Saturday, December 10, 2016

கவிதைகள் ஐந்து



1.கருங்கிளி
கவிதைக்குள் வந்து அமர்ந்திருக்கிறது
கருமை நிறக் கிளி.
அதன் கூரிய அலகால் ஒவ்வொரு சொல்லாய்
கொத்தித் தின்னத் துவங்குகிறது.
கொத்தலுக்கு தப்பித்து சிதறி ஓடுகின்றன‌
சில சொற்கள்.
கவிதைச்சுவர் ஏறி வெளிக்குதித்து தப்பிக்கின்றன‌
சில.
கவிதையின் கடைசி வரியின் மூலையில்
மூச்சிரைக்க மரணத்தை எதிர்நோக்கியபடி
அசைவற்று அமர்ந்திருக்கின்றன
உடல்கிழிந்த கடைசிச் சொற்கள்.
நிசப்தத்துடன் இக்கவிதையை தட்டச்சு செய்பவனை
நீங்கள் கருங்கிளி என்றும்
அழைக்கலாம்.
அந்த கடைசிச் சொற்கள் எனவும்
அணைத்துக்கொள்ளலாம்.

2.மெளனமாய் புகைக்கும் ஓர் அதிர்வு
யாருக்கும் தெரியாமல் ஒரு
பூனை உன்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறது
அதன் அசைவற்ற கண்களால்.
எதற்கென்று புரியாத இரவுகளில்
உன் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
தவளையொன்றின் விசித்திர சப்தம்.
பெரும்கூட்டத்தின் நடுவே எப்பொழுதும்
உன்னைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
நாய் எனப்படும் மிருகத்தின் குள்ள வால்.
ஒரு பார்வையால்
ஒரு சப்தத்தால்
ஒரு குள்ளவால் தொடரலால்
உன்னை கலைத்துப்போட அனுமதிக்கிறாய்.
உனது சிறகிலிருந்து ஒவ்வொரு இறகாக‌
உதிரத்துவங்குகிறது
பூனையாக
தவளையாக
நாயாக
கடைசியில்
புகை கசியும் ஓர் அதிர் பிழைக்கனாவாக.

3.நிழல் துரத்தல்
கடலின் மேல் பறக்கும்
பறவையின் பிம்பம்
நிழல்மீனாகி பறவையை துரத்துகிறது.
பறவைக்கும் மீனுக்குமிடையில்
துள்ளியது மற்றொன்று.
அது கடலில் நீந்தும் மீனின்
பிம்பம்.
நிழல்பறவையாகி மீனை துரத்துகிறது.
நிழல்களின் துரத்தலில்
இரு நிஜங்களும்
ஒரு கடலும் நிசப்தமாகி
உறைகின்றன.
தூரத்தில் எங்கோ ஒரு முதலை
வாய்பிள‌ந்தபடி உறைகடலுக்கும் நிலத்திற்கும்
உடல்நீட்டி படுத்திருக்கிறது.
அதன் வாலிலிருந்து தலைநோக்கி
மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது
சிறு எறும்பு.
வாயில் கெளவ்விய உறைகடலுடனும்
அதன் மிகச்சிறிய நிழலின் துரத்தலுடனும்.

4.இரவென்னும் இலகுப்பூ
எனது பகலுக்குள் நுழைந்துவிடுகின்ற இரவை தடுத்துவிட யத்தனிக்கிறார்கள்
மிகப்பெரிய வனத்திடையே ஊர்ந்து செல்லும் விலங்கின் முதுகில் பட்டுத்தெறிக்கும் வெய்யிலை பின் தொடர்ந்து சென்றால் எதிர்ப்படும் முக்கோண வகை குகைகள்.
நெருக்கத்தில் வரிசையாக அமைந்திருக்கும் அக்குகைகளை கறுப்புநிற சிங்கமொன்று வெகு நாட்களாய் காவல் காத்து வருகிறது. 
அதன் பிடறிக்குள் கூடு கட்டியிருக்கும் பறவை தன் அலகில் பழுப்புநிற மீனை கெளவிக்கொண்டு கூடடைகிறது.
இறந்த மீனின் விரைத்த கண்களின் வழியே பயணித்தால் மிகச்சிறிய குளமும் அதன் நடுவே மிதக்கும் அமலைகளும் தென்படுகின்றன.
பசித்த கணம் குருவி முட்டைகளும் பச்சைக் கிழங்குகளும் உணவாய் மாறி பசியாற்றி முடித்து மிகப்பெரிய வெண்நிற பூவின் மீது விழச்செய்கின்றன.
பேரானந்த உறக்கம் அப்பூவின் மேல் நிகழ்கிறது.
இரவு இவ்வளவையும் தருகிறது ஆனாலும்
சோற்றுப் பருக்கைகளால்
நிறைந்திருக்கும் பகலுக்குள்தான் வாழ்வென்னும் செடி நடப்பட்டிருக்கிறது என்பவர்களின் கூர்நகங்களால் கிழிபட்டபடியே இருக்கிறது இரவென்னும் இலகுப்பூ.

5.மழைக்கடல் எனும் சொல்

ஒரு சொல் போதுமானதாய் 
இருக்கிறது.
மிக கவனமாக தேர்ந்தெடுத்து
மித நிதானத்துடன் கூர்தீட்டப்பட்டு
தொடுக்கப்பட்டது அச்சொல்.
ஆழ்துளைக்குள் விழுந்துவிட்ட
குழந்தையென அழவும் தெரியாமல்
நகரவும் இயலாமல் விக்கித்து
இருளில் அமர்ந்திருக்கின்றன‌ ப்ரியங்கள்.
மழைத்துளிக்குள் அடைபட்ட
பெருங்கடலில் உயிரற்ற மீன்கள்
மிக வேகமாய் நீந்த யத்தனித்து
சொல்லின் கனம் தாளாமல் உயிர்பெற்று
காணாமலாகின்றன.
கடலடியில் அசைகின்ற ஆளுயுர தாவரங்களின்
இலைகளின் அடியில் ஒண்டியிருக்கின்ற
மீன்குஞ்சுகளை தேடிச்சென்று பிய்த்து தின்கிறது
சொல்லின் வெப்பம்.
ஒரு சொல் போதுமானதாய்
இருக்கிறது.
கடலாகி அடைத்து நிற்கும் மழையின் பிறப்புத்துவாரத்தை
மெல்லியதொரு தொடுதலில் திறந்து மூடவும்.
மழைக்குள் கடலை அடைத்துத் துவளவும்.

-நிலாரசிகன்

Saturday, January 09, 2016

கவிதைகள் 5

1.ஒரு நீளமான முத்தம் சப்தமின்றி உறங்குகிறது
ஏழு கோடைகள் கழிந்தபின்
மெல்ல கண்கள் திறந்தது அச்சிறுமழை.
நீண்டதொரு உறக்கத்திலிருந்து எழுந்து
சோம்பல் முறித்தபடி தானுறங்கிய வீட்டை கண்கள் சுழல
பார்த்துக்கொண்டிருந்தது.
பின்,
தன்னுடலின் நலிந்த வனப்பையும்
உடலினுள்ளே படர்ந்திருக்கும் சருகுமுத்தங்களையும்
சற்றுநேரம் கண்டது.
மழையின் இதயம் படபடவென்று துடிக்கத்துவங்கியதும்
அத்துடிப்பினூடே சன்னமாய் ஒலிக்கும்
பாடலொன்றும் அதன் செவிகளில் விழுந்து சிதறியது.
கண்கள் மூடியபடி
மீண்டும் உறங்கத்துவங்கிய மழை
கரைந்து கரைந்து அவ்விடம் விட்டு அகன்றது.
கோடைகள் பல கழிந்தபின்னும்
நம் தோள்மீது வந்து அமரத்தான் செய்கின்றன‌
சிறுமழைகள்.
சப்தமின்றி நினைவுப்பரணில் உறங்கும் முத்தம்போல.
2.அறைப்பறவையின் கடல் பொழுது
மிக வேகமாய் பறந்துவந்து
கண்ணாடி என்பதை அறியாமல்
மோதிச் சரிகிறது ஓர் சிறிய சிட்டுக்குருவி.
யன்னலாக நானிருந்திருந்தால்
உடல்பிளந்து வழிவிட்டிருப்பேன்
அதன் மூளையில் விஞ்சிய அறிவாக‌
வளர்ந்திருந்தால்
தடுப்பென்று உணர்ந்து நகர்ந்து பறந்திருப்பேன்.
அந்திக்குளிருக்கு பயந்து அறைக்குள்
அமர்ந்திருந்து வீழ்ச்சியை
பார்த்திருக்கும் மனிதனாக நானிருப்பதால்
சரிந்து துடிதுடிக்கும் அச்சிறு ஆன்மாவை
மடிக்கிடத்தி மெல்லியதாய் வருடிக்கொடுக்கிறேன்.
ஒவ்வொரு இறகினூடாக என் பிரபஞ்ச பேரன்பின் துகள்கள்
நுழைந்து மினுமினுத்தடங்குகிறது.
வார்த்தைகளற்ற பொழுதின் கனம் ஒலிவடிவமாகி
அச்சிறு பறவையின் இதயத்துடிப்பில் கலந்து அமிழ்கிறது.
ஓயாத சிறகடிப்புச் சப்தத்தால்
என் அறை நிரம்புகிறது
பெருங்கடல் கால்களால்.
3.திறப்பின் கடைசிப் பயணம்

படுக்கை அறைக்குள் அனுமதியின்றி
நுழைந்துவிட்டதொரு பட்டாம்பூச்சி.*
நான் கண்கள் மூடி அமர்ந்திருந்தேன்.
என் உள்வெளிப்பயணத்தின்
முதல் கல்லை கடந்து இரண்டாம் கல்லை
நோக்கி பயணிக்கையில்தான் இப்பூச்சியின் 
வருகை நிகழ்ந்தது.
அது என் தோளில் அமர்ந்துகொண்டு
என்னோடு பயணிக்கத் துவங்குகிறது.
கண்ணாடித்துகள்களால் நிறைந்த பாதையில்
தொடர்ந்தது எங்களது பயணம்.
நீ யாரென்று நான் அதனிடம் கேட்கவில்லை.
நான் யாரென்பது பற்றிய கேள்வியும்
அதனிடமில்லை.
மெளனித்து பயணக்கும் செளந்தர்யத்தில்
லயித்திருந்தோம்.
ஒரே ஒருமுறை கண்கள் திறந்தேன்
முடிவுற்றது பயணம்.

4.கனவென்னும் பேரோடை
நீலநிற நிலவிலிருந்து வட்டவடிவத்தில்
சுருண்டிருக்கும் அணில்கள் விழுகின்றன.
தாய்மீனின் பிரசவ நாளில் வெளியேறும்
மீன்குஞ்சுகளை ஒத்திருந்தது அந்த வீழ்தல்.
சற்று தூரம் பயணித்து பின் நீள்வடிவத்திற்கு
மாறுகின்ற அணில்களின் உடல்களில் இறக்கைகள்
படபடவென அடித்துக்கொள்ள துவங்குகின்றன.
குளிர் போர்த்திய வனத்தின் நடுவே
ஓர் ஒற்றை முள்மரம் நர்த்தனமிடுகிறது.
அதன் மேற்கிளையில் அமைந்திருக்கும்
கூட்டினுள் இரு கிளிகள் கதகதத்திருக்கின்றன.
அணில்படைகள் அம்மரத்தை வந்தடைந்து
வெளவாலாகி தலைகீழாய் ஊஞ்சலாட
ஊஞ்சலாட
தலைசாய்த்து வனம் பார்த்து மெல்லச்சிரித்து
இருளுக்குள் ஓடியது அந்த நீலநிலாக் கனா.
5.மிகச்சிறிய பிரபஞ்சம் மிளிர்கின்ற மலர்
சிதறிக்கிடக்கும் பன்னீர்பூக்களை தன்
மிகச்சிறிய கைகளால் பொறுக்கி
எடுக்கிறாள்.
ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு
முத்தம் தந்து தன் கூடைக்குள் வைத்துக்கொள்கிறாள்.
சற்று தொலைவிலிருந்து இக்காட்சியை
காண்கிறவன்
ஓடிச்சென்று பூவாகி வீழ்கிறான்.
அவளது பிஞ்சு விரல்கள் தொட்டவுடன்
பூவிலிருந்து பேரன்பாக உருக்கொள்கிறான்.
பன்னீர் மரம் பூக்களை உதிர்த்துக்கொண்டே
மலர்கிறது.
மிகச்சிறியவள் மிகச்சிறிய தன் மடியில்
கூடையிலிருந்து பூக்களை
விடுவிக்கிறாள்.
பூக்களோடு கலந்து விழுந்தவன்
அம்மா என்று கதறி அழத்துவங்குகிறான்.
-‍நிலாரசிகன்.