Tuesday, October 21, 2008

ருசித்துக் கொண்டிருந்த இரவு

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த
நிசியில் விசித்திரமானதொரு
அரவம்கேட்டு விழித்தெழுந்தேன்.
அறை முழுவதும் நடமாடிக்கொண்டிருந்தன
புத்தகங்களைவிட்டு வெளியேறிய
சொற்கள்.
ஏதேதோ கோஷமிட்ட
அவைகளின் மொழி புரிந்துகொள்வதாயில்லை.
திடீரென்று அவைகளுக்குள்
பெரும் யுத்தமொன்று உருவாயிற்று.
செத்து வீழ்ந்தன சில.
தோற்று ஓடின சில.
வென்று திரும்பிய சொற்கள் ஓடிச்சென்று
மீண்டும்
புத்தகத்தினுள் நுழைந்துகொண்டன.
வீழ்ந்த சொற்களின் குருதியை
யாருமறியாமல்
ருசித்துக்கொண்டிருந்தது இரவு.

கனத்த மெளனம்

கனத்த மெளனம்
தேகமெங்கும் முட்களாய்
பரவி வெறுமை சூழ்ந்து
காற்றில்லா வெளியொன்று
உருவாகி வெளிச்சமற்ற புலத்தில்
எனை வீசிய பிரிவுப்பொழுதில்...
எவ்வித அதிர்வுகளுமின்றி
பிடித்தபாடலொன்றை முணுமுணுத்தபடி
போய்க்கொண்டிருக்கிறாய்
நீ

-நிலாரசிகன்

நன்றி: உயிரோசை இணைய இதழ்