Thursday, May 19, 2011

கவிதைகள் இரண்டு

1.உடலுக்குள் பயணிக்கும் கப்பல்
மடித்துக்கட்டியிருக்கும் காவி நிற
உடையில் வியர்வை பூக்க ஆரம்பித்தபோது
கைகளில் வைத்திருந்த கிளி பொம்மையை
இறுக பற்றிக்கொள்கிறாள்.
இறுக்கம் தாளாத கிளி
தன் தலையை விடுவிக்க முயன்று
அங்குமிங்கும் அசைக்கிறது.
கிளியின் கழுத்திலாடும் சிறுமணியில்
ஒன்று சப்தமின்றி விழுந்து சிதறிய
கணம்
அவளுடலை திறந்து உள்நுழைகிறது
கருமை நிற கடல்.
அங்கே,
நீரைக் கிழித்து பயணிக்கும் கப்பலின்
நிழலில் மிதந்துகொண்டிருக்கிறது
கிளியின் சடலம்.

2.நடுநிலைத் திணை

ஒவ்வோர் இதழிலும்
வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருக்கும்
அம்மலருக்குள்
ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.
எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்
நிறைந்த அவ்வுலகில் .
சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்
ஊர்ந்து செல்ல
காட்டாற்றின் கரையில்
மூன்று நிழல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பறவையின் முதல் நிழலும்
அலகுப் புழுவின் இரண்டாம் நிழலும்
சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற
மூன்றாம் நிழலில்
ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை.
சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை
சுவைத்துக்கொண்டு.

-நிலாரசிகன்.

[361˚ சிற்றிதழில் வெளியான கவிதைகள்]

5 comments:

Anonymous said...

<\may i know is it poem r dialogue...\>

said...

ரெண்டுமே ரொம்ப நல்லாருக்கு நிலா.

said...

yenakku yethuvume puriyala.....

said...

முதல் கவிதையை விளக்குவீர்களா? ஒன்றுமே புரியவில்லை.

இரண்டாம் கவிதை நன்று. புரிந்தது!

said...

வாய்ப்பிருப்பின் எமது கவிதைகளையும் பார்வையிட வருக..
http://rishisanthoshi.wordpress.com/