Sunday, April 24, 2011

கல்குதிரை கவிதைகள்




1. சோலஸ்

ஆழியின் மையத்தில் ஒரு அரச குடும்பத்தினர்
வசிக்கிறார்கள்.
அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள்
இருக்கிறாள்.
அவளை கவர்ந்து சென்றான்
அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன்.
எட்டுத் திசையில் தேடியும் சோலஸ்ஸை
அரசனால் கண்டுபிடிக்க இயலவில்லை.
சோர்ந்தவனின் கண்களில் வழிகிறது
செந்நீர்.
கடலின் சுவை மாறிப்போகிறது.
யுகம் பல கடந்த பின்னும்
அலையாகி கரையெங்கும் தேடுகிறான்.
தூரத்தில் ஏதோவொரு சிறு நதியில்
ஒன்றாய் நீந்துகிறார்கள்
சோலஸ்ஸும் அவனும்.

2. சாமக்கோடாங்கி

கோடாங்கியின் குடுகுடுப்பைக்குள்
இரண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள்.
இரவை இரண்டாக பிளக்கும்
கூர்வாளை அவர்கள் தயார் செய்கிறார்கள்.
சாம்பல் நிற நாய்களையும்
கூகையொன்றையும் விஷமேற்றி
வளர்க்கிறார்கள்.
நீண்ட சடை முடிக்குள்
மேலும் இருவர் அமர்ந்திருக்கிறார்கள்.
நீல நிறத்தாலான கண்களும்
சிவந்த உடலையும் கொண்டிருக்கிறார்கள்.
கோடாங்கி,
ஐந்து தலையுடைய நாகத்தின்
உருவமெடுக்கிறான்.
இரவை விஷத்தால் நிரப்பிக்கொண்டு
திரிகிறான்/நடனமிடுகிறான்/கிறங்குகிறான்
விடியலில்,
விஷமனிதர்களை கண்ணுற்று
ஓடி மறைகிறான்.

-நிலாரசிகன்
[இவ்வருட கல்குதிரை இலக்கிய இதழில் வெளியான கவிதைகள்]

4 comments:

said...

Auramai

said...

Very Nice Poems :)

said...

//இரவை விஷத்தால் நிரப்பிக்கொண்டு
திரிகிறான்/நடனமிடுகிறான்/கிறங்குகிறான்
விடியலில்,
விஷமனிதர்களை கண்ணுற்று
ஓடி மறைகிறான்//
அருமை.

said...

vaazhthukal nila....