Thursday, January 29, 2009

மூன்று சொட்டு கண்ணீர்

1.
நெஞ்சு நோக்கி நீள்கின்ற விரல்களின்
நடுவிலும்
பரிகசிக்கும் சிரிப்பு
சப்தங்களிலும்
மெளனமாய் நிறைந்திருக்கிறது
வாழ்ந்து கெட்டவனின் சுத்தமான
கண்ணீர்.

2.
என்னை ஏமாற்றுவதாய்
நீயும்
உன்னை ஏமாற்றுவதாய்
நானும் நடத்துகின்ற
நாடகத்தில்
கோமாளியாகி வெளித்தெரியா
கண்ணீரில் நனைகிறது
நம் பவித்திர நேசம்.

3.
நடுநிசியில் தெருவோர
மரத்தடியில் உறங்குகின்ற
பைத்தியக்காரி
மார்போடு அணைத்திருந்தாள்
பொம்மையொன்றை.
அவளுக்கு பிறக்க
இயலாமல் போனதற்காய்
அப்பொம்மை அழுத
கண்ணீர்தானோ
இந்த இரவுமழை?

Tuesday, January 20, 2009

இரு நிகழ்வுகள்

நிகழ்வு 1:

மணல்வீடு சிற்றிதழ் & களரி தெருக்கூத்துப்
பயிற்சிப்பட்டறை
இணைந்து நிகழ்த்தும்

மக்கள் கலை இலக்கிய விழா

நாள் : 24 சனவரி 2009,சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி.
இடம்: ஏர்வாடி,குட்டப்பட்டி அஞ்சல்,மேட்டூர்
தாலுக்கா,சேலம் மாவட்டம் 636453

பஸ்ரூட் : சேலம் - டூ - மேட்டூர்
பஸ்நிறுத்த : பொட்டனேரி

தொடர்புக்கு : மு.ஹரிகிருஷ்ணன்(9894605371)

நிகழ்வு 2:

யுகமாயினி இலக்கியக்கூடல்

இடம்: I.C.U.F அரங்கம்,சத்திரம்,திருச்சி
நாள்: 26-01-2009
காலம்: பிற்பகல் 3 மணி
தலைமை : பிரபஞ்சன்
வாழ்த்து :பழமலய்
யுகமாயினி கவிதைகள் அலசல்: இலக்குமிகுமாரன் ஞானதிரவியம்
சிறுகதைகள் அலசல்:
தஞ்சாவூர் கவிராயர்
கட்டுரைகள் அலசல்:
ஆதவன் தீட்சண்யா
சிற்றிதழ் களம் : கஜேந்திரன்
ஒருங்கிணைப்பு: அரங்கமல்லிகா/இரா.எட்வின்

Saturday, January 17, 2009

புனைவின் நிஜமும் காமரூப கதை நாயகனும்

ஒரு படைப்பு என்னை வியப்பிலாழ்த்தியது/சிலிர்க்க வைத்தது/வசீகரித்தது/காறி உமிழ்ந்தது/அடித்து துவைத்து போட்டது/நீ எழுதறதெல்லாம் ஒரு எழுத்தா என கேள்விகேட்டது/தூக்கம் கெடுத்தது/துக்கம் கொடுத்தது/சிரிக்க வைத்தது/சிலிர்க்க செய்தது அந்த படைப்பின்,சிறுகதை தொகுப்பின் பெயர்

"புனைவின் நிழல்" எழுதியவர் மனோஜ்.உயிர்மை ப‌திப்ப‌க‌ம்

மாந்த்ரீக யதார்த்தத்தை முன்னிருந்திய நவீன படைப்புகளில் மிகச்சிறந்தது.(இல்லை இதைவிட‌ சிற‌ந்த‌ தொகுப்பும் இருக்கிற‌து என்ப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் பெய‌ர் ம‌ட்டும் த‌ராம‌ல் ப‌திப்ப‌க‌த்தின் பெயரையும் த‌ந்து விடுங்க‌ள். )

கவிதைமீது காதலுற்று பலகாலம் கவிதைகளைவிட்டு வெளியே வராமல் இருந்தவன் என்பதால் சிறுகதை வாசிப்பு கடந்த 2007 வரை மிகக்குறைவாகவே இருந்தது. 2008ல் எனக்கென்ன ஆயிற்றோ தெரியவில்லை சிறுகதை பைத்தியமாகவே மாறிவிட்டேன். கிட்டத்தட்ட 3000 சிறுகதைகளுக்கு மேல் வாசித்திருப்பேன்.

புனைவின் நிழலை படிக்க எடுத்தவுடன் ஒரே மூச்சில் இதிலிருக்கும் 15 கதைகளையும் படித்துவிடவில்லை. காரணம் மற்ற எழுத்திலிருந்து மனோஜின் எழுத்து மாறுபட்டிருக்கிறது. யதார்த்தம் மீறிய கற்பனையும்,மர்ம முடிச்சுகளை அவிழ்த்தெறிய துடிக்கும் மனமும் இவருக்கு வாய்த்திருக்கிறது. அதுமட்டுமின்றி சிறுகதையில் வாசகனை கட்டிப்போடும் வித்தையும் பல இடங்களில் காண முடிகிறது.

குறிப்பாக நான்கு சிறுகதைகள் கச்சை,சர்ப்ப வாசனை,அட்சர ஆழி,பால்.
இந்த நான்கு சிறுகதைகளில்தான் மனோஜ் தனித்து நிற்கிறார்.

கச்சை மீது ஆவல்கொண்ட பெண்ணொருவளை கச்சை அணிய சம்மதிக்காத சமுதாயம் நிர்வாணப்படுத்தி அவமதிக்கிறது.அந்த அவமானம் தாளாமல் தூக்கில் தொங்குகிறாள்...இவை எப்போதோ நடந்ததாக சொல்லப்படுகிறது. அவள் தூக்கில் தொங்கிய புளிய மரத்தின் அருகிலிருக்கும் வீட்டில் கதையின் நாயகி வந்து தங்குகிறாள். அவள் அணியும் நவீன கச்சையை தூக்கில் தொங்கியவள் ஆர்வமோடு ஸ்பரிச்ச முயல்வதாக செல்கிறது கதை. இந்தக் கதைதான் இந்த தொகுப்பின் மிகச்சிறந்த கதை என்பேன்.

சர்ப்ப வாசனை கதையில் வனத்தை பற்றிய விவரணைகள் மிக நுட்பமாக அமைந்திருக்கிறது.

சரி இந்தப்பதிவின் தலைப்பிற்கு வருவோம்.

இந்த புனைவின் நிழலை எழுதிய மனோஜை இன்று புத்தக காட்சியில் உயிர்மை அரங்கில் சந்தித்தேன்.
எதிர்பாராத சந்திப்பில் நா எழவில்லை எனக்கு. அருகில் சென்று கரம்பற்றி புனைவில் நிழல் வாசித்தேன் ரொம்ப நன்றிங்க...அடுத்து எப்போ எழுதுவீங்க, என்றெல்லாம் பேசிக்கொண்டே போனேன் என் பெயரைக்கூட சொல்ல மறந்து. அவரது முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியின் ரேகைகள் படர்வதை உணர முடிந்தது. யாரோ ஒரு அந்நிய‌னின் அடிம‌ன‌திலிருந்து எழுகின்ற‌ பாராட்டை விட‌ சிற‌ந்த‌து எது?

ம‌ன‌ம் க‌வ‌ர்ந்த‌ எழுத்தாளரை ச‌ந்தித்த‌ ம‌கிழ்ச்சியில் திளைத்திருந்த‌போது அருகில் வ‌ந்து நின்றார் ஒருவ‌ர்.அது சாரு நிவேதிதா.

சாருவை ப‌ல‌ முறை பார்த்திருக்கிறேன் ஆனால் பேசிய‌தில்லை. ஏனெனில் அவ‌ரை ப‌ற்றி வ‌ருகின்ற‌ செய்திக‌ளும் வ‌த‌ந்திக‌ளும் அவ‌ர‌து ராச‌லீலாவின் ப‌க்க‌ங்க‌ளையே மிஞ்சிவிடும்.

"அந்தாளா,அவ‌ருகிட்ட‌ எவ‌ன் டா பேசுவான்...இப்போ பேசினா நாளை என் ம‌ன‌ உளைச்ச‌லுக்கு கார‌ண‌ம் நேற்று என்னோடு பேசிய‌வ‌ர்னு வெப்சைட்டுல‌ எழுதுவாரு.."

"அவ‌ரு ஒரு மாதிரி"

"சீ..ஸெக்ஸை த‌விர‌ அவ‌ருக்கு என்ன‌ தெரியும்"

"போதையில‌ இருப்பாருடா...ஜாக்கிர‌தை"

இதுபோன்ற‌ ப‌ல‌ விச‌ய‌ங்க‌ளை கேள்விப‌ட்ட‌தால் வ‌ழ‌க்க‌மான‌ தமிழ‌ன் போல‌ "ந‌ம‌க்கேன் வம்பு" என்று பேச நினைத்தும் பேசாம‌ல் வ‌ந்துவிடுவேன்(க‌ட‌ந்த‌ 2008ம் ஆண்டு புத்த‌க‌ க‌ண்காட்சியிலும் பார்த்துவிட்டு பேச‌மால‌ வீடு திரும்பினேன்)

சாரு எங்க‌ள் அருகில் வ‌ந்த‌தும்,கைகொடுத்து ந‌ல‌ம் விசாரித்தேன். என் பெயர் நிலார‌சிக‌ன் உங்க‌ள‌து இணைய‌த‌ள‌ம் தொட‌ர்ந்து வாசிப்ப‌வர்க‌ளில் நானும் ஒருவ‌ன் என்றேன்.ஆஸாதி புத்த‌க‌ம் வாங்க‌ வ‌ந்தேன் என்றேன்.

இத‌ற்கெல்லாம் சாரு எப்ப‌டி ம‌றுமொழி பேசியிருப்பார்?

நிலார‌சிக‌ன்: சார்,ந‌ல‌மா?

சாரு: ந‌ல்லா இல்ல‌ன்னுதான‌ பேங்க் அக்க‌வுண்ட் கொடுத்திருக்கேன் பார்க்க‌லையா?

நிலார‌சிக‌ன்: உங்க‌ 108 க‌தையும் நெட்ல‌ ப‌டிச்சேன்.

சாரு: "காம‌ரூப‌ க‌தைக‌ள்" வாங்க‌ மாட்டேன்னு இன் டைர‌க்டா சொல்றீயா?


நிலார‌சிக‌ன்: ஆசாதி புத்த‌க‌ம் அமெரிக்க‌ ந‌ண்ப‌ரொருவ‌ர் கேட்டிருந்தார்.வாங்கி அனுப்ப‌லாம்னு வ‌ந்தேன்.

சாரு: அப்ப‌டியே என் பேங்க் அக்க‌வுண்ட்டையும் கொடுத்துடு ராஜா.


இப்ப‌டியெல்லாம் நீங்க‌ள் நினைத்தால் அத‌ற்கு நானும்,சாருவும் பொறுப்ப‌ல்ல‌ :)

மிக‌ மென்மையான‌ புன்முறுவ‌லுட‌ன் கேட்கின்ற‌ கேள்விக‌ளுக்கு மிக‌ நேர்த்தியான‌ ப‌திலை த‌ந்தார்.
சாருவா இது என்று ஆயிர‌ம் முறை ம‌ன‌ம் கேட்டுக்கொண்ட‌து. சாரு மீது நான் கொண்டிருந்த ‍‍நெகட்டிவ் பிம்பம் உடைந்து நொறுங்கியது.எழுத்தில் எப்ப‌டியும் இருந்துவிட்டு போக‌ட்டும்.யாரை ப‌ற்றிய‌ ப‌ய‌முமின்றி எதைவேண்டுமானாலும் எழுத‌ட்டும்.But,He is a Gem இவ்வ‌ளவு ப‌டித்தவ‌ர்,எழுத்தில் சூர‌ர்,க‌லைக‌ள் ப‌ல‌ க‌ற்ற‌வ‌ர் ஆயினும் Down to earth.
இது புக‌ழ்ச்சி என்பவ‌ர்க‌ள் சாருவுட‌ன் ப‌ழ‌கும் ந‌ண்ப‌ர்க‌ளை கேட்டு தெரிந்துகொள்ளுங்க‌ள்.

என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் சொன்ன‌து நினைவுக்கு வ‌ருகிற‌து.

அசோக‌மித்திர‌ன்,சுஜாதாவிற்கு அடுத்த‌ப‌டி எதைப்ப‌ற்றியும் பேச‌/எழுத‌ முடிகிற‌ எழுத்தாள‌ர் சாரு ம‌ட்டும்தான்.

சாருவின் ப‌டைப்புக‌ள் அனைத்தையும் நான் வாசித்த‌தில்லை. ஆனால் அவ‌ர் எழுத்தின் வேக‌ம் பிர‌மிக்க‌ வைக்கிற‌து. அல‌சி ஆராய்ந்து எழுதுகின்ற திரைவிம‌ர்ச‌ன‌ங்க‌ள் விய‌க்க‌ வைக்கிற‌து(சமீபத்திய உதார‌ணம்: சுப்பிர‌ம‌ணிய‌புர‌ம் ப‌ற்றிய‌ பார்வை,உயிர்மை இத‌ழில் வெளிவ‌ந்த‌து)

So, ஒருவ‌ருடைய‌ எழுத்தை வைத்து அவ‌ரை எடைபோடாதீர்க‌ள் அவ‌ருட‌ன் ப‌ழ‌கிய‌ பின்ன‌ர் அவ‌ர் ப‌ற்றி பேசுங்க‌ள் என்கிற‌ ப‌ழைய‌ ப‌ஞ்சாங்க‌த்தை பாட‌விரும்பாம‌ல் இந்த‌ ப‌திவுக்கு முற்றுப்புள்ளி இடுகிறேன்.Have a great week ahead guys! :)

Monday, January 12, 2009

புத்தக காட்சியில் என் புத்தகங்கள்

நண்பர்களுக்கு,

சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தக காட்சியில் கடை எண் 3ல்(எனி இந்தியன் பதிப்பகம்)
என்னுடைய இரண்டு கவிதை புத்தகங்கள் கிடைக்கும்.

1.ஒரு பட்டாம் பூச்சியின் கனவுகள்
2.மயிலிறகாய் ஒரு காதல்

வாங்கிப்படித்தவர்கள் உங்களது விமர்சனங்களை nilaraseegan@gmail.com க்கு அனுப்புங்கள்.

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

Friday, January 09, 2009

வாசித்து நேசித்த புத்தகங்கள்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்
என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்
போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்
நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்
10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.

சிறுகதை தொகுப்புகள்:

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
[நர்மதாவில் கிடைக்கலாம்]

மண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த
படைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த
கதைகள்

மண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]

காமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்
வா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற
படைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் "பச்சை மனிதன்" கதை
மாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

மிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல? குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி
பொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.

புனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]

மனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க
இயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை
நாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன."கச்சை" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது

உடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]

சைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]

இரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.
அறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க
வைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.

பிராந்து - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்
அதனை உணரலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]

நேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்
வலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்

இருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்
மனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]

நினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா? வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன
சொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி?]

அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]

பாஸ்கர் சக்தி "மெட்டிஒலி" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து
நிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.
வாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்
என்பதை உணர்த்துகிறது.

விசும்பு-ஜெயமோகன்[உயிர்மை?]

அறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்
சில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.

வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]

நவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்
தனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.

புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]

விளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த
தொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.

இன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)
நான் வாசித்தவை.

சிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை
படிக்க விரும்பினால் "முத்துக்கள் பத்து" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை "அம்ருதா" பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.

இதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை
தொடர்ந்து எழுதுகிறேன்.

தனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு

பகிர்ந்துகொண்டதில் மகிழ்ந்து,
-நிலாரசிகன்.

Thursday, January 08, 2009

சென்னை புத்தக கண்காட்சி - முதல் நாள்

இன்று ஆரம்பித்தது 32வது சென்னை புத்தக
கண்காட்சி. முதல் நாள் என்பதால் பல புத்தகங்கள் இன்னும் பிரிக்கப்படாத பெரிய
பெட்டிகளில் இருந்தன. மாலை 5 மணிக்கு பிறகு கூட்டம் வர ஆரம்பித்தது.

நண்பர் செல்வராஜ் ஜெகதீசனின் முதல் கவிதை தொகுப்பு
"அந்தரங்கம்" நான் வாங்கிய புத்தகங்களில் முதலில் வாசிக்க காத்திருக்கிறது.

அனிதாவின் "கனவு கலையாத கடற்கன்னி" கவிதை தொகுப்பு உயிர்மையில்
இன்று மாலைவரை வந்து சேரவில்லை. (இவ்வருடம் வெளிவருவதாக
உயிர்மை இதழில் படித்தேன்)

வலைப்பதிவர்கள் சார்லஸ்,லக்கிலுக்,அதிஷா மூவரையும் சந்திக்கும் வாய்ப்பு
கிடைத்தது.

வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வலைஞர்கள் சந்திப்பு ஒன்று வைக்கலாமா?
வருகை தரும் நண்பர்கள் பெயர்களையும்,அலைபேசி எண்ணையும் பின்னூட்டமிடுங்கள்.
தேதி,நேரம் மாற்றி வைக்க முடிவெடுத்தாலும் அதையும் தெரிவித்துவிடுங்கள்.
ஒரு நல்ல சந்திப்புக்கு காத்திருக்கிறேன்.

ஏழு ரூபாய்க்கு விற்கும் தேநீர் மட்டும் கசக்கிறது. மற்றபடி திரும்பிய பக்கமெல்லாம்
நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே நடப்பது ரோஜாக்களுக்கு நடுவில் பறக்கும்
பட்டாம்பூச்சியின் குதூகுலத்தை தருகிறது.

[என் கவிதை நூல் "மயிலிறகாய் ஒரு காதல்" எனி இந்தியன் கடை எண் 3ல் கிடைக்கும்]