Saturday, October 31, 2009

சம்யுக்தை மற்றும் ஓர் மரணம்:



சம்யுக்தை மற்றும் ஓர் மரணம் - சிறுகதை


துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்.பதற்றம் கலந்த
அவசர தொனியில் அம்மா தொலைபேசியபோதே உணர்ந்துகொண்டேன் அவனை பற்றியே சோகச்செய்தியை பகிரப்போகிறாளென்று.
வீட்டை நெருங்க நெருங்க அதிகரிக்கிறது இதயத்துடிப்பு. முக்கியத்துவம் இழந்துவிட்ட அவனது மரணம் எவ்வித திடுக்கிடலையும் உண்டாக்கவில்லை என்றபோதும் கால்சட்டை பருவகால நண்பனின் இழப்பின் வலி மனதெங்கும் வியாபித்திருந்தது. கல்லூரிக்காலத்தில்
முறுக்கேறிய உடம்புடன் வலம் வந்த ஒருவனை மரணம் துரத்தும் கடைசி காலத்தில் இற்றுப்போன உடலாய் மங்கிய கண்களுடன் பார்க்க
எப்படி முடிந்தது அவனது அம்மாவால்? கடைசி நாட்களிலும் சம்யுக்தையின் நினைவுக்காட்டில் வழிதவறிய சிறுவனாகவே அவனை மாற்றியது எது? சாபம் தந்த தேவமகள் இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளது வாழ்க்கையில் இவனைப்பற்றி கணநேரம் சிந்திக்க நேரமிருக்குமா? சம்யுக்தா! சாபங்களின் தேவதையின் முகம் எனக்குள் உருப்பெற ஆரம்பித்தது.

சம்யுக்தையின் வருகை:


வறண்டு விரிசல் விழுந்த விளைநிலத்தில் சருகான பயிர்களாய் நின்றிருந்த எங்களது கல்லூரிக்குள் முதல்மழையாய் நுழைந்தவள் சம்யுக்தா.
வெட்டாத முடியும் சவரம் செய்யப்படாத தலையுமாக நூலகத்தில் அடைந்துகிடக்கும் அவனை அவள் கண்டநாள் இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. எப்போதும் கவிதைகளுக்குள்ளும் கதைகளுக்குள்ளும் புதைந்துகிடப்பவன் அவன். தூசி படர்ந்த பழைய புத்தகமாய் நூலகமே கதியென்று கிடந்தவனை நிமிரச்செய்த முதல் பெண் சம்யுக்தா.

மொட்டுகள் மலர்வதை போன்று இதழ்பிரித்து அவள் சிரிக்கும் லயத்தில் கல்லூரியின் ஒவ்வொரு கதாநாயகர்களும் வீழ்ந்தபோது எதற்கும் செவிகொடுக்காமல் கவிதைகிறுக்கனை நோக்கி சென்றவள்.கல்லூரிகளுக்கு பின்னாலிருக்கும் மரத்தடிகளில் அவனும் அவளும் கவிதைபேசி சிரித்தபோது வெந்து தணிவார்கள் நண்பர்கள். உலகின் மிகச்சிறந்த கவிஞனாக நாளை மிளிரப்போகும் அவனை பின்னாளில் உடைத்தெறிவாள்
என்று யாருமே எண்ணியதில்லை.

அவன்,அவள்,அவர்கள்:


தந்தை இல்லாத காரணத்தால் சிறுவயதிலேயே ஏழ்மையின் கொடிய கரங்களில் சிக்கி கடைகளில் சிறுசிறு வேலைபார்த்து அம்மாவையும் தங்கையையும் கவனித்த மிகச்சிறந்த உழைப்பாளி அவன். வீட்டுச்சுழல் மனதை நெருக்கும்போதெல்லாம் சம்யுக்தையுடனான பொழுதுகளே அவனை மீட்டெடுத்தன.

மில்லுக்கு சொந்தகார அப்பா,வியாபாரத்தில் கொடிகட்டி பறக்கும் சகோதரர்கள் வறுமை என்ற வார்த்தைகூட கேட்டிராத அவளுக்கு அவனது ஏழ்மை மீதான கரிசனமும் அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணமும் எப்போதும் இருந்தன.

அவர்களது உரையாடல்களை கடந்துசெல்லும் எவரேனும் கேட்கநேரிட்டால் ஐம்பது வருடங்கள் கழித்து பேசவேண்டிய விஷயங்கள் ஏன் இப்போது விவாதிக்கிறார்கள் என்றே நினைக்கத்தோன்றும். அவர்கள் பேசாத விஷயங்களில்லை காதலை மட்டும் கழித்துவிட்டால்.

அவனது மெழுகுவர்த்திரி:

காலம் எப்போதும் ஒரு முகத்துடன் நம்மிடம் பழகுவதில்லை. நேற்றொரு முகம் இன்றொரு முகம். இலக்கியம் பேசிய இடைவெளிகளில் சிறுக சிறுக நுழைந்த நேசம் பெரும்விருட்சமென வளர்ந்து நின்றபோது அவனக்கு அவனே அந்நியமாகியிருந்தான். காவியங்கள் மொழிந்த உதடுகள் இப்போது சொல்லுக்கும் மெளனத்திற்கும் இடையே அலைபாய்ந்து அடங்கின. அவளும் வார்த்தை தொலைந்த மெளனியாக கண்களுக்குள் ஏதோ தேடும் பார்வையுடன் வலம்வந்தாள்.

அவர்களிடையே கம்பீரமாய் நின்றிருந்த நட்புச்சுவர் இடிந்து துகள்களாகி காற்றில் கரைந்தபோது காதலென்னும் புது உலகிற்குள் நுழைந்தார்கள்.
என் நண்பனை நான் இழந்தது அப்போதுதான். அது எனக்கு அப்போது புரியவில்லை. மயக்கத்தில் திரிபவனிடம் எனது நட்புவார்த்தைகள் தொலைந்து போயிற்று.கரைமீண்ட அலையாய் அவனை உள்ளிழுத்துக்கொண்டாள் சம்யுக்தை.


சம்யுக்தையின் நீங்குதல்:


பட்டாம்பூச்சிகளுடனும் பூஞ்சிட்டுகளிடமும் பேசித்திரிந்தவன் அவளது பிறந்தநாளுக்கான பரிசுத்தேடலில் மிகத்தீவிரமாக ஈடுபட்டிருந்த நாளில்தான் சம்யுக்தை பற்றிய செய்தியொன்றி காற்றில் கசிந்து கல்லூரியை உலுக்கியது.

அவள் இனி கல்லூரிக்கு வரப்போவதில்லை எனும் செய்தியை கேட்ட நொடியில் கிளி அமர்ந்தெழும் உச்சிக்கிளையை போன்றதொரு சலனத்தை
அவனிடம் கண்டேன்.சம்யுக்தையின் திருமண அழைப்பிதழ்களை நண்பனொருவன் கொண்டுவந்தபோது முற்றும் துறந்த ஞானிகளின் தீட்சண்யம் அவனது பார்வையில் உணரமுடிந்தது.சொட்டுக்கண்ணீரோ அல்லது பிதற்றலோ இல்லாமல் மெளனியாக கல்லூரியைவிட்டு அவன் வெளியேறி சென்றது நண்பர்களுக்கு பெரும் துக்கத்தை பரிசளித்தது.

அவன்,நான்,மரணம்:

நினைவுகளிலிருந்து என்னை மீட்டெடுத்தது சப்தங்களால் நிறைந்த அவனது வீட்டு முற்றம். வீட்டிற்குள் நுழைந்து நார்க்கட்டிலில் பூமாலைகளுக்கு நடுவே முகம் மட்டும் தெரிய கிடத்தப்பட்டிருக்கிறான் அவன்.இருண்மை நிறைந்த கடைசி காலத்தில் நிறமிழந்த வாழ்க்கை ஒன்றை விருப்பத்துடன் தேர்வுசெய்து காரணம் சொல்லாமல் பிரிந்த சம்யுக்தைக்காக தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அவனது முகம் அமைதியின் வடிவாய் சலனமற்றிருந்தது.

அவனும் நானும் சந்தித்து உரையாடி மகிழ்ந்த பழைய கணங்களின் ஞாபகங்களோடு அந்த உடலை பார்க்கிறேன். சம்யுக்தையால் எனை பிரிந்த அவனை இறுக கட்டிக்கொண்டு அவனுள் நுழைகிறேன். யாருமே உணர்ந்து கொள்ளாத என் ஆத்மா அந்த உடலுக்குள் சங்கமித்து கண்ணயர்கிறது. என் இருத்தல் தொலைந்த வலியில் துடித்தழுது கொண்டிருக்கிறாள் அம்மா.

துயரம் படிந்திருக்கும் இந்தப் பாதையில் நினைத்துப்பார்க்காத நடுநிசி குளிரில் கனத்த மனதுடன் பயணிக்கின்றன என் பாதங்கள்..

-நிலாரசிகன்.

Thursday, October 29, 2009

முதிர்ந்த உயிர்




தொலைபேசி அலறும்
போதெல்லாம் நடுங்கும் கைகள்.

வீட்டு ஆண்களின் சத்தம்
உயரும் கணம் ஏதோ
முனகி அடங்கும் உதடுகள்.

பின்னிரவில் வீறிட்டு அழுகின்ற
குழந்தைகளுக்காய்
பிராத்தனைகளில் மூழ்கும் மனம்.

அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்.

வாழ்வின் அந்தியில்
நாட்கள் நகர்த்தும்
வீட்டின் முதிர்ந்த உயிரை
மூத்திரவாடை பாட்டி
என்கிறோம் நாம்.

Tuesday, October 27, 2009

நிசப்த பொழுதுகள்




1.
உலர்ந்த உதடுகள்
ஜன்னல் கம்பிகளில் பதிய
மழை வெறிக்கிறேன்.
சத்தமின்றி பெய்கின்ற
அடர் நீர்த்துளிகள்
சிறு சிறு குமிழ்களாகி
மெளனமாய் உடைகின்றன.
சப்தங்கள் மரணித்த
மழை
ஊனப் பறவையாய்
துடிதுடித்து அடங்கும்
தருணம்
எனக்கு மட்டும் கேட்கிறது
நிசப்தத்தின் சிரிப்பொலி.


2.
உச்சத்தின் முனகல்களை
அவள் வெளிப்படுத்த
எத்தனித்தபோது
உருவம் பெற்ற நிசப்தம்
அவளது சப்தங்களை
தின்று
என்னை நோக்கி வெறித்தது.
நிர்வாணத்தில் சுகித்திருந்தவனின்
கரம் பற்றி இழுத்துப்போனது.
இருளடைந்த அறைக்குள்
நுழைந்து
என்னை புணர் என்றது.
மறுப்பேதும் உரைக்காமல்
உடல் உதறி
நிசப்தத்திற்குள் நுழைந்துகொண்டேன்
நான்.


3.
அறைக்குள் மெல்ல
நுழைகிறது நிசப்தம்.
அரூப அலையாய்
என்னை சூழ்ந்துகொள்கிறது.
பின்,
பேரானந்தம் தரும்
கரங்களால்
என்னுயிரை திருகி எறிந்து
வெற்றுடல் மேல்
உமிழ்ந்து
ஒன்றும் அறியாத
பாவனையுடன் வெளியேறியது.
இப்போது,
ஓயாத பெரும் இரைச்சல்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நிசப்த கணங்களில்.

நன்றி: தடாகம்.காம்

Monday, October 26, 2009

பதிவ-நண்பர்களே - இதயம் காக்க உதவிடுங்கள்





நண்பர்களுக்கு,

என் நண்பர் ஒருவரின் சகோதரர் உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார்.அவரது இருதய அறுவை சிகிச்சைக்கு 150000 ரூபாய் தேவைப்படுகிறது. உதவ நினைக்கும் நண்பர்கள்
உதவலாம்.


மேலதிக விபரங்கள்:



Bank Accountno -> 12681
Account Name -> Saroja Rajagopalan
Bank & Branch -> IOB, West CIT Nagar Branch.
Chennai 600035.



நண்பரின் தாயார் அனுப்பியுள்ள மடல்:


05.10.2009

From
Saroja Rajagopalan,
Flno.13, Mohan Apartments,
107, South West Boag Road,
T.Nagar,
Chennai 600 017.
044-24311992
9445113326
mr.venkatesaprasath@gmail.com

Dear Sirs,

I introduce myself as mother of R.Vijayaraghavan who is a mentally retarded boy. He is suffering from Heart Disease (Hole in the Heart). The cost of Surgery is about Rs.150000/- (Rupees One Lakh and Fifty thousand only).

I request you all to help me financially to carry out the surgery at the earliest.


Thanking you,
Saroja Rajagopalan,

Saturday, October 24, 2009

படித்ததில் பிடித்தது:

எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS - 'A Life in Music' ,T.J.S George ] குறித்த ஜெயமோகனின் கட்டுரை.

சுட்டி:

http://jeyamohan.in/?p=4607

Tuesday, October 20, 2009

அப்பா சொன்ன நரிக்கதை




அப்பா சொன்ன நரிக்கதை
("சிறு"கதை)

1.

இந்த அப்பாவை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பத்து வயதான என்னிடம் இவ்வளவு பரிவாக
அப்பாவை தவிர யாரும் பேசியதில்லை. அம்மா எப்பொழுதும் வேலை வேலை என்று அலைபவள். காலை ஏழே முக்கால் ரயிலுக்கு
சென்றால் இரவு பத்து மணிக்கு மேல்தான் வருவாள். அவள் வருவதற்குள் நான் உறங்கிவிடுவேன். காலையில் எனக்கு
தலைசீவி விடும் நேரம் மட்டும் பேசுவாள். அப்பா மாலை ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவார்.
அப்பாதான் என்னை தூங்கவைப்பார். என் அருகில் அமர்ந்து கதை சொல்வார். காட்டில் நடக்கும் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை. சிங்கம்,புலி,கரடி எல்லாம் வசிக்கும் காட்டிற்குள் கதைவழியே அப்பா என்னை கூட்டிச்செல்வார்
ஒவ்வொரு கதையின் முடிவிலும் என் நெற்றியில் முத்தமிடுவார். நான் உறங்கியிருப்பேன்.
எங்கள் வீட்டில் அம்மா,அப்பா நான் மூன்று பேர் மட்டும்தான்.
அம்மா கொஞ்சநாளாக சிகப்பு நிறத்தில் பொட்டு வைத்துக்கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

2.

"எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ப்ரியா"

ஜன்னலோர இருக்கையில் நாவலுக்குள் மூழ்கியிருந்தவள் தலை உயர்த்தி பார்த்தேன். அவன் நின்றுகொண்டிருந்தான்.ரயில் சினேகன்.

"யெஸ்"

"உங்களுக்கு சம்மதம்னா உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்பறேன்"

இதை எதிர்பார்க்கவில்லை நான்.உடைந்த கண்ணாடி சில்லுகளாய் சிதறிப்போன வாழ்க்கையிலிருந்து மெல்ல இயல்புக்கு
திரும்பும் தருணத்தில் அவனது இந்தக்கேள்வி எனக்குள் பல கேள்விகளை கேட்டுப்போனது. விரக்தியான புன்னகையில்
அவனை கடந்து ஸ்டேஷனில் இறங்கி நடந்தேன். அவனது உருவம் செவி வழியே இதயம் புக முயற்சித்துக்கொண்டிருந்தது.
நாளை சம்மதம் சொல்ல மனசு விரும்பியது. சொல்வேன்.

3.

அப்பா நான் கேட்கும் எதையும் மறுத்ததில்லை. உடனே வாங்கி தந்துவிடுவார். தினமும் அப்பா சொல்லும் கதை கேட்பதற்காகவே
இரவுக்காக காத்திருப்பேன். இன்றும் அப்படித்தான் காத்திருந்தபோது,அருகில் வந்து கதை சொல்ல ஆரம்பித்தார்.இன்று நரிக்கதை.
சிறிது நேரத்தில் உறங்கிவிட்டேன். கொஞ்ச நேரத்தில் ஏதோ அரவம் கேட்டது.
அப்பாவின் சட்டையை கிழித்துக்கொண்டிருந்தாள் அம்மா. அப்பாவிடம்
சத்தம் போட்டு கத்திக்கொண்டிருந்தாள்.நான் தூங்கிக்கொண்டிருந்தவள் மெல்ல எழுந்து கண்கள் கசக்கி பார்த்தேன். எதற்காக அப்பாவை திட்டுகிறாள் என்று புரியவே இல்லை.

தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தார் என் இரண்டாவது அப்பா. கலைந்திருந்த என் ட்ரஸ்ஸை சரி செய்துகொண்டே எழ முயன்றேன்.முடியவில்லை.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

Saturday, October 17, 2009

1 நிமிடம் 10 குழந்தைகள் :(




1 நிமிடத்தில் பசியால் உலகெங்கும் மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 10 என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

காணொளி:




உதவ விரும்பும் அன்பர்கள்
இங்கே சொடுக்குங்கள்:

https://www.wfp.org/donate/1billion

Thursday, October 15, 2009

கழுவில் ஏற்றிய நீர்த்துளிகள்





காரணம் சொல்ல முடியாத துயரத்தில் உன் கண்கள் சிதறிக் கிடக்கும் கடற்கரையை வெறித்துக்கொண்டிருந்தன.
ஆர்ப்பரித்த அலைகள் உனது நீள் மெளனத்தின் அடர்த்தியை புரிந்துகொள்ளமுடியாமல் துடிதுடித்து அடங்கிய பின்னர் என் முகம் பார்த்தாய் நீ.
இருள் கவிந்த அந்த கருக்கலில் என்னை நோக்கி மிதந்து வரும் உன் பார்வை பரிதவிப்புடன் கூடிய இயலாமையின் கலவையாயிருந்தது.

உன்னை பரிகசித்த சொற்களின் கூர்மை கண்களோரம் கசியும் கண்ணீரில் மினுமினுத்தது.
ஆம்..நீ அழ துவங்கி இருந்தாய்.
மேகங்களினூடே பயணித்து பொல்லாத வானத்துடன் சண்டையிட்டு உனக்கென நான்
பறித்து வந்த நிலவுபொம்மை மீது விழுந்த உன் முதல் துளி கண்ணீரில் சட்டென்று நிமிர்ந்தது
நிலவு.
கண்ணீர் துடைக்க விரைந்த என் கைகளை பற்றிக்கொண்டு உள்ளங்கையில் முகம் புதைத்தழுதாய்.

தேவதைகளின் தேவதை உன் கண்ணிரின் மென்சூட்டில் வெந்துபோனது என் உள்ளம்(ங்)கை.
பதறிய நெஞ்சுடன் உன்னை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிடுகிறேன்.
நெஞ்சில் சாய்ந்தபடி மெல்ல விம்முகிறாய்.உன் விழியின் விசும்பல் சப்தத்தில் துடிக்கும்
என் இதயம் விசும்ப ஆரம்பித்துவிடுகிறது.
நெஞ்சம் நனைக்கும் உன் கண்ணீர் கண்ணாடி யன்னலில் மழை வரையும் ஓவியமென என்னில் படர்கிறது.
சொட்டு சொட்டாய் உன்னிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தீர்கிறது கனத்த இதயத்தின் வலிகள்.

ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே நாம் அமர்ந்திருக்கிறோம்.
உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை.
நாய்க்குட்டியின் தலையை வாஞ்சையுடன் தடவுவது போலுன் தலையை தடவிக்கொடுக்கிறேன்.
கன்னத்தில் நீர்க்கோடுகள் வரைந்த கண்ணீரை துடைக்கிறதென் கைகள்.

பட்டாம்பூச்சி பின்னோடும் பாவாடைச் சிறுமியின் குழந்தைமை நிரம்பிய மனதை ஒத்திருக்கிறது கடற்கரை மணலில் அழுதுகொண்டே நீ வரைந்த பூனைச் சித்திரம்.
அதிகரிக்கும் இருளின் காரணமாய் கலைந்து செல்கின்றனர் கடற்கரை மக்கள். நாம் மெல்ல நடக்க துவங்குகிறோம்.ரயில் நிலையம் வரை விரல்கோர்த்து ஏதும் பேசாமல் நடந்து வருகிறாய் நீ.

இருளை கிழித்தபடி வந்து நிற்கிறது ரயில். ரயிலேறும் வரை மெளனித்தவள், ரயிலேறிய பின்
நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய். கிளம்பிச் சென்றது ரயில்.

கைகள் நனைத்த உன் கண்ணீரின் ஈரம் என்னுயிரில் படிந்திருக்க கனத்த நெஞ்சுடன்
வீடு திரும்புகிறேன் நான்.
யாருமற்ற நிசப்த இரவில் பொழியத் தொடங்குகிறது வெள்ளை மழை.

Wednesday, October 14, 2009

கடைசியாக...




நீ+நான் = முடிவில்லா மனயுத்தம்

நான்+நான் = சுயமழித்து திரிதல்.

கர்த்தன்+புத்தன் = போதிமர சிலுவைகள்

கோபம்+பிடிவாதம் = உடைந்த கண்ணாடிக்காதல்

நேசம்+பாசம் = வறண்ட ஏரியில் துடிக்கும் நினைவுமீன்கள்

ஆத்மா+நாம் = உயிர் துறந்த உடல்கூடு

கடைசியாக,

தனிமை+தனிமை = ஈரம் கசியும் என் கவிதைகள்

Monday, October 12, 2009

அகநாழிகை முதல் இதழ் விமர்சனம்





சிற்றிதழ் நடத்துவது பற்றி ஒரு இதழாளர் சொன்ன வாக்கியம் "சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது". வேடிக்கையாக
தோன்றினாலும் இதன் பின்னாலிருக்கும் வலி சிற்றிதழ் நடத்துபவர்களாலும் அதை சார்ந்து இயங்கும் எழுத்தாளர்களாலும் மட்டுமே உணரப்படுவது. மிக முக்கிய காரணம் வெகுஜன இதழ்கள் போல் பல வகையான செய்திகளை சிற்றிதழ்கள் தாங்கி வருவதில்லை.
இதன் காரணமாகவே சிற்றிதழாளர்களின் வருமானம் அசலை விட எப்போதும் குறைவாகவே இருக்கிறது(ஒரே வார்த்தை "நஷ்டம்")
அதையும் மீறி பல சிற்றிதழ்கள் இன்று வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்படுவதற்கான மிக முக்கிய காரணம் இலக்கியம் மீதான
தீராத காதலும் தாகமும் எனலாம். நவீன விருட்சம் இதழ் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக வருவதற்கு காரணம் அதன் ஆசிரியர் அழகிய சிங்கர்
இலக்கியம் மீது கொண்ட தணியாத தேடல் மட்டுமே.

இம்மாதம் வெளியாகி இருக்கும் அகநாழிகை இதழின் உள்ளடக்கம் மிக நேர்த்தியானதாக இருப்பதை கண்ட போது இது முதல் இதழா அல்லது முப்பதாவது இதழா என்கிற சந்தேகமே என்னுள் எழுந்தது. இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் மற்றும் அவரது ஆசிரியர் குழுவின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

சிறுகதைகள்:

1.பூனைக்குட்டி - பாவண்ணனின் இந்த சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க இன்னும் இருநாளாகலாம். எங்கெல்லாம் பூனைக்குட்டியை
பார்க்கிறேனோ அங்கெல்லாம் "வைதேகி"யின் முகம் நிழலாடி மறைகிறது. அதீதமான ரோமங்கள் உடலெங்கும் வளர்ந்து,நோய் பீடிக்கப்பட்டு பூனைக்குட்டி பொம்மைகளுடன் மட்டுமே தன்னுலகை சிருஷ்டித்துக்கொள்ளும் அந்தச் சிறுமியின் உணர்வுகள் ஒவ்வொரு வரியிலும் நம்முடன் உரையாடி செல்கின்றன. (உமா மகேஷ்வரியின் மரப்பாச்சி சிறுகதையின் முடிவை ஒத்ததாக இக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது)

2.கிறக்கம் - யுவன் சந்திரசேகர். இம்மாதம் உயிர்மை,காலச்சுவடு,அகநாழிகை அனைத்திலும் யுவனின் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு கதைக்கும் மறுகதைக்கும் சம்பந்தமே இல்லை (நடையில்). வழக்கம்போலவே அசத்தலான புனைவு.

3.ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்- வெகு சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர் சுந்தர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படைப்பிது. உதாரணமாக இவ்வரிகளை குறிப்பிடலாம் "ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறைவிட்டான் என்று வாசித்துக்கொள்ளவும்).
பின்நவீனத்துவ கதை என்பதற்கான எல்லா அறிகுறியும் இக்கதையை நிறைத்திருக்கின்றன. சிறுகதைக்கு "தொடரும்" போட்டு முடித்திருக்கிறார்.

மேலும் நான்கு கதைகள்:

நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
மழை புயல் சின்னம் - விஜய் மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா(லக்கிலுக்)
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்

(இக்கதைகளுக்கான குறிப்பை அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி படித்து விடுங்கள் :)

கவிதைகள்:


இணையத்தில் பரவலாக எழுதும் கவிஞர்களின் படைப்பும் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கும் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

என்னை அதிகம் கவர்ந்த குறுங்கவிதை:

தன்னிரக்கம்:

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்.

-சேரல்

கட்டுரைகள்:


1.தமிழ்சினிமாவும் தமிழனும் சில மசால் வடைகளும் - அஜயன்பாலா சித்தார்த்:

2.ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - வே.அலெக்ஸ்

3.பரமார்த்த குருவும்
சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் - வளர்மதி

4.அலகிலா சாத்தியங்களினூடே... - வெ.சித்தார்த்

முதல் கட்டுரையில் தமிழ்சினிமா 80 முதல் 1990 வரை அலசி ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை தொகுத்திருக்கிறார் அஜயன்பாலா. To be honest மற்ற கட்டுரைகள் இன்னும் வாசிக்கவில்லை :)

பிற:

1.கேபிள் சங்கர் இயக்கிய 'விபத்து' குறும்பட அறிமுகம்
2.உரையாடல் சிறுகதை பட்டறை குறித்த தனதனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் ஆதிமூலக்கிருஷ்ணன்
3.டச்சு மொழி திரைப்பட விமர்சனம் - நதியலை

ஒரே குறை:

தலையங்கம் எங்கே? சரி வேண்டாம் முதல் இதழ் பற்றிய குறிப்பாவது ஆசிரியர் கொடுத்திருக்கலாம். படைப்பாளிகளுக்கு
மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் இதழ் நடத்தும் நான் பார்வையாளனாக இருந்துகொள்கிறேன் என்று நினைத்திருப்பாரோ?
பொன்.வாசுதேவனின் கவிதைகளும் இடம் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய +:

1.சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய இலக்கிய இதழ்கள் இரண்டு
உயிரெழுத்து(ஐந்து அல்லது ஆறு கதைகள்), யுகமாயினி(நான்கு கதைகள்).
அகநாழிகை முதல் இதழிலேயே ஏழு சிறுகதைகளுக்கு இடமளித்திருப்பது சிறுகதை இலக்கியம் மீதான வாசக ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.

2.சிறுகதைகளுக்கும்,கவிதைகளுக்கும் ஏற்ற புகைப்படங்கள்.

சந்தா மற்றும் மேலதிக விபரங்களுக்கு
இங்கே சுட்டுங்கள்

Sunday, October 11, 2009

முகம் விற்பவளின் இரவு



1. முகம் விற்பவளின் இரவு


பல ஆண்கள்
மூன்று பெண்கள்
ஒளிக்கண்களையுடைய
வெண்ணிற நாய்க்குட்டிகள்
ஆறு அல்லது ஏழு
இரண்டு துர்மரணம்
மற்றும்
நிறைவேறாக் காதலின்
கடைசிக் கண்ணீர்துளி
இவைகள் நிரம்பிய
நீண்டதொரு பயணத்தின்
முடிவில் அவள் தன் முகத்தை
வயதுமறைக்கும்
கண்ணாடியில் ரசித்துக்கொண்டிருக்கிறாள்
பக்கத்து அறையின்
கதவிடுக்கில் வழிந்துக்கொண்டிருக்கிறது
அவள்
ரத்தத்தின் கண்ணீர்.


2. கடலடியில் நகரும் இருள்*


என்னை நீங்கியவர்கள்
ஒன்று சேர்ந்து
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்
எனக்கெதிரான அம்புகள்
தயாரிக்கவும்
என் சவக்குழிப் பூக்கள்
வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டது
மாதங்கள் சில கழிந்தபின்
சாம்பல்களுக்கு நடுவில்
மயங்கிக்கிடந்தது என் பீனிக்ஸ்.
இனி,
எவ்விதத்தடையுமின்றி
அவர்கள்
சத்தமிட்டு சிரிக்கலாம்.



3. காற்றில் அலையும் இறகு*


எவர் கண்ணிலும் புலப்படாத
பறவை
நான்கு சமுத்திரங்களை
கடந்து வந்திருந்தது
கரிசல் நிறத்திலான அல‌கும்
செவ்வான்நிற உடலும்
கொண்டிருந்த அப்பறவை
வேம்பின் உச்சிக்கிளையில்
களைப்பாறி முடிந்தபின்
மேலேழும்பி பறக்க துவங்கியபொழுது
அதன் உடல் பிரிந்த இறகொன்று
காற்றில் கலந்தது
அக்கணத்தில்
சமுத்திரங்கள் உருமாற்றங்கொண்டு
மழைத்துளிகளாய் மண்ணில்
விழுந்து சிலிர்த்தன.

* இந்த இரு கவிதைகளும் இம்மாத அகநாழிகை இதழில் வெளியானவை.

Friday, October 09, 2009

நெஞ்சில் நிற்கும் சிறுகதைகள்



முன்குறிப்பு:


இந்தப் பதிவு சிறுகதைகள் மீது ஆர்வம் கொண்டு வாசிக்க ஆரம்பித்திருக்கும் ஆரம்பநிலை வாசக/எழுத்தாளர்களுக்கு மட்டுமே. சிறுகதைகளில் ஊறித் திளைத்த ஜாம்பவான்கள் Just close this window :)


உரையாடல் சிறுகதை போட்டி நடந்த பின்பு பலரது கவனம் சிறுகதைகளின் மீது திரும்பி இருக்கிறது.சிறுகதைகளை தேடி படிக்கும்
வலைப்பதிவு நண்பர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சிறுகதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில் தேடித்தேடி படித்த பல கதைகள் எப்போதும்
மனதுக்கு மிக நெருக்கமாய் இருக்கின்றன. ஏதேனும் ஒரு பொழுதில் அவை என்னுடன் உரையாடுகின்றன.சமயங்களில் சிறுகதையில் வாழும்
கதாபாத்திரங்களுடன் நாமும் பேசுகிறோம்/சிரிக்கிறோம்/அழுகிறோம்...இன்னும் பல "றோம்".

நான் வாசித்து நேசித்த சிறுகதைகளின் பட்டியல் இது.சிறுகதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். (சுட்டி கொடுக்க வில்லை,கதையின் தலைப்பை மட்டும் வைத்து சிறுகதைகளை தேடிப்பிடித்து வாசிக்கும் அனுபவம் அலாதியானது என்பதால்,மன்னிக்க!)

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
காகங்கள் - சுந்தர ராமசாமி
எண்ணப்படும்(வார்த்தை இதழில் வெளியானது) - நாஞ்சில் நாடன்
செப்டிக் - சிவசங்கரி
பத்மவியூகம் - ஜெயமோகன்
புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்
யாருமற்ற இரவு(உயிரோசை இணைய இதழில் வெளியானது) - உமா ஷக்தி
நூற்றி சொச்ச நண்பர்கள் - யுவன் சந்திரசேகர்
ஊர்வாய் (மயில் ராவணன் சிறுகதை தொகுப்பு) - மு.ஷரிகிருஷ்ணன்
சாட்டை(மணல்வீடு இதழில் வெளியானது) - கண்மணி குணசேகரன்
ஆண்கள் விடுதி அறை எண் 12 - திருச்செந்தாழை
கோடம்பாக்கம் - சாரு நிவேதிதா
காதுகள் - எழுதியவர் பெயர் நினைவில் இல்லை - ஆனந்தவிகடனில் வெளியானது
வெள்ளி மீன் - பெருமாள் முருகன்
ஆண்கள் படித்துறை - ஜே.பி.சாணக்யா
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
கடிதம் - திலீப்குமார்
ஆகாயம்,நகரம்,ஆண்மை - சுஜாதா
கச்சை,சர்ப்ப வாசனை(புனைவின் நிழல் தொகுப்பு) - மனோஜ்
மதனிமார்கள் கதை - கோணங்கி
கன்னிமை - கி.ரா
தனுமை,தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
எஸ்தர் - வண்ணநிலவன்
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன - எஸ்.ராமகிருஷ்ணன்
புலிக்கலைஞன் - அசோகமித்ரன்
அக்னி பிரவேசம் - ஜெயகாந்தன்
மாடுகள் - இமையம்
கடல் - பாவண்ணன்
அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
மரப்பாச்சி,அரளிவனம் - உமா மகேஸ்வரி
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
சைக்கிள்,அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
நடன விநாயகர் - சூடாமணி
சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்
வெயிலோடு போய் - தமிழ்செல்வன்
காடு - பா.செயப்பிரகாசம்
உயிரிடம் - அழகிய பெரியவன்
அமெரிக்காக்காரி - அ.முத்துலிங்கம்
வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
அழுவாச்சி வருதுங் சாமி - வாமு.கோமு



Extras:


மேலே பட்டியலில் உள்ளவை என் நினைவில் நிற்பவை மட்டுமே. மேலும் பிடித்த பல சிறுகதைகளின் ஆசிரியர் பெயர்கள் நினைவில் இருக்கின்றன.கதையின் தலைப்பு மறந்துவிட்டது.

இப்பதிவு எழுத அ.மு.செய்யதுவின் இந்தப் பதிவு மிக முக்கியகாரணம். அவருக்கு நன்றி.

சில சிறுகதை தொகுப்புகள் பற்றி நான் எழுதிய பழைய பதிவு இங்கே

தண்டம் - பூங்காற்று தனசேகர் எழுதிய சிறுகதை தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பல மாதங்களாக தேடுகிறேன்.

உங்களுக்கு பிடித்த கதைகளை பின்னூட்டமிடுங்கள்.

நன்றிகள் பல :)

Thursday, October 08, 2009

வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனம்



பழுத்த மஞ்சள் இலைகளை
ஒடித்துப்போடுகிறாள் வனத்தை
சுத்தம் செய்வதாக திரியும்
பாவனைப்பெண்.
பச்சை இலைகள் துயர்மிகுந்த
தலையசைப்புடன்
விடைகொடுக்கின்றன.
இளைப்பாற இலைதேடும்
வண்ணத்துப்பூச்சிகள்
வீழ்ந்து மரித்த மஞ்சள்
இலைகள் மீது வந்தமர்கின்றன.
பாவனைப்பெண்ணின் உடல்
கணப்பொழுதில்
நிறமிழந்து மண்ணில்
சரிகிறது.
அவள் உடலுக்குள்ளிருந்து
வெளியேறுகின்றன
அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்.

Thursday, October 01, 2009

வார்த்தை இதழில் கவிதை

நண்பர்களுக்கு,
இம்மாத(அக்டோபர் 2009) வார்த்தை இலக்கிய இதழில் என்னுடைய கவிதை பிரசுரமாகி இருக்கிறது. இத்துடன் அதனை இணைத்திருக்கிறேன்.