Monday, February 12, 2007
நிழல் தேடும் மரங்கள் -பாகம் 2.
மறந்துவிடுகிறது
நேற்று ரசத்தில் உப்பு,
இன்று தேனீரில் சர்க்கரை…
எல்லாம் கண்டுகொண்டு
கண்டிப்பாய் என்னை
எப்போதும் மறந்துவிட்ட
என்மீதான அன்புடன்.
* உன் கவிதைபோன்ற
மனதிற்கு நல்வாழ்க்கை
கிடைக்கும் என்ற
தோழிகளின் வாக்கு பலித்தது
பொய்யான வாழ்வுடன்
நான்.
* பெண்மையின் வலி
உணரும் மூன்று நாட்களில்
உன் மடிக்குழந்தையாய்
நானிருந்தேன்....
வலிகொண்ட வாழ்விலும்
ரசிக்கமுடிகிறது சில
கனவுகளை.
* வேதனைகள் நிறைந்த
என் உலகிலும்
எனக்காக அழுகிறது
ஒரு ஜீவன்.
மழை.
* நெஞ்சில் மிதிக்கிறது
நீ அள்ளி எடுக்கும்
பிஞ்சுக் குழந்தை.
குடித்துவிட்டு என்
கன்னத்தில் நீ அடித்த
அடிகள் கருவறைக்கும்
கேட்டிருக்குமோ?
* என் ஓரவிழி
பார்வைக்காக தவமிருந்தாய்
நாம் காதலித்த
நாட்களில்..
எனை ஈரவிழி
பாவையாக்கி சாபம்தந்தாய்
நம் திருமணவாழ்வில்.
நிழல் தேடும் மரங்கள்- பாகம் 1.
சத்தத்தில் என்றுமே வெளியில்
கேட்பதில்லை கரையின் முனகல்
சப்தங்கள்..
* சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது
திருமணம்.
வாழ்க்கை மட்டும்
நரகத்துடன்.
*மழைத்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணினேன்.
சிரித்தாள் அம்மா.
கண்ணீர்த்துளிகளை ஒவ்வொன்றாய்
எண்ணுகிறேன்.
சிரிக்கிறாள் அத்தை.
*பவுர்ணமி நிலா
இரவு மழை
ஜன்னலோர செம்பருத்தி.
எதுவும் ரசிக்கமுடிவதில்லை
தேவை முடிந்தவுடன்
கேட்கின்ற குறட்டை
சத்தத்தில்…
*இதமான அரவணைப்பு
நெற்றிமீது ஒற்றை முத்தம்
கண்பேசும் வார்த்தைகள்
எப்போதும்
திரைப்பட தாம்பத்தியம்
அழகானதாகவே இருக்கிறது.
*கரண்டி பிடிக்கும்
கைகளின் வலி
மறக்கச் செய்கிறது
கடந்த கால கண்ணாடி
வளையல்களின் சிணுங்கல்
சத்தம்.
Monday, January 01, 2007
அப்பாவிகளுக்காய் ஒரு குரல்...
பிறந்த ஒரே காரணத்திற்காக
வாழ்வெல்லாம் ரத்தம் கண்டு
அகதிகளாய் அவதிப்படும்
மக்கள்....
யார் மீது தவறென்றே
அறியாமல் வெடிகுண்டுகளுக்கு
என்று பலியாவோம் என
துடிக்கும் ஈராக் மக்கள்...
ரோஜாக்களுக்கு நடுவில்
வசித்தும் தீவிரவாத
முட்களால் தினம்தினம்
அவதிப்படும் காஷ்மீர் மக்கள்...
ஒட்டகத்தின் சிறுநீரை
தண்ணிராகவும்,தோல்பைகளை
உணவாகவும் உட்கொண்டு
மரணத்தோடு போராடும்
சோமாலிய மக்கள்...
இவர்களைப்போல் உலகெங்கும்
வாடுகின்ற அப்பாவிகளுக்கு
என்று விடியல் பிறக்கிறதோ
அன்று நானும் கட்டாயம்
சொல்வேன்
"புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று.
Sunday, December 17, 2006
விளையாட்டாய் சில கிறுக்கல்கள்...
சிறுவயதில் விளையாடிய விளையாட்டின் பெயர்களோடு
சில கிறுக்கல்கள்...
1.கண்ணாமூச்சி
உன் நினைவுகள் என்
உயிருடன் தினம் தினம்
விளையாடும் விளையாட்டு.
2.கபடி
ரத்தம் சொட்ட கபடி
விளையாடி வென்றிருக்கிறேன்
சிறுவயதில்.
எத்தனை முறை முயன்றும்
வெல்ல இயலவில்லை
உன் கண்களின் கபடியை.
3.காதுல பூ சொல்லி
காதில் பூக்கள்
பெயர் சொல்லி களித்தது
ஒருகாலம்.
ஒரு பூவையே காதலியாய்
பெற்றது ஒருகாலம்.
பூவை அவள் பூவை
என் காதில் சூடிச்சென்றது
இக்காலம்.
4.ஒரு கொடம் தண்ணியெடுத்து...
குடம் சுமக்கும்
உன்னை சுமக்க
இடம் இருக்கிறது
என் வாழ்வில்...
அடம் பிடிக்கும்
குழந்தையாய் நீ.
5.நொண்டி
வாழ்வென்னும் ஓட்டப்பந்தயத்தில்
உன் நினைவுகளை
சுமந்து நிற்காமல் ஓடும்
நொண்டி நான்.
6.காத்தாடி
ஒரு காப்பியமே
படைக்கும் திறன்
என் பேனாவுக்கு கிடைத்திருக்கும்
நீ என்னோடு வாழ்ந்திருந்தால்..
இப்போது சிறுகவிதை
படைக்கவும் முடியாமல்
அறுந்த காற்றாடியாய் எங்கேயோ
வீழ்ந்து கிடக்கிறது.
7.கள்ளன் போலீஸ்
ஊரெல்லாம் ரவுடிகளை
சுட்டு வீழ்த்துகிறது
காவல்துறை.
பார்வையால் என்னை
தினம் தினம் அடிக்கும்
காதல் ரவுடியே உன்னை
எப்படி வீழ்த்துவது?
8.தொட்டுபுடிச்சி
கண்களால் கூட தொட்டுவிடாமல்
பேசும் உன் கண்ணியத்தில்
கன்னி இவள் மனம்
கண்ணியில் சிக்கிய
மான்குட்டியாய் தவிக்கிறதே...
9.பெயர் எழுதுதல் (வேம்பங்கொட்டை பால் கொண்டு)
ஆயிரம் கவிதைகள்
எழுதிய ஆத்ம திருப்தி
கிடைக்க விரும்பி ஒரே
ஒரு முறை என் இதயத்தில்
எழுதினேன்
உன் பெயரை.
10.கல்லா மண்ணா
கல்லாக மண்ணாக
போகும் இவ்வுடல்...
கல்வெட்டாகி போகலாம்
நம் காதலும் கவிதையும்..
Saturday, December 16, 2006
பூக்களுடன் பேச்சுவார்த்தை...
நீங்கள்
பறிக்காதவரையில்
நலம்தான் மனிதா...
பெண்ணின் கூந்தலுக்கு
பறித்தல் தவறா?
காலை அழகாய்ச்
சிரிக்கும் எங்களை
மாலை அழ அழ
தூர எறிகின்றனரே பெண்கள்?
வாடியபின்னர்
நீங்கள் தேவையில்லைதானே?
உங்கள் பார்வையில்
வாடுகிறோம்
எங்களுக்கு அது
நீண்ட உறக்கம்.
சரி சரி கோபம் வேண்டாம்
உங்கள் வாழ்க்கை பற்றி..
தண்டவாளம் அருகில்
பூத்தாலும் அழுவதில்லை
நாங்கள்.
குப்பைத்தொட்டியில் பூத்தாலும்
கலங்குவதில்லை
நாங்கள், விண்ணோக்கியே
பார்க்கிறோம்..
கவலை ஏதேனும்?
மனிதம் மறந்த
சில மனிதர்களின்
சவ ஊர்வலத்தில் கூட
மணம் வீசும் எங்களை,
சாலைகளில் நீங்கள்
வீசி எறியும் பொழுதுகளில்
கவலைப்பட்டு வாடிப்போகிறோம்.
கேள்விகள் ஏதேனும்?
காதலில் பரிசாகவும்,
திருமணத்தில் மாலையாகவும்,
வாழ்வெல்லாம்
மனிதர்களுக்காக பூத்துச் சிரித்தாலும்
சில பொழுதேனும்
எங்களுடன் நேரம் செலவிட
உங்களுக்கு நேரமிருக்கிறதா?
(தொடரும்...)
Saturday, December 02, 2006
என் தோழனே....
சாய்ந்து
அழுது தீர்த்துக்கொள்வேன்...
மகிழ்ச்சியெனில் உன்
விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்...
உன்னுடனிருக்கும்
ஒவ்வொருநிமிடங்களும்
தாய்மடியில்நிம்மதியாய்
உறங்கும்குழந்தையாய்
நானிருந்தேன்..
தங்கத்தில் வேலியொன்று
என் கழுத்தில் ஏறியதால்
உன்னைப் பிரிந்து இன்று
வெளியூர் செல்கிறேன்...
வழியனுப்ப வந்த
சொந்தங்களின் நடுவே
தோழி என்னை
பிரியவும்மனமில்லாமல்
வேறுவழியும் தெரியாமல்
தவிப்புடன் கன்னம்நனைக்கும்
கண்ணீரைமறைத்தபடியே
மெளனித்துகையசைக்கிறாய் நீ..
உன்னைவிட்டு
நகரத்துவங்குகிறது
இந்த இரயிலும்
என்வாழ்க்கையும்...
Wednesday, October 25, 2006
விடைதெரியா கேள்வியொன்று....
துடிதுடித்துச் சாகும்
கறிக்கோழியைக் காணும்போதும்...
தோலுரித்து தலைகீழாய்
இரத்தம் சொட்ட
தொங்கிக்கொண்டிருக்கும்
ஆட்டுக்கறியைக் காணும்போதும்...
பாவப்படாத மனசு
சாலையின் நடுவில்
அடிபட்டு கிடக்கும்
தெருநாயொன்றை
கண்டபோது பரிதவித்து
எனக்குள் ஒரு கேள்வியினை
வீசிப்போனது....
நாம்
உயிருக்காக இரங்குகிறோமா,
உயிரின் வடிவத்திற்காக
இரங்குகிறோமா?
இளைய சூரியன்களுக்கு...
(இந்தக் கட்டுரையை இளைஞிகள் பெண்பாலில் படித்துக் கொள்ளவும்,இது இருபாலருக்கும்
பொருந்தும், எழுத வசதியாக ஆண்பாலை தேர்ந்தெடுத்துள்ளேன். சினேகிதிகள் மன்னிப்பார்களாக :)
அன்புள்ள இளைய சமுதாயமே.... இளம் இரத்தங்களே.... பாரதத்தின் கனவுகளை சுமக்க
வேண்டியவர்களே....உங்களோடு ஒரு அரைமணி நேரம் நான் உரையாடலாமா?
உங்களது வைர நிமிடங்களை நான் அதிகம் கொள்ளையிட விரும்பவில்லை...அரைமணி போதும்
எனக்கு.
உங்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை.
அறிவுரை என்பது உங்களுக்கு பிடிக்காது என்பதும் நன்றாக உணர்ந்தவன் நான்.
ஆனாலும் மனசுக்குள் தவிக்கும் சில கேள்விகளை/ஆதங்கத்தை உங்களிடம் பகிர்ந்து
கொள்ளவிரும்புகிறேன்.
முதலில் ஒரு கேள்வியுடன் ஆரம்பிக்கிறேன்.
இளைஞன் என்பவன் யார்?
என் சிறிய அறிவுக்கு எட்டிய பதில் இதோ..
"தனக்காக மட்டுமில்லாமல் தன்னைச் சார்ந்த மனிதர்களை/கிராமத்தை/நகரத்தை/தேசத்தை
முன்னேற்ற எள்ளளவு உதவியாவது செய்பவனாக இருக்க வேண்டும்"
பிறந்தேன் வளர்ந்தேன் இறந்தேன் என்று இருப்பது இளமைக்கு அழகா? ஆறாம் அறிவு
மனிதனுக்கு மட்டும் ஏன் என்று யோசித்தாயா நண்பா?
சாதிக்க பிறப்பெடுத்தவனே மனிதன். இளமை நம் சாதனைகளுக்கு உரமிட வேண்டிய
பருவம்.
ஓட்டப்பந்தையத்தில் ஓடுவது மட்டுமல்ல சாதனை. வாழ்க்கையை ஜெயித்த
ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒன்றை சாதித்திருக்கிறான்.
தன் பால்ய வயதிலேயே கவிச்சாதனை செய்தான் பாரதி.
தன் பதினாறாம் வயதில் கிரிக்கெட் உலகில் நுழைந்து இன்று சாதனை
மன்னனாக திகழும் டெண்டுல்கரை நாம் நன்கறிவோம்.
இவ்விரு உதாரணங்களும் இளமைப் பருவம் வரும் முன்னரே சாதிக்க
ஆரம்பித்தவர்கள் பற்றியது.
என் இளம் தோழனே,
நீ என்ன சாதித்திருக்கிறாய்?
நன்றாக படித்தேன்,நல்ல வேலையில் சேர்ந்தேன், கை நிறைய, மனம் குளிர சம்பாதிக்கிறேன்,
பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்கிறேன்,நல்ல நண்பர்களை சம்பாதித்தேன்
இதை விட என்ன பெரிய சாதனை செய்திட வேண்டும் என்று நீ முணுமுணுப்பது என்
செவிகளில் வந்து வேதனையாய் விழுகிறது நல்லவனே!
படித்து முடித்து வேலையில் சேர்ந்தவுடன் நம் இளைஞர்களுக்கு வாழ்க்கை முடிந்துபோகிறது.
திருமணமாகி குழந்தை பெற்றவுடன் தனக்காக தன் மனைவிமக்களுக்காக மட்டுமே இவ்வுலக
வாழ்க்கை என்று தப்புக் கணக்கு போட ஆரம்பித்து விடுகின்றனர்.
வாழ்க்கை என்பது மிகப்பெரிய வரம். மனித பிறப்பு என்பது அதைவிட பெரிய வரம்.
இருக்கின்ற ஒரு வாழ்க்கையை எவ்வளவு உபயோகமானதாய்/நல்லவிதமாய் நாம்
பயன்படுத்த வேண்டும்?
நம் வாழ்க்கையை மட்டுமே வாழ்வதோ வாழ்க்கை?
பிறருக்கு உதவி செய்து பிறர் வாழ ஏணியாய் நாமிருப்பது அல்லவா வாழ்க்கை!
பிறருக்கு செய்கின்ற நன்மைகளைத்தான் நண்பா நான் சாதனை என்கிறேன்.
கொஞ்சம் யோசித்து ஒரு பதில் சொல் தோழனே இதுவரை நீ இச்சாதனை செய்திருக்கிறாயா?
"நீ நூறு வருசம் நல்லா இருக்கணும்பா" என்று வாழ்த்து வாங்கி இருக்கிறாயா?
உன்னை வாழ்த்தியவரின் கண்களுக்குள் தெரிகின்ற நன்றியின் நிஜம் உணர்ந்து சிலிர்த்திருக்கிறாயா?
"எனக்கும் உதவி செய்யனும்னுதான் ஆசை ஆனால் நேரம்தான் இல்லை" என்று உங்களில் சிலர்
சலிப்பது கண்டு என் மனம் வெதும்புகிறது தோழர்களே...
உங்களுக்கா நேரமில்லை?
ஆறாம் விரலாய் சிகரெட் பற்ற வைக்க நேரமிருக்கிறது.
வாரம் தவறாமல "பார்ட்டி" என்கிற பெயரில் மதுவருந்தி கும்மாளமிட நேரமிருக்கிறது.
காதல் என்கிற பெயரில் கடற்கரை,திரையரங்கம் என்று துணைகளுடன்
ஊர் சுற்ற நேரமிருக்கிறது.
இப்படி எத்தனையோ உதவாத விசயங்களுக்கு இன்றைய இளைஞனுக்கு நேரமிருக்கிறது.
ஆனால் உதவும் மனப்பான்மை மட்டும் வெகு சிலருக்கே இருக்கிறது.
இளைஞர்களில் 75 சதவிகிதம் சிகரெட் குடிப்பவர்கள் இருக்கிறார்கள்
1 சதவிகிதமாவது பிறர்வாழ உதவ நினைக்கிறார்களா என்பது சந்தேகமே!
சிகெரெட் புகைக்கும் புகைஞர்களே எனக்கு வெகுகாலமாய் ஒரு சந்தேகம்
அதெப்படி உங்களுக்கு மட்டும் காசுகொடுத்து நோய் வாங்கும் மனம்
வாய்த்திருக்கிறது.!!!!
சிந்திக்க வேண்டுமெனில் சிகரெட் உங்களுக்கு தேவைப்படுகிறது.
தனிமைக்கு துணையும் சிகரெட்
இளமைக்கு நீ வைக்கும் நெருப்பல்லவா சிகரெட்!
உள்சென்று வெளிவரும் நச்சுப்புகைக்கா நீ தினமும் செலவிடுகிறாய்?
ஒரு நாளுக்கு ஒரே ஒரு சிகரெட் நீ குடிப்பதாக வைத்துக் கொள்வோம்
ஒரு மாதத்திற்கு முப்பது சிகரெட். ஒரு சிகரெட்டின் விலை இரண்டு ரூபாய்
என்று வைத்தால் கூட மாதம் அறுபது ரூபாயை வெறும் புகைக்காக
செலவழிக்கும் உன்னை நினைத்தால் என்னால் கோபபடாமல் இருக்க
முடியவில்லை!
உனக்குள் ஒரு சூரியன் இருப்பதை இந்த இரண்டு ரூபாய் சிகரெட்
புகை மறைத்து விட்டதை எண்ணி துயரப்படுகிறது என் மனசு.
இதுபோலவே மதுவிற்கு சில ஆயிரங்களை செல்வழிக்கிறாய்.
கொஞ்சம் யோசியுங்கள் நண்பர்களே.... உங்கள் உடல் நன்றாக
இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
நான் சொல்லி புத்தனாக நீ மாற முடியாது. புத்தனாக மாறவும்வேண்டாம்.
முதலில் ஒரு நல்லொழுக்கம் மிக்கவனாக மாற முயற்ச்சி செய்.
பின் சாதனைகள் உன்னைத் தேடி தானாக வரும்.
கல்வெட்டில் உனது பெயர் வரவேண்டும் என்றில்லை.
நான்கு நல்ல இதயங்களில் உன் பெயர் துடிப்பாய் மாறினால்
அதுவே நீ பாதி சாதித்ததாக ஆகிவிடும்.
அடுத்ததாக காதல் பற்றி கொஞ்சம் உன்னுடன் பேச வேண்டும்.
ஏனெனில் பல இளைஞர்கள் தங்களது முன்னேற்றத்தை
இந்தக் காதல் என்கிற மூன்று எழுத்துக்குள் புதைத்துக்கொண்டதை
இவ்வுலகம் அறியும்.
காதல் என்றவுடன் நீ நிமிர்வதை உணர்கிறேன். :)
முதலில் காதல் என்றால் என்னவென்று நீ புரிந்து வைத்திருக்கிறாய்?
காதலியுடன் மணிக்கணக்கில் பேசுவது,கவிதை எழுதுவது,கடிதம் வரைவது
கைகோர்த்து கடற்கரையில் நடப்பது இதுமட்டுமா காதல்?
உன் காதலனோ/காதலியோ
உன் வாழ்வில் ஒளியேற்றும்
தீபமாக இருக்க வேண்டுமே தவிர
உன்னை எரிக்கும் தீயாக இருக்க கூடாது.
காதல் தோல்வியால் தங்களது வாழ்க்கையை முடித்துக்கொண்ட எத்தனையோ
இளைஞர்களிடம் நான் கேட்க நினைத்த ஒருகேள்வியை இன்று உங்கள் முன்
வைக்கிறேன்.
வாழ்க்கை என்கிற அதிஅற்புதத்தை விட சிறந்ததா காதல்?
காதலே வாழ்க்கை என்று பிதற்றும் முட்டாள் கூட்டத்தில் இளைஞனே நீயும்
இருக்கிறாயா?
இருமாதங்கள் காதலித்து பின் பிரிந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சிலரைக்
காணும்போது சிரிப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?
ஓடிச் சென்று ஓங்கி தலையில் ஒரு கொட்டு கொட்டி "அடேய் முட்டாளே
இருமாதங்கள் காதலித்த ஒரு பெண்ணுக்காக/ஆணுக்காக உன் வாழ்க்கையை
முடித்துக்கொள்ள எத்தனிக்கிறாயே உன்னை பெற்றோருக்கும் இவ்வுலகிற்கும்
நீ என்ன செய்தாய்?" என்று கேட்க தோன்றுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உன் அரைமணி நேரம் இதைவாசிக்க தந்தமைக்கு மிக்க நன்றி தோழா....
கொஞ்சம் சிந்தித்துப்பார் இளைஞனே....
வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க முடிவெடு.
முதுமையில் பூக்களினாலான படுக்கை கிடைக்க
இளமையில் முள்ளில் நீ நடக்க நேரிட்டாலும் தயங்காதே!
உன் சாதனைப் பயணத்தை இன்றே துவங்கிடு. நாளைக்காக காத்திருக்காதே!
வாழ்த்துக்களுடன் உன் நண்பன்.
இக்கட்டுரையை படித்து ஒரே ஒரு ஜீவன் திருந்த நினைத்தால் நானும் ஒரு சாதனையாளன் ஆவேன்.
ஒரு இளைஞன் திருந்தினால் நம் இந்தியா சாதனைகளின் மறுபெயராகும் என்கிற நம்பிக்கையுடன்,
-நிலாரசிகன்.
Wednesday, September 27, 2006
பிரிவுக் கவிதைகள்....
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.
கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.
உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.
2. என்னை விட்டுப்
போகின்ற கடைசி
நாளில் நீ அழாமல்
போகவேண்டும் என்று
துடிக்கிறது மனசு.
என் பிரிவெண்ணி
அழாமல் போய்விடுவாயோ
என்றும் தவிக்கிறது அதே
மனசு.
முரண்பட்ட நினைவுகளில்
சிக்கித் தவிக்கிறது
உன் மீதான் என்
உயிர்ப்புள்ள காதல்.
3. எத்தனை முறை
காதலை கொடுத்த
இறைவனுக்கு
நன்றி சொல்லியிருப்போம்.
நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா?
4. நீ எனக்காக அழ
நான் உனக்காக அழ
நமக்காக பாவம்
நாளெல்லாம் காதல்
அழுகிறது கண்மணி!
நாம் வாழ பிறந்தவர்களா
இல்லை அழ பிறந்தவர்களா?
Saturday, September 16, 2006
அக்கரை சீமை அழகினிலே...
மாப்ளே" என்பான் தோழன்.
"நமக்கு ஒரு கேமரா போதும்
தம்பி" என்பார் பக்கத்துவீட்டு
அண்ணன்.
"ரிமோட் கண்ட்ரோல் ஏரோப்ளேன்
வேணும் மாமா" என்பான் அக்காள்
மகன்.
எல்லோர் முன்பும் வெளிநாட்டில்
வசிப்பது பெருமையாக
எண்ணும் வேளையில்..
எல்லோரும் எல்லாமும் கேட்டுச்
சென்றபின் அருகில் வந்து
உள்ளங்கை பற்றி மெதுவாய் சொல்லும்
மனைவியின்
"அடிக்கடி போன் பண்ணுங்க உங்க
குரல் கேட்கணும்" என்கிற வாக்கியத்தில்
மறைந்து போகும் பெருமையும்
வெளிநாட்டின் வசதிகளும்!
Monday, September 11, 2006
குறுந்தகவல்(S.M.S) நட்பு!
காலை வணக்கம்
அனுப்புவாய்...
மனம் தளர்ந்த பொழுதுகளில்
வாழ்வினை எதிர்கொள்ள
வளமான வரிகளை
அனுப்புவாய்...
சோர்ந்து விழும் நேரங்களில்
சுமைதாங்கியாய்
மென்வார்த்தைகள்
அனுப்புவாய்..
சிரிக்க மறந்த வாழ்க்கையில்
சிரிப்பின் அவசியத்தை
நகைச்சுவை வரிகளில்
நகைப்புடன் அனுப்புவாய்...
இருண்ட இரவில்
மின்மினிபோல் பளிச்சிடும்
இரவு வணக்கமொன்றை
இயல்பாய் அனுப்புவாய்...
நண்பா..
குறுந்தகவல் பரிமாற்றத்தினால்
குறுகிப்போயிற்று
நம்குரல்களின் சந்திப்பு.
நேரில்சந்திக்கும் பொழுதினிலாவது
பேச மறந்து
குறுந்தகவல் தட்டச்சும்
நிலை வராமலிருக்க
வரம் கேட்போம் இறைவனிடம்!
Friday, September 08, 2006
"நெஞ்சு பொறுக்குதில்லையே!"
சொந்த ஊரில் பாதம் படும் போது ஏற்படும் உணர்விருக்கிறதே! அடடா.... காதல் போல்
உணர மட்டுமே முடியும்...
பால்ய நண்பன் வீடு தேடி வந்தான்...
பழைய கதைகள் பேசி பொழுது போனது,,,
"இன்னைக்கு இராத்திரி ஏழு மணிக்கு ரெடியா இருடா திருவிழா பார்க்க போகலாம்"
என்று சொல்லிப்போனான் தோழன்.
இரவு நண்பர்கள் படையுடன் திருவிழா ரசித்துக்கொண்டிருந்தோம்.....
பக்தியுடன் சாமி ஆடுவது கண்ட பின்
கிண்டலுடன் கரகாட்டம் காண சென்றோம்...
நேரமாக நேரமாக கோவிலில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது...
"மச்சான் வாங்கடா பலூன் கடைக்கு போகலாம் என்றான் தோழன் ஒருவன்....
பலூன் வாங்கற வயசாடா என்றேன் நான்..
அடப்போடா பலூன் கடையிலதான் டா வளையலும் விற்கிறாங்க...என்றான் சிரித்துக்கொண்டே தோழன்.
பின்புதான் புரிந்தது வளையல் அவனது எதிர்வீட்டு தேவதைக்கு என்று!
சரி போகலாம் என்று கடை நோக்கி நடந்தோம்.
பெட்ரமாஸ் விளக்கு வெளிச்சத்தில் சாக்குப்பை விரித்து அதில் கடை போட்டிருந்தார்கள்.
நண்பன் கடைக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தான்...
அப்போது....
என் அருகில் ஒருவர் தன் சிறுமகளுக்கு பலூன் வாங்க என்னருகில் வந்தார்...
இந்த முகம்.... எங்கோ பார்த்த நியாபகம்.... சட்டென்று மனம் கனத்துப்போனது!
அவரா இவர்?
நடை தளர்ந்து,உடல் குறுகி.... பற்களில் சிலவற்றை இழந்து.... அய்யோ
டேவிட் அண்ணா நீங்களா இப்படி?
என்னைக் கண்டதும், என் பார்வையினைப் புரிந்து கொண்டு அவ்விடம்
விட்டு நகர எத்தனித்தார்...
"டேவிட் அண்ணா....."
அவர் கைப்பிடித்து நிறுத்தினேன்...
கெட்ட வாடை வீசியது அவர் மேல். டேவிட் அண்ணன் குடித்திருந்தார்.
"எப்படி இருக்கீங்கண்ணா..."
"நல்லா இருக்கேன்பா.... சரி நான் கிளம்புறேன்..." விறுவிறுவென்று
நடந்து போய்விட்டார்.
சுயநினைவிழந்து நின்ற என் தோள் தட்டினான் தோழன்..
"மச்சான் வாடா வீட்டுக்கு போலாம்.."
மெதுவாய் நடந்தேன்...
மனதெங்கும் டேவிட் அண்ணனின் நியாபகம்... எட்டு வருடங்கள் பின்னோக்கி
மனம் பறந்து சென்றது....
********************************************************************************************************************8
அப்போது நான் கல்லூரி இளநிலை மூன்றாம் வருட மாணவன்.
எங்கள் கிராமத்திலிருந்து டவுனுக்கு இருபது கிலோமீட்டர்கள் பேருந்தில் பயணிப்போம்.
டேவிட் அண்ணா என் பக்கத்து கிராமம். அவர் ஒரு மிகச் சிறந்த விளையாட்டு வீரர்.
அவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு மைதானம் சென்றால் பந்து
மைதானத்திற்கு வெளியில்தான் வந்து விழும்.
கிரிக்கெட் விளையாட சென்றதால் எங்களுக்குள் நல்ல பரிச்சயம்.
அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நான் கல்லூரி முடிந்து முதலில் பேருந்து நிலையம் வந்தால் அவருக்கு உட்கார
இடம் பிடித்து வைப்பேன்.
அவர் முதலில் வந்தால் எனக்கு இடம்பிடிப்பார்.
ஒரு நாள்...
"அண்ணே ஒரு டீ குடிக்கலாமா?"
"சரிடா வா"
"அண்ணே என்கிட்ட சில்லரை இருக்கு நான் கொடுக்கிறேன்"
"படிக்கிற புள்ளைக காசு செலவு பண்ணக்கூடாதுடா" என்றவாறே தன் பர்ஸை
திறந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை கடைக்காரரிடம் நீட்டினார்.
அப்போதுதான் அவர் பர்ஸைப் பார்த்தேன். நூறு ருபாய்த் தாள்களால்
நிரம்பி வழிந்தது...
"என்னண்ணே எங்கயாவது கொள்ள கிள்ள அடிச்சீங்களா?" கிண்டலாய் கேட்டேன் நான்.
"இல்லடா இன்னைக்குதான் சம்பளம் கிடைச்சுது தம்பி"
"எவ்ளோ சம்பளம்ணே"
"அது ஒரு பத்து தேறும்டா"
"பத்தா?"
"ஆமாடா பத்தாயிரத்தி சொச்சம்"
"அடேயப்பா பெரிய ஆளுண்ணே நீங்க" எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை...
அவர் போல் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
அதன் பின் டீக்கு பதில் குளிர்பானம்(பெப்சி வந்த புதிது) கேட்பேன் வெட்கமின்றி(அட நம்ம அண்ணாச்சி,பக்கத்து ஊரு வேற இதுல வெட்கம் என்ன கிடக்கு! )
"நமக்கு டீதான் ஓகே. இந்தா பக்கத்து கடையில குடிச்சிக்க....என்று பத்து ரூபாய் தருவார்...
என் இளைநிலை பட்டம் முடித்து,முதுகலை படிக்க சென்னை வந்துவிட்டேன்.
அதன் பின் அவரைச் சந்திப்பது வெகு கடினமாகிப்போனது.
**********************************************************************************************************
எட்டு வருடம் கழித்து நேற்றிரவுதான் கோவிலில் டேவிட் அண்ணனை சந்தித்தேன்...
"அம்மா நான் டேவிட் அண்ணனை பார்த்துட்டு வரேன்மா"
கிளம்பினேன்.
சைக்கிள் மிதித்த காலத்தை நினைத்துக் கொண்டே இன்று பைக்கில் எங்கள் கிராமத்தின் செம்மண்
சாலையில் விரைந்தேன்.
அவர் வீடு.....
"அண்ணே..." பதிலில்லை.
"அண்ணேணே....." சற்று குரல் உயர்த்தியபின் உள்ளிருந்து மறுகுரல் கேட்டது
"யா...யாரு..." வெளியில் வந்தார்.
தம்பி... வா உள்ள வாப்பா.... சாராய வாடையுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்...
அண்ணே.... எப்படி இருக்கீங்கன்னு கேட்கிற நிலைமையில் நானில்லை...
மெளனமாய் அவரைப் பார்த்தேன்..
எங்கள் மெளனத்தில் கல்லெறிந்தது ஒரு சிறுபூவின் குரல்...
"அப்பா நான் வெளயாட போறேன்பா" என்று சொல்லிவிட்டது அந்த பட்டாம்பூச்சி..
"அண்ணே உங்க ஒய்ப் எங்கே? "
அவரது கண்ணிலிருந்து கண்ணீர்த்துளியொன்று விழுந்து உடைந்தது...
"என்னண்ணே என்னாச்சு? என்ன பிரச்சினை.... நீங்க ஏன் இப்படி இருக்கீங்க"
தம்பி வாழ்க்கையில எல்லாத்தயும் இழந்துட்டேன்....
இதோ போறாளே எம் மக.... இவளுக்காகதான் என் உசிரு இன்னும்
இருக்குதோ என்னவோ....
இவ பொறந்த அன்னைக்கே எம்பொஞ்சாதி என்ன விட்டுப் போயிட்டா!
வேற ஒருத்தி கட்டிக்க மனசு வரல.... ஏன்னா எம்பொண்டாட்டிய நான்
உசிருக்கு உசிரா நேசிச்சேன்....
அவ நியாபகம் வரும்போதெல்லாம் குடிக்க ஆரம்பிச்சேன்...
குடிச்சுட்டுதான் தினமும் ஆபிஸ் போவேன்...
இரண்டு தடவ சொல்லிப்பார்த்தாங்க....அப்புறம் வேலைய விட்டு தூக்கிட்டாங்க!
பொழப்புக்கு வழியில்ல.... எனக்கு வேற வேலையும் கிடைக்கல...
கவலைய மறக்க குடிச்சு குடிச்சு ஓடா தேஞ்சு போனேன்...
இன்னும் ஆறுமாசமோ ஒரு வருசமோ!
இதுக்கு மேல சொல்ல என் பிளாஷ்பேக் வேற இல்ல தம்பி...
பேசி முடித்தவுடன் அவர் கண்களில் அருவியாய் நீர்த்துளிகள்..
"தம்பி ஒரு ரெண்டு ரூபா இருந்தா கொடேன்... பீடி வாங்க காசில்லை "
என்றார்...
நூறு ருபாய் கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் வெளியில் வந்தேன்...
வெளியே தெருச்சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்
டேவிட் அண்ணனின் மகள்.
"பாப்பா இங்க வாம்மா"
"என்ன அங்கிள்"
"உன் பேர் என்ன்? "
"ஜாய், அங்கிள்"
இவள் பெயரைப்போலவே வாழ்க்கையிலும் இனி சந்தோஷம் ஏற்படுத்துவேன் என்று மனசுக்குள்
உறுதி கொண்டு, அவள் கைகள் பற்றிக் கொண்டு சொன்னேன்
"இனி என்னை அங்கிள்னு கூப்பிடக்கூடாதும்மா"
"அப்போ எப்படி கூப்பிடறது"
"அப்பான்னு".
-நிலாரசிகன்.
(இது ஒரு நிஜக்கதையின் கரு.)
Tuesday, September 05, 2006
கவிதை...
கவிதை ஒன்று
எழுதினேன்.
மழை போலவே
மனசைத் தொட்டது
அக்கவிதை.
அடடா நானுமொரு
சிறந்த கவிஞன்
என்று மார்தட்டினேன்.
பத்திரிக்கைக்கு அனுப்ப
பத்திரமாய் மடித்து
வைத்தேன்.
மறுநாள் அதிகாலை
எழுந்து தேடினேன்
கவிதைத் தாளை.
கிடைக்கவே இல்லை.
இதயம் நொந்து
வெளியில் வந்தேன்.
என் கவிதைத்தாளில்
காகிதக் கப்பல்
ஒன்று அழகாய் மிதந்து
வர,அதனைக்கண்டு
விழிகள் மலர
சிரித்தாள் என் மகள்.
இதைவிடவா சிறந்த
கவிதை என்னால்
எழுத இயலும்?
Saturday, September 02, 2006
பெண்ணினம்..
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.
சரியென்றேன்.
கோபக்காரன் திட்டுவான்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.
சரியென்றேன்.
குடித்தாலும் நல்லவன்
பொறுத்துக்கொள்
என்றீர்கள்.
சரியென்றேன்.
கொஞ்சம் முரடன்
பொறுத்த்க்கொள்
என்றீர்கள்.
சரியென்றேன்.
எல்லாவற்றையும்
பொறுத்துக்கொண்ட
என்னை ஊர்கூட்டி
மலடி இவள்
என்கிறான்.
பொறுத்துக்கொள்
என்பீர்கள் என்றெண்ணி
சரியென்று தலையசைக்க
தயாராகுகிறேன்
அவன் மலடன்
என்பதை அறிந்த
நான்.
"பார்த்தேன் ரசித்தேன்" கவிதைகள்
கொண்டிருந்தேன் கடந்த வாரத்தில்
ஒரு நாள்.
பேருந்து பயணம். கூட்டம் அதிகம்
மூன்று மணி நேரமாக நின்று கொண்டே
பயணித்தேன்..
அப்போது கால்வலி மறந்து,
தூரம் மறக்க
என் செல்பேசியில்
எழுதியது இக்கவிதைகள்
1. "எளிதில் தீப்பற்றும்
பொருட்களை பேருந்தில்
கொண்டு செல்ல தடை"
என்று எழுதி வைத்துவிட்டு
பார்த்தாலே பற்றிக்கொள்ளும்
விழி கொண்ட உன்னை
மட்டும் பயணிக்க அனுமதிக்கும்
இந்த நடத்துனர் மீது
பயங்கர கோபம் எனக்கு!
2."பயணச்சீட்டு இல்லாமல்
பயணித்தால் 500 ரூபாய்
அபராதமாம்"
பேருந்தில் ஏறியதிலிருந்து
என் இதயத்தில் எந்த
பயணச்சீட்டும் இல்லாமல்
பயணிக்கும் உன் விழிகளுக்கு
அபராதமாக எதைக் கேட்பது?
3.உட்கார இடமிருந்தும் நீ
ஏன் நின்று கொண்டே
பயணிக்கிறாயென தவித்தபோதுதான்
உணர்ந்தேன்
"மகளிர் மட்டும்" அமர
இடமுண்டு
"தேவதை மட்டும்" என்றில்லையே!
Wednesday, August 16, 2006
செஞ்சோலை செல்லங்களுக்கு....
அந்த அறுபத்தி ஒன்று
பச்சிளம் குழந்தைகள்?
தாய்மொழி தமிழென்பது
குற்றமா?
இலங்கையில் பிறந்தது
குற்றமா?
பெற்றவர்களை இழந்தது
குற்றமா?
செஞ்சோலையில் வசித்தது
குற்றமா?
தாலாட்ட அன்னையில்லை
அறிவூட்ட தந்தையில்லை
சொந்தம் என்று எவரும்
இல்லை....
அதனால் கொன்று போட்டாலும்
கேட்பார் யாருமில்லை என்று
இந்த தண்டனையா?
அடே பிரம்மனே..
படைப்பின் இறைவனே
நெஞ்சில் ஈரமில்லாத,
உடலில் முதுகெலும்பில்லாத,
மனிதர்களை ஏனடா
படைத்தாய்?
அடே எமதர்மா!
எங்கள் பிள்ளைச்செடிகளை
வேரோடு சாய்த்த
மனிதக்கோடரிகள் மீது
எப்போது
உன் பாசக்கயிற்றை
வீசப்போகிறாய்?
இறைவா...
பூவியில் நரகத்தை
மட்டுமே கொடுத்த
எங்கள் செஞ்சோலை பிஞ்சுகளுக்கு
விண்ணிலாவது
சொர்க்கத்தைக் கொடு.
இனவெறி கொண்டவனே!
உனக்கு மட்டும்
இதயம் என்ன
கல்லாகவா இருக்கிறது?
உன் போன்றவர்களால்....
மனித இனத்தில்
பிறந்ததற்காக
முதல் முறையாக
வெட்கப்படுகிறேன்.
வேதனையுடன்,
நிலாரசிகன்.
Tuesday, August 15, 2006
சுதந்திரம்....
வருடம் ஆட்சி
செய்தவனிடமிருந்து
பெற்றுத் தர
முடிந்தது ஒரு
கிழவனால்...
ஐம்பத்தொன்பது
வருடம் ஆட்சி
செய்பவனிடமிருந்து
பெற முடியவில்லை
நம் இளைஞர்களால்...
-----------------------------------------------
இந்தியாவிற்கு
1947ல்...
தூயத் தமிழ்
பேசும்
தமிழர்களுக்கு?
------------------------------------------------
Monday, August 14, 2006
தேவதைத் தோட்டம்...
எனது கவிதைகளை நிலாச்சாரல்
இணைய தளம் E-bookக்காக வெளியிட்டுள்ளது.
தேவதைத் தோட்டம் என்கிற பெயரில்...
http://www.nilashop.com/product_info.php?cPath=64&products_id=448
இங்கு சென்று 1.99$ செலுத்தி பெற்றுக் கொள்ள விரும்பும்
அன்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
நட்புடன்,
நிலாரசிகன்.

