Monday, May 24, 2010

புன்னகை 60



நண்பர்களுக்கு,

அறுபது கவிஞர்களின் 60 கவிதைகள் அடங்கிய புன்னகை இதழின் அறுபதாவது இதழ் தற்சமயம் புதிய புத்தக நிலையத்தில் கிடைக்கிறது(தி.நகர்,சென்னை) அடுத்த வாரம் முதல் டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே நகரிலும் கிடைக்கும். விலை ரூ.30.

பங்குபெற்றுள்ள கவிஞர்களின் பட்டியல்:

01. கணேசகுமாரன்
02. அன்பாதவன்
03. நா.விச்வநாதன்
04. சம்யுக்தா
05. பா.ராஜா
06. மு.முருகேஷ்
07. உழவன்
08. மௌனம் ரமேசு
09. மகிழ்நன்
10. அதங்கோடு அனிஷ்குமார்
11. பொன்.குமார்
12. மருதம்.ஷப.கெஜலட்சுமி
13. ம.ஜெயப்பிரகாஷ்வேல்
14. வே.மு.பொதியவெற்பன்
15. ஜனமித்ரன்
16. உயிரோடை லாவண்யா
17. கார்க்கோ
18. ச.மோகனராசு
19. அருள்குமார்
20. துரை.மூர்த்தி
21. கவின்
22. புலியூர் முருகேசன்
23. கணியன் செல்வராஜ்
24. ஸ்ரீநிவாஸ் பிரபு
25. ப.சுடலைமணி
26. பிரபாவரசன்
27. சூர்யநிலா
28. கோசின்ரா
29. சு.சுபமுகி
30. சுப்ரபாரதிமணியன்
31. பி.மணிகண்டன்
32. ஒளியவன்
33. வா.மு.கோமு
34. அருணா
35. லதாமகன்
36. ந.பெரியசாமி
37. சிவகுமார்
38. அமல்.ஜான்
39. ஆ.முத்துராமலிங்கம்
40. ராமலக்ஷ்மி
41. சேரல்
42. பொன்.வாசுதேவன்
43. வீரகரன் மாதேஷ்
44. ஸ்ரீமதி
45. சி.அதிரதன்
46. பொ.செந்திலரசு
47. சித்தன்
48. ச.முத்துவேல்
49. ச.கோபிநாத்
50. சகாரா தென்றல்
51. வா.மணிகண்டன்
52. கென்
53. காயத்ரி
54. லதாமகன்
55. நிலாரசிகன்
56. நிலவின் மகள்
57. உமாசக்தி

(நன்றி: சேரல்)

-நிலாரசிகன்.

Tuesday, May 18, 2010

ஞானக்கவிதைகள் மூன்று



ஞானக் கவிதைகள் மூன்று



1.

வெண்ணிற பூக்கள் சிதறிக்கிடக்கும்
மண்பாதையில் ஒரு பலூனுடன்
நடக்கிறாள் சிறுமி.

வண்ணத்துப்பூச்சியை விரட்டிக்கொண்டு
ஓடுகிறான் காவி உடை அணிந்த
சிறுவன்.

நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
மஞ்சள் நிற ஆற்றில் இரண்டு மீன்கள்
துள்ளி விழுகின்றன.

தன் குஞ்சுப்பறவையை முத்தமிட்டு
சிறகடிக்கிறது தாய்பறவையொன்று.

கருநீல வானை கிழித்துக்கொண்டு
வீழ்கிறது மழைத்துளி.

தெருவோர
ஓவியத்திலும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.


2.

நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்.

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன.

உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.

மெளனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
நிலா.

3.

எறும்பின் மரணம் குறித்த
விவாதம் துவங்கிற்று.

முதலாமவன் எறும்பின் மரணம்
நிச்சயம் என்றான்.

இரண்டாமவன் எறும்பிற்கு மரணமில்லை
என்று வாதிட்டான்.

மூன்றாமவன் எறும்பின் மரணம்
கவனத்துக்குரியதல்ல என்றான்.

ரயிலைப் பற்றிய அக்கறையின்றி
தண்டவாள விவாதத்தில் ஊர்ந்து செல்கிறது
ஓர் எறும்பு.

-நிலாரசிகன்.

Tuesday, May 11, 2010

இரவுக்காகங்களின் பகல் - நூல் மதிப்புரை


கொ
ஞ்சும் மழைச்சாரலில் நனைந்தபடி இருக்கிறது இன்று மாலை உதிர்ந்த வேப்பம்பூக்கள். மண்வாசம் மேலெழும்பி காற்றில் மிதந்து அறையெங்கும் நிறைக்கிறது. ஜன்னலோர நாற்காலியில் அமர்ந்தபடி விழுகின்ற மழைத்துளிகளை பருகிக்கொண்டிருக்கிறாள் பக்கத்துவீட்டு சிறுமி. ஜன்னல் கம்பிகளில்  இறங்கும் துளியை பேராவலுடன் தொட்டு சிலிர்க்கிறாள். மழை அழகு. இரவு மழை பேரழகு. குழந்தைகள் அழகானவர்கள். மழை ரசிக்கும் குழந்தைகள் அற்புதமானவர்கள். நூற்றாண்டுகள் கடந்து ஒளிரும் ஓர் ஓவியத்தை வரைந்துவிட துடிக்கும் ஓவியனென மழை ரசிக்கும் சிறுமியை பற்றி கவிதை வடிக்க துடிக்கிறது மனம்.

உறக்கத்தில் புன்னகைக்கும் காதலி போல, இரவுப்பயணத்தில் தோள் சாயும் மனைவி போல, வருடங்கள் பல கழிந்த பின்பொழுதொன்றில் யதேச்சையாக பார்க்க நேர்ந்துவிடுகிற அம்மாவின் புடவையை போல கவிதையும் அதிஅற்புதமானதுதான். பேரழகானதுதான். உருவமற்று எப்போதும் உடனிருக்கும் தோழமைதான்.

கவிதையை எங்கிருந்து பெறுவது? எது கவிதையாகிறது? கவிதையும் கவிஞனும் எப்புள்ளியில் இணைகிறார்கள்? இயந்திர வாழ்க்கையை நான்கு வரிக்கவிதை எப்படி அழகாக்குகிறது? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடைகளை  ஒவ்வொரு கவிதையும் ஏதேனும் ஒர் சொல்லில் ஒளித்துவைத்திருக்கிறது. ஒரு கவிதையின் ஒரே ஒரு சொல் போதும் நம் ஆயுட்காலம் முழுவதும் அக்கவிதை நம்முடன் பயணிக்க.

இரவுக்காகங்களின் பகல் - இந்த தலைப்பின் வசீகரத்திலும் அம்சப்ரியா என்னும் அற்புதமான கவிஞரின் மீதுள்ள மரியாதையின் நிமித்தமும் இந்நூலை வாங்கினேன். கவிதை நூல்களை பொறுத்தவரை வாங்கிய அன்றே படித்துவிடுவது என் வழக்கம். இரவுக்காகங்களின் பகல் சில காரணங்களுக்காக தள்ளிப்போனது. ஒருவாரம் கழித்து நேற்றுதான் இந்நூலை முழுமையாக வாசிக்க முடிந்தது. வாசித்து முடித்த மறுநொடி என்னுள் எழுந்த கேள்விகள் இரண்டு

1. ஏன் அம்சப்ரியா இதுவரை எழுதிய கவிதைநூல்களை வாசிக்காமல் இருந்தேன்?

2. ஏன் பிரபல இலக்கிய பதிப்பகங்கள் இன்னும் இவரது கவிதைகளை வெளியிட முன்வரவில்லை?

நவீனக் கவிதைப்பயணத்தின் தொடர்பயணி க.அம்சப்ரியா என்பதை சில வருடங்களாக அவருடன் பழகியவன் என்கிற முறையில் அறிவேன். இரவுக்காங்களில் பகல் நூலில் உள்ள கவிதைகளை மனிதநேயமிக்க ஓர் ஆன்மாவின் சந்தோஷம்,கண்ணீர்,விரக்தி,கொண்டாட்டம்,ப்ரியம்,காதல் என்று வகைப்படுத்தலாம். ஒரு கவிதைக்கும் மறுகவிதைக்கும் இடையேயான வாசிப்பின் இடைவெளியை பெருகச்செய்துவிடுகின்றன ஒவ்வொரு கவிதைகளும் அதன் வழியே உருவாகும் உலகமும்.

"உறங்கும் பிணத்தை
உயிர்த்தெழச் செய்யும் மந்திரமொன்றை
எனது வரமாக்கினாள் தேவதை
பரிசோதித்துப் பார்க்கும் ஆவலாதியில்
பிரயோகித்தேன் என் மீது...
அக்கணத்திலிருந்து
ஆயிரமாயிரம் பூக்கள் மலர்ந்தன"

இக்கவிதையின் கடைசி வரியை வாசிக்கும் வரை எவ்வித திடுக்கிடலுமின்றிதான் வாசித்தேன். கடைசிவரியின் வீரியமும்,அழகியலும்,சிந்தனைவீச்சும் அடுத்த கவிதைக்கு கண்கள் நகர விடாமல் தடுத்துவிட்டன. ஒரு பெரும் வலியின் உச்சத்தில் கண்ணீர் வழிந்தோடும்போது நீர் துடைக்க நீள்கின்ற குழந்தையின் விரல்களாய் அந்த கடைசிவரிகளை உணரமுடிகிறது.

"என்ன வகைப் பறவையென்று
தெரியவில்லை
வழி தெரியாமல் வகுப்பறைக்குள்
வந்துவிட்ட அப்பறவைக்குஞ்சு
சிறகடிக்கத் துவங்கிற்று
ஒவ்வொரு குழந்தையின்
பாடப் புத்தகத்தினுள்ளும்...!"

பறவையாதலும் குழந்தையாதலும் வாய்க்கப்பெற்றால் அதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும் இவ்வாழ்வில்? இறக்கை முழுவதும் முளைக்காத குஞ்சுப்பறவையும் மழலையும் ஒன்றுதான். ரசித்துக்கொண்டே இருக்கலாம். ரசித்துக்கொண்டே மரணித்தாலும் பரவாயில்லை. செயற்கையான புன்னகையுடன் வலம்வர நம்மை பழக்கிவிட்ட உலகம் ஒன்றுமே தெரியாததுபோல் சுற்றிக்கொண்டுதானிருக்கிறது. கவிதைகளில் மட்டுமே இயல்பான புன்னகை இன்னும் மிச்சமிருக்கிறது.  கொடிய இரவுகளும் நாளை பற்றிய கவலைகளும் இல்லாத உலகம் குழந்தைகளின் உலகம். அவ்வுலகில் அம்சப்ரியாவின் பல கவிதைகள் பயணம் செய்வதை உணரமுடிகிறது. குழந்தைகள் பற்றிய நுண்ணிய கவனிப்புகளை கவிதையாக்கியிருக்கிறார்.  சில கவிதைகள் ஒரு ஞானியின் சொற்களை போல மிகக்கூர்மையானதாகவும் ஆழ்ந்த அர்த்தங்கொண்டதாகவும் அமைந்திருக்கின்றன. சமுதாயத்தின் மீதான சாடல்களாலும் நிறைந்திருக்கின்றன சில கவிதைகள்.
உதாரணமாக,

"எல்லோரின் கேலிக்குள்ளும்
ஒளிந்திருக்கிறது அவரவர் செருப்பு"

"வாழ்நாளில்
மரமே வளர்க்காத ஒருவனுக்கு
பகையாகி விடுகிறது
எல்லா நிழலும்"

"காலம் இரு தீர்ப்புகளை
கவனத்தோடு எழுதுகிறது
உங்களை பல புழுக்களின் மத்தியில்
வசிக்கக் கடவுகவென்றும்
என்னையொரு பாம்போடு
வசிக்கக் கடவுகவென்றும்"


போன்ற வரிகளை சொல்லலாம். நவீன கவிதை எனில் கடினமான சொற்களாலும் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளால் நிரம்பியது என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இயல்பான சொற்களால் உடைத்தெறிந்திருகிறார் இந்த நவீன கவிஞர். இரவுக்காகங்களின் பகல் நவீன கவிதைதொகுப்புகளில் மிக முக்கியமான தொகுப்பென்று தயக்கமின்றி சொல்ல முடியும்.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
விலை: ரூ.60
ஆசிரியர்: கவிஞர்.க.அம்சப்ரியா
கிடைக்குமிடம்: தமிழகமெங்கும்
சென்னையில்: நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர், டிஸ்கவரி புக் பேலஸ்,கே.கே.நகர்.

-நிலாரசிகன்.



Thursday, May 06, 2010

நிசப்த இயல்புகள்






பற்றி எரிகின்ற பெரும் நெருப்பில்
புன்னகை பற்றிய கவிதைகள்
எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு இலையாக இசையுதிர்ந்து
கொண்டிருக்கும் பின்னிரவில்
நடனமிட்டு வெள்ளைத்தாளில் மரிக்கின்றன
சொற்கள்.
அதீத நேசத்தின் நீட்சி கவிதைகளாக
உருமாறிக்கொண்டிருக்கிறது.
கறுப்புக்கனவுகளுடன் இவ்வுலகம்
நுழைந்த பறவை சிறகடித்துப்பறக்கிறது
நீலம் வழிகின்ற கறுப்பு வானத்தில்.
இயல்பு மாறாத கவிதைகள்
விழியுயர்த்தி வழியனுப்புகின்றன.
அரவமற்ற அதிகாலையில்
கவிதைக்குள்ளிருந்து வெளியேறிய
இணைகோடுகள் வெவ்வேறு
திசையில் பயணிக்க துவங்குகின்றன.


-நிலாரசிகன்.

Wednesday, May 05, 2010

விமர்சனம்


http://tamilkirukals.blogspot.com/2010/05/blog-post.html

Saturday, May 01, 2010

துறவுக் கவிதைகள்


1.
நிரந்தரமற்ற வாழ்வை
இவ்விரவு பாடலாக பாடிக்கொண்டிருக்கிறது.
காற்றில் அசைகின்ற இலைகள்
உதிர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
வெப்பத்தின் குரல் அங்குமிங்கும்
அலைந்தபடி இருளை விழுங்க
முயல்கையில் விழுகின்ற மழை,
மழை போலவே இல்லை.
கனவுகளை தின்று செரித்த
பூமி தீராப்பசியுடன் சுற்றுகிறது.
துறவுநிலையின் உச்சத்தில் நுழைகின்ற
குழந்தையொன்றின் அழுகுரலில்
உருவாகிறது நாளைய காவியத்தின்
முதல் வரி.


2.
இப்படித்தான் நிகழுமென்ற
கணிப்புகள் எப்போதும்
தவறானதாகவே முடிந்துவிடுகிறது.
காலம் கடந்தே வாசல்வந்து
நிற்கிறது ஞானம்.
காலத்தின் சித்தரிப்புகளில்
சுயமோகியாக அல்லது உக்கிரமிக்கவனாக
காட்சியளிக்கிறேன்.
எருதொன்றை புசிக்கும் விலங்கின்
பற்களின் கூர்மையை கொண்டிருக்கிறது
வார்த்தைகள்.
உன்னதமான அன்பை பற்றிய
போதனைகளை அபத்தமென்று
உள்மனம் எடுத்துரைக்கிறது.
எப்பொழுதும் தனிமைக்குள்
புதைந்துபோதலை விரும்புவதாக
மார்தட்டுகிறது மனம்.
முரண்பாடுகளால் நிறைந்திருப்பினும்
ரசிக்கவே செய்கிறேன்
உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
குறும்புன்னகையை.

-நிலாரசிகன்.

Wednesday, April 28, 2010

கவிஞர்களின் கவனத்திற்கு:

புன்னகை சிற்றிதழ் தனது அறுபதாவது இதழ் வெளியீட்டை முன்னிட்டு அறுபது கவிஞர்களின் கவிதைகளை வெளியிட தீர்மானித்திருந்தது. அதைப்பற்றிய அறிவிப்பை இத்தளத்தில் வெளியிட்டிருந்தேன். இப்போது இதழ் தயாராகிவிட்டதாக அதன் ஆசிரியரும் கவிஞருமான திரு.அமசப்ரியா தெரிவித்திருக்கிறார். வருகின்ற வெள்ளிக்கிழமை(30 ஏப்ரல்) மாலை ஐந்து மணிக்கு அவரது நூல் வெளியீடு சென்னையிலுள்ள தேவநேய பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அங்கே புன்னகையின் அறுபதாம் சிறப்பிதழும் கிடைக்கும். ஒரு நூலின் விலை ரூ.20. விரும்பும் அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம். தேர்வான கவிஞர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

1.அகநாழிகை.பொன்.வாசுதேவன்
2.உமாசக்தி
3.உயிரோடை லாவண்யா
4.சகாரா தென்றல்
5.வா.மணிகண்டன்
6.கென்
7.காயத்ரி சித்தார்த்
8.ஒளியவன்
9.மகிழ்நன்
10.அருணா
11.ராமலஷ்மி
12.சா.முத்துவேல்
13.நிலவின்மகள்
14.சேரல்
15.சம்யுக்தா
16.கனியன் செல்வராஜ்
17.பிரபாவரசன்
18.அமல் ஜான்
19.ஆ.முத்துராமலிங்கம்
20.லதாமகன்
21.மணிகண்டன்
22.கவின்
23.உழவன்
24.ஜனமித்ரன்
25.கார்கோ
26.நிலாரசிகன்.

சிலரது பெயர்கள் விடுபட்டிருக்கலாம். சிலரது பெயரில் எழுத்துப்பிழைகள் இருக்கலாம். பொறுத்தருள்க :)

 

மற்றவை:

1. எதிர்பார்க்காத பல விஷயங்களை கடந்து சென்றிருக்கிறது இவ்வருட ஐ.பி.எல். சச்சின்,ராயுடு,திவாரி,போலார்ட் என அற்புதமான வீரர்களை கொண்ட மும்பைக்கு வெற்றி கிடைக்கும் என்று நினைத்தேன். 2003 உலககோப்பை இறுதி போட்டியில் வாடிய முகத்துடன் பார்த்த சச்சின் ஞாபகத்திற்கு வந்தார்.தோனிக்கு மச்சத்தில் உடம்பு. இதே வேகத்தில் உலக கோப்பையை வென்றால் மகிழ்ச்சி.

2. நண்பர் சுபைருக்கு ஞாயிறன்று திருமணம். அவரை வாழ்த்த விரும்பும் அன்பர்கள் http://ahamedzubair.blogspot.com/ செல்லவும். என்னுடைய "ஒரு பட்டாம்பூச்சியின் கனவுகள்' நூலிற்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். சுட்டி: http://ahamedzubair.blogspot.com/2010/04/blog-post.html அவருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

3. தோழி உமா சக்திக்கு நாளை பிறந்தநாள் (29 ஏப்ரல்). வாழ்த்து தெரிவிக்க விரும்பும் அன்பர்கள் இங்கே தெரிவிக்கலாம் --> http://www.umashakthi.blogspot.com/

-நிலாரசிகன்.

Sunday, April 25, 2010

இரவு மிருகம்


அளவற்ற அன்பின் எல்லையில்
திளைத்திருந்த கணமொன்றில்
பொருட்படுத்தா கற்களால்
நம் அன்பின் சுவற்றை
உடைத்தெரிந்தாய்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு முகமூடிகளுடன்
வலம் வந்த நிஜம்
சொல்லிச் சிரித்தாய்.
வலியின் ஆழத்தில் உன்
பொய்ப்புன்னகைகள்
உடையத்துவங்கின.
இப்போது,
துயரங்களால் நிரம்பி வழியும்
என் ப்ரியங்களை கெளவிச்செல்ல
இந்த
இரவு ஓர் ஒநாயைப்போல்
காத்திருக்கிறது.

Saturday, April 24, 2010

படித்ததில் பிடித்தது: சச்சின் மனிதனில்லை

இன்று கிரிக்கெட்டின் புதல்வன் சச்சினின் பிறந்த நாள்.அவரது பிறந்தநாளுக்கு எத்தனையோ பதிவுகள் எழுதப்பட்டிருந்தன.அவற்றில் சதீஷ் எழுதியிருக்கும் http://www.iyerpaiyan.com/2010/04/sachin-is-no-human.html
இந்தப்பதிவின் ஒவ்வொரு வரியிலும் தென்படும் உணர்வு எழுத்தில் அடங்காதது.சச்சின் எனும் மாபெரும் சிற்பியை வாழ்த்துவோம்.

Saturday, April 17, 2010

Monitores

உமா காந்தன் என்பவர் தான் கண்டுபிடித்த மென்பொருள் பற்றி மடலிட்டிருந்தார். கணிப்பொறி உபயோகப்படுத்தும் பலருக்கும் இந்த மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலதிக தகவலுக்கு இங்கே செல்லவும்: http://code.google.com/p/monitores/

Friday, April 16, 2010

மிகச்சிறந்த ஐபிஎல் போட்டிகள் மூன்று:




 ஐ.பி.எல் போட்டிகள் எப்போதும் விறுவிறுப்புக்கு குறைவில்லாதவை.இதுவரை நடந்த அனைத்து போட்டிகளும் ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்தாலும் இவற்றுள் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மூன்று போட்டிகளை பற்றிய அலசல் இங்கே:

மும்பை இந்தியன்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ் லெவன்:

ஐ.பி.எல்லின் முதலாவது சீசனில் அதாவது 2008ம் ஆண்டு நடந்த போட்டிகளில் சந்தேகமின்றி மிகச்சிறந்த போட்டியாக 45வது போட்டியை சொல்லலாம். மும்பைக்கும் பஞ்சாபுக்கும் நடந்த போட்டியில் முதலாவது பேட் செய்து இருபது ஓவர்களில் 188 ரன்களை குவித்தது பஞ்சாப்.

189 எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு நல்லதொரு துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார் ஜெயசூர்யா. அதிரடியாக 20 ரன்களை விளாசியவர் ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அதற்கு பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறிக்கொண்டிருந்தபோது மறுமுனையில் நங்கூரமாய் நின்று மிகச்சிறப்பாக விளையாடினார் சச்சின். கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது மும்பை. போட்டி நடந்தது மும்பையில் என்பதால் சச்சின் அடிக்கும் ஒவ்வொரு பவுண்டரிக்கும் ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். எதிர்பாராத விதமாக பதினேழாவது ஓவரில் ரன் அவுட் ஆனார் சச்சின். 18 பந்துகளில் 31 ரன்கள் தேவை என்கிற நிலையில் மும்பை இருந்தபோதும் போலாக்,உத்தப்பா இருவரும் சுலபமாக வெற்றியை தேடித்தருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பதினெட்டாவது ஓவரை வீச வந்த யுவராஜ்சிங் முதல் பந்தில் போலாக்கையும் கடைசி பந்தில் உத்தப்பாவையும் வீழ்த்தி பரபரப்பை உண்டாக்கினார்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை. விஆர்வி சிங்கை பந்துவீச அழைத்தார் அணித்தலைவர் யுவராஜ் சிங். முதல் பந்தை எதிர்கொண்டவர் சர்வதேச அரங்கில் அதிகம் பரிட்சயமில்லாத வீரர் சிட்னிஸ். ஆனால் முதல் பந்தில் சிக்ஸரும் இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசி படபடப்பை அதிகரித்தார். மூன்றாவது பந்தில் பஞ்சாப் அணியின் சிறப்பான பீல்டிங்கினால் ரன் அவுட் ஆனார் சிட்னிஸ். வெளியே அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த மும்பை அணியின் ஷான் போலாக்கின் விரல்கள் நடுநடுங்க ஆரம்பித்தன.சச்சினின் முகத்தில் உச்சகட்ட டென்சன். அரங்கத்தில் சிறு சத்தமும் இல்லை.நான்கு பந்துகளில் எட்டு ரன்கள் தேவை என்ற நிலையில் நெக்ராவும் ரன் அவுட் ஆனார். கடைசி இரண்டு பந்தில் 4 ரன்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தனர் மும்பை அணியினர்.கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி.ஒரு ரன்கள் எடுத்தால் சமநிலை பெற்று சூப்பர் ஓவருக்குள் நுழைகின்ற வாய்ப்பு கிடைக்கும். விஆர்வி சிங் வீசிய கடைசி பந்தை மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு ஓட முயன்றார் மும்பை அணி வீரர் ஆனால் பந்தை புயலாக மாறி தடுத்து கைகளில் எடுத்துக்கொண்டு ஓடி வந்து ஒரு டைவ் அடித்து ஸ்டெம்புகளை வீழ்த்தினார் யுவராஜ் சிங். அவரது இந்த அற்புதமான ரன் அவுட் 92 உலககோப்பையில் இன்சமாம் உல் ஹக்கை அவுட் செய்த “பீல்டிங் மெஷின்” ஜான்டி ரோட்ஸை நினைவுபடுத்தியது. பஞ்சாப் வென்றது.தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வென்று வெற்றிநடைபோட்ட மும்பை தோல்வியை தழுவியது.

டெக்கான் சார்ஜர்ஸ் Vs  ராஜஸ்தான் ராயல்ஸ்:

2008 ஐபில்லின் மிக ஆச்சரியமான போட்டிகளில் இந்தப்போட்டியும் ஒன்று. முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் சைமண்ட்ஸ் அதிரடியாக 117 ரன்கள் குவித்து தங்கள் அணி 214 ரன்கள் எடுக்க உதவி செய்தார். 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக்கடினமான இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ். யூசுப் பதான் அதிரடியாக 61 ரன்கள் குவித்து அவுட் ஆனபோதும் மறுமுனையில் ஸ்மித் அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் பதினெட்டாவது ஓவரை வீசவந்த அப்ரிதி முதல் பந்தில் கைப்பின் விக்கெட்டையும் மூன்றாவது பந்தில் ஸிம்த்தின் விக்கெட்டையும் பறித்தபோது ராஜஸ்தானின் வெற்றி கேள்விக்குறியானது.

கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை. அப்பொழுதுதான் டெக்கான் சார்ஜர்ஸ் அணித்தலைவர் லஷ்மண் அந்த தவறான முடிவை எடுத்தார். கடைசி ஓவரை வீச சைமண்ட்ஸை அழைத்தார். அன்றைய போட்டியில் 117 ரன்கள் குவித்த சைமண்ட்ஸ் உற்சாகமாக முதல் இரண்டு பந்துகளை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் மூன்று ரன்களை எடுத்தது ராஜஸ்தான். மூன்றாவது பந்தை எதிர்கொள்ள நின்றவர் ராஜஸ்தானின் கேப்டன் ஷான் வார்னே. லோ புல்டாஸாக வந்த பந்தை சைமண்ட்ஸ்னின் தலைக்கு மேலாக அடித்து அழகான பவுண்டரியாக மாற்றினார் வார்னே. மூன்று பந்துகளில் 10 ரன்கள் தேவை. நான்காவது பந்தை இறங்கி டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சூப்பர் சிக்ஸரை அடித்தார் வார்னே. இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் தேவை. இந்தமுறையும் இறங்கி வந்து டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அதி அற்புதமான சிக்ஸரை அடித்து சைமண்ட்ஸை விழிபிதுங்க வைத்ததோடு ஹைதராபாத் மைதானத்தில் இந்த போட்டியிலாவது வெல்வோம் என்று நினைத்திருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கனவுகளையும் தகர்த்தார் வார்னே.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் Vs டெக்கான் சார்ஜர்ஸ்:

2009ல் நடந்த இரண்டாவது ஐபில் சீசனில் எதிர்பாராத திருப்பம் கொண்ட போட்டியிது. தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த கொல்கத்தா அணியினர் முதலில் பேட் செய்து 160 ரன்கள் குவித்தனர். போட்டி நடந்தது தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில். ரன்குவிப்புக்கு பெயர் பெற்ற இந்த மைதானத்தில் இரண்டாவதாக களம் இறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட் அதிரடியாக 31 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ஆட்டத்தின் கடைசி ஓவரில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உண்டானது.
எப்படியும் இந்தப்போட்டியில் வென்றுவிடலாம் என்று கனவு கண்டனர் கொல்கத்தா ரசிகர்கள்.கடைசி ஓவரை வீச வந்தார் மொர்டாசா. முதல் பந்தில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அழகான பவுண்டரி அடித்து டெக்கானுக்கு நம்பிக்கை அளித்தார் ரோகித் ஷர்மா.அதன்பிறகு ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து வெற்றிக்கு அருகே தன் அணியை அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் 1 ரன் தேவை. இருக்கையின் நுனிக்கு வந்தனர் ரசிகர்கள். டென்ஷனில் நின்றார் கொல்கத்தாவின் கேப்டன் மெக்கலம். ஒரு பவுன்சரை மோர்டாசா வீச அதை சிக்சராக மாற்றி கொல்கத்தாவின் வெற்றிக்கனவை தகர்த்தார் ரோஹித் சர்மா. கடைசி ஓவரில் 21 ரன்களை தடுக்க முடியாத கொல்கத்தா 2009ம் ஆண்டின் ஐ.பி.எல்லின் மோசமான அணியாக மாறிப்போனது.

(அடுத்த பதிவு இவ்வருட ஐ.பி.எல் அரையிறுதி அணிகள் பற்றிய அலசல்)

Tuesday, April 13, 2010

அம்ருதா

அம்ருதா இலக்கிய இதழில் வெளியான கவிதை:

Saturday, April 10, 2010

இருளால் நிறைந்திருக்கும் நீலம்



வெகு தூரம் பயணித்து
விழுந்து உடைகின்றன
மழைத்துளிகள்.
ஒன்றிரண்டு இறகுகளை
உதிர்த்தபடி பறக்கின்றன பறவைகள்.
மெல்ல நகர்கிறது
மஞ்சள் வெயில்.
அங்குமிங்கும் அலைகிறது
மேக நிழல்.
அனைத்தையும் உள்வாங்கி
அழுத்தமான
அமைதியுடன் விரிந்திருக்கிறது
கடல்.

-நிலாரசிகன்.

Tuesday, April 06, 2010

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்


தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை


நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com
இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, April 04, 2010

தனிமையின் இசை




அய்யனாரின் தனிமையின் இசை கவிதை தொகுப்பின் மீதான என் பார்வையை,அனுபவத்தை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

அய்யனாரின் கவிதைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக இணையத்தில் படித்ததுண்டு. வம்சி வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் அக்கவிதைகளை மொத்தமாக படிக்கும்போது ஏற்படும் நிறைவு இணையக்த்தில் படிக்கும் போது கிடைத்தாக ஞாபகமில்லை.

நெகிழ்வு,அலைவு,பிறழ்வு,மய்யம் என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவரது கவிதைகள் பல்வேறு உணர்வுகளை வாசகனுக்குள் தெளித்துச்செல்கின்றன.

அய்யனாரின் கவிதைகளின் பலமாக கவிதைமொழியை சொல்ல முடியும்.மொழி இவருக்கு கூப்பிடும் தூரத்தில் இருப்பதாகவே ஒவ்வொரு கவிதைவரிகளும் பறைசாற்றுகின்றன. அதனால்தான் எதைப்பற்றியும் அல்லது பற்றாமலும் கவிதைகளை தந்திருக்க முடிகிறது இவரால்.

நெகிழ்வு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் அழகியலை முன்வைக்கும்போதும் செறிவான சொற்களும் அடர்த்தியான வரிகளும் கவிதைகளுக்கு வலு சேர்க்கின்றன. கவிதைக்குள் நுழையும் முன்னரே அதன் தலைப்புகள் வாசகனின் மனதோடு நெருக்கமாகிவிடுகின்றன. உதாரணமாக மழையின் ஈரக்கைகள்,ஆற்றின் உட்பரப்பு,உட்குளம்,மழைக்கால கிளர்வுகள் போன்ற தலைப்புகளை மேற்கோள் காட்டமுடியும்.
ஆற்றின் உட்பரப்பு கவிதையை முதலில் மெளனமாக வாசித்துப் பார்த்தேன். பின் சத்தமிட்டு வாசித்துப்பார்த்தேன். மெளனத்திற்கும் சப்தத்திற்கும் இடையே வெவ்வேறு அனுபவமாக விரிந்தது இக்கவிதை. ஒரு ஆற்றை பற்றி விவரித்துக்கொண்டே செல்கிறார் கவிஞர். ஆற்றில் குளிக்க வந்த நடுவயதுக்காரி நீரின் குளுமையில் சிலிர்த்து தவற விடும் ரவிக்கை,ஆற்றில் மிதந்து சென்ற பிணம்,தன் பிம்பத்தை உற்றுநோக்கும் செம்மறி ஆட்டுக்குட்டி இப்படியாக நீள்கின்ற வரிகள் கடைசியில் “காட்சிகளை விழுங்கியபடி சலனமற்று விழித்திருக்கும் ஆற்றின் உட்பரப்பு” என்று முடிக்கிறார் கவிஞர். இந்த கடைசி வரியை சலனமற்று விழித்திருக்கும் நம் ஆழ்மனதின் தனிமையாக உருவகப்படுத்துக்கொள்ள முடிகிறது.

அலைவு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் புலம்பெயர்ந்த வலியை,ஏக்கத்தை,நிறைவேறா கனவுகளை,பிரிவுத்துயரை,தனிமையை பாடுபொருளாக கொண்டவை. எதுவுமற்று இருத்தல் என்றொரு கவிதை இதிலுண்டு. அக்கவிதையின் சாயலையே பிற கவிதைகளிலும் வெவ்வேறு ரூபத்தில் காண முடிகிறது. தனிமையின் குரூரத்தையும் அதன் மூலம் பிறக்கும் ஞானத்தையும் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யனார்.

பிறழ்வு தலைப்பின் கீழ் மொத்தம் இருபது கவிதைகள் இருக்கின்றன. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை பிறழ்ந்த மனநிலையை அல்லது சூழலை வெகு கனமான சொற்களால் விவரிப்பவை. இதில் ஆகச்சிறந்த கவிதையாக குற்றவுணர்விலிருந்து விடுபடல் கவிதையை சொல்லலாம். “ஒரு பெண்ணை முத்தமிடுமுன் சற்று யோசியுங்கள் பின்னெப்போதாவது அவை மீளவே முடியாத பின்னிரவுக் குற்றவுணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகி விடலாம்” என்று தொடங்குகின்ற கவிதை தவறொன்றை செய்துவிட்டு பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதை பற்றி அற்புதமாக விவரித்துச் செல்கிறது. இக்கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது
குற்றவுணர்வுகளற்ற இருப்பு மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும் வேப்பமரக் கிளைகளிடையேயும் எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது

மய்யம் தலைப்பின் கீழுள்ள கவிதைகளில் பல மிகை எதார்த்த வகைமையை சார்த்தவை. இத்தொகுப்பில் என்னை அதிகம் ஈர்க்காத பகுதி எனில் அது இந்த மய்யம் பகுதிதான். கப்பல்காரி,உடலைப் புசித்தல் போன்ற கவிதைகள் தொகுப்பின் கனத்தை குறைக்கக்கூடிய கவிதைகள். அவற்றை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் அய்யனாரின் கவிதையுலகம் காதல்,கட்டுப்பாடற்ற காமம்,பெண்கள்,கலாச்சாரத்தை உடைத்தெறிதல்,போலிகளின் முகத்தில் எச்சில் உமிழ்தல்,மாய எதார்த்த உலகின் வசீகர கனவுகள்,எள்ளல்,சுயவிசாரணை என்று விரிந்திருக்கிறது. உரைநடை தன்மையிலான ஒன்றிரண்டு கவிதைகளை கழித்துவிட்டு பார்த்தால் “தனிமையின் இசை” நவீன கவிதை உலகில் முக்கியமான புதுவரவு. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும்,வாழ்வனுபவமும், மொழிமீதான தீராத வேட்கையுமே அய்யனாரின் பலம். இனி வரும் தொகுப்புகளில் அய்யனார் தனக்கான தனிமொழியை அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.

சொற்கப்பல் விமர்சன தளத்தில் வாய்ப்பளித்த பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் நட்பும்,நன்றியும்.

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: சொற்கப்பல் விமர்சன கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.நண்பர் ச.முத்துவேல் இக்கட்டுரையை வாசித்தார்.அவருக்கும் நன்றி.

Wednesday, March 31, 2010

உடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி



உடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி

உடைந்த கனவுகளை பொறுக்கும்
சிறுமியின் பாவாடையில் தீட்டப்பட்டிருக்கும்
ஓவியத்தில் இரண்டு மான்கள் வசித்தன.
தனிமையின் குரூரத்தை பாடும்பொழுதும்
குளிர் அடர்ந்த இரவில் தனித்தழும்பொழுதும்
அவளுடன் உரையாடுகின்றன
அந்த மான்கள்.
தெருவோரத்தில் உறங்கி எழும் அவள்
கனவுகள் பொறுக்கும்
அதிகாலையொன்றில் விபத்தில் மரணித்தாள்.
குழந்தை இழந்த துக்கத்தில்
கண்ணீர் விட்டன மான்கள்.
அநாதைப் பிணம் என்றபடி
முகம் திருப்பிக்கொண்டது இவ்வுலகம்.




ஏழாவது கோடை

இருண்ட இரவுகளில்
புணர்ந்து திரிந்த அப்பறவைகள்
ஆறு கோடைகள் பிரிந்திருந்தன.
ஏழாவது கோடையில் பெண்பறவை
தன் குஞ்சுகளுக்கு கதைகள் சொல்ல
ஆரம்பித்தது.
தனக்கொரு நண்பன் இருந்தானென்றும்
அவனது சிறகுகளின் கதகதப்பில்
மகிழ்ந்திருந்ததாகவும் நீண்டது அக்கதை.
காதலற்ற காமம் பற்றியும்
உணர்வுகளற்ற முத்தம் பற்றியும்
சொல்லாமல்
கதை முடிந்தபோது
புத்தனை சிலுவையில் அறைந்துவிட்ட
குரூரத்துடன் புன்னகையொன்றை
உதிர்க்கிறது பெண்பறவை.

-நிலாரசிகன்.

Tuesday, March 30, 2010

உயிரோசை விமர்சனம்



[இவ்வார உயிரோசையில் வெளியான விமர்சனம். எழுதியவர் கிரகம்.]

யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள் நிலாரசிகனின் முதல் சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகத்தை வாங்கியபோது முதன்முதலில் நிலாரசிகனைச் சந்தித்தேன். நல்ல உயரம், கருப்பு நிறம், கண்ணாடி அணிந்திருந்தார். முதல்முறை பார்ப்பதால் இவரா நிலாரசிகன் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர் வலைப்பக்கத்திலிருந்த போட்டோவிற்கும் நேரில் பார்ப்பதற்கும் அதிக வித்தியாசமிருந்தது. மீண்டும் நேரில் சந்தித்தால் புத்தகத்தின் பின் பக்கத்திலிருக்கும் அவர் போட்டோவை மாற்றச் சொல்ல வேண்டும்.
சிறுகதை தொகுப்பானது 17 சிறுகதைகளை கொண்டது. 'ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு பிரிவு' - முதன்முதலாக நகரத்திற்கு வேலை பார்க்கவரும் இளைஞனுக்கும் அவன் வசிக்கும் வீட்டு ஓனரின் மகளுக்கும் நட்பு ஏற்படுகிறது. அவள் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி. மோதலில் ஆரம்பித்த இவர்களின் சந்திப்பு நாடகள் செல்லச்செல்ல அண்ணன் தங்கை உறவுபோல் ஆகிறது. அந்த சிறுமியின் குறும்புகளை இளைஞன் ரசிக்கிறான். சில தினங்கள் அவனின் அறையிலே தூங்கிவிடுகிறாள். அவளுக்கு ப்ராக் வாங்கித் தருகிறான். சந்தோசமடைந்தவள் அவனுக்கு முத்தம் தருகிறாள். அவன் புதிதாக வாங்கியிருந்த pulser பைக்கில் அவளை வைத்து ஊர் சுற்றிக் காட்டுகிறான். சிறுமி கேன்சர் நோயாளியென்று தெரியவருகிறது. எல்லா வித உறவுகளும் ஒருவனுக்கு சில சமயங்களில் சந்தோஷத்தையும், சில சமயங்களில் துக்கத்தையும் அளிக்கின்றன. இதையே இச்சிறுகதை சொல்கிறது.
'
வேட்கையின் நிறங்கள்' - ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் இரண்டு பெண்களின் கதை. வேதா படித்துவரும் பள்ளிக்கூடத்தில் நதியா புதிதாய் சேர்கிறாள். நதியாவின் கண்கள் வேதாவை வெகுவாகக் கவர்கின்றன. நதியாவென்ற பேரைக் கேட்டாலே வேதாவின் உடலில் காமம் கிளர்ந்தெழுகிறது. இவர்கள் இருவரைத் தவிர யாரும் வகுப்பறையில் இல்லாத ஒருநாள் இருவரும் சேர்கின்றன்ர். இருவரின் சேர்க்கையானது கல்லூரிவரை தொடர்கிறது. திருமணத்தில் நாட்டமில்லாத வேதா நதியாவுடன் கோயம்புத்தூர் சென்று வாழ்கிறாள். நதியா வேதாவிற்குத் தாலி கட்டிவிடுகிறாள். நதியா வேலைக்குச் செல்கிறாள். வேதா வீட்டில் இருக்கிறாள். இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்கின்றனர். ஒரு நாள் நதியா ஆணுடன் தோளில் கைபோட்டபடி வீட்டிற்குள் வருகிறாள். இந்தக் கதை எழுதப்பட்ட விதம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. பெண்-பெண் காமம் கொள்ளும் தருணங்களை விவரிக்கும் வரிகள் மிகவும் அழகானவை. நிலாரசிகன் கவிஞர் என்பதால் கதையின் வரிகளும் கவிதைபோலவே அமைந்துள்ளன.
'அப்பா சொன்ன நரிக்கதை' – ‘நச்’ சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை. இதைத் தவிர 'தனலட்சுமி டாக்கிஸ்' - கேபிள் மற்றும் திருட்டு வீடியோவின் வருகையால் அழிந்துவரும் திரையரங்குகளின் கதை. வாலிப வயதை எட்டியிருந்தாலும் சிறுவயதில் ரசித்ததை மனம் அசைபோடும் விதமாக 'சேமியா ஜஸ்', 'வால்பாண்டி சரித்திரம்', 'சைக்கிள்' போன்ற சிறுகதைகள் அமைந்துள்ளன.


வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்
நூல்: யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
ஆசிரியர்: நிலாரசிகன்
விலை: 70 ரூபாய் - முற்றும் -
 ******************************************************
பிற விமர்சனங்கள்:


http://online-tamil-books.blogspot.com/2009/12/blog-post_29.html
http://www.nilaraseeganonline.com/2010/03/blog-post_12.html
http://adaleru.wordpress.com/2010/01/05/book-review-yaaroo-oruthiin-diary-kuripugal/

இணையத்தில் நூலை பெற:

http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79


நன்றி,
நிலாரசிகன்.

Monday, March 29, 2010

வசந்தபாலனுக்கு....







தவிர்த்தலின் வலியை வெக்கையும் வியர்வையுமாக தன் முதல் படைப்பில் பதிவு செய்தவர் வசந்தபாலன். வெயில் தந்த உணர்வுகளுடன் அங்காடித்தெருவுக்கான காத்திருப்பு நீண்டது. படம் வெளியான உடனே விமர்சனம் படித்துவிட்டு போகலாம் என்று நினைத்தபோது ஏதோவொன்று தடுத்தது. விமர்சனங்கள் முன்முடிவுகளுக்கு நம்மை ஆழ்த்திவிடும் என்பதால் விமர்சனம் எதுவும் படித்திடாமல் திரையரங்கம் சென்றேன். சென்னையின் ஏசி தியேட்டருக்குள் பாப்கார்னும்,கோலாவும் அருந்தியபடி பார்க்கும் பொழுதுபோக்கு சித்திரம் இதுவல்ல என்பது சுவரொட்டிகளிலேயே உணர்ந்து கொள்ள முடிந்தது.தூத்துக்குடியில் இரவுக்காட்சிக்கு நானும் நண்பர்களும் சென்றபோது வேலை முடிந்த களைப்பிலும் படம் பார்க்க வந்திருந்த கூட்டம் ஆச்சர்யமளித்தது.

படம் ஆரம்பித்து முடியும் வரை எனக்குள் ஏற்பட்ட அதிர்வுகளே இப்பதிவு. ஒவ்வொரு காட்சியிலும் இது படமல்ல வாழ்க்கை என்பதை நம் மனதில் அழுத்தமாக பதியவைத்திருக்கிறார் வசந்தபாலன். அதனால்தான் இட்டமொழி கிராமத்தின் தேரி வாழ்க்கையையும் சென்னையின் குரூர வாழ்க்கையையும் நேர்கோட்டில் அவரால் படைப்பாக்க முடிந்திருக்கிறது.

குத்துப்பாடலால் நிரம்பிய முதல் காட்சியை பார்த்துப் பழகிய கண்களுக்கு இரண்டு இளம் உயிர்கள் கால்களால் விளையாடும் அதிஅற்புதமான காதல்காட்சியும் தி.நகரில் அவர்கள் ஓடித்திரியும் இரவுக்காட்சியும் புதுமை கலந்த விருந்தை முன்வைக்கின்றன. இந்த இடத்தில் காமெடி இந்த இடத்தில் நான்கு சண்டைகள் என்று பார்த்து பார்த்து சலித்த தமிழ்சினிமாவை மற்றொரு தளத்திற்கு நகர்த்திச் செல்வதில் வசந்தபாலன் மிக முக்கியமானவர். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நகரத்தின் கொடூர கரங்களில் சிக்கி அழிகின்ற கிராமத்து இளைஞர்களை படமாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் சிறந்த காட்சிகளாக/வசந்தபாலனின் நுட்பங்களாக எனக்குத் தோன்றியவை:

  1. பிச்சை எடுப்பவன் சாதாரண கழிப்பறையை கட்டண கழிப்பறையாக மாற்றும் காட்சிகள்.
  2. குள்ளன்,அவன் மனைவி,அந்தக் கிழவன்
  3. சோப்பி
  4. தற்கொலை செய்துகொள்ளும் பெண் இறப்பதற்கு முன் வெளிப்படுத்தும் அபார நடிப்பு
  5. கொடுமைக்கார அண்ணாச்சி
  6. கதாநாயக/நாயகியின் தங்கைகள்.
  7. அண்ணாச்சியின் ரிங்டோன்
  8. கதாநாயகி அடிவாங்கிவிட்டு சேலை எடுத்துப்போடும் காட்சி
  9. சாலையோரத்தில் உறங்கும் தாயின் குழந்தை தாயை விட்டு விலகி வரும் காட்சி
  10. இரவு விழித்துக்கொள்ளும் நண்பன் நெஞ்சுவரை ஏற்றி கட்டியிருக்கும் லுங்கி.
  11. உணவுக்கான போட்டியில் அறிமுகமாகும் செளந்தரபாண்டி(பெயர்கூட தெற்கு மாவட்ட பெயர்)
  12. விக்கத்தெரிஞ்சவன் வாழத்தெரிஞ்சவன்(இந்த வசனம் வரும்போது முன்னிருக்கை முதியவர் எழுந்து நின்று கைதட்டினார்) யானை வாழ்ற இடத்துலதான் எறும்பும் வாழுது வசனங்கள்(வாழ்த்துகள் வசனகர்த்தா ஜெயமோகனுக்கு)
  13. குள்ளனுக்கு குழந்தை பிறந்தவுடன் அவனது மனைவி பேசுகின்ற வசனம்.
  14. இட்டமொழி கிராமத்து வீடு. வீட்டின் அருகே குவிந்திருக்கும் விறகுகள்.
  15. பெயிலானதால் பாண்டி அடிவாங்கும் காட்சிகள்.
  16. கவிதை/இறைவாழ்த்து நகைச்சுவை காட்சிகள்.
  17. வயதுக்கு வந்த தங்கையை நாய்க்கூண்டின் அருகே வைத்திருக்கும் காட்சியும் அதற்கு பிறகான கதாநாயகியின் நடிப்பும். 
  18. கதாநாயக தேர்வு.
  19. இன்னும் இன்னும் மனதெங்கும் விரிந்து படர்ந்து விருட்சமாக நிற்கும் காட்சிகளை எழுத முடியவில்லை.வாழ்த்த மட்டுமே தோன்றுகிறது.


இனி கடைகளுக்கு செல்லும்போது சேலைகளுக்கு முன்னால் சிரித்தபடி நிற்கும் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பின் கசப்பான வாழ்க்கை ஒளிந்திருக்கிறது என்பதை ஒரு கணமேனும் நாம் உணர்வோம். அதுவே இக்காவியத்தின் அசைக்கமுடியாத வெற்றி. வசந்தபாலனுக்கு நன்றிகள் பல.அங்காடித்தெருவில் தொலைந்த மனதை தேடியபடி…

-நிலாரசிகன்.

Monday, March 22, 2010

நிலாத்துளிகள்




1. கடந்த வாரம் இரு சந்திப்புகள். ஒன்று ஆங்கில வலைப்பதிவர்களின் சந்திப்பு. மற்றொன்று டிவிட்டர் நண்பர்களின் சந்திப்பு. வெகுநாட்கள் கழித்து சந்தித்த பாலபாரதி தன் பேச்சில் தூள் பறத்தினார். மீசையும் குறைவான முடியுமாக ஆளே மாறியிருந்தார். நல்லதொரு சந்திப்பு.

2.ஒரு வாரம் முடிந்துவிட்டது ஐ.பி.ல் மூன்றாவது சீசன் துவங்கி. யூசுப் பதான்,காலீஸ்,திவாரி,பாண்டே அசத்தியிருக்கிறார்கள். பஞ்சாப் Vs சென்னை இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிகச்சிறந்தது எனலாம்.

3.அகநாழிகையின் மூன்றாவது இதழ் நேற்று கிடைத்தது. மனுஷ்யபுத்திரனின் நேர்காணல்,அட்டைப்பட ஓவியம்,கெளரிப்ரியாவின் மூன்றாவது கவிதை,யாத்ராவின் 'இக்கணம்' கவிதை,தலையங்கம் அனைத்தும் அற்புதம். லாவண்யா தொடர் கட்டுரை எழுதலாம்.

4.அந்தப் பொய் உனக்கு
எதையும் கொண்டு வரப்போவதில்லை.
ஒரு குழந்தையின் மனதையோ
ஒரு வெண்நிற பூவின் வாசத்தையோ
அல்லது
உறக்கத்தில் நெற்றி முத்தமிடும் அன்பையோ
எதையும் அந்தப் பொய்யால்
உன்னிடம் சேர்த்திட முடியாது.
எனினும்
நீ உரைத்த அந்தப் பொய்யின்
துவக்கப்புள்ளியில்தான்
வரைய ஆரம்பித்தேன்
என்னிலிருந்து நீங்கிச்செல்லும்
பெண்ணின் ஓவியத்தை


5. ஹெய்டன் உபயோகிக்கும் மங்கூஸ் மட்டை பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. மற்ற வகை கிரிக்கெட் மட்டைக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. கைப்பிடியின் நீளம் அதிகம். 20% பவர் அதிகம். அதிரடியாக விளையாட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீரிப்பிள்ளையின் பெயரை வைத்திருக்கிறார்கள். பாம்பையும் சீண்டும் என்பதாலா? ஹெய்டன் போன்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு சாதாரண கிரிக்கெட் மட்டையே போதுமானது :)

6. ஒரு குறும்படம்: http://www.youtube.com/watch?v=CJZ_CtNhtAw

7. சொற்கப்பல் மார்ச் 6ம் தேதி தன் பயணத்தை துவங்கியது. அமிர்தம் சூர்யாவின் "கடவுளைக் கண்டுபிடிப்பவன்" மற்றும் சந்திராவின் "காட்டின் பெருங்கனவு" நூல்களின் விமர்சனக்கூட்டம் நடந்தது. நல்லதொரு அனுபவம்.

8.Earth Hour குழுவிலிருந்து சிலரை கடற்கரை சந்திக்க நேரிட்டது 27 மார்ச் இரவு 8.30 முதல் 9.30 வரை மின்சார விளக்குகளையும் மின் சாதனங்களையும் அணைத்து வைக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். மேலதிக தகவலுக்கு www.earthhour.in  பார்க்கலாம்.

9.நட்பில் நம்பகத்தன்மை என்பது என்ன?

10. மேலுள்ள கேள்விக்கு சரியான பதில் அளிப்பவர்களுக்கு இப்பொழுதே நன்றி சொல்லிக்கொள்கிறேன். நன்றி.

-நிலாரசிகன்.