Monday, September 15, 2008

கிழவனும் கடலும் - நூல் விமர்சனம்




வெகு நாட்களாய் படிக்க நினைத்திருந்த "கிழவனும் கடலும்" நூல் படிப்பதற்கு நேற்றுதான் நேரம் கிட்டியது. புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் எர்னெஸ்ட் ஹெமிங்வேயின்(The old man and the sea by Ernest Hemingway) படைப்பை தமிழில் எம்.எஸ் மொழிபெயர்த்திருக்கிறார். ஒரு கிழவனுக்கும் அவனது தூண்டிலில் அகப்படும் ராட்சத மீனுக்கும்(marlin வகை) இடையேயான போராட்டம்தான் கதை. முழுக்க முழுக்க கடலில் நடப்பதால் வாசிப்பவர்களும் கடலில் பிரயாணம் செய்தது போன்ற அனுபவத்தை தருகிறது. 1952ல் இந்தப் படைப்பு வெளியானபோது இருநாட்களில் 5.3 பில்லியன் பிரதி விற்றுத்தீர்ந்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசும்,புலிட்சர் விருதும் பெற்றது.


பலநாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் திரும்புகின்ற கிழவனுக்கு ஆறுதலாய் இருப்பது ஒரு சிறுவன்.
இன்றாவது நான் உன்னுடன் கடலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது தடுத்துவிட்டு கிழவன் மட்டும் தனித்து பயணிப்பதில் ஆரம்பிக்கிறது கதை. நடுக்கடலில் தூண்டிலிட்டு மீனுக்காக காத்திருக்கையில் ஏதோவொரு பெரிய மீன் சிக்கிவிடுகிறது. அதன்பிறகு இருநாட்களாய் தனி ஆளாய் அந்த மீனுடன்(கிழவனின் படகைவிட பெரிய மீன்) போராடி
அதைக்கொன்று, படகுடன் சேர்த்து கட்டிக்கொண்டு கரை திரும்பும் வழியில் அந்த மீனை சுவைக்க வரும் சுறாக்களுடன் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கிறது. குத்தீட்டியால் சில சுறாக்களை கொல்வதும்,பின் ஒரு சுறா குத்தீட்டியுடன் தண்ணீரில் முழ்கியதும் தன்னிடமுள்ள கத்தியால் தாக்க வரும் சுறாக்களுடன் போராடுவதும் கிழவனின் வீரத்தை பறைசாற்றுகிறது.

அவ்வப்போது "அந்தச் சிறுவன் இருந்தால் நன்றாய் இருந்திருக்குமே" என்று தனியே அரற்றுவதும்...தூண்டிலை இறுகப்பற்றியதால் இடது கை மரத்துப்போகையில் இடக்கையுடன் தனியே பேசுவதும் கிழவன் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

இருநாட்களாய் கடலில் உணவின்றி சிறுமீன்களை பிடித்து பச்சையாக தின்னும்போது "நான் ஒரு முட்டாள்,அடுத்த முறை கண்டிப்பாக எலுமிச்சையும்,உப்பும் கொண்டுவரவேண்டும்" என்று புலம்புவதும்
சோர்கின்ற போதெல்லாம் "என்னால் முடியும் எத்தனை முறை வென்றிருக்கிறேன்" என்று தனக்குத்தானே தைரியமூட்டிக்கொள்வதும் கிழவனின் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்குகிறது.

நடுக்கடலில் மீனுடன் நடக்கும் பலமணி நேர போராட்டத்திற்கு நடுவிலும் தன் நகரத்தில் நடக்கின்ற பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், தன்னுடைய மனம் கவர்ந்த பேஸ்பால் வீரன் டிமாகியோ கால் ஆணியால் அவதிப்படுவதை பற்றி சிந்திப்பதும் கிழவனுக்கு பேஸ்பால் மீதிருந்த தணியாத ஆர்வத்தை மிக அற்புதமாய் எடுத்துரைக்கிறது.

அயல்நாட்டு இலக்கியத்தின் நடையையும்,அந்த கடலோர மீனவர்களின் வலியையும் கதை முடியும் தருவாயில் உணர முடிகிறது. இது நாவலா சிறுகதையா என்கிற குழப்பத்தை கிழவனும்,சிறுவனும்,மீனும் மறக்கடித்துவிடுகிறார்கள். மொழிபெயர்ப்பு நூல் என்கிற எண்ணம் வெகு சில இடங்களில் மட்டுமே தோன்றுகிறது. போராட்டங்கள் மிகுந்த வாழ்க்கை என்னும் கடலில் எதிர்நீச்சலிட்டு வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த கிழவன் ஒரு முன்மாதிரி.வெகு நாட்களுக்கு பின் ஒரு நல்ல புத்தகம் படித்த திருப்தியை இப்புத்தகம் தருகிறது.


கிழவனும் கடலும்

ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில்: எம்.எஸ்

பக்கம் 104, விலை ரூ.50

காலச்சுவடு பதிப்பகம்

இணையத்தில் வாங்க:
http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=15&products_id=12008

3 comments:

said...

Seems to be a very good book, I will be reading the same. Suggestion to Nila is you would have not disclosed the climax...

said...

உங்கள் பதிவைப் படித்ததும், ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன் 'கடலும்கிழவனும்' என்ற தலைப்பில் தமிழிலேயே படித்த நினைவு வருகிது.

அப்போது அந்நூலைப் படித்து, இரண்டு மூன்று நாட்கள் அதே நினைவாக இருந்திருக்கிறேன்!

said...

சிக்கிமுக்கி,

இருபது வருடங்களுக்கு முன்பு இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டதாக தெரியவில்லை. நீங்கள் தமிழில்தான் படித்தீர்களா?