Sunday, February 24, 2013

கற்பனை என்றொரு மாளிகை : நிலாரசிகனின் ‘மீன்கள் துள்ளும் நிசி’ பாவண்ணன்



புதுமை என்பது கவிதையின் அழகுகளில் ஒன்று. புத்தம்புதிதாக பூக்கள் பூத்துக்கொண்டே இருப்பதைப்போல காலந்தோறும் கவிதைகளில் புதுமையும் சுடர்விட்டபடி இருக்கிறது. சமீப காலத்தில் புதுமை அழகோடு கவிதைகள் படைக்கும் படைப்பாளிகளின் வரிசையில் நிலாரசிகன் கவனிக்கத்தக்க விதத்தில் இயங்கிவருகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தவெயில் தின்ற மழை’ தொகுப்பைத் தொடர்ந்து அவர் வெளியிட்டிருக்கும் இரண்டாவது தொகுப்பு மீன்கள் துள்ளும் நிசி.
காற்றிலாடிய இரண்டு கயிற்றுத்துண்டுகளை முன்வைத்து பாரதியார் படைத்த காட்சிச்சித்திரம் ஒரு தொடக்கம். கற்பனையும் புதுமையும் சரியான விகிதத்தில் கலந்து உருவாக்கப்பட்ட சித்திரம் அது. பாரதியாரைத் தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையிலும் ஒவ்வொரு கவிஞர் அப்படிப்பட்ட சித்திரங்களைத் தீட்டியபடியே வந்திருக்கிறார்கள். கவிதை அழகுகளில் அது முக்கியமானதாக இருப்பதால்தான்ஒரு மரபுபோல அந்தப் புதுமை தொடர்ந்தபடி இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு எழுதவந்த கவிஞர்களில் கவிதைகளில் இந்த அழகை மெய்மறந்து செதுக்கும் சிற்பியாக விளங்குகிறார் நிலாரசிகன்.
ஓர் ஆங்கிலச்சிறுகதை. ஒருவனுடைய மனைவியைச் சந்திக்கவந்த பார்வையில்லாத நண்பனுக்கும் அவளுடைய கணவனுக்கும் நிகழும் உரையாடலோடு அச்சிறுகதை தொடங்குகிறது. முதலில் அக்கணவனுக்கு பார்வையில்லாத அந்த இளைஞனோடு பேசுவதற்கே விருப்பமில்லை. பிறகு எப்படியோஉரையாடலின் தொடர்ச்சியில் ஏதோ ஒரு கட்டத்தில் சுவாரஸ்யம் உருவாகிவிடுகிறது. ஒரு தேவாலயத்தின் கட்டமைப்பு எப்படி இருக்கும் என்றொரு எளிய கேள்வியை அந்தப் பார்வையில்லாத இளைஞன் கேட்கிறான். உடனே கணவன் தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்கும் என்று உற்சாகத்தோடு வர்ணிக்கத் தொடங்குகிறான். ஆனால் மேலும்மேலும் தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் மனம் நிறைவடையும்வகையில் பதில் சொல்ல கணவனால் இயலவில்லை.  அவனுடைய சொற்களால் பார்வையில்லாதவனின் நெஞ்சில் ஒரு சித்திரத்தை உருவாக்க முடியவில்லை. சட்டென்று தன் மனத்தில் உதித்த யோசனையின் தூண்டுதலால் பார்வையில்லாதவனின் கைகளைப் பற்றி உயர்த்தியும் அகட்டியும்  குறுக்கியும் தேவாலயத்தின் தோற்றத்தை உணர்த்த முயற்சி செய்கிறான். பிறகுஅவனும் கண்களை மூடிக்கொண்டு தற்காலிகமாக தன்னையும் ஒரு பார்வையில்லாதவனாக மாற்றிக்கொள்கிறான். தன் மனத்தில் உள்ள தேவாலயத்தின் வடிவத்தை கைகளால் உருவாக்க முயற்சி செய்கிறான். அவர் கைகளோடு கோர்க்கப்பட்ட பார்வையில்லாதவனின் கைகள்கூடவே அசைந்து அசைந்து,  தேவாலயத்தின் கட்டமைப்பு வடிவத்தை உள்வாங்கிக்கொள்கின்றன. வெளியே உண்மையான தேவாலயம். கைகளின் அசைவுகளால் உருவாகும் மற்றொரு தேவாலயம். கணவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம். பார்வையில்லாதவனின் மனத்துக்குள் ஒரு தேவாலயம்.  ஒவ்வொருவரும் தமக்குரிய தேவாலயத்தை தமக்கே உரிய வகையில் கண்டடைந்துகொள்கிறார்கள். நிலாரசிகனின் கவிதைகளைப் படித்து முடித்த தருணத்தில் தற்செயலாக இந்தச் சிறுகதை நினைவுக்கு வந்தது. ஒரு கவிதையின் கற்பனை மலரைத் தொட்டுணரதரையில் நின்றபடி கைநீட்டும் ஒரு வாசகனால் ஒருபோதும் முடியாது. அது மலர்ந்திருக்கும் உயரத்துக்கு அல்லது அதற்கும் அப்பால் அவன் கற்பனை விரிவடையும்போது மட்டுமே அதைத் தீண்டமுடியும். அப்படிப்பட்ட கற்பனைவிரிவு நமக்குள் நிகழும்போதுதான் நிலாரசிகனின் கவிதைகளை நாம் நம் கவிதைகளாக உணர்முடியும்.
நிலாரசிகனின் கவிதைகளை வாசிக்கும் அனுபவம் என்பதுநிலாரசிகன் கட்டியெழுப்பும் கற்பனைச்சித்திரங்கள் உணர்த்தும் அனுபவம் எத்தகையது என்பதைக் கண்டறியும் பயணமல்ல. மாறாகஅக்கற்பனையை கற்பனையாகவே உள்வாங்கி அசைபோடுதல் என்பதாகும். அது உருவாக்கும் காட்சிகளாலும் எண்ணங்களாலும் நம் நெஞ்சை நிரப்பிக்கொள்வதாகும்.
ஒருமை சிதையாத கற்பனைக்காட்சிகளாக எடுத்துக்காட்ட இத்தொகுப்பில் எண்ணற்ற கவிதைகள் உள்ளன. உடுதவளை என்றொரு கவிதை. கலங்கிய நீர் நிறைந்திருக்கும் ஒரு கிணற்றில் வசிக்கிறது ஒரு தவளை. தலையை உயர்த்தி வானில் மிதக்கும் நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து ஒளித்துவைக்கிறது. தொலைந்துபோன நட்சத்திரங்களை இப்போது இரண்டு காகங்கள் தேடத்தொடங்குகின்றன. கிணற்றுக்குள் இருப்பதை அறிந்துகொண்ட அக்காகங்கள் சிறுசிறு கற்களைக் கொண்டுவந்து போட்டு கிணற்றை நிரப்புகின்றன. மெல்ல மேலெழும்பும் நீரில் நட்சத்திரக்குழந்தைகள் வெளியேறுகின்றார்கள். வெளியே செல்பவர்கள் குறும்பு மிக்கவர்கள். முதிர்ந்த தவளைகளைக் கைகளுக்குள் மறைத்துவைத்து எடுத்துச் செல்கிறார்கள். ஒரு குழந்தை சொல்லும் விளையாட்டுக் கதைபோல கற்பனைச் செறிவு மிகுந்ததாக இருக்கிறது கவிதை. தவளை ஒரு புள்ளி. நட்சத்திரம் இன்னொரு புள்ளி. காகம் இடைப்புள்ளி. நட்சத்திரத்தைத் தேடிவந்த காகத்தைப்போலதவளையைத் தேடி இன்னொரு காகம் நட்சத்திரத்தைநோக்கிச் செல்லக்கூடும். தேடுவதும் கண்டடைவதுமான ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நிகழ்கிறது. காரண அறிவு வளராத குழந்தையைப்போல கற்பனைவளம் ஓர் அதிசயம் உலகம். நாகரிக வளர்ச்சியடைந்த மனிதன் பல்வேறு காரணங்களால் தொலைத்துவிட்ட அக்கற்பனையை கவிதைகள்மட்டுமே மீண்டும்மீண்டும் முன்வைத்தபடி இருக்கின்றன.
ஒரு நாட்டுப்புறக்கதையின் தன்மையைக் கொண்டதுபோன்ற தோற்றம் கொண்டது உடலின் ஆயிரம் இறக்கைகள் என்னும் கவிதை. கனவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. குழாயில் தண்ணீர் சொட்டுவதுபோல. அதை ஒவ்வொரு கனவாக பீங்கான் கோப்பைகளில் பிடித்து கட்டிலின் அடியில் ஒளித்துவைக்கிறான். கனவுகள் தமக்குள் உரையாடிக்கொள்கின்றன. எல்லாமே உறங்குபவனைப்பற்றிய குறிப்புகள். இவன் காதலைக் கொன்றவன் என்கிறது ஒரு கனவு. காமத்தின் விஷக்கண்களில் வீழ்ந்தெழுந்தவன் என்கிற்து இன்னொரு கனவு. இப்படியே ஏராளமான குறிப்புகள். ஒவ்வொரு குறிப்பும் ஒவ்வொரு இறக்கையாக உருமாறுகிறது. தூக்கத்தில் புரண்டுபடுப்பவனின் உடல்முழுதும் ஆயிரம் இறக்கைகள்.
சோலஸ் கவிதையும் நாட்டுப்புறக்கதையின் சாயலைக் கொண்டிருக்கிறது. கடலுக்கு நடுவில் ஒரு அரசகுடும்பத்தினர் வசிக்கிறார்கள். அவர்களுக்கு சோலஸ் என்றொரு மகள் இருக்கிறாள். அலைக்குதிரையில் ஒலிவேகத்தில் வந்தவன் அவளைக் கவர்ந்து செல்கிறான். அந்த அரசன் அவர்களைத் தேடிச் செல்கிறான். எட்டுத் திசைகளில் தேடியும் அவனால் கண்டடைய முடிவதில்லை. சோர்ந்தவன் கண்களில் வழியும் உப்புக்கண்ணீரால் கடலின் சுவையே மாறிப் போய்விடுகிறது. ஆண்டுக்கணக்காகயுகக்கணக்காகஅந்த அரசன் காதலனோடு புறப்பட்டுப் போன தன் மகளைத் தேடியபடியே இருக்கிறான். மறுபக்கத்தில்காலம்காலமாகஎங்கோ தொலைதூரத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக நீந்தியபடியே இருக்கிறார்கள்.
இரவின் ரகசியப்பொழுதுகள் கவிதையில் உள்ள குழந்தைக்குறும்புடன் கூடிய கற்பனைச்சித்திரம் மிகமுக்கியமான ஒன்று. சிறுமியொருத்தி தன் மார்போடு அணைத்தபடி உறங்கும் கரடிப்பொம்மைஅவள் பிடியிலிருந்து நழுவி படுக்கையிலிருந்து எழுந்து அறையிலிருந்து வெளியே வருகிறது. கூடத்துக்கு வந்து தொலைக்காட்சி பார்க்கிறது. பழம் சாப்பிடுகிறது. தற்செயலாக தண்ணீர் அருந்துவதற்காக சமையலறைக்கு வந்த அம்மாஅந்தக் கரடியைப் பார்த்து அச்சத்தில் அலறி நடுங்கிவிடுகிறாள். சத்தம் கேட்டு எழுந்துவந்த சிறுமி கரடியை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்றுவிடுகிறது. சிறுமி தொட்டதுமே கரடி மீண்டும் பொம்மையாகிவிடுகிறது. பயந்துபோன அம்மாவை அணைத்து முத்தம் கொடுத்து,ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்துகிறார் அப்பா. அம்மா அம்மாக்கரடியாக மாறிவிடுகிறாள். அப்பாஅப்பாக்கரடியாக மாறிவிடுகிறது. கற்பனைஉயிர் உள்ளவர்களைப் பொம்மையாக்கிப் பார்க்கிறது. பொம்மையை உயிர் உள்ளதாக மாற்றிப் பார்க்கிறது. தர்க்கம் குறையாத அக்கதையின் சரடு மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது.
61 கவிதைகள் உள்ள இத்தொகுப்பு நிலாரசிகனின் கற்பனைஅழகுக்கு ஒரு சாட்சி. நிலாரசிகன் ஒருபக்கம். அவர் கற்பனைமனத்துக்கு இணையான கற்பனை மனத்தோடு நெருங்கும் வாசகன் இன்னொரு பக்கம். இருவரும் விழிமூடி கற்பனையில் மிதந்தபடி விரல்கோர்த்துக்கொள்ளும்போது வாசக அனுபவத்தில் பொங்கும் கற்பனை அழகில் இன்னொரு தொகுதிக்கான கவிதைகள் கண்டடையப்படக்கூடும்.
(மீன்கள் துள்ளும் நிசி. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. காவேரிப்பட்டினம்)

Thursday, January 31, 2013

ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்



1.ஜூலியின் அப்பா எண்களால் ஆனவர்


இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்
நான்காவது மகளாக ஜூலி
பிறந்த செய்தி கேட்டவுடன் வேகமாய்
மருத்துவமனை விட்டு வெளியேறினார் 
ஜூலின் அப்பா.
அதன் பின்னர் எப்பொழுதும் அவர்
தன் முதல் மூன்று பெண்களையும்
எண்களை வைத்தே அழைக்க ஆரம்பித்தார்.
ஒன்று 
கல்லூரியில் இரண்டாம் வருடம் படிக்கிறது.
இரண்டு
பள்ளி இறுதி ஆண்டு படிக்கிறது.
மூன்று
படிப்பில் ஆர்வமில்லை அதனால் தையல்
வகுப்பு போய் வருகிறது
இப்படித்தான் எல்லோரிடமும் 
தன் பெண்களின் மகிமை பேசுவார்.
நான்காவது எண்ணுடைய ஜூலியை
அவர் விரும்பியதே இல்லை.
ஒன்றிலிருந்து மூன்றுவரை திருமணம்
முடிந்து மறுவீடு சென்றபின்னரும்
நான்கை பற்றிய அக்கறையின்றி
திரிந்ததால்
தன் முப்பதாவது வயதில்
ஜூலி காதல் மணம் புரிந்து வெளியேறினாள்.
யாருமற்ற வீட்டின் அடுக்களையில்
நைந்த கறுப்புவெள்ளை புகைப்படமொன்றை
கைகளில் ஏந்தியபடி
ஜூலியின் அம்மா ஒருநாள் 
முணுமுணுத்துக்கொண்டிருந்தாள்
"அவர் பூஜ்ஜியம் அவர் பூஜ்ஜியம்" என்று.

2.மிஸ்டர் எம் மற்றும் எக்ஸ்ஸின் காதலி : எஸ் என்கிற எஸ்

கடற்கரையில்தான் எஸ் தன் குழந்தைமையிலிருந்து
குமரியாக மாறினாள். 
மருத்துவமனையில்தான் எஸ் ஒரு காதலை கொன்று
வீசினாள்.
காதல்மாதத்தில்தான் எஸ் தன் மூத்தகாதலான
"எம்"மை கைப்பிடித்தாள்.
முகநூலில்தான் எஸ் தன் புகைப்பட முகத்தை
முதன்முதலாய் காண்பித்தாள்.
மயில்கள் திரியும் தோட்டத்தில்தான் எஸ்ஸின் மீதான‌
காதலை கண்ணீர்மல்க எக்ஸ் புலம்பினான்.
யாருமற்ற இரவில்தான் எக்ஸ் ஒரு திருமணத்திற்கு
சம்மதித்தான்.
உலக அழிவை பேராவலோடு எக்ஸ் எதிர்நோக்கிய‌
கணத்தில்தான் எம்மும் எஸ்ஸும் குற்றாலம் போவது
பற்றிய முடிவெடுத்தனர்.
எக்ஸ் வேறு வழியின்றி தூக்கில் தொங்க நினைத்தபோது
அறுந்து விழுந்து சிரித்தது வாழ்க்கைவடிவ‌
தூக்குக் கயிறு.
காலம் அனைத்தையும் மறக்கடிக்கும் என்று
எக்ஸ்க்கு அறிவுரை வழங்கி எஸ்
ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாள்.
எக்ஸை சேரும்போது அந்த எஸ்.எம்.எஸ்ஸில்
வார்த்தைகளே இல்லை.
எஸ்ஸின் பேரன்பின் முத்தங்களின் கனம் தாளாமல்
ஒரு நாள் எக்ஸ் மரித்துப்போனான்.
அப்போது எம்மும் எஸ்ஸும் நயாகராவில்
புகைப்படமெடுத்துக்கொண்டிருந்தனர்.

-நிலாரசிகன்.

Friday, January 11, 2013

மீன்கள் துள்ளும் நிசி

நண்பர்களின் கவனத்திற்கு: புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கு எண் 43/44 ல் எனது கவிதை தொகுப்பான "மீன்கள் துள்ளும் நிசி" கிடைக்கும்...
அனைவருக்கும் "புத்தககண்காட்சி வாழ்த்துகள்" :)

Wednesday, January 09, 2013

மீன்கள் துள்ளும் நிசி - விமர்சனம் - கவிஞர்.இளஞ்சேரல்


நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து


நிழல் விரிகிறதென்றால்

பகல் சுடுகிறது என்று பொருள்--

நிலா ரசிகனின் ”மீன்கள் துள்ளும் நிசி” குறித்து

 

இளஞ்சேரல்

 

         நவீன காலத்தின் பிரதிபலிப்பை பிரித்து எரியப்பட்ட கார்பன் கழிவுகளைப் போலவும் திரும்பவும் அவைகளைக் கைப்பற்றி தாள்களுக்குள் சொருகிச் சொருகி சில பொம்மைகளை வரையும் சேரியின் சிறுவர் சிறுமிகளின் சித்திரங்கள் போலவே நமது நவீன கிராமங்களின் கவிதைகள் பதிகிறது.

               எல்லாக் கிரயப்பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டபின் அந்த நிலத்தை மீண்டும் அத்தாட்சி சுத்தமாகச் சென்று பார்த்து வருகிற மாதாந்திரச் சம்பளக்காரனின் வாழ்வுதான் நவீன கவிதை

         நவீன கவிதையியல் குறித்து எழுத எழுத தீராத மணற்குமிழ்கள்.அது எல்லா இடத்திலும் இருக்கும் பால்பாயிண்ட் பேனாவின் குமிழ் போல சில சமயம் கொஞ்சம் கண்களால் அறியமுடியும். சில வற்றை அள்ளி அதில் எங்கானும் தவறிய சில சங்குப் பாசிகளை நுற் சங்குகளைப் பொறுக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவைப்படும் பட்சத்தில்

              நிலாரசிகன் கவிதைகளை தொடர்ந்து வாசிக்கப் படும் போது அடிக்கடி இருதயத்தைத் தொட்டுப்பார்த்துக் கொள்கிற ஆஸ்துமாகாரன் போலத்தான் மிளர வேண்டியிருக்கிறது. படிமங்களை மிக அதிகமாகவும் பிரழ்வு சோகையுடனும் அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. சங்கிலிக் கண்ணக

ளாக அடுக்கப்பட்டிருக்கும் காட்சி சிலாகிப்பு-எரி நட்சத்திரம் போல அடிக்கடி காணாமல் போகும் சற்று முன் விவரித்த சித்திரக் காட்சிகள் என்பதான நிறைய பிடிமானம் இல்லாத கத்திகளும் முள் உருண்டைக் கருவிகளுமாகக் கைகளில் பற்றுவதாக இருக்கிறது.

43. பொம்மையாதல்- கவிதை நாம் மேதமை கொண்டோர் என அறிந்தவர்கள் கூட சிறு அப்பியாசம் கூட அறியாதவர்களாக இருப்பர்.அல்லது

குழந்தையாக இருப்பினும் கூட கேட்டுப்பெறுபவர்க

ளாக இருப்பர் என்கிறார் இக்கவிதையில் குழந்தைகள் அறிந்ததைக் கடவுள் கூட அறியாது என்பதாகிறது. இவ்விடம் குழந்தை நவீன காலத்தின் குழந்தையாகவும் காட்டுவதுதான் நிலாரசிகனின் நுட்பம்.

 

அப்பாவும் அம்மாவும்

தராத அரவணைப்பை

பொம்மைக்குத் தந்தபடி

உறங்கிக் கொண்டிருந்தது குழந்தை

கனவில் தோன்றிய கடவுள்கள்

அச்சிறு குழந்தையின் அரவணைப்பை

வரமாய்க் கேட்டனர்

வரிசையில் நின்றிருந்த

கடவுளர்களுக்கு உறக்கப் புன்னகையை

தந்துவிட்டு பொம்மையை

இறுக்கி அணைத்துக் கொண்டதது.

பொம்மையாதலின் வழிமுறைகள்

அறியாமல் விழித்தபடி நின்றனர்

கடவுளர்கள்..

         மாயத்தின் தத்ரூபமான தரிசனம் இக்கவிதையில் கிடைக்கிறது. ஏற்கெனவே இந்த கவிமொழி நமக்கு குறுங்கவிதைகள் எழுதுகிற கவிஞர்கள் மூலமாக நமக்கு அனுபவமாகக் கிட்டியியிருந்தாலும் பொம்மையாதலின் வழிமுறைகளை அறியாதவர்தான் கடவுள் என்பது நல்ல புனைவும் அதியதார்த்தம் மீறிய கூட்டிணைப்பு

கடவுள் குழந்தைகளிடம் எந்த சமரையும் வைத்துக் கொள்வதில்லை. குழந்தைகள் புத்திசாலித்தனத்தை கடவுளிடம் கேட்டுக் கொண்டெல்லாம் காத்திருப்ப தில்லை. இங்கு குழந்தை என்பது இயற்கையின் ரூபம் என்பதாக வாசகனுக்கு அறிய நேர்கிறது.

 

வேர்களற்றவர்கள்

 

மௌனம் உருகி படர்ந்திருக்கும்

மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்

என் அணைப்பின் தகதகப்பில்

அடர்பச்சை மரக் காடுகளை

பார்வையின் வழி சென்றடைகிறாய்

மெல்ல உன் வதனம் திருப்பி

இதழ்களில் முத்தமிடுகிறேன்

வனம் சில்லிட்டு சிதற சிதற

நம்மிடையே வளர்கின்றன

ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்

இதழ்களிலிருந்து வெளியேறும்

முத்தப்பறவைகளிலொன்று உன்னை

அள்ளிச் செல்கிறது

இதழ்களிலிருந்து வெளியேறிய

கருந்தேள் என்னைத் தின்று பசியாறுகிறது

நம் தடயங்களற்ற மலையின் உச்சி

இப்பொழுதும் மௌனித்துக் கிடக்கிறது.—பக்-28

 

       நிலாரசிகன் அதிகமான படிமங்களை உருப்போட்டிருக்கும் கவிதை இந்தக் கவிதை. அவருடைய எல்லாவிதமான சாத்தியங்களும் கவிதையின் சத்தியமும் இக்கவிதையில் இருக்கிறது. நவீன காலத்தின் எல்லா உபகரணங்களையும் கைக் கொண்டிருக்கிற ஒருவன் தான் அனுபவிக்கின்ற இன்பங்களை அல்லது இழப்பீடுகளைப் பேசும் போது இப்படியான பிறழ்வுப் படிமங்கள் வரும். பிரம்மராஜன், பசுவய்யா,ஞானக் கூத்தன், அழகிய சிங்கர் ஆகியோர் இப்படி நிறையப்படிமங்களை அடுக்கியிருக்கிறார்கள்.

              காதலுறுதல் காமுறுதல் உயர்வு நவிற்சி பாடல்களில் சங்கப் பாடல்களிலும் சரி பக்தி இலக்கியக் காலங்களிலும் சரி மிகு உயர்வு நவிற்சியைப் பயண்படுத்தி கவிரசம் சொட்டச் சொட்ட பந்தியிட்டிருக்கிறார்கள் நம் பாணர்கள்.

           அந்த வகையில் நம் நெகு காலமானாலும் சரி கல் குவாரி காலமானாலும் சரி பாதாள சாக்கடையை இன்னும் நான்கு பேர் இறங்கி முங்கி சுத்தம் செய்யும் காலமானலும் சரி கவிஞனுக்கு எல்லாமே வலிமிகுந்த காலம்தான்..

 

நடுநிலைத்திணை

 

ஒவ்வோர் இதழிலும்

வெவ்வேறு நிறங்ளைக் கொண்டிருக்கும்

அம்மலருக்குள்

ஓர் உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது

எண்ணிலடங்கா பட்சிகளும் விலங்குகளும்

நிறைந்த அவ்வுலகில்

சர்ப்பமொன்று பச்சை மரக்கிளையில்

ஊர்ந்து செல்ல

காட்டாற்றின் கரையில்

மூன்று நிழல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன

பறவையின் முதல் நிழலும்

அலகுப்புழுவின் இரண்டாம் நிழலும்

சந்திக்கும் புள்ளியில் உருப்பெற்ற

மூன்றாம் நிழலில்

ஓய்வெடுக்கிறது கனத்தவோடு முதிர் ஆமை

சுழலும் அதன் நாவில் வெப்பமலரொன்றை

சுவைத்துக் கொண்டு..

           நல்லதொரு மீள் தரிசனத்தைத் தரும் இக்கவிதையில் அவர் ஆழக்கட்டும் காகிதக் கட்டிடங்களில் நாம் வசிக்கலாகாதா எனத் தோன்றுகிறது. தொகுப்பின் மொத்தக் கவிதைகளும் ஏதாவது ஒரு அழுத்தமான பிடியையும் பிம்பத்தின் ஊனையும் உறவையும் போற்றியபடியே இருக்கிறது.

           துண்டு துண்டாக வெட்டிப் பின் கலைத்து கலைத்து பின் வேறென்றாகச் சேர்க்கப் பார்த்து அது வேறொரு சித்திரமாக உருவெடுப்பதுதான் நவீன கவிதையின் கடலாழ பலம். அந்தப் பலத்தை நிலாரசிகன் ஒரு பளுதூக்கும் வீரனாக எல்லா பளு வில்லைகளை மாட்டி மாட்டி தூக்கிநிறுத்தப் பார்த்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.. வாசகனாக என்றும் நல்ல அனுபவம்.. இந்தத் தொகுப்பின் மூலம் கிடைத்திருக்கிறது. பிரமிள், புதுமைப்பித்தன், நகுலன், ஆத்மாநாம், சி.மணி, அப்பாஸ் போய்விட்டார்கள். நம்மையும் நம் கவிதையையும் காப்பவர்கள் யார் என்று புலம்பியிருக்கிறோம் நாம் முதல் முதலில். பிறகு அவர்களாகவே நாம் மாற யத்தனிப்பதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் பணிவிடையாகிறது. அந்த பரமாத்மாக்களின் விட்ட பணியை ஆளாளுக்குத் தூக்கிச் சுமக்க பிரியப்படும் எண்ணற்ற கவிஞர்களில் நிலாரசிகனும் ஒருவராக இருப்பது இந்தத் தொகுப்பில் தெரிகிறது.

    

         வாசிப்பின்  நுட்பமான அந்த அனுபவமே இந்த நூற்றாண்டின் தமிழ் நவீன கவிதைக்கு அவசியமாகிறது.

           கவிஞனைப் போற்றுவது நல்ல கவிதைகளின் வாசகனைப் போற்றுவதாகிறதால் நான் என்னை முதலில் இந்தத் தொகுப்பின் மூலமாக என்னைப் போற்றிக் கொள்கிறேன்.. நிலாரசினின் முயற்சிகள் கவிதைகளுக்காகத் தொடர்வது கவிதையின் ரசிகனான எனக்கு என்றும் இன்பம்தான்..

 

வாய்ப்பிருந்தால் மேலும் சில கவிதைகள் குறித்து எழுதுவேன்..

Monday, December 17, 2012

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா

நிகழ்ச்சி நிரல்:

http://www.yaavarum.com/archives/660

அனைவரும் வருக!

இணையம் வழியே நூலை பெற:

http://tinyurl.com/cvpwnmz


Wednesday, December 05, 2012

மீன்கள் துள்ளும் நிசி - இம்மாதம் வெளியாகிறது


Sunday, December 02, 2012

துயரத்தின் முடிச்சு



அந்தரவெளியில் மிதக்கிறது.
யாருடைய முடிச்சாகவும்
இருக்கலாம்.
வாழ்வின் துயர்மிகுந்த
காட்சிகளால் நிரம்பி 
தளும்புகிறது.
இரவின் கண்களில் 
நதியாகி வளைகிறது
குருதி.
அவிழ்ந்துவிட முயன்று
முடியாமல் தோற்று
முடிச்சுக்குள் முடிச்சாகி மூழ்கிப்போகிறது
காலம்.
ஓர் உன்னத காதல் முடிச்சின்
மறுபக்கத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
எக்கணமும் அவிழ்க்க இயலாத
துயரத்தின் முடிச்சொன்று.
-நிலாரசிகன்.

Saturday, November 24, 2012

நம்மிடையே மலர்ந்திருக்கும் மலர்




அதற்கு அத்தனை வாசமில்லை.
அவ்வளவு அழகுமில்லை.
கண்ணிமைச் சாமரங்களின்
மென்காற்றில் எப்பொழுதேனும்
உதிர்த்திடும் சில சொற்களை.
கைகளில் இருபது விரல்கள்
முளைத்தபோது அவ்வளவு
அழகாய் தோன்றி
பின்
அமைதியாக நடந்து போனது.
துயரங்களில் மொத்தக்கடலாகி
அதன் இதழ்கள் தொட்டபோது
சிறியதாய் மலர்ந்து
கணங்கள் சில கடந்து
மெளனித்து மொட்டாகியது.
அதற்கும்
அப்பால் ஓர் உலகமிருக்கிறது.
என்றுமே முழுவதும் மலர்ந்துவிடுவதில்லை
நம்மிடையே மலர்ந்திருக்கும்
இம்மலர்.
-நிலாரசிகன்.

Saturday, November 10, 2012

கல்கி தீபாவளி மலர் கவிதைகள்

மலை-வனம்-குளம்- மேலும் மூன்று முத்தங்கள்

1.

தரையெங்கும் விரவிக்கிடக்கும் சொற்களை
குனிந்தபடி மேய்கின்ற குறும்பாடுகள்
என் மலைவீட்டில் வளர்கின்றன.
மிகச்சிறிய முட்டைகளை இடுகின்ற
குருவிகளும் அவ்வீட்டில் வசிக்கின்றன.
அடிவாரத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக
மலை உச்சிக்கு இழுத்துவரும் 
எறும்புகளை நாம் பின் தொடர்கிறோம்.
அவ்வளவு பேரன்புடன்
இறுகப்பற்றிய கைகளில் 
விழுந்து
தெறிக்கின்றன குளிர்மழைத்துளிகள்.
தோளில் கன்னம் சாய்த்தபடி 
மலை ஏறுகிறாய்.
சொற்கள் எதுவுமற்ற கணத்தில்
மென்மையானதொரு முத்தமிடுகிறாய்.
எறும்புகள் சேமித்த சொற்களை
மென்று விழுங்கும் குறும்பாடுகளின்
சப்தத்தில் அதிர்கிறது மலைவீடு.


2.
அடர்வனப்பாதையில் நடப்பது
உனக்குப் பிடிக்கும்.
உயர்ந்த விருட்சங்களிலிருந்து எழும்பும்
பறவைகளின் வினோத ஒலியை 
கூர்ந்து கவனித்தபடி நடக்கிறோம்.
ஒரு ஆண்பறவையை துரத்துகிறது
பெண்பறவையொன்று.
கற்கள் நிறைந்த பாதையில் வெகுதூரம்
வனத்தின் நடுவில் வந்துவிட்டோம்.
சற்றுத்தொலைவில் சலசலக்கிறது
காட்டாறு.
இப்பொழுது மழை வேண்டும் என்கிறாய்.
இழுத்தணைத்து முத்தமிட துவங்குகிறேன்
ஆண் உனது வெட்கம்
சிறுவிதைகளாய் சிதறிச் சிதறி
வனமெங்கும் புதைகிறது 
ஆழமாய்
மிக ஆழமாய்.

3.

குளம் வற்றி விட்டது.
அ முதல் ஃ வரையில் துவங்கும்
சொற்களனைத்தும் உதிர்ந்துபோன
இலைகளின் கீழே மெளனிக்கின்றன.
கடைசி மீனின் எலும்புகளை
இழுத்துச் செல்கின்றன சிற்றெறும்புகள்.
மெளனம் உடைத்த சொற்கள்
சிறு சிறு  புரவி வடிவமெடுத்து ஓடுகின்றன.
நீரற்ற குளத்தின் உயரே பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்திலிருந்து
சிற்றெறும்புகள் மீது விழுந்து தெறிக்கின்றன
எச்சங்கள்.
புரவிகளின் தடத்திலிருந்து எழும்
மஞ்சள் இலைகள் நிறைந்த பெருவிருட்சத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
நிறைவேறாக் காதலின் கடைசி முத்தம்.

-நிலாரசிகன்.

Thursday, November 01, 2012

ஏக்கப்பூனை திரியும் பெருவுடல்




உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத 
ஏக்கம் ஒரு பூனையாகி என்னருகே 
அமர்ந்திருக்கிறது.
மிருதுவான அதன் உடலும் 
மென்மையான ஈர மயிர்க்கற்றைகளும்
அதன் அழகை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது.
மழை ஓய்ந்த முன்னிரவில் 
அதன் கண்களை 
உற்றுப் பார்க்கிறேன்.
ஏக்கப்பூனை காலத்தின் மறு உருவம்.
பிரித்தெறிய முடியாத அட்டையென 
என்னில் ஒட்டிக்கொண்ட கருநிற காலம் 
தன் பற்களிடையே மெதுவாய் எனை
மென்று தின்னத்துவங்குகிறது.
பூனையொன்றின் பசிக்கு உணவாகி
சரிந்து விழுகிறது என்னுடல்.
உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத
மாபெரும் இப்பெருவுடல்!
-நிலாரசிகன்.

Thursday, October 18, 2012

மழைக்காலப் பகல்





ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
அணைப்பின் கதகதப்பில்
மெல்லியதாய் நீ உதிர்க்கும்
முனகல்கள் முகில்களாய்
தவழ்ந்து தவழ்ந்து
என் உயிர் நிரப்புகிறது.
அறையெங்கும் படர்கின்ற
செயற்கைக்குளிரின் நடுவில்
தகிக்கும் வெப்பநதியாய்
பிணைந்திருக்கிறோம்.
முதுகில் பதியும் இதழ்களின்
ஈரத்தில் உடல் சிலிர்த்து
உதடு கடிக்கிறாய்.
ஒரு மழைக்காலப் பகலை உன்னுடன்
களிப்பது எதனுடனும் ஒப்பிடமுடியாதது
மழைக்குப் பின் ஒன்றுடனொன்று
உரசியபடி அமர்ந்திருக்கும்
தேன்சிட்டுக்களை போல.
-நிலாரசிகன்.

Sunday, October 07, 2012

வனப்பூ



நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறும்
விரல்களின் சிலிர்ப்பில் மின்மினிகள்
உடலெங்கும் மின்னி மறையும்.
விடியலுக்காக காத்திருக்கும் பறவைகளின்
செளந்தர்ய மெளனமென
மடியில் புரள்கின்றன உன் மோனங்கள்.
இதழ்களில் பதிந்து பிரியும்
இதழ்களில் நிரம்பித்தளும்புகிறது
காதலென்னும் பெருங்கடல்.
காட்டிடையே அமைந்திருக்கும்
சிறுகுடிலின் நடுவே
உடலெங்கும் பூக்கள் மலர
சிவந்திருக்கிறாய்.
வனப்பூக்களின் வசீகர வாசம்
நம் அறையெங்கும் படர்ந்திருக்கிறது.
நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது
எதனுடனும் ஒப்பிட முடியாதது.
ஒரு
வனப்பூவின் உயிர் நிரப்பும்
அதீத மணத்தைப்போல..

-நிலாரசிகன்.

Wednesday, September 19, 2012

ஜூலி

1.ஆற்றின் கரையில் உலரும் ஜூலியின் உடல்

ஜூலி தன் மூன்றாவது உடலை
மலர்த்தியபடி கிடக்கிறாள்.
அவளுடலை அப்பியிருக்கின்றன
ஆற்றுமணலின் துகள்கள்.
காமத்தையும் துரோகத்தையும்
தன் இரண்டாவது உடலோடு
கரைத்துவிட்ட பெருநிம்மதி அவள்
முகத்தில் வழிந்துகொண்டிருக்கிறது.
விழுகின்ற மழையின்
முதல் துளியை துறவி வேடமிட்ட
நண்டுகள் பிடித்துக்கொண்டு அவளிடம்
வருகின்றன.
தீரா தாகத்துடன் அத்துளியை பருகி
மூன்றாம் உடலை களிக்கிறாள்.
சிலந்திகள் நடமாடும்
ஓர் இருண்ட அறையில்
அழுகிய முத்தமொன்றினால் அவனது உடலை
உறிஞ்சிக்கொண்டிருக்கிறது
ஜூலியின் முதலாம் உடல்.


2.காட்டின் கதவுகளை ஜூலி திறந்தபோது


யாருமின்றி
அவளது
உமிழ் நீரில் வசிக்கும் பாக்டீரியாக்களை
முகம் திருப்பியபடி பெற்றுக்கொண்டிருந்தது
அறைக்காற்று.
சற்று நேரத்தில் ஒலித்த அழைப்புமணியின்
ஒலியில் முத்தம் நிறுத்தியவள்
கதவருகே ஓடுகிறாள்.
கதவின் மறுபக்கம் வெளிமானின்
சாயலை ஒத்தவன் நின்றுகொண்டிருந்தான்.
கதவு திறக்கும் ஓசையை
அறைக்காற்று முகம் உயர்த்தி
பார்த்த கணம்
புலி உருவ முத்தமொன்று
குருதி சுவைத்துக்கொண்டிருந்தது.
அவள் வீட்டின் வரவேற்பறையில்
இதழ்களை சுழற்றி சுழற்றி
முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் ஜூலி



3.ஜூலி என்றொரு முடிவிலி

மரவண்டுகளிட்ட துளைக்குள்
தன் மார்புகளை பொருத்திக்கொள்கிறாள்.
தூர்ந்துபோன சொற்களால்
அந்தரத்தில் தொங்கும் கதையொன்றை
உருவாக்கி அக்கதையில்
மரவண்டின் ரீங்காரத்தை
ஒலிக்கச்செய்கிறாள்.
மிகுந்த சப்தம் எழுப்பி துளைக்குள்
வந்தமர்கின்ற வண்டுகள் அவளது
மார்பை தின்னத்துவங்குகின்றன.
வலியின் விரல்களை
இறுக பற்றிக்கொண்டு புன்னகைக்கிறாள்.
முடிவில்லாமல் நீளும்
இவ்வாதையை ஒரு முத்தத்தின் வழியே
அவனுக்குள் விதைக்கிறாள்.
அவனது மிகச்சிறிய உலகத்தில்
முடிவிலியாக அந்தரத்தில்
தொங்குகின்றன
முத்தங்கள் முத்தங்கள்.


4.ஜூலி எனும் முதிர்ந்த ஆமை


முப்பது கோடைகளை
விழுங்கி மெதுவாய்
அறைக்குள் அங்குமிங்கும்
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஜூலி ஆமை.
அதன் கன்னக்கதுப்புகளில்
சில குறுமலைகளும்
சில மரணித்த பட்டாம்பூச்சிகளின்
வண்ணச் சிதறலும் தென்படுகின்றன.
படுக்கை விரிப்பில்
புரளுகையில் அது தன்
முப்பதாவது கோடைக்குள்
நுழைகிறது.
ஒரே முத்தத்தில் தன்னிடம்
வீழ்ந்தவனை சந்திக்கிறது.
உள்ளங்கைகளுக்குள் மிக பத்திரமாய்
வைத்திருக்கிறான்
ஜூலியின் முத்தத்தை.
கைபிரித்து தளர்ந்த கண்களுடன்
அம்முத்தத்தை பார்க்கிறது.
ஏதேன் சர்ப்பத்தின் குட்டியாய்
நெளியும் முத்தத்தை அவனிடமிருந்து
பறித்துக்கொண்டு
தன் அறைக்கு திரும்புகிறது
ஓட்டமும் நடையுமாய்.

[நன்றி: "சிலேட்"]

-நிலாரசிகன்.

Monday, August 20, 2012

உலர்முத்தப் பயணம்

ஒரு உலர்ந்த முத்தம் 
சருகொன்றின் கீழே 
தெருவோர கற்களிடையே
மிக அமைதியாக கிடந்தது.
உடலெங்கும் புழுதி படர்ந்த முத்தம்
தன் ஈர நினைவுகளை நினைத்தபடி
மெல்ல எழுந்து தளர்நடை நடந்தது.
சற்று தொலைவில்
சன்னமாய் ஒலித்துக்கொண்டிருந்த 
அழுகைச்சத்தம் கேட்டு அருகே சென்றது.
உதிர்ந்த கனவொன்று மடியில் முகம்புதைத்து
அழுதுகொண்டிருந்தது.
உதிர்ந்த கனவின் அருகில் சென்று
அதன் தலை கோதி தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டது.
யாருமற்ற தெருவில்
கனவும் முத்தமும் 
நடக்க துவங்கினார்கள்
விரிகின்ற நீள்மெளனத்தினூடாக.

-நிலாரசிகன்.

Sunday, June 17, 2012

கவிதைகள் மூன்று

யாருமற்ற தெருவில்
திரியும் நாய்க்குட்டிகள்



ஒவ்வொரு வீட்டின் வாசலையும்
முகர்ந்து பார்த்து நகர்கிறது.
தெருவில் புரளும் சருகுகளும்
நீரற்ற பாட்டில்களும்
நாய்க்குட்டியுடன் நடக்கின்றன.
தன் மிருதுவான
உடலால் சருகுகளை உரசிக்கொண்டே
உரையாடிச்செல்கிறது.
வினோத ஒலி எழுப்பியபடி
பாட்டில்கள் புரள்கின்றன.
யாருமற்ற தெருவில்
பாடலொன்றை பாடியபடி
ஓடி வருகிறாள் சிறுமியொருத்தி.
நாய்க்குட்டியும் சருகுகளும்
அவளுடன் துள்ளி ஓடுகின்றன.
நீண்டு செல்லும் இரவுத்தெரு
நாய்க்குட்டிகளால் நிரம்பத்துவங்குகிறது.

கனாக்கால ஜூலி


தன்னுடலெங்கும் செடிகள் முளைத்து
அதில் ஒரே ஒரு
நீலநிற மலர் மலர்ந்திருப்பதை நேற்றைய
கனவில் காண்கிறாள் ஜூலி.
நடுநிசியில் பயந்து எழுந்தவளின்
படுக்கை நீலநிறமாக
மாறியிருக்கிறது.
தன் அருகே உறங்கும் தங்கையை
அணைத்துக்கொள்கிறாள்.
உடலெங்கும் செடிகளுடன் புரளும்
தங்கை 
ஜூலியின் உடலை மலைப்பாம்பை
போல் சுற்றி இறுக்குகிறாள்.
செடிகள் அறையெங்கும் வளர்ந்து
நிறைக்கின்றன.
நீல நிற மலரை சுற்றுகிறது
சர்ப்பம்.
ஜூலியும் அவளது தங்கையும்
விடியலில் அறையை விட்டு வெளியேறுகிறார்கள்
நாக கன்னிகளாக
மலரொன்றை சுவைத்தபடி.
திடுக்கிட்டு எழுகிறேன் அறையெங்கும்
கனவுகள்,சர்ப்பங்கள்,
ஜூலிகள்..
ஜூலிகள்..

மெளன இசையில்
மெளனிக்கும் பொழுதுகளிலெல்லாம்
இசையால் நிரப்பப்படுகிறேன்.
மரம் நீங்கும் இலை
மெதுவாய் அசைந்தசைந்து கீழ் இறங்குகிறது.
பரந்து விரிந்த பூமியின் கரங்களில்
தன்னை ஒப்புக்கொடுக்கிறது.
இசையிலிருந்து எழும் மெளனத்தில்
இலையாகி காற்றில் மிதக்கிறேன்.
பிரபஞ்சத்தின் எங்கோ ஓர் மூலையில்
யாரோ ஒருவன் ஆற்றில் வலை வீசுகிறான்.
சிறுமியொருத்தி தன் ஆட்டுக்குட்டிக்கு
முத்தம் தருகிறாள்.
வெகுதொலைவில் ஆடைகள் காற்றிலாட
தளர்ந்த பாதங்களுடன் கடற்கரையில்
நடக்கிறான் கிழவனொருவன்.
குளிர்கால இருளில்
ஒரு மெழுகுவர்த்திரி தனியே எரிந்துகொண்டிருக்கிறது.
மெளனிக்கும் பொழுதுகளில்
பிரபஞ்சம் எனும் இசையால்
நிரம்பி நிரம்பி வழிகிறதென்
யாக்கை.

-நிலாரசிகன்.

Tuesday, May 22, 2012

செஞ்சி புகைப்படங்கள்

http://www.flickr.com/photos/26613290@N03/

Sunday, May 06, 2012

Nilaraseegan Clicks

http://www.flickr.com/photos/26613290@N03/

Thursday, May 03, 2012

சுஜாதா விருது - 2012 புகைப்படங்கள்



Wednesday, May 02, 2012

நண்பர்கள் அனைவரும் வருக!


Sunday, April 29, 2012

நிலாரசிகன் புகைப்படங்கள் - 1