Sunday, April 17, 2011

கதைசொல்லி


விசித்திரமான கதைசொல்லியொருவனை
இரவின் பின்பொழுதில்
சந்தித்தேன்.

கதையின் ஒவ்வொரு சொல்லை இவன்
உதிர்க்கும்பொழுதும்
ஒவ்வொரு வயதாக ஏறிக்கொண்டே
செல்கிறது.
இப்போது
பதினொன்றாவது,
பன்னிரண்டாவது,
பதிமூன்றாவது...

தன் ஆயிரத்து நூற்றி எண்பதாவது
வயதில் குரல் நடுநடுங்க
கதையின் கடைசி சொல்லை
அவன் உதிர்த்தபோது
ஒரு குழந்தையாய் உருமாறியிருந்தது
அவனுருவம்.
முதுமைக்கும் பால்யத்திற்குமிடையே
கதையாய் விரிந்திருக்கிறது
இந்த இரவு.
-நிலாரசிகன்