Wednesday, December 03, 2014

இணையத்தில் என் நூல்கள் வாங்க:





யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்- சிறுகதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=29&cat=Books
வெயில் தின்ற மழை - கவிதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=28&cat=Recently%20Sold
கடலில் வசிக்கும் பறவை - கவிதைகள்
http://puthakam.com/catergoryDetails.php?catergory=&id=&p_id=11&cat=Other%20books%20of%20the%20author

Thursday, November 27, 2014

14 கவிதைகள்


பட்டன்களை சபிப்பவன்

ஒரு அவசரத்தில் பட்டன்களை
இலகுவாக கழற்றி விடமுடிவதில்லை.
நிறைய பட்டன்களை கொண்டிருக்கும்
சட்டையை ஏன் அனைவரும் விரும்புகிறார்கள்
என்றும் அவனுக்கு புரியவில்லை.
சில நேரம் இருளில் சிதறி ஓடுவிடுகின்ற 
பட்டன்களை தேடி எடுக்க 
மங்கிய பார்வை ஒத்துழைப்பதில்லை.
பனியன்களை கழற்றுவது அவனுக்கு
மிகவும் பிடித்தமான செயல் எனினும்
சட்டைகளே அதிகமாய் அணியப்படுகின்றன‌
என்கிற வருத்தமும் உண்டு.
இப்போதுஅணிந்திருக்கும்
இந்தச் சிறிய சட்டையை கூட‌
அவன் வெறுக்கத்தான் செய்கிறான்.
விபத்தொன்றில்
வீசி எறியப்பட்ட சிறுவனின்
சட்டையை அவசரமாக கழற்றிவிட யத்தனித்ததில்
நிறைய பட்டன்கள் தெறித்து ஓடியது
நினைவுக்கு வர,
பட்டன்களை சபித்தபடி இருளுக்குள்
மறைந்து போகிறான்.




லைட்டா மிக மிக லைட்டா

இன்று என் இரவின் மீது
குருட்டு ஓநாயோ 
இறகு தொலைத்த பட்டாம்பூச்சியோ 
உடையற்ற பைத்தியக்காரியோ
பாழாய்போன பூனைக்குட்டியோ
மயிர் இழந்த நாய்க்குட்டியோ
மண் இல்லா குறுமலைகளோ
சிவந்த இதழ்கள் அல்லது மெய்மறக்கும் முத்தங்களோ
வாதை என்பதை அறியாத வலியோ
அல்லது
வேறெந்த க்ளிஷேவோ
அமர்ந்திருக்கவில்லை.
நல்லவேளையாக
தனிமை என்னும் சொல்லும் இரண்டாக பிளந்து
தனி வேறு
மை வேறாகி வெவ்வேறு திசையில் மறைந்துவிட்டன.
அவ்வளவு என்னும் பாவப்பட்ட சொல்
பின்னிரவு மற்றும் பரிதாபகர அதிகாலை
அனைத்தும் இல்லாமல் ஆகிவிட்டன.
யாருமற்ற இரவு என்பது கூட பழயதாகி
வீட்டின் பின்புறம் ஓடி ஒளிந்துகொண்டது.
இன்று நான் எதைத்தான் எழுதுவது?
மேலுள்ள வரியின் கடைசிச்சொல்லின்
பின்புறம் ஒண்டியிருக்கும் ? குறிகூட
என்னைக் கைவிட்டுவிட்டதால்
எதையும் எழுதிவிடாமல்
யாருக்கும் அனுப்பிவிடாமல்
மறந்தும் துக்கித்துவிடாமல்
சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
இந்த இரவை இரவாக
மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது
காலை மட்டும் "லைட்"ட்டாக ஆட்டிக்கொள்கிறேன்.


நாயின் புராணம்

நாய் என்றவுடன் உனக்கு
பிடித்தமான எந்த நாய் ஞாபகத்திற்கு வருகிறது நண்பா
என்றான் நண்பன்.
எனக்கு நிறைய நாய்கள் ஞாபகத்திற்கு
வந்து குரைத்தன.
குரைப்புச் சத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
பெருநகரின் வீதிகளில் வேலைதேடி
அலைந்தபோது நானொரு பசித்த நாய்.
ஒரு ஆத்மார்த்த நேசிப்பை தேடித்தேடி
கண்டைந்து சுயமழித்து வலியின்
உச்சத்தில் திரிந்த காலத்தில்
நானொரு சுயமற்ற நாய்.
கவிதை நூலை வெளியிட ஒவ்வொரு
பதிப்பகமாய் ஏறி வெளியேறும் கணங்களில்
இருபதாயிரமோ முப்பதாயிரமோ இல்லாத காலத்தில்
நானொரு கழிவிரக்க நாய்.
தோள் மேலேற்றி பல்லக்கில் சுமந்து சென்றவன்
உயரச்சென்றுவிட்டதாய் எண்ணிக்கொண்டு
என்மீது எச்சில் உமிழ்ந்த நாளில்
நானொரு தெரு நாய்.
மாநகரின் பொய்களை அள்ளிப்பருக தெரியாமல்
மனச்சொல் கேட்டு நடக்க முடிவெடுத்த நாளில்
நானொரு பிழைக்கத்தெரியாத நாய்.
தேடித் தேடி வாங்கிய நூல்களும்
இரவை நீளமாக்கி எழுதிய நூல்களும்
லாயக்கற்றதாக உணர்ந்த நாளில்
நானொரு சுயமோக நாய்.
எவன் குடியும் கெடுத்திடாமல்
எவன் உள்ளங்காலையும் நக்கிவிடாமல்
எம்மொழி எம் கவிதை என்று எழுதித்தொலைக்கும்
நானொரு பித்து நாய்.
இத்தனை நாய்களில் எந்த நாயை பிடிக்கும்
என்று சொல்வது?
நான் நகர்ந்த பின் நீ சொல்லப்போகும்
'"இந்த நாய்'"தான் உன்னதத்திலும்
உன்னதமான நாய் என்பேன் நண்பா.


முத்தக் கவிதைகள் ஐந்து
1.
ஒராயிரம் வருடங்களாய்
தேக்கிய காதலை ஒற்றை முத்தத்தில்
என்னுள் பதிக்கிறாய்
இருளுக்குள் விரைகின்றன‌
பெருநகரின் மிகச்சிறிய வாகனங்கள்

2.

முத்தவிதையொன்று உயிர்ப்பிக்கிறது
எண்ணற்ற விருட்சங்களையும்
ஒரு
கையறு கணத்தையும்.

3.

எங்கிருந்தோ வந்த பறவையொன்று
நம் முத்தத்தின் மீது அமர்ந்தது.
அதன் சிறகை உனக்கும்
இறகொன்றை எனக்கும்
தந்துவிட்டு மறைந்தது.
இரண்டையும் துறந்துவிட்டு
மீண்டுமொரு முத்ததினுள்
பறக்கத்துவங்குகிறோம்.
தொலைவில் பறந்துவருகின்றன‌
சிறகுகளற்ற பறவைகள்.

4.

ஒரு பெரும் இழப்பை
ஒரு முத்தத்தில் மீட்டெடுக்கிறேன்.
இழப்புகள் பல்லாயிரம் ஒன்றுசேர்ந்து
என் உடலைச் சுற்றி சுற்றி
மிதக்கின்றன முத்தங்களாய்.

5.
விடைபெறலில் பெறப்படுகின்ற‌
முத்தங்கள் எப்போதும
கண்ணீரின் முத்தவடிவங்களாகி
பரிதவிக்கின்றன.
விடைபெற்று நகர்ந்த பின்
ஓவென்று அழுதபடி உடன் ஓடிவருகின்றன.
கொஞ்ச தூரத்தில் மூச்சிரைத்து
ஓட முடியாமல் நின்றுவிட்டு
களைத்து இதழ்களுக்கு திரும்பிவிடுகின்றன.
எந்தவொரு முத்தத்தையும் எப்போதும்
உடன் எடுத்துச்செல்ல முடிவதில்லை.
உடன் வருவது முத்தமிட்ட
பேரமைதியும் முத்தம்பெற்ற
பேரானந்தத்தின் கணங்கள் மட்டுமே.



குளம் - ஐந்து கவிதைகள்
1.

என் குளம்
நான் கல்லெறிகிறேன்.
குளமாகவும் மாறுகிறேன்.

2.

குளத்து மீனொன்று
துள்ளி கரையில் விழுந்தது.
வீழ்ந்துவிடவில்லை.
சிறுநொடி கழித்து
சிற்றலைகள் வட்டவட்டமாய் கரையொதுங்கின.

3.

ஊர் பிரிந்து வந்து
வெகுகாலமாகிறது.
பெட்டிக்குள் கொண்டுவந்த‌
குளம் மட்டும் வற்றவேயில்லை.

4.

மீனுக்கு வலிக்குமென்று
துடிதுடிக்கிறது மிதவை.
பாவம் தூண்டில்புழு.

5.

குளத்துக்கு தள்ளி
வசிக்கிறது குட்டையொன்று.
குளம் நோக்கிச் செல்லும்
கொலுசுகளை வெறித்தபடி.

ஆடம்பரத்தான்
கால்மேல் கால்போட்டுக்கொண்டு
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறான்
யாரைப்பற்றிய அக்கறையும் அற்றவனின்
இடக்கையில் அலைபேசியும் அதனுள்
முகநூலும் திறந்த நிலையில் இருக்கின்றன.
தூசி படர்ந்திருக்கும் அவனது வாழ்க்கையை
விரும்பியே ஏற்றுக்கொண்டவன்
பின்னிரவில் வெகுநேரம் விழித்திருக்கிறான்.
பகலில் உறங்கும் அவனது
வதனத்தில் எச்சமிட்டு பறக்கின்றன
குருட்டுக்காகங்கள்.
காகங்களிட்ட‌ எச்சங்களை
துடைப்பதற்கு அவனது கனவில் மயிலிறகோடு வருகின்றனர்
அரம்பையர்கள்.
உடலெங்கும் இறக்கைகளை முளைக்கவைத்து
அவர்களோடு பறக்கச் செய்கின்றனர்.
பறத்தலின் சுதந்திரத்தை உயிர் நிரம்ப‌
உணர்கிறவனின் உறக்கத்தை
சப்தங்களால் திறக்கிறார்கள்.
விழித்தவன் எச்சத்தை துடைத்துவிட்டு
திரும்பி படுத்துறங்குகிறான்.
அந்தியில் எழுகின்றவனின் உடைகளெங்கும்
அரம்பையர்களின் வாசம் வீசுகிறது.
ஷவரை திறந்துவிட்டு இளஞ்சூடான நீரில்
பேரானந்தமாய் குளித்து முடித்து
வரவேற்பறையில் வந்தமர்கிறான்.
யாருமற்ற அந்த வீட்டின் வெளியே
ஆடம்பரத்தான் வாழ்ந்த வீடு இதுவென‌
பேசிச் செல்கின்றனர்
முதிர் கன்னிகள் இருவர்.


-நிலாரசிகன்.

Monday, October 27, 2014

பேரன்பில் மலர்ந்திருக்கும் பறவைப்பூ



வெளிப்படுத்த இயலாத பேரன்பை
தன் சிறகில் சுமந்து திரியும் பறவை
உன் தோளில் வந்தமர்கிறது.
அதன் கண்களில் வழிகின்ற அன்பின் துளிகளை
கைகளில் ஏந்திக்கொண்டு
செய்வதறியாது திகைக்கிறாய் நீ.
சுமையின் களைப்பில் உன் மார்புக்கூட்டுக்குள்
விழுந்து உறங்கிவிடுகிறது.
அதன் முதுகை வருடிக்கொண்டே
உன் தோட்டத்தில் ஒரு பூச்செடி
நடுகிறாய்.
விடியலில்,
தோட்டமெங்கும் பூத்துக்கிடக்கின்றன*
பேரன்பின் பறவைப்பூக்களும்
ஒரு பறவை விட்டுச்சென்ற 
பிரபஞ்சமும்.


-நிலாரசிகன்.

Saturday, October 18, 2014

என் புதிய சிறுகதை நூல்


நண்பர்களின் கவனத்திற்கு,
என்னுடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பு ''"ஜூலி யட்சி'" "புத்தகம்'" பதிப்பக வெளியீடாக அடுத்த மாதம் வருகிறது. நண்பர்களின் ஆதரவையும் வாழ்த்தையும் எதிர்நோக்குகிறேன்.

https://www.facebook.com/nilaraseeganonline

நட்புடன்,
நிலாரசிகன்.

Monday, October 06, 2014

மெட்ராஸ் என்றொரு திரைக்காவியம்:


தமிழ் சினிமா பார்ப்பதில்லை உலக சினிமா மட்டுமே விருப்பம் என்று சொல்லித்திரிந்தவர்கள் அனைவரின் முகத்திலும் கடநத இரண்டு மூன்று வருடங்களாக வெளிவரும் பல தமிழ் திரைபடங்கள் கரியை பூசி வருகின்றன. பல திரைப்படங்களை இது அந்த கொரிய திரைப்படத்தின் நகல், அது ஜப்பானிய திரைப்படத்தின் நகல் என்றெல்லாம் பல செய்திகள் வந்தாலும் மிகச்சிறப்பான Genuine தமிழ் திரைப்படங்களும் வெளிவரத்தான் செய்கின்றன. ஒரு கதாநாயகன் அவனை சுற்றும் நாயகி,ஆறு பாடல்கள், எட்டு சண்டைகள், பன்ச் டயலாக் என்கிற மசாலா எல்லாம் மலையேறிக்கொண்டிருக்கிறது. மிக நுட்பமான திரைக்கதைகள்,வித்தியாசமான கதைக்களம்,ஆழமான திரையாக்கம் என்று தமிழ் திரையுலகம் வெகு வேகமாக தன் வேர்களையும் கிளகளையும் பரவலாக பரப்பியபடி முன்னகர்கிறது. உதாரணமாக பல திரைப்படங்களை சொல்லமுடியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,வழக்கு எண்,தெகிடி,ஜிகர்தண்டா,பொறியாளன்,ஜீவா,மெட்ராஸ் என்று நீளும் பட்டியல்(பட்டியல் மிகப்பெரியது என்பதால், நினைவிலிருந்து சில மட்டும் இங்கே) சொல்லி முடியாதது. இது ஆரண்ய காண்டம் என்னும் மிக அற்புதமான திரைப்படத்தின் தொடக்கமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நேற்று மெட்ராஸ் திரைப்படத்தை பார்த்தேன். கதை என்ன என்று யாரேனும் கேட்டால் ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம். சுவர். அவ்வளவுதான். ஆனால் அதைச் சுற்றி நடக்கும் விஷயங்கள்,அரசியல்,நட்பு,காதல்,துரோகம்,பாசமென அனைத்தையும் திரைக்கதையாக்கிய விதத்திற்காகவே இப்படம் அதிகம் என்னை கவர்ந்தது. சென்னையில் வாழ்கின்ற பலருக்குமே சென்னையின் வடபகுதியை பற்றி அதிகம் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். வடசென்னையின் நுட்பமான பல விஷயங்களை மிகச் சிறப்பாக திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களது மொழியை அனைத்து நடிகர்களும் அவ்வளவு இயல்பாக பேச வைத்திருப்பதிலிருந்தே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார்.
கார்த்திக்கு பருத்திவீரனுக்கு பிறகு நடிப்பதற்கு அதிகம் வாய்ப்புள்ள படம் இது. காளியாகவே மாறியிருக்கிறார். வியாசர்பாடியின் காலனி ஒன்றில் நடக்கும் கதை. படம் பார்க்கும் அனைவரையும் வியாசர்பாடியின் அந்த காலனிக்குள் ஒருவராக மாற்றி விடுகிறார் இயக்குனர்.

ஒரு சுவருக்காக மோதிக்கொள்ளும் இரண்டு கோஷ்டிகள். அதனைச் சுற்றி சுழல்கின்ற கதை. அன்பாக நடித்திருக்கும் கலையரசனுக்கு இது மிகப்பெரிய மைல்கல். அன்பு  போலொரு நண்பன் நமக்கு கிடைக்கமாட்டானா என்கிற ஏக்கம் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தொற்றிக்கொள்ளும். காதலுடன் தன் மனைவியிடம் உருகுவதாகட்டும், நெஞ்சை நிமிர்த்தி எதிரிகளிடம் பேசுவதாகட்டும் மனிதர் அசத்தியிருக்கிறார். இடைவேளை நெருங்கும் நேரம் அன்புக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பதைபதைக்க துவங்கிவிடுகிறது மனம்.  அன்பும் மேரியும் தோன்றும் சில நிமிட காட்சிகளில் அவர்கள் இடையேயான இணக்கத்தை ஒரு நிஜ தம்பதி போல உணர்த்திவிடுகிறார்கள்.மேரியாக நடித்திருக்கும் நடிகையின் கண்களில் காதல்,சோகம்,கோபம் என்று அனைத்தையும் காண முடிகிறது. எப்படி இவ்வளவு சிறப்பான கதைநாயகர்களை இயக்குனர் தேர்ந்தெடுத்தார் என்பதே மிகுந்த ஆச்சர்யத்தை தருகிறது.

வடசென்னையின் தமிழில் கார்த்தி சிறப்பாகவே நடித்திருக்கிறார். நண்பனுக்காக மோதுவதிலும்,காதலிக்காக உருகுவதிலும் கவனம் ஈர்க்கிறார். கதாநாயகி ஒரு வடசென்னை காலனி பெண்ணை கண்முன் நிறுத்துகிறார். உள்ளுக்குள் காதலித்துக்கொண்டு வெளிக்காண்பிக்காமல் காளியை கிண்டலடிப்பதும் பின் காளின் சோகம் தீர்க்க அவனுடனிருப்பதிலும் அவரது நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இவருக்கு இது முதல் படம் என்று சொன்னால்தான் தெரியும்.

படத்தில் படீரென்று சிரிக்க வைக்க ஜானி என்றொரு கதாப்பாத்திரம் வருகிறது. இவ்வளவு 'அசால்டாக' ஒரு கனமான ரோலை செய்திருக்கிறார் ஜானியாக நடித்தவர். ஆங்கிலத்தில் பேசுவதாகட்டும் சரியான சமயத்தில் கூர்மையான வசனங்களை உதிர்பதாகட்டும் சபாஷ் ஜானி.  

மேலும் குறிப்பிடத்தகுந்தவை, காளியின் அம்மா,எப்போதும் சோபாவில் உட்கார்ந்திருக்கும் அப்பா, அந்த பாட்டி,மாரி,அவ்வப்போது நடனமிட்டுச்செல்லும் நடன கோஷ்டி, வடசென்னையின் தமிழை அனைவருமே சிறப்பாக பேசியிருப்பது,கானா பாலாவின் நெஞ்சைத்தொடும் பாடல்,சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, முரளியின் ஒளிப்பதிவு, வடசென்னையின் காலனியை நேரில் கொண்டுவந்த செட்கள், எடிட்டிங் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அட்டைக்கத்தி வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அடித்திருக்கும் சிக்ஸர் மெட்ராஸ். ஒடுக்கப்பட்ட குரலின் ஒலியை சுவரொன்றின் மூலமாக திரைச்சித்திரமாக்கியதற்கு அழுத்தமான கைகுலுக்கல். இரண்டாவது படத்திலும் ஜெயித்து தமிழின் மிக முக்கியமான இயக்குனராக மிளிர்கிறார், வாழ்த்துகள்.

குறைகள் என்று ஏதுமில்லையா எனில், இரண்டாம்பாதியில் திரைக்கதையில் சில இடங்களில் காணப்படும் தொய்வு. சுவர் பற்றிய படம்தான் எனினும் முப்பது நாப்பது தடவைக்கு மேல் சுவரைக்காட்டுவது சலிப்பை தரத்தான் செய்கிறது.
மற்றபடி மெட்ராஸ் தமிழ் சினிமாவின் அடுத்த கட்ட நகர்வில் இடம்பிடித்திருக்கும் படங்களில் மிக முக்கியமானது.

-நிலாரசிகன்.

Saturday, January 11, 2014

My Book Release


Thursday, January 09, 2014

என் புதிய கவிதை நூல்

 
நண்பர்களுக்கு,


என்னுடைய மூன்றாவது கவிதை தொகுப்பு “கடலில் வசிக்கும் பறவை” புதுஎழுத்து வெளியீடாக இன்னும் சில தினங்களில் வெளியாகிறது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
கடந்த வாரம் வரையில் இந்நூல் வெளியாவது எனக்கே தெரியாது. கவிதைநூல் கொண்டுவருகின்ற
அகநிலையும் புறநிலையிலும் நானில்லை. எதற்கென்றே தெரியாமல்தானே அனைத்தும் நிகழ்கிறது. இந்த பறவையும் கடலுக்குள்ளிருந்து எனை நோக்கி பறந்து வந்தது கடந்த வெள்ளியன்று காலை எட்டு முப்பந்தைந்து மணிக்கு. இவ்வளவு குறுகிய நாட்களில் இந்த அசாத்திய பறவையை வெளிக்கொண்டு வருவதற்கு கடுமையான பணிச்சூழலுக்கும் நடுவில் அசராமல் உழைத்த/உழைக்கும் மனோன்மணி அவர்களுக்கு கடலை விட மிகப்பெரிய நன்றியும் அன்பும்.
மேலும், நண்பர்கள் வெய்யில்(ஓர் இரவில் அட்டைப்படம் வடிவமைத்த மகாகலைஞன்),அனிதா,சுகுணா,விழியன் அனைவருக்கும் நன்றி எனும் ஒற்றைச் சொல் போதாது.பேரன்பும் நட்பும் மட்டுமே மிச்சமிருக்கிறது என்னிடம். என் பிரார்த்தனைகளுக்கு செவிகொடுத்து வழிநடத்தும் அன்பானவருக்கு லட்சம் முத்தங்கள்.
 
நூல் வெளியீட்டின் புலம் மற்றும் நேரம் விரைவில்..
நட்புடன்,
நிலாரசிகன்.

Wednesday, January 01, 2014

கவிதைகள் பத்து

1.
தனியே ஆடிக்கொண்டிருக்கிறது
ஓர் ஊஞ்சல்.
பின் நின்றது சிறிது நேரம்.
தலைகவிழ்ந்து அழுதுமிருக்கலாம் அல்லது
இளைப்பாறியுமிருக்கலாம்.
தூரத்தில் வந்துகொண்டிருக்கின்றன
ஒரு ஜோடி கால்கள்.

2.
அறைநீங்கும் பொழுதில்
கதவை சாத்திவிட்டு செல்.
திறந்திருக்கும் கதவின் வழியே
நேற்றொரு ஓநாய் நுழைந்தது.
இன்று
மறியொன்று ஊளையிட்டபடியே
வெளியே ஒடுகிறது.

3.
நீங்கள் ஏன் பூனைக்குட்டிகளை
ரசிப்பதேயில்லை.
சப்தமிட்டுக்கொண்டிருக்கிறது என்று
நேற்று அதனை வெளியே வீசினீர்கள்.
இன்று
உங்களது இரைச்சலில் அழுகிறது
வாலொன்றை ஆட்டுகின்ற சிறுமிருகம்.

4.
எப்பொழுதும் முத்தமிட்டுக்கொண்டிருத்தல்
சாத்தியமே இல்லை.
முத்தமென்பது முத்தமாக மட்டுமே
நின் மனதுள் வியாபித்திருந்தால்.
5.
ஒரு மரம்.
அதன் கிளைகளெங்கும்
கிளிகள்.
ஒரு கிளி
அதன் கால்களின் கீழெங்கும்
மரங்கள்.
6.
கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் சிறகின் மேற்புறம்
அமர்ந்து இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.
7.
அந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.
அதன் கிளைகளிலிருந்து கூடொன்று
விழுந்து சிதறியது.
ஒற்றைக்கால் ஒடிந்த பறவைக்குஞ்சு
தத்தி தத்தி புதருக்குள் ஓடுகிறது.
புதருக்கு வெளியே வருகையில்
காகமொன்றின் அலகில்
அது சிக்கியிருக்கிறது.
இனி,
மரக்கன்றுகள் ஆயிரம் நடும்
விழாவில் மலம் கழித்துச் சிரிக்கும்
அக்காகம்.
8.
இரவில் ஒளிரும் கண்களை
மிருகத்திடம் கடன் வாங்கியவன்
அன்றிரவு மாபெரும் மிருகமாகினான்.
அதிகாலைப் படுக்கையில்
களைத்துக்கிடந்தன
மலைபாம்பும் அதனருகே
குருட்டுப்பூனையும்.

9.
அன்றுதான் தனக்கு கால்கள்
இல்லையே என்று வருந்தியது
குளம்.
குளத்திலிருந்து எழுந்து வீடு
நோக்கி நடப்பவர்களின்
நீர்ச்சுவடுகளை பார்த்தபடி.
10.
வார்த்தைகள் தீர்ந்த குளக்கரையில்
அமர்ந்திருக்கிறேன்.
அதன் மெளனத்தோடு
என் மெளனம் எக்காலத்திலும்
உரையாடும்.
- -நிலாரசிகன்.

Happy 2014 friends.