Tuesday, February 02, 2010

The Sorrows of Young Werther


காதல் பற்றி எழுதாத மொழியில்லை. காதலை மையச்சரடாக கொண்டு எழுதப்பட்ட காவியங்களே வருடங்கள் பல கழித்தும் வாசகனின் விருப்பத்துக்குரிய படைப்பாக இருந்துவருகின்றன.
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் தருகின்ற வலியை கதேயின்(Johann Wolfgang von Goethe) "The Sorrows of Young Wether"  படைப்பிலும் உணர முடிகிறது.
1774ல் எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாக பரிந்துரைக்கப்படுகிறது. 
கதேயின் மொழிநடையும்
நுணுக்கமான விவரிப்புகளும் மனதை அள்ளிப்போகின்றன. இந்த புதினம் கடித இலக்கியத்தை சார்ந்தது. தன் நண்பனுக்கு வெர்த்தர் என்ற கதாப்பாத்திரம்
எழுதும் கடிதங்களின் தொகுப்பே இந்நாவல்.

கதைச் சுருக்கம்:
நாடோடியாக திரியும் வெர்த்தர் என்கிற இளைஞன் தற்செயலாக ஒரு யுவதியை காண்கிறான். அவளது அழகில் ஈர்க்கப்பட்டு காதலில் விழுகிறான்.
அவள் ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்டவள் என்று தெரிந்தபின்னாலும் அவனால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.
காதலின் கொடும் கரங்கள் அவன் உயிரை இறுக்குகிறது. நட்பு ஒருபக்கம் காதல் மறுபக்கம் என்ற சுழலில் சிக்கி தன்னையே இழக்கிறான்.
தன் உயிரை விட உன்னதமான தன் காதலே மேலானது என்று முடிவு செய்து தற்கொலை செய்துகொள்கிறான்.

மேலோட்டமாக பார்த்தால் நாம் அன்றாடம் கேட்டு,பார்த்து சலித்த காதல் கதையாகவே தோன்றினாலும் இதை சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறார்
கதே. தன் நண்பனுக்கு வெர்த்தர் எழுதுகின்ற ஒவ்வொரு கடிதமும் உணர்வுகளின் குவியலாக,கவிதையாக,காதலின் எழுத்துவடிவாக மிகச் சிறப்பாக
எழுதியிருக்கிறார். மேலும் இயற்கை காட்சிகள்,குழந்தைகள் பற்றிய விவரணைகள் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.


இந்த நாவல் வெளியான சமயத்தில் வெர்த்தர் போன்றே நடை,உடை,பேச்சு என்று அக்கால இளைஞர்கள் தங்களை சித்தரித்துக்கொண்டதும் நடந்தது.
வெர்த்தர் போலவே காதலில் தோற்ற இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர். இப்படி ஒரு காதலன் தனக்கு கிடைக்கவில்லையே என்கிற ஏக்கத்தில் யுவதிகள் மனம் நொந்து திரிந்தனர்.

இந்த செய்தி கதேவுக்கு எட்டியவுடன் தான் பெரும் தவறு செய்துவிட்டதாக எண்ணி மனம் குன்றினார். கற்பனை வீச்சின் திறனை அனுபவபூர்வமாக உணர்ந்தார்.

இந்நாவலின் வெற்றிக்கு மற்றுமோர் உதாரணம் மாவீரன் நெப்போலியனின் படுக்கை அருகில் எப்போதும் இருந்த நாவல் இது மட்டும்தான்.

கதே பற்றி:
கதே இந்நாவலை எழுதும்போது அவரது வயது 24. அதற்கு பிறகு எவ்வளவோ படைப்புகள் எழுதினாலும் இன்றும் கதேயின் முகவரியாக இந்நாவலைத்தான் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். (கதே படைத்த ஃபாஸ்ட் என்னும் காப்பியத்தை விட இந்த நாவலே அதிகம் வாசகர்களை கவர்ந்திருக்கிறது)

 ஹீப்ரு,கிரேக்கம்,பிரஞ்சு,ஆங்கிலம்,லத்தீன், என பல மொழிகளில் ஆளுமை பெற்றவர் கதே.ஓவியம் சிற்பம் கத்திச்சண்டை குதிரையேற்றம் இசை என்று இவர் பிரகாசிக்காத துறையே இல்லை எனலாம்.

ஆங்கிலத்தில் வாசிக்க:
இங்கே

தமிழில்:
தமிழினி வெளியீடாக "காதலின் துயரம்" என்கிற தலைப்பில் வெளியாகி இருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பு எம்.கோபாலகிருஷ்ணன்.
பக்கம் : 144
விலை: 60


- நிலாரசிகன்.