Thursday, December 01, 2011

அம்ருதா இதழில் வெளியான கவிதைகள்

1.உனக்கும் எனக்குமான யுத்தத்தின் பெயர் இதழ் முத்தம்

மெளனம் உருகி படர்ந்திருக்கும்
மலை உச்சியில் நாம் அமர்ந்திருக்கிறோம்.
என் அணைப்பின் தகதகப்பில்
அடர்பச்சை மரக்காடுகளை
பார்வையின் வழி சென்றடைகிறாய்.
மெல்ல உன் வதனம் திருப்பி
இதழ்களில் முத்தமிடுகிறேன்.
வனம் சில்லிட்டு சிதற சிதற
நம்மிடையே வளர்கின்றன
ஓராயிரம் வேர்களற்ற விருட்சங்கள்.
இதழ்களிலிருந்து வெளியேறும்
முத்தப்பறவைகளிலொன்று உன்னை
அள்ளிச் செல்கிறது.
இதழ்களிலிருந்து வெளியேறிய
கருப்பு சர்ப்பம் என்னை தின்று பசியாறுகிறது.
நம் தடயங்களற்ற மலையின் உச்சி
இப்பொழுதும் மெளனித்து கிடக்கிறது.

2.வனத்தின் நடுவில் நடனமிடும் முத்தங்கள்
சிறகுகள் விரித்திருக்கும்
வண்ணத்துப்பூச்சியை வருடுகிறது
சுவை உணரும் உறுப்பொன்று.
தீண்டலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க
சிறகுகளை அடித்துக்கொள்கிறது.
கற்குகையின் இருண்ட பள்ளத்தில்
இரண்டு வெப்பமீன்கள் எதிரெதிரே
நீந்துகின்றன.
கார்காலத்தின் முதல் துளி
கடலென விரிந்து விழுகிறது.
விழுகின்ற துளியினூடாக
இரண்டு மீன்களை கெளவிக்கொண்டு
பறக்கிறது மீன்கொத்தி.
குகையின் இருளடர்ந்த பள்ளத்தில்
மீனுருவில் ஆழ்ந்து உறங்குகிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி.

-நிலாரசிகன்.

4 comments:

said...

அருமை!

வாழ்த்துக்கள்

said...

இரண்டுமே மிக அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் நண்பா. :) :)

said...

yenakku puriyala...

said...

இரண்டும் காதலை பொழியும் வரிகள் ..
வாழ்த்துகள் ///