,

மென் தமிழ் புரட்டாசி மாத இதழ் இங்கே படிக்கலாம்.

http://mentamil.wordpress.com/2008/09/19/mentamil-september-09/

உங்களது மேலான விமர்சனங்களுக்காக காத்திருக்கிறோம்.

நன்றி.

Wednesday, September 17, 2008

கீற்றுக்கு உதவிடுவோம்

நண்பர்களே,

கீற்று இணையதளம்(www.keetru.com) இணைய உலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம். சில வருடங்களுக்கு முன்னர் நான்கைந்து இளைஞர்களின் முயற்சியாலும்,தமிழார்வத்தாலும் இணையத்தில் தொடங்கப்பெற்ற கீற்று இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. கீற்றுவின் சிறப்பம்சமாக நான் கருதுவது சிற்றிதழ்களை இணைய உலகிற்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவது. அதுமட்டுமின்றி வளரும் இளைய கவிஞர்களையும்,எழுத்தாளர்களையும் கீற்று தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்திருக்கிறது. ஏராளமான இலக்கியத்தகவல்களை தொடர்ந்து தந்தவண்ணம் இருக்கிறது.

தற்சமயம் நிதி பற்றாக்குறையால் கீற்று தள்ளாடுகிறது. இதைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள் http://www.keetru.com/common/donate.php

கீற்று தமிழிசை பாட உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

நன்றி.

Monday, September 15, 2008

கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்




வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும்,புலிட்சர் விருதும் பெற்றது.


பலநாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் திரும்புகின்ற கிழவனுக்கு ஆறுதலாய் இருப்பது ஒரு சிறுவன்.
இன்றாவது நான் உன்னுடன் கடலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது தடுத்துவிட்டு கிழவன் மட்டும் தனித்து பயணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது. அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன்(கிழவனின் படகைவிட பெரிய மீன்) போராடி
அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த மீனை சுவைக்க வரும் சுறாக்களுடன் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும்,பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் கிழவனின் வீரத்தை பறைசாற்றுகிறது.

அவ்வப்போது "அந்தச் சிறுவன் இருந்தால் நன்றாய் இருந்திருக்குமே" என்று தனியே அரற்றுவதும்...தூண்டிலை இறுகப்பற்றியதால் இடது கை மரத்துப்போகையில் இடக்கையுடன் தனியே பேசுவதும் கிழவன் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இருநாட்களாய் கடலில் உணவின்றி சிறுமீன்களை பிடித்து பச்சையாக தின்னும்போது "நான் ஒரு முட்டாள்,அடுத்த முறை கண்டிப்பாக எலுமிச்சையும்,உப்பும் கொண்டுவரவேண்டும்" என்று புலம்புவதும்
சோர்கின்ற போதெல்லாம் "என்னால் முடியும் எத்தனை முறை வென்றிருக்கிறேன்" என்று தனக்குத்தானே தைரியமூட்டிக்கொள்வதும் கிழவனின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது.

நடுக்கடலில் மீனுடன் நடக்கும் பலமணி நேர போராட்டத்திற்கு நடுவிலும் தன் நகரத்தில் நடக்கின்ற பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், தன்னுடைய மனம் கவர்ந்த பேஸ்பால் வீரன் டிமாகியோ கால் ஆணியால் அவதிப்படுவதை பற்றி சிந்திப்பதும் கிழவனுக்கு பேஸ்பால் மீதிருந்த தணியாத ஆர்வத்தை மிக அற்புதமாய் எடுத்துரைக்கிறது.

அயல்நாட்டு இலக்கியத்தின் நடையையும்,அந்த கடலோர மீனவர்களின் வலியையும் கதை முடியும் தருவாயில் உணர முடிகிறது. இது நாவலா சிறுகதையா என்கிற குழப்பத்தை கிழவனும்,சிறுவனும்,மீனும் மறக்கடித்துவிடுகிறார்கள். மொழிபெயர்ப்பு நூல் என்கிற எண்ணம் வெகு சில இடங்களில் மட்டுமே தோன்றுகிறது. போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை என்னும் கடலில் எதிர்நீச்சலிட்டு வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கிழவன் ஒரு முன்மாதிரி.வெகு நாட்களுக்கு பின் ஒரு நல்ல புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் தருகிறது.


கிழவனும் கடலும்

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.50

காலச்சுவடு பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=15&products_id=12008

Thursday, September 11, 2008

வலி தீர வழி சொல் கண்மணி!

உன்னை என் மடியிலமர்த்தி கன்னத்துடன் கன்னம் உரசிக்கொண்டு கவிதைகள் வாசித்த பொழுதின் ஞாபகமிச்சங்கள் என்னுடைய எல்லா இரவுகளுக்கும் துணையாகின்றன..

இரு கைகளில் உன்னை அள்ளியெடுக்க முயன்று உன் எடைதாளாமல், உன் பூமுகத்தை என் கைகளில்
ஏந்தி நெற்றியில் ஒரு சிறுமுத்தமிட்ட கணத்தை சிற்பமென செதுக்கி வைத்திருக்கிறது யன்னல் வழியே நம்மை ரசித்த வெண்நிலா.

திமிர்கொண்டு நீ உதிர்க்கும் சொற்களெல்லாம் எனைச் சேரும் முன்பே, திமிர்தொலைத்து நேசம்பொங்க ஓடிவந்து என்னைக் கட்டிக்கொள்வாய். கண்சிமிட்டும் நட்சத்திரங்களெல்லாம் வெட்கத்தில் இருளுக்குள் ஓடி மறையும்.

நொடிக்கொரு முறை என் விரல்பற்றிக்கொண்டு குழந்தையாகி என் கண்களை உற்று நோக்குவாய். கண்களில் வழிகின்ற ப்ரியங்களில் உன் பெயர் மட்டுமே எழுதப்பட்டிருக்கும்.

தடதடக்கும் ரயில்கள் நம்மைக் கடந்து சென்ற ஓர் அந்தியில் ரயில்நிலைத்தில் அமர்ந்திருந்தோம். சொல்லிவிட விரும்பாத காரணத்தால் அழுதாய் நீ. ரணமின்றி காதலில்லை என்றேன் நான். கனத்த நெஞ்சுடன் மேற்கில் சென்று விழுந்தது சூரியன்.

உனக்கென மலர்ந்த என் வீட்டு ரோஜா இனி யாருக்கு பூக்கும்? நீ வசித்த என் இதயவீட்டில் இனி யாருக்கு இடமிருக்கும்? பிறந்த மண்ணைப் பிரிகின்ற அகதிக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம். அவன் தேசமில்லா அகதி. நான் நேசமில்லா அகதி.

வலிகொண்ட என் காதல்நதி உன் ஞாபகக்கடலை சுமந்துகொண்டு திசை அறியாமல் தடுமாறிச் செல்கிறது.
நீயும் நானும் மறந்துவிட்ட என்னை நாம் நடந்த சாலையோர சிறுபூக்கள் இன்னும் நினைவு வைத்திருக்கிறது.

உன் சிறகில் கேட்கிறது பிரிவின் சத்தம். என் சிறகில் வழிகிறது காதல்ரத்தம். வீழ்த்தப்பட்ட ஒற்றைப்பறவை என்னிடம் இனி எதுவுமில்லை மிச்சம்.


யாருக்கோ மலர்கின்ற என் புன்னகையினுள்ளே வலிமிகுந்த காதலொன்று துடிதுடித்துக்கொண்டிருக்கிறது. யாருக்கோ மலர்கின்ற உன் புன்னகையினுள்ளே கல்லறையாய் எழுந்து நிற்கிறது நம் உயிர்ப்புள்ளகாதல்.

Wednesday, September 10, 2008

இம்மாதம்(செப்டம்பர் 2008) பத்திரிகையில் வெளியானவை

1.நேயா மாத(ர்) இதழில் சிறுகதை
2.யுகமாயினி இலக்கிய இதழில் கவிதை
3.கல்வெட்டு பேசுகிறது இதழில் இரு கவிதைகள்

Monday, September 01, 2008

ஊனப் பறவை

ஊனப்பறவையொன்று
நிழல்தேடி என்னிடம்
வந்தது.
எனை கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்தித் தின்று சிறகுமுளைத்து
பறந்து சென்றது.
ஊனமாகியிருந்தது என்
வேர்கள்.

Tuesday, August 26, 2008

மொழி பெயர்ப்பு

என்னுடைய கறுப்புத்தங்கம் கவிதையை நண்பர் தணிகைவேல் மொழிபெயர்த்திருக்கிறார்.

Enn karuppu thangam

It was you who was with me during my journey when the whole path was full of thorns



Now when the path is turned into roses you are far away from my vision



The unwritten and unexpressed love of us now

Lying on the ground like a art which is cluttered with dust



Like a chicken which is slowly emerging from the shackles of egg

The words from my mouth is emerging after breaking the story of silence



When I am on the thoughts of your love



The tears of my eyes hits the mirror and flows like drops of rain



The thoughts of you hits my heart and pulverizes like the pieces of glasses



Though the phase of love surrendered to the dimension of time and history

Yet can the thoughts of love be overtaken by it ?



Even when the tears fallen from eyes/heart have become wet

Still I am on the path filled with those days of Nostalgia



Like the sweat that is shining on the hands of the old man who carries a bunch of leaves

Still the first sight of love of yours is still shining in the memories of mine



The footprints of a cow on the bank of a river reminds me of

The cute face of yours which is lying deep in the transcended state of my heart



When friends turn into backstabbers.... There is none to take care of my wounded heart



Even in the present phase of my life, a time comes often where I am being carried away by the memories of those rare moments of the past love



At time during the mid of night when I am awake suddenly and until I go back to the state of sleep.......... The bridge of the above is being filled with the thoughts of our love



No matter when the nears and dears behave like a storm or cyclone.... Yet I am in the normal state of watering a plant and started learning the art of showing the glimpses of smile on the mouth.........though the heart is wounded with the phases of love...



I am wish you to be in the state of an infant in my heart



Time delivers a baby

But love in one delivery gives so many phases to life



Not knowing that I am was wounded once again this night with the agony of past love....

The Sun is slowly emerging on the East

-[Translated by Thanigaivel]

நதிக்கரையில் சில பொழுதுகள்..



ஒரு நாள் மாலைநேரம் நதிக்கரையோரம் நடந்து சென்றோம். சலசலத்தோடும் நதியில் உன் விழிமீன்கள் நீந்திக்கொண்டே வந்தன. ஓடிச் சென்று நதி நீரில் உன் உன் விரல்களால் கோலமிட்டாய். தலைகோத விரல்கள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் துள்ளி ஓடியது அந்நதி.

என்மீது நீர் தெளித்து விளையாட ஆரம்பித்தாய். உன் பட்டுக்கைகளில் ஏந்திய நீர் விடைபெற்று என் மீது விழுகையில் மலர்களாய் மாறியிருந்தது. சட்டென்று என்னுள் வசந்தகாலம் ஒன்று உருவானது.
நதியில் உன் முகம் பார்த்து சிலிர்த்தாய். உன் முகம் பார்த்த சிலிர்ப்பில் நதியலை ஒன்று ஆனந்தமாய் கரையை முத்தமிட்டது.

தெளிந்த நதி நீரில் கூழாங்கற்கள் உருண்டுச் செல்வது சரித்திரக்கதைகளில் வருகின்ற தேர்ச்சக்கரத்தை நினைவூட்டுகிறது என்றாய் குறுநகை புரிந்துகொண்டு. உன்னை அள்ளியெடுத்து என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.

என்னிலிருந்து விலகி மீண்டும் நதி நோக்கி ஓடினாய். நதி என்னைப்பார்த்து பரிகாசபுன்னகையொன்றை சிந்தியது. நதியில் மிதந்து வந்த செவ்வந்தி பூவைக் கண்டவுடன் ஆனந்தமாய் ஏதோவொரு பாடலை பாடுகிறாய். உன் குரலைக் கேட்டவுடன் தலையசைத்துக்கொண்டே மிதந்துச்செல்கிறது அந்தப் பூ.

உறங்க செல்லும் நேரம் கடந்துவிட்ட பின்னரும் உன்னழகை ரசித்தக்கொண்டு மேற்கே நின்றது மாலைச்சூரியன்.
சற்றுநேரம் ரசித்துவிட்டு இனி கனவில் உன் பொன்முகம் காணலாம் என்று நினைத்துக்கொண்டு உறங்கிப்போனது.
இருள் படரத்தொடங்கியபின்னர் என் விரல்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டாய் நீ.

நதியைவிட்டு நாம் விலகி நடக்க ஆரம்பித்தோம். உன் பிரிவெண்ணி கவலையில் மெளனமாய் அழுதபடி தன்னில் விழுகின்ற நிலவை துரத்திக்கொண்டிருந்தது நதி.

என் தோளில் உன்னை சுமந்துகொண்டு நம் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அப்பாவாகிய நான்.


Monday, August 25, 2008

மொழிபெயர்ப்பு

என்னுடைய "கல்லெறியப்பட்ட கனவுகள்" கவிதையை நண்பர் தணிகைவேல் மொழிபெயர்த்திருக்கிறார்.


Kaalyeriyapatta Kanavugal - Stones of Nostalgia



Like a toe that has been caught between the doors : The separation of ours pours the blood on the path of love



The hugs and kisses of ours have been forgotten by the phase of history :But the humming of yours still rhymes in my ears

The same sound that has been merged with the mother of breeze



When you uttered that our love is like a ocean, could not understand the philosophy of love,

since I am a novice when it comes to the art of swimming



Watching the window while lying on the bed….The landing of drizzles on the lap of tree…..

reminds me the reality that our love that has crossed the bridge of a decade



When the soul was craving for solace…. When the hair and heart of mine had the rarest honor of being curled and hugged by your soul!!!

The result is as the history proclaims with vanity “The jewel on the crown of love has started to lit the darkness of Universe’



But the same love that has been lit by you has burnt the flesh, bone, soul, nerve, heart of mine into ashes



It is not a strange expectation that when you are on the life of normality…Should not expect that a known stranger who is taking care of wounded flowers to be noticed



Not much difference between I and the fish rather a fish whose cave is made up of castles of glasses



It is a fact of reality that you are always not in my memory but when ever the memory of mine is filled with the thought of ours…

The face of mine shrinks like the Sun when it goes to the state of dusk



When you were nearer to me, I was like a tree which had the power to give birth to flowers even when the temperature clocked 100 Degree



Now when the same mother – temperature 4 Degree – The tree rather to code is as I - without the roots !! why talk about flowers and branches?



Forget Never – Never forget - The letters of yours with these phrases makes me to giggle often…



When the enemy is religion for our Love – would not have bothered to pull the sword



When the enemy is caste for our Love – would not have cared to lay down the life



But when you wanted me to defeat you in the war of love so that I will be honored with the trophy with the wordings carved in it

“Defeater is Lover and the winner is Love”



A Question to you



Is this is the war to be fought with the weapons of sword and pistol!



No… It is the war to be won with the fragrance of Jasmine….



PS: The entire street of ours is filled with the wounds and scars and remains of my dreams and reality.

Thursday, August 21, 2008

எனை மறந்ததேன் மழையே!


இரவுகள் பல கண்விழித்து உனக்காக வரைந்த ஓவியமொன்றை இரக்கமின்றி நீ கிழித்தெறிந்தது அறியாமல்
ஓவியத்தின் வண்ணங்களாக மிளிர்கிறது என் நேசம்.

பிடித்த பொம்மையை நெஞ்சிலணைத்துக்கொண்டு சந்தோஷமாய் ஓடுகின்ற குழந்தையை போல் உன்மீது நேசம்கொண்டு எத்தனை கனவுகளை நெஞ்சில் சுமந்து திரிந்தேன்....
அத்தனையும் கனவுகளாய் கரைந்தனவே!

நீ பரிசளித்த கடிகாரம்கூட பன்னிரெண்டில் ஒன்று சேர்வதில்லை என்பது இப்போதுதான் புலப்படுகிறது..

கண்ணீரின் கனம் தாளாமல் மரித்துவிட்டதோ நம் காதல்?

உயிரில் கலந்துவிட்டு நண்பன் நீ என்று வெகு இயல்பாய் சொல்லிப் பிரிகின்ற உனக்கு இதயமிருக்கிறதா?

ஒரு கறுப்பு நிற புடவையில் உன்னை பார்த்து, வீடு திரும்பிய நாளில் தோன்றியது வண்ண வண்ணக்கனவுகள்.

இந்தப்பிரிவில் வானவில்லும் கறுப்பு வெள்ளையாகிப்போனது. பற்றி எரிகிறது என்னுலகம். நீயோ மணமேடைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாய்.

மணிக்கொரு முறை பேசாவிட்டாலும் கடிந்துகொண்டவள் இப்போது என் குரல் கேட்டபின்னரும் இயல்பில்லாத ஒரு புன்னகையை காற்றில் கரைத்துவிட்டு வெகு இயல்பாய் இணைப்பைத் துண்டிக்கிறாய்.

நீ உடைந்தபோதெல்லாம் ஒன்று சேர்த்தவன் இப்போது தவறவிட்ட கண்ணாடியாய் சிதறிக் கிடக்கின்றேன். நீயோ மணப்பெண் அலங்காரத்திற்கென கண்ணாடி முன் நிற்கிறாய்.

காதலென்னும் சிற்பம் செதுக்கினோம். உளியாய் நீ இருந்திருக்கிறாய். கல்லாய் நானிக்கிறேன்.

சிலரின் பிரிவில் ஞானம் பிறக்கும். சிலரின் பிரிவில் கானம் பிறக்கும்.
உன் பிரிவில் பிறந்திருக்கிறது வெட்கம். உன்னைப்போய் காதலித்தேனே என்கிற வெட்கம் இது.

உன்னோடு நானிருந்த நிமிடங்களை மறக்க முடியாமல் தவிக்கிறதென் இதயம். கண்ணோடு கலந்திட்ட காட்சிகளை அழிக்க முடியாமல் தவிக்கிறதென் இதயம். தவிப்புகள் நிறைந்த இதயத்தின் விசும்பல் உன் செவிட்டு இதயத்திற்கு எங்கே கேட்கப்போகிறது!

உன்னை வர்ணித்து ஆயிரம் கவிதைகள் எழுதிய விரல்கள் என்னிடம் கதறி அழுகின்றன. நேசமற்ற அவளுக்காக கவிதைகள் எழுதிய எங்களை வெட்டி எறிந்துவிடு என்று!

தீபமென்று நினைக்கவைத்தாய். தீப்பந்தமாய் எனை எரித்தாய். என்னில் பொழிந்த மழைதான் நீ. ஆனால் அமிலமழையடி!

Monday, August 18, 2008

இரவுக் கவிதைகள் மூன்று


1. விசித்திரமானதொரு சத்தம்
ஜன்னல் வழியே
கசிந்துகொண்டிருந்த நடுநிசியில்
விறைத்து நடுங்குகின்ற
உடலுடன் ஜன்னல்நோக்கி
மெல்ல நகர்ந்து எட்டிப்பார்த்தேன்.
இருளின் கருமையை
உடுத்திக்கொண்டு
சோற்றுப்பானைக்குள் புரண்டுகொண்டிருந்தது
என்னை ஒத்த பூனையொன்று.

2. கனவுகள் தகர்த்தெறிந்து
இருளை சுமந்துகொண்டு
விரைந்து வந்த பட்சி
என்னைக் கெளவிப்பறந்தது...

விதிர்விதிர்த்து
கண்கள் இறுக மூடி
ஏதேதோ
முணுமுணுத்தன என்னுதடுகள்..

முட்கள் நிறைந்த புதரொன்றில்
எனை வீச்சென்றது
அப்பறவை..

வீழ்ந்து கிடத்தலைவிட
பறந்து சாதலே பெரிதென
உணர்த்தின
சவப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த ஆணிகள்.

3.தெருநாய்களின் நகக்கீறல்களால்

கதறிக்கொண்டிருந்தது

தகர குப்பைத்தொட்டி...

நைந்த புடவையொன்றில்

குளிர்தவிர்க்க இயலாமல்

முனகிக்கொண்டிருந்தாள்

பிச்சைக்காரி ஒருத்தி..

மரக்கிளையில்

சிருங்கார சப்தம் எழுப்பி

புணரத் துடித்தன

தேன்சிட்டுகள்...

விதவிதமான சப்தங்களுடன்

மெளனத்தால்

உரையாடியபடி நீண்டு

செல்கிறது இரவுத்தெரு.


Thursday, August 14, 2008

மென் தமிழ் ஆகஸ்ட் மாத இதழ்

இனிமையான தோழர்களே,

மென் தமிழ் ஆவணி 2008 இணைய இதழை கீழ்கண்ட சுட்டியில் பெற்றுக்கொள்ளலாம்.

http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/files/mentamil_August.pdf


or

www.mentamil.wordpress.com

இந்த சுட்டிமூலம் தரவிறக்கம் செய்ய இயலாதவர்கள் எனக்கு தனிமடலிடுங்கள்
(nilaraseegan@gmail.com)

நான்கு கணிப்பொறி மென் பொருளார்களின் சிறு முயற்சி இது.
இந்த சிறிய முயற்சி மேன்மேலும் வளர உங்களது ஆதரவும்,ஆசிகளும்,வாழ்த்துக்களும் தேவை.
இதழின் நிறை/குறைகளை சுட்டிக்காட்டினால் இனிவரும் இதழ்களை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.




நன்றியுடன்,
மென் தமிழ் ஆசிரியர் குழு சார்பாக,
நிலாரசிகன்.

ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்

நண்பர்களே

இணையம் மூலமாக என்னுடைய கவிதை நூல் "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்" பெறலாம்.
சுட்டி --> http://www.anyindian.com/product_info.php?products_id=212002

Wednesday, August 13, 2008

இணைய வானொலியில் என் கவிதை

என்னுடைய "அத்தமக செம்பருத்தி" கவிதை இணையவானொலியான http://worldtamilnews.com/ ல் இன்று(13/09/2008) ஒலிபரப்பாகிறது. அப்துல் ஜப்பார் அவர்களின் இனிமையான குரலில்.

http://worldtamilnews.com/
சென்று KAVITHAI KELUNGAL சுட்டியை அழுத்தினால் இதனை கேட்கலாம்.

நன்றி.

Tuesday, August 12, 2008

தெருக்கூத்து கலைஞருக்கு உதவி தேவை


நண்பர்களுக்கு,

வனவாசியை சேர்ந்த மாயவன் என்கிற இந்த
தெருக்கூத்து கலைஞர் சுவாசத்தில் அடைப்பு ஏற்பட்டு
கஷ்டப்படுகிறார்.
70 வயதான இந்த கலைஞருக்கு தங்குவதற்கு வீடு இல்லை.
தனி மரமான இவரது இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 15000
தேவைப் படுகிறது.
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக் கணக்கிற்கு
பணம் அனுப்பலாம்.

A/c No. 611901517766
V.Shunmugapriyan,
ICICI Bank, Salem Shevapet Branch

மேலதிக தவலுக்கு:

மு.ஹரிக்கிருஷ்ணன்(9894605371)

நன்றி.
நிலாரசிகன்.

Monday, August 11, 2008

உயிரோவியம்

ஓவியம் வரைந்துகொண்டிருந்த
அந்தக் கிழவனின்
கைகளில் சிறிதேனும்
நடுக்கத்திற்கான அறிகுறி
தென்படவில்லை.

புகை கக்கி இரைச்சலுடன்
செல்கின்ற வாகனத்தினாலும்
தோள்மீது எச்சமிட்டு பறக்கின்ற
காக்கையினாலும் கலைத்துவிட
முடியவில்லை
ஓவியத்துள் கரைந்துவிட்ட
கிழமனதை.

பசித்தழும் குழந்தையின்
கண்ணீர்த்துளியில்
தெரிந்தது ஓவியத்தின்
நேர்த்தியும் கிழவனின்
ரசனையும்...

ஓவியத்தின் மீது
ஒற்றை ரூபாய் எறிகையில்
கரம் நடுங்கியதைக் கண்டு
அழுகை நிறுத்தி
ஏளனப் புன்னகை சிந்தியது
அக்குழந்தை.

Friday, August 01, 2008

க(வி)தை போட்டிக்கு தேர்வு

தோழமைகளுக்கு வணக்கம்.

உலக தமிழ் மக்கள் அரங்கம் நடத்தும் சிறப்புக் கவியரங்கம் கவிதைப்போட்டிக்கு சில நாட்கள் முன்பு கவிதை
அனுப்பியிருந்தேன். என் கவிதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மடல் வந்திருக்கிறது. இறைவனுக்கும், தமிழுக்கும், எப்போதும் என்னை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும்/என் குடும்பத்தாருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

மேலும்,

பெண்ணே நீ மாத(ர்) இதழ் நடத்திய சிறுகதை போட்டிக்கு என்னுடைய சிறுகதையை அனுப்பி இருந்தேன். மொத்தம் போட்டிக்கு அனுப்பப்பட்ட கதைகள் 639. அதில் கடைசி கட்ட தேர்வுக்கு 23 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அதில் என் கதையும் ஒன்று என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
(அடுத்த மாத இதழில் வெற்றி பெற்ற முதல் மூன்று போட்டியாளர்கள் யார் என்பது தெரியும்.)

Tuesday, July 29, 2008

விரல்கள்..


மெல்ல என்னை நோக்கி

நீண்டன‌ விரல்கள்

சொல்லமுடியாத வலிகளை

வார்த்தைகளாக்க முயன்று

தோற்றன‌ இதழ்கள்

எதற்கென்று அறியாமல்

விரல் பற்றுகையில்

என் கையோடு வந்தது

தீயின் நாவுகளுக்கு இரையான

அவளது விரல்கள்.

Monday, July 28, 2008

என் கறுப்புத்தங்கத்திற்கு...



1.உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்.

2.அடிபட்டு விழுந்த
பறவையென துடிதுடிக்கிறது
என் சிறகுகள்.
எவ்வித சலனமின்றி
காற்றோடு பயணிக்கிறது
உன் சிறகுகள்.

3.கடும் கோடையிலும்
ஈரமாகத்தானிருக்கிறது
என் தலைமுடி பற்றி
இழுத்தணைத்து நீ
தந்த ஒற்றைமுத்தம்

4.நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.

5.வேட்டை நாயின்
வாயில் சிக்கிய முயலாய்
இரவு என்னைக்
கவ்விக்கொள்கிறது
உதிரமென வடிகிறது
கண்ணீர்.

Friday, July 25, 2008

ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....

"தவிர்த்தலுக்கென்றே ஒரு

பார்வை வைத்திருக்கிறாய்

நீ.

தவிப்பதற்கென்றே ஒரு

இதயம் வைத்திருக்கிறேன்

நான்"

அன்புத் தோழி....

சில நாட்களாய் ...என் இதயத்தின் கரைகளை அரித்துக் கொண்டிருக்கிறது சில பதில்தெரியாத கேள்வி அலைகள்.

விடைக்கு சொந்தக்காரி நீ என்பதால் உனக்கு இந்த மடல். சில நாட்களாக உன்னிடமிருந்து எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அழைத்தபோதும் எந்த பதிலும் இல்லை உன்னிடமிருந்து.

ஒவ்வொரு முறையும் செல்பேசி ஒலிக்கும் போதும் அதில் உன் பெயரைத் தேடி தேடி களைத்து போய் விட்டது விழிகள் இரண்டும். இனியும் நீ என்னை அழைப்பாய் என்கிற நம்பிக்கையும் நசிந்து போனது. எனக்கென்னவோ நீ என்னை தவிர்ப்பதாய் படுகிறது. ஆனால் காரணம் மட்டும் இப்போதும் புரியவில்லை. தவறாக எதுவும் நான் பேசிவிடவில்லையே. பின் ஏன் இப்படி?? தவறாக பேசினாலும் தவிர்ப்பது நட்பிற்கு அழகில்லையே. பல சமயங்களில், நண்பர்களுக்குள் கருத்துவேறுபாடு வரலாம் தோழி... ஆனால் நட்பில் வேறுபாடு வரலாமா? எண்ணங்கள் மாறுபடும்...உணர்வுகள் மாறுபடும்...ரசனைகள் மாறுபடும்...
என்றும் மாறாமல் இருப்பது அன்பும் நட்பும் மட்டும்தானே. உன் மெளனம் என்னைக் காயப்படுத்துகிறது தோழி. அதே சமயம் நிறைய யோசிக்கவும் வைக்கிறது. உன்னிடம் என் வலி,சோகம்,சந்தோசம்,நட்பு,என் முறிந்த காதல் எல்லாம் பகிர்ந்து கொண்டேனே...
எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை???


உலகில் கொடுமையான விசயங்களில் முதல் மூன்று என்ன தெரியுமா?
1. நட்புக்குள் பொய்.
2.காதலுக்குள் பிரிவு.
3.எதற்காக தவிர்க்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தவிப்பது.


இப்போது இந்த மூன்றாவது துன்பத்தை அனுபவிக்கிறேன் உன்னால். அதுவும் மூன்றாவது முறை. முதல் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு நம் புரிதலில். இரண்டாம் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு உன் புரிதலில். மூன்றாம் முறையும் என்னை நீ தவிர்க்கிறாய் தவறு நம் நட்பில்.... இதை சரியாக்க வழி நம் பிரிதலில்... அப்படி எதுவும் நடக்ககூடாது என்று வேண்டுதலில் கழிகிறது என் நிம்மதியில்லா நிமிடங்கள்...

நான் உடைந்து போகும் போதெல்லாம் உன் நட்பான வார்த்தைகள்தான் என்னை ஒன்று
சேர்க்கும். தவறவிட்ட கண்ணாடியாய் இப்போது உடைந்து கிடக்கிறேன் நீயோ அதில் உன் முகம் கூட பார்க்காமல் திரும்பி நிற்கிறாய். என்னையே என்னால் நம்பமுடியவில்லையே.... உனக்குள் இப்படியும் ஒரு முகமா?? உன் கோபத்தைக்கூட ரசித்திருக்கிறேன் உனக்கே தெரியாமல் பல முறை. ஆனால் தெரிந்தே வெறுக்கிறேன் உனது தவிர்ப்பை. என் ஒவ்வொரு கவிதைக்கும் நீயே முதல் வாசகி. இனி யாரிடம் சென்று என் கவிதைகளைக் காண்பிப்பது? அப்படி காண்பித்தாலும்தான் என்னவாகிவிடப்போகிறது???


கவிதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அவர்களது வாசிப்பின் வலி தாங்காமலேயே
வாடிப்போகுமே என் கவிதையும். என் காதலியை விடவும் உயர்ந்தவள் நீதான் என்றேன் ஒரு நாள். அதெப்படி என்றாய் அழகாய் புருவங்கள் உயர்த்தி. என் காதலி காதலை மட்டும்தான் கற்றுத்தந்தாள். அது அவளது சுயநலத்திற்காக.... நானும் கற்றுக் கொண்டேன் அது என்
சுயநலத்திற்காக... அதுதவறில்லை... ஒவ்வொரு காதலுக்குள்ளும் சுயநலம் உண்டு. அது காதலின் சிறப்பு.

ஆனால் நீ எனக்கு நட்பின் முழு அர்த்தத்தையும் புரிய வைத்தவள்.... எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி... சுயநலமின்றி.... சொல்லப்போனால் நீ என் நட்பைக்கூட எதிர்பார்க்காமல்... என் மீது
நட்பு மழையை பொழிந்தவள். மழையை எப்படி சுயநலம் என்பது அது பொதுநலமல்லவா என்றேன். சாரல்களாய் சிரித்தாய் நட்புத்துளிகள் என்னை நனைத்தன அன்று. புரிந்து கொள்ளாமல் சிலர் புண்படுத்தும்போது மருந்தாய் இருந்தது உன் மயிலிறகு வார்த்தைகள் மட்டும்தான். இப்போது உன் மெளனம்தான் என் நட்பென்னும் பூவை கிள்ளி எறியப்பார்க்கிறது.


ஏதாவது பேசினால் தவறாகிவிடுமோ என்கிற பயம் இல்லாமல் நான் பேசுவது தோழி உன்னிடம்தான். உன் அம்மாவிடம் நீ என்னை அறிமுகப்படுத்தியது உனக்கு
நினைவிருக்கிறதா தோழி? வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவனை அதட்டி
கூட்டிச் சென்றாய் உன் வீட்டிற்கு...

"அம்மா பாரும்மா என் பிரண்ட் வந்திருக்கான்" என்றதும் சமயலறையில் இருந்து வெளிப்பட்ட உன் அம்மா..
வாப்பா எப்படிப்பா இருக்க....வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே...
இந்த அம்மாவை பார்க்க இஷ்டமில்லையாப்பா என்றார்கள். சட்டென்று விழியோரம் ஈரமாகிப்போனது எனக்கு. ஆண்-பெண் நட்பென்றாலே சந்தேகப் பார்வை பார்க்கும் சமுதாயத்தில் உன் அம்மா எனக்கு தெய்வமாய் தெரிந்தார்கள்.. அடுத்த நாள் நீ வந்ததும் என்னிடம் கேட்டாய். "ஏன்டா நேத்து எங்க வீட்ல உன் கண்ணுல கண்ணீர் வந்துச்சு?"
"அடிப்பாவி பாத்துட்டியா. அது வந்து... ஆனந்த கண்ணீர் என்றேன் நான்... சந்தோஷத்தில் கூட உன் கண்கள் அழக்கூடாது என்றாய். இப்போது கவலையில்கூட என் கண்கள் அழாமல்தான் இருக்கிறது. ஆனால் என் இதயம்தான் அழுது அழுது இதயம்சிவக்கிறது. என்னை விட அதிகம் உன்னிடம் நட்பாய் இருந்தது என் இதயம்தானே…


பூங்காவில் நாம் அமர்ந்திருக்கும் அந்த வேலியோர மூங்கில் மரம் உனக்கு நினைவிருக்கிறதா?
"நான் அதிகம் விரும்புவது இசைதரும் புல்லாங்குழலின் தாய் இந்த மூங்கில்
மரத்தைதான்" என்று அடிக்கடி சொல்வாய். இனி அதுவும் உன்னைப் போல் ஊமை புல்லாங்குழலைத்தான் தருமோ? வாழ்க்கை எவ்வளவு விசித்திரமாய் இருக்கிறது!
பிரிவின் வலியை உணர்த்துபவள் காதலி என்பது தெரியும். தவிர்ப்பின் வலியை உணர்த்துபவள் தோழியோ? எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினாய். மொழியுடன் நட்பானேன். எனக்கு கவிதைகளை அறிமுகப்படுத்தினாய். விருட்சமாக வளர ஆரம்பித்தேன்.
எனக்கு தூயநட்பினை அறிமுகப்படுத்தினாய். நண்பனாக தோள் தந்தேன். இப்போது தவிர்ப்பை அறிமுகப்படுத்துகிறாயே... நான் என்னவாக போகிறேன்? என்னதான் என்னிடம் நீ பேச மறுத்தாலும்... ஒருவகையில் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது தோழி....
எனக்கு வைராக்கியத்தின் வைர வலிமையையும் அறிமுகப்படுத்திவிட்டாயே!


இனியும் நீ என்னிடம் பேசுவாய் என்கிற கடைசிச்சொட்டு நம்பிக்கையும் ஏழை வீட்டு சோற்றுப்பானையாய் காலியாகிப் போனது. ரிக்சா மிதிப்பவனின் இறுகிய கால்தசைகளாய் இறுகிப்போனது என் மெல்லிய இதயம். என்றாவது எங்காவது உன்னை நான் சந்திக்க நேர்ந்தால். ஊமையான என் புல்லாங்குழலிலும் இசை பிறக்கும்... அதுவும் எனக்குள் இருக்கும் உன்னைப் பற்றித்தான் பாடும். அந்த நட்பின் பாடலிலாவது உன் கல்நெஞ்சும் கரையுமா?

நீ முறித்த சிறகுகளுடன்....
நீ தவிர்த்தாலும் உன்
நட்பைத் தேடும்
உன் தோழன்,


-நிலாரசிகன்

Wednesday, July 23, 2008

மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்

வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..!

- கவிஞர். க. அம்சப்ரியா

மரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள்.

சமூகப் பிரச்சனைகளை மையம் கொண்டிருந்த கவிதை நகர்ந்து வாழ்வியல் சிடுக்குகளையும், மனப் பிறழ்வுகளையும், அதீத கற்பனைச் சொற்களையும் ஏந்திக் கொண்டு பயணப்படத் துவங்கியது. துவக்க கால எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளே கூட நவீனத்துவத்தின் கெட்டித்த தன்மையுடன் வரத் துவங்கிய பின் காதலின் மிக மென்மையான அனுபவங்களை பதிவு செய்கிற கவிதைகள் வாசகத்தளத்தில் விரும்பத்தகாத இறக்கத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம், அல்லது அப்படியான கவிதைகளை இன்னும் வாசித்துக் கொண்டிருப்பது வாசிப்பு முதிர்ச்சியின் மீது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது எனலாம்.

இந்தக் கவிதை விமர்சனக் களேபரங்களிடையில் காதல் கவிதைகளை சுமந்து கொண்டு புதிய தொகுப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொகுப்புகள் மிக எளிதில் தோல்வியை அடைவதற்கான காரணம் பொய்யான கற்பனையைக் கொண்டு போலித்தனமாய் உருகி வழிவது தான் என்றால் மிகையாகாது.

இப்போதைய காதல்கள் உண்மையில் கவிதையை ரசித்துக் கொண்டோ, மென் அனுபவங்களின் மயிலிறகால் வருடிக் கொண்டோ இல்லை. வணிக ஊடகங்களின் அபத்தக் கற்பிதங்களால் உடல் சார்ந்த வேட்கைக்கு காதல் என்று பெயர் சூட்டி வீணாகிக் கொண்டிருக்கிற யுகம் இது. காதல் மிக அளிதில் கடந்து விடுகிற வாலிபக் கிளர்ச்சியாகி அவரவர் வேலையை இனி அவரவர் பார்க்கப் போகலாம் என்கிற ரீதியில் இளமையாளர்கள் தயாராகிவிட்ட பின் இந்தக் கவிதைகள் யாருக்குத்தான் எழுதப்படுகிறது?

எப்போதும் போல் தான் கவியுள்ளம் அதைப்பற்றியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்கிறது...?

இதோ அப்படியான ஒரு இளம் கவிஞனின் மயிலிறகால் எழுதிய வண்ணக் கவிதைகளின் தொகுப்பு காதலை துளிர்க்கச் செய்யும்படியாக வந்திருக்கிறது.

மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிற்குப் பின் சில ஹைக்கூ தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பேசப்படுகிற அளவுக்கு வெளிவந்த தொகுப்புகள் ஒன்றிரண்டு தான் . பொன்.சுதாவின் "கவிதையல்ல காதல்". அதற்குப் பிறகு தபூ.சங்கரின் பல தொகுப்புகள். தபூ.சங்கரின் காதல் கவிதைகளின் விற்பனைக்குக் கூட வண்ண மயமான அட்டைப்படங்களும், உள்ளே அட்டைப்படங்களுக்கு நிகரான வளவளப்பான அழகிய பெண்களின் உருவங்கள் தேவைப்படுகிறது. காதலை வெளிப்படுத்துகிற வரிகள் மட்டுமே தொகுப்பிற்குப் போதுமானதாக இல்லை.

நிலாரசிகனின் "மயிலிறகாய் ஒரு காதல்" புதுவரவு. இத்தொகுப்பில் மொத்தம் ஐம்பத்தியொரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் இலைகளை உதிர்த்து விட்டு பூக்களை மட்டும் ஏந்தி நிற்கிற 'மே பிளவர்' மரங்களைப் போல பொய்ம்மையை உதிர்த்து விட்டு காதலை மட்டுமே இவைகள் பூத்திருக்கின்றது.

ஒரு பெண்ணை நேசிக்கிற போது தான் காதல் கவிதை வசப்படும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை. இந்த இயற்கையை, மக்களை, சுற்றுப்புறத்தை நேசிக்கத் தெரியாத ஒருவனால் ஒரு பெண்ணை போலித்தனமற்ற பிரியத்தால் ஒரு போதும் நேசிக்க இயலாது. அப்படியெல்லாம் கிடையாது என்றால் அவனுக்குள் ஒரு பொய் உட்கார்ந்து கண் சிமிட்டுகிறது என்று பொருள். இப்படிச் சொல்லக் காரணமிருக்கிறது. இந்தத் தொகுப்பு 'இன்னும் அறிமுகமாகாத என்னவளுக்கு..' என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் இப்படியொரு கவிதை வருகிறது.

கன்னம் சிவக்க

சிவக்க முத்தமிட்டுவிட்டு

போதுமாடா

என்பேன்..

அழகானதொரு வெட்கத்தினால்

முகம் திருப்பிக் கொள்வாய்.

ஆண் வெட்கம் அழகில்லை

என்று யார் சொன்னது..?


ஆண்களின் வெட்கத்தைப் பதிவு செய்திருக்கிற இந்தக் கவிதையின் பொருள் கவிஞரின் அரிய கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.

தொழில் மயமாகிவிட்ட உலகில் ஆண்களும் பெண்களும் இயல்பாக பழக வேண்டிய தருணத்தில், எதைத் தோழமை என்று அனுமதிப்பது? யாரை காதல் என்ற வட்டத்திற்குள் அனுமதிப்பது? என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது காதலையா? நட்பையா? அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.

ஆரத்தி எடுக்காமல்

ஆச்சர்யப் பார்வை

பார்க்கிற உன்

அம்மாவிடம் சொல்லி வை

இவள் தோழி அல்ல என்

மனைவியாகப் போகிறவள் என்று..!

பெரும்பாலான கவிதைகள் பெண்ணின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விரசமற்ற அன்பின் ஏக்கமாக குழைந்து, நெக்குருகி இக்கவிதைகள் பூத்துள்ளன.

இத்தொகுப்பில் முழுக்க முழுக்க காதல் கவிதை தான் எனினும் அலங்காரத்திற்காகவும் அழகுக்காகவும் அகலமான மண் பாத்திரத்தில் பூக்கள் தூவி தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும். தண்ணீர் அழகாகி, பூக்களை அழகுபடுத்துகிறதா? பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா? இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா? என்று ரசனைக்குறியவர்களுக்குத் தோன்றும். மிதக்கும் பூக்களைப் போல அ முதல் ஃ வரை என்று பதிவு செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் மிளிர்கின்றன.

நல்லதோர் வீணை

செய்தே அதை

நலங்கெட புழுதியில்

எறிவதுண்டோ..?

செருப்பில்லாமல்

நான் நடப்பதை

இப்படி நீ சொன்னால்

செல்லமாய் உன்னை

அடிக்காமல் வேறு

என்ன செய்வேனடா

நான்..?

அரிய உவமைகள், உருவகங்கள் தொகுப்பெங்கும் குவிந்து கிடக்கின்றன.

காய்ந்த பிறகு வாசம்

வீசும் மகிழம்பூவைப் போல்

நீ பிரிந்த பிறகும்

நேசம் வீசும் உன்

நினைவைத் தவிர..!

இந்தக் கவிதை கற்பனை ஓட்டத்தில் ஒரு மென் சிலிர்ப்பு.

நவீன கவிதையில் காதல் பதிவுகள் அரிதாகிக் கொண்டு வருகையில் இம்மாதிரியான காதல் கொகுப்புகள், காதல் கவிதைகளை விரும்பி நேசிக்கிறவர்களுக்கும், காதலின் பரிசாக அளிக்கவும் ஆக மிகச் சிறந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது, "மயிலிறகாய் ஒரு காதல்".

கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.

பொய்களில் காதல் பொய்கள் சுவாரஸ்யமானவை. எளிய வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் காதலையும் காதலிப்பவர்களையும் சிகரத்திற்கு உயர்த்துகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நேர்த்தியான அச்சமைப்பு இந்தக் காதலை மேலும் உயர்த்துகிறது.

தொகுப்பு: மயிலிறகாய் ஒரு காதல் (கவிதை நூல்)

நூலாசிரியர் : நிலாரசிகன்

இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=212001

Friday, July 18, 2008

மென் தமிழ் இணைய இதழ் - ஆடி2008

இனிமையான தோழர்களே,

மென் தமிழ் இணைய இதழை கீழ்கண்ட சுட்டியில் பெற்றுக்கொள்ளலாம்.

http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/files/mentamil_july.pdf

இந்த சுட்டிமூலம் தரவிறக்கம் செய்ய இயலாதவர்கள் எனக்கு தனிமடலிடுங்கள்
(nilaraseegan@gmail.com)

நான்கு கணிப்பொறி மென் பொருளார்களின் சிறு முயற்சி இது.
இந்த சிறிய முயற்சி மேன்மேலும் வளர உங்களது ஆதரவும்,ஆசிகளும்,வாழ்த்துக்களும் தேவை.
இதழின் நிறை/குறைகளை சுட்டிக்காட்டினால் இனிவரும் இதழ்களை மேம்படுத்த உதவியாய் இருக்கும்.




நன்றியுடன்,
மென் தமிழ் ஆசிரியர் குழு சார்பாக,
நிலாரசிகன்.


Friday, July 11, 2008

முத்தக்கவிதைகள் மூன்று

1.மெல்லிதழில் மென்மையாய்

முத்தமிட்டு வெட்கப்புன்னகையுடன்

நெஞ்சில் நீ புதைகின்ற

செளந்தர்யத்தில்,

தூவல் கொண்டெழுதிடும்

கவிதைகள் தோற்றுப்போகின்றன


2. முத்தம் பெற முரண்டுபிடித்து

முடியாமல் உறங்கச்செல்கின்ற

எனக்குத் தெரியும்

உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும்

உன் முத்தவித்தை.


3. இறுக பற்றியிருந்த

விரல்கள் தளர்த்தி

நெற்றிமீது ஒற்றைமுத்தமிட்டு

எனை பிரிந்து செல்கிறாய்.

உன் ப்ரியங்களுடன்

வீடுவருகிறேன்

உயிரின்றி.

சுவடுகளின் நர்த்தனம்…

ஒவ்வொரு சுவடுகளாக

அழித்தபடி

நகர்கின்ற வெப்பக்காற்றின்

வேகம் குறைந்த கணத்தில்

ஆர்ப்பரிக்கும் அலைகள்

அடங்கியிருந்தன.

சிறியதொரு இடைவெளியில்

மீண்டும் கரைகளை அரிக்கத்துவங்கின

அவ்வலைகள்.

அழித்தொழிந்த சுவடுகள் உயிர்ப்பெற்று

நர்த்தனமாடுகின்ற காட்சியை

கண்டுகளிக்க

யன்னலின் வழியே உள்நுழைந்தது

வெண்பிறை.


Thursday, July 10, 2008

புதிய வலைத்தளம்

என் புதிய வலைத்தளத்தின் முகவரி
http://www.nilaraseeganonline.com/

Tuesday, July 08, 2008

ஒற்றைப் பறவை

காற்றைக் கிழித்தபடி

அரை வட்ட நிலையில்

உயரப்பறந்தது

பறவைக்கூட்டம்…

நீண்டு விரிந்திருக்கும்

விசும்பினை தன் சிறிய

இறக்கையினால் அடித்துக்கொண்டே

கூட்டம் தவிர்த்து தனியே

பறந்தது வெள்ளை நிற

பறவையொன்று.

மஞ்சள் வெயில்

படர்ந்த மரத்தின் கிளையிலமர்ந்து

மேலெழும்பிய அதன்

நீண்ட அலகில்

நெளிந்து கொண்டிருந்த

அரவத்தின் செங்குருதி காற்றில்

கலக்கையில் பிற பறவைகளுடன்

சேர்ந்து மறைந்தது அப்பறவை.

Monday, June 30, 2008

பைத்தியக்காரி

விண்ணிலிருந்து
இறங்கி கோதுமை நிற பாதங்களால்
வீதியெங்கும் ஓடி ஆடும் தேவதையாக..

கருமை நிற
இருளை முத்தமிடும் மின்மினிகளின்
பின்னால் ஓடுகின்ற சிறுமியாக..

ஊரறிய சரடுகட்டிய துணைவன்
பரிசளித்த முத்தங்களின்
ஈரத்தை வருடுகின்ற மனைவியாக...


கிழிந்து தொங்கும்
ஆடைகள் பற்றிய கவனிப்புகளின்றி
ஒவ்வொரு பேருந்தின்
சன்னலுக்கும் தட்டை உயர்த்திப் பிடிக்கும்
அவளின்
உறக்கத்தில் இவர்களையொத்த
ஆயிரம் கனவுகள் குறும்புன்னகையாய்
மலர்கிறது

Thursday, June 12, 2008

கணிப்பொறியாளர்கள் கவனத்திற்கு : மென்தமிழ் இணைய இதழ்



தோழன்மீர்,

வாசிப்பு மட்டுமே நம்மை சுற்றி இருக்கும் உலகினை நேசிப்புக்கு உள்ளாக்கும். வாசிப்பு மட்டுமே உலகின் பிரம்மாண்டங்களையும், அழகினையும், அழகியலையும், வாழ்வையும், வலிகளையும் நமக்கு விரிவாக எடுத்துரைக்கும். மாறி வரும் வேகமான சூழ்நிலைகளில் வாசிப்பு குறைந்து வருகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை. கணிப்பொறி சார்ந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் வாசிப்பதற்கு நேரம் மிகக்குறைவு.



கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்


இந்த சூழலில் நண்பர்கள் சிலரின் யோசனையில் புதிதாய் உருவெடுக்கின்றது ஒரு மென்னிதழ்.

பெயர் : மென்தமிழ்


உள்ளடக்கம்: சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல், புதிய வடிவங்கள்
வடிவம் : PDF கோப்புகளாக வெளிவரும்.

மென்னிதழ் இணைய இதழாக மட்டும் வெளிவரும்.

படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கணிப்பொறி சம்பந்தமான படைப்புகள் மட்டுமல்ல. எந்த படைப்புகளையும் அனுப்பலாம் . கணிப்பொறி உபயோகிக்கும் அல்லது இணையத்தில் உலாவரும் அனைவருமே இதில் அடக்கம்.


படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி :
mentamil@gmail.com


படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் :
30/06/2008

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மென்தமிழ் வெளிவரும்.



வாசகர்கள் ஒரு மடலிட்டால் மென் தமிழின் ஒவ்வொரு இதழும் தங்கள் அஞ்சல் பெட்டிக்கே வந்து சேரும்.

வாருங்கள் நாம் கை கோர்த்து ஓரு புதிய பொலிவான உலகினை படைப்போம்.

நம்பிக்கையுடன்,


- மென் தமிழ் ஆசிரியர் குழு
(நிலாரசிகன், விழியன், ரசிகவ் ஞானியார், அஸ்ஸாம் சிவா)

இதைப்பற்றிய தொடுப்புகள்:

http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html

http://vizhiyan.wordpress.com/2008/06/11/mentamil-magazine/

http://srishiv.blogspot.com/


Wednesday, June 11, 2008

சிலந்திகள்..

எப்பொழுதும் இல்லாத
பொழுதில் புலப்பட்டன
சில சிலந்திகள்...

வலையில் சிக்கிய
பூச்சியொன்றை தின்றபடி
சகிக்க இயலாத
சிரிப்பொலிகளை ஏற்படுத்தி
நடனமாடி மறைந்தன..

இரவில் தொலைத்ததை
பகலில் மீட்டெடுக்காமல்
அமிலம் வீசுகின்ற
இவர்களைவிட
சிலந்திகளின் பற்கள்
கூர்மையானவை அல்ல.

Tuesday, June 10, 2008

நேயாவில் என் சிறுகதை

நண்பர்களே,
நேயா பெண்கள் மாத இதழின் ஜூன் மாத பதிப்பில்
என்னுடைய சிறுகதை வெளியாகி இருக்கிறது என்பதை
மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Monday, June 02, 2008

நீ, நான், காதல்...(குறுந்தொடர்)



3.ஊடல்காலம்:

அவன்:


வண்ணம்கொண்ட மேகமே!
நீ கோபம் கொண்ட
காரணத்தால்,
வானவில்கூட
கறுப்புவெள்ளையாகிப் போனதடி!

அவள்:

சில்லென்ற மழையால்
என்னுள்ளம் நனைத்தவன்
சொல்லொன்று தவறியதால்
சில்லுச் சில்லாய்போனதடா என்
இதயம்.

அவன்:

பார்த்தும் பார்க்காமல்
விறுவிறுவென்று என்னைக்
கடந்து போய்விட்டாய்..
தவிப்பைக் கற்றுத்தந்த
காதல் இன்று
தவிர்த்தலையும்
கற்றுத் தந்ததடி!

அவள்:

உன்னைப் பார்த்துவிட்டு
பார்க்காததுபோல்
கடந்து வந்துவிட்டேன்.
உன்னைக் கடந்தபோது
ஜெயித்த என் பிடிவாதம்,
கடந்துவிட்டபின் தோற்றுப்
போய் யாருமறியாமல்
விசும்ப ஆரம்பிக்கிறது.

அவன்:

கோபத்தில் சொல்லக்கூடாத
வார்த்தையொன்றை
சொன்னதற்காக என்
கன்னத்தில் நீ அடித்திருக்கலாம்.
காயத்துடன் முடிந்திருக்கும்.
இதயத்தில் அடிக்கிறாய்,
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.

அவள்:

சீதாயணம் பாடிய
இதழ்களால்
ஏன்
சீதையை துளைத்தன
ராமனின் சொல்லம்புகள்?

அவன்:


மரணதண்டனையை
விட கொடியது
காதலி
உன் மெளனதண்டனை.

அவள்:

அழுகின்ற கண்களிடம்
சொல்லிவிட்டேன்
அவனுக்காக அழவேண்டாமென்று.
கண்களின் அழுகை நின்றபின்பும்
கேட்கிறது இதயத்தின்
விசும்பல்சப்தம்...

அவன்:

மன்னித்துவிட்டு மலரென
மலர்ந்துவிடுவாய் என்றெண்ணியே
மலர்கின்றன என் காலைப்பொழுதுகள்.
சுடுகின்ற நிலவின்பார்வையில்
சருகாகி வீழ்கின்றன என்
மாலைப்பொழுதுகள்.

அவள்:

நிலவும் சுடுமென்று
நீயும் உணரவேண்டும்;
சித்திரப்பாவை என்
சுயமும் நீ உணரவேண்டும்;
மன்னித்துவிட்டேன் உன்னை,
மலராகி உன் மடியில்
விழுகிறேன் ஓடோடிவா!

4.பிரிவுக்காலம்

(தொடரும்)

Friday, May 30, 2008

ஐ.பி.எல் கிரிக்கெட் - அரையிறுதி போட்டிகள் ஒரு அலசல்


சென்னை சூப்பர் கிங்ஸ்:

தட்டுத்தடுமாறி அரை இறுதி போட்டிக்குள் நுழைந்திருக்கும் அணி. இவர்களுக்கு பதில் மும்பை வந்திருக்கலாமே என்று அனைவரையும் வெறுப்புடன் முணுமுணுக்க வைத்தனர் சென்னை வீரர்கள். பெங்களூரிடம் பெற்ற மோசமான தோல்வி,ராஜஸ்தானிடம் போராடி தோல்வி என தொடர்ச்சியான தோல்விகளில் துவண்டிருந்த
அணி,டெக்கான் சார்ஜர்ஸை வென்ற ஒரே நம்பிக்கையுடன் அரையிறுதிக்குள் காலடி எடுத்துவைக்கிறது.

அரையிறுதியில் பலம்வாய்ந்த பஞ்சாப் அணியுடன் மோதவேண்டும். லீக் ஆட்டங்களில் இருமுறை சென்னையிடம் தோற்றதால் இம்முறை பதிலடி கொடுக்க காத்திருக்கிறது யுவராஜ் அணி.

பலம்:

வெற்றியோ தோல்வியோ எதற்கும் கவலையில்லை என்கிற கேப்டன் கூல் தோனி.
பந்துவீச்சு,பேட்டிங் இரண்டிலும் கலக்கும் மார்கல்.
பீல்டிங்,பேட்டிங் இரண்டிலும் அசத்தும் ரெய்னா.

பலவீனம்:

நிட்னி,பாலாஜி என இருவீரர்கள் "ஹாட்ரிக்" சாதனை செய்தும் அணியின் பந்துவீச்சு சரியில்லை.
கோனியை தவிர மற்றவர்களின் பந்துவீச்சு சிறப்பாக எடுபடவில்லை.
பிளம்மிங்,பட்டீல் சிறந்த தொடக்கம் தருவதில்லை.(ஒரு சில போட்டிகளை தவிர்த்து)

வெற்றி வாய்ப்பு: 50%.

தில்லி டேர்டெவில்ஸ்:

குறைவான புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்தாலும் பலம் வாய்ந்த அணிகளில் இதுவும் ஒன்று.
லீக் போட்டிகளில் ராஜஸ்தானிடம் ஒருவெற்றி ஒரு தோல்வி.
ராஜஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.சோஹித் தன்வீர்,ஷான் வார்னே ஆகியோரின் பந்துவீச்சை சமாளித்து ரன்களை குவித்தால் இறுதிபோட்டிக்குள் நுழையலாம்.

பலம்:

அதிரடி சேவாக்,ரன்மெஷின் காம்பீர்,சிறந்த பந்துவீச்சாளர் மெக்ராத் மற்றும் இளம்வீரர் தவானின் பேட்டிங் & பீல்டிங்.

பலவீனம்:


டீவில்லியர்ஸ்,மாலிக்கின் சொதப்பலான பேட்டிங்கால் முதல் மூன்று வீரர்களை மட்டுமே நம்பியிருக்கிறது.

வெற்றி வாய்ப்பு: 40%

கிங்ஸ் XI பஞ்சாப்:

கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை ஓட ஓட விரட்டி அடித்து கம்பீரமாக வலம் வரும் அணி.
ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற துடிக்கும் இளம் அணி. சென்னையை பழிதீர்க்க பசியுடன் காத்திருக்கிறார் யுவராஜ். ஆரஞ்சு தொப்பியை காம்பீரிடமிருந்து தட்டிப்பறித்த மார்ஷ் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். ராஜஸ்தானுக்கு எதிராக சதமடித்த திருப்தியில் அரையிறுதிக்குள் நுழைகிறார்.

பலம்:

மார்ஷ்,ஹோப்ஸ்,யுவராஜ்,சங்காக்கரா,ஜெயவர்தனே என்று பலம்பொருந்திய பேட்டிங் ஆர்டர்.
ஸ்ரீசாந்த்,பதான்,சாவ்லா என்று பலம்பொருந்திய பவுலிங்.

பலவீனம்:

Over confidence & வி.ஆர்.வி சிங்

வெற்றி வாய்ப்பு: 90%

ராஜஸ்தான் ராயல்ஸ்:

இந்த ஐ.பி.எல் போட்டிகளின் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய அணி.முதல் லீக் போட்டியில் தோற்றபோது யாரும் நினைக்கவில்லை இந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெறுமென்று. வார்னேயின் சிறப்பான கேப்டன்சியில் வீறு நடை போடுகிறது. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல வார்னே செய்கின்ற புதுப்புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைத்திருக்கிறது. ஐ.பி.எல் கோப்பையை நெருங்குகிறார்கள் ராயல்ஸ் அணியினர்.

பலம்:

வார்னே,யூசூப் பதான்,ஸ்மித்,தன்வீர்,வாட்சன் (கிட்டதட்ட மொத்த அணியும்:)

பலவீனம்:

சிறப்பான தொடக்கத்தை ஸ்மித் தர தவறினால் நிறைய ரன்களை குவிக்குமா என்பது சந்தேகமே.

வெற்றி வாய்ப்பு: 95%


சென்னை அணி வெற்றி பெற என் வாழ்த்துக்கள் :)

Friday, May 23, 2008

குறுங்கவிதைகள் - பாகம் -5



1.குழாயடி சண்டை
தாகத்தில் தவித்தன
வரிசைக் குடங்கள்.

2.கிராமத்து வீட்டின்
நீரில்லா கிணற்றுக்குள்
தளும்புகிறது
பால்யத்தில் தொலைத்த
பந்துகளின் நினைவுகள்.

3.கல்நெஞ்சு மாமியார்
கண்ணீர் வடிக்கிறாள்
நெடுந்தொடருக்கு நன்றி.

4.தூண்டில்புழுவுக்காக அழுதது
மனம்
மீனைச் சுவைத்தபடி.

5.கொளுத்தும் வெயிலில்
விளையாடுகிறது நிலா
குழந்தையுருவில்.

6.உதிர்கின்ற பூக்களை
நிழல்கொண்டு தாங்குகிறது
மரம்.

7.இலவச தண்ணீர்பந்தலில்
விற்றுக்கொண்டிருந்தார்கள்
கட்சியை.