Wednesday, January 04, 2012

புதுவிசை கவிதைகள்

1.வெண்நிற செம்பருத்தி
குரு(ந)தியில் பயணிக்கும் எறும்புகள்
ஒரு செம்பருத்திச் செடியை இழுத்துச்
செல்கின்றன.
மெல்லிதழ்கள் கொண்ட செம்பருத்தியின் மேல்
படர்கிறது இரவு வெயில்.
அடர்ந்த வெயிலின் நடுவே
ஒளிவீசும் தீச்சுடருடன் கண்கள் திறக்கிறான்
சடைமுனி.
அவனது கால்களை பற்றிக்கொண்டு அழுகிறாள்
வெண்ணிற உடை அணிந்த
சிறுமியொருத்தி.
உதிரம் வடியும் கால்களிடையே ஊர்கின்ற
எறும்புகள் வெண்நிற செம்பருத்தியொன்றை
மெதுவாய் இழுத்துச் செல்கின்றன.

2.நதிக்கரையில் நீந்தும் சிறுமீன்

மரத்திலிருந்து விழுகின்ற கண்ணாடிக்குடுவை
காற்றினூடாக வேகமாக பயணிக்கிறது.
குடுவைக்குள் தளும்பும் நீரில்
இரண்டு மீன்குஞ்சுகள் இருக்கின்றன.
கிளையொன்றில் மோதும் குடுவையை
அதன் பின் காணவில்லை.
இடவலமாக வானில் பறக்கும்
பறவைகள் நதியொன்றில்
விட்டுச் செல்கின்றன
இரண்டு இறகுகளை.
அவை மெல்ல நீந்தி
மீன்குஞ்சுகளாக உருக்கொள்கையில்
கனவொன்றின் நதிக்கரையில்
இக்காட்சியை கண்டபடி நடந்துசெல்கிறாள்
நட்சத்திரா.

3.ஒளிப்பறவைகள்
அவனது உடலெங்கும் மலர்ந்திருக்கும்
சிறுரோமங்களில் பறவைக்கூட்டங்கள்
வசித்து வந்தன.
ஓர் இரவில்
அரவமற்ற மரத்தடியில்
அமர்ந்து அழத்துவங்கினான்.
வன ரோமங்களிலிடையே
மெல்ல உடலேறி வந்த தேன்சிட்டொன்று
கண்ணீரை பருகி மெளனித்தது.
இருளின் நடுவே ஒளியுடன்
நடந்தவன் மின்மினிகள் சிலவற்றை
பின் தொடர்ந்தான்.
அடர் இருளில் ஒளியாய்
செல்லும் இவனது சுவடுகளெங்கும்
பறவைகள் முட்டையிட்டன.
கூடுடைந்து வெளியேறும் குஞ்சுகள்
கறுப்பு நிற ஒளியுடலை
அசைத்து அசைத்து அவனை
பின் தொடர்ந்தன.
நகரத்தின் தார்சாலைகளில்
நடந்தவனை சிதறடித்து
சென்றது மஞ்சள் ஒளி.
முதன் முதலாய்
பறக்க துவங்கின ஒளிப்பறவைகள்.

4. ஆத்மார்த்தம்

வெள்ளை நிறம் உருகி ஓடும்
நதியில் நாம் இப்போது
நீந்துகிறோம்.
நதிக்கரையின்
மணலில் நீந்துகின்ற மீன்கள்
நம்மைக் கண்டு கையசைக்கின்றன.
தேவதைகள் இருவர் நம்மை
வேறோர் உலகிற்கு அழைத்துச் செல்கிறார்கள்.
வெண்நிற தேவதையை நீயும்
கருநிற தேவதையை நானும்
பின் தொடர்கிறோம்.
சொர்க்கம் நரகம் இரண்டிற்கும்
இடையே ஓடுகின்ற நதியில் அவர்கள்
நம்மை அழைத்துச் செல்கிறார்கள்.
நீல நிற வானில் தவழ்ந்து செல்லும்
பறவைகள் தலைகுனிந்து
நம்மை பார்க்கின்றன.
அனைத்தும் கடந்துவிட்ட
ஆத்மார்த்த கயிற்றில் நம்மை
இறுக கட்டிவிட்டு மிக வேகமாய்
சுழல்கிறது இவ்வுலகு.

-நிலாரசிகன்.
[இம்மாத புதுவிசை ஜனவரி '12 இதழில் வெளியானவை]

2 comments:

said...

வாழ்த்துக்கள்

said...

கவிதைகள் மிக அருமை. வாழ்த்துக்கள் :)