Tuesday, October 26, 2010

சித்திரப்பெண்




மயிலிறகுகொண்டு
அழகி ஒருத்தியின்
உருவம் தீட்டினாய்.
பாதங்களில் தொடங்கி
நெற்றிமுடித்து
விசித்திரம் காட்டினாய்.
பின்பு
அவள் உதடுகளில்
புன்னகை சேர்த்து
புள்ளி வைத்தாய்.
அது ஒரு
முடிவின் தொடக்கம்
என்றும் விளக்கமளித்தாய்.
உன் மௌன விசும்பல்
யாருடைய செவிகளையும்
தீண்டிடாத தருணத்தில்
அவள் இடதுதொடையில்
உனது கையொப்பமிட்டு
பரிசளித்தாய்.
அவள் இப்பொழுது
பேரழகியாக
மாறத்தொடங்கியிருக்கிறாள்.
-நிலாரசிகன்.

Sunday, October 24, 2010

நதியடியில் விரைந்தோடும் கூழாங்கற்கள்




நதியடியில் விரைந்தோடும் கூலாங்கற்கள்

1.

தனித்திருக்கும் வெளியில்
உருக்குலைந்து கிடக்கிறது
ஓர் ஓவியம்.
மின்னல்களால் சூழ்ந்த
மாயப்பெண்ணொருத்தி அகோரமாய்
சிரிக்கிறாள்.
உடைந்த ஓவியத்துகள்கள்
வெளி நிரப்புகின்றன.
மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு
மெல்ல துகள் வழி
வெளி வருகின்றன
பறவைகள் சில.
இறகுகளால் நிறைந்திருக்கும்
இருளறையில்
சன்னமாய் கேட்கிறது
ஊமையொருத்தியின்
விசும்பல்சப்தம்.

2,

ஈரம் படர்ந்த அதிகாலையொன்றில்
நிகழ்ந்தது அந்நிகழ்வு.
அற்புதமானதொரு பாடலை இசைத்தபடி
சென்றார்கள் சிலர்.
நதியடியில் விரைந்தோடும்
கூழாங்கற்களின் கதறல்
எவரும் அறியவில்லை.
நீண்டநாட்கள் தேக்கி வைத்த
முத்தமொன்று உலர்ந்து வீழ்கிறது.
வீழ்ந்த முத்தம் கண்ணீருடன்
பூமிக்குள்
புதையுண்ட தருணம்
வேறோர் உலகில்
முலைகள் விம்ம சிரித்துக்கொண்டிருந்தாள்
அவள்.
ஓர்  உறவின் பிரிதல்
இப்படித்தான் நிகழ்ந்தது.

3.

இருள் நிறைந்த ஆழ் குழிக்குள்
வீழ்ந்து மரித்தன வார்த்தைகள்.
சிறிது நேரத்தில் வார்த்தைகளற்ற
அறையில் தனித்திருந்தேன்.
உயிர்கூசும்
மெளனத்தின் நர்த்தனம்
நடுநிசி வரை தொடர்ந்தன.
ஒரு பொழுதில்
களைத்து வீழ்ந்தது மெளனம்.
ஆழ்குழிக்குள்ளிருந்து ஒவ்வோர்
வார்த்தையாய் வெளிக்குதித்து
எனை தின்னத்துவங்கின.
கொடுங்கனவிலிருந்து மீண்டு
மெளனத்திற்குள் புதைகிறதென்
உடல்.
அங்கே,
கூர்வாளுடன் காத்திருக்கின்றன
ஓராயிரம் வார்த்தைகள்.

-நிலாரசிகன்.


<உயிரோசையில் வெளியான கவிதைகள்>

Tuesday, October 19, 2010

கடல் குடிக்கும் பறவைகள்





1.
கடல் குடிக்கும் பறவைகள்
புதர் மண்டிய ஆரஞ்சு தோட்டத்தை
கடக்கின்றன.
பறந்துகொண்டே புணர்கின்றன
உதிர நிறத்தாலான வண்ணத்துப்பூச்சிகள்.
கற்பாறைகளில் நடுவே
நெளிந்துகொண்டிருக்கும் சாலையில்
நிழல் உதிர்த்து பறக்கிறாள்
ஒரு தேவதை.
முள் தைத்த வலியுடன்
நொண்டிச்செல்கிறான் சிறுவனொருவன்,
கனத்த மெளனத்தில் கரைந்தழுதபடி
இரவுக்குள்
நுழைகிறது இவ்வோவியம்

2.
தோட்டத்தில் சிறு நாற்காலியில்
அமர்ந்திருக்கும் அவளழகை
வியப்புடன் ரசித்தபடி நடனமாடுகிறது
மழை.
அற்புதங்களால் உருப்பெற்ற
அவளது விரல்களில் ஒவ்வோர்
துளிகளாய் விழுந்து கவிதையாகின்றன.
சிறகுகள் முளைக்கப்பெற்ற
மழை
இப்பொழுது பட்டாம்பூச்சியாகியிருந்தது.
சின்னஞ்சிறு உலகில் ஓயாத
மழையுடன் நீண்டதொரு உரையாடலை
துவங்குகிறாள்
நட்சத்திரா.


3.

மூன்று முறை என்னை நான்
வரைந்து பார்த்தேன்.
முதல் முறை இருள் கவிந்திருக்கும்
அறையொன்றினுள்ளிருந்தும்
இரண்டாம் முறை நிலவொளியிலும்
மூன்றாம் முறை
முலைகளின் வெம்மையில்
சுகித்திருந்தபோதும்
வரைந்து பார்த்தேன்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு உருவம் எனதாகியிருந்தது.
மகிழ்வுக்கும் துயருக்கும்
இடையே மிதந்துகொண்டிருக்கும்
என் பிம்பத்தினை காலம்
தன் இடக்கையால்
வரைந்துகொண்டிருக்கிறது.

4.

இளம்பனிக்காலமொன்றில்  சந்தித்துக்கொண்டன
நிறமற்ற இரு பட்சிகள்.
இருத்தல் மீதான மோதல்
உக்கிரமான தருணத்தில் அவை
சூரியனை தழுவின.
வெளிச்சம் புணர்ந்த களைப்பில்
வீழ்ந்து மரித்தன.
கொடுங்கனவின் உள்ளிருந்து
துளிர்விடுகிறது
ஓர் இளமஞ்சள் இறகு.

5.
உயரம் சென்று திரும்பும் தருணத்தில்
அறுபடும் ஊஞ்சல் எனலாம்.
வெகு நாட்கள் கழித்து தட்டப்படும்
கதவின் ஓசை எனலாம்.
மரிக்கும் முன்னர் சிரித்த
சிசுவெனலாம்.
இரக்கமின்றி எனை
புசிக்கும் இந்த
பெளர்ணமி இரவை
துயரத்தின் உச்சம்
என்றும் உரைக்கலாம்.

-நிலாரசிகன்.




Thursday, October 07, 2010

உன் மார்பில் பூக்கள் மலர்ந்திருந்தன




1.
ஓர் உன்னதமான நிகழ்வின்
முடிவில் அறையெங்கும் மணம்
நிரப்பியபடி படுத்திருந்தாய்.
கனவில் தோன்றும் கவிதைவரியின்
பூரிப்புடன் கண்கள் மூடி
அமர்ந்திருந்தேன்.
காலமடியில் இசை
வழிந்துகொண்டிருந்தது.
செவி வழி உயிருக்குள்
ஊடுருவியது உனதன்பின்
அணுக்கள்.
மார்பு தாங்கும் வனப்பூக்களுடன்
அறையெங்கும் பறந்து சிலிர்த்தாய்.
இசைக்குள்ளிருந்து இதயத்திற்குள்
நுழைய துவங்கினேன்
நான்.

2,

கடற்கரையொன்றில்தான் நமக்கான
வாழ்வை தீர்மானித்து பிரிந்தோம்.
மழைநாளில்தான் யாரோ ஒருவருடன்
நம்
திருமணம் நிகழ்ந்தேறியது.
வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனத்தின்
நடுவே நம் இல்லம் அமையப்பெற்றது.
இப்போது,
எதற்கென்றே அறியாமல்
அழுகின்ற குழந்தையாய்
அழுதுகொண்டிருக்கிறோம்
அவரவர் வீட்டின் இருட்டறையில்
மனதெங்கும் வியாபித்திருக்கும்
நிறைவேறாக் காதலுடன்.

3.
தவிர்த்தலையும் ரசனையுடன்
என்னில் தெளிக்கிறாய்.
உன் விலகல் ஒரு நட்சத்திரம்
போல் மிளிர்கிறது.
வெறுமை நிறைந்த சொற்களை
உதிர்த்தபடி செல்கிறதுன்
இதழ்கள்.
எவ்வித உணர்வுகளுமின்றி
புன்னகைக்க கற்றுக்கொண்டாய்.
மழை சத்தமின்றி பெய்து
ஓய்கிறது.
கண்ணீர் உடைந்த
நிலாத்துளிகளாய் உருள்கிறது.
என்றேனும்
ஏகாந்தத்தின் செளந்தர்யத்தில்
நீ
லயித்திருக்கும் தருணத்தில்
காற்றில் மிதந்து வரக்கூடும்
சிறகறுந்த கனவொன்றின்
குருதி தோய்ந்த இறகுகள் சில.

-நிலாரசிகன்.

Tuesday, October 05, 2010

லஷ்மண் - ஆஸ்திரேலியர்களின் கொடுங்கனவு




ப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களது முதல் கவலை லஷ்மணை எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான். உலக அணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்கள் கூட பேட்டிங் செய்வது லஷ்மண் எனில் சற்றே தயங்குவார்கள். காரணம்,2001ல் ஆஸியின் தலையெழுத்தையே  மாற்றி அமைத்த லஷ்மணின் 281 ரன்கள். நிச்சயக்கப்பட்ட தோல்வியிலிருந்த அப்போட்டியில் லஷ்மண் விஸ்வரூபமெடுத்து அற்புதமாக ஆடியதில் வெற்றியை தட்டிப்பறித்தது இந்தியா.
 
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான ஸ்டீவ் வா(க்)கிற்கு கூட லஷ்மண் ஆட வந்துவிட்டால் தலைசுற்றும். மற்ற அணியியுடனான போட்டிகளில் சாதுவாக விளையாடும் லஷ்மண் ஆஸியுடனான போட்டிகளில் தன்னுடைய 200% ஆட்டத்தை வெளிப்படுத்துவார். மறுபக்கம் வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் நங்கூரமாக நிற்பார்.

இன்று மொகாலியில் இந்தியா பெற்றிருக்கும் வெற்றிக்கு சச்சின் அடித்த 98 ரன்களும்,இசாந்த்சர்மாவின் மிக முக்கிய 31 ரன்களும் 3 விக்கெட்டுகளும்,ஜாகீர் கானின் 8 விக்கெட்டுகளும் முக்கிய காரணியாக இருப்பினும் தாளாத முதுகு வலியுடன் வலிநிவாரண மருந்தை உட்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி லஷ்மண் அடித்த 73 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் சென்னையில் அடித்த 136 அதிஅற்புத ரன்களுடன் இந்த 73 ரன்களை ஒப்பிட்டு சொல்லமுடியும்.

இந்திய அணியின் ஜென்டில்மேன்களாக கும்ளே,டிராவிட்,சச்சின் போன்றவர்களை குறிப்பிடலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தலைகாட்டும் லஷ்மணும் ஒரு ஜென் டில்மேன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மைதானத்திற்குள் வரும் முன் இசை கேட்டபடி அமர்ந்திருப்பார் லஷ்மண். மிக அமைதியான லஷ்மணை அணியில் எல்லோருக்கும் பிடிக்கும். இன்றைய போட்டியில் ஒரு ரன் எடுக்க வேண்டிய தருணமொன்றில் ஓஜா ரன் ஏதும் எடுக்க வில்லை என்பதற்காக அவரை சத்தமிட்டு திட்டினார் லஷ்மண். காரணம் இந்த போட்டியை சொற்ப ரன்களில் இழக்க அவர் தயாரில்லை. திட்டியபோதும் சில நிமிடத்தில் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தோள்களில் தட்டிக்கொடுத்தார். அதுதான் லஷ்மண்.

Wrist shot,pull shot போன்றவற்றை எப்படி விளையாட வேண்டும் என்பதை லஷ்மணின் ஆட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் தெரிந்துகொள்ளலாம். சேவாக் சச்சின் போன்று லஷ்மண் அதிரடியான ஆட்டக்காரர் இல்லை.ஆனால் அவர்கள் இருவரிடமும் இல்லாத "ஸ்டைல்" லஷ்மணின் ஆட்டத்தில் காண முடியும். தலைசிறந்த இசைக்கலைஞனொருவன் இரவின் ஏகாந்தத்தில் வயலின் வாசிப்பதற்கு ஒப்பானது லஷ்மணின் ஆட்டத்தின் அழகு.

லஷ்மணின் 16 சதங்களில் ஆறு சதம் ஆஸிக்கு எதிரானது. அவர் பார்மில் இல்லாத போதுகூட ஆஸியுடன் டெஸ்ட் தொடர் இருக்குமெனில் உடனே தேர்வாளர்கள் லஷ்மணை தேடி ஓடுவார்கள். அவர்களுக்கு தெரியும் லஷ்மண் அணியில் இருந்தாலே போதும் ஆஸ்திரேலிய அணியினரின் மன உறுதியை கலைத்துவிடலாமென்று. உலகமெங்கும் வெற்றிகளை குவித்த ஆஸி கேப்டன் ரிக்கிபாண்டிங் இதுவரை இந்திய மண்ணில் ஒரு வெற்றியை கூட ருசித்ததில்லை. இன்று நடைபெற்ற போட்டியிலாவது வென்றுவிடலாமென்று கனவில் மூழ்கியிருந்திருப்பார். அவரது கனவின் குறுக்கே வழமைபோலவே பேருருவம் கொண்டு நின்றவர் லஷ்மண். சில வீரர்கள் ஓய்வு பெறும்பொழுது சில அணிகள் பெருமூச்செறியும். சனத் ஜெயசூர்யா ஓய்வை அறிவித்தபோது இந்திய அணியினர் நிம்மதி பெருமூச்சுடன் உறங்கியிருப்பார்கள். வார்னே ஓய்வு பெற்றபோது இங்கிலாந்து அணியினர் நிம்மதி அடைந்திருப்பார்கள். அதுபோல், லஷ்மண் என்கிற ரன் எந்திரன் ஓய்வு பெறும்போதுதான் ஆஸ்திரேலிய அணியினரும்,ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள். கிரிக்கெட் சரித்திரத்தில் லஷ்மண் என்கிற நட்சத்திரத்தின் கொல்கத்தா ஆட்டமும் மொகாலி ஆட்டமும் எப்போதும் மினுமினுத்துக்கொண்டே இருக்கும்.

லஷ்மண் பற்றி ப்ரெட் லீயிடம் ஸ்டீவ் வா சொன்னதாக உலவும் ஒரு வாசகத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்:

"If you get Dravid,Great.If you get Sachin,Brilliant.But if you get Laxman,its a miracle"

-நிலாரசிகன்.

Saturday, October 02, 2010

வலிகளால் நிரம்பிய இரவொன்றில்...



இந்த நிமிடம் நான் என்னை இழந்துவிட்டேன். என் கைகள் நடுங்குகின்றன. ஒரு ஆத்மார்த்தமான நேசிப்பை எதிர்பார்த்து உடைந்தது என் இதயம்.
அறையெங்கும் சிதறிக்கிடக்கின்றன என் இதயச்சில்லுகள். குருதியென கொப்புளிக்கிறது கண்ணீர். துர்தேவதைகளின் சாபத்தின் நிகழ்வுகளா இவை?
கற்களால் நீங்கள் என்னை அடிக்கலாம். கனவுகளின் மீதேறி மிதிக்கலாம். கடமையொன்று முடிந்ததென நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்த தருணத்தில் துவங்கிற்று என் கனவுகளின் மரணம். முறிந்து விழுகின்றன என் கிளைகள். நிமிடத்தில் செந்நிற பாலையானது என்னுலகம்.

உணர்ச்சிகள் மடிந்துவிட்ட இவ்விரவில் உணர்வுகளின் தாண்டவத்தில் சிக்கியிருக்கிறேன். கனத்த மனதை வட்டமிடுகிறது மடிக்கணினி வழியே உதிரும் இசை. சோகங்களால் நிரம்பி வழிகிறது என் ப்ரியங்கள். தனிமைச்சுவரின் நடுவில் சாத்தான்களுடன் உரையாடுகிறேன். ரசனைகள் ஒவ்வொன்றாய் விலகிச்செல்வதை வலியுடன் பார்த்து துடிக்கிறது விழிகள். முகம் புதைத்து அழ மடியின்றி வீதியில் வீழ்ந்து மரிக்கின்றன என் கவிதைகள்.

ஏதேதோ எண்ணங்களால் வளர்ந்தேன். அவை இப்போது கானலாகி கரைந்தன. இரவு ஏன் இத்தனை கொடூரமானதாய் இருக்கிறது? இரவின் பற்கள் எப்போதும் என் கழுத்தில் பதிகின்றன. எழுதிய கவிதைகள் கேட்பாரற்று மூலையில் ஒடுங்கியிருக்கின்றன. மென்கவிதைகளின் கதறல் சத்தம் என் செவிகளுக்கு மட்டும் ஒலித்துக்கொண்டே  இருக்கிறது. முள்ளில் விழுந்த பறவையாய் கிழிகிறது இதயம்.

எதிர்பார்த்தல் தவறென்று புத்திக்கு தெரிந்தும் உள்ளங்கை அளவுக்குள் அடங்கும் பெரு இதயம் எதிர்பார்த்தலால்தான் துடிக்கிறது. பின் துவழ்கிறது. இனி நிறைவேறப்போவதில்லை எனத்தெரிந்தும் துடிதுடிக்கிறது. நான் இப்போது நானிலிருந்து வெளியேறுகிறேன்.

பூக்களால் நிறைந்திருக்கும் தனியுலகில் எனக்கான பாடலை சத்தமிட்டு பாடுகிறேன். என் கவிதைகள் ஒவ்வொன்றும் உருப்பெற்று ஆறடி பூக்களாய் தலையாட்டுகின்றன.கண்சிமிட்டுகின்றன. தழுவிக்கொள் என்கின்றன. பட்டாம்பூச்சிகளின் மடியில் சிறுவனாகிப்போகிறேன். முத்தங்களால் எனை தின்னத்துவங்குகிறாள் தேவதையொருத்தி. முகமேந்தி விழிக்குள் வீழ்கிறாள். மீண்டும் நானுக்குள் நுழைகிறேன்.

வலியை வார்த்தைப்படுத்தி தப்பிக்க நினைத்து தோற்கிறேன். உணர்தலின் வலியை மொழிக்குள் மறைக்க முடியாமல் துடிக்கிறேன். வெடித்து ஓய்ந்த பின்னும் அனலால் சூழ்ந்திருக்கிறது கருநிற துளியொன்று. நான் என்பது புள்ளிகளின் மொத்தமா?  குளத்தில் சொல்லெறியும் ஒருத்தியை நானறிவேன். சொற்களால் வதைக்கும் வித்தை கற்றவளின் நிழல் குளத்தில் விழுகிறது. குளத்தில் வசிக்கும் ஒற்றை மீனின் மரணம் இப்படித்தான் நிகழ்ந்தது நண்பர்களே. நீங்கள் கவிதையின் மரணத்தை கண்டிருக்கிறீர்களா?

கல்லறையொன்றை உருவாக்குங்கள். இந்த எழுத்து முதல் செங்கலாகட்டும்.

-நிலாரசிகன்.

Tuesday, September 14, 2010

மொழிபெயர்ப்புக்கவிதைகள்




1.

அப்போது அவளது வயது
பதினேழு முடிய நான்கு மாதமிருந்தது.
செந்நிற உடலின் வனப்பை
அவள் கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள்.
துலிப் பூக்களால் நிரம்பிய
தோட்டத்தில் அவனை சந்தித்தாள்.
அவன்,
அவளது உடலை ஊடுருவும் பார்வையை
கொண்டிருந்தான்.
தேம்ஸ் நதிக்கரையில் அவனது
விரல் பற்றி நீண்ட தூரம் நடப்பதை போன்றொரு
கனவில் ஆழ்ந்தாள்.
இனி
அவள் உடலெங்கும் துலிப்
பூக்கள் மலரும்.
அவள் மலர்வாள்.

2.
ஜன்னல் வழியே
உள்நுழைந்தவன்
தன்னை சாத்தானின் பிள்ளை
என்றபோது இரவு கவியத்துவங்கியிருந்தது.
படுக்கை அறையின்
ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
என் கடவுளின் வெளியில்
கனவுகள் மரித்தன.
தொலைபேசியின் அலறலும்
பூனையின் கதறலும்
எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
கால்களில் நடுவிலிருந்து
அறையெங்கும் பரவிய
குருதியின் நிறம் கருமை நிறத்திலிருந்தது.
இப்போது அவன்,
மெல்ல வெளியேறிக்கொண்டிருக்கிறான்.

3.
இந்த வலியை யாரிடம்
பகிர்ந்துகொள்வது?
தினம் மாலை தன் பேரனுடன்
வீட்டைக்கடக்கும் கிழவன்
என் வலியை புரிந்துகொள்ளப்போவதில்லை.
சாலையோரம் நிற்கும்
இந்த மரங்களிடமும்
தொலைவில் பொழியும்
மழையிடமும் நான்
இந்த வலியை பகிர்ந்துகொள்ளக்கூடும்.
பின்னொருநாள்
காலம் தின்ற பின்
மழையாக பொழிந்து
மரமாக என் வலிகள் அனைத்தும்
மீண்டும் துளிர்விடக்கூடும்.
ஜூலி!
அப்பொழுதாவது அந்த மரங்களின்
நிழலில் நின்று நீருற்ற
நீ சம்மதிக்கவேண்டும்!

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: இந்த மூன்று கவிதைகளின் தலைப்பில் சிறு மாற்றம்... "மொழி பெயர்ப்புக் கவிதைகள்  வடிவிலான கவிதைகள்" என்பதே அது :)

Tuesday, September 07, 2010

நீங்கள் இறந்து போவீர்கள்



1.
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று சொல்லித்திரிபவனை
சந்தித்தேன்.
தான் காணும் மனிதர்களிடம்
அவன் உதிர்க்கும் மூன்று வார்த்தைகள்
அவை மட்டுமே.
குரூரத்தின் உச்சம் இவனென்றார்கள்.
ஒரு பன்றியை பார்ப்பதுபோல்
அவனை பார்த்து நகர்ந்தார்கள்
எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று முகம் நோக்கி சொல்பவனை
நீங்களும் காணக்கூடும்
வழியிலோ
அல்லது
கண்ணாடியிலோ.


2.மரணித்தல்

நேற்று மரணித்தார்
நண்பர் ஒருவர்.
நான்கு மரணத்தை
ருசித்து வீழ்கிறது அருவி.
கடல் கொண்ட உயிர்கள்
சில.
இறகு உதிர்த்து சாலையோரம்
உயிரற்று கிடக்கிறது
பறவையொன்று
யார் யாருக்கோ
அறியாத காரணங்களுடன்
மரணம் நிகழ்கிறது.
எதற்கிந்த கவிதை எழுதும்
வேலை என்றொரு
கேள்வி எழுப்பப்பட்டது.
இப்போது
காரணமுடன் மரணிக்கிறேன்
நான்.
-நிலாரசிகன்.

குறும்பட போட்டி அறிவிப்பு

இனிய இணைய உறவுகளுக்கு...

குறும்பட போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள்
இங்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம்.

வெற்றி பெற வாழ்த்துகள்.

Sunday, September 05, 2010

சிறுமிகள் நடமாடும் வனம்


 

1.சிறுமிகள் நடமாடும் வனம்


பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரை
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை.
எதற்கிந்த கனவென்றே
புரியாமல் கரைகிறது
இவ்விரவு.

2.எதிர்வினைகளால் நிரம்பியவள்

குளம் கடலாகும்.
கடல் துளியாகும்.
பறவை விலங்கினமாகும்.
விலங்கு பாம்பினமாகும்.
ழ் ல வாகும்.
காதலி தோழியாவாள்.
தோழி குரைக்கும் இனமாவாள்.
நீங்கள் நீயாகிப்போவீர்கள்.
நான் யாரோவாகிப்போவேன்.
அவள்,அவள் உலகம்.
இப்போது,
அவனும் நிரம்பிக்கிடக்கிறான்
மெளனத்தால்.
-நிலாரசிகன்.

Thursday, September 02, 2010

பூச்சரத்தில் கவிதை பூக்களை கோர்க்கும் சிறுவன்



பூச்சரம் தொடுக்க அழைத்த தோழி கீதாவிற்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நிலாரசிகன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால்
    பதிவில்  தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

உண்மையான பெயர் நிலாரசிகன் அல்ல. 2001ம் ஆண்டு இப்பெயரை தேர்வு செய்தேன். பெயர் வைக்க காரணம் நிலா. வான் நிலா மட்டுமே J


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
2004ல் நண்பன் ‘யோசிப்பவர்’ அறிமுகப்படுத்தியது வலைப்பதிவு. 2005லிருந்து எழுதிவருகிறேன். எழுத வந்த புதிதில் லக்கிலுக்,பாஸ்டன் பாலா,பினாத்தல் சுரேஷ்,பத்ரி,யோசிப்பவர்,பாலபாரதி,டோண்டு போன்றவர்களது வலைப்பதிவுகளை ஆர்வமுடன் வாசித்திருக்கிறேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம்
   செய்தீர்கள்?
   
 என் வலைப்பதிவின் முதல் வாசகர்கள் என்னுடைய nilaraseegankavithaigal யாகூ குழுமத்தின் உறுப்பினர்கள்தான். இன்றைய விவரப்படி மொத்தம் 5211 உறுப்பினர்கள். இவர்களே வலைப்பதிவு செடியாக இருக்கும் தருணத்தில் நீருற்றியவர்கள். அதன் பிறகு கிடைத்த நட்புச்சொந்தங்கள் ஏராளம். பிரபலமடைய வேறெதுவும் செய்ததாக நினைவில்லை.


5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து
    கொண்டதுண்டா?   ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?
    இல்லை என்றால் ஏன்?
இல்லை. விருப்பமில்லை. வலைப்பதிவு என் படைப்புகளுக்கான தளம் மட்டுமே.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா?
   அல்லது பதிவுகள்  மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இரண்டும் அல்ல. மனதின் விளிம்புச்சுவரில் மோதும் கவிதை வரிகள் நிரந்தரமாக தங்குமிடம் என் வலைப்பதிவு.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்?
   அதில் எத்தனை தமிழ் வலைப்  பதிவு?

இரண்டு. இரண்டும் தமிழ். ஆங்கிலத்தில் ஒன்று ஆரம்பித்தேன் அதன் கடவுச்சொல் மறந்துவிட்டதால் நின்றுபோனது.


8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா?
   ஆமாம்  என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

ஆம். அதிக கோபம் கொண்டது ஒரு பதிவர் மீது.மிகச்சிறந்த கவிதைகளை எழுதிய பதிவர் அவர். முட்டாள்த்தனங்கள் ஆட்கொண்டதால் அந்த கவிதை வலைப்பூவை அழித்துப்போனவர்.அவருக்கு புனைப்பெயரும் வைத்து இணைய உலகையும் அறிமுகப்படுத்தியவன் என்கிற வகையில் அவர் மீது கடும் கோபம் இன்றுமுண்டு.
 யாரந்த பதிவர் என்கிற கேள்விக்கு விடையளிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்?
   அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

மாதவன். அத்தி பூக்கும் தருணம் மட்டுமே பாராட்டும் குணம் கொண்டவன்.நண்பன்.

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய
     வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
கூற ஒன்றுமில்லை என் படைப்புகளை தவிர. அவை என் தளத்திற்கு வரும் அன்பர்களுடன் உரையாடட்டும்.
     பூச்சரத்தில்  மேலும்  வாசம் சேர்க்க நான் அழைப்பது நண்பன் விழியன்.

Monday, August 30, 2010

முடிவின் துவக்கப்புள்ளி.


 
பூவொன்றின் மரணத்திற்கான
கடைசி துளி கண்ணீரில்
நானொரு பாடல் எழுதுகிறேன்.
எவருக்கும் புரிந்துவிடாத அப்பாடலின்
வரிகள் செந்நீரில் எழுதுப்படுகின்றன.
காற்றின் காதுகளை அவை
தீண்டும் பின்னிரவில்
சடலங்களை பிரசவிக்கும்
மேகத்துடன் ஆரம்பமாகிறது
ஓர் ஊமையின் உரையாடல்.
-நிலாரசிகன்.

Tuesday, August 03, 2010

நிறமற்ற மழை



1.
உதிர்ந்த முத்தங்களை பொறுக்கும்
நட்சத்திரா தன் கன்னத்தின் சுருக்கங்களை
வருடிக்கொடுக்கிறாள்.
சிதறிக்கிடக்கும் முத்தங்களின் நடுவே
காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை
வலியுடன் நோக்குகிறது அவளது கண்கள்.
தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்.
மெல்ல வலுக்கிறது
நிறமற்ற மழை.

2.
சிறுவனின் மணல்வீட்டை
அழித்துப்போனது அலை.
அவளது முதல் கோலத்தை
நனைத்துச் சிரித்தது மழை.
வேலியோர முள்ளில்
உடைபடுகிறது பலூன்காரனின்
வெண்ணிற பலூன்.
காரணம் அறியாமல்
அழுதுதீர்க்கிறார்கள்
அவர்கள்.
-நிலாரசிகன்.

Sunday, August 01, 2010

நண்பர்கள் தின வாழ்த்துகள்..





வெயிலின் உக்கிரத்தில் நிழல்
தந்து மறைந்தவர்களுக்கும்..
தோல்வியின் உச்சத்தில்
தோள் கொடுத்து உடன் நின்றவர்களுக்கும்..
ஜெயத்தில்  சுயம் வெளிப்படுத்தி
தகிக்கும் பாலையாய் மாறியவர்களுக்கும்..

கனவுகளில் கல்லெறிந்து காணாமல்
போனவர்களுக்கும்..
வாழ்நாள் நண்பன் என்றுரைத்து
வார்த்தை முடியும் முன்பே மறைந்தவர்களுக்கும்…
வீழ்ந்தபோது இது வீழ்தல் அல்ல
விதைத்தல் என்று புரியவைத்தவர்களுக்கும்..
சுயநலத்தின் உயிர்வடிவமாய்
விலகி பறந்தவர்களுக்கும்..
தமிழால் இணைந்து இதயம் நுழைந்து
தழைப்பவர்களுக்கும்..
கவிதைக்காக எப்போதும் நேசிக்கும்
நல்லிதயங்களுக்கும்...
-நிலாரசிகன்.