Monday, February 12, 2007

நிழல் தேடும் மரங்கள் -பாகம் 2.

* எப்போதும் ஏதேனும்
மறந்துவிடுகிறது
நேற்று ரசத்தில் உப்பு,
இன்று தேனீரில் சர்க்கரை…
எல்லாம் கண்டுகொண்டு
கண்டிப்பாய் என்னை
எப்போதும் மறந்துவிட்ட
என்மீதான அன்புடன்.



* உன் கவிதைபோன்ற
மனதிற்கு நல்வாழ்க்கை
கிடைக்கும் என்ற
தோழிகளின் வாக்கு பலித்தது
பொய்யான வாழ்வுடன்
நான்.

* பெண்மையின் வலி
உணரும் மூன்று நாட்களில்
உன் மடிக்குழந்தையாய்
நானிருந்தேன்....
வலிகொண்ட வாழ்விலும்
ரசிக்கமுடிகிறது சில
கனவுகளை.


* வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.



* நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?


* என் ஓரவிழி
பார்வைக்காக தவமிருந்தாய்
நாம் காதலித்த
நாட்களில்..
எனை ஈரவிழி
பாவையாக்கி சாபம்தந்தாய்
நம் திருமணவாழ்வில்.

3 comments:

said...

First commentu
First Visttu

Glad i came across ur blog, all kavidhais r really good. Keep writing !

said...

//வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.
//

அருமையான கவிதை நிலாரசிகன்.. அதுவும் இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்தமானவை அதிலே..

ஆனால் காதலர் தினத்திலே காதலின் மறுபக்கத்தையும் (உண்மை என்றாலும்) இப்படி காட்டி இருக்கவேண்டாமோ என்று எண்ணத் தோன்றுகிறது முடிவு வரிகள்

Anonymous said...

நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?

good one