Wednesday, September 30, 2009

பதிவர்களுக்கு ஓர் வேண்டுகோள்




சமீபத்தில் மறைந்த கவிஞர்.வெங்கட் தாயுமானவன் அவர்களின் அஞ்சலியும் புத்தக வெளியீடும் டிசம்பர் 17ம் தேதி சித்தன் கலைக்கூடம் முன்னெடுப்பில் நடைபெறவிருக்கிறது. அவர் பயன்படுத்திய வலைத்தளத்திற்கான சுட்டிகள் கீழே:

www.kvthaayumaanavan.blogspot.com
www.kvthaayu.blogspot.com

http://groups.google.com/group/palsuvai

http://groups.google.co.in/group/clapboard

http://groups.google.com/group/kamathenu



கடந்த சில வருடங்களாக புற்றுநோயில் துயரப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் தன்னுடைய இலக்கிய முனைப்புக்களையும்,திரைப்பட எதிர்பார்ப்புகளையும் கைவிடாது இறுதிவரை தன் மூச்சென கருதிய இலக்கிய போராளி அவர்.

தற்போது அவருடைய மனைவி திருமதி.அன்புக்கரசி வெங்கட்தாயுமானவன் அவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு வெங்கட் தாயுமானவனுடைய பிறந்தநாளும்,மணநாளுமான டிசம்பர் 17 அன்று அஞ்சலி கூடலும் அவரது கவிதை தொகுப்பு வெளியிடலும் தீர்மானமாகியது.

இந்த இலக்கினை நோக்கி நகரும் வேளையில் புத்தக தயாரிப்பிலும் அஞ்சலி செலுத்துவதிலும் பதிவர்களாகவும் ஒரு இலக்கியவாதியின் பிரிவை நினைவூட்டுபவர்களாகவும் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த புத்தகத்தை பிரசுரித்து,பிரசுர காப்புரிமையும் எதிர்கால தமிழக அரசு நூலக ஆணை உரிமையும் அவருடைய மனைவியிடம் ஒப்படைத்தோம் எனில் எதிர்காலத்தில் அது அவர்களுக்கு ஒரு சிறிய பொருளாதார உதவியை அளிக்கக்கூடும்.

இம்முயற்சிகளுக்கு ஆகும் மொத்த செலவுத்தொகையை(உத்தேசமாக ரூ.25,000,நூல்வெளியீடு,அரங்கவாடகை - மீதமாகும் தொகை தாயுமானவனின் மனைவியிடம் ஒப்படைக்கப்படும்) பதிவர்களாகிய நாம் பகிர்ந்துகொள்வோம்.பதிவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட பங்களிப்பாக தங்களால் முடிந்த பொருளுதவியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முன்னெடுப்போர்:

"யுகமாயினி" சித்தன்: 9382708030
கவிஞர்.அன்பாதவன்: 9500102765
கவிஞர்.அரங்க மல்லிகா: 9842979756

[பணம் செலுத்தவேண்டிய வங்கிக்கணக்கு விவரங்கள்]


Account Holder - J P Anbusivam
A/C - 2169010000848
Bank of Baroda,
Chennai - 1


பணம் செலுத்திய விபரங்களை chithankalai@yahoo.co.in எனும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.

Monday, September 28, 2009

சொல்லடியில் மரணித்தவனின் குறிப்புகள்




ஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது. மனதின் விளிம்புச்சுவரில் அமர்ந்திருக்கும் சொற்கள் ஒவ்வொன்றாய் நமக்குள் குதித்தோடுகின்றன.எங்கிருந்து முளைத்தன இச்சொற்கள்? எதன் பரிணாமம் சொற்களாயின?
விடைகளற்ற இக்கேள்விகளுக்குள்ளும் சில சொற்கள் இருக்கத்தான் செய்கின்றன. எந்தவொரு சொல்லும் நினைவில் மலராமல் ஒரு பொழுதேனும் வசிக்க முடிவதில்லை.

சொற்கள் அழகானவை. சொற்கள் ஆனந்தம் தருபவை. சொற்கள் அழவைப்பவை. நேற்றைய சொல் இன்று புதிதாகி வேறோர் அர்த்தம் தருகிறது.இன்றைய சொல் நேற்றைய நீட்சியாக முகிழ்கிறது. சொல்லப்படாத சொற்களும்,பழுதான சொற்களும்,உடைந்த சொற்களும் காற்றில் மிதந்தபடியே இருக்கின்றன. நமக்கு தேவையான கணத்தில் அவை
நம்மில் வந்து விழுகின்றன.சொற்களுக்கு முகமூடிகள் உண்டு.சொற்களுக்கு சுயமுண்டு. ஒரு சொல் உச்சரிக்கப்பட்டவுடன் அதன் உயிர்ப்பு நிலைபெறுகிறது.எழுதப்பட்டவுடன் சொற்கள் சரித்திரங்களாக மாறிவிடுகின்றன.


இலையில் ஊர்ந்து செல்லும் எறும்பின் படிமத்தை சொற்களே தீர்மானிக்கின்றன. சொற்களும் மரணமடைவதுண்டு.சொற்களுக்கும் உயிர்த்தெழுதல் சாத்தியப்படும்.கடவுளின் செவிக்குள் எண்ணற்ற சொற்கள் அனுப்பப்படுகின்றன.
அவை காற்றுப்படகில் கடவுள் நோக்கி விரைகின்றன.வெற்றுச்சொற்களால் சில நேரங்களில் புதிய கடவுளை மனிதனே படைத்தும்விடுகிறான்.

சொல்லின் பரிணாமம் எண்ணங்களாய் உருப்பெருகின்றன.பட்டாம்பூச்சி எனும் சொல் பிறந்தவுடன் மனத்திரையில் படபடக்கிறது உயிருள்ள பட்டாம்பூச்சி.

எதனால் இன்று என்னுள் ஊசலாடுகிறது ஒராயிரம் சொற்கள்?

சொன்னவள் நீ என்பதாலா?

மரணத்தை தொட்டுத்திரும்பியதே என்னுயிர் அந்த ஒருசொல் கேட்டு.
நிலவுக்கும் குளிரும் இவ்விரவில் உன்னை விட்டு நெடுந்தொலைவில் தனியனாய் சாலையில் நடந்துபோகிறேன். இத்தனை கனமா உன் மீதான
என் நேசம்? பெரும்சுமை கொண்ட கைவண்டியை தள்ளாடியபடி இழுத்துச் செல்லும் கிழவனின் தளர்ந்த நடையை ஒத்திருக்கிறது என் நடை.
என் ஹார்மோன் நதியில் நீந்தும் ஒற்றை மீன் உன் நினைவுகளின் கனம் தாளாமல் நடைபாதையோர மரமொன்றின் கீழ் அமர்கிறேன்.

உதிர்ந்துகிடக்கும் சருகுகளின் நடுவே மெளனித்திருக்கிறது ஓர் இலை. பச்சை நிறம் பழுப்பு நிறங்களின் நடுவே வீழ்ந்து கிடக்கிறது கவனிப்பாரற்று.
வீழ்ந்த அந்த ஓர் இலைக்காக வருந்துமா இம்மரம்? இலையும் என் நிலையில்தான் இருக்கிறதா? கனவொன்று மெல்ல என்முன் நிழலாடுகிறது.

கனவுவெளியில் கைகோர்த்து சிறுமி ஒருத்தியுடன் திரிகிறேன். அவளின் பாதங்கள் என் நெஞ்சில் தடம்பதித்தபோது சிறகு முளைத்த அவள் என்னை விட்டு தொலைதூரம் பறந்து செல்கிறாள். அவள் பிரிந்த நொடியில் என் கனவு தேசம் இருளடைந்து சூனியவெளியாக மாறி உடைந்த கண்ணாடி சில்லுகளாய் உதிர்ந்துவிடுகிறது.

உன்னிதழ் சிந்திய சொல் பேருருவம் பெற்று வளர்ந்துகொண்டே விண்ணோக்கி செல்கிறது.
பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறும் அச்சொல் மழைத்துளிகளாய் உருப்பெற்று என் தேகம் துளைக்கிறது. நான் வீழ்கிறேன்.
ஏதேனும் ஒரு சொல் எப்போதும் நம்முடன் பயணித்துக்கொண்டே இருக்கிறது.....

இவை எதுவும் அறியப்பெறாமல் அருந்ததி பார்க்க தயாராகிக்கொண்டிருக்கிறாய் நீ.

Saturday, September 26, 2009

இசை உதிரும் இரவுகள்



1.
உடலின் அதிர்வுகளில்
நிரம்பி வழிகிறது
உனக்கென நான் எழுதிய
பாடல்.
என்னுள்ளிருந்து வெளியேறும்
வெப்பம் சலசலத்தோடும்
நீரோடையின் சாயலை கொண்டிருக்கிறது.
தீரா இசையின் கண்ணீரில்
நிறைகிறது யாக்கை.
அடர்குளிரடிக்கும்
கனத்த இரவில்
தனித்தனியே அழுது பிரிகின்றன
உதிர்ந்த நம் கனவுகள்.

2.

என்னை சுற்றிய
வெற்றிடமெங்கும்
சிறு சிறு பிம்பங்களாய்
நீ
உருமாறியிருக்கிறாய்.
ஒவ்வொரு பிம்பமும் உனது
வெவ்வேறு முகங்களை
அணிந்திருக்கிறது.
பைத்தியநிலை முற்றிய
ஒரு முகமும்
வெளிறிய புன்னகையோடு
ஒரு முகமும்
மர்மம் சூழ்ந்த
கறுப்புக்காடுகளை நினைவூட்டுகின்றன.
எதற்கென்று அறியாமல்
அழுதுகொண்டே இருக்கும்
ஒரு முகத்தில் மட்டும்
சிதறிக்கிடக்கின்றன
ஒராயிரம் ரோஜாக்கள்.

3.
தனிமையின் இசையில்
பிறக்கின்றன
சிறகுகளற்ற பறவைகள் சில.
அவை எழுப்பும்
ஒலிக்குள்ளிருந்து வெளியேறுகின்றன
வர்ணமிழந்த பட்டாம்பூச்சிகள்.
பழுப்பு நிறத்தில்
கடக்கும் மேகங்கள்
நட்சத்திரங்களை சுமந்துபோகின்றன.
ஒவ்வொரு தாளத்திற்கும்
தலையசைக்கின்றன
இரவுச்செடிகள்.
துயர்மிகுந்த இரவின் பாடலை
உட்கொண்டு அருகருகே
மரணிக்கின்றன
நமது நாளைகள்.

-நிலாரசிகன்.

ப்ரியம்வதா!




சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்.அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்
முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.

எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் வாசகியாய் முதல் விமர்சகியாய் மாறிப்போனாய். தொலைபேசியில் தொடர்ந்த நம் நட்பு சந்தித்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தோம். மழை ஓய்ந்த மாலையொன்றில் பறக்கும் ரயிலேறி உன் அலுவலகம் வந்தேன்.
கவிதை பேசிக்கொண்டே கடற்கரை சென்றோம் நாம். ஐந்தடி சிகரம் நீயென்று புரியவைத்தது
உன் ஆழ்ந்த இலக்கியவாசம். டால்ஸ்டாயும்,நெருதாவும் வந்துபோனார்கள் நம் நட்புக்குள்.
உலக திரைப்படம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாய். உன் கனவுகளையும் என் கனவுகளையும்
நாம் பகிர்ந்துகொண்ட நவம்பர் மாத மழைநாள் உனக்கு நினைவிருக்கிறதா தோழி?

நட்பின் மற்றொரு பரிமாணத்தை உன்னில் கண்டேன்.என் வீடுதேடி வந்து என் அறையெங்கும்
சிதறிக்கிடக்கும் கவிதைபுத்தகங்களை ஒழுங்காய் அடுக்கி வைத்துவிட்டு தலையில் கொட்டிச் செல்லும் அற்புத தோழி நீ. உன் மடியில் முகம் புதைத்து என் கனவுகளை எல்லாம் உன்னில் கொட்டிவிட துடித்த மனதை கட்டுப்படுத்தி உன்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி வீடு திரும்பினேன்.

வெயில் சுடுகின்ற மார்ச் மாத நாளொன்றில் ப்ரியம்வதாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் எனத் தெரிந்து துடித்துப் போனேன். வதா என்னை நெருப்புக் குழியில் தள்ளிய துரோகி என்று தெரிந்தும் அதை நீ செய்தாய், எனக்கு பகை என்றால் உனக்கும் இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் அவளைப் பற்றி உனக்குத் தெரியாது அவள் அனல் காற்றைப் போன்றவள், நீயோ தென்றல். உன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து பின்னொரு நாளில் தூக்கி எறிந்துவிடுவாள். நீ மென்மனதுக்காரி உன்னால் தாங்க முடியாது என்றுதான் உன்னை நான் தாங்கப் பார்க்கிறேன். ஆனால் இப்போது சில நாள்களாய் என்னை உன் கரங்கள் தள்ளி விடுகின்றன.

நானும் வதாவும் கடற்கரை காற்றின் ஈரமான சுவாசத்துடன் மென்மையாக கை கோர்த்து கதைத்த காலங்களைப் பற்றியெல்லாம் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கு அப்போது நானும் என் அருகாமையும் காதலைப் போன்ற ஒன்றும் தேவையானதாக இருந்தது. அவளது வெறுமையான மாலைகளை என் கவிதைகள் இட்டு நிரப்பியது, தளும்பத் தளும்ப. அக்கறையான வார்த்தைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் வேஷமாய் போனது காலம் எனக்களித்த துயரான பரிசு.

அவள் மாறிப்போவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. மாற்றம் காணாதது ஏது சொல் காவ்யா? நீயும் தான் சில பொழுதுகளில் மாறிப்போகிறாய். விஷம் தீட்டிய வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்துப்போட்டு வடிந்த குருதியைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாய்.
அதன்பின் காயங்களுக்கு மருந்தாகவும் மாறியிருக்கிறாய்.
பெண் என்பவள் பெரும் மாயவலை. சிக்க வைத்து சிக்க வைத்து சிரிப்பவள். தானும் சிக்கிக் கொள்பவளாய் பாவனை செய்பவள். கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டு தன் வானில் தன் சிறகையே கதகதப்பாக்கிக் கொண்டு பறந்துவிடுபவள். வதாவும் அப்படித்தான் செய்தாள். காதலை சொல்லப் போகும் நாளிற்காக நான் காத்துக் கிடந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தேன். அவளிடம் சொல்லியும் சொல்லாத என் காதலை பிரகடனப்படுத்த முற்றிலும் தயாரானேன்.

அன்று என்னை எக்மோர் மியூசத்திற்கு அழைத்திருந்தாள். கடைசியில் நானே அருங்காட்சியகத்தில் வைக்கப்படப்போகும் பொருள் போலாவேன் என்று நினைத்திருக்கவில்லை. அவள் புது உடை அணிந்திருந்தாள். தலையில் எனக்கு பிடித்த மல்லிகைச் சரம். உதட்டில் புன்னகையுடன் என்னை வரவேற்றாள். என் பையினுள் அவளுக்கான வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை துடித்துக் கொண்டிருந்தது.

என்னடா ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கிறாய் என்று தண்ணீர் பாட்டிலை தந்தாள். நான் பெருகி வழிந்தோடும் வேர்வையை துடைத்து ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன். அது அவளின் தினம் போலும், விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். இடையில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சொல்லிவிடலாம் என்று பொறுமை காத்தேன். அவளின் அத்தனை உளறல் பேச்சுக்களையும் உலகின் தலைசிறந்த கவிதைகளைப் போலெண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில் அவளிடம் என் காதலை சொல்ல முனைந்த போது “சிவா,உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள்.
ஆர்வமும்,பதைபதைப்பும் என்னை தொற்றிக்கொண்டன.
அவள் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.
“உங்க ரூம்மேட் குமாரை நான்.. ” அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று திரும்பி விறுவிறுவென்று வெளியேறி விட்டேன் காவ்யா. என் அறைத்தோழன் குமாரையா அவள் காதலிப்பது. என்னைக் காதலிப்பதாய் அல்லவா அவள் ஒவ்வொரு செயல்கள் இருந்தன, எப்படி எங்கே இவர்கள் காதலை வளர்த்தார்கள், அதென்ன செடியா வளர்ப்பதற்கு என்று இந்த நேரத்திலும் அபத்தமாய் என் புத்தி இடித்துரைத்தது.

காதலை பெரிதும் மதிக்கும் உணர்வினன் நானென்று தெரியும்தானே காவ்யா? என் காலின் கீழ் பூமி உருண்டு கொண்டிருந்தது. சொற்களற்ற சொல் என் தொண்டைக் குழிக்குள் அமர்ந்து கொண்டு என்னை திக்க வைத்தது. ஒருவழியாய் அவளிடமிருந்து தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது.
குமாரும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காண்பித்திருந்தேன். அவனைப் பற்றி சில சமயம் சொல்லியிருக்கிறேன். எதேச்சையாக ஒரு நாள் அவள் என்னை சந்திக்க வந்திருந்த போது நான் அங்கிருந்திருக்கவில்லை. குமாரும் அவளும் பேசியிருக்கிறார்கள். அதன்பின் அவர்களின் பேச்சுக்கள் நிற்கவேயில்லை...இன்று என் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட மித்ர துரோகிகளிடம் நான் எப்படி முன்பு போல் பழகுவது. அவளுக்கு என் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமிருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் புலம்பியிருக்கமாட்டேன். என்னைத்தான் முதலில் அவள் காதலித்தாள், என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் தள்ளிப்போடும் குணம் என்னை குழியில் தள்ளிவிட்டது.

ஆனால் என் காதலை நான் சொல்லியிருந்தாலும் இவர்களின் காதல் நடந்தேறியிருக்கும். என்னை ஒதுக்கித்தள்ளியிருப்பாள், தூக்கி எறிந்திருப்பாள் அந்த மாயக்காரி. ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று பொருளைப் போல காதலை நிலைப்படுத்திவிட்டாள். நல்ல வேளை நான் தேர்ந்தெடுக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டேன். அது வரையிலும் காயம் அதிகமேற்படாமல் தப்பினேன். ஆனால் இது ஆறா வடுவாய் என்னிதயத்தில் ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.

நீ அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பது எதன் பொருட்டு என்றெனக்குத் தெரியவில்லை. நேசம் கொண்ட நெஞ்சில் நீ நெருஞ்சி முள்ளை ஏன் சொருகுகிறாய். காதல் இருக்கும் திசையை விட்டு விலகி நட்பு தேசத்தில் வந்திறங்கினால் இங்கும் அதே கொடுமை. என் மீது குறைப்பாடா அல்லது பெண்கள் என்றாலே இப்படித்தானா? புரியவில்லை இனிய தோழி. உருகிக் கரைந்து மடிந்து கொண்டிருக்கும் நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். காதல்தான் என்னை கசக்கி பிழிந்து ரத்தமும் சதையுமாய் கிழிந்தெறிந்துவிட்டது நட்பாவது என்னிடம் நிரந்தரமாய் இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு என் மனக்குமறலையெல்லாம் கொட்டி ஒரு மின்னஞ்சல் உனக்கு அனுப்பினேன்.

என் வாழ்வின் மொத்த அதிர்ச்சியும் உன் பதிலில் உறைந்திருந்தது.

டியர் சிவா,
மிகச்சுருக்கமாக உன்னிடம் ஓர் நிஜம் சொல்கிறேன்.
குமார் என் காதலன். ப்ரியம்வதா என் தோழி. எங்களை சேர்த்துவைக்க முயன்றவர்களில் மிக முக்கியமானவள்.
ப்ரியம்வதாவைத்தான் நீ நேசித்தாய் என்பது இவ்வளவு நாளாய் எனக்கு தெரியாது.
-காவ்யா.

என் தேவதையை இக்கணமே பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என் அன்பின் தோழியே உனக்கு என் திருமண வாழ்த்துக்கள்.இப்போது நிதானம் கலந்த அவசரத்துடன் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.அலைபேசி சிணுங்கியது."ஹலோ சிவா" ப்ரியம்வதாவின் குரலை கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் "வதா,நானே உன்னை பார்க்க வரலாம்னு" நான் முடிப்பதற்குள் இடைமறித்தவள் "சிவா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்றாள்.

-நிலாரசிகன்.

Friday, September 25, 2009

கிகுஜிரோ - திரைவிமர்சனம்



----------------------------
இயக்குனர்: டகேசி கிட்டானோ
வெளியான ஆண்டு: 1999
நாடு : ஜப்பான்
----------------------------

யாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில
மணித்துளிகளேனும் கழிக்க வேண்டுமா? கிகுஜிரோ திரைப்படம் பாருங்கள்.

பாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்
வீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.

பாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.
உன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.

அண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்கி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.
கிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.
அதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்
மாசோ திரும்பி நின்று அழுகிறான்.

அவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து "நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.

இருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்
அனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.

பெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.
அதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

எதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். சிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்லிய சோகமாய் மனதில் நிலைக்கிறது.
பெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)

படம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!

-நிலாரசிகன்.

Thursday, September 24, 2009

தொலைகடல்



விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ.

Wednesday, September 23, 2009

கண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்

------------------------------------------
புத்தகம்:அஞ்சலை
பகுப்பு: நாவல்
ஆசிரியர்:கண்மணி குணசேகரன்
வெளியீடு:தமிழினி பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு வெளியான ஆண்டு:2005
விலை:ரூ 160
--------------------------------------------
முதல் மரியாதை திரைப்படத்தின் முழுக்கதையை 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டிதேரு' என்கிற ஒற்றை வரியில் சொல்லியிருப்பார் வைரமுத்து.
அதேபோல் 'அஞ்சலை' எனும் இந்நாவலின் கதையை கண்மணி குணசேகரன் இப்படி சொல்கிறார்.
"வேண்டும் என வந்து, வேண்டாம் எனப் போய், திரும்பவும் வேண்டும் என நீளும் நடை"

ஏழைப்பெண் அஞ்சலையின் திருமண வயதிலிருந்து துவங்குகின்ற நாவல் அவளை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் எடுத்துச்செல்கிறது.
கதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.
கதை நடக்கும் களம் தான் என்னை அதிகம் கவர்ந்தது.
கார்குடல்,மணக்கொல்லை,தொளார் இந்த மூன்று கிராமத்தில்தான் அஞ்சலையில் வாழ்வு அல்லல்படுகிறது.
நெல்வயல் நிறைந்த கார்குடல்,முந்திரி தோப்புகள் நிறைந்த மணக்கொல்லை,சிறுதொழில் ஊரான தொளார் நம் கண்முன்னே விரிகிறது குணசேகரனின் வரிகளால்.

வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிய/தெரியாத அபலையாக அஞ்சலையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அலுக்காத உழைப்பை கொண்டிருக்கிறாள் அஞ்சலை என்பதை மிக அழகாக சிருஷ்டித்திருக்கிறார்.

அஞ்சலையின் சுகதுக்கங்களை புரிந்துகொண்டு பரிவாக உடனிருக்கும் தோழி வள்ளியும், தங்கச்சிக்காக ஓடோடிவரும் இளைய அக்காள் தங்கமணியும்,ஒருபுறம் மகளின் போக்கு பிடிக்காவிட்டாலும் "சனியன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்" எனும் மனோபாவத்தில் தள்ளாடும் தாய் பாக்கியமும்,ஊரே தவறாக சொன்னாலும் அம்மாவை தவறாக எப்போதும் நினைத்திடாத வெண்ணிலாவும் என்றும் மறக்கமுடியாத பாத்திர படைப்பு.

நாவல் முழுவதும் இழையோடும் வெயிலும் வெயில் சார்ந்த பகுதிகளும் வாசகனையும் வெக்கை நிறைந்த பூமிக்கு இழுத்துச்செல்கின்றன. அதிகம் வருணனைகள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும்
உரையாடல்கள் மூலமாகவே நகர்கிறது. சேரி மக்களின் அன்றாட வாழ்வில் வெகு இயல்பாக கலந்திருக்கும் சண்டைகளும்,சிறு சச்சரவுகளும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சோற்றுப்பானையில் விழுந்த இடியாய் வாழ்க்கை தொலைத்து நிற்கும் அஞ்சலை மீது எப்போதும் கேலிகளும்,குத்தல் பேச்சுகளும் எவ்வித குற்றவுணர்வுமின்றி வீசப்படுகின்றன. அந்த குரூர சந்தோஷத்தில் கழிகிறது அவர்களது காலம்.

மூத்த அக்காள் கல்யாணியின் ஈவு இரக்கமற்ற வசவுகளும்,செயல்களும் எழுத்தில் காணும் வெற்றுச்சொற்களாக படவில்லை. அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்
வன்மத்தையும்,வக்கிரத்தையும் உணர்த்துபவையாக உள்ளன.

நாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வட்டார வழக்கு. நவீன புனைக்கதைகளில் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரங்களில் அஞ்சலையே வலுவான படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

-நிலாரசிகன்.

Tuesday, September 22, 2009

இரண்டாம் கருவறை





வார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்
சிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்
எப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.

கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.

முத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்
உன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

என் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள்? நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.

நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.
உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.

இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.

Saturday, September 19, 2009

இரண்டாம் தவறில் ஜனித்தவன்





கனவுகளில்
இறப்பை கொண்டாடுகிறான்
அவன்.
சிதை அல்லது கல்லறை
ஏதோவொன்றில் அவனது வாழ்க்கை
முற்றுப்புள்ளியென மாறுவதில்
பெருமகிழ்ச்சி கொள்கிறான்.
தன் காலடியில்
மருண்ட விழிகளுடன் வானமும்,
தலைமயிர் கற்றைக்குள்
கதறி அழுகின்ற
பச்சைக் கடலும் அவனுக்கு
மிகுந்த உவப்பளிக்கிறது.
ஆதாம் ஏவாள் இருவரும்
அவனது குற்றவாளிக்கூண்டில்
தலைகுனிந்து நிற்கின்றனர்.
முதல் மனிதனின் இரண்டாம் தவறில்
ஜனித்தவன் நான் என்கிறான்.
கன்னத்தில் வழிந்தோடும்
கர்த்தனின் கண்ணீர் பிசுபிசுத்தபோது
கனவு கலைந்தவன்
இப்போது
தன் பிறப்பை கொண்டாடுகிறான்.

Wednesday, September 16, 2009

வீதியெங்கும் உலவும் ப்ரியங்கள்




1.

ஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்

ப்ரியங்களை வெகு இயல்பாய்

மறுதலித்து செல்கிறாய்.

வலிகொண்ட அதன் ப்ரியங்கள்

உன்னை பின் தொடர்ந்து

அன்பை யாசிக்கிறது.

ஒரு குவளையில் பாலூற்றி

அதற்கு அளிக்கிறாய்.

கடமை முடிந்துவிட்ட

திருப்தியில் உறக்கத்தில் ஆழ்ந்துபோகிறாய்.

அன்றிலிருந்து மிருகமானது

ப்ரியங்கள் அறுந்த

நாய்க்குட்டி.

2.

மழைத்துளிகளை சுமந்து வந்த

நாய்க்குட்டி

கண்ணாடியில் லயித்திருக்கும்

உன்னருகில் உடலை சிலிர்த்துக்கொண்டது.

இடம்பெயர்ந்த மழைத்துளிகள்

உன்

கன்னத்தில் பருக்களாயின.

சிவந்த விழிகளுடன்

நாய்க்குட்டியை துரத்துகிறாய் நீ.

உன்னிலிருந்து உதிர்கின்றன

உலர்ந்த மழைத்துளிகள்.

-நிலாரசிகன்.
_______________

Monday, September 14, 2009

இரு கவிதைகள்




மின்னல் தாண்டவம்


இருளின் கற்பை மின்னலொன்று
இரு துண்டுகளாய் வெட்டி எறிய
முயன்று கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரும் துளி
அலையின்றி மெளனித்துக் கிடக்கிறது.
சுவாசம் தொலைந்த காற்று
வீதியெங்கும் புலம்பித் திரிகிறது.
முறிந்து விழுகின்றன விருட்சங்கள்.
அங்குமிங்கும் பரிதவித்த
இருள்
யாருமற்ற மணல்வெளியில்
பொத்தென்று விழுந்தபிறகு
ஒளிக்கண்களை தீரத்துடன்
திறந்தேன்.

நட்சத்திராவின் பொம்மைகள்


கருமை நிற சிறகும்
அடர்வன இருளும்
தன்னுடலில் கொண்டிருந்த
பறவைபொம்மையிடம் அதன்
பெயரை கேட்டுக்கொண்டிருந்தாள்
நட்சத்திரா.
பதிலேதும் பேசாத பொம்மை
கண்களை மட்டும் சிமிட்டியது.
பதிலுக்கு இவளும்
கண்களை சிமிட்டினாள்.
அலகு திறந்து காகா என்றது
பொம்மை.
அதன் ஒரு காலை
உடைத்தவள் இப்போ உன்
பெயர் "கா" தானே என்கிறாள்.

Friday, September 11, 2009

பெண்களுக்கான தளம்:

சமையல் முதல் சமகால அரசியல் வரை மிகச்சிறந்த கருத்தாடல் தளமாக விளங்குகிறது
Indusladies.com

பெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கிய தளம் என்பதால் பல வித உரையாடல்களை
காண முடிகிறது. சிறந்த உபயோகமான தளம்.

Thursday, September 10, 2009

நட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:



1.
சடசடவென்று மழை பெய்தாலோ
அல்லது
பலத்த வேகத்தில் காற்று வீசும்போதோ
நட்சத்திரா தன் தலையை சாய்த்துக்கொண்டும்
உதடுகளை குவித்துக்கொண்டும்
ஏதேதோ செய்தபடியே இருக்கிறாள்.
மூளை வளர்ச்சியற்ற குழந்தைக்கான
எவ்வித அறிகுறியும் இல்லாமலிருந்தும்
அவளை சுற்றிய உலகம்
அருகில் வர எத்தனிக்கவில்லை.
இன்று,
வகுப்பு முடிந்தவுடன் ஓடிச்சென்று
ஜன்னலோரம் விழுந்திருந்த
அணில்குட்டியை எடுத்துக்கொண்டு
கொஞ்ச ஆரம்பிக்கிறாள்.
மெதுவாய் மிக மெதுவாய்
அவளுக்கு தேவதையின் சிறகுகள்
முளைக்கத்துவங்கியதை
அணில் தவிர
வேறெவரும் கவனிக்கவேயில்லை.

2.

மின்னல்கள் நர்த்தனமிடும் கண்களை
பெற்றிருக்கிறாள் நட்சத்திரா.
அம்மா என்றழைக்கும் போதும்
உறக்கத்திலிருந்து விழிக்கும்
அதிகாலையிலும் அவளது
கண்களில் மின்னல்களின் நர்த்தனம்
நடந்தேறும்.
பட்டுப்பாவாடையுடன் கோவில்
திருவிழாவிற்கு செல்லும் வழியில்
கால்தடுக்கி கீழே விழுந்தபோது
மின்னல்களை தொலைத்துவிட்டாள்.
அழுதுகொண்டே எழுந்து
நடந்தவள்,
மிட்டாய் கிடைத்து
அழுகை நின்றவுடன்
தொலைந்த மின்னல்கள்
ஓடோடி வந்து,
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
பரிசளித்து அவளுடன் சிரித்தன.

-நிலாரசிகன்

Wednesday, September 09, 2009

சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு:



குறும்படம்:

நானும் என் விக்கியும்:-

சுட்டி
: http://www.cultureunplugged.com/play/1127/Naanum-En-Vickyum---/TUE9PStP

நம் அனைவருக்கும் பால்யகால நண்பர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சைக்கிளாகத்தான் இருக்கும். புது சைக்கிள் வாங்கிய புதிதில் நாற்பது முறை விழுந்திருக்கிறேன்.கையிலும் முட்டியிலும் அடிபடாத நாட்களே கிடையாது. ஆனாலும் சைக்கிள் மீதான என் காதல் என்றும் குறைந்ததே இல்லை.பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தபோது மோட்டார் சைக்கிளுக்கு மனம் தாவியபோதும் என் பழைய சைக்கிளை பத்திரமாகவே வெகுகாலம் வைத்திருந்தேன்.

நானும் என் விக்கியும் ஒரு சைக்கிளின் பார்வையில் எடுக்கப்பட்ட குறும்படம்.இதற்கு விமர்சனம் எழுதும் மனநிலை இப்போதில்லை.காரணம் என் சைக்கிளின் ஞாபகங்களோடு மனம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.இப்படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

*********************************************************************************


புத்தகம்:

காவலன் காவான் எனின்:நாஞ்சில் நாடன்
(கட்டுரை தொகுப்பு/தமிழினி வெளியீடு/விலை ரூ.90)


கட்டுரை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா? அடடே நீங்களும் கட்டுரையாளர்தான்!!:)

நாஞ்சில் நாடன் சமீபத்தில் எழுதிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.
இருபத்தி இரண்டு முத்துகள் எனலாம்.அதில் இரண்டை வைரம் என்றும் விளிக்கலாம்.
(குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்/கற்பனெப் படுவது)
நாஞ்சில் நாடனுக்கே உரித்தான எள்ளலும், ஆழ்ந்த இலக்கியச்செறிவும்,கற்றுத்தேர்ந்த மரபும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.

என் புத்தக சேமிப்பில் யாருக்கும் தர விரும்பாத/பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய நூல்களில் இதுவுமொன்று :)

*********************************************************************************

புத்தகம்:
மரம் பூக்கும் ஒளி
(நவீன கவிதைகள்/கோகுலக்கண்ணன்/காலச்சுவடு பதிப்பகம்/விலை:ரூ.75)


புத்தக கடையினுள் ஒவ்வொரு புத்தகமாக கடந்து வந்துகொண்டே இருந்தபோது எதுவுமே "என்னை வாங்கிக்கொள்,உன்னோடு வாழவிரும்புகிறேன்" என்றுரைக்கவில்லை. எந்த புத்தகத்திற்கும் என்னை பிடிக்கவில்லையா அல்லது எனக்கு எந்த புத்தகத்தையும் பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்தோடு புத்தகமுகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கண்ணில் பட்டது "மரம் பூக்கும் ஒளி" தலைப்பின் வசீகரத்தில் கையிலெடுத்து
ஏதோவொரு பக்கத்தை பிரித்தேன்.கீழுள்ள கவிதை இருந்தது

"ஒரு அணில்
உடைந்த முட்டை ஓட்டுக்குள்
முகத்தைப் புதைத்து அழுகிறது"


சட்டென்று ஓர் உலகம் என் முன் தோன்றி அதில் அழகிய தோட்டமொன்று உருவாகி அங்கே தேன் சிந்தும் பூக்களும்,இசைபாடும் குயில்களும் நிறைந்திருக்க,சாய்வான நாற்காலியில் வானம் பார்த்து நான் கிடக்க,அங்கே வந்த ஒரு அணில் தன்னை யாரும் கவனிக்க வில்லையே என்கிற ஏக்கத்தில் அருகிலிருந்த உடைந்த முட்டை ஓட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுவதாக கற்பனை விரிந்தது.

உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மற்ற கவிதைகளும் மிக அற்புதமாகவே இருக்கிறது.
நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும்.

*********************************************************************************

விளையாட்டு:

இலங்கை Vs நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெகுகாலம் கழித்து
ஷேன் பாண்ட் விளையாடினார்.முன்புபோல் வேகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் துல்லியமான பந்துவீச்சால் சில விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நியுசிலாந்து வெற்றி பெறும் என்கிற எண்ணத்தை மலிங்காவும்,துஷாராவும் மாற்றினர்.இந்தியா இந்த கோப்பையை வென்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம். மலிங்காவிடம் வீழ்வார்கள் என்றே எண்ணுகிறேன்.(அதெப்படி மலிங்கா மட்டும் "மாங்கா" எறிவதுபோல் பவுலிங் செய்கிறார்??)

"தல" சச்சின் விளையாட்டை காணும் ஆவலில் காத்திருக்கும் ரசிககோடிகளில்
நானுமொருவன் :)

-நிலாரசிகன்

Tuesday, September 08, 2009

நிலா உதிரும் இரவு

Monday, September 07, 2009

பூக்கள் தேடியலைதல்



நேற்று சந்தித்த வினோத்
தன் மரத்தில் பூக்கள் பூத்திருப்பதாக
சொன்னதிலிருந்து உறங்கவில்லை
கண்கள்.
எனக்குள் வளர்ந்திருக்கும் மரங்களில்
இலைகள் மட்டுமே இருந்தன.
இன்று காலை செளமியாவை
சந்தித்தேன்,
அவளது மரத்தில்
பூத்த ஒவ்வொரு பூவும்
சிறுகுழந்தையின் முகத்தை கொண்டிருப்பதாக
சொன்னபோது கண்கள் பனித்தது.
என் மரத்தில் எதனால் பூக்களில்லை
என்று யாருக்கும் தெரியவில்லை.
அழுது ஓய்ந்துவிட்ட விழிகளுடன்
திரிந்துகொண்டிருந்தேன்.
அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.

Sunday, September 06, 2009

படித்ததில் பிடித்தது:

கிழிந்துபோன பழைய புத்தகம் அது..
அட்டையின் வசீகரத்தால்
வாசிக்கும் வெறியில் நீ..
விடைத்தாள் திருத்தும்
ஆசிரியரின் வேகத்தோடு
புரட்டுகிறாய் அதன் பக்கங்களை..
வேகத்தின் உக்கிரத்தில்
சாயம் இழந்து கொண்டிருந்தது
அதன் வண்ணங்கள்.
இறுதியாய்..
முடித்துவிட்டாய் நீ.
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்.
இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை.

[மின்னஞ்சலில் வந்த கவிதை,அனுப்பியவர் தன் பெயரை வெளியிடவிரும்பவில்லை]

Friday, September 04, 2009

இவை போலவே..



போதிமரத்தடியில்
நாய்கள் கூடலாம்.
மகாத்மாவின் கல்லறைமேல்
பறவைகள் எச்சமிடலாம்.
மயிலிறகு விற்பவனிடம்
மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம்.
..................
..................
..................

இவை போலவே,

புனித மலர்கள் நிறைந்த
நமது நேசத்தை
வெறும் காகிதப்பூக்கள் எனலாம்
நீ.

Wednesday, September 02, 2009

மனுஷ்யபுத்திரன் கவிதை

இம்மாத உயிர்மை இதழில் வெளியான கவிஞர்.மனுஷ்யபுத்திரன் கவிதையொன்று வெகுவாய் என்னை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் கடைசி வரி.சொல்ல முடியாத துக்கம் கண்களுக்கு புலப்படாமல் மெல்லிய நீரோடையாய் இக்கவிதையின் பின் ஓடுவதாய் தோன்றுகிறது.இதோ அக்கவிதை...

பரிசுத்தத்தின் பயன்பாடு

அவளைப்போல் யாரும்
எல்லாவற்றையும்
அவ்வளவு
சுத்தமாக வைத்திருக்க முடியாது

அவ்வளவு நேர்த்தி
அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு கவனம்
அவ்வளவு அழகுணர்ச்சி
அவ்வளவு திட்டமிடல்
அவ்வளவு பரிசுத்தம்

நாம் யாருக்கும்
ஒருபோதும்
ஒன்றையும் பயன்படுத்தவே
தோன்றாது

ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவோ
ஒரு சோபா நுனியில் அமரவோ
ஒரு முத்தமிடவோ.


நன்றி: உயிர்மை.

Tuesday, September 01, 2009

பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்




பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான் : சிறுகதை


1.
புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும்
நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி
வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை
அழைப்பது போலிருந்தது அவளுக்கு.
ரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த
நிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ நிகழ்வுகளாக
தோன்றியது. எறும்பு ஊர்கின்ற தண்டவாளம்,யாருமற்ற தண்ணீர்க்குழாயில் நீர்
அருந்தும் காகம்,கடந்து செல்லும் மின்சார
இரயிலின் சப்தம்,இந்த மஞ்சள் மாலைவெயில் கூடவே அவனது வருகையை
எதிர்நோக்கும் மனம். அவனுக்கு பிடித்த கறுப்பு
நிற புடவையில் வந்திருந்தாள். எப்படி இவனுக்குள் தொலைந்தேன்? என்கிற
கேள்வி மனதுள் எழுந்தபோது ஆதவன் அவள்
முன் வந்து நின்றான். சாம்பல் நிற சிமெண்ட் பெஞ்சில் அவளுக்கு அருகில்
அமர்ந்தவன் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான்.
அரைமணி நேரம் கழித்து இருவரும் பிரியும் தருவாயில் அவள் காதோரம் ஏதோ
சொன்னான். வெட்கத்தில் சிலிர்த்துப்போனாள் அவள்.
வேகமாய் கடந்து போனது ஓர் இரயில்.

2.

குழந்தைக்கு சின்னதாய் ஒரு கரடிபொம்மை வாங்கி வந்திருந்தான். அம்மு அதை
வாங்கிக்கொண்டு புரியாத ஒலியை எழுப்பியபடி பக்கத்து அறைக்குள் ஓடிப்போனது. எனக்கென்ன வாங்கி வந்திருக்கிறாய் என்பதுபோல் அவனை பார்த்தாள் அவள்.
அருகில் வா தருகிறேன் என்றவனிடம் இவள் நெருங்கியபோது சட்டென்று
இழுத்தணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஒரு
நீண்ட முத்தமிட்டான். முதலில் மறுத்தவள் அவனது கரங்களின்
இரும்புப்பிடியில் மழையில் நனைந்த கிளிக்குஞ்சுபோல்
மருகி நின்றாள். கண்களை இறுக மூடிக்கொண்டவளின் உடல் வெப்பமேற துவங்கி
இருந்தது. இதழ் பிரித்தவன் ஒன்றுமே நடவாத பாவனையில் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு சிரித்தான். சிறிது நேரம்
அசைவற்று நின்றவளின் கண்கள் சிவந்திருந்தது.
அவன் அருகில் வந்து அமர்ந்தவள் நொடிப்பொழுதில் அவன் மடிக்கு தாவி அவனது
முகத்தை இழுத்து தீராப்பசியுடன்
இதழ்களை சுவைக்க ஆரம்பித்தாள். இருபத்தி நான்கு மாத அவளது தவம் கலைந்து
சிதறிய தருணம் அவன் போய்விட்டிருந்தான்.

3.

வழிந்தோடிய கண்ணீரின் தடம் சன்னலோர வெயிலில் மினுமினுத்தது. சன்னல்
கம்பிகளை இறுக பற்றியபடி தூரத்தில்
விரைகின்ற வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எரிந்து
தணிந்திருந்த வனமாக தன்னை நினைத்துக்கொண்டாள்.
ஓவென்று அழத்தோன்றியது.உதடுகளை கடித்து அழுகையை தடுத்துக்கொண்டாள். தன்
இருவயது பெண்குழந்தையின் முகம்
மனதின் அடியாழத்திலிருந்து மெல்ல மேலெழுந்து மிதந்து வருவது போலிருந்தது.
ஓடிச்சென்று அடுத்த அறையினுள்
எட்டிப்பார்த்தாள். படுக்கையில் உறங்கும் அம்முகுட்டி தூக்கத்தில் லேசாக
சிரித்தது. தன்னை பார்த்து அம்மு சிரிப்பது
போலொரு எண்ணம் மனதை அறுத்தது. பூஜை அறைக்குள் சென்று கண்கள் மூடி ஒரு
நிமிடம் தியானித்து திருநீறு
பூசிக்கொண்டாள். மனதெங்கும் நிறைந்திருந்த பதற்றம் சற்றே
குறைந்திருப்பதாய் பட்டது. இனியொரு முறை இது
நிகழ்ந்துவிடக்கூடாதென்றும்,நிகழ்கின்ற சூழ்நிலைக்குள் தான்
தள்ளப்பட்டுவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொண்டாள்.
பால்கனி கதவை திறந்து மனதின் வலியை பார்வை வழியே தூரத்து பச்சை
மரங்களிடம் கடத்திக்கொண்டிருந்தபோது
வாசல் திறந்து வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தான் அவன். அவனைக்
கண்டவுடன் தன்னிலை மறந்து வேகமாய்
படிக்கட்டில் இறங்கி வாசல் நோக்கி சென்றாள்.இப்போது அவனை இறுக
கட்டிக்கொண்டு முத்தமிடவேண்டும் போலிருந்தது.

-நிலாரசிகன்.