Thursday, July 22, 2010

முன்னொரு காலத்தில் மழை பொழிந்துகொண்டிருந்தது




1.
காயத்தின் ஆழத்தில்
ஒரு முகம் மிதந்து கொண்டிருக்கிறது.
புரிதலின் பிழையால் பிரிந்த
இருநிழல்களின் சாயலுடன்
சலனமின்றி மிதக்கிறது அம்முகம்.
அன்பின் கதவுகள் நிரந்தரமாய்
மூடப்படுகின்றன.
எதிர்பார்ப்புகளற்ற இறைக்குள்
நுழைந்து மெளனிக்கிறது மனம்.
வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.
2.
ஒரு
வனத்தினூடாக
துவங்கியது நம் பயணம்.
விழி இழந்தவனின்
கைகள் பற்றி அழைத்துச் சென்றாய்.
வார்த்தைகளில் ஒளியை
உணர்த்தி மகிழ்ந்தாய்.
ஓர் உன்னதமான அரவணைப்பை
பரிசளித்தாய்.
வனம் முடிந்து வெளியேறுகையில்
ஒளி கொண்ட மழையாகியிருந்தேன்.
பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ.
3.
அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.
-நிலாரசிகன்

Saturday, July 17, 2010

சுயம் கவிதையென்று பொருள் கொள்க



1
உணர்ச்சிகள் உறைந்த பூச்செடியொன்று
உயிர்ப்பில்லாத வெண்ணிற
பூக்களுடன் நின்றாடுகிறது.
சாத்தான்களிடமும் வரம் பெற்றவன்
தேவதையின் முதல் சாபத்தை
பெறுகிறேன்.
விளக்கணைத்து அழுகின்ற
துயரத்தின் வலி நிலவு வரை
நீள்கிறது.
சன்னமான குரலில் என்னுடன்
உரையாட துவங்குகிறாள்
கவிதைப்பெண்.

2.
புறக்கணிப்பின் முட்பாதை
என்னை வந்தடைகிறது.
வழியெங்கும் மரித்து கிடக்கின்றன
சிறகிழந்த பட்டாம்பூச்சிகள்.
ஈர்ப்பின் அர்த்தம் அறியாத
பாதங்களில் மிதிபடுகின்றன
விருப்பங்கள் சில.
சுயத்தின் மரண ஊர்வலத்தில்
பூக்கள் தூவிச் செல்கிறாள்
சிறுமியொருத்தி.
சுயம் கவிதையென்று
பொருள் கொள்க.
3.
வாழ்வின் மிகப்பெரும்
தவறை ஒரு சொல்லாக்கினேன்.
எனது பிம்பத்தை தின்று
தீர்த்த அச்சொல் ஒரு வாக்கியமானது.
உடலெங்கும் படர்ந்த
அவ்வாக்கியம்
ஒரு பொய்யாக உருப்பெற்றது.
இப்போது,
பொய்யின் வடிவத்தாலான
கனவுச்சில்லுகளில்
எனக்கான கடைசி விருப்பங்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.
-நிலாரசிகன்.

Sunday, July 11, 2010

மழை இரவு

 
ழை ருசித்துக்கொண்டிருக்கும்
விசித்திரமான இரவு இது.
ஒவ்வொரு துளியாய்
மழையின் குருதியை பருகி
திளைக்கிறது இரவு.
இரவின் கண்கள் ஓர்
ஒநாயின் குரூரத்தை கொண்டிருக்கின்றன.
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மெளனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மெளனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.
-நிலாரசிகன்.

Thursday, July 01, 2010

நிச்சலன கவிதைகள்




1.
தீராத பெரும்துயர் கரைந்துருகி
நதியென ஓடுகிறது.
கண்ணீரால் சூழந்திருக்கிறது
என் இரவுத்தீவு.
வார்த்தைகள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்து ஊமையாகும் தருணத்தில்
ஒர் உன்னதமான பாடலை
இவ்விரவு இசைக்க ஆரம்பிக்கிறது.
பவித்திரம் வழியும் இந்த இரவுக்குள்
வந்தமர்கின்றன சில ஊனப் பறவைகள்.
2.
இதென்ன பெரிய விஷயமா
என்கிறீர்கள்.
இதிலென்ன அற்புதமிருக்கிறது
என்று பரிகசிக்கிறீர்கள்.
இவ்வளவு முட்டாள்த்தனங்கள்
ஏனென்று வினவுகிறீர்கள்.
என் சின்னஞ்சிறு உலகிற்குள்
சத்தமின்றி பறந்துகொண்டிருக்கின்ற
பட்டாம்பூச்சிகளின் பின்னால் ஓடுகிறேன்
நான்.

3.
இளவேனில் பூக்களால் பின்னப்பட்ட
என் கனவுகளை உனக்கு பரிசளிக்கிறேன்.
மழையின் குதூகலத்துடன் பெற்றுக்கொள்வாய்
என்றிருந்தேன்.
கோடரியுடன் வருகின்ற உன்னைக் கண்டு
மரித்து விழுகின்றன பூக்கள்.
கவிதைகளின் மரணமும்
இப்படித்தான் நிகழ்ந்தது.
மழையை தின்னத்துவங்குகிறது
செங்குருதி வெயில்.
4.
புத்தனுக்கும் உனக்குமிடையே
யுத்தமொன்று நிகழ்கிறது.
முடிவில்
வீழ்கிறது போதிமரம்.
நிச்சலன குளத்தில் கற்களை
எறிந்தபடி அமர்ந்திருக்கிறாய்
உனது வாக்குவாதங்கள் ஒவ்வொன்றாய்
கற்களாக உரு மாறுகிறது.
கொஞ்சம் அழுதுவிட்டு
சிலுவை சுமந்தபடி நடக்கிறாய்
நீ.
5.
கூரிய பற்களின் ஓரங்களில்
என் குருதி படிந்திருக்கிறது.
புசித்த களைப்பில் நிஜம்
உதிர்க்கிறாய்.
காமத்தின் துவக்கப்புள்ளி
பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
சாம்பலென உதிர்கிறேன்.
சர்ப்பவாசம் அறைக்குள் ஊடுருவும்
தருணம்
நேசத்தின் முகமூடி அணிந்து
வெளியேறுகிறாய்,
விஷம் தோய்ந்த வார்த்தைகளை
வீதியெங்கும் சிதறவிட்டபடி.
-நிலாரசிகன்.