Saturday, March 19, 2011

அதனதன் வானம்



சிறகுகளின்றி உயரத்தில் அலையும்
அதன் பறத்தலை வியப்புடன்
உற்று நோக்குகின்றன
இரு தேன்சிட்டுகள்.
குளிர்ந்த மழை இரவுகளில்
கதகதப்புடன் அருகருகே
வசித்திருந்த நாட்களும்
உயிரின் நீட்சியான
குஞ்சுகள்
முட்டையுடைத்து
வெளியேறிய நாளை பற்றியும்
நினைத்துக்கொண்டே
அதனை பார்க்கின்றன.
சற்றே வேகமான காற்றில்
தன்னைப் படைத்த
குருவிகளின் மேல்
பறந்துகொண்டிருக்கிறது
சிறகுகள் முளைக்கத்துவங்கிய
கூடு.
 

-நிலாரசிகன்.
[இவ்வார கல்கி இதழில் வெளியான கவிதை]

Saturday, March 05, 2011

உயிர் எழுத்து கவிதைகள்

1.மீன்கள் துள்ளும் நிசி




கடலென விரிந்திருக்கும் அறைக்குள்

நுழைந்துவிட்டது மீனொன்று.

செந்நிற உடலைக் கொண்டிருக்கும்

அதன் பின்னால் மீனுடல் கொண்ட சொற்கள்

நீந்தியபடி வருகின்றன.

இக்காட்சியை நானொரு கவிதைக்குள்

கண்டெடுத்தேன்.

கவிதையின் ஒவ்வொரு சொல்லின்

அடியிலும் மீன்கள் மறைந்திருந்தன.

ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்கும்

இடையே கடல் அலையின்றி

கிடந்தது.

கவிதையின் கடைசி வரியை

படித்து முடித்தபோது

என் உடலிலிருந்து துள்ள

ஆரம்பித்தன 247 மீன்கள்.





2. திமிர் நாய்க்குட்டிகள்



தென்னை மரத்தடியில் இதுவரை

நான்கு நாய்க்குட்டிகள் புதைக்கபட்டிருக்கின்றன.

அவை எதனால் இறந்தன

என்பது பற்றி என்னிடம் கேட்காதீர்கள்

பின் வரும் நிஜம் சொல்லக்கூடும்.

நோய்மை முற்றிய நிலையிலும்,

சர்ப்பம் தீண்டியும்,

வாகனமொன்றின் அடியில்

தலை நசுங்கியும் இறந்து போயின

முதல் மூன்றும்.

துடிக்க துடிக்க வளர்ப்பு அணிலை

கொன்றதால் நான்காவது

நாய்க்குட்டியை கொன்று வீசியது

இயற்கை.

நான் அணில்.

நான் நாய்க்குட்டி.

நானே இயற்கை.

-நிலாரசிகன்.

[ இம்மாத உயிர் எழுத்து இதழில் வெளியான கவிதைகள்.]

Wednesday, February 23, 2011

போதி மரத்தின் ஒடிந்த கிளை


பூட்டிய அறை யன்னலின் சிறுதுவாரம்
வழி உள் புகுந்தனர் ஆதிகள்.
மொத்தம் நாற்பத்தி நான்கு பேர்.
ஒவ்வொருவரின் கைகளிலும் ஆயுதமிருந்தது.
முதலாவதாக என்னுடலில்
தன் ஆயுதத்தை நுழைத்தவனின் பெயர்
சிலிர்ப்பூட்டியது.
வரிசையாக..
ஒவ்வொருவராக..

கடைசியாக
குருதி வெள்ளத்தில்
என்னை சிதைத்தவனின் பெயர்
ஆச்சர்யமூட்டியது.
வெளியேறினார்கள்.
அறையெங்கும் பெயர்களை விட்டுச்சென்றார்கள்.
முதலாவது ஆயுதத்தை செலுத்தியவன்
கைகளில்
போதி மரத்தின் ஒடிந்த கிளையும்,
கடைசி ஆயுதத்தால் சிதைத்தவன்
கைகளில்
கனமற்ற சிலுவையும் இருந்தன.
-நிலாரசிகன்

Monday, February 14, 2011

364 நாட்களுடன் வசிப்பவன்



முடிவற்று நீளும் இரவுகளிலும்
நின்று கொண்டே உறங்கும் புரவிகளின்
நிழல்களில் ஊர்ந்து செல்லும் எறும்புத்தடத்திலும்
தியானப்பெருவெளியின் வறண்ட நதியோரத்தில்
தலை குனிந்து மரணத்தின் முதல் படியில்
நிற்கும் ஒற்றை பூச்செடியிலும்
இன்னும்
அறியப்படாத வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகு வர்ணத்திலும்
உரையாடும் இலைகள் கொண்ட
வனமொன்றின் நடுவிலும்
இருண்ட கனவுகளில் கரையும்
சிவப்பு நிற மெழுகின் பாதங்களிலும்
தேடி
தேடி
களைத்து 
இக்கவிதையில் வீழ்ந்தேன்.
ஒரு ரயில் நிலைய சந்திப்பில்
ஆயிரம் யுகங்களுக்கும் மீள இயலாமல்
என்னைக் களவாடி ஓடி மறைந்த
இரண்டாம் மாதத்தின்
பதினான்காம் நாளை.

-நிலாரசிகன்.

Thursday, February 10, 2011

களம் புதிது - கவிதை வாசிப்பு


Sunday, February 06, 2011

மிஷ்கின் என்றொரு கலைஞன்[யுத்தம் செய் - விமர்சனம்]




The color of paradise  படத்தை நினைத்தவுடன் ஞாபகத்திற்கு வருவது கண்பார்வையற்ற அந்தச் சிறுவனா அல்லது படம் நெடுக ஒலிக்கும் அந்த மரங்கொத்தியின் சன்னமான சப்தமா? மரங்கொத்தி எனில் யுத்தம் செய் திரைப்படம் உங்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமரும். ஏனெனில் மேலோட்டமாக சில திரைப்படங்களை நாம் அணுக முடியாது. மேலும்,திரைப்படம் என்பதே பொழுதுபோக்குவதற்குத்தான் என்கிற நம் பொதுப்புத்தியை கழற்றி எறிந்துவிட்டு வேறோர் அனுபவத்தை வேறோர் உலகை நமக்குணர்த்தும் திரைப்படங்களை தேட வேண்டும்.
அவ்வகையில் நாம் கண்டிராத களங்களை கொண்ட படங்கள் ஏராளம். பொதுவாக அதனை உலகத்திரைப்படம் என்கிறோம்.

மிஷ்கின். சந்தேகமின்றி தமிழுக்கு கிடைத்த  அற்புதமான கலைஞன். சித்திரம் பேசுதடியில் ஒரு சிறிய சித்திரத்தை தீட்டதுவங்கி நந்தலாலா வரை நீண்டதொரு சித்திரப்பயணத்தில் வெற்றிகரமாக தமிழ்சினிமாவிற்கு புது வர்ணம் பூசியவர். ஒரு காட்சியெங்கும் விரவிக்கிடங்கும் உரையாடல்களை
கச்சிதமான காட்சிப்படுத்துதல் வழியே படம் பார்ப்பவர்களை இணைத்துவிடும் ஆற்றல் கொண்டவர். விதவிதமான கேமிரா கோணங்களில் வெகு சாதாரண காட்சிகளை உலகத்தரமிக்க காட்சிகளாக்கும் வல்லமை படைத்தவர். இதைத்தான் நாங்கள் அந்த உலகசினிமாவில் பார்த்தோமே இந்தக்காட்சியைத்தான் நாற்பது வருடங்களுக்கு முன்பே ஜப்பானியத்திரைப்படமொன்றில் எடுத்திருக்கிறார்களே என்று ஒவ்வொரு காட்சியையும் ஏளனம் செய்யும் அதிமேதாவி உலகசினிமா ரசிகர்களை பற்றி இவர் கவலைப்படவில்லை என்பதை நந்தலாலா சொல்லிற்று. தமிழனுக்கு இது புதுசு. நான் கற்றதை,என்னைக் கவர்ந்ததை தமிழில் தமிழ் ரசிகனுக்கு தருகிறேன் என்றவர்.

யுத்தம் செய். முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சிவரை அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்பதை பார்க்கும் எவராலும் யூகிக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி. வெட்டப்பட்ட கைகள் அட்டைப்பெட்டியில் பொது இடங்களில் காணப்படுகின்றன. சென்னை நகரை உலுக்கும் இந்த கேஸ், தங்கையை தொலைத்த சிபிசிஐடி அதிகாரி சேரனிடம் ஒப்படைக்கப்படுகிறது. எந்தவொரு தடயமுமின்றி எதற்கிந்த கைகள் வெட்டப்பட்டு பொதுவெளியில் வைக்கப்படுகின்றன என்ற புதிரை மெல்ல மெல்ல சேரன் அவிழ்க்க முயல்கிறார். இவ்வளவுதான் கதை. ஆனால் இதனை சொன்ன விதத்தில்தான் தனித்து நிற்கிறார் இயக்குனர். படத்தில் அதிகம் கவர்ந்த காட்சிகளை முதலில் பகிர்ந்துகொள்கிறேன்.

கவர்ந்த காட்சிகள்/நுணுக்கங்கள்:
  1. ஒரு பிணவறையில் வெகு இயல்பாய் கோர்ட்டால் தலையை போர்த்திக்கொண்டு உறங்கும் டாக்டர்
  2. முதல் காட்சி. சேரனின் தங்கை ஆட்டோவிற்கு ஏதோ விபரீதம் என்று புரிந்துகொண்டு அலைபேசியில் தகவல் தெரிவிக்க நகர்கையில் பின்னால் செல்லும் ஆட்டோ ட்ரைவர் மீண்டும் ஆட்டோவுக்குள் திரும்பாதது. Frameல் ஆட்டோவை மட்டும் சில நொடிகள் காண்பிப்பது.
  3. சுரங்கப்பாதை. தூரத்தில் ஒரு பெண் பெருக்கிக்கொண்டிருக்கிறாள். ஏதோவொன்று அவள் பார்வையில் பட மெல்ல நகர்ந்து முன்னால் வருகிறாள். இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் நோக்கி நகர்கிறது கேமிரா. அங்கே கனமான மெளனத்துடன் கிடக்கிறது அட்டைப்பெட்டி. அதிலிருந்து ஆரம்பிக்கும் பின்னணி இசை.
  4. ஒல்லிப்பிச்சானின் முகமூடி.
  5. அசோக் நகர் போலீஸ் ஸ்டேசன் அதிகாரியின் சில்லறைத்தனம்.
  6. சிகரெட்/தேநீர் கேட்கும் அதிகாரியின் கோபமும் இயலாமையும்
  7. இடைவேளையில் வரும் மிக அற்புதமான சண்டைக்காட்சி. (தியேட்டரில் விசில் பறந்தது)
  8. பிணவறை டாக்டரின் மிகச்சிறந்த நடிப்பு
  9. கறுப்புக்கண்ணாடி தாத்தா
  10. வயிற்றில் குத்திய கத்தியை பிடுங்கி எறிந்துவிட்டு தீர்க்கமான பார்வையுடனும் வெறியுடனும் கொலைகாரனை நோக்கி நகரும் பெண்
  11. தன் மகனின் கைகளை பார்த்து கதறி அழுகின்ற குண்டுப்பெண்.
  12. தூக்கு போட்டு இறந்த பெண்ணை தலைசாய்த்து பார்க்கும் தாயின் பார்வையை காட்சியாக்கியிருப்பது
  13. பிணத்தை பார்த்துவிட்டு விரைத்து அமர்ந்திருக்கும் சிறுவன்.
  14. சேரன்,ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியாக நடித்திருக்கும் நடிகை,அசோக்நகர் காவல் அதிகாரி,பிணவறை டாக்டர்,மாணிக்கவிநாயகம் - நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
  15. ஒளிப்பதிவு,இசை,திரைக்கதை - அற்புதம்
  16. உணர மட்டுமே முடிந்த இன்னும் நூறு காட்சிகள் :)
படத்தின் குறைகள்:
  1. துணை கமிஷ்னர் சுடப்பட்டு வீழ்கிறார். அவரது பெண்ணிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வருகிறது "Daddy calling".!!!
  2. சேரனிடம் கொடுக்கப்படும் உதவி அதிகாரிகளின் Profileஐ குப்பையில் வீசுவது. எந்த அதிகாரி இப்படி வீசுவார்?
  3. அஞ்சாதே படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிகள். குறிப்பாக அந்த முழுக்கை கறுப்பு பனியன் அணிந்த ஒல்லிப்பிச்சான்.
  4. ஒய்.ஜி.மகேந்திரன் ஏ.சி வழியே தப்பிக்க அவரே தச்சு வேலை செய்கிறார். மருத்துவருக்கு எப்படி தெரிந்தது இத்தொழில்?
  5. குடும்பம் புள்ளைகுட்டி சகிதமாக இத்திரைப்படத்தை பார்க்க முடியுமா என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு ரத்தம்,வன்புணர்ச்சி,பிணம்,டார்ச்சர் வகையறாக்கள்.
  6. படத்திற்கு ஒட்டாத குத்துப்பாடல்.பாடலுக்குள் ஒட்டாத சாரு :)
படத்தின் "தைரியங்கள்":
  1. BDSM  வகை செக்ஸ் டார்ச்சரை காண்பித்திருக்கும்  முதல்  தமிழ்ப்படம் இதுவாகத்தானிருக்கும்.
  2. பிணவறை காட்சிகள்
  3. நகவெட்டியிலிருக்கும் கத்தி. அதன் மூலம் ரவுடியின் நெஞ்சில் எவ்வித முகபாவங்களுமின்றி சேரன் குத்திக்கொண்டே நடக்கும் காட்சி. சபாஷ்!
  4. சடாரென்று உள்ளிருந்து வெளிவரும் குவாலிஸ் சேரனின் காருடன் மோதும் காட்சி. அதுவரை அமைதியாக சுற்றிக்கொண்டிருக்கவைத்து,காக்கவைத்து சரட்டென்று வெளிக்கொண்டுவந்திருக்கும் இயக்கம்.

ஒரு நாவலாசிரியன் தன் பாத்திரப்படைப்பை உருவாக்கும் அக்கறையுடனும்,நேர்த்தியுடனும்,நுணுக்கமுடனும் மிஷ்கின் யுத்தம் செய் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.

யுத்தம் செய்:
குழந்தைகளை தவிர்த்துவிட்டு அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம். வாழ்த்துகள் மிஷ்கின்.

-நிலாரசிகன்.

Tuesday, February 01, 2011

புத்தக யாத்ரீகன்



 
கனமான நூலொன்றின் நானூற்றி இருபதாவது
பக்கத்தில்தான் முதலில் அவனை சந்தித்தேன்
சொற்கூட்டங்களில் பின்னிருந்து வெளிக்குதிக்க
கடும் முயற்சிகளிலிருந்தான்.
ஒவ்வொரு சொல்லாக அகற்றி விடுவித்தேன்.
தூர தேசமொன்றிலிருந்து புத்தகங்கள் வழியே
அவன் இந்நூலிற்குள் கடத்தப்பட்ட செய்தியை
வருத்தங்களுடன் பகிர்ந்தவனுக்கு தேநீர் கொடுத்தேன்.
மீண்டும் தன் தேசம் திரும்பும் வழியை
ஏழு முறை கேட்டுச் சலித்தான்.
ஒரே ஒரு வழி இதுவென்று
என் கவிதையொன்றில்
அடைத்துவைத்தேன்.
இக்கணம்.
-நிலாரசிகன்.

Monday, January 10, 2011

அடலேறு


நன்றி: அடலேறு: http://adaleru.wordpress.com/2011/01/07/veyil-thindra-malai/ 


புதுக்கவிதையில் இருந்து நவீன கவிதை வாசிப்பிற்கு வந்த பிறகு கவிதையின் சாராம்சமே முற்றிலும் மாறிப்போய் ஒரு புது உலகம் இயங்கிகொண்டிருப்பது எப்படி மகிழ்ச்சியை தந்ததோ அதே மகிழ்ச்சியை நிலா ரசிகனின் “வெயில் தின்ற மழை ” நவீன‌ கவிதை தொகுப்பும் தந்தது. 

நிலாவின் மயிலிறகாய் ஒரு காதல், பட்டாம் பூச்சியின் கனவுகள் புத்தகத்தை படித்துவிட்டு வெயில் தின்ற மழை படிப்பவருக்கு இதன் ஆசிரியர் தான் இந்த புத்தகத்‌தை எழுதிய‌வ‌ர் என்ப‌து ஆச்ச‌ர்ய‌மாக‌த்தான் இருக்கும். இந்த மனிதர் கவிதைகளுக்கு வார்த்தைகளை எங்கிருந்து பிடிக்கிறார் என்பது இன்னும் எனக்கு புதிராகவே உள்ளது.

நல்ல குளிர் அன்று இரவு ப‌தினொன்று ம‌ணியிருக்கும் அப்போது தான் நிலாவிட‌ம் க‌விதை தொகுப்பை வாங்கி வ‌ந்தேன். குளிருடன் சேர்ந்த‌ இர‌வு அறையில் அனைவ‌ரையும் உற‌ங்க‌ வைத்திருந்தது. கால்கள் தரையில் பட்டவுடன் சில்லிட்டது. வழக்கமாக புத்தகம் படிக்கும் ஜன்னலருகே  இருக்கையை இழுத்துப்போட்டு உட்கார்ந்து கொண்டேன். வெளியே இருள் என்னை பார்த்துக்கொண்டிருப்பதாய் இருந்தது.

வெயில் தின்ற மழை தொகுப்பை வாசிக்க தொடங்கினேன். முதல் பக்க அட்டை , பின் பக்க மனுஷ்யபுத்திரன் வார்த்தைகள் என அனைத்தும் கடந்து உள்சென்றதும் , நிலாவின் அறிமுகம். கவிதைக்கு வந்தேன் முதல் கவிதையே புதுக்கவிதை போல எளிதில் கடந்து போக முடியாது என முரண்டு பண்ணியது. இரண்டு முறை வாசித்தேன் ஒரு அர்த்தத்தை தந்தது. அடுத்த முறையும் வாசித்தேன் இன்னொரு அர்த்தத்தை தந்தது.புதுக்கவிதையில் நமக்கான அர்த்தங்களை கவிதையோடு நாம் தான் இணைத்துக்கொள்ளவேண்டும் என்பது அலாதியாக இருந்தது. இப்போது குளிர் ஜன்னல் வழி உள்ளேறி கைகளையும் சில்லிட வைத்திருந்தது. எனக்கு ஒரு கவிதையின் வரி பிடித்துவிட்டால் அதன் தாக்கமே இரண்டு நாள் இருக்கும். எப்போதும் அதன் வரிகளையே முணுமுணுத்துக்கொண்டிருப்பேன். 

அடிக்கொருமுறை அந்த பக்கத்தை திருப்பி திருப்பி பார்த்தும் சிரித்துகொண்டுமிருப்பதை வித்தியாசமாக இருக்கிறது என்று நண்பர்கள் சொல்லுவதுண்டு.கவிதையை இதைவிட வேறு எதாவது முறையில் கொண்டாட முடியாதா என யோசித்திருக்கிறேன். கைகள் சில்லிட மனதுக்கு நெருக்கமான கவிதைகளை படித்துக்கொண்டிருக்கிறேன் என்ற நினைப்பே சந்தோஷத்தை கொடுத்தது. நிலாவின் பல கவிதைகளை திரும்ப திரும்ப வாசிக்கும் போது அது தரும் பரிமாண மாற்றங்கள் புதுமையான‌ வேறொரு மனநிலையில் வைத்திருந்ததாக உணர்ந்தேன்.

வார்த்தைகளற்ற மென் இசையை எனக்கு மட்டும் கேட்கும் அளவு வைத்துக்கொள்ள வேண்டும் போல தோன்றியது. மென் இசையுடன் வாசிக்கப்படும் கவிதை அதன் நிர்வாணம் கடந்து ரசிக்கப்படுகிறது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இசையை மெல்ல சுழலவிடேன்.இன்னும் அதிக தீரத்துடன் ஜன்னல் வழியே குளிர் அறைக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.சில கவிதை பக்கங்கள் பல நிமிடங்களுக்கு என்னை கட்டிப்போட்டது. மெல்ல ஒவ்வொரு கவிதைகளுக்குள் இருந்து வெளிவந்து அடுத்த கவிதைக்குள் மாட்டிகொண்டேன். வெளியெங்கும் இருட்டு, சில்லிட வைக்கும் குளிர், அறையெங்கும் மென் இசை, கையில் கவிதை என இரவு அத்தனை அழகாகியிருந்தது

என்னை க‌வ‌ர்ந்த‌ சில‌ க‌விதைக‌ள்

குழ‌ந்தையாத‌லின் சாத்திய‌ங்க‌ள் ஏதும‌ற்ற‌
இர‌வொன்றில் உன‌க்கொரு
உடைந்த‌ பொம்மையை ப‌ரிச‌ளித்து
சிரிக்கிற‌து கால‌ம்.
மென்காற்றில் சித‌றும் சார‌லில்
ந‌னைந்த‌ப‌டி த‌னித்த‌ழுகிறாய்
நீ.
(வெறுமையின் அழ‌கான‌ வ‌ர்ண‌னை இது )
****
வீழ்ந்து கிட‌த்த‌லை விட‌
ப‌றந்து சாத‌லே பெரிதென‌
உண‌ர்த்தின‌
ச‌வ‌ப்பெட்டிக்கு காத்திருக்கும்
துருப்பிடித்த‌ ஆணிக‌ள்
*******
உதிர்ந்த‌ முத்தங்க‌ளை பொறுக்கும்
ந‌ட்ச‌த்திரா த‌ன் க‌ன்ன‌த்தின் சுருக்க‌ங்க‌ளை
வ‌ருடிக்கொடுக்கிறாள்.
சித‌றிக்கிட‌க்கும் முத்த‌ங்க‌ளின் ந‌டுவே
கால‌ம் க‌ண்சிமிட்டிக்கொண்டிருப்ப‌தை
வ‌லியுட‌ன் நோக்குகிற‌து அவ‌ள‌து க‌ண்க‌ள்.
தீராப்ப‌சியுட‌ன் வான‌ம் பார்த்துக்
க‌த‌றுகின்ற‌ன‌ வீழ்ந்த‌ இலைக‌ள்.
மெல்ல வழுக்கிறது
நிறமற்ற மழை
******
இந்த கடைசி கவிதையை என்னால் அத்தனை சீக்கிரம் கடந்து போக முடியவில்லை. வலிகளை வார்த்தைபடுத்துவது கடினம் என்று சொல்லிவிட்டு அனாசயமாக நட்சத்திராவின் வலிகளை வார்த்தைபடுத்தியுள்ளார். கவிதையில் வரும் நட்சத்திரா பற்றியே நீண்ட நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.

வார்த்தைக‌ளையெல்லாம் பின்னிப்போட்டு கிற‌ங்க‌டிக்கும் க‌விதை த‌ருவ‌தில் நிலா எப்போதும் தனக்கான இடத்தை தெரிந்தே வைத்திருக்கிறார் என்று தோன்றியது.  இரவுகளுக்கு கைநீளுவதும், உலகின் மிகப்பெரிய தவறை துளியாக்குவதும் என மாயவித்தைகளை கண் முன்னே கடைபரப்பிக்கொண்டிருந்தது வெயில் தின்ற மழை. சில‌ க‌விதைகளில் ஆரம்பங்களிலேயே உச்ச‌த்தை தொடுகிறார்.

க‌டைசிவ‌ரிக‌ளில் வ‌சிய‌ம் த‌ட‌வியே க‌விதைவ‌டிக்கிறார் நிலா. கடைசி கவிதையை உணர்ந்து முடித்ததும் தான் தான் தெரிந்தது வெயில் தின்ற மழை என்னுடைய பாதி இரவை முழுதாக தின்று முடித்திருந்தது என்று. நாற்காலியை விட்டு எழுந்தேன். மணி நான்கு என கடிகாரம் காட்டிய‌து.

புத்த‌க‌த்தை மூடிவைத்துவிட்டு அத‌ன் நினைவிலேயே இருந்தேன். தேனீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. எங்காவ‌து வெளியில் செல்ல‌ வேண்டும் என்று தோன்றிய‌து. டிச‌ம்ப‌ரில் மாதங்களின் அதிகாலை அழ‌கான‌து அவ‌ற்றை ர‌சிக்க‌ வேண்டும் போல‌ இருந்த‌து. கவிதை புத்தகத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றேன். உட‌லை ந‌டுங்க‌வைக்கும் டிசம்பர் மாத குளிர் என்னை உள்ளிழுத்துக்கொண்ட‌து

சோடியம் ஒளி மெல்ல கசிந்து கொண்டிருந்தது. பின்னிரவில் சோடியம் விளக்கை சுற்றிய விட்டில்  பூச்சிகள் விள‌க்கின் அடியில் விழுந்திருந்தன‌.சாலையில் நான், குளிர்,க‌விதை என‌ மூன்று பேர் ம‌ட்டும் இருப்ப‌தாய் தோன்றிய‌து.

சோடிய‌ம் விள‌க்கில் இன்னும் சில‌ க‌விதைக‌ளை ப‌டித்தேன். முன்பு ப‌டித்த‌தை விட‌ இன்னும் அழ‌காக‌ தோன்றிய‌து.  சூழ்நிலைகளும் கவிதையின் அழகியலை தீர்மானிக்கின்றன என்று உணர்ந்தேன். நிலாவின் க‌விதைக‌ளில் வ‌ரும் ந‌ட்ச‌த்திராவும் என்னுடைய‌ க‌விதைக‌ளில் வ‌ரும் தூரிகாவும் ஒருவ‌ரே என்று நிலா சொன்னது நியாபகம் வந்தது. ந‌ட்ச‌த்திராவை பார்க்க‌ வேண்டும் போல‌ இருந்தது.

குளிரில் நடுங்கியபடியே சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்த ஒருவர் என்னை பார்த்து புன்னகைத்துவிட்டுப்போனார்.அறைக்கு வந்து மீண்டும் பிடித்த கவிதைளை படித்தேன் புத்த‌க‌த்தை நெஞ்சில் சாய்த்த‌ப‌டி எப்போது உற‌ங்கிப்போனேன் என நினைவில்லை. காலை எழுந்ததும் ஒரு வரி பிசகாமல் நிறைய‌ க‌விதைக‌ள் நியாப‌க‌த்திற்கு வ‌ந்தது.இதே போல் என்னுடைய‌ ஒன்றாம் வ‌குப்பு த‌மிழின் முத‌ல் பாட‌லும் , பக்கத்தின் வண்ணம் என மாறாமல் சில‌ ச‌ம‌ய‌ம் நியாப‌க‌த்திற்கு வ‌ரும், சில நேரங்களில் அந்த புத்தகத்தின் வாசம் கூட உணர்ந்திருக்கிறேன். சிரித்துக்கொண்டேன். ப‌டுக்கையில் இருந்து கொண்டே சில‌ கவிதைக‌ள் வாசித்தேன். அன்று மாலை வ‌ரை வெயில் தின்ற மழையுடன் பேசிக்கொண்டிருந்தததாக நியாபகம்.

ம‌ழையுட‌ன் க‌ழியும் இர‌வும்,ம‌ன‌திற்கு பிடித்த‌ க‌விதைகளுடன் தொடங்கும் காலையும் எப்போதுமே வ‌சீக‌ர‌மான‌வைகள்.

புத்த‌க‌த்தின் பெய‌ர்: வெயில் தின்ற‌ ம‌ழை ஆசிரிய‌ர் : நிலார‌சிக‌ன் ‌ ( உயிர்மை பதிப்பகம் ) விலை : 50 ரூபாய் ‌ இணையத்தில் பெற‌: http://tinyurl.com/2uqqkta