Thursday, January 31, 2013

ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்



1.ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்


இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்
நான்காவது மகளாக ஜூலி
பிறந்த செய்தி கேட்டவுடன் வேகமாய்
மருத்துவமனை விட்டு வெளியேறினார் 
ஜூலின் அப்பா.
அதன் பின்னர் எப்பொழுதும் அவர்
தன் முதல் மூன்று பெண்களையும்
எண்களை வைத்தே அழைக்க ஆரம்பித்தார்.
ஒன்று 
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறது.
இரண்டு
பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறது.
மூன்று
படிப்பில் ஆர்வமில்லை அதனால் தையல்
வகுப்பு போய் வருகிறது
இப்படித்தான் எல்லோரிடமும் 
தன் பெண்களின் மகிமை பேசுவார்.
நான்காவது எண்ணுடைய ஜூலியை
அவர் விரும்பியதே இல்லை.
ஒன்றிலிருந்து மூன்றுவரை திருமணம்
முடிந்து மறுவீடு சென்றபின்னரும்
நான்கை பற்றிய அக்கறையின்றி
திரிந்ததால்
தன் முப்பதாவது வயதில்
ஜூலி காதல் மணம் புரிந்து வெளியேறினாள்.
யாருமற்ற வீட்டின் அடுக்களையில்
நைந்த கறுப்புவெள்ளை புகைப்படமொன்றை
கைகளில் ஏந்தியபடி
ஜூலியின் அம்மா ஒருநாள் 
முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்
"அவர் பூஜ்ஜியம் அவர் பூஜ்ஜியம்" என்று.

2.மிஸ்டர் எம் மற்றும் எக்ஸ்ஸின் காதலி : எஸ் என்கிற எஸ்

கடற்கரையில்தான் எஸ் தன் குழந்தைமையிலிருந்து
குமரியாக மாறினாள். 
மருத்துவமனையில்தான் எஸ் ஒரு காதலை கொன்று
வீசினாள்.
காதல்மாதத்தில்தான் எஸ் தன் மூத்தகாதலான
"எம்"மை கைப்பிடித்தாள்.
முகநூலில்தான் எஸ் தன் புகைப்பட முகத்தை
முதன்முதலாய் காண்பித்தாள்.
மயில்கள் திரியும் தோட்டத்தில்தான் எஸ்ஸின் மீதான‌
காதலை கண்ணீர்மல்க எக்ஸ் புலம்பினான்.
யாருமற்ற இரவில்தான் எக்ஸ் ஒரு திருமணத்திற்கு
சம்மதித்தான்.
உலக அழிவை பேராவலோடு எக்ஸ் எதிர்நோக்கிய‌
கணத்தில்தான் எம்மும் எஸ்ஸும் குற்றாலம் போவது
பற்றிய முடிவெடுத்தனர்.
எக்ஸ் வேறு வழியின்றி தூக்கில் தொங்க நினைத்தபோது
அறுந்து விழுந்து சிரித்தது வாழ்க்கைவடிவ‌
தூக்குக் கயிறு.
காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்று
எக்ஸ்க்கு அறிவுரை வழங்கி எஸ்
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.
எக்ஸை சேரும்போது அந்த எஸ்.எம்.எஸ்ஸில்
வார்த்தைகளே இல்லை.
எஸ்ஸின் பேரன்பின் முத்தங்களின் கனம் தாளாமல்
ஒரு நாள் எக்ஸ் மரித்துப்போனான்.
அப்போது எம்மும் எஸ்ஸும் நயாகராவில்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தனர்.

-நிலாரசிகன்.

2 comments:

said...

yes very nice

said...

உங்கள் கவிதைக்ள் கூடுதல் கனத்தை சுமந்து நெஞ்சை நிறைத்து விடுகின்றன். அருமை!