Monday, April 16, 2012

கவிதைகள் மூன்று

1.சொற்பறவை

தன் மார்புக்கூட்டிற்குள் பறவையொன்றை
மிக பத்திரமாய் வளர்க்கிறான்.
புத்தகங்களால் நிரம்பித்தளும்பும் அறையில்
தேநீர்கோப்பையுடன் தனித்திருக்கும்
தருணங்களிலெல்லாம் அப்பறவை
வெளியேறி அவன் தோள்களில்
அமர்ந்துகொள்கிறது.
வெளிக்குதிக்கும் சொற்களின் வேகத்தை
கவனமுடன் கண்காணிக்கிறது.
ஒற்றுப்பிழைகளுடன் சொற்களை அவன்
கடந்துசென்றால் ஒற்றெழுத்து ஒன்றை
சொல் நோக்கி துப்புகிறது.
நரைத்திருக்கும் சுருள் தாடியை தடவிக்கொண்டே
தடதடவென்று எழுதிக் குவிக்கிறான்.
மலையென குவிந்திருக்கும் சொற்களினூடாக
பறந்து சென்று திரும்பும்
பறவையை தொடர்ந்து
வெளியேறுகின்றன ஆயிரமாயிரம் சொற்கள்
எண்களாக,எழுத்துக்களாக,கனவுகளாக...
முடிவிலியாக.


2.கத்தரித்தல்

கத்தரிப்பது எப்படி என்பதை
அவர்கள் நமக்கு கற்றுத்தருகிறார்கள்
வெள்ளைத்தாளில் பென்சிலால்
நீள்கோடு ஒன்றை வரைந்து
அதன்மேல் கத்தரியை அழுத்திக்கொண்டே
செல்கிறார்கள்.
இரண்டாய் பிளந்து கிழக்கும் மேற்குமாய்
விழுகிறது அந்தத் தாள்.
ப்ரியங்கள் இரண்டு எதிர்திசையில்
பயணிப்பதை நமக்கு உணர்த்துகிறார்கள்.
துடிக்கும் இறக்கைகளை இழுத்துக்கொண்டு
சப்தமின்றி நடக்கிறோம்.
வெகுதூர பயணித்தின் முடிவில்
கைகளில் துருவேறிய கத்தரியுடன்
நம் குழந்தைகளை நெருங்குகிறோம்.

3.சாக்கிய முனி

கர்ப்பம் சுமக்கும்
அணிலொன்று நேற்று வீட்டிற்குள்
வந்தது.
மிகச்சரியாக நேருக்கு நேர்
என் நெற்றிக்கு முன் வந்து நின்றது.
குத்திட்டு நின்ற அதன் கண்களில்
தளும்பும் மெளனத்தில்
பச்சைப் பாசிகள் படர்ந்த
சிறுசிறு குளங்கள் விரிந்து கிடக்கின்றன.
குளக்கரையோர சால மரத்தடியில்
யுவதியொருத்தி தன் கால்களை பரப்பியபடி
நிற்கிறாள்.
வெண்ணிற யானை அவளிலிருந்து
வெளியேறுகிறது.
கண்கள் விழிக்கையில் கண்கள் திறக்காத
குட்டி அணில் நிசப்தமிடுகிறது.

-நிலாரசிகன்.

[இம்மாத உயிர்மொழி இலக்கிய இதழில் வெளியானவை]

0 comments: