Wednesday, May 14, 2008

ஐ.பி.எல். அணிகள் - ஒரு பார்வை.



இரவு எட்டுமணிக்கெல்லாம் வீட்டுக்குள் அடைந்துவிடுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.
சாலையில் போக்குவரத்துகூட குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள்.
எட்டு மணிக்கு "கனாக்காணும் காலங்கள்" பார்த்த காலமெல்லாம் பறந்தோடிவிட்டது.

காரணம் - ஐ.பி.எல்!! (Indian Premier League)

தினம் தினம் திருவிழா போல் நடந்துகொண்டிருக்கும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள்
கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

மொத்தம் எட்டு அணிகள். 59 போட்டிகள். 44 நாட்கள்.

ஒவ்வொரு அணிகளை பற்றிய எனது பார்வையே இப்பதிவு.

ராயல் சேலன் ஜர்ஸ்:

ஏர்லைன்ஸ்/பீர் புகழ் விஜய் மல்லையாவின் அணி. $111 மில்லியன் செலவிட்டு இந்த அணியை வாங்கியதற்கு
இன்னும் சில விமானங்களை வாங்கியிருக்கலாம்.

இருபது ஓவர்கள் கொண்ட போட்டியில் அதிரடி வீரர்களை வாங்கியவர்கள் மத்தியில் "டெஸ்ட்" வீரர்களை
வாங்கி அடிவாங்கிகொண்ட அணி இது.

டிராவிட்,ஜாபர்,காலிஸ் போன்ற டெஸ்ட் வீரர்களை வைத்துக்கொண்டு இந்தப்போட்டியில் ஜெயிக்க நினைத்தது தவறு என்று மல்லையாவிற்கு தாமதமாக புரிந்திருக்கிறது.

இதன் CEO சாரு சர்மாவை நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த அணி விளையாடும் போட்டியை பார்ப்பதற்கு பதில் மெகாதொடரில் சிறிது நேரம் அழலாம்.

சிறந்த வீரர்: மார்க் பவுச்சர்
சிறந்த சொதப்பல்: காலிஸ்/திராவிட்
சிறந்த புதுமுக வீரர் :Virat Kohli.


டெக்கான் சார்ஜர்ஸ:

மிகவும் பலமான அணி;பல அதிரடி ஆட்டக்காரர்களை கொண்ட அணி, என்றெல்லாம்
வர்ணிக்கப்பட்டு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி "டக் அவுட்" ஆன அணி இந்த டெக்கான் சார்ஜர்ஸ்.

"கில்லி" கில்கிறிஸ்ட், "Bang Bang" அப்ரிதி,"சிக்ஸர்" சைமண்ட்ஸ்,"மொட்டைபாஸ்" கிப்ஸ், "Very Very Special/Stylish" இலச்சுமணன், "இளம்புயல்" ரோஹித் சர்மா, நியுசிலாந்தின் "ஸ்டைரிஸ்", ஆர்.பி.சிங்,சமிந்தா வாஸ் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தும் டெக்கான் தோல்விகளை அதிகம் கண்டுள்ளது.

ஐ.பி.எல் வரலாற்றின் மிக வேகமாக சதமடித்த கில்லியாலும்(42 பந்தில்) இந்த அணியை கரைசேர்க்க இயலவில்லை. காரணம் என்னவென்று யோசித்துபார்த்தால் ஒவ்வொருவரும் தனித்தனியே சிறந்த வீரர்களாக இருந்தும் ஒரு குழுவாக சேர்ந்து ஜெயிக்க இவர்களால் முடியவில்லை.

அரை இறுதி போட்டிக்கு தேர்வாகும் கனவு கனவாகவே போய்விட்டது.

சிறந்த வீரர் : ரோகித் சர்மா.
சிறந்த சொதப்பல்: அப்ரிதி.
சிறந்தா புதுமுக வீரர் :ஓஜ்ஹா(Ojha)


மும்பை இந்தியன்ஸ்:

"தல"சச்சின் இல்லாமல் விளையாடி வருகின்ற அணி.முதல் ஏழு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடி வருகிறது.

சச்சின் இல்லாதது பெரும் இழப்பு.

ஜெயசூர்யா,போலாக்,உத்தப்பா இவர்களை நம்பியே களம் இறங்கும் அணி.

ஹர்பஜன்சிங்கின் வெளியேற்றம் பந்துவீச்சில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

அரை இறுதிக்கு முன்னேற ஏதேனும் அற்புதம் நிகழ வேண்டும்.

சிறந்த வீரர்: போலாக்
சிறந்த சொதப்பல் :ஜெயசூர்யா(ஒரு போட்டியை தவிர்த்து)
சிறந்த புதுமுக வீரர் : அபிசேக் நாயர்

தில்லி டேர்டெவில்ஸ்:

சேவாக்கின் அதிரடி,காம்பீரின் ரன்குவிப்பு,மெக்ராத்தின் மேஜிக் பெளலிங்,தவானின் திறமை,
திவாரியின் பீல்டிங் என்று கலக்கினாலும் ஆடிய ஒன்பது போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

சேவாக் அடித்தால் வெற்றி. சேவாக் அவுட்டானால் தோல்வி என்கிற நிலை இருப்பதால் இந்த
அணி அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்பது சந்தேகமே.

குழுவாக செயல்பட்டால் மற்ற அணிகளை தூக்கி சாப்பிட்டுவிடுவார்கள் இந்த "டெவில்ஸ்" என்பதில் சந்தேகமில்லை.

சிறந்த வீரர்: காம்பீர்
சிறந்த சொதப்பல்: தினேஷ் கார்த்திக்
சிறந்த புதுமுக வீரர் :தவான்/திவாரி.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் அணி. ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து உற்சாகப்படுத்தும் ஷாருக்கின் செயல் அணிக்கு மிகப்பெரிய "பூஸ்ட்".

பிரண்டன் மெக்கலம் முதல் போட்டியில் 73 பந்துகளில் அடித்த 158* ரன்கள் இருபதுஒவர் போட்டிகளில் ஒரு மிகச்சிறந்த சாதனை. (13 இமாலய சிக்ஸரும் இதிலடங்கும்)

கேப்டன் "தாதா" கங்குலி,ரிக்கி பாண்டிங்,உயர்ந்த மனிதன் இசாந்த் சர்மா,டேவிட் ஹஸ்ஸி,தாமதமாக அணியில் சேர்ந்து தான் விளையாடிய முதல்போட்டியிலேயே கலக்கிய "ராவல்பிண்டி எக்ஸ்பரஸ்" அக்தர் என்று நட்சத்திர வீரர்களின் பட்டியல் நீள்கிறது.

இனிவரும் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

சிறந்த வீரர்:டேவிட் ஹஸ்ஸி
சிறந்த சொதப்பல்:முரளி கார்த்திக்
சிறந்த புதுமுகவீரர் :சாஹா/திண்டா.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

6 கோடி தோனி, "Hulk" ஹெயிடன்,மிஸ்டர் கிரிக்கெட் ஹஸ்ஸி,இளம்புயல் ரெய்னா,"இறுதி ஓவர் ஸ்பெசலிஸ்ட்" ஜோகிந்தர் சர்மா, சென்னைசிங்கம் பத்ரிநாத்,கோனி,"ஹாட்ரிக்" பாலாஜி என்று நட்சத்திர பட்டாளங்களுடன் களம் இறங்கி இருக்கும் அணி.

ஆடிய முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியான வெற்றி.
அதன்பிறகு தொடர்ச்சியாக மூன்று தோல்வி.
பின் சுதாரித்து தொடர்ந்து இரண்டு வெற்றி என்று யூகிக்க முடியாத அதேசமயம் பலம்வாய்ந்த அணிகளுள் ஒன்றாக பவனி வருகிறது சென்னை அணி.

டிரம்ஸ் சிவமணி ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து டிரம்ஸ் அடித்து தூள் கிளப்புக்கிறார்.

விஜய்,நயன் தாரா என சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துகிறார்கள்.

கேப்டன் கூல் தோனியின் சிறப்பான வழிநடத்துதலால் இந்த அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனலாம்.

சிறந்த வீரர்: தோனி/பாலாஜி
சிறந்த சொதப்பல்:பிளம்மிங்
சிறந்த புதுமுக வீரர்: கோனி.

கிங்ஸ் XI பஞ்சாப்:

ஆறுபந்தில் ஆறு சிக்ஸர் அடித்து தூள்பறத்திய யுவராஜ் சிங் கேப்டனாக உள்ள அணி.
துல்லியமான ஸ்விங் பத்துவீச்சால் எதிரணி வீரர்களில் ஸ்டம்புகளை பறக்க செய்யும் பதான் அணிக்கு மிகப்பெரிய பலம்.
"அழுமூஞ்சி" என்றாலும் பந்துவீச்சில் சிடுமூஞ்சியாக வலம்வரும் ஸ்ரீசாந்,
ரன் மெஷின் குமார சங்காக்கரா, புகழ்பெற்ற ஆஸ்திரேலிய வீரர் மார்ஷின் மகன் ஷான் மார்ஷின் அதிரடி
ஒவ்வொரு போட்டிக்கும் மைதானம் வந்து வீரர்களை உற்சாகப்படுத்தும் ப்ரீதி ஜிந்தாவின் கன்னக்குழி புன்னகை
என பஞ்சாப் அணி எதிரணிகளை பஞ்சாக ஊதித்தள்ளுகிறது.

வெற்றிபெரும் என எதிர்பார்க்கப்படும் அணிகளில் பஞ்சாப் முக்கியமான அணி.

சிறந்த வீரர்: ஷான் மார்ஷ்
சிறந்த சொதப்பல்: ஜெயவர்த்தனே
சிறந்த புதுமுக வீரர் :பியூஷ் சாவ்லா.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு இந்த அணி ஒரு மிகச்சிறந்த உதாரணம். Underdogs ஆக
அறியப்பட்ட அணி இன்று ஏழு வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

காரணம் - ஷான் வார்னே.

இளம் வீரர்களின் திறமை அறிந்து,அவர்களை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி வெற்றிக்கனிகளை சுவைக்க மிக முக்கிய காரணம் வார்னேயின் கேப்டன்ஸி.

முதல் போட்டியில் தோற்று பின் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற அணி.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் அடித்து அணி வெற்றி பெற
காரணமாக இருந்தவரும் வார்னேதான்.

யூசுப் பதானின் அதிரடி,கைப்பின் அசத்தல் பீல்டிங்,வார்னேவின் துல்லிய பந்துவீச்சு,வாட்சனின் ஆல்ரவுண்ட் திறமை,ஸ்மித்தின் அடித்தளம் அமைக்கும் பேட்டிங் போன்றவற்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் மிகச்சிறந்த
அணியாக விளங்குகிறது.

சிறந்த வீரர்: வார்னே/பதான்
சிறந்த சொதப்பல்: கம்ரான் அக்மல்
சிறந்த புதுமுக வீரர் :ஜடேஜா.

அடுத்த பதிவு அரையிறுதி போட்டிகளுக்கு முன் எழுதுகிறேன்

-நிலாரசிகன்.

7 comments:

Anonymous said...

hmmm... Great ... ella team pathiyum ezhuthinathu super.. expecting ur next post soon :-)

said...

your narration is very great. enjoy.


சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியினரை உற்சாகமூட்டுவதற்காகப் பிரத்தியேகமாக இசையமைக்கப்பட்ட இசைப்பாடல்களின் தொகுப்பு. மொத்தம் 4 பாடல்கள்.

said...

நல்ல கள வர்ணனை.

said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்

said...

ஆஹா.. அழகான பார்வை... சென்னை சூப்பர் கிங்க்ஸ் 3 தொடர் தோல்விக்கு காரணம் அதில் இடம் பெற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சொந்த நாட்டு அணிக்காக விளையாட சென்றுவிட்டது தான். அதன் பிறகு தோனி கொஞ்சம் சுதாரித்டுக் கொண்டார். ஆனாலும் நேற்று மும்பை இந்தியன்ஸின் ஜெய சூர்யா சென்னை கிங்க்ஸை பின்னி பெடலெடுத்து விட்டார்...

ஷேன் வார்ன் தான் இப்போதைக்கு கலக்கல் நாயகன். :))

.... நல்ல விமர்சனம் ரசிகன்...

said...

சோக்க!!!!!!!! இருக்கு உங்க வர்ணனை!!!!!!

said...

நிலாரசிகன் கவிதைகள் என‌
ப‌க்க‌த்தின் பேர் ஆனால் ம‌ட்டைப‌ந்து அணிக‌ள் <<>> க‌விதை??