Saturday, December 16, 2006

பூக்களுடன் பேச்சுவார்த்தை...

பூக்களே நலமா?

நீங்கள்
பறிக்காதவரையில்
நலம்தான் மனிதா...

பெண்ணின் கூந்தலுக்கு
பறித்தல் தவறா?

காலை அழகாய்ச்
சிரிக்கும் எங்களை
மாலை அழ அழ
தூர எறிகின்றனரே பெண்கள்?

வாடியபின்னர்
நீங்கள் தேவையில்லைதானே?

உங்கள் பார்வையில்
வாடுகிறோம்
எங்களுக்கு அது
நீண்ட உறக்கம்.

சரி சரி கோபம் வேண்டாம்

உங்கள் வாழ்க்கை பற்றி..

தண்டவாளம் அருகில்
பூத்தாலும் அழுவதில்லை
நாங்கள்.

குப்பைத்தொட்டியில் பூத்தாலும்
கலங்குவதில்லை
நாங்கள், விண்ணோக்கியே
பார்க்கிறோம்..

கவலை ஏதேனும்?

மனிதம் மறந்த
சில மனிதர்களின்
சவ ஊர்வலத்தில் கூட
மணம் வீசும் எங்களை,
சாலைகளில் நீங்கள்
வீசி எறியும் பொழுதுகளில்
கவலைப்பட்டு வாடிப்போகிறோம்.



கேள்விகள் ஏதேனும்?

காதலில் பரிசாகவும்,
திருமணத்தில் மாலையாகவும்,
வாழ்வெல்லாம்
மனிதர்களுக்காக பூத்துச் சிரித்தாலும்
சில பொழுதேனும்
எங்களுடன் நேரம் செலவிட
உங்களுக்கு நேரமிருக்கிறதா?

(தொடரும்...)

1 comments:

said...

அஹா! பூக்களோடு பேச்சு வார்த்தையா! அழகு