Sunday, August 30, 2009

உபன்டு ஹோரி (1935 - 2009 ) - எதிர்ப்பின் குரல்



இந்த பிரபஞ்சம் எத்தனையோ சர்வாதிகாரிகளை கடந்துவந்திருக்கிறது. ஒரு தனி மனிதனின் சுயவிருப்பங்களுக்காக
பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறது இந்த பூமி. மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தின் வெறியாட்டங்களுக்கு
இரையான அப்பாவி உயிர்களை சரித்திரம் வலியோடு பதிவு செய்திருக்கிறது. சர்வாதிகாரம் என்னும் சொல்

உச்சரிக்கப்பட்டவுடன் எப்படி ஹிட்லரும் முசோலினியும் மனதில் தோன்றுவார்களோ அதுபோலவே உகாண்டா எனும் தேசத்தின் பெயரை கேட்கும்போதெல்லாம் வெறுப்போடு மனதில் தோன்றி மறையும் பெயர் இடி அமீன்.

இடிஅமீனின் வெறித்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இரையானவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம்.தன் தேச மக்களையே கொன்று குவித்த இடிஅமீனை தட்டிக்கேட்க மேலை நாடுகளே தயங்கியபோது உகாண்டா தேசத்தில் இருந்து முதல் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உகாண்டா மக்களால் பின்னாளில் அன்போடு "பெண்சிங்கம்" என்றழைக்கப்பட்ட கவிஞர்.உபன்டு ஹோரி. சர்வாதிகாரி இடிஅமீனின் கொடூர கண்கள் பயத்தில் நடுங்கியது ஹோரியின் கவிதைகளை படித்தபோதுதான்.

வடக்கு உகாண்டாவின் "டோகோலோ" மாநிலத்தில் ஒரு ஏழை விவசாயிக்கு மகளாக 1935ம் வருடம் ஆகஸ்டு 30ம் தேதி பிறந்தார் உபன்டு ஒடாயு ஹோரி. இளம் வயது முதலே ஹோரிக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்தது அவரது மாமாவின் நூலகம்(அவரது மாமா ஒடாயி மொபுட்டுவும் ஒரு கவிஞர்). வீட்டிற்கு அருகிலிருந்த
நூலகத்தில்தான் உலக இலக்கியங்களும் கவிதைகளும் ஹோரிக்கு அறிமுகமானது. தன்னுடைய பதிநான்காவது வயதில் கவிதை எழுத துவங்கியவர்
தன்னுடைய எழுபதாவது வயதுவரை எழுதிக்கொண்டே இருந்தார். இடிஅமீன் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட படுகொலைகளை பற்றி இவர் எழுதிய "A Man,who is a wolf' எனும் கவிதையை படித்தவுடன் இளைஞர்கள் புத்துணர்ச்சி பெற்று இடிஅமீனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சற்றும் தாமதிக்காமல் ஹோரியை கொல்ல உத்தரவிட்டான் அந்த கறுப்பின சர்வாதிகாரி.ஹோரி கவிஞர்களுக்கே உரித்தான மென்மனம் கொண்டவர் எனினும் அடக்குமுறைகளுக்கும் சர்வாதிகாரத்திற்கும் என்றும் தலைவணங்காதவர்.தன் வீட்டிற்குள் நுழைந்த இரு கூலி இராணுவத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு சூடானுக்கு தப்பிவிட்டார்.

அமெரிக்காவுக்கு பிடல்காஸ்ட்ரோவைபோல இடிஅமீனுக்கு ஹோரி சிம்மசொப்பனமாக விளங்கினார் எனலாம் சூடானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதும் இடிஅமீன் அவரை கொல்லும் முயற்சியை கைவிடவில்லை. இதுபற்றி பின்னாளில் இப்படி
விவரிக்கிறார் ஹோரி "கடவுளின் பிள்ளை என்றே என்னை எண்ணிக்கொள்வேன். ஒவ்வொரு முறை அமீன் என்னை கொல்ல ஆட்கள் அனுப்பும்போதும் ஏதாவது ஒருவகையில் தப்பிவிடுவேன். ஒருமுறை தப்பும்போது அருகிலிருந்த
ஆற்றிப்பாலத்திலிருந்து குதிக்க நேர்ந்தது. நீச்சல் அறியாதபோதும் நான் பிழைத்தது கடவுளின் செயலன்றி வேறென்ன?"

உகாண்டாவில் புரட்சி ஏற்பட்டு சவுதி அரேபியாக்கு இடிஅமீன் தஞ்சம் புகுந்த பின்னரே நாடு திரும்பினார் ஹோரி. கடந்த மாதம் இயற்கை எய்திய இந்த புரட்சிக்கவிஞரின் பெயர் இப்பூமி உள்ளவரை சரித்திர ஏடுகளில் நிமிர்ந்து நிற்கும் என உறுதியாய் சொல்லலாம்.

ஹோரியின் கவிதை "A Man,who is a wolf" ன் தமிழாக்கம்:

"கவுச்சி நாற்றமெடுக்கும்
நீ
ஓநாயை போன்றவன்.
ஓநாயை கண்டவுடன்
கதறி அழும் குழந்தை போன்றவர்கள்
என் தேச மக்கள்.
நான்
பயமென்பதை சற்றும் அறியாதவள்
உன் பிணத்தை கழுகுகள்
குதறும் நாளில்
பூக்கள் நிறைந்த தடாகமொன்றில்
ஆனந்த நீராடுவேன்.
பரிசுகளால் என் நண்பர்களை
வியப்பட செய்திடுவேன்.
மான்கள் நிறைந்திருக்கும் இக்காடுகளில்
சத்தமிட்டு ஓடி மகிழ்வேன்.
இரத்தம் குடிக்கும்
கறுப்பு ஓநாயே!
என் தேச இளைஞர்களின்
கைகளால் நிகழப்போகும்
உன் மரணத்தின்
திருநாளுக்காக காத்திரு"


"சார் நீங்க சொன்னமாதிரியே கற்பனையா ஒரு கவிஞரை பற்றி கட்டுரை எழுதி இருக்கேன் இந்தாங்க"
அந்த பிரபல வார இதழின் ஆசிரியரின் கைகளில் தான் எழுதிய கட்டுரைத்தாளை கொடுத்துவிட்டு எப்படியாவது இந்த
பத்திரிகையில் வேலைகிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டான் சக்தி.

-நிலாரசிகன்

Friday, August 28, 2009

பசுமை புரட்சி:

[மின்னஞ்சலில் வந்தது]

Thursday, August 27, 2009

வெயில் தின்ற மழை




1.

அனல் நிறைந்த கோடையில்
ஜனித்தவனுக்கு மழை
என்று பெயரிடுகிறீர்கள்.
அவனது மென் உணர்வுகளை
உங்களது அகோரச்சிரிப்பில்
மரிக்கச் செய்கிறீர்கள்.
அவனறியா பொழுதில்
வன்மத்தை அவனுள்
விதைத்து மறைகிறீர்கள்.
அரவம் தொலைந்த
நிசியில்
உணர்ச்சிகளின் வெளியில்
நடனமாடிச் சரிகிறானவன்.
இப்போது அவனுக்கு
வெயில் தின்ற மழை
என்று பெயரிடுகிறீர்கள்.

2.

எப்போதும் பிரிதலை பற்றிய
கனவுகளுடனே அவனிடம்
நீள்கிறது உங்களது உரையாடல்கள்.
அவனது வெள்ளை ப்ரியங்கள்
அனைத்திலும் இருளை
பூசுகின்றன உங்களது சொற்கள்.
கரம் பற்றி
உடல் தழுவி
இதழ் மலர்த்திய தருணங்களின்
தகிப்பில் அமிழ்ந்திருக்கும் அவனை
தேகம் தேடுபவன் என்கிறீர்கள்.
பழுப்பேறிய உங்கள் வார்த்தைகளில்
தன் சுயமழித்து திரிய
துவங்கிவிடுகிறான் அவன்.
சில்லென்ற மழைவீட்டினுள்
நிகழ்ந்தேறுகிறது அந்நியனொருவனுடனான
உங்களது பேரானந்த புணர்ச்சி.

3.

பூக்கள் ஒவ்வொன்றாய்
உதிர்வதை கனத்த மெளனத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தன அவனது
சிவந்த விழிகள்.
வீழ்கின்ற பூக்களுக்காய் சிறியதாய்
அழுதான்.
விழுந்த மலரொன்றை
கைகளுக்குள் மறைத்துக்கொண்டு
வனத்தில் புகுந்து மறைந்தான்.
அவனது உருவம்
புள்ளியென சிறுத்தபோது
உங்களது புருவம் விரிந்து மலர்ந்தது.
சிறு சிறு பிணத்துளியாய்
விழுந்து தெறிக்கிறது
மழை.

-நிலாரசிகன்.

Monday, August 24, 2009

என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்





1.

நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள்
நம் காதலை நிரப்பாதே!

2.

சப்தங்கள் தொலைந்த
ஓர் இரவில்
முத்தங்களால் என்னுயிர்
நிரப்பினாய்.
இப்போது,
அனல் நிரம்பிய அதிகாலைகள்
உயிர்வாங்குகின்றன
உன்
ஞாபக முத்தங்களால்!

3.

கடற்கரை மணலெங்கும்
விரவிக்கிடக்கும்
கால்தட கிறுக்கல்களில்
இன்னமும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்.

4.
மனதெங்கும் நுழைந்துவிட்டபின்
புணர்வது ஒன்றும்
பாவமில்லை என்றவள்
நீ.
வெந்நீர்பொழுதொன்றில்
என் நிழலையும்
நிராகரித்துச் சென்றவளும்
நீ.
உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்.

5.
நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

-நிலாரசிகன்.

Tuesday, August 18, 2009

Platinum Package கடவுள்!




1.
நேற்று:


நெல்லிக்காய்களும் கொல்லாம் பழங்களும் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் தினசரியில்.
ஐந்து பைசா,பத்து பைசா "சீட்டு" கிழிக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
சர்பத்,பழரச கடைகளில் பாதி கழுவப்பட்ட கண்ணாடி தம்ளரில் சர்பத்தை உறிந்துகொண்டே கடைக்கண் பரிமாற்றங்கள்
நடந்தேறும்.
சுற்றிலும் மினுக்கும் சீரியல் பல்புகளின் பிரகாசத்தில் சாமி படங்களும், எம்.ஜீ.ஆர்,காந்தி,காமராசர் படங்களும் அணிவகுத்திருக்கும்.
சைடுவாக்கில் பலூனை இழுத்துபிடித்து சட்டென்று ஊதி சிரிக்கும் பலூன் விற்பவன் குழந்தைகளின் கணகளுக்கு ஹீரோவாக
தெரிவான்.
வார்த்தை பரிமாற்றங்களுக்கு வழியில்லாத தாவணிகள் அம்மனை கும்பிட்டுக்கொண்டே "அவுகளை" ஓரக்கண்ணால் பார்த்து/பேசி
பரவசமடையும்.
முழுக்கை சட்டையும் புதுச்செருப்பும் வெடிச்சிரிப்புமாய் தூள் கிளப்பும் இளைஞர்படை.
மேலத்தெரு,கீழத்தெரு,வடக்குத்தெரு,தெக்குத்தெரு எங்கும் நிறைந்திருக்கும் "குழாய்" ஸ்பீக்கர்.
தென்னந் தட்டியால் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டகையினுள் அம்மன் பவனி வருவதற்காக தயார் செய்யப்படும் "சப்பரம்".
கரகாட்டத்தை சுற்றிலும் கூட்டம் குவிந்திருக்கும். கும்பக்காரியின் கால்களில் மையல் கொண்டிருக்கும் ஊர் கண்கள்.
பாயும் போர்வையும் விரித்து வில்லுப்பாட்டு கேட்பதற்கு மக்கள் திரண்டிருப்பார்கள்.

2.
இன்று:


"அம்மன்கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் - Fighter Team"
ப்ளக்ஸ் போர்டில் செல்போன் பேசியபடி நான்கு முகங்கள் கோவில் வாசலை மறைத்துக்கொண்டு இருந்தன.
நெல்லிக்காய் விற்ற இடத்தில் இப்போது கோர்நட்டா ஐஸ்கீரிம் விற்கிறார்கள்.
பட்டுத்தாவணிகளை காண மீண்டும் எண்பதுக்கு பயணிக்க வேண்டும். சுடிதார்புரியாகி இருந்தது கோவில்.
பலூனை ஊதுவதற்கு பதில் சிலிண்டரில் கேஸ் பிடித்து தருகிறார்கள்.சிறுவர்கள் பலூனை துறந்துவிட்டு வீடியோ கேம்ஸ் சிடி கடைகளில்
மொய்க்கிறார்கள்.
வில்லுப்பாட்டு பாட்டையும், "சிங்சாங்"கும் ரசிப்பதற்கு பூசாரியும் கடவுளும் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள்.
ஒன்பதிலிருந்து பத்து கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதற்கு "கோலங்களும்,செல்வியும்" காரணம் என்கிறார்கள்!!


3.
நாளை:


Platinum package பக்தர்களுக்கு வீடுதேடி வந்து கடவுள் தரிசனம் தருகிறார் எனலாம்.

Sunday, August 16, 2009

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை





நவம்பர்:

அவளது கண்களை எனக்கு பிடிக்கவேயில்லை. இரையை கண்டவுடன் பதுங்கும் பூனையொன்றின் குரூர பார்வையை அவளது கண்கள் கொண்டிருந்தன.ஜீவனற்ற அந்த விழிகளுக்கு சொந்தக்காரிதான் என்னிடம் அந்த தகவலை பகிர்ந்தவள். எதிர்பார்த்து சென்றவன் என்றபோதிலும் அந்த தகவலுக்கு அவள் சொன்ன காரணங்கள் மிகுந்த எரிச்சலையும்,கோபத்தையும் கடைசியாக இயலாமையையும் என்னுள் திணித்து சென்றன.

கழுத்தில் தொங்குகின்ற ஐ.டி கார்டை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். இப்போது அவளது
இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது. இன்றே கடைசி நாள் என்பதை புத்திக்குள் அந்த புன்னகை உணர்த்தியபோதும் இதயம் மட்டும் இடைவெளி விடாமல் துடிப்பது செவிகளில் ஒலித்தது.

குளிர்ந்த அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். லேசான தூறலுக்கிடையே வெயிலடித்தது. அலைபேசி சிணுங்கியது. அம்மா. "என்னய்யா ஆச்சு?" ஒரு நிமிட மெளனத்தை பதிலாக்க முயன்று தோற்று
மெல்லிய குரலில் சொன்னேன் "வேலை போயிடுச்சும்மா". மழை வலுக்க துவங்கியிருந்தது.

டிசம்பர்:

இறுக மூடிய அறைக்குள் என் உடலை சுமப்பது சற்று சிரமத்தை தந்திருக்கிறது. நவம்பர் மாதத்தின் இறுதியில் "அய்யோ பாவம்" என்று ஒயாமல் அலறிய நண்பர்கூட்டத்தை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
கூட்டைவிட்டு முதல் முறையாக வெளியேறும் சிறுபறவையென என்னறை விட்டு வெளியேறிய தினத்தில்
வீட்டுக்கார அம்மா வந்தார்கள். சவரம் செய்யப்படாத தாடியும்,இஸ்திரி செய்யப்படாத சட்டையும் அவருக்கு கலக்கத்தை தந்திருக்கவேண்டும். ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக இம்மாத வாடகை என்று இழுத்தவரிடம் இரு நாட்களை கடனாக பெற்றுவிட்டு திருவான்மியூர் கடற்கரை நோக்கி பைக்கில் விரைந்தேன்.

வாழ்க்கையில் சில தருணங்கள் மிக அழகானவை. மழையில் நனையும் காதலி, ரயில்நிலையங்களில் பாசம் ததும்ப அம்மாவை பிரியும் திருமணமான மகள்,எதிர்பாரா நேரத்தில் மடியில் அமர்ந்துகொண்டு "எங்க அப்பாதான் சூப்பர் அப்பா" என்றபடி கன்னத்தில் முத்தமிடும் குழந்தைகள்,மாலை மிதவெயிலில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டே மெதுவாய் செல்லும் இந்த பைக் பயணம்.

கடற்கரையில் அமர்ந்தவுடன் அலைபேசி அலையடித்தது. வினோத். "என்னடா ஏதாவது இன் டர்வியூ?"
"....................." "சரி விடு, உன் அக்கவுண்ட்க்கு மூவாயிரம் அனுப்பி இருக்கேன் செலவுக்கு வச்சுக்க"
முதல் முறையாக கண்கள் நிரம்பி வழிந்தது அன்றுதான். "இல்ல நான் சமாளிச்சுக்கறேன் வினோத்"
"அசிங்கமா திட்டிபுடுவேன் பேசாம இரு அப்புறம் சம்பாதிச்சு கொடுபோதும்,மீட்டிங் இருக்கு இராத்திரி கூப்பிடுறேன்" வைத்துவிட்டான்.

என் சிறிது நேர மெளனத்தை அழித்தபடி உள்நுழைந்தது மற்றொரு அழைப்பு. ***** அழைத்திருந்தான்.
"என்னடா வேலை போயிடுச்சாமே?" என்றவன் "உன்னால தாங்க முடியாதேன்னுதான் இவ்ளோ நாளா கால் பண்ணல ஒண்ணும் கவல படாத மச்சி வாழ்க்கைன்னா" தொடர்பை துண்டித்தேன். வேலைதானே போயிருக்கிறது. உயிரா போனது? போடா ம..

ஜனவரி:

நீண்ட பகலை கெளவிப்பிடித்திருக்கிறது
இருளின் பற்கள்.
பின்னிரவில் ஊளையிடும்
நாய்களின் சப்தம் பகலின்
கீற்றுகளாய் அறையெங்கும்
நிறைந்திருக்கிறது.
சன்னல் கம்பிகள் உயிர்பெற்று
தாண்டவமாடி வீழ்ந்து மரிக்கின்றன.
மிகுதியாகும் வெப்பத்தில்
நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்.
நான்..நான்..நான்..

பிப்ரவரி:

அமெரிக்காவிற்கு செல்வது இது இரண்டாம் முறை என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் ஆச்சர்யங்களும் என்னை சூழ்ந்துகொள்ளவில்லை. வழியனுப்ப வந்த நண்பன் காதோரம் கிசுகிசுத்தான். "ஆல் த பெஸ்ட் டா,நல்ல வேலைக்கும் பக்கத்துசீட்டுக்கு பாவனா மாதிரி ஒருத்தி வருவதற்கும்"

கத்தார் ஏர்லைன்ஸின் பணிப்பெண் போல செயற்கையாக சிரித்துவிட்டு உள்நுழைந்தேன். 27D சீட்டை தேடி அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் பக்கத்து சீட்டை பார்த்தேன். மனசுக்குள் அந்த பாடல் திரும்ப திரும்ப ஒலித்தது. விமானம் மேலேழும்பி மேகத்திற்குள் நுழைந்தபின்பு பக்கத்துசீட்டும் நானும் பேச ஆரம்பித்தோம்.
வாஷிங்டன் விமானநிலைய அதிகாரி தன் முதல் முத்தம் பற்றி நினைத்திருக்கலாம் அல்லது முதல் மனைவி பற்றி நினைத்திருக்கலாம். வழமையாக மூன்று மாதம் மட்டுமே வழங்கப்படும் விசாவை ஆறுமாதம் தந்துவிட்டு Have a pleasant trip என்றார். ட்ராலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன்.

மனசுக்குள் ஒலித்த அந்த பாடல்: பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி.

பின்குறிப்பு: நீங்க சொன்னது புரியல பாட்டி * 3 [நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் என்று அவர் சொன்னதை புரிந்துகொள்ள இப்படித்தான் மூன்று முறை கேட்கவேண்டியதாயிற்று.அவர் ஒரு சீனக்கிழவி]

மார்ச்,ஏப்ரல்,மே:

* வாசிங்டன்னிலிருந்து மூன்று மணிநேர பயணத்தொலைவில் இருக்கிறது பிலடெல்பியா.
* அலைபேசியில் இன்கம்மிங் காலுக்கும் காசு - எந்த காலத்துலடா இருக்கீங்க - Come to our beloved India!
* அன்பை நீங்கள் பகிர்வதே இல்லை - என் மீது அக்கறையே இல்லை - கிளிப்பிள்ளை மாதிரி இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாள் - பகிரப்படும் அன்பென்பது வார்த்தைகளில் இல்லை புரிதலில் இருக்கிறது என்பதை என்று புரியவைப்பது?
* அறைத்தோழன் ஜே.பி தீவிர அஜித் ரசிகர். மிகச்சிறந்த நண்பனாகி இருக்கிறான். அவனுக்கு கடன்பட்டிருக்கிறேன்.
* Dance Club செல்வதாக இருந்தால் ஏதேனும் ஐ.டி கார்டுடன் செல்ல வேண்டும். வாரநாட்களின் களைப்பு தீர
வார இறுதியில் வெள்ளைக்காரன் ஆடிப்பாடும் இடமிது.[கண்கள் நிறைந்த போதையில் ஒரு சிகப்பு நிற கூந்தல்காரி என்னிடம் ஏதோ சொன்னாள் அது என்னவெனில்...]
* சிறுகதை போட்டிக்கு முதல்சிறுகதையை எழுதி இருக்கிறேன். அறிவித்தவுடன் எழுதிவிட்டேன். வந்து குவிகின்ற சிறுகதைகளை பார்க்கும்போது மற்றொரு கதை எழுதியாகவேண்டும் என்றே தோன்றுகிறது.
* பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலில் அவரை சந்தித்தேன். கோவிலில் அரை மணிநேரமும்,மாலில் அரை மணிநேரமும் கதைத்தோம். என்னை சந்திக்க ஐந்து மணிநேரம் காரோட்டி வந்திருந்தார் அந்த அறுபது வயது இளைஞர்.அமெரிக்காவில் மழை பெய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று.
* இன்னைக்கு வந்திடும் நாளைக்கு வந்திடும் என்றார்கள் இன்றுவரை வரவேயில்லை - Project.
* சில ஆயிரம் டாலர்களை தொட்டு நிற்கிறது கடன். நாளைக்காவது வருமா அந்த புராஜக்ட்?
* என் சுயத்தில் கல்லெறிந்து விளையாடுவது ஒருவரின் பொழுதுபோக்காகி இருக்கிறது.கற்களை சேகரித்துக்கொண்டே வருகிறேன். சிலைவடிக்கலாம் அல்லது......

பின்குறிப்பு: சிகப்புநிற கூந்தல்காரி என்னிடம் சொன்னது பற்றி எழுத ஒன்றுமில்லை.

ஜூன்:

1.புளோரிடாவில் புராஜக்ட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை எல்லோரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
2.சொல்லிக்கொண்டு வருவதில்லை இடியும்,மழையும். Recession என்பதால் எட்டு வார புளோரிடா பயணம்
இரு நாட்களில் முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் வலித்தது. Its okay!
3.கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் சிறுகதை புளோரிடாவுக்கும் பிலடெல்பியாவுக்கும் இடையேயான விமான பயணத்தில் தோன்றியது. மடிக்கணினியை திறந்து எழுத ஆரம்பித்தேன். தோள்சாய எழுத்து மட்டுமே எப்போதும் உடனிருக்கிறது.
4.அமெரிக்க நண்பர் ஸ்டீவ் டின்னருக்கு அழைத்து சென்றிருந்தார்.அவர் மனைவி பார்பராவிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டேன். எனக்கு ஒரு மகன், ஸ்டீவுக்கு இரு மகள்கள் என்றார். முதலில் புரியவில்லை. புரிந்தபோது புரியாமல் இருந்து தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது.
5.பழையயார்க் என்று பெயர் வைத்திருக்கவேண்டும். ஏன் நியூயார்க் என்றார்கள் இன்னும் புரியவே இல்லை.
அமெரிக்காவில் குப்பைகளும் தொப்பைகளும் அதிகம் தென்படுவது நியூயார்காகத்தான் இருக்கவேண்டும்.
6.வாழ்வில் மிக முக்கியமானதொரு நபரை சந்தித்தேன் - ரிஷி - வாழ்க்கையின் ரகசியங்களை எனக்குள் ஏற்றி
எப்போதும் புன்னகைக்கும் வரத்தை தந்தவர்.He is a Gem.
7.ஐந்து வருட கனடிய தோழியை இம்முறையும் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஈழத்தின் வலி வார்த்தைகளிலும்,வாழ்க்கையிலும் தெரிகிறது அவளுக்கு. அவள் நலம் பெறல் வேண்டும்.
8.நட்பை பிரவாகமென சினேகத்துடன் பகிர்ந்தளிக்கும் மற்றோர் தோழியை சந்தித்து திரும்பினேன்.

ஜூலை:

பாப் மன்னனின் மரணத்தை மெக்டொனால்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டபடி "Iam shocked" என சொல்லிச் சென்றாள் ஆப்ரிக்க-அமெரிக்க குண்டுப்பெண்ணொருத்தி.

பிலடெல்பியா - வாசிங்டன் - தோகா - சென்னை - தூத்துக்குடி
அமெரிக்க பயணம் = Disaster
குற்றாலம் - மணிமுத்தாறு - பெங்களூர் - நெல்லை - மதுரை --> நண்பர்கள், நண்பர்கள்
2500 ரூபாய் - மீண்டும் வினோத்
அலறும் அலைபேசி - வேலை இல்லையா மச்சான்.வாழ்க்கைன்னா... - புன்னகை பதிலால் எதிர்முனை மெளனிக்கிறது இப்போது.
ஜீவன் முக்தி வாசிக்கிறேன்.
இரு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒருவரின் தவமாக ,மற்றொருவரின் வரமாக உருமாறியிருக்கிறேன்.

ஆகஸ்ட்:

#அன்பை பகிராதவன் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது அவ்வப்போது வேலை கிடைத்துவிடும் சீக்கிரம் என்கிற வாழ்த்துக்கு நடுவே. கல்லை நம்புகிறவர்கள் மனதை நம்புவதில்லை.
ஒன்றை துறந்தால்தான் மற்றொன்று நிலைபெறும். எல்லோரும் வேண்டுமெனில், சுயத்தில் கல்லெறிந்தவரை துறக்க வேண்டும்.

# "அம்மா நான் ஜெயிச்சுட்டேன்மா"

# வெயில் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்றும் இன்றும் பெய்யாத மழை நாளை பொழியும்.

-நிலாரசிகன்.

Thursday, August 13, 2009

அமிலம் நிறைந்திருக்கும் ஓடை




1.
கண்ணாடியை உடைப்பதற்கு
முந்தைய கணம் எனலாம்
நீர் வற்றிய குளத்தில்
எறியப்பட்ட கல் எனலாம்
கவனிப்பாரற்று மிதிபடும்
ரோஜா இதழ்கள் எனலாம்
மலநாற்றமெடுக்கும்
படுக்கை கிழவி எனலாம்
முரண்களால் நிறைந்த
நம் ப்ரியங்களை
சாக்கடைநிலவு என்றும்
வர்ணிக்கலாம்.
எதுவாயினும் புணர்ச்சிக்கு
பின்பு சொல்.

2.
திசைக்கொன்றாய் சிதறிக்கிடக்கும்
தலையணைகளின் நடுவில்
அல்லது
வியர்வைவாசத்தின் நீட்சியில்
உனக்கொரு
கதை சொல்ல துவங்குகிறேன்
அரவமற்ற கடற்கரையில்
கருப்புக் குதிரை மீது
காற்றின் வேகத்தில் பயணிக்கும்
அரசகுமாரனை பற்றிய கதையது.
அவனது நீண்ட பயணம்
முடியும் முன்னர்
துவங்கிவிட்டது......

3.
கரம் பற்றி
கவிதை கேட்டு
கனவின் மீதேறி பயணிக்கிறது
முத்தங்களால் நிறைந்திருக்கும்
நம் அறை.
களைத்து வீழ்ந்த பின்பொழுதிலும்
தலைகோதியபடியே இருக்கின்றன
நம் ப்ரியங்கள்.
காதோர கெட்ட வார்த்தைகளிலும்
சன்னல் கம்பிகளில் ஊர்ந்துசெல்லும்
எறும்பு வரிசையிலும்
நிலைக்கிறது
நம் மனம்.
வா மீண்டுமொரு முறை
குளிக்கலாம் என்கிறாய்
நீ.

இதயம் காக்க உதவிடுங்கள்..




சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.


பண உதவி செய்ய வேண்டிய முகவரி:

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Tuesday, August 11, 2009

ஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது



1.
பாசிகள் படர்ந்த குளக்கரையில்
மீனுடலை ருசித்துக்கொண்டிருக்கும்
காகங்களை வெறிக்கிறதுன் கண்கள்.
தளர்ந்த உனது கால் வழியே
ஊர்ந்துசெல்கின்றன எறும்புகள்.
நாய்கள் நிறைந்திருக்கும் அந்திம‌
காலத்தில் நீரூற்றிய
தொட்டிச்செடியில் வண்ணம்
உதிர்த்து பறக்கிறது பட்டாம்பூச்சி.
குழந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையை பரிசளித்து
சிரிக்கிறது காலம்.
மென்காற்றில் சிதறும் சாரலில்
நனைந்தபடி தனித்தழுகிறாய்
நீ.

2.
உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்.

3.
யாரோ ஒளிந்துகொண்டு உன்னையே
பார்ப்பதாக அடிக்கடி தோன்றுகிறது.
அதிர்வுகளால் நிரம்பி வழிகிறது
உன் தேநீர் கோப்பை.
இருளுக்குள்ளிருந்து எப்போதும்
கேட்கிறது ஏதோவொரு சப்தம்.
நீ நகர்ந்த பின்னும்
பிம்பங்களை காண்பிக்கிறது
கண்ணாடி.
மின்விசிறி அல்லது கூரை
இரண்டிலொன்று உன் சிரத்தை
விரட்டுகிறது.
கொக்குகளும் குருவிகளும்
உன் தலைமீதே எச்சமிட்டு
பறக்கின்றன
மழை கண்டால் மட்டும்
சிலிர்க்கிறது உன்னுடல்.
இனி,
நிம்மதியாய் சாகலாம்
நீ.

-நிலாரசிகன்.

Saturday, August 08, 2009

உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்
இன்று வெளியாகி இருக்கிறது.

சுட்டி:

http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

என்னுடைய "கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்" சிறுகதை
தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளில் ஒன்றாக வந்திருப்பது மிகுந்த‌ ம‌கிழ்ச்சியை
தருகிறது.

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி சிறுகதை எழுத தூண்டிய‌
சிவராம்/ஜ்வோவ்ராம் சுந்தர் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் வென்ற/கலந்துகொண்ட அனைத்து சிறுகதையாளர்களுக்கும்
வாழ்த்துகள்.

Monday, August 03, 2009

அவளது கடவுளர்கள்



மனதை வெல்வதான
அவளது வேஷத்தில்
இறந்துகிடக்கின்றன சில
ரோஜாக்கள்..
வேரில் மலர்ந்த மோகத்தீயில்
பிணக்குவியலானது
நிசப்தம் நிறைந்த பழைய
சொற்கள்..
பகிரத்தெரியாத நேசத்தின்
எல்லையில்
அவனது இருத்தல்
புள்ளியென மறைந்தழிந்தபோது
பழிவாங்குதலில் வென்றுவிட்டதாய்
இழிபுன்னகையில் ஒளிர்கின்றனர்
அவளது
கடவுளர்களும் கந்தர்வர்களும்.

Sunday, August 02, 2009

நண்பர்கள்....நண்பர்கள்...நண்பர்கள்...



1
2
3
4
5
ஆறாப்பு வரையில்
ஒன்றாய் ஒண்ணுக்கு போய்
சிலேட்டு குச்சி விழுங்கி
ஓணான் அடித்து
பொன்வண்டு சேகரித்து
மூக்கொழுகி திரிந்த
நண்பர்களுக்கும்
7,8,9,10 வரை
"போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில்"
நகசதையாய் திரிந்து
மாங்காயும்,நெல்லிக்காயும் திருடி
"சில்க்" நூலில் பட்டம்விட்டு
ஸைன்ஸில் முட்டை எடுத்து
வாத்தியார் நாற்காலியில் முள்வைத்து
முட்டி கிழிய கபடி விளையாடிய
நண்பர்களுக்கும்

11 12ல்
முளைக்காத மீசையை முறுக்கி
பெண்கள் பள்ளி பேரழகிகளின்
கடைக்கண்ணில் கெமிஸ்ட்ரி
தேடியலைந்து
பிஸிக்ஸில் பெயிலாகி
திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்
என் பால்ய
நண்பர்களுக்கு...


நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Saturday, August 01, 2009

உலகின் மிக மோசமான பெண்கள்




உலகின் மிக மோசமான பெண் - 1

உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை,
அவளது தேவை,
ஓர் ஓநாயை ஒத்திருந்தது.
அவளது கறுத்த இதழ்களில்
வழிந்தபடி இருந்தது முந்தைய தினத்தின்
எச்சில்கள்.
குழந்தையொன்றின் விரல்களை
கொறித்துக்கொண்டிருந்தன
அவளது கூரிய பற்கள்.
துடிதுடித்த குழந்தையின்
கதறலை அலைபேசிக்குள்
முகம் மறைத்து கடந்தனர்
சிலர்.
கவிதைக்குள் மறைந்துகொண்டேன்
நான்.
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை...

உலகின் மிக மோசமான பெண் - 2

நவீனத்தின் நீட்சியே நான்கு
காதல் என்றிடுவாள்.
புணர்ச்சியே பின்நவீனத்தின்
கோட்பாடு என்பாள்.
புரியாக்கவிதை எழுதும் ஐவரின்
கலியுக திரெளபதி
நான் என்றும் சொல்வாள்.
புரட்சிப்பெண் அவளின்
கண்களில் வழிகின்ற நஞ்சில்
நான்கு துர்மரணங்கள் நிகழ்ந்திருக்கும்.
அவள் உலகம்
அவள் வாழ்வு
அவள் அவள் அவள்
அவள் உலகில் தான்
அமைதியாக இருக்கிறான் அவன்.


உலகின் மிக மோசமான பெண்/ஆண் - 3

உலகின் மோசமான பெண்ணும்
மிக மோசமான பெண்ணும்
உலகின் மிக அற்புதமான
பெண்ணை சந்தித்தார்கள்.
ஆண்களில்லா உலகம்
உருவாக்குவது பற்றிய
தீர்மானம் நிறைவேறியது.
பிழைத்துக்கொண்டேன் என்றான்
உலகின் மிகச்சிறந்த
ஆண்.
பிழைகண்டேன் என்றான்
உலகின் மிக மோசமான
ஆண்.
சுற்றித்தொலைக்கிறது வெட்கம்தீரா
உலகம்.