Sunday, December 25, 2011

துத்திப்பூக்களும் கோணங்கியும்

துத்திப்பூக்களின் நடுவே ஓர் உரையாடல்

இருநாட்களுக்கு முன் கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன். எழுத்தாளர் கோணங்கி,உதயசங்கர் மற்றும் கவிஞர்.தேவதச்சன் ஆகியோரை சந்தித்தேன்.  முதலாவதாக கோவில்பட்டி சென்றவுடன் கோணங்கி வீட்டிற்கு சென்றேன். அவரது அப்பாவிடம்(எழுத்தாளர்.சண்முகம்) பேசிவிட்டு மாடிக்கு அழைத்துச்சென்றார். அறையெங்கும் நிறைந்திருக்கும் புத்தகங்களின் நடுவே ஜன்னலோர இருக்கையில் தன் அடுத்த நாவலுக்கான எழுத்துப்பணியில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் கோணங்கி. நாவலை பற்றி பேசத் துவங்கியவுடன் மிகுந்த உற்சாகமாகி நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.சிற்றிதழ்கள் பற்றியும் கல்குதிரையின் பழைய இதழ்களை பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு மாபெரும் எழுத்தாளர் என்கிற எவ்வித சுவடுமின்றி மிக எளிமையாக வசிப்பவர் அவர் என்பதாலயே அவர்மீதான அன்பும்,மதிப்பும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

மதிய உணவிற்கு பிறகு தேவதச்சனை அவரது வீட்டில் சந்தித்து "விளக்கு" விருது வாங்கியதற்காக வாழ்த்திவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு குமாரபுரம் ரயில் நிலையம்(கு.அழகிரிசாமியின் "குமாரபுரம் ஸ்டேசன்" இதுதான்) சென்றோம். கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கி.மி தொலைவில் இருக்கிறது குமாரபுரம்.ரயில் நிலையம் செல்லும் தார் ரோட்டின் இருபுறமும் சோளக்கதிர்கள் அடர்ந்திருந்தன. இடுப்புயர புதர்க்காட்டின் நடுவே பயணிப்பது அற்புதமானதொரு அனுபவமாக இருந்தது. "17ம் நூற்றாண்டிற்குள் பயணிப்பது போலிருக்கிறது" என்றார் தேவதச்சன். ரயில் நிலையத்தை சுற்றிலும் படர்ந்திருக்கும் பசுமை மனதை கொள்ளை கொண்டது. வழியெங்கும் துத்திப்பூக்களும்,ஆவாரம்பூக்களும் நிறைந்து கிடந்தன. புதர்க்குருவிகள் காற்றில் அலைந்துகொண்டிருந்தன.

குமாரபுரம் ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக இருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். அவருடன் தேநீர் அருந்திக்கொண்டே ஓர் உரையாடல் ஆரம்பமானது. தற்கால கவிதை,கு.அழகிரிசாமி,சிற்றிதழ்கள்,தகவல் தொழில்நுட்பத்தின் சாதக/பாதகங்கள்,இன்றைய இளம் எழுத்தாளர்களின் தனித்துவ வெளிப்பாடு, இன்றைய இளம் கவிஞர்களின் தனிக்குரல்,டெம்ப்ளேட் ஆளுமைகள் என்று விரிவானதொரு உரையாடலாக அது நீண்டது.கோணங்கியின் எழுத்தை பின்பற்றி எழுதும் இன்றைய எழுத்தாளர்களை பற்றியும் பேசினோம்.
உதயசங்கரின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு பாரதி புத்தகாலயம் வெளியீடாக இந்த புத்தக கண்காட்சிக்கு வருகிறது.
தேவதச்சனின் கவிதைகள் குறித்தான உரையாடலும் கருத்துக்களும் மிகவும் முக்கியமானவை. அவர் பேச பேச பல்வேறு திறப்புகள் மனதில் தோன்றியபடியே இருந்தன. கவிதையியல் குறித்தான கட்டுரைகளை அவர் எழுதவேண்டும் என்பது என் பேராவல். மூன்று மணிநேர உரையாடல் முடியும் தருவாயில் வந்து நின்றது ரயில். அரவமற்ற ரயில்நிலையத்தில் ரயிலை ரசிப்பதை விட அற்புதமானது எது?
மிகச்சிறந்த உரையாடல் மிகச்சிறந்த புலத்தில் நிகழ்ந்தேற காரணமாயிருந்த கோணங்கி அண்ணனுக்கு என் நன்றி.

இன்னும் வெகு நாட்களுக்கு மனதெங்கும் வியாபித்திருக்கும் இச்சந்திப்பு.

-நிலாரசிகன்.

2 comments:

Anonymous said...

உங்களுடனும் இயற்கையுடனும் நானும் சேர்ந்து பயணித்தேன்.
சுவாரஸ்யமான பதிவு.

said...

கவித்துவமான வார்த்தைகள்
வாழ்த்துக்கள்