Tuesday, December 28, 2010

தமிழ்மணம் விருதுகள் 2010


அன்பின் நண்பர்களுக்கு,

தமிழ்மணம் வழங்கும் 2010ன் சிறந்த இடுகைகளுக்கான முதல் கட்ட வாக்கெடுப்பு நிறைவடைந்துவிட்டது. என்னுடைய மூன்று இடுகைகளை போட்டிக்கென அனுப்பியிருந்தேன். மூன்றும் முதல் கட்ட வாக்கெடுப்பில் தேர்வு பெற்று இரண்டாம் கட்ட வாக்கெடுப்பிற்கு தயாராக உள்ளன. இம்முறை பதிவர்கள் மட்டுமல்லாது வாசகர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இயலும்.

கீழே உள்ள பிரிவுகளில் வாக்களிக்க இங்கே செல்லவும்:

http://www.tamilmanam.net/login/tmawards_2010_vote.php

பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

இடுகை: சங்கமித்திரை 


பிரிவு: நூல் விமர்சனம், அறிமுகம்

இடுகை: அதீதத்தின் ருசி- இறைநிலையின் உச்சம்  

பிரிவு: விளையாட்டு, உடல் ஆரோக்கியம், உடல்நலம் மற்றும் சமையல் தொடர்பான கட்டுரைகள்

இடுகை: சச்சின் - நம் காலத்து நாயகன்!  

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Saturday, December 25, 2010

உயிர்மை வெளியீடுகள் - டிசம்பர் 25,26



அனைவரும் வருக.
நண்பர்களுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, December 21, 2010

Welcome to Dongmakgol - திரைவிமர்சனம்




கொரிய போர் உக்கிரத்தின் உச்சத்திலிருந்த 1950களில் நடப்பதாக சித்தரிக்கப்பட மிகச்சிறந்த திரைப்படம் " Welcome to Dongmakgol". தென்கொரிய படைவீரர்களும் வட கொரிய வீரர்களும் கடும் போரில் ஈடுபடுகிறார்கள். ஒரு மலையடிவாரத்தில் நடக்கும் போரில் சிதறி ஓடுகின்ற வடகொரிய வீரர்கள் மூவரை மனநலம் குன்றிய ஒரு இளம்பெண் பார்க்கிறாள். அவளை தொடர்பவர்கள் மலையடிவாரத்தில் அவள் வசிக்கும் குக்கிராமத்திற்குள் நுழைகிறார்கள். அங்கே விமானம் விபத்தொன்றில் சிக்கிய அமெரிக்க விமானி ஒருவனும் தென்கொரிய படைவீரர்கள் இருவரையும் சந்திக்கிறார்கள்.

இவர்களை கண்டவுடன் தென்கொரிய வீரர்கள் துப்பாக்கியை உயர்த்துகிறார்கள். இவர்களும் தென்கொரிய வீரர்களை நோக்கி துப்பாக்கியை உயர்த்தியபடி நிற்கிறார்கள். எதற்காக இவர்கள் இப்படி நிற்கிறார்கள் என்பதை உணர முடியாத கிராம மக்கள் தங்கள் சோள தோட்டத்தை துவம்சம் செய்யும் காட்டுப்பன்றியை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். மழை பொழியத்துவங்குகிறது அப்போதும் அசையாமல் குறிபார்த்தபடி நிற்கிறார்கள் வீரர்கள். இவர்களது கையிலிருக்கும் எறிகுண்டை உருளைக்கிழங்காக இருக்குமோ என்று சந்தேகிக்கிறார்கள் அப்பாவி கிராம மக்கள். அப்போது வீரனொருவனின் கையிலிருந்து தவறி விழும் குண்டு அவர்களது தானியக்கிடங்கை அழிக்கிறது. செய்வதறியாது நிற்கும் அவர்களுக்காக தங்களது ஆயுதங்களை துறந்து சோளம் பயிரிடுவதிலும் தானியக்கிடங்கை நிரப்புவதிலும் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க விமானியை தேடி வருகின்ற அமெரிக்க வீரர்கள் கிராமத்தினரிடம் முறைகேடாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள். அந்த அப்பாவி மனநலம் குன்றிய இளம்பெண் கொல்லப்படுகிறாள். வெகுண்டெழும் கொரிய வீரர்கள் அமெரிக்க வீரர்களை கொன்றுவிடுகிறார்கள். அதில் ஒருவன் இன்னும் சில மணித்துளிகளில் இந்த இடத்தை அமெரிக்க ராணுவம் அழித்துவிடு இருப்பதாக கூறுகிறான். வெளியுலக வாசம்கூட அறியாத கிராமத்தை அமெரிக்க போர்விமானங்களில் குண்டுமழையிலிருந்து ஐந்து வட/தென்கொரிய வீரர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை திரையில் பாருங்கள்.

ஒரு மிகச்சிறந்த படத்தை பார்த்த நிறைவை இப்படம் நமக்குத் தருகிறது. மனதை அள்ளிக்கொண்டு போகும் மலையும் மலைசார்ந்த கிராமமும் அங்கே சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகளும்,பெண்ணுருவில் மனநலம் குன்றியதை கூட அறியாத பட்டாம்பூச்சியொன்றும்,துறுதுறு விழிகளுடன் வலம் வரும் சிறுவனும்,கூன்விழுந்த மூதாட்டியும்,வெள்ளந்தி மனிதர்களின் இயல்பான வாழ்வுமுறையும் இத்திரைப்படத்தோடு நம்மை ஒன்றிவிட செய்கிறது.

மனம் கவர்ந்த காட்சிகள் சில:

1. கொட்டும் மழையில் வான் பார்த்து மழைத்துளிகளை பருகும் இளம்பெண்.
2. தனித்துவிடப்பட்ட அப்பெண்ணிற்கு தன்னிடமிருக்கும் சாக்லெட்டை தந்துவிட்டு கண்ணிரூடன் திரும்பும் ராணுவ வீரன்.
3. பரம எதிரியாக இருந்த தென்/வட கொரிய வீரர்கள் நண்பர்களாக மாறும் காட்சி.
4.தென்கொரிய வீரர்களில் ஒருவன் வடகொரிய வீரனிடம் உன்னை அண்ணன் என்று அழைக்கலாமா என்று கேட்பது.
5.பன்றிக்கறியை தென்/வட/அமெரிக்க விமானி ஒன்றாக உண்ணும் இரவு
6.வழுக்கும் மலைச்சரிவில் சிறுவர்களைப்போல் அனைவரும் சறுக்கி விளையாடும் காட்சி.
7.பட்டாம்பூச்சிகள் மொத்தமாக விண்ணோக்கி எழும்பி பறக்கும் இரவு
8.குண்டுமழை பொழியும் விமானங்களை வலிநிரம்பிய புன்னகையுடன் எதிர்கொள்ளும் வீரர்கள்
9.அமெரிக்க விமானியை பிரிய முடியாமல் அழுகின்ற அந்த குண்டு சிறுவனின் கண்ணீர்
10.தானியக்கிடங்கில் விழுந்து வெடித்த குண்டால் வானமெங்கும் சிதறிய சோளம் பாப்க்கார்னாக மலர்ந்து விழுவதும் அதனை ரசித்து இளம்பெண் குதிப்பதும்
11.தென்கொரிய வீரர்களின் தலைவன் தன் தலைமையை வடகொரிய வீரனிடம் விட்டுக்கொடுக்கும் இடம்.
12.குபீர் சிரிப்பை வரவழைக்கும் கிராம மக்களின் வெகுளித்தனம்.
13.மனம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கும் அந்த இளம்பெண்ணின் நடிப்பு.
14. படத்தின் இசை

சொல்லிக்கொண்டே போகலாம். யார் பெரியவன் என்கிற திமிர்த்தனத்தின் மீது  மிகக்கடுமையான விமர்சனங்களை வெகு இயல்பாய் தெளித்துச்செல்கிறது இப்படம். யாருமற்ற இரவொன்றின் தனிமையில் சன்னல் வழியே கசிகின்ற மென்குளிரில் கொஞ்சம் தேநீருடன் ரசிக்கவேண்டிய படம். அவசியம் பாருங்கள்.

வெளியான வருடம்: 2005
படத்தின் நீளம்: 133 நிமிடங்கள்
இயக்குனர்: பார்க் வாங் ஹியுன்
இணையத்தில் பார்க்க: http://www.youtube.com/watch?v=EyPCMajTnJQ&feature=related
- நிலாரசிகன்.

Thursday, December 16, 2010

மழைக்கு காத்திருக்கும் சிறுமி




1.
உனக்கும் எனக்கும் இடையில்
மூன்று நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
முதல் நதியில் ஓர் ஓடமும்
இரண்டாம் நதியில ஓர் இலையும்
மிதப்பதை மூன்றாம் நதியில்
அமர்ந்திருக்கும் நீள்தாடி கிழவன்
ரசித்துக்கொண்டிருக்கிறான்.
கற்பனைகளாலான கயிற்றில்
நாம் கட்டப்படுகிறோம்.
நம் பாவத்தின் அறிக்கைகளை
வெளியிடும் நாளில்
கட்டுக்கள் அவிழ்ந்து மீண்டும்
இணைகிறோம்.
நம்மிடையே நிற்காமல்
இப்போதும்
ஓடிக்கொண்டிருக்கிறது அதே நதி.

2.

யார் யாரோவாக அறிமுகமாகிறோம்.
யாதுமாகி உள் அமர்கிறோம்.
எதுவுமற்று சாம்பலென உதிர்கிறோம்.

3.
தாயின் ஸ்பரிசங்களோடு
தொடுகின்ற விரல்களை
பெற்றிருக்கிறாய்.
நீலக்கடலின் ஆழ்ந்த அமைதி
உன் விரல்களெங்கும் விரவிக்கிடக்கிறது.
வலிகளை கண்ணீர்த்துளிகளால்
நீக்குகிறாய்.
மார்போடு அணைத்துக்கொண்டு
நீங்குதலின் அர்த்தங்களை தெருவெங்கும்
சிதறவிட்டபடி கதறும் சருகுகளின்
மேல் நடந்து செல்கிறாய்.
மீண்டும்,
மழைக்கு காத்திருக்கிறாள் சிறுமி.

-நிலாரசிகன்.

Thursday, December 09, 2010

கவிதை நூல் வெளியீடு


முன் கவிதைச்சுருக்கம்:

ஒரு நீண்ட பயணத்தின் துவக்கம் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது. சிற்றிதழொன்றில் படித்த கவிதையொன்றின் வரிகள் உயிரெங்கும் வியாபித்து என்னை ஆட்கொண்டு நர்த்தனமாடிக்கொண்டிருந்த நேரம்...அவ்வரிகளை எழுதிய கவிஞனுடன் பேச வேண்டும்  என்கிற ஆவலில் தொடர்புகொண்டபோது கவிதை குறித்து அவன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் புதியதொரு பரிணாமத்தை உணர வைத்தது. அவன் சி.வெங்கடேஷ். அதன் பிறகு அவன் மூலமாக அறிமுகமான கவிஞர்.க.அம்சப்ரியா,மு.ஷரிகிருஷ்ணன் வழியே பல கவிதை நூல்களும் கவிதை பற்றிய விவாதங்களும் என்னை வந்தடைந்தன.புதியதொரு கவிதையுலகத்தின் சாளரத்தை திறந்துவிட்ட இம்மூவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.குறிப்பாக நவீன கவிதை குறித்த பல கேள்விகளுக்கு சளைக்காமல் "புன்னகை"யுடன் பதிலிட்ட அம்சப்ரியாவிற்கு எப்போதும் என் அன்பும் நட்பும். மற்றும் நட்சத்திரங்களாய் என் வானம் நிறைத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், இந்நூலை சாத்தியப்படுத்திய அன்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இணையத்தால் இணைந்த இதய நண்பர்களுக்கு,

இம்மாதம் 26ம் தேதி  என் கவிதை தொகுப்பு "வெயில் தின்ற மழை" வெளியாகிறது. உயிர்மை பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. தமிழின் முக்கிய/முன்னணி இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். அனைவரும் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நட்புடன்,
நிலாரசிகன்.
nilaraseegan@gmail.com

Monday, December 06, 2010

எழுத்து திருட்டு: வலைப்பதிவர்கள் கவனத்திற்கு

ஒரு நீண்ட இரவை கடக்க வைத்து பின்பு வெளிக்குதிக்கலாம். ஒரு ஆழ்நிலைக்குள் நம்மை இழுத்து
வெளியேறலாம். தியானவெளியில் பித்தனாக அலைந்து திரியவைத்து பின்னொரு  மெளனப்புன்னகையுடன் அருகில் வந்தமரலாம். யாருமற்ற பாலையில் ஒரு துளியாக விழுந்து கடலென விரியலாம்.

கவிதை: வெறும் வார்த்தைகள் அல்ல. கவிதை: வார்த்தைகளின் வர்ணமடிக்கும் வெற்று வேலையில்லை. கவிதை: வலி நிவாரணி மட்டுமே அல்ல. கவிதை: மழை மட்டும் அல்ல.

கவிதை ஒரு தவம். கவிதை இன்னோர் உயிர். கவிதை வெற்றிடங்களை நிரப்பும் புனிதநீர். கவிதை அகக்கடலின் பிரவாகம். கவிதை ஆன்மாவின் வரிவடிவம்.

ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கப்பட்ட பின்னும் தோன்றும் உணர்வை  எழுத்தில் எப்படி வடிப்பது? அந்த உணர்வின் உச்சத்தில் கரைந்தோடும் கண்ணீரும் பின் சிந்தும் புன்னகையும் உணர்ந்தால் மட்டுமே கவிதையின் கனம் என்னவென்பது புரியும்.


இத்தனை விஷயம் கவிதைக்கு பின் நிகழ்கிறது என்பதை அறியாத ஒரு 'புத்திசாலி'  2009ம் ஆண்டு நானெழுதிய ஒரு பதிவை அப்படியே அப்பட்டமாக தன் வலைப்பூவில் பதிந்திருக்கிறார்
தென்றல் என்கிற பதிவர்.

என் இடுகை:


http://www.nilaraseeganonline.com/2009/09/blog-post_28.html


"தென்றலின்" இடுகை:


http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_3679.html


இதைப்பற்றி பண்புடன் குழுமத்தில் எழுதியிருந்தேன் நேற்றிரவு. அதற்கு நண்பர் விழியன் இட்ட மறுமொழி மேலும் அதிர்வுக்குள்ளாக்கியது.

இந்த தென்றல் என்கிறவர் பிறரது பதிவுகளை திருடுவதையே பிழைப்பாக கொண்டிருக்கிறார் போலும்!

விழியனின் மறுமொழி:

//

Umanath Selvan
இது ஒன்னு மட்டும் இருந்தா பரவாயில்ல நிலா

இங்க பாருங்க
http://pushpalatham.blogspot.com/2010/08/blog-post.html
http://kavithai.yavum.com/content/view/140/1/
...தன் தோழிக்கு எழுதிய கடிதத்தை கூட இப்படியா கொடுக்கனும்?

மேடம் பல தளங்களில் இருந்து பத்தி பத்தியா உருவி ஒரு கட்டுரை போட்டிருங்காங்க
http://pushpalatham.blogspot.com/2010/08/blog-post_17.html
ஒவ்வொரு வரியையும் கூகுளிடவும்.

http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_20.html
ஆனந்த விகடனில் வந்த கட்டுரையாம் :)))

http://pushpalatham.blogspot.com/2010/07/blog-post_6687.html

நான் இந்த ஆட்டத்துக்கு வரல.

எல்லோரும் போன் போட்டு ஒரு வார்த்தை கேக்கலாம். அவங்க ப்ளாகில் போன் நம்பர் இருக்கு.//

முதலில் ignore செய்துவிடவே எண்ணியிருந்தேன். ஆனால் இவரை போன்ற புல்லுருவிகளை இனியாவது தடுக்க வேண்டும். இவரது வலைப்பூவை தமிழ்மணம்/இன்ட்லி தடைசெய்யவேண்டும்.

உலகின் மிக மோசமான திருட்டு அடுத்தவரின் சிந்தனையை திருடுவது. என்ன செய்யலாம் நண்பர்களே!

-நிலாரசிகன்.

Wednesday, December 01, 2010

உடைதலின் கணம்



1.
துரோகத்தின் நுழைவு வாயிலின்
அருகே சென்று திரும்புகிறது
ஒரு குழந்தையின் நிழல்.
ஒப்பீடுகளற்ற அன்பின் கண்ணாடி
உடைதலின் கணத்தை கடந்துவிடுகிறது.
ஈரம் கடக்கும் இதழ்கள்
உப்பின் சுவை உணர்ந்து மெளனிக்கின்றன.
பிரக்ஞையின்றி தூரம் வெறித்த
பார்வையுடன்
காலடியில் வாலாட்டும் நதியில்
கல்லெறிந்துகொண்டிருக்கிறாய்
நீ.

2.
இதற்கு பெயரிடுவது பற்றி
சிந்திக்கலாம்.
இதற்கு ஒரு பூனையின் பெயரை
வைப்பது பொருத்தமாக தோன்றுகிறது.
ஏனெனில்,
இதுவொரு தவறை
பாத சத்தமின்றி நிறைவேற்றவும்
ஒரு நேசத்தின் இறுகிய முடிச்சை
பற்களால் அவிழ்க்கவும்
முயல்கிறது.
இதற்கு பெயரிட
நாய்க்குட்டியின் உருவிலிருந்து
வெளியேற வேண்டும்
நான்.

-நிலாரசிகன்.

Sunday, November 28, 2010

யன்னல் கசியும் சிறுவெளிச்சம்



சில கடிதங்களின் முதல் வரியை எழுதுவதற்குள் காலம் நம்மை முழுமையாய் தின்றுவிடும். இந்தக் கடிதத்தின் முதல் வரியை பின்னிரவின் தனிமைக்குள்ளிருந்து கண்டெடுத்துவிட முயல்கிறேன். இது ஒரு வன்மத்தின் கறை துடைக்க முயன்றிடும் கடிதம் எனலாம். தண்டிக்கப்படுதல் தெரியாமல் புன்னகைக்கும் உதடுகளின் மீதொரு போர்தொடுத்தல் எனலாம்.  தீராவன்மையின் காரணத்தால் என் மீது தொடுக்கப்பட்ட மெளனப் போர் மெளனம் கலைந்து வெளியேறிய தினத்தில் தீக்குளத்தில் கருகிய மீனாய் கரையில் கிடந்தேன். துயரத்தாலும் கோபத்தாலும் ஒரு சதுரத்திற்குள் நடந்துகொண்டேயிருந்தேன். அமில மழை நின்றுவிட்டபின் வடிந்த நீர்த்துளிகளாய் அனைத்தும் மறைந்திருந்தது விடியலில். அன்று நானொரு துறவியின் நிலையிலிருந்தேன்.முழுவதுமாய் நிரம்பியிருந்தது மனக்கோப்பை. உன்னதமானதொரு நட்பை தவமிருந்து தவணை முறையில் காயப்படுத்த உன்னால் மட்டுமே சாத்தியப்பட்டிருக்கிறது. சூன்யத்தின் பிடியில் நீ தவித்திருந்த காலத்தில் யன்னல் கசியும் சிறு வெளிச்சமாய் என் வார்த்தைகள் உன்னோடிருந்தன.

அப்போது உன் வானம் கருமையின் நிறத்தை கொண்டிருந்தது. தூரம் பற்றிய பிரக்ஞையின்றி ஒட எத்தனித்து ஊனம் உணர்ந்து திகைத்து நின்றாய். மெதுவாய் உன்னை அழைத்துச்செல்லும் நடைவண்டியாய் மாறியிருந்தது என் சுயம். கையில் எப்போதும் கொடுவாளுடன் வலம் வந்த காலநீலி நம்மை பிரித்துச்சென்றாள். நம்மிடையே வீழ்தல் என்றும் இருந்ததில்லை. வீழும் நிலையின் போதெல்லாம் நாம் நிழலாய் மாறியிருக்கிறோம். நிழலுக்குள்ளிருந்து உருவம் பெற்று வீழ்தலை தடுத்திருக்கிறோம். வருடங்கள் கரைந்துவிட்ட பின்னும் நம்மிடையே ஒன்று மட்டும் நிலைத்திருந்தது நேற்றுவரை.

இன்றென்பது இல்லாதிருந்தால் நானொரு ஞானமரத்தில் இளைப்பாறியிருக்க மாட்டேன். இன்றென்பது உறைந்து போயிருந்தால் என் முன் ஒரு ரகசியம் உடைபடாமல் போயிருக்கும்.இன்றென்பது நேற்றைப்போல் இல்லை. இன்றென்பது நாளைக்குள் நுழைய மறுத்தது. இன்றென்பது இதயத்தின் நான்கு சுவர்களையும் நெருப்பால் நிரம்பி சிரித்தது. இன்றென்பது துரோகத்தின் உச்சத்தை நினைவூட்டியது. இன்றென்பது ஒரு ஒநாயின் குருதி கசியும் பற்களை காண்பித்தது. இன்றென்பது தவிர்த்தலின் பொருளை ஒவ்வோர் இறகாய் பிய்த்து எறிந்து உணர்த்தியது. இன்றென்பது இல்லாத நானொரு குழந்தையின் குதூகலத்தை சுமந்திருந்தேன்.இன்றென்பது இருளின் கொடுங்கனவில் என்னை ஆழ்த்தி மகிழ்ந்தது. இன்றென்பது நீ அல்ல. இன்றென்பது உன் நண்பனின் சுய ரூபத்தையும் ஒரு பிம்பமாக்கி என்னில் விட்டுச்சென்றது. இன்றென்பது நீ என்பது ஒன்றல்ல இரண்டு என்றுணர்த்தியது. இன்றென்பது.....

தவிர்த்தலின் காரணம் அறியாத ஓர் ஆத்மா உன் காயத்தில் பங்கேற்க வந்தபோது நீயொரு வேட்டைநாயாக நின்றிருந்திருக்கிறாய். வேட்டையாடப்படுதலை விட எதற்காக இவ்வேட்டை என்கிற புரிதலற்ற இந்த உயிர்  உதிர்ந்த மலருக்கு சமம். துரோகிக்கும் பூச்செண்டு கொண்டு செல்லும் நீ எனக்கொரு சிறு வாழ்த்தும் தர விரும்பவில்லை. ரணத்தில் வந்தமர்கிறது ஓர் இறகு. யாருமற்ற வனத்தில் நானொரு புள்ளியாய் மறைந்துகொண்டிருக்கிறேன்.

வா! உயிர் புசிக்கும் உன் பேருன்னதமான நண்பனின் சடங்கில் கலந்துகொள். மூன்றுமுறை பிடிமண்ணை வீசி எறிந்துவிட்டு ரயிலேறிச்செல். பாலையொன்றில் நடனமிடும் பெண்ணொருத்தியின் அழகை யன்னல் வழியே ரசித்துக்கொண்டே நீ செல்லும் வழியெங்கும் சிவப்பு நிறத்தில் மாறியிருக்கும் விசும்பின் ஓரத்தில் விசும்பிக்கொண்டிருப்பேன் நிலவாக.

-நிலாரசிகன்.

Tuesday, November 23, 2010

நூல் விமர்சனம்

வலைப்பதிவர் ராமலஷ்மி அவர்கள் என் சிறுகதை நூலிற்கு மதிப்புரை எழுதியிருக்கிறார்

இங்கே வாசிக்கலாம் : http://tamilamudam.blogspot.com/2010/11/blog-post_23.html

பிற விமர்சனங்கள்: 


1. விஜய் மகேந்திரன்    http://vijaymahendran.blogspot.com/2010/06/blog-post_14.html
2. அஷிதா   http://tamilkirukals.blogspot.com/2010/05/blog-post.html
3.  அடலேறு  http://adaleru.wordpress.com/2010/01/05/book-review-yaaroo-oruthiin-diary-kuripugal/
4.  கடிதம்  http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_12.html
5.  கிருஷ்ண பிரபு :http://online-tamil-books.blogspot.com/2009/12/blog-post_29.html
6. கிரகம்: http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_30.html

7.நாளைபோவான்: http://iraichchal.blogspot.com/2010/12/blog-post.html



இணையத்தில் நூலை பெற:

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79


நன்றி,
நிலாரசிகன்.
 

Saturday, November 20, 2010

எஸ்தர்

தமிழில் எத்தனையோ சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படுகின்றன. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் நம்முடன் உரையாடுகின்றன.
கடந்த வார விகடனில் வெளியான "அப்பு" கதையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை நான்.
அதேபோல் சில வருடங்களாகவே தேடிக்கொண்டிருந்த கதை வண்ணநிலவனின் "எஸ்தர்". சில நாட்களுக்கு முன்
கிருஷ்ண பிரபு அந்தக்கதையை அனுப்பியிருந்தார். அதீத வேலைப்பளுவின் காரணமாக வாசிக்க நேரம் கிடைக்கவில்லை.
இப்பொழுதுதான் வாசித்தேன். அழியாச்சுடரிலும் இக்கதை இருக்கிறது.

இங்கே வாசிக்கலாம்.

ஒரு மிகச்சிறந்த சிறுகதை எழுதுவது(படைப்பது) எப்படி என்பதற்கு இக்கதை மிகச்சிறந்த உதாரணம்.

அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.

Tuesday, November 16, 2010

நான் என்பது..



1.

காற்றின் உட்புறமிருந்து
இசைக்கும் கனவின் பாடலொன்று
அகாலத்தின் நீள அகலத்தை அளந்தபடி
நகர்ந்துகொண்டிருந்த கணத்தில்
கிளை முறிந்த வலியில்
துடித்தழுகிறது கொன்றைமரம்.
திடுக்கிடல் ஏதுமின்றி விழுகின்ற
கிளையை ஏந்திக்கொண்டு கிளர்ந்தது
தெரு.
அந்தரத்தில் மிதக்கின்ற வீட்டின்
கதவுகளைத் திறந்துகொண்டு
உலர்ந்த பூக்களுடன் வெளி வருகிறாள்
சிறுமியொருத்தி.
முணுமுணுக்கும் அவளது உதடுகள்
கனவின் பாடலொன்றை
உதிர்த்துக்கொண்டிருக்கிறது.

2.
இலைகளில் துளசியும்
வேர்களில் விஷமும்
கொண்டிருக்கும்
விசித்திரம்
நீ.

3.

நான் என்பது
ஒரு துளி கடல்
ஒரு கல்லோவியம்
ஒரு வண்ணத்துப்பூச்சி
ஒரு வனம்
ஒரு யுகம்
ஒரு பறவை
ஒரு துயர இரவு
அல்லது
ஒரு மழைநாளின் தேநீர்.
அல்லது
ஒரு உடைந்த கனவு
அல்லது
முரண்களால் ஆன
உயிர்க்கவிதை என்க!

-நிலாரசிகன்.

Sunday, November 14, 2010

குழந்தைக் கவிதைகள்

அ)
அப்பாவும் அம்மாவும்
தராத அரவணைப்பை
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை.
கனவில் தோன்றிய கடவுள்கள்
அச்சிறு குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்டனர்.
வரிசையில் நின்றிருந்த
கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை
தந்துவிட்டு பொம்மையை
இறுக்கி அணைத்துக்கொண்டதது.
பொம்மையாதலின் வழிமுறைகள்
அறியாமல் விழித்தபடிநின்றனர்
கடவுள்கள்.

ஆ)
கதை சொல்ல நச்சரித்தது
குழந்தை.
பேய்க்கதை சொல்லத்துவங்கினேன்.
அனைவரும் உறங்கிவிட்ட
ஓர் இரவில் பேய்கள் என்னைமட்டும்
துரத்தி ஓடிவந்தன என்று
தொடங்கினேன்.
பேய்க்குத்தான் கால்கள் இல்லையே
பின்னெப்படி ஓடிவரும் என்றது
குழந்தை.
உறங்கிவிட்ட பாவனையில்
கண்மூடிக்கிடந்தேன் நான்.

இ)

கூரையிலிருந்து வழிந்து
கொண்டிருக்கும் மழைத்துளிகளை
சேகரித்து தங்கமீன்கள் இரண்டு
நீந்திக்கொண்டிருந்த கண்ணாடி
தொட்டிக்குள் விட்டுக்கொண்டிருந்தாள்
அச்சிறுமி.
மழை நிற்கும் வரை
இதைச்செய்தவள் மழை நின்றபின்
கைகள் இரண்டையும் தேய்த்து
கன்னத்தில் வைத்துக்கொண்டு கேட்டாள்
"ஸ்ஸ்ஸ் ரொம்ப குளிருதில்ல?"
வாலாட்டியபடி ஆமோதித்தன
மீன்கள்.

ஈ)
அப்பாவிடமும் அம்மாவிடமும்
பள்ளியில் பெற்ற "வெரிகுட்"ஐ
பலமுறை சொல்லி
ஏதோவொன்று குறைந்தவளாய்
தன் பொம்மைகளிடம்
சொல்ல ஆரம்பித்தாள் அச்சிறுமி.
தலையாட்டிக்கொண்டிருந்தன பொம்மைகள்
அப்பாவாய்,அம்மாவாய்.

உ)
மழையில் நனைந்து
விளையாடிக்கொண்டிருந்தார்கள் அந்த
சிறுவனும் அவனது நாயும்.
அப்பாவிடம் அடியும்
அம்மாவிடம் திட்டும் வாங்கிக்கொண்டு
தலைதுவட்டினான் சிறுவன்
அம்மா கொடுத்த துவாலையால்.
"கவலப்படாத அப்பா உன்னை
அடிக்க மாட்டார்" என்றான்
தன் நாயிடம்.
உடம்பை சிலிர்த்துக்கொண்டு
அவனையே பார்த்தது அச்சிறுநாய்.

ஊ)
இந்தப்பசுவிற்கு நான் தான்
அம்மா என்றது.
இந்தப்பசு எப்போதும்
பால்தருமென்றது.
பசுவின் கன்றுக்கு
தன் மொழி புரியுமென்றது.
பசுவைக் கட்டிக்கொண்டே
உறங்குவேன் என்றது
கோணலாய் இருப்பினும்
குழந்தையின் உலகிலிருக்கும்
ஓவியப்பசு அழகாய்த்தானிருக்கிறது.

எ)
இரண்டு முறை பிரகாரம்
சுத்திவந்துவிட்டு கால்வலிக்கிறதென்று
அரச மரத்தில் சாய்ந்து
கால்நீட்டி அமர்ந்துகொண்டது
குழந்தை
கோவிலைச் சுற்ற அழைத்த அம்மாவின்
அழைப்பை நிராகரித்தபடி.
என்னசெய்வதென்று புரியாமல்
கெஞ்சிக்கொண்டிருந்தாள்
அம்மா.
குழந்தையிடம் கெஞ்சுகின்ற
சுகத்தை கடவுளிடம் கெஞ்சுவதில்
பெறமுடியாதுதான்.

ஏ)

வீடு கட்ட குவித்திருக்கும்
ஆற்றுமணலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
சிறுமியும் அவளது பொம்மையும்.
பொம்மையுடன் பேசுவதற்கென்றே
தனிமொழியை உருவாக்கியிருந்தாள்
சிறுமி.
வெகுநேர விளையாட்டிற்குபின்
குடிசைக்குள் சென்ற சிறுமியின்
வலக்கையில் தலையும்
இடக்கையில் உடம்புமாய்
துண்டுகளாகியிருந்தது பொம்மை.
அப்போதும் அதனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்
அவள்.

ஐ)

எப்போதும் கண்டிராத
ஓவியங்கள் சிலவற்றை
விற்றுக்கொண்டிருந்தாள்
அந்தச் சிறுமி.
சருகு நிறத்தாலான
அவளது பாவாடையை
நிறைத்திருந்தன முயல்குட்டிகள் சில.
ஒவ்வொரு ஓவியம்
விற்றவுடன்
தன் பாவாடை முயல்களிடம்
ஏதோ பேசுகிறாளவள்.
இக்காட்சியை நிலவில் தீட்டுகிறது
சூரியக்கரங்கள்.
நிலவில் உருப்பெறுகிறது
ஓர் முயலோவியம்.

ஒ)
யாருமற்ற அறைக்குள்
தன் பொம்மைகளுடன்
நுழைகிறாள் நட்சத்திரா.
அவளது மழலையை
உற்று கவனிக்கின்றன பொம்மைகள்.
அவள் கேட்கும்
கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன.
கதவு திறக்கும் சத்தம்
கேட்டவுடன் ஊமையாகி
அசையாமல் நிற்கின்றன.
வேலை முடித்து
வீட்டிற்குள் வருகின்ற
அம்மா பொம்மையிடம்
பேச துவங்குகிறாள் நட்சத்திரா.

***********************************************************************

குழந்தைகளுக்கும்,குழந்தை மனதோடு இப்பதிவை ரசித்த இணைய எழுத்தாள/வாசக நண்பர்களுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் :)
(மீள்பதிவு)

-நிலாரசிகன்.

Tuesday, November 09, 2010

இரவின் சருகுகள் இசைக்கும் மழை நாளில்..




1.

உலகின் மிக கனமான
பொருளை நான் சுமந்து வந்தேன்.
மார்பில் ஊர்ந்து உடலெங்கும்
பரவி உயிரின் வேரில்
அமர்ந்துகொண்டது அப்பொருள்.
பின்,
அதனுடன் ஓர் உரையாடல்
ஆரம்பமானது.
இலை பிரியும் தருணம் பற்றியும்
நீள் கனவொன்றின் உதிரம் பற்றியும்
உரையாடி சலித்தபோது
அதன் எடை குறைய துவங்கியிருந்தது.
நீராலான அதன் பெயரை
கண்ணீரென்று நீங்கள் உணரும்போது
விலங்கின் உருவிலிருந்து
பறவையாக
மாறியிருக்கும் என் தேகம்.

2.

பெயரில்லா இந்த உலர்ந்த
இரவை முத்தங்களால்
நிரப்பிக்கொண்டிருக்கிறது மழை.
பல நாட்கள் பத்திரப்படுத்திய கனவுகள்
ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிப்பது
பற்றிய கவலையேதுமின்றி
முத்தமிடுகிறது மழை.
மெளனம் கிழித்து வார்த்தைகள்
வெளிக்குதித்தோடி மறைகின்றன.
தியானவெளியில் வெண்ணிற
உடையுடன் அலைகிறாள் அவள்.
தன் நிர்வாணம் கண்டு வெட்கி
மறைகிறது மழை.
இரவின் சருகுகள் உதிர்கின்ற
மூன்றாம் சாமத்தில்
உனக்கொரு கடிதம் எழுத
அமர்கிறேன் நான்.

3.
பூக்களால் நீ அலங்கரிக்கப்பட்டிருக்கிறாய்
இறுகத் தழுவிக்கொண்டு நெற்றியில்
ஓர் ஒற்றை முத்தமிட நினைத்து
தோற்கிறேன்.
நம்மிடையே காலம்
அழுகிய புன்னகையுடன் நிற்கிறது.
உயிருடன் நம் வண்ணத்துப்பூச்சி
புதைக்கப்படுகிறது.
நாம் செல்லவேண்டிய
பாதைகள் நம் அனுமதியின்றி
அடைக்கப்படுகின்றன.
வெவ்வேறு திசையில் ஆரம்பமாகும்
பயணத்தில்
நீ
மழையின் நடுவே நடந்து செல்கிறாய்.
நான்
மழையாதலின் சாத்தியக்கூறுகள் பற்றிய
சிந்தனையில் ஆழ்ந்து மறைகிறேன்.

 -நிலாரசிகன்.