ஈழ மண்ணில்
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்...
யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...
ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...
ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணீராகவும் தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...
இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று.
Monday, December 31, 2007
Thursday, December 13, 2007
கருவறை யுத்தமடா என் காதல்!
1.தன்
கூடு சுமந்து
நகரும் நத்தைபோல்
உன்
காதல் சுமந்து
நகரும் தத்தை
நான்.
2. உன் காதல்
பருகி உயிர்வாழும்
சக்கரவாகம்
நான்.
3.நீ முத்தமிட்டு
பரிசளித்த கொலுசுகள்,
இசைக்க மறந்து
சிணுக்கிவிடுமே
என்றுதான் சொல்லாமல்
வைத்திருக்கிறேன்
உன் பிரிவை.
4.நான் குள்ளம்
என்று கவலைப்படும்
அம்மாவிடம் என்ன
சொல்லி புரியவைப்பது
உன் நெஞ்சில்
இதழ் பதியும் உயரம்தான்
நான் விரும்புவதென்று!
5.வயிற்றில் சுமந்தபோது
அதிகம் மிதித்தேன்
என்று அம்மா அடிக்கடி
சொல்வாள்.
உன்னைச் சந்திக்க
கருவறையிலேயே துவங்கிவிட்டதோ
என் யுத்தம்?
6.விரைவில்
உன்னைச் சேர
ஆறு மாதங்களாய்
பிரகாரம் சுற்றுகிறேன்.
காதலுக்குத்தான் இரக்கமில்லை
கடவுளுக்குமா?
7. சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
மறைந்துவிட்டாய் நீ.
8. இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.
9. காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய்.
கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என்
இரவு.
10. பூவொன்றை கொய்வதுகூட
சாத்தியமற்றுப்போகலாம்
பூச்சூட நீ வருகின்ற
வரையில்.
Labels:
கவிதைகள்
Wednesday, December 12, 2007
இதயத்தால் இணைந்திடுவோம் தோழர்களே!
வினோத் Saivite பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன்.
வண்ண வண்ண கனவுகள் சுமந்து திரிகின்ற பட்டாம்பூச்சி.
வினோத்தின் அப்பா உயிருடன் இல்லை. அம்மா ஒரு தினக்கூலி.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் வினோத்.
வினோத்திற்கு இருதயத்தில் துளை இருப்பதாக மருத்துவர்கள்
கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய
வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கான செலவு ரூ. 1.5 லட்சத்தை அப்பல்லோ மருத்துவமனை
ஏற்றுக்கொண்டது.
இதர மருந்து செலவுக்காக ரூ 25 ஆயிரம் தேவைப்படுகிறது.
மனம் இருக்கும் நண்பர்கள் உதவ முன்வரலாம்.
உதவ விரும்பும் அன்பர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிக்கு
சென்று தங்களது உதவியினை அளிக்கலாம்.
http://www.helptolive.org/projects_detail.asp?id=62
இதேபோல் பிறந்து மூன்று மாதமே ஆன குழந்தை
சந்துருவிற்கும் இருதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.
உதவ விரும்பும் அன்பர்கள் உதவலாம்.
மேலதிக தகவலுக்கு: http://www.helptolive.org/projects_detail.asp?id=63
Labels:
மற்றவை
Tuesday, November 27, 2007
மெளனத்தின் சப்தங்கள்...
நிச்சயமற்ற ஒரு நேசத்தை
உனக்குப் பரிசாய் தந்து
தனிமைச் சிறைக்குள்
வாழ விரும்பும்
மழைமேகமாக...
இதயக்கல்வெட்டில் நீ
எழுதுகின்ற நேசமொழிகளை
இதயமின்றி வெட்டிவீசுகின்ற
வார்த்தைக்கோடரியாக...
உனக்குள் ஒரு உலகை
உருவாக்கி உன்னைவிட்டு
வெகுதூரம் பறந்துவிடத்துடிக்கும்
ஊனப்பறவையாக...
உன்னைப் பிரிந்துசெல்ல
தினம் தினம் என்னை
நானே செதுக்குகிறேன்
புதுப்புது உருவங்களாக...
Labels:
கவிதைகள்
Sunday, November 25, 2007
தினமணிக் கதிரில் என் சிறுகதைகள்
இன்றைக்கு(25/11/2007) தினமணிக் கதிரில்,என் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), வலைப்பதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.
இந்தச் செய்தியை காலையில் எனக்கு தொலைபேசியில் சொன்ன நண்பர் யோசிப்பவர். அவருக்கு என் நன்றிகள்.
Thursday, November 22, 2007
நெஞ்சுல மிதிச்சாலும் மகதான்..
துறுதுறுன்னு இருப்பாக
குறுகுறு பார்வ பாப்பாக...
நீ பொறந்த சேதிகேட்டு,
வெளியூரு போனவுக ஓடோடி
வந்தாக...
புள்ள உன் மொகத்த
பார்த்து என் காதுல
"எனக்கு பொறந்தது
பொண்ணு இல்ல பஞ்சுல
செஞ்ச செல"ன்னு சொல்லி
பூப்பூவா சிரிச்சாவுக...
கறைவேட்டியில தொட்டில
கட்டி நீ தூங்கற சொகத்த
விடிய விடிய பார்ப்பாவுக...
பொட்டபுள்ள உன்ன வள(ர்)க்க
படாதபாடு பட்டாவுக..
காலேசுக்கு நீ போக
கட்டவிரலு தேய தேய
சைக்கிள் மிதிச்சாவுக.....
ஒத்தப்புள்ள உன்ன
கண்ணுக்குள்ள வச்சு
வளத்தாக....
பெத்தபுள்ள கேட்டதெல்லாம்
சலிக்காம வாங்கி
தந்தாவுக...
கட்சி கட்சின்னு அலைஞ்சாக
பட்டி தொட்டியெல்லாம் போனாவுக..
காலேசுல நீ பட்டம்
வாங்கறத பார்க்க
ஆசைப்பட்டு வந்தவுகள
வார்த்தையால சாகடிச்சுபுட்டியே!
"எங்கப்பன் அமைச்சரோட எடுபிடின்னு
எப்படி சொல்லன்னு" கேட்டுபுட்டு
வெட்கப்படாம நிக்குறியே...
சிங்கம்போல வந்தவுக
செதஞ்சுபோயி நிக்காவுக
செதஞ்சுபோயி நின்னாலும்
காலேசுக்கு உன்ன கொண்டுவிட
சைக்கிள் எடுக்க போறாவுக...
வயசானா சைக்கிளுக்கு
துரு பிடிக்கும்..
வளர்ந்துபுட்டா
வளர்த்த கிளி மனசுக்குமா
துரு பிடிக்கும்?
Labels:
கவிதைகள்
Tuesday, November 20, 2007
காதலுக்கும் வலிக்கும் காதலர்களே!
பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக...
மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக...
கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களாக...
தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணீராக...
வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதியதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல், காதலாக..
Labels:
கவிதைகள்
Thursday, November 15, 2007
அவளுக்கு தேவதை என்று பெயர்...
1. உணவருந்தும் முன்
ஒரு நிமிடம்
கண்மூடி இறைவனுக்கு
நன்றி சொல்கிறாய்
நீ.
ஒரு மிகச்சிறந்த
ஓவியத்தின்
இறைவழிபாடு கண்டு
என்னை மறந்துபோகிறேன்
நான்.
2.ஆற்றில் குளித்துவிட்டு
கரையேறுகிறாய்
நீ.
ஆற்றுமீன்கள் எல்லாம்
துள்ளிவிழுந்து மரிக்கின்றன..
பிறவி பயன் அடைந்துவிட்டோம்
என்று முணுமுணுத்தபடி..
3. உனக்கான கவிதைகளைக்கண்டு
என் புறங்கையில் முத்தமிடுகிறாய்..
எங்களுக்கு விரல்கள்,
உனக்கு மட்டும் இதழ்களா என்று
கவிதைகளெல்லாம் ஒன்றுகூடி
என்னைப் பழிக்கின்றன!
4. படபடவென்று பேசிக்கொண்டிருக்கும்
உன் இதழ்களை மூடிவிடுகிறேன்.
படபடக்கும் உன்
விழிகளால் பேச்சைத்தொடர்கிறாய்
நீ.
பட்டாம்பூச்சி பின் ஓடுகின்ற
சிறுவனாக மாறிவிடுகிறேன்
நான்.
5. தெருவெல்லாம் வீழ்ந்துகிடக்கின்றன
பன்னீர் பூக்கள்..
பன்னீர்பூ மரத்திற்கு
யார் சொன்னது உன் வருகையை?
Labels:
கவிதைகள்
Monday, November 12, 2007
நடைபோடும் நதியாக...
சலசலப்பால் புலம்பியபடி
ஓடுகின்ற இந்த ஆறு
என்னை எனக்கு அறிமுகம்
செய்கிறது.
ஆற்றுக்குள் உருளுகின்ற
கூழாங்கற்கள் எனக்குள்
வசிக்கும் சிற்பத்தை
நினைவுபடுத்துகிறது...
நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க
ஆற்றைக் கடந்து
செல்கிறேன்.
எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.
ஓடுகின்ற இந்த ஆறு
என்னை எனக்கு அறிமுகம்
செய்கிறது.
ஆற்றுக்குள் உருளுகின்ற
கூழாங்கற்கள் எனக்குள்
வசிக்கும் சிற்பத்தை
நினைவுபடுத்துகிறது...
நிஜத்தின் கரங்கள்
என் உயிரை இறுக்க
ஆற்றைக் கடந்து
செல்கிறேன்.
எல்லா ஆறுகளும்
கடலைச் சேருவதில்லை.
Labels:
கவிதைகள்
Sunday, November 04, 2007
மழைநாளொன்றின் கிறுக்கல்கள்...
1.கறுப்புவெள்ளை மாலையொன்றினை
சிறகடிப்பால்
வர்ணமடித்துச் செல்கின்றன
ஒரு ஜோடி தேன்சிட்டுகள்.
2. இலை சிந்தும் துளியின்
அழகை முழுவதுமாய்
பருகுகின்றது பூமி.
3. மழையில் குளித்த
சிறுவனின் முகச்சுழிப்பில்
வற்றத்துவங்குகிறது சேறு.
4.நகருக்கு வெளியே
மலையென குவிந்திருக்கும்
குப்பையிலும் மலர்ந்திருக்கின்றன
பூக்கள்.
5. விரித்த குடையை
மடக்கும் போது கையில்
குத்திவிட்டது.
யாருக்குத்தான் மழை
பிடிக்காது?
6. ஓடிச்சென்று வாசல்
மூடுவதற்குள் உள்வந்து
தேனீர் கேட்கிறான் மழைவிருந்தாளி.
Labels:
கவிதைகள்
Tuesday, October 30, 2007
தவிப்புடன் ஒரு பாடல்...
முன்பாடல் சுருக்கம்:
காதலனை பிரிந்த ஒரு காதலி தவிப்புடன் பாடுகின்ற பாடலாய்
என் வரிகள்....
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
உன் காதல்பெற்ற மறுநொடி உயரப்பறந்தேன் உன்காதல் இழந்த
மறுநொடி சிறகிழந்து விழுந்தேன்
சிறகிழந்த பறவை நான் வாட, இறகென்றே என் காதலை
உதிர்த்து பறந்தாய் நீ
என்னைத் தேடி நீ வருவாய் என்றே காத்திருந்தேன், மண்ணைத்தேடி
வர மறந்த மழையாய் நீ
உன்னைத் தேடித் தேடி கால்கள் காணாமல் போனதே கண்கள் இரண்டும்
சகாராவானதே..
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
காரணங்கள் இன்றி பிரிவும் இல்லை
ரணங்கள் இன்றி காதலும் இல்லை
சோகங்கள் இன்றி காவியம் இல்லை
மேகங்கள் இன்றி வானமும் இல்லை
வாசல் தேடி நீ வரும் நாள் வாழ்க்கையற்று போவேனோ?
காதல் தேடி நீ வரும் நேரம் கற்சிலையாய் மாறிடுவேனோ?
வரம் கேட்ட என் நெஞ்சுக்கு வரமென்ன பிரிதலா?
புறம் சென்ற உன் நெஞ்சுக்கு ஈரமில்லை ஏனடா?
(ஒருநாள் பின்னிரவில் நான் விழித்திருந்தேன் உன் பிரிவால்
உள்ளம் தவித்திருந்தேன்..
ஜன்னலோர இரவுமழையில் நான் நனைந்திருந்தேன் உன் நினைவால்
என்னை மறந்திருந்தேன்..)
என் மெளனம் தின்றே உயிர்வாழ்கிறாய், உன் மெளனம்
கண்டே உயிர்வேகிறேன்...
கனவில் கூட நீ என்னை பிரிவதேன்? கவிதையில் கண்ணீராய நான்
கரைவதேன்?
ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் எப்போதும் தளிர்த்திருக்கும் மழை
காணும் ஆவலில் இந்தப்பூ எப்போதும் விழித்திருக்கும்..
Labels:
கவிதைகள்
Saturday, October 27, 2007
சக்களத்தி மக...
பொன்னாத்தாவுக்கு
கிறுக்கு முத்திப்போச்சு..
தெருவுல யாரக்கண்டாலும்
வெத்தலவாயால வையுது...
பொட்டிக்கட கந்தசாமி
சம்சாரம்தான் பொன்னாத்தா.
ரெண்டுநாளா உள்ளுக்குள்ள
பொகஞ்சது இன்னைக்கு
ஊரெல்லாம் பொகையுது..
ஊரெல்லாம் பஞ்சத்துல
தவிச்சப்போ வெளியூருக்கு
வேலைக்கு போனாரு
கந்தசாமி
போன இடத்துல பொன்னாத்தாவுக்கு
தெரியாம சோடிசேர்ந்து
வாழ்ந்துபுட்டாரு
பதினாறு வருசத்துக்கு
முன்னால நடந்த கத அது!
சக்களத்தி வீட்டு நாயிக்கு
இங்கென்ன வேலன்னு
வையுறா பொன்னாத்தா
குடியிருக்க குடுச இல்ல
அரவயித்துக்கு கஞ்சியும் இல்ல
ஆளுசரத்துக்கு வந்து
நிக்கா சக்களத்தி மக.
கால்ல விழுந்து பாத்தாரு
கையப்புடிச்சி கதறி பாத்தாரு
நல்லபாம்ப மிதிச்சே கொல்லற
பொன்னாத்தாவுக்கு
கோழிவந்தாலும் ஒதுங்கி போற
புள்ளபூச்சி கந்தசாமி எம்மாத்திரம்?
நாளைக்கு காலையில
பஞ்சாயத்து;
கால்சட்ட போடாத சிறுசும்
வரும்
கோவணத்தோட பெருசும்
வரும்
சாகப்போற கிழடுகளும்
வரும்
பஞ்சாயத்த நெனச்சுக்கிட்டே
பஞ்சாரத்து கோழிக்குஞ்சு
மாதிரி அடஞ்சு கெடக்கா
சக்களத்தி மக.
ஆயிரந்தான் இருந்தாலும்
அப்பன கேவலபடுறத
பார்க்க பிடிக்கல அவளுக்கு.
விடியக்கால ரெயில
புடிச்சி வடக்க போயிட்டா.
அவ சாயல்ல ஒருத்திய
பம்பாயில
படுக்கையில பார்த்ததா
தெக்குத்தெரு முனியசாமி
சொல்லிட்டு போறான்.
தப்பான பொறப்புன்னா
தப்பாத்தான் போகனும்னு
சாபம் ஏதும் இருக்கா?
Labels:
கவிதைகள்
Wednesday, October 24, 2007
ரோஜாப்பூக்கள் கவிதைகள்...
1. ரோஜாப்பூக்கள்
உனக்குப் பிடிக்குமென்று
தெரிந்தும் மல்லிகைப்பூக்கள்
மட்டும் வாங்கிவருகிறேன்..
ஆசையுடன் பிரித்துப் பார்த்துவிட்டு
ரோஜாக்கள் எங்கே என்று
பார்வையால் கேட்கிறாய் நீ..
உலகின் மிக அழகிய
ரோஜாக்கள் இவைதான்
என்று சொல்லி
உன் கன்னம் கிள்ளுகிறேன்..
வெட்கத்தில் பூத்து நிற்கிறாய்
ரோஜாவாய்.
2. உன் கண்பொத்தி
பால்கனி அழைத்துச்செல்கிறேன்
மெதுவாய் என் விரல்நகர்த்தி
பார்க்கிறாய்..
நீ வளர்த்த ரோஜாசெடியில்
சின்னதாய் ஒரு மொட்டைக்
கண்டு சிலிர்க்கிறாய்...
மொட்டைக் கண்டு
மலர்கின்ற ரோஜா
நீயென்று உன்னை
அள்ளிக்கொள்கிறேன்
நான்.
3. பனித்துளிகள்
சுமந்து நிற்கும் ஒரு
ரோஜாவை உனக்கென
கொய்து வந்து
பனித்துளிக்குள் உன்
முகம் காண்பிக்கிறேன்...
குழந்தையென அதில்
உன்னைக் காண்கிறாய்
குழந்தையாகிறோம்
நாம்.
4.
அழகிய புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன் என்கிறாய்
நீ.
உன் கூந்தலில் ஒரு
ஒற்றை ரோஜாவை சூடி
விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா மலர்ந்திருக்கிறது
என்கிறேன்
நான்.
பவித்திரமானதொரு புன்னகையை
சிந்துகிறாய் தரையெங்கும்
மல்லிகைபூக்கள் சிதறுகின்றன...
5. நீ ஆசையாய்
வளர்த்த சிறுரோஜாசெடி
வாடிப்போனது..
துடித்துப்போனாய்
நீ.
உனக்கென புதிதாய்
ஒரு செடி வாங்கி வந்தேன்
சட்டென்று பூத்து
சிரிக்கிறாய்
செடி கண்டவுடன்.
உன் மெல்லிய மனம்
கண்டு,
நீ பெண்ணா இல்லை
பூவா
என்று புரியாமல்
தவிக்க ஆரம்பிக்கிறேன்
நான்.
Labels:
கவிதைகள்
உயிரிலே கலந்தவள்...
அதிகாலை எனை எழுப்ப
எனக்குப் பிடித்த பாடலை
காதோரம் பாடியபடி
என் தலைகோதுவாயே
அதைவிடவும்...
பிறந்தநாள் பரிசு
என்னவென்று ஆர்வமுடன்
நீ என்விழி நோக்க,
உன் நெற்றியில் ஒற்றைமுத்தம்தந்து
நான் உன்விழி நோக்க,
வெட்கத்தில் என் மார்பில்
புதைந்துகொண்டாயே
அதைவிடவும்...
என் உயிரை நீ
சுமந்தபோது இந்தப்பாதங்கள்
நடக்கவேண்டியது மண்மீது
அல்ல மலர்கள் மீது என்று
அறைமுழுவதும் மல்லிகைப்பூக்களை
பரப்பியிருந்ததைக் கண்டு
ஆனந்த அதிர்ச்சியில் அழுது
என் தோள்சேர்ந்தாயே
அதைவிடவும்...
பலநாட்கள் நம்மை
பிரித்த வெளிநாடு
பயணம் முடிந்து
வீடு வந்தவுடன் ஓடிவந்து
அணைத்துக்கொள்ளாமல்
உன்
மடிசாய்த்து தாலாட்டு பாடினாயே
அன்றுதான் உணர்ந்தேன்
என் தாயுமானவள் நீ என்று.
Labels:
கவிதைகள்
Monday, October 22, 2007
உயிரிலே கலந்தவன்...
அதிகாலை எழ எத்தனிக்கும்
என்னை உனக்குள் இழுத்து
உயிர்மலர செய்வாயே
அதைவிடவும்...
அரைநாள் தொலைபேசியில்
பேசிவிட்டு வைத்த மறுநொடி
மீண்டும் அழைத்து
குரல்ரசிக்கும் அழைப்பிது
என்று செல்லமாய் துண்டிப்பாயே
அதைவிடவும்...
பெண்மையின் வலியுணரும்
நாட்களில் எனக்கு
முன்விழித்து சூடான
தேனீர் தந்து நெற்றிமுத்தமிடுவாயே
அதைவிடவும்...
குழந்தை பிறந்தவுடன்
வெளியூரிலிருந்து ஓடிவந்து
குழந்தை பார்க்காமல்
என் கன்னம்தொட்டு ஒரு
நேசப்பார்வை பார்த்தாயே..
அன்றுதான் உணர்ந்தேன்
தாயுமானவன் நீ என்று.
Labels:
கவிதைகள்
Friday, October 19, 2007
உதிர்வதில்லை உதிரப்பூ
மெதுவாய் மிக மெதுவாய்
அங்கும் இங்குமாய்
அசைந்தபடி காற்றில் மிதந்து
பூமி நோக்கி வருகிறது காய்ந்த
பூவொன்று....
புழுதிக்காற்று வந்து வாசமென்னும்
கற்பை பறித்தது எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?
மகரந்தம் முழுவதையும்
கந்தகம் மறைத்துக்கொண்ட
சோகம் எண்ணி
வீழ்கிறதா இந்தப் பூ?
மரணத்தை அழைப்பிதழாக
அனுப்பிய இந்த பூமியை
பழித்துக்கொண்டே
வீழ்கிறதா இந்தப் பூ?
விழுந்தாலும் புன்னகை
செய்துகொண்டே வீழ்கின்ற
பூ சொல்லிற்று உலகிற்கு
ஓர் நற்செய்தி..
விழுவது நானாகிலும்
எழுவது ஈழமென்று!
Labels:
கவிதைகள்
மழைபோல் வந்தவளே
முன்பாடல் சுருக்கம்:
மனசுக்குள் காதல் பூத்திருந்தும், இதழ் திறந்து சொல்ல தைரியமில்லை இருவருக்கும். அவர்களின் மனம்பாடும் பாடல் இது.
ஆண்:
மழைபோல் வந்தவளே என் மனசெல்லாம் பூத்தவளே
அலைபோல் வந்தவளே என் இதயக்கடலில் முத்தானவளே
உந்தன் பூவிழி கண்ட அன்று என் தாய்மொழிகூட தடுமாறியதே
உந்தன் தேன்மொழி கேட்கும் அன்று என் தாய்மொழி காதலாகுமே!
காதலின் வலிக்கு மருந்தாக நீ வேண்டுமடி
காலமெல்லாம் பிள்ளையாக நான் மாற, வேண்டுமே உன் மடி!
பெண்:
பூவை என்னை பூவாக மாற்றிய வசீகரன் நீயடா
தேவை உந்தன் பார்வை என்றே இதயம் துடிக்கிறதடா
உன்னை எண்ணி காதலென்னும் இலக்கியம் எழுதுகிறேன்
உன்னைக் காணும்போதெல்லாம் வெட்கத்தில் ஊமையாக மாறுகின்றேன்
என் இதழ் திறக்கும் முன்னே உன் காதல் சொல்வாயா?
காற்றில் உன் காதல்கலந்து என் இதயம் நுழைவாயா?
ஆண்:
நிலா பார்க்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் உன் முகம்
உலா போகும் தென்றலும் உன்பெயர் சொல்லிப் போகும்
நீ இல்லாத வாழ்க்கை மழை இல்லாத பூமியடி
இதழ்திறந்து வார்த்தையொன்று சொல் மழையாவேன் நானடி..
பெண்:
இரவுக்கு இரக்கமில்லை இதழுக்கு ஈரமில்லை
கண்ணுக்கு உறக்கமில்லை கவிதைக்கு வார்த்தையில்லை
கனவெல்லாம் உன்னோடு கைகோர்த்து நடக்கின்றேன்
நினவெல்லாம் உன் நினைவோடு தனியுலகில் வசிக்கின்றேன்
சம்யுக்தை நானாகிவிட்டேன் புரவியேறி வருவாயா?
புரவியற்று வந்தாலும் உன் விரல்பற்றி நடப்பேன் ஓடோடிவருவாயா!
மனசுக்குள் காதல் பூத்திருந்தும், இதழ் திறந்து சொல்ல தைரியமில்லை இருவருக்கும். அவர்களின் மனம்பாடும் பாடல் இது.
ஆண்:
மழைபோல் வந்தவளே என் மனசெல்லாம் பூத்தவளே
அலைபோல் வந்தவளே என் இதயக்கடலில் முத்தானவளே
உந்தன் பூவிழி கண்ட அன்று என் தாய்மொழிகூட தடுமாறியதே
உந்தன் தேன்மொழி கேட்கும் அன்று என் தாய்மொழி காதலாகுமே!
காதலின் வலிக்கு மருந்தாக நீ வேண்டுமடி
காலமெல்லாம் பிள்ளையாக நான் மாற, வேண்டுமே உன் மடி!
பெண்:
பூவை என்னை பூவாக மாற்றிய வசீகரன் நீயடா
தேவை உந்தன் பார்வை என்றே இதயம் துடிக்கிறதடா
உன்னை எண்ணி காதலென்னும் இலக்கியம் எழுதுகிறேன்
உன்னைக் காணும்போதெல்லாம் வெட்கத்தில் ஊமையாக மாறுகின்றேன்
என் இதழ் திறக்கும் முன்னே உன் காதல் சொல்வாயா?
காற்றில் உன் காதல்கலந்து என் இதயம் நுழைவாயா?
ஆண்:
நிலா பார்க்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் உன் முகம்
உலா போகும் தென்றலும் உன்பெயர் சொல்லிப் போகும்
நீ இல்லாத வாழ்க்கை மழை இல்லாத பூமியடி
இதழ்திறந்து வார்த்தையொன்று சொல் மழையாவேன் நானடி..
பெண்:
இரவுக்கு இரக்கமில்லை இதழுக்கு ஈரமில்லை
கண்ணுக்கு உறக்கமில்லை கவிதைக்கு வார்த்தையில்லை
கனவெல்லாம் உன்னோடு கைகோர்த்து நடக்கின்றேன்
நினவெல்லாம் உன் நினைவோடு தனியுலகில் வசிக்கின்றேன்
சம்யுக்தை நானாகிவிட்டேன் புரவியேறி வருவாயா?
புரவியற்று வந்தாலும் உன் விரல்பற்றி நடப்பேன் ஓடோடிவருவாயா!
Labels:
கவிதைகள்
Friday, October 12, 2007
திசைகள்
இருள்கவியும் பொழுதொன்றின்
எதிர்பாரா சந்திப்பில் திகைக்கின்றன
நம் கண்கள்...
தனித்திருந்து
நிறமிழந்துவிட்ட
இரவொன்றை உள்ளுக்குள் சுமந்தபடி
எதிரெதிர் திசைகளில்
நடக்கத்துவங்குகிறோம்
நாம்
Labels:
கவிதைகள்
Wednesday, October 10, 2007
நிலாநேசம்
இரவின் வெளிச்சத்தை
ரசிக்க உன்னை
அழைக்கிறேன்.
இரவல் வெளிச்சமது
என்று விஞ்ஞானம்
பேசுகிறாய்.
ரசனைக்கும் நிதர்சனத்திற்கும்
இடையே பெருவெளியொன்று
உருவாகி மெளனமாய்
நம்மிடையே வந்தமர்கிறது.
மெளனம் கலைக்க
போராடி தோற்கிறேன்
எதிர்பார்ப்புகளற்ற பார்வையொன்றை
பரிசாகத் தருகிறாய்
நமக்கு தூதாக இயலாமல்
போனதற்காக வருந்தி
கரையத் துவங்குகிறது
நிலா.
Labels:
கவிதைகள்
Wednesday, September 26, 2007
ஜீவநதி
சாய்வு நாற்காலியில்
மருகிக்கிடக்கிறது
உடல்.
அசைகின்ற தென்னங்கீற்றின்
சங்கீதத்தில் சங்கமிக்கிறது
மனம்.
வாசற்கதவு திறக்கும் சத்தம்கேட்டு
எழ எத்தனித்து முடியாமல்
தளர்கிறது உடல்.
யாராக இருக்கக்கூடும் என்கிற
எண்ணம் வளர்ந்து பெருகி
யாரென்று அறியும்வரை
அடங்காமல் தவிக்கிறது
மனம்.
உடலுக்கும் மனதிற்குமான
இடைவெளி அதிகமானதை
செவிகளில்
உணர்த்துகிறது இதயத்துடிப்பின்
சத்தம்.
முதுமையிலும் தளராமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
உள்ளுக்குள் ஒரு ஜீவநதி.
மருகிக்கிடக்கிறது
உடல்.
அசைகின்ற தென்னங்கீற்றின்
சங்கீதத்தில் சங்கமிக்கிறது
மனம்.
வாசற்கதவு திறக்கும் சத்தம்கேட்டு
எழ எத்தனித்து முடியாமல்
தளர்கிறது உடல்.
யாராக இருக்கக்கூடும் என்கிற
எண்ணம் வளர்ந்து பெருகி
யாரென்று அறியும்வரை
அடங்காமல் தவிக்கிறது
மனம்.
உடலுக்கும் மனதிற்குமான
இடைவெளி அதிகமானதை
செவிகளில்
உணர்த்துகிறது இதயத்துடிப்பின்
சத்தம்.
முதுமையிலும் தளராமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
உள்ளுக்குள் ஒரு ஜீவநதி.
Labels:
கவிதைகள்
Tuesday, September 25, 2007
"ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூடம்"
குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்பார்கள்.
தெய்வத்திற்கு தங்கத்தில்
கோவில் அமைத்த
நாடு நம் பாரத நாடு.
ஆனால்,
ஏழை குழந்தைகளுக்கு
படிக்க முழுமையான
வசதிகள் இன்னும்
இல்லாத நாடும் நம்
பாரத நாடே!
குழந்தைகள் பட்டாம்பூச்சிகள் போன்றவர்கள்.
கவலையின்றி வானில் அவர்கள் பறக்க வேண்டும்.
நம்நாட்டில் சிறகுகள் முளைக்கும் முன்பே
உதிர்ந்து போன பட்டாம்பூச்சிகள் ஏராளம்.
இந்நிலை மாறிடல் வேண்டும்.
நாளைய நம்பிக்கை
விருட்சங்கள் குழந்தைகள்.
படிக்க வசதி இல்லாமல்
எத்தனையோ மொட்டுக்கள்
இன்றும் செங்கல் சுமக்கவும்
சாலைகளில் செய்தித்தாள்
விற்கவும்,
உணவுவிடுதிகளில் எடுபிடிகளாகவும்
வாழ்ந்துகொண்டிருப்பதை வேதனையுடன்
பார்க்கிறோம்..
இதற்கு இளைஞர்களாகிய(குறிப்பாக அதிகமாய் சம்பாதிக்கும் நம் போன்ற கணிப்பொறி மென்பொருளாளர்கள்)
என்ன செய்தோம் என்கிற கேள்வி
என்னுள் பலநாட்களாக எழுந்தது.
அதற்கு விடைகொடுத்தது www.helptolive.org என்கிற இணையதளம்.
முழுக்க முழுக்க ஒரு தனிமனிதரின்(இவர் ஒரு கணிப்பொறி மென்பொருளாளர்) முயற்சியால்
உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 400க்கும் அதிகமான தன்னார்வ உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.
கூரையின்றி வாழ
வாழ்க்கை அனுமதிக்கிறது
கூரையின்றி படிக்க
குழந்தைகளை அனுமதிக்கலாமா?
சரியான பள்ளிக்கட்டிடங்கள் இல்லாமல்
தவித்து நிற்கின்றன 260 பிஞ்சுக்குழந்தைகள்.
நாளைய நம்பிக்கைகளுக்கு வாழ்க்கையின்
ஏணிப்படியில் ஏற கைகொடுப்பது நம்போன்ற
இளைஞர்களின் கடமை அல்லவா?
உதவ விருப்பமிருக்கிறது....ஆனால் எப்படி
உதவ என்று தெரியாமல் உதவிச்சிறகுகளை
சுருக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கே
இந்த மடல்.
உதவ வேண்டிய திசையை நான் காண்பித்திருக்கிறேன்
உதவிட முன்வருவீர்களா?
இதைப்பற்றி நண்பர்களுக்கு/தெரிந்தவர்களுக்கு தெரிவியுங்கள்
அதன் மூலமாகவும் உதவிகள் வரலாம்.
இத்தளம்(www.helptolive.org) பற்றி அல்லது பணம் அனுப்புவது பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால் எனக்கு
மடலிடுங்கள்.
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
நிலாரசிகன்.
Monday, September 24, 2007
Thursday, September 20, 2007
தில்லி To ஆக்ரா
"என்னங்க நாம எப்போ தாஜ்மஹால பார்க்க போறோம்?" ஆர்வமுடன் கணவனிடம் கேட்டாள் கனகம்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.
"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "
"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"
என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.
தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்
"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.
தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது
"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.
வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்.
"அடச்சே உன்னோட இதே வம்பா போச்சு ரெண்டு நாளா எப்ப வாய திறந்தாலும் தாஜ்மஹால் தாஜ்மஹால் ....மனுசன நிம்மதியா இருக்க விடமாட்டியா?" கோபத்துடன் கத்தினான் வாசுதேவன்.
"நம்ம பக்கத்துவீட்டு பஞ்சாப்காரி போய் பார்த்துட்டு வந்து என்னமா பேசுறா,என்னால சகிக்க முடியலிங்க "
"அவ புருசன் சர்கார்ல வேல பாக்குறான் டீ, என்னை மாதிரி குதிரைவண்டியா ஓட்டுறான் ?"
"
என்னைக்குத்தான் நீங்க நான் கேட்டு சரின்னு சொல்லியிருக்கீங்க" அழ ஆரம்பித்துவிட்டாள் கனகம். ""சரி சரி உடனே கண்ணுல தண்ணி வந்துருமே? நாளைக்கு காலைல போலாம்" சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
மறுநாள் அதிகாலை உற்சாகமாய் எழுந்து உணவு தயார்செய்தாள் கனகம்.
தாஜ்மஹாலை நோக்கி ஆரம்பித்தது அவர்களது பயணம்
"எம்மாம் பெருசுங்க...என்னால நம்பவே முடியலை ... சாமி எப்படித்தான் கட்டினாங்களோ?" ஆச்சர்யத்துடன் தாஜ்மஹாலைக் கண்டு வாய்பிளந்தாள் கனகம்.
தாஜ்மஹால் அருகே திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது
"வழிவிடுங்கள்...ஓரம்போங்கள்" என்று எல்லோரையும் அதட்டிக்கொண்டே சென்றனர் குதிரையில் சென்ற இருவர்.
வெண்நிற குதிரையொன்றில் பரிவாரங்கள் சூழ தாஜ்மஹால் நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஷாஜஹான்.
Wednesday, September 19, 2007
"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு"
ஐந்து வார்த்தைக் கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
www.nilaraseegansirukathaigal.blogspot.com
www.nilaraseegansirukathaigal.blogspot.com
"ஐந்து வார்த்தைகளில் கதை"
ஐந்து வார்த்தைக் கதையை படிக்க இங்கே சொடுக்குங்கள்.
www.nilaraseegansirukathaigal.blogspot.com
www.nilaraseegansirukathaigal.blogspot.com
Monday, September 17, 2007
இருநிமிடக் கதைகள் - என்னுரை
கவிதை வானில் சிறகடித்துப் பறப்பது எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று. ரசனைகளையும் கற்பனைகளையும் கவிதையாய் வடிக்கையில் ஏற்படும் ஒரு உணர்வு வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
கவிதைகளை விட்டு முதல்முறையாக சிறுகதை உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறேன். கதை என்று வரும்பொழுது முகத்திலடிக்கும் நிஜங்களும், நிகழ்வதை பதிவு செய்கின்ற விதமும் கதைக்கும் கவிதைக்கும் பல வேறுபாட்டினை எனக்கு உணர்த்தியது.
எழுதுகின்ற களம் வேறுபடும் பொழுது, எழுதுகின்ற வார்த்தைகளும்,வரிகளும் எனக்கே வித்தியாசமாகபட்டது.
இதை எழுதியது நானா என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தது.
அதற்கு பதிலாக நான் உணர்ந்து என்னவெனில், படைப்பாளி என்பவன்
பலதரபட்ட முகம்கொண்டவனாக இருத்தல் வேண்டும். அதுவே அவனுக்கும் அவன் மொழிக்கும் வளம் சேர்க்கும்.
இக்கதைகளில் நான் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு அதை உணர்த்தலாம்.
என் கவிதைகளையும், கதைகளையும் ஒப்பீடு செய்யாமல் படிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இங்கே என் சிறுகதைகளை படிக்கலாம் --> http://nilaraseegansirukathaigal.blogspot.com/ உங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
கவிதைகளை விட்டு முதல்முறையாக சிறுகதை உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறேன். கதை என்று வரும்பொழுது முகத்திலடிக்கும் நிஜங்களும், நிகழ்வதை பதிவு செய்கின்ற விதமும் கதைக்கும் கவிதைக்கும் பல வேறுபாட்டினை எனக்கு உணர்த்தியது.
எழுதுகின்ற களம் வேறுபடும் பொழுது, எழுதுகின்ற வார்த்தைகளும்,வரிகளும் எனக்கே வித்தியாசமாகபட்டது.
இதை எழுதியது நானா என்கிற கேள்வியும் என்னுள் எழுந்தது.
அதற்கு பதிலாக நான் உணர்ந்து என்னவெனில், படைப்பாளி என்பவன்
பலதரபட்ட முகம்கொண்டவனாக இருத்தல் வேண்டும். அதுவே அவனுக்கும் அவன் மொழிக்கும் வளம் சேர்க்கும்.
இக்கதைகளில் நான் எழுதியிருக்கும் சில வார்த்தைகள் உங்களுக்கு அதை உணர்த்தலாம்.
என் கவிதைகளையும், கதைகளையும் ஒப்பீடு செய்யாமல் படிக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.
இங்கே என் சிறுகதைகளை படிக்கலாம் --> http://nilaraseegansirukathaigal.blogspot.com/ உங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
Friday, September 14, 2007
நிதர்சனங்கள்..
1.நடு வீதியில்
திருஷ்டிக்கென்று உடைக்கப்படும்
பூசணிக்குள் ஒளிந்திருக்கிறது
கடந்து செல்பவனின்
விதி.
2. மனம் சார்ந்த நட்பை
எதிர்ப்பார்த்து ஏமாறும்
வேசியின் கண்களை
ஒத்தது உன்மேல் காதலுற்று
ஏமாந்த என் இதயம்.
3. வீடு திரும்பும்வரையில்
வீதியில் காத்திருந்தது
குடும்பம்.
வீடு திரும்பியவுடன்
வீதியே காத்திருக்கிறது
குடிகாரனின் கடுஞ்சொற்களுக்காக!
4. வேலியோர முட்புதரில்
எலியொன்று இறந்த
செய்தியை இருநாட்களாய்
சொல்லிக்கொண்டே
இருக்கிறது துர்நாற்றத்தால்.
Monday, September 10, 2007
நிராகரிப்பின் வலி....
1. கண்ணுக்குள் விழுந்துவிட்ட
தூசி நீ.
உன் உறுத்தலும் கூட
உரிமை என்றே எண்ணித்தவிக்கிறது
என் இதயம்.
2.பூக்கள் பறிக்கும்
சிறுமி என்ற மகிழ்வுடன்
உன் கைகளில் விழுந்து
துடிக்கிறது
என் இதயப்பூ.
3.தவிர்த்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்.
4. நிராகரிப்பின் வலி
உணரவேண்டுமா?
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்.
பதிலேதும் பேசாத மெளனத்தால்
உணர்த்துகிறேன்.
Sunday, September 09, 2007
Thursday, September 06, 2007
காதலின்றி வேறில்லை
1.இலையில் தங்கிய
மழைத்துளியில்
முகம்பார்த்துக்கொள்ளும்
பூக்கள்போல்
வெட்கத்தில் உள்ளங்கையில்
முகம்புதைக்கிறாய்
நீ.
2.ஓடி வந்து கால்கள்
கட்டிக்கொள்ளும் குழந்தை
போல் கட்டிக்கொள்வாயா
உனக்காக நான் சுமந்து
திரியும் காதலை?
3. உன்முகம்போல் ஜொலிக்க
முடியவில்லையே என்கிற
ஏக்கத்தில்,
ஒளித்துளிகளை கண்ணீராய்
சிந்திக்கொண்டிருக்கிறது
நீ
பற்றியிருக்கும் கம்பி மத்தாப்பு!
4. உன்னை கொஞ்சுவதுதான்
நான் செய்யும் மிகப்பெரிய
வேலை என்று
என்னிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறது
நம் காதல்.
Monday, September 03, 2007
கொடிநாள் நியாபகங்கள்...
காஷ்மீர்
பாகிஸ்தான்
மதக் கலவரம்
ஜாதிக்கலவரம்
சுனாமி
அனைத்திற்கும் வேலியாய்
உன் வீரம்.
உனக்காக என்னசெய்தோம்...
வானம்நோக்கி சுட்டு
மரியாதைசெலுத்தி பின்
மறந்துபோனதை
தவிர!
பாகிஸ்தான்
மதக் கலவரம்
ஜாதிக்கலவரம்
சுனாமி
அனைத்திற்கும் வேலியாய்
உன் வீரம்.
உனக்காக என்னசெய்தோம்...
வானம்நோக்கி சுட்டு
மரியாதைசெலுத்தி பின்
மறந்துபோனதை
தவிர!
உன் குரல்கேட்பேனா?
துப்பாக்கியின் கடைசி
தோட்டா எப்போது
தீருமோ என்று ஒருபோதும்
கலங்கியதில்லை.....
குண்டடிபட்டு விழுந்த
தோழனை தோளில்
சுமந்து சென்றபோது
எதிர்தாக்குதலில் மடிவேனோ
என்று ஒருபொழுதும
எண்ணியதில்லை...
வெற்றி ஒன்றே குறியாய்,
குறிக்கோளாய் முன்னேறுகையில்
தோல்வி குறித்த செய்தி
செவிகளில் விழுந்தபோதும்
மீண்டெழுவோமா என்று
ஒரு பொழுதும்
நினைத்ததில்லை...
முட்களுக்கு நடுவே
வாழ்கின்ற இவ்வாழ்க்கையில்
"உன் குரல்கேட்பேனா" என்று
உயிர்தொட்டு நீ எழுதிய கடிதம் களத்தில்
தொலைந்துவிட்டதை எண்ணித்தான்
கலங்கிநிற்கிறேன் கண்மணி!
தோட்டா எப்போது
தீருமோ என்று ஒருபோதும்
கலங்கியதில்லை.....
குண்டடிபட்டு விழுந்த
தோழனை தோளில்
சுமந்து சென்றபோது
எதிர்தாக்குதலில் மடிவேனோ
என்று ஒருபொழுதும
எண்ணியதில்லை...
வெற்றி ஒன்றே குறியாய்,
குறிக்கோளாய் முன்னேறுகையில்
தோல்வி குறித்த செய்தி
செவிகளில் விழுந்தபோதும்
மீண்டெழுவோமா என்று
ஒரு பொழுதும்
நினைத்ததில்லை...
முட்களுக்கு நடுவே
வாழ்கின்ற இவ்வாழ்க்கையில்
"உன் குரல்கேட்பேனா" என்று
உயிர்தொட்டு நீ எழுதிய கடிதம் களத்தில்
தொலைந்துவிட்டதை எண்ணித்தான்
கலங்கிநிற்கிறேன் கண்மணி!
கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்...
(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)
பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்
நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...
எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!
எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!
எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!
கல்லூரித்தாயே!
உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.
உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..
கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....
இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!
அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!
என் ஜன்னல்த்தோழனே!
நலமா நீ?
எங்கே என் மரத்தோழன்?
கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?
தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?
நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.
இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...
இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!
பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.
இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.
உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.
இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.
இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!
இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?
பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.
-தொடரும்....
பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின்ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்
நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...
எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!
எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!
எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!
கல்லூரித்தாயே!
உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.
உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.
அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..
கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....
இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!
அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது!
என் ஜன்னல்த்தோழனே!
நலமா நீ?
எங்கே என் மரத்தோழன்?
கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?
தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?
நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.
இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...
இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!
பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.
இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.
உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.
இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.
இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.
பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!
இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்?
பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.
-தொடரும்....
Wednesday, August 22, 2007
நேற்றுப் பெய்த மழை...
நிலம்பார்த்து தலைகவிழ்வதே
வெட்கம் என்று எண்ணியிருந்த
எனக்கு
விதவிதமாய் வெட்கப்பட
சொல்லிக்கொடுத்தவன்
நீ.
அஞ்சனம் சிறிதெடுத்து
என் கன்னத்திலிட்டு
நம் காதலுக்கு இது
திருஷ்டிபொட்டு என்றுசொல்லி
மெதுவாய் என் கன்னம்தட்டி
சிலிர்க்கவைத்தவன்
நீ..
இலைகளில் தங்கியிருக்கும்
பனித்துளிகள் சேகரித்து
என் முகம்துடைத்து
"பனித்துளியில் குளித்த
பூ இவள்" என்று காதோரம்
கவிதைமொழிந்து
ஆனந்தக்கண்ணீர் சிந்தவைத்தவன்
நீ..
உனக்கே நானென்ற
எண்ணத்தில் தீ எறிந்து
சென்ற உறவுகளால்
உன்னைவிட்டு பிரிக்கப்பட்டு
திருமணம்முடிக்கப்பட்டு
ஜன்னல்கம்பிகள் வழியே
மழைக்குள் உன்னைத்
தேடுகின்றேன் நான்.
-நிலாரசிகன்.
வெட்கம் என்று எண்ணியிருந்த
எனக்கு
விதவிதமாய் வெட்கப்பட
சொல்லிக்கொடுத்தவன்
நீ.
அஞ்சனம் சிறிதெடுத்து
என் கன்னத்திலிட்டு
நம் காதலுக்கு இது
திருஷ்டிபொட்டு என்றுசொல்லி
மெதுவாய் என் கன்னம்தட்டி
சிலிர்க்கவைத்தவன்
நீ..
இலைகளில் தங்கியிருக்கும்
பனித்துளிகள் சேகரித்து
என் முகம்துடைத்து
"பனித்துளியில் குளித்த
பூ இவள்" என்று காதோரம்
கவிதைமொழிந்து
ஆனந்தக்கண்ணீர் சிந்தவைத்தவன்
நீ..
உனக்கே நானென்ற
எண்ணத்தில் தீ எறிந்து
சென்ற உறவுகளால்
உன்னைவிட்டு பிரிக்கப்பட்டு
திருமணம்முடிக்கப்பட்டு
ஜன்னல்கம்பிகள் வழியே
மழைக்குள் உன்னைத்
தேடுகின்றேன் நான்.
-நிலாரசிகன்.
Tuesday, August 21, 2007
அத்தமக செம்பருத்தி ....
பொட்டல்காட்டுல பூவு
ஒண்ணு பூத்துச்சு
அத்தவயித்துல அழகா
பொறந்தா ஆசமக செம்பருத்தி...
ஆத்துதண்ணி போல
வெரசா ஓடிப்போச்சு
வருசம் பதினாறு..
சோளக்காட்டு பொம்ம
போல வெடவெடன்னு
வளர்ந்து நின்னா ..
மாமன் எம்மேல ஆசவச்சு
அவசரமா சமஞ்சு நின்னா ..
கருவாட்டு சந்தைக்கு
அவ வந்தா
சந்தயெல்லாம் ரோசாப்பூவாசம்
வீசும்...
ஆலவிழுதுல அவ
ஊஞ்சல் ஆடுற அழக
ரசிக்க ஊருகண்ணெல்லாம்
போட்டி போடும்... ...
சைக்கிள் கம்பியில
உட்கார்ந்து என்
நெஞ்சுல சாய்ஞ்சுகிட்டு
பக்கத்தூரு கொட்டகையில
சினிமா பார்க்க வருவா ..
செம்பருத்திக்கும் எனக்கும்
ஓடக்கர அம்மன்கோவிலுல
கல்யாணம் நடந்துச்சு ....
நாப்பது கெடாவெட்டி
நாக்குருசிக்க
கறிச்சோறு போட்டு
அசத்திபுட்டா அத்தக்காரி !
வானவில்லுகூட வாழ
ஆரம்பிச்சேன்;
வசந்தமுல்ல ஒண்ணு அவ
வயித்துல வளர
ஆரம்பிச்சுது..
ஒலகத்துல அழகானது
நிலாவும் இல்ல
மழையும் இல்ல
புள்ளய சுமக்குற
புள்ளத்தாச்சியோட முகந்தான் .
தங்கம்போல தகதகக்குற
அழகுமுகம்;
வைரம்போல மின்னலடிக்குது
அவமுகம்.
காள பொறக்குமோ
பசு பொறக்குமோன்னு
தெரியலை...
ஒம்பது மாசமாச்சு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமா நகருது ....
வயக்காட்டுல நின்னாலும்
தென்னந்தோப்புல நின்னாலும்
உள்ளுக்குள்ள அவ நெனுப்பு
மட்டுந்தான் நிக்குது ....
உள்ளூரு மருத்துவச்சிக்கு
கையி நடுங்குதுன்னு
மேலத்தெரு மாணிக்கம்பய
சொல்லிட்டு போனதால ,
பக்கத்தூரு கவர்மெண்டு
ஆஸ்பத்திரியில் செம்பருத்திய
சேர்த்துபுட்டு வெளியில
நிக்கறேன்...
முள்ளுகுத்தினா கூட
தாங்கமாட்டா..
புள்ள பெக்குற வலிய
எப்படித்தாங்குவாளோன்னு
படபடன்னு அடிக்குது
நெஞ்சு...
பொம்பளைக்கு புள்ளய
குடுத்துபுட்டு
ஆம்பளைக்கு வலிய
குடுத்திருந்தா கையெடுத்து
கும்பிட்டிருப்பேன் கடவுள ....
அய்யோ அம்மான்னு
கத்துறா என் உசிர
சொமக்கற மகராசி ...
தூரத்துல ஒரு
வேதகோயில் சிலுவ
தெரியுது
புள்ள நல்லா பொறந்தா
நூறு தேங்கா உடைக்கிறேன்
சாமீ..
புள்ள பொறந்த சேதிய
அழுக சத்தம் சொல்லிடுச்சு
ஓடிப்போயி பார்த்தேன்
கறுப்புகலருல காளைக்கன்னு
கண்ணுமூடி தூங்குது !
புள்ளய எங்கையில
கொடுத்துபுட்டு
இடிய எங்காதுல
சொல்லுறா நர்சு ...
புள்ள சத்தம் கேட்டநிமிசம்
செம்பருத்தி சத்தம்
நின்னுடுச்சாம் ...
என் கறுப்புதங்கம் வெரச்சு
கெடக்கே!
மாமன்நான் பக்கத்துல
வந்தால படக்குன்னு
எழுந்திரிப்பா ....
மடைமடையா அழுவறேன்
ஒரு அசைவும் இல்லயே!
.
கையில ஒரு பிள்ள
அழுவுது
தாய்ப்பாலுக்கு
சுடுகாட்டுல பொதச்சு
பாலு ஊத்தியாச்சு
ஒரு பிள்ளைக்கு !
பதினாறு நாள் விசேசம்
முடிஞ்சுபோயாச்சு ...
செம்பருத்திய பொதச்ச
இடத்துல புல்லுபூண்டு
வளர்ந்தாச்சு..
கம்பியூட்டரு இருக்குன்னாக
செகப்பு வெளக்கு
வேன்வண்டி இருக்குன்னாக
என்ன இருந்து என்னத்த
செஞ்சாக..
பச்சபுள்ளைய மண்ணாக்கிபுட்டாக
வெள்ளச்சட்ட டாக்டர
நம்பினதுக்கு
கை நடுங்கின மருத்துவச்சிய
நம்பி இருக்கலாம் .
ஒண்ணு பூத்துச்சு
அத்தவயித்துல அழகா
பொறந்தா ஆசமக செம்பருத்தி...
ஆத்துதண்ணி போல
வெரசா ஓடிப்போச்சு
வருசம் பதினாறு..
சோளக்காட்டு பொம்ம
போல வெடவெடன்னு
வளர்ந்து நின்னா ..
மாமன் எம்மேல ஆசவச்சு
அவசரமா சமஞ்சு நின்னா ..
கருவாட்டு சந்தைக்கு
அவ வந்தா
சந்தயெல்லாம் ரோசாப்பூவாசம்
வீசும்...
ஆலவிழுதுல அவ
ஊஞ்சல் ஆடுற அழக
ரசிக்க ஊருகண்ணெல்லாம்
போட்டி போடும்... ...
சைக்கிள் கம்பியில
உட்கார்ந்து என்
நெஞ்சுல சாய்ஞ்சுகிட்டு
பக்கத்தூரு கொட்டகையில
சினிமா பார்க்க வருவா ..
செம்பருத்திக்கும் எனக்கும்
ஓடக்கர அம்மன்கோவிலுல
கல்யாணம் நடந்துச்சு ....
நாப்பது கெடாவெட்டி
நாக்குருசிக்க
கறிச்சோறு போட்டு
அசத்திபுட்டா அத்தக்காரி !
வானவில்லுகூட வாழ
ஆரம்பிச்சேன்;
வசந்தமுல்ல ஒண்ணு அவ
வயித்துல வளர
ஆரம்பிச்சுது..
ஒலகத்துல அழகானது
நிலாவும் இல்ல
மழையும் இல்ல
புள்ளய சுமக்குற
புள்ளத்தாச்சியோட முகந்தான் .
தங்கம்போல தகதகக்குற
அழகுமுகம்;
வைரம்போல மின்னலடிக்குது
அவமுகம்.
காள பொறக்குமோ
பசு பொறக்குமோன்னு
தெரியலை...
ஒம்பது மாசமாச்சு
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு யுகமா நகருது ....
வயக்காட்டுல நின்னாலும்
தென்னந்தோப்புல நின்னாலும்
உள்ளுக்குள்ள அவ நெனுப்பு
மட்டுந்தான் நிக்குது ....
உள்ளூரு மருத்துவச்சிக்கு
கையி நடுங்குதுன்னு
மேலத்தெரு மாணிக்கம்பய
சொல்லிட்டு போனதால ,
பக்கத்தூரு கவர்மெண்டு
ஆஸ்பத்திரியில் செம்பருத்திய
சேர்த்துபுட்டு வெளியில
நிக்கறேன்...
முள்ளுகுத்தினா கூட
தாங்கமாட்டா..
புள்ள பெக்குற வலிய
எப்படித்தாங்குவாளோன்னு
படபடன்னு அடிக்குது
நெஞ்சு...
பொம்பளைக்கு புள்ளய
குடுத்துபுட்டு
ஆம்பளைக்கு வலிய
குடுத்திருந்தா கையெடுத்து
கும்பிட்டிருப்பேன் கடவுள ....
அய்யோ அம்மான்னு
கத்துறா என் உசிர
சொமக்கற மகராசி ...
தூரத்துல ஒரு
வேதகோயில் சிலுவ
தெரியுது
புள்ள நல்லா பொறந்தா
நூறு தேங்கா உடைக்கிறேன்
சாமீ..
புள்ள பொறந்த சேதிய
அழுக சத்தம் சொல்லிடுச்சு
ஓடிப்போயி பார்த்தேன்
கறுப்புகலருல காளைக்கன்னு
கண்ணுமூடி தூங்குது !
புள்ளய எங்கையில
கொடுத்துபுட்டு
இடிய எங்காதுல
சொல்லுறா நர்சு ...
புள்ள சத்தம் கேட்டநிமிசம்
செம்பருத்தி சத்தம்
நின்னுடுச்சாம் ...
என் கறுப்புதங்கம் வெரச்சு
கெடக்கே!
மாமன்நான் பக்கத்துல
வந்தால படக்குன்னு
எழுந்திரிப்பா ....
மடைமடையா அழுவறேன்
ஒரு அசைவும் இல்லயே!
.
கையில ஒரு பிள்ள
அழுவுது
தாய்ப்பாலுக்கு
சுடுகாட்டுல பொதச்சு
பாலு ஊத்தியாச்சு
ஒரு பிள்ளைக்கு !
பதினாறு நாள் விசேசம்
முடிஞ்சுபோயாச்சு ...
செம்பருத்திய பொதச்ச
இடத்துல புல்லுபூண்டு
வளர்ந்தாச்சு..
கம்பியூட்டரு இருக்குன்னாக
செகப்பு வெளக்கு
வேன்வண்டி இருக்குன்னாக
என்ன இருந்து என்னத்த
செஞ்சாக..
பச்சபுள்ளைய மண்ணாக்கிபுட்டாக
வெள்ளச்சட்ட டாக்டர
நம்பினதுக்கு
கை நடுங்கின மருத்துவச்சிய
நம்பி இருக்கலாம் .
Thursday, August 09, 2007
காதல் நதியெனில் நட்பே கடல்!
1.சொல்ல முடியாத
காதலை நாளெல்லாம்
சொல்கிறேன்
நண்பனிடம்.
2.வெடித்து அழும் காதல்
நெஞ்சங்களின்
துடிப்பு சத்தம்
நண்பர்களுக்கு மட்டுமே
கேட்கிறது.
3.பூமியில்
விழுகின்ற மழைத்துளி
மண்ணில் கலக்கிறது
காதலில்
விழுகின்ற கண்ணீர்த்துளி
நட்பில் கலக்கிறது
4.காலமெல்லாம்
இலையுதிர்காலம்
காதல்.
காலமெல்லாம்
வசந்தகாலம்
நட்பு.
5.காதலில் நொறுங்கிய
இதயத்துகள்கள்
ஒன்றாக இணைவது
நட்பின் வார்த்தைகளில்.
Tuesday, August 07, 2007
பெயர் சொல் கண்மணி!
என் தோளில்
சாய்ந்து
நீ அழகாய் ஆயிரம்
கதைகள் பேசிய அற்புத தருணத்தில்
தோன்றி இருக்கலாம்...
என்னைப் பிரிந்து
தூரத்தில் ஒரு சிறுபுள்ளியாய்
நீ மறையும் தருணத்தில்
தோன்றி இருக்கலாம்....
யாரோ ஒருவனுக்கு
நீ மனைவியாக போகிறேன்
என்று தொலைபேசியில்
சொன்ன தருணத்தில்
தோன்றி இருக்கலாம்...
எப்போதும் தோன்றாத
ஒரு
உணர்வு இனி என்னிடம்
நீ பேசப்போவதில்லை
என்று உணர்ந்ததும்
கண்ணீராய் வழிந்தோடுகிறதே
இதற்கு என்ன
பெயர் சொல் பெண்ணே!
Tuesday, July 31, 2007
நீ...
சலசலக்கும் ஓடை
ஜில்லென்ற காற்று
இலைமேல் பனித்துளி
நீ.
மெளனப் பூக்கள்
மாலை வெயில்
மெல்லிசை இரவு
நீ.
தூரல் வானம்
அந்தி மழை
ரயிலின் ஜன்னலோரம்
நீ.
விழுதில் ஊஞ்சல்
குளக்கரை படிக்கட்டு
ஒத்தையடிப் பாடல்
நீ.
கடற்கரை மண்வீடு
மார்கழிக் கோலம்
தென்னங்கீற்று சங்கீதம்
நீ.
கன்னம்தொடும் குழந்தை
மெழுகுவர்த்திரி இரவு
தூரத்துவான் நிலா
நீ
ஒருநிமிட மின்னல்
கோப சூரியன்
உயிர்வழங்கும் தேவதை
நீ
என் பக்கத்தில்
நீ இல்லாததினால்
என் டைரியின்
எல்லா பக்கத்திலும்
இன்று நீ.
Wednesday, July 25, 2007
சின்ன சின்ன பூக்கள்
*உனக்கென்று வாங்கும்போது மட்டும்
சிறு சிறு நிலாக்களாகிவிடுகின்றன
ரோஜாப் பூக்கள்.
*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.
* புல்லாங்குழலின் இசை
உணர்கிறேன் இமைமூடி
உன்னை நினைக்கும்போதெல்லாம்.
* வாழ்க்கைப்பாதையில்
உன்னுடனான என் பயணம்
என்றும் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது
அருகில் நீ இல்லாமலே!
* என்னில் ஒரு சிறுகதை
எழுதிப்போனாய்
நீ.
உன் நினைவுகள்
என்றுமே தொடர்கதையாகி
போனது!
சிறு சிறு நிலாக்களாகிவிடுகின்றன
ரோஜாப் பூக்கள்.
*இந்த ஊரில் யாருக்கும்
இரக்கம் இல்லை.
உன் பாதச்சுவடுகளை
மிதிப்பவர்களைத்தான்
சொல்கிறேன்.
* புல்லாங்குழலின் இசை
உணர்கிறேன் இமைமூடி
உன்னை நினைக்கும்போதெல்லாம்.
* வாழ்க்கைப்பாதையில்
உன்னுடனான என் பயணம்
என்றும் தொடர்ந்துகொண்டே
இருக்கிறது
அருகில் நீ இல்லாமலே!
* என்னில் ஒரு சிறுகதை
எழுதிப்போனாய்
நீ.
உன் நினைவுகள்
என்றுமே தொடர்கதையாகி
போனது!
Sunday, July 22, 2007
ஊமச்சி
எம் பேரு ஊமச்சி
பேச்சு ஒண்ணும்
கெடயாது
காதுரெண்டும்
கேட்காது
குயில பாத்திருக்கேன்
குயில்பாட்டு
கேட்டதில்ல
சின்னபுள்ளைக சிரிப்ப
பாத்திருக்கேன்
எச்சிவாயி மழலை
பேச்சி கேட்டதில்ல
பள்ளிக்கூடம் போனதில்ல
என் சைக மொழி
புரியாம வேலைவெட்டி
கிடைச்சபாடில்ல
கஞ்சித்தண்ணி குடிக்க
வழியுமில்ல
வயுத்துக்கு வயசாகல
ஒடம்புக்கு ஆகிப்போச்சு
ஆடியோட முப்பது
கஞ்சுக்கே வழியில்ல
கல்யாணத்துக்கு
ஆள்தேடி ஊர் ஊரா
அலையுது
ஆத்தாகெளவி
ஊமச்சிய கட்டிக்க
உள்ளூருல ஆளில்ல
செவிட்டுபுள்ளன்னு
சொல்லிட்டுப்போனான்
செக்கம்பட்டி சின்னராசு
ஊமச்சிய கட்டிக்கிட்டா
பொறக்குற புள்ளகுட்டிக்கும்
பேச்சுவராதுன்னு ஜோசியம்
சொல்லிச் சிரிச்சுட்டுப்போனான்
துரையூரு முத்துச்சாமி
கட்டிக்கிட்டா என்ன
வெச்சுக்கிட்டா என்ன
ஊமச்சிக்கு ஏது மனசுன்னு
நெனச்சு நடுவூட்டுல
நாற்காலி போட்டு
உட்கார்ந்தான்
உள்ளூரு மைனரு
ஆத்தாவுக்கு ஒண்ணும்
புரியல
எங்கப்பன் போட்டோவுக்கு
முன்னால நின்னு
அழுவுது
மெதுவா தலைய
உசத்தி என்ன
பார்த்து ஏதோ
கேட்டா என்ன
பெத்த ஆத்தா.
பெட்டி படுக்கைய
எடுத்துகிட்டு
மைனருகூட
புல்லட்டு வண்டியில
ஏறிபுட்டேன்.
இந்த ஊமச்சிக்கு
மனசு இருக்கறது
ஊரு ஒலகத்துக்கு
தெரியாது
ஆனா
இந்த ஊமச்சிக்கு
வயிறு பசிக்கும்னு
எங்க ஆத்தாவுக்கு
மட்டுந்தான்
தெரியும்.
ஒத்த வேள
கஞ்சிக்கு
பத்துவேள
பாயவிரிக்கறது
தப்பா ரைட்டான்னு
தெரியல...
இடி விழுந்தா
கூட கேட்காத
காதுக்கு
பொலபொலன்னு
எங்க ஆத்தா
சிந்தற கண்ணீருசத்தம்
மட்டும் கேட்டுக்கிட்டே
இருக்கு!
-நிலாரசிகன்
பேச்சு ஒண்ணும்
கெடயாது
காதுரெண்டும்
கேட்காது
குயில பாத்திருக்கேன்
குயில்பாட்டு
கேட்டதில்ல
சின்னபுள்ளைக சிரிப்ப
பாத்திருக்கேன்
எச்சிவாயி மழலை
பேச்சி கேட்டதில்ல
பள்ளிக்கூடம் போனதில்ல
என் சைக மொழி
புரியாம வேலைவெட்டி
கிடைச்சபாடில்ல
கஞ்சித்தண்ணி குடிக்க
வழியுமில்ல
வயுத்துக்கு வயசாகல
ஒடம்புக்கு ஆகிப்போச்சு
ஆடியோட முப்பது
கஞ்சுக்கே வழியில்ல
கல்யாணத்துக்கு
ஆள்தேடி ஊர் ஊரா
அலையுது
ஆத்தாகெளவி
ஊமச்சிய கட்டிக்க
உள்ளூருல ஆளில்ல
செவிட்டுபுள்ளன்னு
சொல்லிட்டுப்போனான்
செக்கம்பட்டி சின்னராசு
ஊமச்சிய கட்டிக்கிட்டா
பொறக்குற புள்ளகுட்டிக்கும்
பேச்சுவராதுன்னு ஜோசியம்
சொல்லிச் சிரிச்சுட்டுப்போனான்
துரையூரு முத்துச்சாமி
கட்டிக்கிட்டா என்ன
வெச்சுக்கிட்டா என்ன
ஊமச்சிக்கு ஏது மனசுன்னு
நெனச்சு நடுவூட்டுல
நாற்காலி போட்டு
உட்கார்ந்தான்
உள்ளூரு மைனரு
ஆத்தாவுக்கு ஒண்ணும்
புரியல
எங்கப்பன் போட்டோவுக்கு
முன்னால நின்னு
அழுவுது
மெதுவா தலைய
உசத்தி என்ன
பார்த்து ஏதோ
கேட்டா என்ன
பெத்த ஆத்தா.
பெட்டி படுக்கைய
எடுத்துகிட்டு
மைனருகூட
புல்லட்டு வண்டியில
ஏறிபுட்டேன்.
இந்த ஊமச்சிக்கு
மனசு இருக்கறது
ஊரு ஒலகத்துக்கு
தெரியாது
ஆனா
இந்த ஊமச்சிக்கு
வயிறு பசிக்கும்னு
எங்க ஆத்தாவுக்கு
மட்டுந்தான்
தெரியும்.
ஒத்த வேள
கஞ்சிக்கு
பத்துவேள
பாயவிரிக்கறது
தப்பா ரைட்டான்னு
தெரியல...
இடி விழுந்தா
கூட கேட்காத
காதுக்கு
பொலபொலன்னு
எங்க ஆத்தா
சிந்தற கண்ணீருசத்தம்
மட்டும் கேட்டுக்கிட்டே
இருக்கு!
-நிலாரசிகன்
Wednesday, July 04, 2007
அய்யனார் சிலையும் நீயும்!
அய்யனார் சிலை
கண்டு நீ பயந்து
உன் அம்மாவின்
பின் ஒளிந்துகொள்கிறாய்...
பயத்தில் வெளிப்படும்
உன் அபூர்வ அழகு
கண்டு அய்யனார் சிலை
ஒரு நொடி சிலிர்த்ததை நான்
மட்டுமே அறிவேன்!
Sunday, July 01, 2007
மனம் பேசும் வார்த்தைகள்....
எங்கேனும் எப்போதேனும் இவை உங்களுக்கும் நிகழ்திருக்கலாம்...சட்டென்று தோன்றி மறைந்திருக்கலாம்...
இவைகளை கவிதைகள் என்று சொல்வதைவிட
மனதின் வார்த்தைகள் என்றே சொல்ல விரும்புகிறேன்..
இந்த "மனம் பேசும் வார்த்தைகள்" பிடித்திருந்தால் சொல்லுங்கள்
தொடருகிறேன்.
----------------------------------------------------------------------
அழகிய பூனைக்குட்டி
ரசிக்கமுடியவில்லை
சாலையோரம் உயிரற்று
ஈக்கள் மொய்க்கும்போது.
-----------------------------------------------------------------------
ஓடிச்சென்று நனைந்துவிட
நினைப்பதற்குள் நின்றுவிட்டது
மழை..
மண்வாசத்தில் நனைகிறது
உயிர்.
-----------------------------------------------------
மனக்கருவினுள்
பலவருடமாய் சுமந்து
திரியும் இறந்தகுழந்தை
சொல்லாத காதல்!
-----------------------------------------------------
மழையில் நனைய
விரும்பும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்
என்னிடம் நீ
பேசிய வார்த்தைகளை..
------------------------------------------------
உன் பதில் கேட்கவே
காத்திருக்கிறேன்
கல்லறையில் பூவாக.
-------------------------------------------
உறவுகளுக்காக விட்டுக்
கொடுத்தல் நிகழும்
மனங்களை எதனோடு
ஒப்பிடலாம்?
கோவிலைத் தவிர!
---------------------------------------------
பிறர்க்காக கன்னம்நனைக்கும்
கண்ணீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கின்றன
சில சமுத்திரங்கள்.
----------------------------------------------
இவைகளை கவிதைகள் என்று சொல்வதைவிட
மனதின் வார்த்தைகள் என்றே சொல்ல விரும்புகிறேன்..
இந்த "மனம் பேசும் வார்த்தைகள்" பிடித்திருந்தால் சொல்லுங்கள்
தொடருகிறேன்.
----------------------------------------------------------------------
அழகிய பூனைக்குட்டி
ரசிக்கமுடியவில்லை
சாலையோரம் உயிரற்று
ஈக்கள் மொய்க்கும்போது.
-----------------------------------------------------------------------
ஓடிச்சென்று நனைந்துவிட
நினைப்பதற்குள் நின்றுவிட்டது
மழை..
மண்வாசத்தில் நனைகிறது
உயிர்.
-----------------------------------------------------
மனக்கருவினுள்
பலவருடமாய் சுமந்து
திரியும் இறந்தகுழந்தை
சொல்லாத காதல்!
-----------------------------------------------------
மழையில் நனைய
விரும்பும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்
என்னிடம் நீ
பேசிய வார்த்தைகளை..
------------------------------------------------
உன் பதில் கேட்கவே
காத்திருக்கிறேன்
கல்லறையில் பூவாக.
-------------------------------------------
உறவுகளுக்காக விட்டுக்
கொடுத்தல் நிகழும்
மனங்களை எதனோடு
ஒப்பிடலாம்?
கோவிலைத் தவிர!
---------------------------------------------
பிறர்க்காக கன்னம்நனைக்கும்
கண்ணீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கின்றன
சில சமுத்திரங்கள்.
----------------------------------------------
Wednesday, June 27, 2007
வெட்டியான் மகள்..
சங்கின் ஒலி கேட்டு
சிரிக்கிறாள் மகள்..
மரணித்தது தன்
அப்பா என்பதை
அறியாமல்.
சிரிக்கிறாள் மகள்..
மரணித்தது தன்
அப்பா என்பதை
அறியாமல்.
Labels:
கவிதை
Monday, June 25, 2007
நானே என்னைப் பற்றி . . .
1. தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி பறந்து வந்த சிட்டுக்குருவி நான். இக்கால இளைஞர்கள் போலவே கணிப்பொறிக்குள்
சிக்கிய தேன்சிட்டு :)
2.கல்லூரியில் கவிதைகள் அறிமுகம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜன்னலோர இருக்கையும் கையில் ஒரு கவிதைபுத்தகமும் கிடைத்துவிட்டால்,நான் தமிழுக்கு அடிமை.கவிதைக்கே என் முழுமை.காலமாற்றத்தில் எனக்குள் ஏற்படும் உணர்வுகளை அவ்வப்போது எழுதுகிறேன்.
3. ஆறாம் வகுப்பில் தமிழில் இரண்டாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன். அதற்கு பரிசாக என் பள்ளி எனக்கு வழங்கிய புத்தகம் "ஒற்றைச் சிலம்பு". தமிழ் எனக்குள் ஆர்வம் ஏற்படுத்தியது அப்போதிலிருந்துதான்.
4.சிறுவயதில் நிறைய வேட்டையாடி இருக்கிறேன்.. சிட்டுக்குருவி,அணில்,குயில்,பட்டாம்பூச்சி இப்படியாக என் வில்லுக்கு(கவுட்டை,குருவிவார்...என்று பலபெயர் உண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர்) இரையான உயிர்களுக்கு அஞ்சலியாக இப்போது என் கவிதைளை சமர்ப்பிக்கின்றேன்.
5. நிலவின் மெளனம் அதிகம் பிடிக்கும். தனித்திருக்கும் நிலவிற்கு துணையாக காலமெல்லாம் விழித்திருந்து கவிதைகள் எழுதும் வரமே
நான் தினம் வேண்டுவது.
6. நட்புக்குள் பொய்கள் கூடாது என்பது என் பிடிவாதமான கொள்கை. இதனால் இழந்த நண்பர்கள் ஏராளம். இது சரியா தவறா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
7. கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்,இரு வரம் கேட்பேன் 1. எத்தனை பிறவி எடுத்தாலும் என் அம்மாவிற்கே நான் பிள்ளையாக பிறக்கவேண்டும் 2. முதல் வரத்தையே மீண்டுமொருமுறை கேட்பேன் :)
8. என்னைப் பற்றி சொல்ல வேறொன்றும் இல்லை. தற்சமயம் பணிநிமித்தமாக இருமாத பயணமாக அமெரிக்கா வந்திருக்கிறேன்.
இரவுக்குளிரை ரசித்தபடி விண்ணில் என் வெண்ணிலாவை தேடியபடி
தொடர்கிறது என் பயணம்.:)
என்னைப் பற்றி எட்டு விசயங்கள் எழுத அழைத்த விழியனுக்கு நன்றி.
நான் அழைக்கும் எட்டு நபர்கள்
1. யோசிப்பவர்
2. மற்றவர்கள் யாரென்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்..:)..வலைப்பதிவில் அவ்வளவாக என்னை ஈடுபடுத்திக்கொள்ளாததின் விளைவு இது :))
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
சிக்கிய தேன்சிட்டு :)
2.கல்லூரியில் கவிதைகள் அறிமுகம்.கல்லூரிநாட்களில் ஒரு ஜன்னலோர இருக்கையும் கையில் ஒரு கவிதைபுத்தகமும் கிடைத்துவிட்டால்,நான் தமிழுக்கு அடிமை.கவிதைக்கே என் முழுமை.காலமாற்றத்தில் எனக்குள் ஏற்படும் உணர்வுகளை அவ்வப்போது எழுதுகிறேன்.
3. ஆறாம் வகுப்பில் தமிழில் இரண்டாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன். அதற்கு பரிசாக என் பள்ளி எனக்கு வழங்கிய புத்தகம் "ஒற்றைச் சிலம்பு". தமிழ் எனக்குள் ஆர்வம் ஏற்படுத்தியது அப்போதிலிருந்துதான்.
4.சிறுவயதில் நிறைய வேட்டையாடி இருக்கிறேன்.. சிட்டுக்குருவி,அணில்,குயில்,பட்டாம்பூச்சி இப்படியாக என் வில்லுக்கு(கவுட்டை,குருவிவார்...என்று பலபெயர் உண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர்) இரையான உயிர்களுக்கு அஞ்சலியாக இப்போது என் கவிதைளை சமர்ப்பிக்கின்றேன்.
5. நிலவின் மெளனம் அதிகம் பிடிக்கும். தனித்திருக்கும் நிலவிற்கு துணையாக காலமெல்லாம் விழித்திருந்து கவிதைகள் எழுதும் வரமே
நான் தினம் வேண்டுவது.
6. நட்புக்குள் பொய்கள் கூடாது என்பது என் பிடிவாதமான கொள்கை. இதனால் இழந்த நண்பர்கள் ஏராளம். இது சரியா தவறா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
7. கடவுள் என் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்,இரு வரம் கேட்பேன் 1. எத்தனை பிறவி எடுத்தாலும் என் அம்மாவிற்கே நான் பிள்ளையாக பிறக்கவேண்டும் 2. முதல் வரத்தையே மீண்டுமொருமுறை கேட்பேன் :)
8. என்னைப் பற்றி சொல்ல வேறொன்றும் இல்லை. தற்சமயம் பணிநிமித்தமாக இருமாத பயணமாக அமெரிக்கா வந்திருக்கிறேன்.
இரவுக்குளிரை ரசித்தபடி விண்ணில் என் வெண்ணிலாவை தேடியபடி
தொடர்கிறது என் பயணம்.:)
என்னைப் பற்றி எட்டு விசயங்கள் எழுத அழைத்த விழியனுக்கு நன்றி.
நான் அழைக்கும் எட்டு நபர்கள்
1. யோசிப்பவர்
2. மற்றவர்கள் யாரென்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன்..:)..வலைப்பதிவில் அவ்வளவாக என்னை ஈடுபடுத்திக்கொள்ளாததின் விளைவு இது :))
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
Labels:
கவிதை
Tuesday, June 05, 2007
தென்றலே தென்றலே....
காதலில் பிரிவு மிகவும் வருத்தம் தருவது.
தன் காதலியை பிரிந்த ஒரு காதலனின் வரிகளாக
என் வரிகள் இதோ...
தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?
காதல் என்னும் பாதையிலே நாங்கள்
ஒன்றாய் பயணித்தோம்
பிரிதல் என்னும் வேதனையிலே
திசைமாறி பிரிந்து விட்டோம்
என் வானில் இப்போது நிலவும் இல்லை
பெண்மான் அவளின்றி உயிரும் இல்லை
தனிமைக்கு துணையாக அவள் நினைவு
பெண்மைக்கு சுகமாகுமா என் பிரிவு?
தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?
துள்ளி ஓடும் வெள்ளை நதியே, எனை
எண்ணி வாடும் கறுப்பு மதியே...
சேர்ந்திடும் நாள் விரைவில் வந்திடும் பெண்ணே!
வாழ்ந்திடும் வாழ்க்கை உனக்காகத்தான் கண்ணே!
காலங்கள் ஓடிவிடும் வருந்தாதே பொன்மணி
காதலோடு காத்திருக்கிறேன் ஓடோடிவா என்கண்மணி..
தன் காதலியை பிரிந்த ஒரு காதலனின் வரிகளாக
என் வரிகள் இதோ...
தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?
காதல் என்னும் பாதையிலே நாங்கள்
ஒன்றாய் பயணித்தோம்
பிரிதல் என்னும் வேதனையிலே
திசைமாறி பிரிந்து விட்டோம்
என் வானில் இப்போது நிலவும் இல்லை
பெண்மான் அவளின்றி உயிரும் இல்லை
தனிமைக்கு துணையாக அவள் நினைவு
பெண்மைக்கு சுகமாகுமா என் பிரிவு?
தென்றலே தென்றலே கொஞ்சம் என்னோடு பேசவா
ரகசியமாய் ரகசியமாய் ஒரு உண்மை சொல்கிறேன் வா
காதலுக்கு பாலமாக நீ வேண்டும் தென்றலே
காலமது ஓடுமுன்னே அவளிடம் செல்வாயா தென்றலே?
துள்ளி ஓடும் வெள்ளை நதியே, எனை
எண்ணி வாடும் கறுப்பு மதியே...
சேர்ந்திடும் நாள் விரைவில் வந்திடும் பெண்ணே!
வாழ்ந்திடும் வாழ்க்கை உனக்காகத்தான் கண்ணே!
காலங்கள் ஓடிவிடும் வருந்தாதே பொன்மணி
காதலோடு காத்திருக்கிறேன் ஓடோடிவா என்கண்மணி..
Labels:
கவிதை
தோழியே உன்னைத் தேடுகின்றேன்...
கனவுகள் சுமந்து
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........
என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...
உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.
என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.
சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர்
இந்த நட்பு.
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம் உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.
பறந்த பட்டாம்பூச்சி
ஒன்று தன் சிறகுகளை
இழந்து மெளனமாய்
இன்று
மனசுக்குள் அழுவது
என் செவியில்
விழுகிறதே........
என் உயிரெல்லாம்
பூக்கள் மலர
கவிதைகள் எழுதிய
ஜீவன் இன்று
ஜன்னல் வழியே
தூரத்து வானின்
வெள்ளி நிலவிடம்
பேசி மறுமொழி
பேச ஆளில்லாமல்
தனித்து துடிக்கிறதே...
உன் இதயத்தின்
விசும்பல்கள்
என் இதயம்
அறியும்.
என் இதயத்தின்
தவிப்புகளை
உன் இதயம்
அறியும்.
சீதையின் கண்ணீர்
அது இராமாயணம்.
பாஞ்சாலியின் கண்ணீர்
அது மஹாபாரதம்.
நம் கண்ணீர்
இந்த நட்பு.
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை சுமக்கின்ற
என் மெல்லிய
இதயம் உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும்.
Labels:
கவிதை
Wednesday, May 30, 2007
கருத்தப்புள்ள செவத்தரயிலு!
ரோசாப்பூ மனசுக்காரி
ரோசமுள்ள கோவக்காரி
ஆசவச்சேன் அவமேல
மீசவச்சேன் ஒதட்டுமேல
குளத்தங்கரை படிக்கட்டுல
குளிக்கவருவா வெடலப்புள்ள
கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக்கண்ணு சிவந்திருச்சு
கெட்டக்கோவம் வந்திருச்சு
தப்புக்கணக்கு போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்த கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர்கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மானமருவாதி கப்பலேறிச்சு
ரெண்டாயிரம் கப்பங்கட்டியாச்சு
அவமேல ஆசப்பட்டகதைய
எவகிட்ட சொல்லிஅழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல்கெடக்கே!
ரெண்டுநாளு பட்டினிகெடந்தேன்
பட்டணம்போக மூட்டகட்டுனேன்
கருத்தப்புள்ளய காதலிச்சகதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்
வெடுவெடுன்னு நடந்துபோயி
வீசிப்புட்டேன் அவமேல
திரும்பிக்கூட பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பா கெளம்பி
விரசா ரயிலப்புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவநினப்பு!
புகைய கக்கிப்புட்டு
கெளம்புது சிகப்புரயிலு
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ணமூடி ஒக்காந்தா
கனவுல அவமுகம்
கண்ணுமுழிச்சு பார்த்தா
எதிர்சீட்டுல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவசிரிக்கா!
கண்ணால புரியாதகாதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுது
ஓடோடி வந்திருக்கா
தாலிகட்ட போறேன்
தாரமாக்க போறேன்
பட்டணம்போயி பத்தாயிரம்
சம்பாதிக்க போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்தபுள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
விரசாஓட்டு இதுரயிலுவண்டியா
இல்ல கட்டவண்டியா?
ரோசமுள்ள கோவக்காரி
ஆசவச்சேன் அவமேல
மீசவச்சேன் ஒதட்டுமேல
குளத்தங்கரை படிக்கட்டுல
குளிக்கவருவா வெடலப்புள்ள
கண்ணாலம் பண்ணவான்னு
கண்ணால கேட்டுப்புட்டேன்
முட்டக்கண்ணு சிவந்திருச்சு
கெட்டக்கோவம் வந்திருச்சு
தப்புக்கணக்கு போட்டுப்புட்டா
மைனருன்னு நினைச்சுப்புட்டா
பஞ்சாயத்த கூட்டிப்புட்டா
பருத்திபோல வெடிச்சுப்புட்டா
ஊர்கூடி திட்டினாக
உறவெல்லாம் சிரிச்சாக
மானமருவாதி கப்பலேறிச்சு
ரெண்டாயிரம் கப்பங்கட்டியாச்சு
அவமேல ஆசப்பட்டகதைய
எவகிட்ட சொல்லிஅழுவ?
மண்ணுக்குள்ள வயிரம்போல
மனசுக்குள்ள காதல்கெடக்கே!
ரெண்டுநாளு பட்டினிகெடந்தேன்
பட்டணம்போக மூட்டகட்டுனேன்
கருத்தப்புள்ளய காதலிச்சகதய
கடுதாசியில இறக்கிவெச்சேன்
வெடுவெடுன்னு நடந்துபோயி
வீசிப்புட்டேன் அவமேல
திரும்பிக்கூட பார்க்காம
பதிலேதும் கேட்காம
வீறாப்பா கெளம்பி
விரசா ரயிலப்புடிச்சுப்புட்டேன்
வெறப்பா வந்தாலும்
முறப்பா நின்னாலும்
உள்ளுக்குள்ள துடிதுடிக்குது
உசிருக்குள்ள அவநினப்பு!
புகைய கக்கிப்புட்டு
கெளம்புது சிகப்புரயிலு
ரயிலுக்கும் எரியுமோ
என்னப்போல உள்மனசு?
கண்ணமூடி ஒக்காந்தா
கனவுல அவமுகம்
கண்ணுமுழிச்சு பார்த்தா
எதிர்சீட்டுல அவமுகம்!
கனவா நனவான்னு
தெரியாம நா(ன்) குழம்ப
முத்துப்பல்லு காட்டி
முல்லப்பூ அவசிரிக்கா!
கண்ணால புரியாதகாதல
கடுதாசியால புரிஞ்சிருக்கா
ஓன்னு அழுது
ஓடோடி வந்திருக்கா
தாலிகட்ட போறேன்
தாரமாக்க போறேன்
பட்டணம்போயி பத்தாயிரம்
சம்பாதிக்க போறேன்
கண்ணாலம் பண்ணப்போறேன்
கருத்தபுள்ளகூட வாழப்போறேன்
ஏலேய் ட்ரைவரு!
விரசாஓட்டு இதுரயிலுவண்டியா
இல்ல கட்டவண்டியா?
Labels:
கவிதை
Monday, May 28, 2007
முத்த தமிழ்..
முத்தமிழ் மட்டும்தானே
உனக்குத் தெரியும்
எனக்கு இன்னொரு தமிழும்
தெரியுமே என்று
சிரித்தாய்...
என்னவென்று விழிகளால்
வினவிய மறுநொடி
என் புறங்கையில்
முத்தமிட்டு இதுதான்
"முத்த தமிழ்" என்றுகூறி
ஓடிப்போனாய்...
பிள்ளைத்தமிழ் மனசுக்காரி
இவள் என்று சிலிர்க்கிறது
என் கவித்தமிழ்!
உனக்குத் தெரியும்
எனக்கு இன்னொரு தமிழும்
தெரியுமே என்று
சிரித்தாய்...
என்னவென்று விழிகளால்
வினவிய மறுநொடி
என் புறங்கையில்
முத்தமிட்டு இதுதான்
"முத்த தமிழ்" என்றுகூறி
ஓடிப்போனாய்...
பிள்ளைத்தமிழ் மனசுக்காரி
இவள் என்று சிலிர்க்கிறது
என் கவித்தமிழ்!
Labels:
கவிதை
Saturday, May 26, 2007
பள்ளிக்கூட கவிதைகள்..
எல்.கே.ஜி.
அடிவாங்கி அடம்பிடித்து
அழுது புரண்டு
அம்மாவின் கால்களைக்
கட்டிக்கொண்டு
கதற கதற பிரிக்கப்பட்டு
கண்டிப்புடன் உட்கார்ந்த
வகுப்பு...
ஒண்ணாம் வகுப்பு...
சிலேட்டு குச்சி தின்று
வேப்பங்கொட்டை சேகரித்து
கால்சட்டைக்குள் கோலிகுண்டு
மறைத்து,
வெள்ளைச்சட்டையை புழுதியில்
புரட்டியெடுத்து
வீட்டுப்பாடம் படிக்க அடம்பிடித்த
வகுப்பு..
இரண்டாம் வகுப்பு...
இரட்டைகோடு நோட்டு,
வாசல்கடை கிழவியிடம்
ஜவ்வு மிட்டாய்,
"தொட்டுபிடித்து" விளையாட்டு,
விளையாட்டோடு பாடம்படித்த
வகுப்பு...
மூன்றாம் வகுப்பு...
சிலேட்டுக்கு டாடா,
நோட்டுக்கு வரவேற்பு,
சேட்டைக்கு உதாரணம்,
அம்புலிமாமாவின் சினேகம்
டீச்சரிடம் டியூசன் படித்த
வகுப்பு..
நான்காம் வகுப்பு...
நண்பனின் டிபன்பாக்ஸ்
உணவு
தோழியின் அழிரப்பர்,
டீச்சரிடம் எதிர்கேள்வி,
வால் இருக்குமோ என்று
பெயர் வாங்கிய வகுப்பு...
ஐந்தாம் வகுப்பு..
பேனாவின் அறிமுகம்,
பி.டி.ஆசிரியரின் செல்லம்,
கொக்கோ விளையாட்டு,
படிப்பில் படுசுட்டியென்று
பெயர் எடுத்த வகுப்பு...
ஆறாம் வகுப்பு...
புதுப்பள்ளி தோழர்கள்,
நான்கடி உயர பிரம்பு,
கண்டிப்பும் கனிவும் கலந்த
ஆசிரியர்கள்,
பயத்துடன் பள்ளிசென்ற
வகுப்பு..
ஏழாம் வகுப்பு...
கபடி,கிரிக்கெட்,கால்பந்து..
சைக்கிள் பயணம்,
கேன்டீன் சமோசா,
புத்தகத்தினுள் பாட்டுப்புத்தகம்
மறைத்து படித்த வகுப்பு...
எட்டாம் வகுப்பு...
வகுப்புத் தலைவன்,
சுற்றுலாவின் பொறுப்பாளன்,
கராத்தே மாணவன்
உலகம் புரியத்துவங்கிய
வகுப்பு..
ஒன்பதாம் வகுப்பு...
மீசை முளைக்கும்
வயது,
ஆசை வளர்க்கும்
மனது,
எதிர்பாலரிடம் புரியாத
ஈர்ப்பு வளர
ஆரம்பித்த வகுப்பு..
பத்தாம் வகுப்பு...
ஸ்பெசல் கிளாஸ்,
வாரம்தோறும் பரிட்சை,
பள்ளிக்கு பெருமை
சேர்க்க படிப்புடன்
போராடிய பவித்திர
வகுப்பு...
பதினொன்றாம் வகுப்பு...
சைக்கிளுக்கு புதிதாய்
இரு கண்ணாடிகள்,
ஏ பிரிவு சிறந்ததா
பி பிரிவு சிறந்த்தா
என்று மரத்தடி பட்டிமன்றங்கள்..
மாநிலத்தேர்வு அடுத்த
வருடம்தானே என
அலட்சியமாய் கழிந்த
வகுப்பு...
பன்னிரென்டாம் வகுப்பு...
தினம்தினம் பரிட்சை
கணிப்பொறி முதல்
ஐன்ஸ்டீன் வரை
அக்கறையாய் படித்து,
கடைசி நாளில் நட்புக்காக
கண்ணில் நீர் ஒழுக
வீடுநோக்கி நெஞ்சில்
கல்லூரிக்கனவுகளுடன் நடந்த
வகுப்பு...
அடிவாங்கி அடம்பிடித்து
அழுது புரண்டு
அம்மாவின் கால்களைக்
கட்டிக்கொண்டு
கதற கதற பிரிக்கப்பட்டு
கண்டிப்புடன் உட்கார்ந்த
வகுப்பு...
ஒண்ணாம் வகுப்பு...
சிலேட்டு குச்சி தின்று
வேப்பங்கொட்டை சேகரித்து
கால்சட்டைக்குள் கோலிகுண்டு
மறைத்து,
வெள்ளைச்சட்டையை புழுதியில்
புரட்டியெடுத்து
வீட்டுப்பாடம் படிக்க அடம்பிடித்த
வகுப்பு..
இரண்டாம் வகுப்பு...
இரட்டைகோடு நோட்டு,
வாசல்கடை கிழவியிடம்
ஜவ்வு மிட்டாய்,
"தொட்டுபிடித்து" விளையாட்டு,
விளையாட்டோடு பாடம்படித்த
வகுப்பு...
மூன்றாம் வகுப்பு...
சிலேட்டுக்கு டாடா,
நோட்டுக்கு வரவேற்பு,
சேட்டைக்கு உதாரணம்,
அம்புலிமாமாவின் சினேகம்
டீச்சரிடம் டியூசன் படித்த
வகுப்பு..
நான்காம் வகுப்பு...
நண்பனின் டிபன்பாக்ஸ்
உணவு
தோழியின் அழிரப்பர்,
டீச்சரிடம் எதிர்கேள்வி,
வால் இருக்குமோ என்று
பெயர் வாங்கிய வகுப்பு...
ஐந்தாம் வகுப்பு..
பேனாவின் அறிமுகம்,
பி.டி.ஆசிரியரின் செல்லம்,
கொக்கோ விளையாட்டு,
படிப்பில் படுசுட்டியென்று
பெயர் எடுத்த வகுப்பு...
ஆறாம் வகுப்பு...
புதுப்பள்ளி தோழர்கள்,
நான்கடி உயர பிரம்பு,
கண்டிப்பும் கனிவும் கலந்த
ஆசிரியர்கள்,
பயத்துடன் பள்ளிசென்ற
வகுப்பு..
ஏழாம் வகுப்பு...
கபடி,கிரிக்கெட்,கால்பந்து..
சைக்கிள் பயணம்,
கேன்டீன் சமோசா,
புத்தகத்தினுள் பாட்டுப்புத்தகம்
மறைத்து படித்த வகுப்பு...
எட்டாம் வகுப்பு...
வகுப்புத் தலைவன்,
சுற்றுலாவின் பொறுப்பாளன்,
கராத்தே மாணவன்
உலகம் புரியத்துவங்கிய
வகுப்பு..
ஒன்பதாம் வகுப்பு...
மீசை முளைக்கும்
வயது,
ஆசை வளர்க்கும்
மனது,
எதிர்பாலரிடம் புரியாத
ஈர்ப்பு வளர
ஆரம்பித்த வகுப்பு..
பத்தாம் வகுப்பு...
ஸ்பெசல் கிளாஸ்,
வாரம்தோறும் பரிட்சை,
பள்ளிக்கு பெருமை
சேர்க்க படிப்புடன்
போராடிய பவித்திர
வகுப்பு...
பதினொன்றாம் வகுப்பு...
சைக்கிளுக்கு புதிதாய்
இரு கண்ணாடிகள்,
ஏ பிரிவு சிறந்ததா
பி பிரிவு சிறந்த்தா
என்று மரத்தடி பட்டிமன்றங்கள்..
மாநிலத்தேர்வு அடுத்த
வருடம்தானே என
அலட்சியமாய் கழிந்த
வகுப்பு...
பன்னிரென்டாம் வகுப்பு...
தினம்தினம் பரிட்சை
கணிப்பொறி முதல்
ஐன்ஸ்டீன் வரை
அக்கறையாய் படித்து,
கடைசி நாளில் நட்புக்காக
கண்ணில் நீர் ஒழுக
வீடுநோக்கி நெஞ்சில்
கல்லூரிக்கனவுகளுடன் நடந்த
வகுப்பு...
Labels:
கவிதை
Friday, May 18, 2007
செம்மறியாடுகள்...
சிறுமை
கண்டுபொங்கும் சுட்டிப்பெண்ணாய்
இருந்தன பள்ளிநாட்கள்...
பாரதி
கண்ட புதுமைப்பெண்ணாய்
இருந்தன கல்லூரிநாட்கள்..
கனவுகள்,இலட்சியங்கள்
அனைத்தும் துறந்து
பெற்றவர்களுக்காக முடிந்த
திருமணத்தில்
செம்மறியாடாக மாறி
இருந்தன என்
உணர்வுகளை தின்றுவிட்ட
திருமணநாட்கள்...
கண்டுபொங்கும் சுட்டிப்பெண்ணாய்
இருந்தன பள்ளிநாட்கள்...
பாரதி
கண்ட புதுமைப்பெண்ணாய்
இருந்தன கல்லூரிநாட்கள்..
கனவுகள்,இலட்சியங்கள்
அனைத்தும் துறந்து
பெற்றவர்களுக்காக முடிந்த
திருமணத்தில்
செம்மறியாடாக மாறி
இருந்தன என்
உணர்வுகளை தின்றுவிட்ட
திருமணநாட்கள்...
Labels:
கவிதை
Tuesday, May 15, 2007
வலிகொண்ட முத்தம்...
உன் இடுப்பில்
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின்வலி நான்
உணரவில்லை...
தாவணிப்பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பும்
நாட்களில் உன் அவஸ்தையின்வலி
நான் உணரவில்லை...
கல்லூரிப்பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின்வலி
நான் உணரவில்லை...
மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!
எனைச் சுமந்து நிலாச்சோறு
ஊட்டிய நாட்களில் உன்
பொறுமையின்வலி நான்
உணரவில்லை...
தாவணிப்பருவத்தில் தோழி
வீடுசென்று தாமதமாக திரும்பும்
நாட்களில் உன் அவஸ்தையின்வலி
நான் உணரவில்லை...
கல்லூரிப்பருவத்தில் கண்ணாடியுடன்
சினேகித்து பட்டாம்பூச்சியாய்
பறந்த நாட்களில் உன் அறிவுரையின்வலி
நான் உணரவில்லை...
மணப்பந்தலில் உன் காலில்
விழுந்தெழுந்த போது என்
உச்சி முகர்ந்த உனது
முத்தத்தில்தானம்மா உணர்ந்தேன்
நம் பிரிவின் வலியை!
Labels:
கவிதை
Saturday, May 12, 2007
மனவலி...
மின்விசிறியின் சத்தம் பெருகிப்
பெருகி பேரிரைச்சலாக
உணரத்துவங்குகிறது மனது....
காற்றில் மிதந்து வரும்
மருந்துவாசம் சுவாசத்தின்
ஆழம் சென்றதில்
கலவரப்படத்துவங்கிறது மனது...
சோதித்துச்செல்லும் மருத்துவக்கூட்டம்
கண்டு மெல்ல மெல்ல
மருளத்துவங்குகிறது மனது...
விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!
பெருகி பேரிரைச்சலாக
உணரத்துவங்குகிறது மனது....
காற்றில் மிதந்து வரும்
மருந்துவாசம் சுவாசத்தின்
ஆழம் சென்றதில்
கலவரப்படத்துவங்கிறது மனது...
சோதித்துச்செல்லும் மருத்துவக்கூட்டம்
கண்டு மெல்ல மெல்ல
மருளத்துவங்குகிறது மனது...
விபத்தில் கிழிந்த உடலின்
வலியை விட
எப்போதும் அதிகமாகவே
இருக்கிறது மருத்துவமனையின்
சூழல் தருகின்ற மனவலி!
Labels:
கவிதை
Friday, May 11, 2007
தொலைந்தவள்...
மீட்டு வரவே உன்
முகம் தேடினேன்
காற்றாய்...
மீண்டும் மீண்டும்
தேடுகிறேன் மீட்டு
வரச் சென்று தொலைந்த
நேற்றை...
நேற்று கனவில் வந்தவள்
இன்று
கவிதையில் வருகிறாய்...
எப்போது நினைவில்
வருவாய் என்கிற
தவிப்பில் உருகத்
துவங்குகிறது என் கண்ணீரும்
உன் மீது நான்
கொண்ட புரியாத நேசமும்.
முகம் தேடினேன்
காற்றாய்...
மீண்டும் மீண்டும்
தேடுகிறேன் மீட்டு
வரச் சென்று தொலைந்த
நேற்றை...
நேற்று கனவில் வந்தவள்
இன்று
கவிதையில் வருகிறாய்...
எப்போது நினைவில்
வருவாய் என்கிற
தவிப்பில் உருகத்
துவங்குகிறது என் கண்ணீரும்
உன் மீது நான்
கொண்ட புரியாத நேசமும்.
Labels:
கவிதை
கனவில் ஒரு முகம்....
தூளியில் எட்டிப்பார்க்கும்
குழந்தையின் முகம்
போல....
கடல்மீது அசைந்தாடும்
பவுர்ணமி நிலாமுகம்
போல...
கற்பூர ஒளியில் கடந்து
செல்லும் தாவணிமுகம்
போல...
தெரிந்தும் தெரியாமலும்
மழையில் நனைந்த
ஓவியம் போலே
உன் முகம் என்
கனவில் பூத்ததடி...
குழந்தையின் முகம்
போல....
கடல்மீது அசைந்தாடும்
பவுர்ணமி நிலாமுகம்
போல...
கற்பூர ஒளியில் கடந்து
செல்லும் தாவணிமுகம்
போல...
தெரிந்தும் தெரியாமலும்
மழையில் நனைந்த
ஓவியம் போலே
உன் முகம் என்
கனவில் பூத்ததடி...
Labels:
கவிதை
Tuesday, May 01, 2007
ஈழக் கவிதைகள் பாகம் 2
1.நேற்று வரையில்
பொம்மைகளுடன்
விளையாடிய குழந்தைகள்
இன்று பொம்மைபோல்
உயிரற்று வீதியில்...
விழுந்துவெடித்த குண்டுகளுக்குத்தான்
உணர்வில்லை
வீசிச்சென்றவனுக்குமா?
2.வரவேற்ற தமிழகத்தின்
கரை தொட்டவுடன்
முகம் மலர்ந்தோம்.
வரவேற்ற தமிழனின்
அகம் புரிந்தவுடன்
கறை உணர்ந்தோம்.
3. உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டு ஓடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்.
குண்டுகள் வீசும் விமானங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே!
பொம்மைகளுடன்
விளையாடிய குழந்தைகள்
இன்று பொம்மைபோல்
உயிரற்று வீதியில்...
விழுந்துவெடித்த குண்டுகளுக்குத்தான்
உணர்வில்லை
வீசிச்சென்றவனுக்குமா?
2.வரவேற்ற தமிழகத்தின்
கரை தொட்டவுடன்
முகம் மலர்ந்தோம்.
வரவேற்ற தமிழனின்
அகம் புரிந்தவுடன்
கறை உணர்ந்தோம்.
3. உணவுப்பொட்டலங்கள்
வீசிச் செல்லும்
விமானம் கண்டு ஓடி
ஒளிகின்றன எங்கள்
பிள்ளைகள்.
குண்டுகள் வீசும் விமானங்கள்
பார்த்து பழகிய கண்களாயிற்றே!
Labels:
கவிதை
Saturday, April 21, 2007
ஈழக் கவிதைகள் பாகம்1
* இக்கரைக்கு அக்கரை
சிகப்பு
ஈழம்.
* கடலின் மறுபுறம்
புயல்
இங்கே தென்றல்
ரசிக்கும் கடற்கரை
மனிதர்கள்.
* மிதந்து வந்த
சிறுமியின் ஆடை
கண்டு
பெருமூச்சு வாங்கியது
தமிழகம்.
நல்லவேளை உடல்
வரவில்லை என்று.
* அகதி முகாமின்
கூரை வழியே
அழகாய்
தெரியும் நிலா.
* தோட்டாக்களுக்கு
நெஞ்சு நிமிர்த்திய
அப்பா
கதறி அழுகிறார்
"அகதி" எனும் சொல்
கேட்டு.
-நிலாரசிகன்.
சிகப்பு
ஈழம்.
* கடலின் மறுபுறம்
புயல்
இங்கே தென்றல்
ரசிக்கும் கடற்கரை
மனிதர்கள்.
* மிதந்து வந்த
சிறுமியின் ஆடை
கண்டு
பெருமூச்சு வாங்கியது
தமிழகம்.
நல்லவேளை உடல்
வரவில்லை என்று.
* அகதி முகாமின்
கூரை வழியே
அழகாய்
தெரியும் நிலா.
* தோட்டாக்களுக்கு
நெஞ்சு நிமிர்த்திய
அப்பா
கதறி அழுகிறார்
"அகதி" எனும் சொல்
கேட்டு.
-நிலாரசிகன்.
Labels:
கவிதை
கவிதையல்லாதவைகள்....
கன்னுக்குட்டியுடன்
நீ விளையாடுவது
கண்டு
குழம்புகிறது தாய்ப்பசு
எது தன் பிள்ளை
என்று!
0
பரிணாம வளர்ச்சியில்
பெண்ணிற்கு பின்
தேவதை என்பதற்கு
நீ
ஒருத்தியே சாட்சி.
0
கண்ணீரை மறைத்துக்கொண்டே
சிரிக்கவும்
புன்னகைத்துக்கொண்டே
அழவும் தோன்றியது
நீ காதல் சொன்ன
நிமிடங்களில்....
0
தன் சிறிய சிறகுகளால்
வானம் முழுவதும்
பறந்துவிட துடிக்கும்
பட்டாம்பூச்சி போல
மாறிவிடுகிறது என்
மனசு.
உன் மடியில்
தலைசாய்கின்ற
பொழுதுகளில்.
0
அடைமழையிலும் புன்னகைக்கும்
பூக்கள் போன்றது
கோபப்படும் நேரங்களிலும்
என்
விரல்பற்றி மென்மையாய்
நீ பேசும் தருணங்கள்
0
எத்தனை முயன்றும்
இருவருக்கும் தெரியவில்லை
எதனால் ஓர்
உயிரானோம் என்று.
நம் நிழல்களுக்கும்
இதே குழப்பம்.
0
செல்லமாய் நீ
என்னை அடிப்பது
குற்றாலச் சாரல்.
கோபமாய் நீ
என்னை பார்ப்பது
மார்கழித் தென்றல்.
காதலாய் நீ
என்னுடன் இருப்பது
தாய்மடிக் குழந்தை.
0
-நிலாரசிகன்.
நீ விளையாடுவது
கண்டு
குழம்புகிறது தாய்ப்பசு
எது தன் பிள்ளை
என்று!
0
பரிணாம வளர்ச்சியில்
பெண்ணிற்கு பின்
தேவதை என்பதற்கு
நீ
ஒருத்தியே சாட்சி.
0
கண்ணீரை மறைத்துக்கொண்டே
சிரிக்கவும்
புன்னகைத்துக்கொண்டே
அழவும் தோன்றியது
நீ காதல் சொன்ன
நிமிடங்களில்....
0
தன் சிறிய சிறகுகளால்
வானம் முழுவதும்
பறந்துவிட துடிக்கும்
பட்டாம்பூச்சி போல
மாறிவிடுகிறது என்
மனசு.
உன் மடியில்
தலைசாய்கின்ற
பொழுதுகளில்.
0
அடைமழையிலும் புன்னகைக்கும்
பூக்கள் போன்றது
கோபப்படும் நேரங்களிலும்
என்
விரல்பற்றி மென்மையாய்
நீ பேசும் தருணங்கள்
0
எத்தனை முயன்றும்
இருவருக்கும் தெரியவில்லை
எதனால் ஓர்
உயிரானோம் என்று.
நம் நிழல்களுக்கும்
இதே குழப்பம்.
0
செல்லமாய் நீ
என்னை அடிப்பது
குற்றாலச் சாரல்.
கோபமாய் நீ
என்னை பார்ப்பது
மார்கழித் தென்றல்.
காதலாய் நீ
என்னுடன் இருப்பது
தாய்மடிக் குழந்தை.
0
-நிலாரசிகன்.
Labels:
கவிதை
ஒரு முதிர்கன்னியின் பாடல்...
ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்
வழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்
சரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்
கடிதம் வருமென காத்திருந்தாள்
மடியில்முகம் புதைத்து அழுதிருந்தாள்
கடிதமும் வரலையே கன்னி இவளுக்கு
மணயோகமும் இல்லையே!
(
ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்
)
முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு
மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே
பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்
வழி மீது விழி வைத்து காத்திருக்கும் பாவை இவள்
சரி எது பிழை எது புரியாத அப்பாவி இவள்
கடிதம் வருமென காத்திருந்தாள்
மடியில்முகம் புதைத்து அழுதிருந்தாள்
கடிதமும் வரலையே கன்னி இவளுக்கு
மணயோகமும் இல்லையே!
(
ஏதோ ஒரு ராகம் பாடுகிறேன்
ஏனோ உயிர்வேக நான் வாழுகிறேன்
காற்றோடு கலந்துவிட துடிக்கிறேன்
கானல்நீராய் வாழ்வதுகண்டு எனைநானே வெறுக்கிறேன்
)
முப்பது வயசாச்சு கண்ணாடி அலுத்தாச்சு
தெப்பத்து கோயில முண்ணூறு தரம் சுத்தியாச்சு
மூணுமுடிச்சு மட்டும் கிடைக்கலையே
ஊர்பேச்சு கேட்டும் உயிர்மூச்சு நிற்கலையே
பூவுக்குள் பூகம்பம் நிகழ்வது பூவுக்குமட்டுமே தெரியும்
பூவையிவளுக்கு ஒருஇதயம் உண்டென்பது யாருக்கு புரியும்?
Labels:
கவிதை
முன் பாடல் சுருக்கம்:-
(வடமாநில கிளி அவள். வேலைக்காக தமிழகம் வருகிறாள்.வந்த இடத்தில்
அவளை கண்டவுடன் அவளுடன் வேலை பார்க்கும் நம் கதாநாயகன் காதல் கொள்கிறான். அவளிடம் காதலை சொல்ல போகும் தருணம்தான் தெரிகிறது அவள் வேறு ஒருவனை நேசிப்பது. அதனால் சொல்லாமல் வந்து விடுகிறான். சில மாதங்கள் கழித்து அவளது காதல் முறிந்த சேதி இவனுக்கு தெரிகிறது. இப்பொழுதாவது தன் காதலை சொல்லலாம் என்றெண்ணி அவளிடம் செல்கிறான். அவளோ தமிழகத்தை விட்டே போகிறாள்.....)
பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே
மாநிலம் கடந்து வந்த தென்றலும் நீயே
என் மனக்கோலம் அழித்துச்சென்ற புயலும் நீயே
என் தாய்மொழி புரிந்துகொண்டவளும் நீயே
என் விழிமொழி புரியாமல்சென்றவளும் நீயே
என் காதல் சொல்ல உன் வாசல் வந்தேன்
உன் காதல்கதை கேட்டு எனைநானே நொந்தேன்
பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே
சொல்லாத காதலால் தனிமையில் நானும் வெந்தேனடி
உன் காதல்தோற்க, தனிமரமாய் நீயும் நின்றாயடி...
மனசுக்குள் மறைத்த பூவொன்றை உனக்குத்தர
ஓடோடி வந்தேன்.
சொந்த ஊர் நீ திரும்பும் சேதிகேட்டு
ஊமையாகி நின்றேன்.
மெதுவாக கடக்கிறது நீ செல்லும் ரயில்
முகாரி இசைக்கிறது தூரத்தில் ஒரு குயில்
-நிலாரசிகன்.
(வடமாநில கிளி அவள். வேலைக்காக தமிழகம் வருகிறாள்.வந்த இடத்தில்
அவளை கண்டவுடன் அவளுடன் வேலை பார்க்கும் நம் கதாநாயகன் காதல் கொள்கிறான். அவளிடம் காதலை சொல்ல போகும் தருணம்தான் தெரிகிறது அவள் வேறு ஒருவனை நேசிப்பது. அதனால் சொல்லாமல் வந்து விடுகிறான். சில மாதங்கள் கழித்து அவளது காதல் முறிந்த சேதி இவனுக்கு தெரிகிறது. இப்பொழுதாவது தன் காதலை சொல்லலாம் என்றெண்ணி அவளிடம் செல்கிறான். அவளோ தமிழகத்தை விட்டே போகிறாள்.....)
பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே
மாநிலம் கடந்து வந்த தென்றலும் நீயே
என் மனக்கோலம் அழித்துச்சென்ற புயலும் நீயே
என் தாய்மொழி புரிந்துகொண்டவளும் நீயே
என் விழிமொழி புரியாமல்சென்றவளும் நீயே
என் காதல் சொல்ல உன் வாசல் வந்தேன்
உன் காதல்கதை கேட்டு எனைநானே நொந்தேன்
பெண்ணே பசும்பொன்னே எனை
பிரிவதேன் சொல் கண்ணே
நெஞ்சே என் நெஞ்சே எனை
மறந்ததேன் சொல் நெஞ்சே
சொல்லாத காதலால் தனிமையில் நானும் வெந்தேனடி
உன் காதல்தோற்க, தனிமரமாய் நீயும் நின்றாயடி...
மனசுக்குள் மறைத்த பூவொன்றை உனக்குத்தர
ஓடோடி வந்தேன்.
சொந்த ஊர் நீ திரும்பும் சேதிகேட்டு
ஊமையாகி நின்றேன்.
மெதுவாக கடக்கிறது நீ செல்லும் ரயில்
முகாரி இசைக்கிறது தூரத்தில் ஒரு குயில்
-நிலாரசிகன்.
Labels:
கவிதை
பாடல் 1:
என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
பூவில் செய்த சிலையோ நீ?
புல்லின்மேல் பனித்துளியோ நீ?
தேவதை உன் கண்களிலே ஒருவித
சோகம் வழிவதைக் காண்கிறேன்
கோதை உனை மடிசாய்த்து உன்
சோகம் பகிர்ந்திட துடிக்கிறேன்
உன் தேகம் என்ன கறுப்பு வைரமா?
அழகே நீ என்ன காதலின் சிகரமா?
(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)
இரவுக்கு ஒளிதரும் மின்மின்கள் போலவே
இருண்ட என் இதயத்திற்கு ஒளிதரும் கருநிலவும் நீயே!
நாத்திகன் எனக்கு காதல் மதம்
பிடிக்க வைத்தாய்
ஆத்திகன் போலவே தேவசிலை
உன்னை சுற்ற வைத்தாய்
உன் காயம் ஆற்றவே மருத்துவம் போதுமடி
காதல் காயம் கண்ட என் நெஞ்சுக்கு மருந்தாவாய் நீயுமடி!
(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)
-நிலாரசிகன்.
என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
பூவில் செய்த சிலையோ நீ?
புல்லின்மேல் பனித்துளியோ நீ?
தேவதை உன் கண்களிலே ஒருவித
சோகம் வழிவதைக் காண்கிறேன்
கோதை உனை மடிசாய்த்து உன்
சோகம் பகிர்ந்திட துடிக்கிறேன்
உன் தேகம் என்ன கறுப்பு வைரமா?
அழகே நீ என்ன காதலின் சிகரமா?
(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)
இரவுக்கு ஒளிதரும் மின்மின்கள் போலவே
இருண்ட என் இதயத்திற்கு ஒளிதரும் கருநிலவும் நீயே!
நாத்திகன் எனக்கு காதல் மதம்
பிடிக்க வைத்தாய்
ஆத்திகன் போலவே தேவசிலை
உன்னை சுற்ற வைத்தாய்
உன் காயம் ஆற்றவே மருத்துவம் போதுமடி
காதல் காயம் கண்ட என் நெஞ்சுக்கு மருந்தாவாய் நீயுமடி!
(என் ஜீவன் உன்னைக் கண்டுகொண்டேனே
பெண்ஜீவனாய் என் முன் நிற்க கண்டேனே
)
-நிலாரசிகன்.
Labels:
கவிதை
Sunday, April 01, 2007
சுயம்தேடி...
காயத்தின் வடுக்களில்
கரங்களுக்குள் புதைந்த
சில சத்தியங்கள்..
சூழ்நிலைக் கைதியானதில்
கண்களுக்குள் மரணித்த
சில கனவுகள்...
காலத்தின் தாலாட்டில்
இதயத்தினுள் உறங்கிய
சில உறவுகள்...
அவ்வப்போது
ஊசிபோல் உள்ளம்
தைக்கின்றன
முகமூடி அணிந்த
என் சுயத்தை.
கரங்களுக்குள் புதைந்த
சில சத்தியங்கள்..
சூழ்நிலைக் கைதியானதில்
கண்களுக்குள் மரணித்த
சில கனவுகள்...
காலத்தின் தாலாட்டில்
இதயத்தினுள் உறங்கிய
சில உறவுகள்...
அவ்வப்போது
ஊசிபோல் உள்ளம்
தைக்கின்றன
முகமூடி அணிந்த
என் சுயத்தை.
Labels:
கவிதை
பயணங்கள்...
அடர்ந்த காட்டில்
தனியே பயணிக்கிறேன்..
உயர்ந்த மரமொன்றின்
உச்சியில் பெயர்தெரியா
பறவைகள் கூச்சலிடுகின்றன...
தூரத்தில் ஒரு யானையின்
பிளிறல் சத்தம் இதயத்துடிப்பை
அதிகமாக்குகிறது...
சூரியஒளியற்ற இருண்ட
பாதையில் மின்மினி
பூச்சிகளும் பயங்கரமாய்
தோன்றுகிறது...
புதைகுழியொன்றில்
தடுமாறி விழுகையில்
பக்கத்து மரத்தின் வேர்பற்றி
எனைக் காத்துக்கொள்கிறேன்...
மீண்டு(ம்) என் பயணம்
தொடர்கிறது வெளிச்சமற்ற
பாதையிலும் ஏதோ
ஒரு நம்பிக்கையில்...
என்னைப் போலவே
பலர் பயணிக்கிறார்கள்
தனியே பயணிப்பதாய்
இவ்வாழ்வில்.
தனியே பயணிக்கிறேன்..
உயர்ந்த மரமொன்றின்
உச்சியில் பெயர்தெரியா
பறவைகள் கூச்சலிடுகின்றன...
தூரத்தில் ஒரு யானையின்
பிளிறல் சத்தம் இதயத்துடிப்பை
அதிகமாக்குகிறது...
சூரியஒளியற்ற இருண்ட
பாதையில் மின்மினி
பூச்சிகளும் பயங்கரமாய்
தோன்றுகிறது...
புதைகுழியொன்றில்
தடுமாறி விழுகையில்
பக்கத்து மரத்தின் வேர்பற்றி
எனைக் காத்துக்கொள்கிறேன்...
மீண்டு(ம்) என் பயணம்
தொடர்கிறது வெளிச்சமற்ற
பாதையிலும் ஏதோ
ஒரு நம்பிக்கையில்...
என்னைப் போலவே
பலர் பயணிக்கிறார்கள்
தனியே பயணிப்பதாய்
இவ்வாழ்வில்.
Labels:
கவிதை
உன்னில் விழுந்த பூவொன்று...
பூவொன்று காம்பிலிருந்து
உதிரப்போகும் நொடிக்காக
வெகு நேரம் காத்திருந்தேன்...
தன் காலடியில் விழப்போகும்
பூமகளுக்காக கண்ணீர் சிந்துமோ
அந்த பன்னீர்மரம் என்று
தவித்திருந்தேன்...
வேகமாய் வீசும் காற்றிலோ
இல்லை
மெதுவாய் வீசும் தென்றலிலோ
உதிரப்போகிறது அந்த ஒற்றைப்பூ
என்றெண்ணியிருந்தேன்...
பறவையொன்று அமர்ந்த
கிளையின் அதிர்வில்
உதிருமோ என்று
அதிர்ந்திருந்தேன்..
வெகுநேரம் கழிந்தபின்
எவ்வித அழுத்தமுமின்றி
இயல்பாய் மெதுவாய்
காம்பிலிருந்து விடுபட்டு
வீழ்ந்தது அந்தப்பூ.
விழுகையில் உணர்த்தியது
எவ்வித கட்டாயமுமின்றி
இயல்பாய் உன்னில்
விழுந்துவிட்ட என் மனதை...
உதிரப்போகும் நொடிக்காக
வெகு நேரம் காத்திருந்தேன்...
தன் காலடியில் விழப்போகும்
பூமகளுக்காக கண்ணீர் சிந்துமோ
அந்த பன்னீர்மரம் என்று
தவித்திருந்தேன்...
வேகமாய் வீசும் காற்றிலோ
இல்லை
மெதுவாய் வீசும் தென்றலிலோ
உதிரப்போகிறது அந்த ஒற்றைப்பூ
என்றெண்ணியிருந்தேன்...
பறவையொன்று அமர்ந்த
கிளையின் அதிர்வில்
உதிருமோ என்று
அதிர்ந்திருந்தேன்..
வெகுநேரம் கழிந்தபின்
எவ்வித அழுத்தமுமின்றி
இயல்பாய் மெதுவாய்
காம்பிலிருந்து விடுபட்டு
வீழ்ந்தது அந்தப்பூ.
விழுகையில் உணர்த்தியது
எவ்வித கட்டாயமுமின்றி
இயல்பாய் உன்னில்
விழுந்துவிட்ட என் மனதை...
Labels:
கவிதை
Monday, March 19, 2007
நீயின்றி அமையாது என்னுலகு...
பஞ்சபூதங்களையும் கவிதையாக்க முயன்றேன்..இதோ அவ்வரிகள்..
நீச்சல் அறியாத
இந்தநிலவு உன்னில்
விழுந்து தத்தளிக்கிறது..
காதல்நதி நீ.
என்னை கடந்து
செல்கையில்
ஏதேதோ ராகம்
என்னுள்..
சங்கீதக்காற்று நீ.
சந்திக்கும் ஒவ்வொரு
முறையும்
வெவ்வேறு
பார்வை ஒளிவீசும்
அழகியதீபம் நீ.
மழை நான்
காத்திருக்கும்
நேசநிலம் நீ.
என் நினைவுமேகம்
நீந்துகின்ற
கனவுவானம் நீ.
-நிலாரசிகன்.
நீச்சல் அறியாத
இந்தநிலவு உன்னில்
விழுந்து தத்தளிக்கிறது..
காதல்நதி நீ.
என்னை கடந்து
செல்கையில்
ஏதேதோ ராகம்
என்னுள்..
சங்கீதக்காற்று நீ.
சந்திக்கும் ஒவ்வொரு
முறையும்
வெவ்வேறு
பார்வை ஒளிவீசும்
அழகியதீபம் நீ.
மழை நான்
காத்திருக்கும்
நேசநிலம் நீ.
என் நினைவுமேகம்
நீந்துகின்ற
கனவுவானம் நீ.
-நிலாரசிகன்.
Labels:
கவிதை
Saturday, March 17, 2007
Monday, February 12, 2007
நிழல் தேடும் மரங்கள் -பாகம் 2.
* எப்போதும் ஏதேனும்
மறந்துவிடுகிறது
நேற்று ரசத்தில் உப்பு,
இன்று தேனீரில் சர்க்கரை…
எல்லாம் கண்டுகொண்டு
கண்டிப்பாய் என்னை
எப்போதும் மறந்துவிட்ட
என்மீதான அன்புடன்.
* உன் கவிதைபோன்ற
மனதிற்கு நல்வாழ்க்கை
கிடைக்கும் என்ற
தோழிகளின் வாக்கு பலித்தது
பொய்யான வாழ்வுடன்
நான்.
* பெண்மையின் வலி
உணரும் மூன்று நாட்களில்
உன் மடிக்குழந்தையாய்
நானிருந்தேன்....
வலிகொண்ட வாழ்விலும்
ரசிக்கமுடிகிறது சில
கனவுகளை.
* வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.
* நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?
* என் ஓரவிழி
பார்வைக்காக தவமிருந்தாய்
நாம் காதலித்த
நாட்களில்..
எனை ஈரவிழி
பாவையாக்கி சாபம்தந்தாய்
நம் திருமணவாழ்வில்.
மறந்துவிடுகிறது
நேற்று ரசத்தில் உப்பு,
இன்று தேனீரில் சர்க்கரை…
எல்லாம் கண்டுகொண்டு
கண்டிப்பாய் என்னை
எப்போதும் மறந்துவிட்ட
என்மீதான அன்புடன்.
* உன் கவிதைபோன்ற
மனதிற்கு நல்வாழ்க்கை
கிடைக்கும் என்ற
தோழிகளின் வாக்கு பலித்தது
பொய்யான வாழ்வுடன்
நான்.
* பெண்மையின் வலி
உணரும் மூன்று நாட்களில்
உன் மடிக்குழந்தையாய்
நானிருந்தேன்....
வலிகொண்ட வாழ்விலும்
ரசிக்கமுடிகிறது சில
கனவுகளை.
* வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.
* நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?
* என் ஓரவிழி
பார்வைக்காக தவமிருந்தாய்
நாம் காதலித்த
நாட்களில்..
எனை ஈரவிழி
பாவையாக்கி சாபம்தந்தாய்
நம் திருமணவாழ்வில்.
நிழல் தேடும் மரங்கள்- பாகம் 1.
* அடிக்கின்ற அலையின்
சத்தத்தில் என்றுமே வெளியில்
கேட்பதில்லை கரையின் முனகல்
சப்தங்கள்..
* சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது
திருமணம்.
வாழ்க்கை மட்டும்
நரகத்துடன்.
*மழைத்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணினேன்.
சிரித்தாள் அம்மா.
கண்ணீர்த்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணுகிறேன்.
சிரிக்கிறாள் அத்தை.
*பவுர்ணமி நிலா
இரவு மழை
ஜன்னலோர செம்பருத்தி.
எதுவும் ரசிக்கமுடிவதில்லை
தேவை முடிந்தவுடன்
கேட்கின்ற குறட்டை
சத்தத்தில்…
*இதமான அரவணைப்பு
நெற்றிமீது ஒற்றை முத்தம்
கண்பேசும் வார்த்தைகள்
எப்போதும்
திரைப்பட தாம்பத்தியம்
அழகானதாகவே இருக்கிறது.
*கரண்டி பிடிக்கும்
கைகளின் வலி
மறக்கச் செய்கிறது
கடந்த கால கண்ணாடி
வளையல்களின் சிணுங்கல்
சத்தம்.
சத்தத்தில் என்றுமே வெளியில்
கேட்பதில்லை கரையின் முனகல்
சப்தங்கள்..
* சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது
திருமணம்.
வாழ்க்கை மட்டும்
நரகத்துடன்.
*மழைத்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணினேன்.
சிரித்தாள் அம்மா.
கண்ணீர்த்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணுகிறேன்.
சிரிக்கிறாள் அத்தை.
*பவுர்ணமி நிலா
இரவு மழை
ஜன்னலோர செம்பருத்தி.
எதுவும் ரசிக்கமுடிவதில்லை
தேவை முடிந்தவுடன்
கேட்கின்ற குறட்டை
சத்தத்தில்…
*இதமான அரவணைப்பு
நெற்றிமீது ஒற்றை முத்தம்
கண்பேசும் வார்த்தைகள்
எப்போதும்
திரைப்பட தாம்பத்தியம்
அழகானதாகவே இருக்கிறது.
*கரண்டி பிடிக்கும்
கைகளின் வலி
மறக்கச் செய்கிறது
கடந்த கால கண்ணாடி
வளையல்களின் சிணுங்கல்
சத்தம்.
Monday, January 01, 2007
அப்பாவிகளுக்காய் ஒரு குரல்...
ஈழ மண்ணில்
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்....
யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...
ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...
ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணிராகவும்,தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...
இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று.
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்....
யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...
ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...
ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணிராகவும்,தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...
இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று.
Subscribe to:
Posts (Atom)