Wednesday, August 24, 2011

கவிதைகள் இரண்டு

1.இறகின் கதை
மலைச்சரிவில் பூத்திருக்கும்
பூக்களின் நடுவில் வீழ்ந்து கிடக்கிறது
ஓர் இறகு.
வெளிமான்கள் மேயும் அம்மலையில்
மார்கச்சை அற்ற யுவதி ஒருத்தி
மலையேறுகிறாள்.
பூக்கள் நடுவில் கிடக்கும் இறகை
பேரன்புடன் கைகளில் அள்ளிக்கொள்கிறாள்.
தன் தளிர் விரல்களால் இறகை
வருடிக்கொடுக்கிறாள்.
சிலிர்த்த மலை ஒரு மாயக்கம்பளமாக
உருப்பெறுகிறது.
யுவதியும் இறகும் வெகு தூரம்
பயணித்து
சிற்றோடைகள் நிறைந்த வனத்தில்
இறங்கி நடக்கிறார்கள்.
ஒளிக்கண்களுடன் அவளை நெருங்குகிறான்
வனத்தின் இளவரசன்.
தன் செல்லப்பறவையின் இறகை
திரும்பக்கேட்கிறான்.
இறகை கொடுத்தவுடன் தன்னுடலில்
சிறகுகள் வளர்வதை உணர்கிறாள்.
வனத்தின் இளவரசனை தன்
விழிப்பூக்களில் அமர்த்திக்கொள்கிறாள்.
பிரபஞ்சத்தின் புதிர் நிறைந்த பக்கங்களுக்குள்
அவர்கள் பேரானந்தமாய் பறக்கிறார்கள்
ஓர் இறகின் வடிவில்.

2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்


மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் நீந்துகின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.
-நிலாரசிகன்.

Monday, August 08, 2011

வேண்டுகோள் - நண்பர்களின் பார்வைக்கு

அன்புடையீர்

வணக்கம்

மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை
தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் , தெருக்கூத்து,முதலான
நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்த
மாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார்
நிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும்
உள்ளாகி நாம் தொலைத்துவரும் வாழ்வாதாரங்களின் பட்டியலில் இடம்
பெறத்துவங்கிவிட்டாலும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான்
கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு. இன்று
ஏகோபித்த சனங்களிடையே புழங்கும் சினிமா, டி.வி, இன்னும்பிறவுள்ள
ஊடகங்களின் வழியே வெளிப்படும் கலை உற்பத்திகளில் மேலதிகமான வறட்சியே
எஞ்சி நிற்கிறது. அது மட்டுல்ல விளம்பரயுகத்தில் வலிந்து
வெளிச்சப்படுத்தப்படும் கலைவடிவங்கள்தாம் கவனம் பெற்றுவருகின்றன,, பெற
வைக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் எட்டாத உயரத்தில் மிக உன்னதமான
கலை சிருஷ்டிகளென நிகழ்த்துக்கலைகள் ஜீவிதம் பெற்று காலத்துக்கும்
நிலைத்து நிற்கின்றன. சினிமா உள்ளிட்ட நவீன ஊடகங்கள் போன்றே தோற்பாவை,
கட்டபொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியனவற்றையும் வெறும் பொழுது
போக்குச்சாதனங்கள் என்கின்றாற்போல் தீர்த்துப்பார்க்க முடியாது.
மரபார்ந்த தொல்கலைக்கூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை
ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும் ,
அக்கறையையும் , அதிகாரங்களுக்கு எதிரான, போர்க்குணங்களையும்
கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. அத்துடன்
ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உத்சாகத்தையும்
உத்வேகத்தையும் இவற்றைத்தவிர வேறெந்த கொம்பு முளைத்த கலை இலக்கிய
உற்பவனங்களும் தந்துவிட முடியாது கலைத்தாயிடம் ஞானப்பால்
அருந்தியவர்களுக்கு மாத்திரமே பீடம் என்றாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில்
படிப்பு வாசனை ஏதுமின்றி வழிவழியாக தாம்பெற்ற கேள்வி அறிவை முதலாக வைத்து
கைக்கொண்ட காரியத்தில் துலங்கி அந்த அரியக்கலைகளுக்கு உயிரூட்டிவரும்
கிராமியக்கலைகளின் சூத்ரதாரிகள்தாம் உண்மையான கலையின் பிதாமகர்கள் என்று
அறைகூவ வேண்டியிருக்கிறது.நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும்
அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை
வழங்குவதும், அவர்தம் வாழ்வாதரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை
உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை
மேம்படுத்துவதன் மூலம்  தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது
பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு
அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது. மேற்சென்ன
களப்பணிகளில் கடந்த ஐந்தாண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்
தோற்பாவை|கட்டபொம்மலாட்ட|கூத்து
க்கலைஞர் திரு அம்மாபேட்டை கணேசன்
அவர்களது வாழ்வியலை ஓர் ஆவணப்படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
அத்தோடு கூத்தில்  முதன்மையான கோமாளிப்பாத்திரம்  நிகழ்வின்
ஊடாகச்சொல்லும் கதைகளையும் அப்பாத்திரம் ஏற்போர் வாழ்க்கையையும் ஒருசேர
தொகுத்து  (எழுத்தாவணமாக) சபையலங்காரம் என்னும் தொகைநூல் வெளியீட்டிற்கான
 பதிப்புவேலையையும் தொடங்கியிருக்கிறது. பள்ளி,கல்லூரி வளாகங்களில்
தோற்பாவைக்கூத்து,பொம்மாலாட்டங்கள் நிகழ்வுகள் நடத்த இசைவான இலகு
நிகழ்த்து மேடையொன்றையும் வடிவமைத்து தயாரித்து வருகிறது.
இவற்றுக்கான நிதி திட்ட வரைவு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பெரும்நிதி கோரும்  இப்பணிகளுக்கு ஆர்வமுள்ள அன்பர்கள் தங்களால் இயன்ற
நிதியுதவி வழங்கி உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
மு. ஹரிகிருஷ்ணன்,
ஆசிரியர் மணல்வீடு.
குறிப்பு;நன்கொடை வழங்க விழைவோர் கீழ்காணும் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுகிறேன்.
kalari heritage and charitable trust,
a\c.no.31467515260
sb-account
state bank of india
mecheri branch
branch code-12786.


நிதி திட்ட வரைவு :

அம்மாபேட்டை கணேசன் ஆவணப்படத்திற்கானது.

பேனாசோனிக் மினி டிவி 3சிடிசி வகை கேமரா.
10நாள் வாடகை.(கேமரா ஸ்டேண்ட், 2 மைக்குகள் ஒளிப்பதிவாளர் சம்பளம் உட்பட)
                                          -50000
கேசட்(பேனா சோனிக் புரோபசனல்)                          2000

பின்னணிக்குரல் முழு படத்திற்கும்                             7500

எடிட்டிங்                                                     20000

முதல் பிரதி காப்பியெடுக்க                                    2500


பின்னணி இசைச்சேர்ப்பு                                       5000

கவர் டிசைனிங்&ஸ்டிக்கரிங்                                   12500

டிவிடி ரைட்டிங் ஆயிரம் பிரதி                               15000

சோனி டிவிடி ஆயிரம் பிரதிகளுக்கு                          15000

போக்குவரத்துச்செலவுகள்                                    2500

மொத்தச்செலவு                                        1,32000

--------------------------------------------------------------------------------

சபையலங்காரம் நூற்பதிப்பு ஆயிரம்பிரதிகள்:

புத்தகளவு1\8 டெம்மி சைஸ்
70ஜி.எஸ்.எம் 16ரீம்                                      9600


டைப்செட்,லேஅவுட், பாலிமர்ஸ்                        9000

மெய்ப்பாக்கம்                                             3000

வண்ணமுகப்பட்டைதயாரிப்பு&அச்சு                     10000

புத்தகக்கட்டு                                              7000

மொத்தச்செலவுகள்                                     38600

-------------------------------------------------------------------------------

 தோற்பாவை|கட்டபொம்மலாட்டத்திற்கான இலகு மேடை

தயாரிப்புச் செலவு மொத்தம்                           25000