1.
காயத்தின் ஆழத்தில்
ஒரு முகம் மிதந்து கொண்டிருக்கிறது.
புரிதலின் பிழையால் பிரிந்த
இருநிழல்களின் சாயலுடன்
சலனமின்றி மிதக்கிறது அம்முகம்.
அன்பின் கதவுகள் நிரந்தரமாய்
மூடப்படுகின்றன.
எதிர்பார்ப்புகளற்ற இறைக்குள்
நுழைந்து மெளனிக்கிறது மனம்.
வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.
2.
ஒரு
வனத்தினூடாக
துவங்கியது நம் பயணம்.
விழி இழந்தவனின்
கைகள் பற்றி அழைத்துச் சென்றாய்.
வார்த்தைகளில் ஒளியை
உணர்த்தி மகிழ்ந்தாய்.
ஓர் உன்னதமான அரவணைப்பை
பரிசளித்தாய்.
வனம் முடிந்து வெளியேறுகையில்
ஒளி கொண்ட மழையாகியிருந்தேன்.
பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ.
3.
அனைத்திற்குமான முடிவுகளை
உன்னிடம் யாசிக்க வேண்டியதாய் இருக்கிறது.
அனைத்திற்குமான விடியலை
இருளிடம் யாசிப்பதை போல்.
-நிலாரசிகன்