Thursday, June 16, 2011

இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள்

 இரவைக் கொண்டாடும் துயர்மிகு வரிகள் - கவிஞர். க.அம்சப்ரியா

நவீன கவிதைக்கான அடையாளமென்பது பாடு பொருளையும் சொல்லாட்சியையும் முந்தைய புதுக்கவிதையிலிருந்து நகர்த்தி வேறு தளத்திற்கு சேர்ப்பதாக அடையாளப்படுத்தலாம். எல்லோர்க்கும் பாதிக்கிற பொது அம்சங்களின் அழுத்தம் வேறு வேறு தொனியில் வெளிப்படுத்துவதும்,தனக்கேயான மனமுறிவு உளைச்சல்கள்,பூரிப்பின் உச்சக்கட்டங்கள்,சமநிலையில் தத்தளிக்கிற எண்ணங்கள் என்று நவீன கவிதை இன்றைக்கு பாய்ச்சலாக போய்க் கொண்டிருக்கிறது.

ஆர்வமிகுதியால் அல்லது வாசிப்பூக்க எழுச்சியில் பீறிடும் சொற்கூட்டங்கள் கவிதையின் முகவரியை தாங்கிக் கொண்டு போலிகளாக வரத்துவங்கிவிடுவது துவக்க நிலையின் பலவீனமாகும்.

புதுக்கவிதையின் இப்படிநிலையைக் கடந்து,ஏற்கனவே புதுக்கவிதையின் மூலம் அறிமுகமாயிருந்தபோதும்,உயிர்மை வெளியீடாக நிலாரசிகன் நவீன கவிதையில் இது தன்னுடைய முதல் தொகுப்பென்று வெளிப்பட்டிருக்கிறார்.
வழக்கமான வெளிப்பாடுகளில் திருப்தியின்மையை இவர் உணர்ந்திருக்கக் கூடும். அல்லது சமகாலத்தை பயின்றிருக்க வேண்டும். இதுவே இவரை இவ்வாறான பிரகடனத்திற்கு நகர்த்தியிருக்கிறது.

இவரது இந்த சுய அறிவிப்பிற்கேற்றபடியாகி இக்கவிதைகள் உள்ளதா? பல அரசியல் நுணுக்கங்களை பட்டவர்த்தணமாக்கும்படியான நவீன குரலாக இத்தொகுப்பு வெளிப்பட்டிருக்கிறது.

நவீன கவிதைக்குள் தனிமையின் குரல் புதிதல்ல எனினும் தனிமை இசையைப் போலிருப்பது புதிதுதான். இசையெனில் அது எவ்வகையான இசை? தாலாட்டா? ஒப்பாரியா? மென் ஒலிச்சந்தமா? இந்த இசை எதையெல்லாம் கொண்டு வரும்? தொகுப்பின் முதல் கவிதையிலேயே அதிர்வு வாசகத்தளத்திற்கு நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். இத்தனிமையின் இசை சிறகுகளற்ற பறவைகளை பிரசவிக்கிறது. ஒரு பறவையின் உயிரோட்டமே அதன் சிறகுகள்தான். ஆனால் நாம் சிறகுகளற்ற பறவைகளாகத்தான் உலாவருகிறோம். சிறகுகளற்ற பறவையின் ஒலி நிச்சயமாக மகிழ்ச்சியை கொண்டிருக்கப்போவதில்லை. அது துயர்மிகுந்த இரவின் பாடலையே இசைக்கக் கூடும். "தனிமையில் இசையில்" எனத்தொடங்கும் இக்கவிதையனுபவம்,கவியாழத்தில் மூழ்கிய ஒருவருக்கு எத்தனையோ பொக்கிஷங்களை அள்ளித்தருகின்றது.

நம்பிக்கையைச் சொல்லும் கவிதைகள் உண்டு என்று சொல்கிறபோது ஓர் அச்சம் பரவுகிறது. நவீன கவிதைக்குள் நம்பிக்கையின்மையின் குரல் இயல்பானது என்பதால் இது அசட்டு நம்பிக்கையின் குரலோ என்று
ஐயம் எழுந்துவிடும் என்பதால் இந்தக் கவிதையை நீங்கள் அறியத்தருகிறேன்.

"உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்"

தன் ஒவ்வொரு வினாடி அனுபவங்களையும் தன் கவிதைக்குள் கொண்டு வருகின்ற மாயவித்தை இவருக்கு கைவந்திருக்கிறது. அதனாலேயே எல்லாக் கவிதைகளும் ஏதோ ஒரு வகையில் தனக்குள் வாசகனை உள்வாங்கிக்கொள்கிறது.

இரவுகளைப் பற்றிய அந்திமச்சொற்கள் மயான வெளிக்குள் இழுத்துச்சென்று மூச்சடைக்க வைக்கின்றன. கனவுகளின் பாதையில் நடந்து போயிருக்கிற் மனிதர்கள் விலங்குகளாகி கவிஞனைச் சிதைக்கிற வன் உலக முரண்பாடுகள் கலக்குரல்களாகவும், ஈனஸ்வர அழுகையாகவும் வெளிப்பட்டிருப்பதை நுண்வாசகன் ஒருவன் இந்தத் தொகுப்புக்குள் அறியக்கூடும்.

பகலின் அபத்தங்களையும்,இரவின் சூழ்ச்சிகளையும் கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது நிலா. மையப்புள்ளியிலிருந்து உள்நுழைகிற ஒரு புதித மனத்துக்காரன் எல்லாவற்றையும் சிரித்துக்கொண்டே சகித்துக்கொள்கிறான். தன் மெய்யுணர்வை யார் மீதும் பிரயோகிக்க நினையாதவனே ஞானியாகிறான். அப்போது உதட்டோரம் வெளிப்படுகின்ற சிரிப்பு நிர்வாணத்தைக் கொண்டலைகிறது. "நீந்துதலின் சுகம்" எனத்துவங்கும் கவிதைக்குள் ஞான தரிசனத்தை உணர முடிகிறது.

யாருமற்ற தெருக்களிலும் ஏதோவொன்று அலைந்து கொண்டிருக்கிறது. சூன்யமென்றோ வெற்றிடமென்றோ ஏதாவது இருக்கிறது? இவரின் கவிதைகளுக்குள் இரவுகள் ஏதோவொன்றோடு இடைவிடாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. குரலற்ற பறவைகள்,மரணத்தை இனிப்பென்று சுவைக்கிற சுவைஞன்,மணல்வீட்டின் சிறுவர்களிடம் எஞ்சியிருக்கிற மணலில் குழந்தைமையை தரிசிக்கும் அபூர்வம்,இரவைக் கொண்டாடும் பறவைகள் என கவிமனம் பொங்கிக்கொண்டேயிருக்கிறது. பித்துக்கொண்டு அலைகிறது. எனக்குப் பிடித்த இரு கவிதைகளை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

"நான்கு சுவர்களுக்குள்
சுற்றிச் சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டுச்சென்ற இறகு
நான்"

வாசிக்கிறவனுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கைகாட்டிவிட்டு ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க இக்கவிஞரின் இன்னொரு கவிதை

"இந்தக் கவிதை இப்பொழுதுதான்
பிறந்திருக்கிறது.
தாலாட்ட யாருமற்ற பின்னிரவில்
பீறிட்டு எழும் அழுகை
ஏதுமின்றி வெகு இயல்பாய்
மலர்ந்திருக்கிறது.
கால்களை உதைத்துக்கொண்டு
கண்களை உருட்டியபடி
விழிக்கிறது.
துணி விலக்கி பாலினம்
என்னவென்று அறிந்துகொள்ளாத
வரையில் இக்கவிதை
சிரித்துக்கொண்டுதானிருக்கும்"

வெயில் தின்ற மழை நம் எல்லோர்க்குள்ளும் இருக்கிறது. மழை வெயிலை தின்றதா? வெயில் மழையை தின்றதா? என்று சொற்களின் இடைவெளியில் புதைந்து கிடக்கிறது இரகசியங்களை உணர இத்தொகுப்பு உதவும்.

நூலின் பெயர்: வெயில் தின்ற மழை
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.50
இணையத்தில் வாங்க: http://www.uyirmmai.com/Publications/BookDetails.aspx?bid=339

1 comments:

said...

இந்தப் புத்தகத்திலுள்ள உங்கள் கவிதைகளைப் படித்தேன். கவிதைகளோடு அவ்வளவு பரிச்சயம் இல்லை என்றாலும், இரண்டு மூன்று முறை படித்து ஒரளவிற்கேனும் புரிந்துகொண்டேன்.

உங்களை மிகவும் பிடிக்கும் நண்பிக்கு ஒரு புத்தகத்தைப் பரிசாக அளித்திருக்கிறேன்!

'நிலா'வுக்கு ரசிகர்கள் எல்லா ஊரிலும் இருப்பார்கள்தானே?! :)