Sunday, December 11, 2011

எக்ஸைல் - ஒரு வாசிப்பனுபவ பகிர்வு

நாவலாசிரியரின் பெயரை சொல்லி "அவர்" நாவல் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று இலக்கியம் பேசும் நண்பர்களிடம் சொன்னால் அவர் எழுதுவது நாவலே இல்லை என்பார்கள். அல்லது சுயபுலம்பலை தவிர அவருக்கு என்ன தெரியும் என்பார்கள். முதல் அத்தியாயத்தில் கதாபாத்திரங்களின் வர்ணனையும் அதன் பிறகான அத்தியாயங்களில் கதையின் மையத்தையும் நோக்கி நகரும் நாவல்களை வாசித்தே பழக்கப்பட்டுவிட்ட யாருக்கும் எக்ஸைல் ஒரு மாற்று அமிர்தம்.
எந்தவொரு 435 பக்க நாவலையும் இரண்டு நாட்களில் அதுவும் அலுவலகத்தில் கிடைக்கும் இடைவெளிகளில் நான் வாசித்ததில்லை. சந்தேகமின்றி  தன் மாஸ்டர் பீஸாக நாவலாசிரியர் கருதும் "0 டிகிரி"யை எக்ஸைல் தாண்டிவிட்டதென்று மார்தட்டலாம். அல்லது தேகத்தில் தொலைந்த "ஏதோவொன்றை"  இந்நாவலில் கண்டெடுத்ததாகவும் எண்ணலாம்.

அப்படி என்னதான் இருக்கிறது இந்நாவலில்?  எது நாவல் எனும் கேள்வியை புறந் தள்ளிவிட்டு  எக்ஸைலுக்குள் நுழைந்தால் வாசிப்பு முடிந்து வெளியேறும் கணம் சர்வ நிச்சயமாக உணரலாம் எக்ஸைலின் தனித்தன்மையை(Uniqueness). வாசிக்க ஆரம்பித்து சில மணிநேரங்கள் கழிந்துதான் கவனித்தேன் நானிருப்பது 160வது பக்கத்திலென்று. வாசகனை தன் எழுத்தின் வழியே 'சலிப்பின்றி' பயணிக்க செய்வதிலாகட்டும் உலக இலக்கிய ஆளுமைகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதிலாகட்டும் சாரு ஜெயித்திருக்கிறார். காமத்திலிருந்து காயகல்பம் வரை பல விஷயங்களை கடந்து செல்லும் நாவலில் உதயா,அஞ்சலி,கொக்கரக்கோ(Excellent characterization) மற்றும் சிவா முக்கிய கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.அஞ்சலியின் கொடூர பால்யம் பற்றிய விவரிப்பு வாசகனுக்குள்  வலியை ஏற்படுத்தும் தருணங்களில் ,"சித்தன்" சிவாவும் அவ்வப்போது வந்து "சொய்ங்"கென்று அசத்தும் கொக்கரக்கோவும் வாசகனை ரசிக்க வைக்கிறார்கள். நாகூரின் தெருக்கள்,தாஜ்ஜியர் கஃபே,பிரான்ஸின் சாலைகள்,சித்தர்பாடல்கள்,சமையல் குறிப்புகள்,காதல்,துரோகம்,காமம்,பெண்களில் விதவிதமான ஆடைகள்,Current affairs,"அந்த" chat பிரச்சினை,நித்தி,கொக்கரக்கோவின் 'பாடை', சுதாகருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நாய்(நாய்கள் மீது அதிக பிரியம் உரிய நாவலாசிரியர் எதற்காக நாயை சுதாகர் எனும் கதாப்பாத்திரம் மூலமாக கேவலப்படுத்த வேண்டும்?),விதவிதமான வித்தியாசமான க்ளைமேக்ஸ்,ஜி.ஸ்பாட், பக்கிரிசாமியின் ஆவி,சபரிமலை பயணம்,ராயர் காஃபி,பகவதி பாலு,நாவலெங்கும் விரவிக்கிடக்கும் பிரஞ்சு வார்த்தைகள்,சொக்குப்பொடி என்று இந்நாவல் பரந்து விரிந்து பல திசைகளில்,பல கிளைகளில் பயணிக்கிறது. அதிக வாசகனுபவம் இல்லாத முதல் வாசகர்கள் இந்நாவலை படித்துவிட்டால் நாவலாசிரியரின் மற்ற நூல்களின் விற்பனை அதிகரிக்கும்.

இவ்வளவு இருக்கும் நாவலில் குறையே இல்லையா? குறையில்லாத படைப்பேது? கீழ் வரும் விடயங்கள் என் பார்வையில் குறையாக அல்லது நாவலின் அசுர வேகத்தை தொய்வாக்குபவையாக தோன்றுகின்றன.


  • பிச்சாவர கார்னிவலுக்கான மிகப்பெரிய பட்டியல்
  • ஒரு நாயகி, அவளுக்கு பல பிரச்சினைகள்,கண்ணீர்,அடிஉதை மற்றும் சுதாகர் நாய் எனும் வில்லன் - 0 டிகிரியின் சில பக்கங்களை நினைவூட்டுகிறது
  • பதினெட்டு படிகளை பற்றிய மிக நீ....ள விவரணைகள்
  • அதீதமான பிரஞ்சு வார்த்தைகள்
  • ஸாரோ,பப்பு(இன்னும் எத்தனை முறை எழுதுவார்?)
  • நாகூரின் தெருப்பட்டியல்
அதிகம் ரசிக்க வைத்தவை:

  • கொக்கரக்கோவின் பால்யமும் குறும்பும்
  • உதயா,அஞ்சலியின் உரையாடல்கள்/கடிதங்கள்
  • பக்கிரிசாமியின் பக்கங்கள்
  • அஞ்சலியின் பிரசவத்தின்போது நடுச்சாமத்தில் குளிரை தாங்க முடியாமல் போர்வையை எடுக்க துடிக்கும் வரிகள்
  • நளினியின் பிரசவத்தின்போது உதயாவின் தியாகங்கள்(வேறெந்த வார்த்தையும் பொருந்தாது)

சாருவை "செக்ஸ் எழுத்தாளர்" என்று மட்டுமே எண்ணி நாவலுக்குள் நுழைபவர்களுக்கு எக்ஸைல் வேறுவிதமான நாவல் என்பது புரியவரும்.
மொத்தத்தில் எக்ஸைல் ஒரு மிகச்சிறந்த வாசிப்பனுபவம். An unique reading experience.

-நிலாரசிகன்.

4 comments:

said...

மகிழ்ச்சி

said...

சூப்பரு பாஸ்...

உங்களுக்கு பிடிச்ச க்ளைமேக்ஸ் எது?

said...

Nice one. looks like a frank opinion.

said...

உங்கள் வாசிப்பு பகிர்வினால் நாவலை படிக்க மிக மிக ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் நண்பா :)