Friday, October 19, 2007

மழைபோல் வந்தவளே

முன்பாடல் சுருக்கம்:

மனசுக்குள் காதல் பூத்திருந்தும், இதழ் திறந்து சொல்ல தைரியமில்லை இருவருக்கும். அவர்களின் மனம்பாடும் பாடல் இது.


ஆண்:

மழைபோல் வந்தவளே என் மனசெல்லாம் பூத்தவளே
அலைபோல் வந்தவளே என் இதயக்கடலில் முத்தானவளே

உந்தன் பூவிழி கண்ட அன்று என் தாய்மொழிகூட தடுமாறியதே
உந்தன் தேன்மொழி கேட்கும் அன்று என் தாய்மொழி காதலாகுமே!

காதலின் வலிக்கு மருந்தாக நீ வேண்டுமடி
காலமெல்லாம் பிள்ளையாக நான் மாற, வேண்டுமே உன் மடி!

பெண்:

பூவை என்னை பூவாக மாற்றிய வசீகரன் நீயடா
தேவை உந்தன் பார்வை என்றே இதயம் துடிக்கிறதடா

உன்னை எண்ணி காதலென்னும் இலக்கியம் எழுதுகிறேன்
உன்னைக் காணும்போதெல்லாம் வெட்கத்தில் ஊமையாக மாறுகின்றேன்

என் இதழ் திறக்கும் முன்னே உன் காதல் சொல்வாயா?
காற்றில் உன் காதல்கலந்து என் இதயம் நுழைவாயா?

ஆண்:

நிலா பார்க்கும் பொழுதெல்லாம் நெஞ்சில் உன் முகம்
உலா போகும் தென்றலும் உன்பெயர் சொல்லிப் போகும்

நீ இல்லாத வாழ்க்கை மழை இல்லாத பூமியடி
இதழ்திறந்து வார்த்தையொன்று சொல் மழையாவேன் நானடி..

பெண்:

இரவுக்கு இரக்கமில்லை இதழுக்கு ஈரமில்லை
கண்ணுக்கு உறக்கமில்லை கவிதைக்கு வார்த்தையில்லை

கனவெல்லாம் உன்னோடு கைகோர்த்து நடக்கின்றேன்
நினவெல்லாம் உன் நினைவோடு தனியுலகில் வசிக்கின்றேன்

சம்யுக்தை நானாகிவிட்டேன் புரவியேறி வருவாயா?
புரவியற்று வந்தாலும் உன் விரல்பற்றி நடப்பேன் ஓடோடிவருவாயா!

2 comments:

Anonymous said...

"poovizhi kanda andru yen thaimozhi kooda thadumariyathae!" nanumthan konjam intha azhagana variyil thadumaripponane..

snegamudan nirandhari

said...

//கனவெல்லாம் உன்னோடு கைகோர்த்து நடக்கின்றேன்
நினவெல்லாம் உன் நினைவோடு தனியுலகில் வசிக்கின்றேன்//

அருமையான‌ வ‌ரிக‌ள். மிக‌ ர‌சித்தேன்.

- ச‌காரா.