Tuesday, May 11, 2010

இரவுக்காகங்களின் பகல் - நூல் மதிப்புரை


கொ
ஞ்சும் மழைச்சாரலில் நனைந்தபடி இருக்கிறது இன்று மாலை உதிர்ந்த வேப்பம்பூக்கள். மண்வாசம் மேலெழும்பி காற்றில் மிதந்து அறையெங்கும் நிறைக்கிறது. ஜன்னலோர நாற்காலியில் அமர்ந்தபடி விழுகின்ற மழைத்துளிகளை பருகிக்கொண்டிருக்கிறாள் பக்கத்துவீட்டு சிறுமி. ஜன்னல் கம்பிகளில்  இறங்கும் துளியை பேராவலுடன் தொட்டு சிலிர்க்கிறாள். மழை அழகு. இரவு மழை பேரழகு. குழந்தைகள் அழகானவர்கள். மழை ரசிக்கும் குழந்தைகள் அற்புதமானவர்கள். நூற்றாண்டுகள் கடந்து ஒளிரும் ஓர் ஓவியத்தை வரைந்துவிட துடிக்கும் ஓவியனென மழை ரசிக்கும் சிறுமியை பற்றி கவிதை வடிக்க துடிக்கிறது மனம்.

உறக்கத்தில் புன்னகைக்கும் காதலி போல, இரவுப்பயணத்தில் தோள் சாயும் மனைவி போல, வருடங்கள் பல கழிந்த பின்பொழுதொன்றில் யதேச்சையாக பார்க்க நேர்ந்துவிடுகிற அம்மாவின் புடவையை போல கவிதையும் அதிஅற்புதமானதுதான். பேரழகானதுதான். உருவமற்று எப்போதும் உடனிருக்கும் தோழமைதான்.

கவிதையை எங்கிருந்து பெறுவது? எது கவிதையாகிறது? கவிதையும் கவிஞனும் எப்புள்ளியில் இணைகிறார்கள்? இயந்திர வாழ்க்கையை நான்கு வரிக்கவிதை எப்படி அழகாக்குகிறது? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை  ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒர் சொல்லில் ஒளித்துவைத்திருக்கிறது. ஒரு கவிதையின் ஒரே ஒரு சொல் போதும் நம் ஆயுட்காலம் முழுவதும் அக்கவிதை நம்முடன் பயணிக்க.

இரவுக்காகங்களின் பகல் - இந்த தலைப்பின் வசீகரத்திலும் அம்சப்ரியா என்னும் அற்புதமான கவிஞரின் மீதுள்ள மரியாதையின் நிமித்தமும் இந்நூலை வாங்கினேன். கவிதை நூல்களை பொறுத்தவரை வாங்கிய அன்றே படித்துவிடுவது என் வழக்கம். இரவுக்காகங்களின் பகல் சில காரணங்களுக்காக தள்ளிப்போனது. ஒருவாரம் கழித்து நேற்றுதான் இந்நூலை முழுமையாக வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்த மறுநொடி என்னுள் எழுந்த கேள்விகள் இரண்டு

1. ஏன் அம்சப்ரியா இதுவரை எழுதிய கவிதைநூல்களை வாசிக்காமல் இருந்தேன்?

2. ஏன் பிரபல இலக்கிய பதிப்பகங்கள் இன்னும் இவரது கவிதைகளை வெளியிட முன்வரவில்லை?

நவீனக் கவிதைப்பயணத்தின் தொடர்பயணி க.அம்சப்ரியா என்பதை சில வருடங்களாக அவருடன் பழகியவன் என்கிற முறையில் அறிவேன். இரவுக்காங்களில் பகல் நூலில் உள்ள கவிதைகளை மனிதநேயமிக்க ஓர் ஆன்மாவின் சந்தோஷம்,கண்ணீர்,விரக்தி,கொண்டாட்டம்,ப்ரியம்,காதல் என்று வகைப்படுத்தலாம். ஒரு கவிதைக்கும் மறுகவிதைக்கும் இடையேயான வாசிப்பின் இடைவெளியை பெருகச்செய்துவிடுகின்றன ஒவ்வொரு கவிதைகளும் அதன் வழியே உருவாகும் உலகமும்.

"உறங்கும் பிணத்தை
உயிர்த்தெழச் செய்யும் மந்திரமொன்றை
எனது வரமாக்கினாள் தேவதை
பரிசோதித்துப் பார்க்கும் ஆவலாதியில்
பிரயோகித்தேன் என் மீது...
அக்கணத்திலிருந்து
ஆயிரமாயிரம் பூக்கள் மலர்ந்தன"

இக்கவிதையின் கடைசி வரியை வாசிக்கும் வரை எவ்வித திடுக்கிடலுமின்றிதான் வாசித்தேன். கடைசிவரியின் வீரியமும்,அழகியலும்,சிந்தனைவீச்சும் அடுத்த கவிதைக்கு கண்கள் நகர விடாமல் தடுத்துவிட்டன. ஒரு பெரும் வலியின் உச்சத்தில் கண்ணீர் வழிந்தோடும்போது நீர் துடைக்க நீள்கின்ற குழந்தையின் விரல்களாய் அந்த கடைசிவரிகளை உணரமுடிகிறது.

"என்ன வகைப் பறவையென்று
தெரியவில்லை
வழி தெரியாமல் வகுப்பறைக்குள்
வந்துவிட்ட அப்பறவைக்குஞ்சு
சிறகடிக்கத் துவங்கிற்று
ஒவ்வொரு குழந்தையின்
பாடப் புத்தகத்தினுள்ளும்...!"

பறவையாதலும் குழந்தையாதலும் வாய்க்கப்பெற்றால் அதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் இவ்வாழ்வில்? இறக்கை முழுவதும் முளைக்காத குஞ்சுப்பறவையும் மழலையும் ஒன்றுதான். ரசித்துக்கொண்டே இருக்கலாம். ரசித்துக்கொண்டே மரணித்தாலும் பரவாயில்லை. செயற்கையான புன்னகையுடன் வலம்வர நம்மை பழக்கிவிட்ட உலகம் ஒன்றுமே தெரியாததுபோல் சுற்றிக்கொண்டுதானிருக்கிறது. கவிதைகளில் மட்டுமே இயல்பான புன்னகை இன்னும் மிச்சமிருக்கிறது.  கொடிய இரவுகளும் நாளை பற்றிய கவலைகளும் இல்லாத உலகம் குழந்தைகளின் உலகம். அவ்வுலகில் அம்சப்ரியாவின் பல கவிதைகள் பயணம் செய்வதை உணரமுடிகிறது. குழந்தைகள் பற்றிய நுண்ணிய கவனிப்புகளை கவிதையாக்கியிருக்கிறார்.  சில கவிதைகள் ஒரு ஞானியின் சொற்களை போல மிகக்கூர்மையானதாகவும் ஆழ்ந்த அர்த்தங்கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. சமுதாயத்தின் மீதான சாடல்களாலும் நிறைந்திருக்கின்றன சில கவிதைகள்.
உதாரணமாக,

"எல்லோரின் கேலிக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது அவரவர் செருப்பு"

"வாழ்நாளில்
மரமே வளர்க்காத ஒருவனுக்கு
பகையாகி விடுகிறது
எல்லா நிழலும்"

"காலம் இரு தீர்ப்புகளை
கவனத்தோடு எழுதுகிறது
உங்களை பல புழுக்களின் மத்தியில்
வசிக்கக் கடவுகவென்றும்
என்னையொரு பாம்போடு
வசிக்கக் கடவுகவென்றும்"


போன்ற வரிகளை சொல்லலாம். நவீன கவிதை எனில் கடினமான சொற்களாலும் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளால் நிரம்பியது என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இயல்பான சொற்களால் உடைத்தெறிந்திருகிறார் இந்த நவீன கவிஞர். இரவுக்காகங்களின் பகல் நவீன கவிதைதொகுப்புகளில் மிக முக்கியமான தொகுப்பென்று தயக்கமின்றி சொல்ல முடியும்.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
விலை: ரூ.60
ஆசிரியர்: கவிஞர்.க.அம்சப்ரியா
கிடைக்குமிடம்: தமிழகமெங்கும்
சென்னையில்: நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே.நகர்.

-நிலாரசிகன்.



11 comments:

said...

நல்லதொரு பகிர்தல். நன்றி.

said...

azhahu!

said...

மிக எதார்த்தமான விமர்சனம் நிலா. அவசியம் சீக்கிரம் படிக்கின்றேன்.

புன்னகையின் தொகுப்பு அருமையாக இருந்தது.

said...

அழகான விவரிப்பு.

said...

சிறந்த பகிர்வு... இப்புத்தகத்தை வாங்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனமும், அம்சப்ரியாவின் கவிதைகளும்.

said...

தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன் நிலாரசிகன். அனுபவித்து ரசிக்கும்படியான கவிதைத் தொகுப்பு.

-ப்ரியமுடன்
சேரல்

said...

நல்லதொரு விமர்சனம்... :)

said...

அருமையான விமர்சனம் நிலா அவர்களே...படிக்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது..விரைவில் படிக்கிறேன். நன்றி.

said...

நண்பர்களுக்கு நன்றி :)

said...

சிறந்த பகிர்வு... இப்புத்தகத்தை வாங்கும் ஆவலைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனமும், அம்சப்ரியாவின் கவிதைகளும்.

said...

இரவுக்காகங்களின் பகல் - நூல் மதிப்புரையே ஒரு கவிதைப்போல் இணிக்கிறது. பகிர்வுக்கு நன்றி நிலாரசிகன். கவிஞர் அம்சப்ரியா வலையில் அதிகம் அறிமுகமில்லாதவர் என்று நினைக்கிறேன் . உங்களின் நூல் மதிப்புரை அவரை இன்னும் பரந்த உலகுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. உங்கள் விமர்சனம் படித்தவுடன் நூல் வாங்கும் ஆவல் வந்து உடனே வாங்கிப் படித்தேன்.

கவிதைத் தமிழில் குழந்தைத் தமிழையும் எழுதி இருக்கிறார்.
//நவீன கவிதை எனில் கடினமான சொற்களாலும் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளால் நிரம்பியது என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இயல்பான சொற்களால் உடைத்தெறிந்திருகிறார் இந்த நவீன கவிஞர். //
இது நிஜம். நவீன நவீனத்துவ கவிதைகளில் இது முக்கியத் தொகுப்பு. ஒவ்வொரு கவிதைகளும் ஒவ்வொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது. வாசிக்கவேண்டியத் தொகுப்பு..