Thursday, October 15, 2009

கழுவில் ஏற்றிய நீர்த்துளிகள்





காரணம் சொல்ல முடியாத துயரத்தில் உன் கண்கள் சிதறிக் கிடக்கும் கடற்கரையை வெறித்துக்கொண்டிருந்தன.
ஆர்ப்பரித்த அலைகள் உனது நீள் மெளனத்தின் அடர்த்தியை புரிந்துகொள்ளமுடியாமல் துடிதுடித்து அடங்கிய பின்னர் என் முகம் பார்த்தாய் நீ.
இருள் கவிந்த அந்த கருக்கலில் என்னை நோக்கி மிதந்து வரும் உன் பார்வை பரிதவிப்புடன் கூடிய இயலாமையின் கலவையாயிருந்தது.

உன்னை பரிகசித்த சொற்களின் கூர்மை கண்களோரம் கசியும் கண்ணீரில் மினுமினுத்தது.
ஆம்..நீ அழ துவங்கி இருந்தாய்.
மேகங்களினூடே பயணித்து பொல்லாத வானத்துடன் சண்டையிட்டு உனக்கென நான்
பறித்து வந்த நிலவுபொம்மை மீது விழுந்த உன் முதல் துளி கண்ணீரில் சட்டென்று நிமிர்ந்தது
நிலவு.
கண்ணீர் துடைக்க விரைந்த என் கைகளை பற்றிக்கொண்டு உள்ளங்கையில் முகம் புதைத்தழுதாய்.

தேவதைகளின் தேவதை உன் கண்ணிரின் மென்சூட்டில் வெந்துபோனது என் உள்ளம்(ங்)கை.
பதறிய நெஞ்சுடன் உன்னை இழுத்தணைத்து நெற்றியில் முத்தமிடுகிறேன்.
நெஞ்சில் சாய்ந்தபடி மெல்ல விம்முகிறாய்.உன் விழியின் விசும்பல் சப்தத்தில் துடிக்கும்
என் இதயம் விசும்ப ஆரம்பித்துவிடுகிறது.
நெஞ்சம் நனைக்கும் உன் கண்ணீர் கண்ணாடி யன்னலில் மழை வரையும் ஓவியமென என்னில் படர்கிறது.
சொட்டு சொட்டாய் உன்னிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தீர்கிறது கனத்த இதயத்தின் வலிகள்.

ஒரு நீண்ட மெளனத்தின் நடுவே நாம் அமர்ந்திருக்கிறோம்.
உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை.
நாய்க்குட்டியின் தலையை வாஞ்சையுடன் தடவுவது போலுன் தலையை தடவிக்கொடுக்கிறேன்.
கன்னத்தில் நீர்க்கோடுகள் வரைந்த கண்ணீரை துடைக்கிறதென் கைகள்.

பட்டாம்பூச்சி பின்னோடும் பாவாடைச் சிறுமியின் குழந்தைமை நிரம்பிய மனதை ஒத்திருக்கிறது கடற்கரை மணலில் அழுதுகொண்டே நீ வரைந்த பூனைச் சித்திரம்.
அதிகரிக்கும் இருளின் காரணமாய் கலைந்து செல்கின்றனர் கடற்கரை மக்கள். நாம் மெல்ல நடக்க துவங்குகிறோம்.ரயில் நிலையம் வரை விரல்கோர்த்து ஏதும் பேசாமல் நடந்து வருகிறாய் நீ.

இருளை கிழித்தபடி வந்து நிற்கிறது ரயில். ரயிலேறும் வரை மெளனித்தவள், ரயிலேறிய பின்
நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய். கிளம்பிச் சென்றது ரயில்.

கைகள் நனைத்த உன் கண்ணீரின் ஈரம் என்னுயிரில் படிந்திருக்க கனத்த நெஞ்சுடன்
வீடு திரும்புகிறேன் நான்.
யாருமற்ற நிசப்த இரவில் பொழியத் தொடங்குகிறது வெள்ளை மழை.

15 comments:

said...

// நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய். கிளம்பிச் சென்றது ரயில் //

உலகமே நம்மை உற்று நோகிநாலும்...
நம் உள்ளத்தில் உள்ளவர்களின் பார்வையை
மட்டும் நம்மால் தனியே உணர முடியும்.....

said...

வலி மிகுந்த வரிகளாயினும், ஒரு சுகத்தையும் தருகிறது.

said...

படித்து முடிகையில் ஒரு வித மிதப்பு நிலைக்கு செல்வதை தவிர்க முடியவில்லை நிலா.
//யாருமற்ற நிசப்த இரவில் பொழியத் தொடங்குகிறது வெள்ளை மழை//
இறுதிவரிகளில் மிதப்புக்கான வஸ்து வைக்க தவறுவதே இல்லை நீங்கள்

said...

nalla irunkunga nila

Praba said...

Arumaiyana Kavithai.. arputhamaana varigal

உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை.

and the last line..

keep it up!

said...

அனுபவித்து எழுதப்பட்டுள்ள வரிகள்..
எல்லாத்துளிகளும் அற்புதம்,
ஒருதுளியை ஏந்தி மற்றத்துளிகளை உதறவிரும்பவில்லை..
அற்புதம் நண்பரே..
வாழ்த்துக்கள்.

L said...

Very moving...

said...

அந்த வெள்ளை மழையில் நனைந்தவர்களுள் நானும் ஒருவன்..

Anonymous said...

arputhamaana varigal...

said...

நல்ல வாசிப்பனுபவத்தை தந்த இடுகை!

nanthini said...

nalla irukkunu sollakudathu, anubavamai irukkirathu.

said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே.

said...

//நான்
பறித்து வந்த நிலவுபொம்மை மீது//

:)

//உன் குறுநகைக்காக சப்தம் தொலைத்து காத்திருக்கிறது அலை//

!

//குழந்தைமை நிரம்பிய//

intha vaarththai pidiththathu...

//ரயிலேறும் வரை மெளனித்தவள், ரயிலேறிய பின்
நான் மட்டுமே உணர்ந்து கொள்ளும் பார்வையொன்றை வீசினாய்//

attahaasam...:)

note seithavai thavira matravaiyum nallaayirukku...

miga iyalbaai virikirathu kaatchi...

vazhthukal nila!!

said...

photo ..........superb..:)

said...

intha pathivu vaasiththavudan naan munumunukkum paadal....

"oraayiram paarvaiyile..
un paarvaiyai naan ariven..."