Wednesday, August 22, 2007

நேற்றுப் பெய்த மழை...

நிலம்பார்த்து தலைகவிழ்வதே
வெட்கம் என்று எண்ணியிருந்த‌
எனக்கு
விதவிதமாய் வெட்கப்பட
சொல்லிக்கொடுத்தவன்
நீ.

அஞ்சனம் சிறிதெடுத்து
என் கன்னத்திலிட்டு
நம் காதலுக்கு இது
திருஷ்டிபொட்டு என்றுசொல்லி
மெதுவாய் என் கன்னம்தட்டி
சிலிர்க்கவைத்தவன்
நீ..

இலைகளில் தங்கியிருக்கும்
பனித்துளிகள் சேகரித்து
என் முகம்துடைத்து
"பனித்துளியில் குளித்த‌
பூ இவள்" என்று காதோரம்
கவிதைமொழிந்து
ஆனந்தக்கண்ணீர் சிந்தவைத்தவன்
நீ..

உனக்கே நானென்ற‌
எண்ணத்தில் தீ எறிந்து
சென்ற உறவுகளால்
உன்னைவிட்டு பிரிக்கப்பட்டு
திருமணம்முடிக்கப்பட்டு
ஜன்னல்கம்பிகள் வழியே
மழைக்குள் உன்னைத்
தேடுகின்றேன் நான்.

-நிலாரசிகன்.

Tuesday, August 21, 2007

அத்தமக செம்பருத்தி ....

பொட்டல்காட்டுல பூவு

ஒண்ணு பூத்துச்சு



அத்தவயித்துல அழகா

பொறந்தா ஆசமக‌ செம்பருத்தி...



ஆத்துதண்ணி போல

வெரசா ஓடிப்போச்சு

வருசம் பதினாறு..



சோளக்காட்டு பொம்ம

போல வெடவெடன்னு

வளர்ந்து நின்னா ..



மாமன் எம்மேல ஆசவச்சு

அவசரமா சமஞ்சு நின்னா ..



கருவாட்டு சந்தைக்கு

அவ வந்தா

சந்தயெல்லாம் ரோசாப்பூவாசம்

வீசும்...



ஆலவிழுதுல அவ

ஊஞ்சல் ஆடுற அழக

ரசிக்க ஊருகண்ணெல்லாம்

போட்டி போடும்... ...



சைக்கிள் கம்பியில

உட்கார்ந்து என்

நெஞ்சுல சாய்ஞ்சுகிட்டு

பக்கத்தூரு கொட்டகையில

சினிமா பார்க்க வருவா ..



செம்பருத்திக்கும் எனக்கும்

ஓடக்கர அம்மன்கோவிலுல

கல்யாணம் நடந்துச்சு ....



நாப்பது கெடாவெட்டி

நாக்குருசிக்க

கறிச்சோறு போட்டு

அசத்திபுட்டா அத்தக்காரி !



வானவில்லுகூட வாழ

ஆரம்பிச்சேன்;

வசந்தமுல்ல ஒண்ணு அவ

வயித்துல வளர

ஆரம்பிச்சுது..



ஒலகத்துல அழகானது

நிலாவும் இல்ல

மழையும் இல்ல

புள்ளய சுமக்குற

புள்ளத்தாச்சியோட முகந்தான் .



தங்கம்போல தகதகக்குற

அழகுமுகம்;

வைரம்போல மின்னலடிக்குது

அவமுகம்.



காள பொறக்குமோ

பசு பொறக்குமோன்னு

தெரியலை...



ஒம்பது மாசமாச்சு

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு யுகமா நகருது ....



வயக்காட்டுல நின்னாலும்

தென்னந்தோப்புல நின்னாலும்

உள்ளுக்குள்ள அவ நெனுப்பு

மட்டுந்தான் நிக்குது ....



உள்ளூரு மருத்துவச்சிக்கு

கையி நடுங்குதுன்னு

மேலத்தெரு மாணிக்கம்பய

சொல்லிட்டு போனதால ,



பக்கத்தூரு கவர்மெண்டு

ஆஸ்பத்திரியில் செம்பருத்திய

சேர்த்துபுட்டு வெளியில

நிக்கறேன்...



முள்ளுகுத்தினா கூட

தாங்கமாட்டா..



புள்ள பெக்குற வலிய

எப்படித்தாங்குவாளோன்னு

படபடன்னு அடிக்குது

நெஞ்சு...



பொம்பளைக்கு புள்ளய

குடுத்துபுட்டு

ஆம்பளைக்கு வலிய

குடுத்திருந்தா கையெடுத்து

கும்பிட்டிருப்பேன் கடவுள ....



அய்யோ அம்மான்னு

கத்துறா என் உசிர

சொமக்கற மகராசி ...



தூரத்துல ஒரு

வேதகோயில் சிலுவ

தெரியுது



புள்ள நல்லா பொறந்தா

நூறு தேங்கா உடைக்கிறேன்

சாமீ..



புள்ள பொறந்த சேதிய

அழுக சத்தம் சொல்லிடுச்சு



ஓடிப்போயி பார்த்தேன்

கறுப்புகலருல காளைக்கன்னு

கண்ணுமூடி தூங்குது !



புள்ளய எங்கையில

கொடுத்துபுட்டு

இடிய எங்காதுல

சொல்லுறா நர்சு ...



புள்ள சத்தம் கேட்டநிமிசம்

செம்பருத்தி சத்தம்

நின்னுடுச்சாம் ...



என் கறுப்புதங்கம் வெரச்சு

கெடக்கே!

மாமன்நான் பக்கத்துல

வந்தால படக்குன்னு

எழுந்திரிப்பா ....

மடைமடையா அழுவறேன்

ஒரு அசைவும் இல்லயே!

.

கையில ஒரு பிள்ள

அழுவுது

தாய்ப்பாலுக்கு



சுடுகாட்டுல பொதச்சு

பாலு ஊத்தியாச்சு

ஒரு பிள்ளைக்கு !





பதினாறு நாள் விசேசம்

முடிஞ்சுபோயாச்சு ...



செம்பருத்திய பொதச்ச

இடத்துல புல்லுபூண்டு

வளர்ந்தாச்சு..



கம்பியூட்டரு இருக்குன்னாக

செகப்பு வெளக்கு

வேன்வண்டி இருக்குன்னாக



என்ன இருந்து என்னத்த

செஞ்சாக..

பச்சபுள்ளைய மண்ணாக்கிபுட்டாக

வெள்ளச்சட்ட டாக்டர

நம்பினதுக்கு

கை நடுங்கின மருத்துவச்சிய

நம்பி இருக்கலாம் .

Thursday, August 09, 2007

காதல் நதியெனில் நட்பே கடல்!





1.சொல்ல முடியாத
காதலை நாளெல்லாம்
சொல்கிறேன்
நண்பனிடம்.

2.வெடித்து அழும் காதல்
நெஞ்சங்களின்
துடிப்பு சத்தம்
நண்பர்களுக்கு மட்டுமே
கேட்கிறது.

3.பூமியில்
விழுகின்ற மழைத்துளி
மண்ணில் கலக்கிறது
காதலில்
விழுகின்ற கண்ணீர்த்துளி
நட்பில் கலக்கிறது

4.காலமெல்லாம்
இலையுதிர்காலம்
காதல்.

காலமெல்லாம்
வசந்தகாலம்
நட்பு.


5.காதலில் நொறுங்கிய
இதயத்துகள்கள்
ஒன்றாக இணைவது
நட்பின் வார்த்தைகளில்.

Tuesday, August 07, 2007

பெயர் சொல் கண்மணி!



என் தோளில்
சாய்ந்து
நீ அழகாய் ஆயிரம்
கதைகள் பேசிய அற்புத தருணத்தில்
தோன்றி இருக்கலாம்...

என்னைப் பிரிந்து
தூரத்தில் ஒரு சிறுபுள்ளியாய்
நீ மறையும் தருணத்தில்
தோன்றி இருக்கலாம்....

யாரோ ஒருவனுக்கு
நீ மனைவியாக போகிறேன்
என்று தொலைபேசியில்
சொன்ன தருணத்தில்
தோன்றி இருக்கலாம்...

எப்போதும் தோன்றாத
ஒரு
உணர்வு இனி என்னிடம்
நீ பேசப்போவதில்லை
என்று உணர்ந்ததும்
கண்ணீராய் வழிந்தோடுகிறதே
இதற்கு என்ன
பெயர் சொல் பெண்ணே!